வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஏப்ரல் 13, 2016

2016 தேர்தல் காலம் என் பார்வை



தேர்தல் காலம் தொடங்கிருச்சு வைகோ பாலோட பழத்தை கொண்டு போயிட்டார். எங்கேயும் மரியாதை கிடைக்காததால் வாசனும் வைகோக்கிட்ட வந்துட்டார். பழம் கிடைக்காத ஏமாற்றத்தில் திமுக சந்திரகுமார் போன்ற தோல்களை பொறுக்க ஆரம்பித்துள்ளது.  கருப்பா இருக்கறவங்க எல்லாம் கருப்பு மகோரா (MGR) ஆகிடமுடியுமா?

                                                               --**--

நல்ல ஆதரவு இருந்தப்ப அரசியல் செய்யாமல் கருணாநிதியை பற்றி நன்கு அறிந்திருந்தும் ஏமாந்து விட்டு வைகோ இப்பத்தான் உண்மையாக அரசியல் செய்கிறார். காலம் கடந்த ஞாயிரு வணக்கம் எந்த அளவு பலன் தரும் என்று தெரியவில்லை.
                     
                                                               --**--

5 ஆண்டு ஆட்சியில் மதுவுக்கு ஆதரவாகவும் அதை எதிர்த்தவர்களை தேச விரோத சட்டத்திலும் சிறையிலடைத்த செயலலிதா வாக்குக்காக இறங்கி வந்து ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று பொதுக்கூட்டதில் பம்முகிறார். திமுகவும் ஆட்சிக்கு வந்தா மதுவிலக்கு என்கிறது. இது சொல்வதை ஏற்கலாம் ஏன்னா இது எதிர்கட்சி. ஆளும் கட்சியான அதிமுகவும் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பெண்கள் வாக்கு செய்யும் வேலை இம் இம் அதுக்கு ஆட்சியை மாற்றக்கூடிய அளவு  ஆற்றல் உள்ளது என்பதை எல்லோரும் புரிந்து உள்ளார்கள்.


                                                                  --**--

சென்னை வெள்ளம் வந்து நிருவாகம் சந்தி சிரித்ததால் செயலலிதாவின் போலியாக பல்வேறு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட நிருவாக திறமை தெரியவந்துள்ளது. அப்ப மட்டும் மறத்தமிழன் போலி அடிமை பன்னீர் முதல்வராக இருந்திருந்தால் இன்னும் செயலலிதாவின் நிருவாக திறன் இன்மையை உணராமல் ஏமாந்து இருப்போம் ஊடகங்களும் நம்மளை இன்னும் ஏமாற்றிக்கொண்டிருக்கும். .

இப்பக்கூட நத்தம், பன்னீரு இவ்வளவு அமுக்கிட்டாங்க அதை தெரிந்த செயலலிதா நடவடிக்கை என்று இவரை காப்பாற்றவும் பலியை அவர்கள் மேல் போடவும் முயற்சி நடக்கிறது. இவருக்கு தெரியாமல் நத்தம், பன்னீரு பணத்தை அமுக்கிட்டாங்க என்பதே வடிகட்டின பொய். கேக்கறவன் கேனயனா இருந்தா கேப்பையில் நெய்வழியுதுன்னு சொல்வாங்களாம். தமிழக மக்கள் கேனயர்கள் என்று நினைச்சிக்கிட்டார்.


அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் சுயநிதிக்குழுவினர் அனைவருக்கும் இலவச மன்னிக்க விலையில்லா செல்பேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இருக்குமென நினைக்கிறேன். வேறு என்ன விலையில்லா பொருட்கள் தருவார்கள் என்று அறிய ஆர்வமாக உள்ளேன்.

                                                                   --**--

அதிமுக திமுக தேமுதிக பொதுவுடமைவாதிகள் விசிக  புத என்று எல்லோரும் சாதிக் கட்சிகளே.  பாமக மட்டும் தான் முத்திரை பெற்றுள்ளது. வேடிக்கை! சாதி சங்கம் தான் பின்னால் கட்சியாக மாறியது. பொதுவுடமைவாதிகளைப் பற்றி பொய் சொல்றேன்று நினைக்காதிங்க அக்கட்சியில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்  யாரு விசாரிச்சு பாருங்க.


மற்ற கட்சிகள் போல் அல்லாமல் அரசு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் வழங்கும் போது மாற்று நிதிநிலை அறிக்கை என்று பல உருப்படியான பணிகளை செய்தவர்கள் இவர்கள். இந்திய ஒன்றிய அமைச்சராக  இருந்த போதும் இக்கட்சியினர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.


தேர்தல் நடைமுறை கோளாறுகளால் சின்னத்தை தக்கவைக்க அது பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது, அதுக்கு வடதமிழகத்தில் (வன்னியர் பகுதிகளில்) மட்டுமே ஆதரவு உண்டு மற்ற இடங்களில் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். யானை போய் தான மாம்பழம் வந்திருக்கு? இந்த தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றிபெறலைன்னா அதுவும் போயிரும். மற்ற கட்சிகளும் இவர்களுடனும் மற்றவர்களுடனும்  மாறி மாறி கூட்டணி வைத்தபோதும் பாமகவிற்கு மட்டுமே கெட்ட பெயர். இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் கட்சி தொடங்கின நேரம் சரியில்லைன்னு தோணுது.

                                                                   --**--

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அமைச்சரவை அமையவேண்டும் என்பதே என் விருப்பம்.

தேமுதிக + மநகூ+தமாகா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு என் அடுத்த பார்வை வரும் எப்படியும் தேர்தல் முடியும் முன் ஒரு இடுகையை போடலாமுன்னு  திட்டம் வைத்துள்ளேன்.


திங்கள், பிப்ரவரி 08, 2016

பண்பாட்டு மாற்றம்

கிராமத்தில் உள்ள அத்தை வீட்டிற்கு மாரியம்மன் திருவிழாவுக்கு போயிருந்தேன்.  எட்டு ஊரு மக்களுக்கு அதான் மாரியாயி. மாரியம்மன் திருவிழா தான் அவங்க கொண்டாடும் பெரிய விழா. அதனால நிறைய சொந்தங்களையும் அழைத்திருந்தார்கள். நாடகம் போட்டிருந்தாங்க நாடகத்தில் அத்தை பையனுக்கு பெண் வேடம். நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்தோம் அந்த நேரத்திலயும் வீட்டில் பெண்கள் அரட்டை ஓயவில்லை. எப்பவும் இல்லாம இன்று மட்டும் கோம்பை ஆயாவிடம் உள்ள வேறுபாடு தெரிந்தது. தூங்கும் போது மண்டையை கசக்கியும் அது என்னான்னு தெரியலை.

எல்லோரும் அத்தை வீட்டை விட்டு கிளம்பிட்டோம். ஆனா எனக்கு கோம்பை ஆயாவின் வேறுபாடு குறித்து ஒரே சிந்தனை.  மூன்று நாள் கழித்து கண்டுபிடித்து விட்டேன். அதாவது கோம்பை ஆயா மார்புக்கச்சையாகிய சா(ஜா)க்கெட் அணிந்திருந்தார். அவர் வயது ஒத்த மற்ற ஆயாக்களிடம் மார்புக்கச்சை அணியும் பழக்கம் இல்லை. பதில் சொல்ல தகுதியான என் ஆயாவிடம் கோம்பை ஆயாவின் வேறுபாட்டைப் பற்றி கேட்டேன்.
கோம்பை தாத்தா திருமணத்துக்கு முன் மலேசியாவில் வேலை செய்துள்ளார். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே தாயகம் வந்துள்ளார். இங்குள்ள விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு இனி மலேசியா போகும் எண்ணமில்லைன்னு சொல்லியிருக்கார்.

அவரின் சொந்தங்களும் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தனர். பெண் வீட்டாரிடம் மாப்பிளையின் முடிவை சொல்லி பெண் கேட்டு அது திருமணத்தில் முடிந்து விட்டது.

 கோம்பை ஆயாவுக்கு திருமணமான மூன்று  ஆண்டுகளில் கோம்மை தாத்தாவுக்கு இங்க உள்ள விவசாய வருமானம் போதாம மலேசியாவுக்கு கூப்பிட்டாராம். அங்க எசுட்டேட்டில் தான் வேலை ஆனா வரும்படி அதிகம். கோம்பை தாத்தாவை நேரில் பார்த்ததில்லை நான் பிறக்கும் முன்பே சிவலோக பதவியை  அடைந்துவிட்டார்.

மார்புக்கச்சை எனப்படும் சா(ஜா)க்கெட் அணியும் பழக்கம் அக்கால எம்குலப் பெண்களுக்கு கிடையாது. ஆனால் மலேசியாவிற்கு வானூர்தியிலோ கப்பலிலோ செல்லவேண்டுமானால் மார்புக்கச்சை அணிந்தாக வேண்டும். கோம்பை ஆயா அணியமுடியாது என்று பிடிவாதமாக இரண்டு ஆண்டு தாக்குபிடித்துள்ளார். பின் சொந்தங்களின் அறிவுரையின் (வற்புறுத்தலின்) பேரில் பிடிவாதம் தளர்ந்து மார்பு கச்சை அணிந்து கொள்ள ஒப்புக்கொண்டு மலேசியாவிலேயே 30 ஆண்டுகள் இருந்து விட்டு இனி அந்த ஊர் போதும் என்று விட்டு தாயகம் வந்துவிட்டார்.

இப்ப பழக்கத்தால் சா(ஜா)க்கெட் போடுகிறார். பண்பாடு அல்லது உடை பழக்கம் எப்படி மாறுதுண்ணு பாருங்க.

கொசுறு - எங்க பக்க ஆயாக்கள் படத்தில் உள்ளது போல் தான் இருப்பாங்க. என் ஆயா காலத்து ஆட்களுக்கு நெற்றியில் ஈறுகுச்சி போல (மூக்கிலுருந்து தலை வகுடு வரை) பச்சை குத்தப்பட்டிருக்கும்.  சில பேர் கையில் வித விதமாக பச்சை குத்தப்பட்டிருக்கும்.

(படங்கள் உதவி - கூகுள், பிளிக்கர்)

சனி, மே 09, 2015

பிரித்தானியா தேர்தலும் இசுக்காட்லாந்து வாக்காளர் மனநிலையும்



இத்தேர்தலில் டோரிக்கள் என்று அடையாளப்படுத்தப்படும் கன்சர்வேடிவ் கட்சி எனப்படும் பழமைவாத கட்சி 331 தொகுதிகளில் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. லேபர் கட்சி எனப்படும் தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வென்றுள்ளது.

இசுக்காட்லாந்து தேசிய கட்சி  56 தொகுதிகளில் வென்றுள்ளது.  கடந்த பொது தேர்தலில் (2010) இக்கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

அப்புறம் தான் ஏழு மாதத்திற்கு முன்பு 2014, செப்டம்பர் மாதத்தில் இசுக்காட்லாந்து பிரிந்து தனி நாடாகலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) வரைபடம்
பச்சை நிறத்தில் உள்ளது இங்கிலாந்து (இது தான் பெரிய பகுதி, மக்கள் தொகை அடிப்படையிலும் இது தான் மிகப்பெரியது)
வெளிர் கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது வேல்சு
ஆரஞ்சு நிறத்தில் உள்ளது இசுக்காட்லாந்து (பிரித்தானியா (ஐக்கிய இராச்சியத்தின் எண்ணெய் வளம் இங்கு தான் உள்ளது)
 ஒரு வகையான வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் உள்ளது  வட அயர்லாந்து

வட அயர்லாந்து இணைந்த பின்பு பிரித்தானியா ஐக்கிய இராச்சியம் என அதிகாபூர்வமாக பெயர் மாற்றம் பெற்றது.


இத்தேர்தலில் இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றியே நம்மால் கவனிக்பட வேண்டியது.

வாக்கெடுப்பில் பிரித்தானியாவிலிருந்து பிரியவேண்டாம் என்று பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர், அதோடு அடுத்த பத்தாண்டுகளுக்கு இது பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்று அனைவரும் நினைத்தனர்\ நினைத்துக்கொண்டுள்ளனர்.

அவ்வாக்கெடுப்புக்கு பிறகே இசுக்காட்லாந்து தேசிய கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தனர். இசுக்காட்லாந்து தேசிய உணர்வை தட்டி எழுப்பி இவர்கள் பிரிய வேண்டும் என்று வாக்கெடுப்பில் கோரியதால் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்.

கடந்த முறை நடந்த தேர்தலில் (2010) ஏறக்குறைய 20% வாக்குகளை இசுக்காட்லாந்து பகுதியில் பெற்ற இசுக்காட்லாந்து தேசிய கட்சி இம்முறை ஏறக்குறைய 50% வாக்குகள் பெற்றுள்ளது.  கடந்த முறை 2010 தேர்தலில் இசுக்காட்லாந்தில் தொழிலாளர் கட்சி பெற்றது ஏறக்குறைய 42% வாக்குகள் இம்முறை பெற்றது 24.3% வாக்குகள்.

இசுக்காட்லாந்தின் 59 தொகுதிகளில் 56 இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கு சென்றுள்ளது. இதுவரை தொழிலாளர் கட்சி பலமாக இருந்த இடம் இசுக்காட்லாந்து. கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி வென்றது. இம்முறை இசுக்காட்லாந்தில் பெற்றது ஒன்றே ஒன்று தான்.

இங்கிலாந்து ஒரு முடிவெடுத்தது இசுக்காட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிவினை வேண்டும் என்று கோரும் கட்சிக்கு பேராதரவு கொடுத்துள்ளது. அதுவும் ஏழு மாதத்திற்கு முன் இதற்கு தோல்விய கொடுத்த பின்பு. அதிலும் தொழிலாளர் , பழமைவாதம் ,  தாராளவாத சனநாயம் & மற்றவர்கள் என்று எல்லோரும் ஓர் அணி இசுக்காட்லாந்து தேசிய கட்சி மட்டும் எதிர் அணி.

இது தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி. ஏனென்றால் பழமைவாத கட்சி இசுக்காட்லாந்தில் பலம் பொருந்திய கட்சி அல்ல. அதன் வேர் பலம் எல்லாம் இங்கிலாந்து தான்.

2014இல் நடந்த பிரியலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பில் பிரிய வேண்டாம் என்று 61% வாக்குகள் பதிவான எடின்பர்க் பகுதியின் நான்கு தொகுதிகளும் இம்முறை இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கே. இது வியப்பான ஒன்று.  தெற்கு எடின்பர்கில் மட்டும் இயன் முர்ரே வென்று தொழிலாளர் கட்சிக்கு ஆறுதல் கொடுத்துள்ளார்.

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றி சொல்லாமல் பல செய்திகளை பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் சொல்லுகிறது.  இந்தியா இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.

மற்றவை

ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி (UKIP) 12.6% வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.  இசுக்காட்லாந்து தேசிய கட்சி இசுக்காட்லாந்தில் மட்டுமே போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அதன் வாக்கு வீதம் 4.7 ஆனால் நிறைய தொகுதிகளை பெற்றது. ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி எல்லா இடங்களிலும் போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 12.6% வாக்குகள் பெற்றாலும் குறைந்த (ஒன்று) இடங்களே கிடைத்தது. இது தேர்தல் ஆணையங்கள் குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆராய வேண்டியது. கட்சி மாநில கட்சியா என்று முடிவெடுக்கவும் பொது சின்னம் வழங்கவும் இது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உதவும்.

கட்சி மாநில கட்சியா என்பது குறித்தும் பொது சின்னம் வழங்குவது குறித்தும் முடிவெடுத்தால் இப்போ பலன் பெறப்போவது பாமக ஆக தமிழகத்தில் இருக்கும்.  பாமகவானது அதிமுக திமுக என்று தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்தது ஏன் என்று இப்போது புரிகிறதா? கட்சிக்கு மாநில கட்சி என்ற நிலை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பது அதில் முதன்மையானதாக இருக்கலாம்.

வட அயர்லாந்தில் பழமைவாத & தொழிலாளர் கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்குகளை கூட பெறவில்லை. அவை இரண்டுமே வட அயர்லாந்தின் தலையெழுத்தை பெரிய இடத்தில் இருந்து (நடுவண் அரசு) எழுதுபவை இது தமிழ்நாட்டின் நிலையை நினைவு படுத்துகிறதா?

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் சார்பில் பெய்சிலி- ரென்பிரசுய்வொயர் தெற்கு தொகுதியில் வென்ற 20 வயதுடைய மெகரி பிளாக் என்ற பெண்மணியே 350 ஆண்டு வரலாற்றில் பிரித்தானியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.