வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஜனவரி 20, 2017

நுண்ணறிவு


பெரியபிள்ளை வசிக்கும் நகரம் சிற்றூர் ( கிராமம்) அல்ல. அதைவிடப் பெரியது ஆனால் நகரம் அல்ல. பேரூராட்சிக்கு ஒரு கிமீ தள்ளி உள்ள ஊர். வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயத்தை விட இங்கு கால்நடை வளர்ப்பதே முதன்மையான தொழில். வேளாண்மை என்று பார்த்தால் கால்நடைக்கான தீனி (சோளம்) வளர்ப்பது தான் முதன்மையாக இருக்கும். சோளத்தட்டு தான் மாடுகளுக்கான தீனி.

கொட்டாயில் தான் பெரியபிள்ளை இருந்தார். கொட்டாய் ஓடு வேயப்பட்டு வசிக்கும் படி வசதியாகத்தான் இருந்தது.  மாடுகளை கட்டிவைக்கும் கட்டுத்தாரை அவங்க கொட்டாயில் இருந்து 100 அடி தூரத்தில் இருந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் பால் கறந்து வைப்பார் அதோடு மாட்டுக்கு தீனி போடுவதும் தண்ணி வைப்பதும் இவரது பணி, வேலையாள் வரவில்லை அல்லது அவருக்கு உடனே கவனிக்க வேண்டிய பணிகள் இருந்தால் இவர் மாட்டை மேய்ச்சலுக்கும் கூட்டிபோவார். 4 பசுக்களும் 3 எருமைகளும் அவர்களிடம் இருந்தன. 5 லிட்டர் எருமைப்பால் தேநீர் கடைக்கும் மீதி பால் அனைத்தும் கூட்டுறவு பால் சங்கத்துக்கும் போகும்.

அவங்க பக்கத்து கொட்டாயில் நாட்டு நாய் இருந்தது, அது இங்கும் வரும். அதற்கு சில முறை இவர் சோறு வைத்துள்ளார்.

எவ்வளவு நாள் தான் கொட்டாயிலேயே குடியிருப்பது? அதனால்   பெரியபிள்ளை சாலைக்கு இப்புறமுள்ள வீட்டிற்கு  குடி பெயர்ந்து விட்டாலும் கொட்டாயிக்கு போவதும் பால் கறப்பதும் நடந்து கொண்டு உள்ளது.

பக்கத்து கொட்டாய் நாய் இவர் கொட்டாயிலிருந்து பால் கறந்து விட்டு வீட்டுக்கு வரும் வரை கூடவே வரும். ஆனா வீட்டுக்கு வராது சாலையிலிருந்தே பார்க்கும் இவர் வீட்டுக்குள் சென்றதும் போய் விடும். சாலையில் இருந்து தோராயமா 100மீட்டர் தொலைவில் இவர் வீடு இருக்கும். இதை இவர் கவனித்ததே இல்லை. இப்படி நாய் இவருக்கு துணையாக வருவது இவருக்கு தெரியாது.கவனிச்சா தானே தெரிவதற்கு.

நாய் துணையாக வருவதை பக்கத்து வீட்டுக்கார பெண் பார்த்து விட்டு  பெரியபிள்ளையிடம் கூறியுள்ளார். இப்பெண்ணுக்கு நாய்  கட்டுத்தாரைக்கு பெரியபிள்ளைக்கு துணையாக போவது தெரியாது.  பெரியபிள்ளை நாயை  சில நாட்கள் கவனித்தபொழுது அது துணையாக இவருக்கு வருவது தெரிந்தது.சில வேளை  சோறு போட்ட நன்றி கடனுக்காக துணையாக வருகிறது என்று நினைத்தார்.

பக்கத்து வீட்டுப் பெண் அக்கா  அக்கா இந்த நாயை நாமளே இங்க வச்சுக்கிட்டா என்ன? என்று பெரியபிள்ளையின் வீட்டு வாசலலில் கேட்டுள்ளார். இதை நாய் பெரியபிள்ளையை வீட்டில் விட்டு செல்லும் முன் கேட்டார். சாலையிலிருந்தே இதை எப்படித்தான் நாய் கேட்டுச்சோ?  வீட்டிலிருந்து தோராயமா 100மீட்டர்  தொலைவில் சாலை இருக்கு என்பது நினைவு இருக்கட்டும்


அடுத்த நாளில் இருந்து  பெரியபிள்ளைக்கு துணையாக நாய் எவ்விடத்திற்கும் வருவதில்லை.

சனி, ஜனவரி 14, 2017

சோதிடத்திடத்தில் வழங்கும் வடசொற்களுக்கு தமிழ்

நட்சத்திரங்களுக்கு தமிழில் மீன் விண்மீன் வெள்ளி அப்படின்னு சொல்லி கேட்டிருப்போம்.  நாள் என்றும் அதை வழங்கியுள்ளார்கள். இது எத்தனை பேருக்கு தெரியும் ?

நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை  என்று பழமொழி பலருக்கு தெரிந்திருக்கும். இதிலுள்ள நாள் என்பது நட்சத்திரத்தை குறிப்பது. எந்த நாளில் பிறந்தார் என்றால் அவர் பிறந்த போது என்ன நட்சத்திரம் என்று பொருள். நாள், தேதி, கிழமை இவற்றுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை புரிஞ்சுக்கனும்.

பஞ்சாங்கம் அல்லது சோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் பெயர் சமசுகிருதத்தில் இருக்கும், அந்த 27 நட்சத்திரங்களுக்கும் தமிழில் பெயர் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்? . மொழிஞாயிறின் தென்சொற் கட்டுரைகள் என்ற நூலை படித்த போது அவற்றின் பெயர் எனக்கு தெரிந்தது. அது இங்கே.


தமிழில் இப்போது வழங்கி வரும் மாதங்களின் பெயர்கள் வட சொற்கள் ஆகும். அப்ப மாதங்களுக்கு நாம என்ன சொற்களை வழங்கி வந்தோம். மலையாள நாட்டை போல் நாமும்  12 இராசிகளின் பெயர்களை தான் வழங்கி வந்தோம்.  இதில் மேடம் (மேழம்), இடபம், கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் என்ற ஏழும் தமிழ் அல்லது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான சொற்கள். இதில் முதல் ஆறுக்கும் தகர், குண்டை, அலவன், மடந்தை, தூக்கு, குடம் என்ற பெயர்களும் உண்டு.   மிதுனம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் என்னும் ஐந்தும் தமிழில் முறையே இரட்டை, ஆளி, தேள், வில், சுறா எனப்படும்.

மாதங்கள் அதன் இராசி மாதங்களுக்கான தமிழ் பெயர்
சித்திரை மேடம் மேடம்\மேழம்(தகர்)
வைகாசி இடபம் இடபம் (குண்டை) 
ஆனி மிதுனம் இரட்டை
ஆடி கடகம் கடகம் (அலவன்)
ஆவணி சிங்கம் ஆளி
புரட்டாசி கன்னி கன்னி (மடந்தை)
ஐப்பசி துலாம் துலாம் (தூக்கு)
கார்த்திகை விருச்சிகம் தேள்
மார்கழி தனுசு வில்
தை மகரம் சுறா
மாசி கும்பம் கும்பம் (குடம் )
பங்குனி மீனம் மீனம்

    நட்சத்திரங்களின் வடமொழி பெயரும் அதற்கான தமிழ் பெயரும்.

    வடமொழி பெயர்  தமிழ் பெயர்
    அச்சுவினி புரவி
    பரணி அடுப்பு
    கார்த்திகை ஆரல்
    ரோகிணி சகடு
    மிருகசீரிடம் மான்றலை
    திருவாதிரை மூதிரை
    புனர்பூசம் கழை
    பூசம் காற்குளம்
    ஆயிலியம் கட்செவி
    மகம் கொடுநுகம்
    பூரம் கணை
    உத்தரம் உத்தரம்
    அத்தம் கை
    சித்திரை அறுவை
    சுவாதி விளக்கு
    விசாகம் முறம்
    அனுஷம் பனை
    கேட்டை துளங்கொளி
    மூலம் குருகு
    பூராடம் உடைகுளம்
    உத்திராடம் கடைக்குளம்
    திருவோணம் முக்கோல்
    அவிட்டம் காக்கை
    சதயம் செக்கு
    பூரட்டாதி நாழி
    உத்திரட்டாதி முரசு
    ரேவதி தோணி