வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, மே 09, 2015

பிரித்தானியா தேர்தலும் இசுக்காட்லாந்து வாக்காளர் மனநிலையும்



இத்தேர்தலில் டோரிக்கள் என்று அடையாளப்படுத்தப்படும் கன்சர்வேடிவ் கட்சி எனப்படும் பழமைவாத கட்சி 331 தொகுதிகளில் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. லேபர் கட்சி எனப்படும் தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வென்றுள்ளது.

இசுக்காட்லாந்து தேசிய கட்சி  56 தொகுதிகளில் வென்றுள்ளது.  கடந்த பொது தேர்தலில் (2010) இக்கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

அப்புறம் தான் ஏழு மாதத்திற்கு முன்பு 2014, செப்டம்பர் மாதத்தில் இசுக்காட்லாந்து பிரிந்து தனி நாடாகலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) வரைபடம்
பச்சை நிறத்தில் உள்ளது இங்கிலாந்து (இது தான் பெரிய பகுதி, மக்கள் தொகை அடிப்படையிலும் இது தான் மிகப்பெரியது)
வெளிர் கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது வேல்சு
ஆரஞ்சு நிறத்தில் உள்ளது இசுக்காட்லாந்து (பிரித்தானியா (ஐக்கிய இராச்சியத்தின் எண்ணெய் வளம் இங்கு தான் உள்ளது)
 ஒரு வகையான வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் உள்ளது  வட அயர்லாந்து

வட அயர்லாந்து இணைந்த பின்பு பிரித்தானியா ஐக்கிய இராச்சியம் என அதிகாபூர்வமாக பெயர் மாற்றம் பெற்றது.


இத்தேர்தலில் இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றியே நம்மால் கவனிக்பட வேண்டியது.

வாக்கெடுப்பில் பிரித்தானியாவிலிருந்து பிரியவேண்டாம் என்று பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர், அதோடு அடுத்த பத்தாண்டுகளுக்கு இது பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்று அனைவரும் நினைத்தனர்\ நினைத்துக்கொண்டுள்ளனர்.

அவ்வாக்கெடுப்புக்கு பிறகே இசுக்காட்லாந்து தேசிய கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தனர். இசுக்காட்லாந்து தேசிய உணர்வை தட்டி எழுப்பி இவர்கள் பிரிய வேண்டும் என்று வாக்கெடுப்பில் கோரியதால் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்.

கடந்த முறை நடந்த தேர்தலில் (2010) ஏறக்குறைய 20% வாக்குகளை இசுக்காட்லாந்து பகுதியில் பெற்ற இசுக்காட்லாந்து தேசிய கட்சி இம்முறை ஏறக்குறைய 50% வாக்குகள் பெற்றுள்ளது.  கடந்த முறை 2010 தேர்தலில் இசுக்காட்லாந்தில் தொழிலாளர் கட்சி பெற்றது ஏறக்குறைய 42% வாக்குகள் இம்முறை பெற்றது 24.3% வாக்குகள்.

இசுக்காட்லாந்தின் 59 தொகுதிகளில் 56 இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கு சென்றுள்ளது. இதுவரை தொழிலாளர் கட்சி பலமாக இருந்த இடம் இசுக்காட்லாந்து. கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி வென்றது. இம்முறை இசுக்காட்லாந்தில் பெற்றது ஒன்றே ஒன்று தான்.

இங்கிலாந்து ஒரு முடிவெடுத்தது இசுக்காட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிவினை வேண்டும் என்று கோரும் கட்சிக்கு பேராதரவு கொடுத்துள்ளது. அதுவும் ஏழு மாதத்திற்கு முன் இதற்கு தோல்விய கொடுத்த பின்பு. அதிலும் தொழிலாளர் , பழமைவாதம் ,  தாராளவாத சனநாயம் & மற்றவர்கள் என்று எல்லோரும் ஓர் அணி இசுக்காட்லாந்து தேசிய கட்சி மட்டும் எதிர் அணி.

இது தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி. ஏனென்றால் பழமைவாத கட்சி இசுக்காட்லாந்தில் பலம் பொருந்திய கட்சி அல்ல. அதன் வேர் பலம் எல்லாம் இங்கிலாந்து தான்.

2014இல் நடந்த பிரியலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பில் பிரிய வேண்டாம் என்று 61% வாக்குகள் பதிவான எடின்பர்க் பகுதியின் நான்கு தொகுதிகளும் இம்முறை இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கே. இது வியப்பான ஒன்று.  தெற்கு எடின்பர்கில் மட்டும் இயன் முர்ரே வென்று தொழிலாளர் கட்சிக்கு ஆறுதல் கொடுத்துள்ளார்.

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றி சொல்லாமல் பல செய்திகளை பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் சொல்லுகிறது.  இந்தியா இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.

மற்றவை

ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி (UKIP) 12.6% வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.  இசுக்காட்லாந்து தேசிய கட்சி இசுக்காட்லாந்தில் மட்டுமே போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அதன் வாக்கு வீதம் 4.7 ஆனால் நிறைய தொகுதிகளை பெற்றது. ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி எல்லா இடங்களிலும் போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 12.6% வாக்குகள் பெற்றாலும் குறைந்த (ஒன்று) இடங்களே கிடைத்தது. இது தேர்தல் ஆணையங்கள் குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆராய வேண்டியது. கட்சி மாநில கட்சியா என்று முடிவெடுக்கவும் பொது சின்னம் வழங்கவும் இது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உதவும்.

கட்சி மாநில கட்சியா என்பது குறித்தும் பொது சின்னம் வழங்குவது குறித்தும் முடிவெடுத்தால் இப்போ பலன் பெறப்போவது பாமக ஆக தமிழகத்தில் இருக்கும்.  பாமகவானது அதிமுக திமுக என்று தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்தது ஏன் என்று இப்போது புரிகிறதா? கட்சிக்கு மாநில கட்சி என்ற நிலை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பது அதில் முதன்மையானதாக இருக்கலாம்.

வட அயர்லாந்தில் பழமைவாத & தொழிலாளர் கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்குகளை கூட பெறவில்லை. அவை இரண்டுமே வட அயர்லாந்தின் தலையெழுத்தை பெரிய இடத்தில் இருந்து (நடுவண் அரசு) எழுதுபவை இது தமிழ்நாட்டின் நிலையை நினைவு படுத்துகிறதா?

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் சார்பில் பெய்சிலி- ரென்பிரசுய்வொயர் தெற்கு தொகுதியில் வென்ற 20 வயதுடைய மெகரி பிளாக் என்ற பெண்மணியே 350 ஆண்டு வரலாற்றில் பிரித்தானியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.


ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

உலகின் மோசமான நிலநடுக்கங்கள் & சில விபரங்கள்

இப்ப நேபாளத்தில் ஏற்பட்ட 7.9   ரிக்டர் அளவு நிலநடுக்கம்  மோசமான நிலநடுக்க பட்டியலில் சேராதிருக்க வேண்டும்.

இதுவரை 2,200க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக சொல்கிறார்கள். இப்ப தான் தொலை தூரத்திலிருந்து இறந்தவர்கள் பற்றி செய்தி வர ஆரம்பித்துள்ளது அதனால் பலியானவர் எண்ணிக்கை 4,000க்கும் அதிகமாக தான் இருக்கும்.

நேபாளம் மலைப்பகுதி என்பதாலும் போக்குவரத்தும் தகவல் தொடர்பும் அதிகம் இல்லாததாலும் அதிக உயிர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சுகிறார்கள்.  இன்னொரு பயம் என்னன்னா நிலநடுக்கம் ஏற்பட்டது 10-15 கிமீ ஆழத்தில் தான் இது மேல்மட்டம் என்பதால் புவியின் மேற்பரப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆழிப்பேரலையால் நாம் பாதிக்கப்பட்டதும் இம்மாதிரி நிலநடுக்கம் 20-30 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் தான்.  80 கிமீக்கும் மேலான ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டா தான் நமக்கு பாதிப்பு குறைவாக இருக்கும்.


CCTVயில் நிலநடுக்கம் பதிவாகியதை பாருங்கள் .   நன்றி - Indian Express

மோசமான அப்பிடின்னா அதிக உயர்கள் பலியான நிலநடுக்கம் என்று கொள்ளவும். ரிக்டர் அளவில் இது கணிக்கப்படவில்லை.
  • 2003ஆம் ஆண்டு ஈரானின் பான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர்.
  • 2004ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் அது உருவாக்கிய ஆழிப்பேரலையாலும் பலியானவர்கள் 230,000. பல (இந்தியா, இலங்கை, தாய்லாந்து...) நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையும் இதில் அடக்கம்.  நிலநடுக்கத்தின் அளவு 9.1 ரிக்டர். இதை நம்மாளும் மறக்க முடியாது. இந்தியா என்று சொன்னாலும் தமிழகத்திற்கு தான் பாதிப்பு அதிகம்.
  • 2005ஆம் ஆண்டு பாக்கித்தான் நிருவகிக்கும் காசுமீரின் தலைநகர்  முசபார்நகர் அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.6 ரிக்டர்.
  • 2008ஆம் ஆண்டு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.9 ரிக்டர்.
  • 2010ஆம் ஆண்டு எயிட்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 220.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.0 ரிக்டர். இது கூபாவுக்கு அருகில் 80 கிமீ தொலைவில் உள்ளது. 

1934ஆம் ஆண்டு நேபாளம்-பீகார் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நேபாளத்தில் 8,500 பேர் பலியானார்கள்,  பீகாரில் 10,000க்கும் அதிகமானவர்கள் இறந்தார்கள்.

உலகிலுள்ள அனைத்து நிலத்தட்டுகளின் வரைபடமும் பெயரும்
நன்றி - விக்கிப்பீடியா


இந்திய நிலத்தட்டு ஆனது ஐரோஆசிய (ஐரோப்பாவும் ஆசியாவும் சேர்ந்த நிலப்பகுதி) நிலத்தட்டுடன் பல்லாயிரம் ஆண்டுகள் மோதியதால் தான் இமய மலையே உருவாகி உள்ளது.  மோதல் இப்போதும் தொடர்கிறது, ஆண்டுக்கு 4-5 செமீ என்ற அளவில் நிலத்தட்டுக்கள் நெருங்குகிறது. அதாவது இந்திய நிலத்தட்டு தான் ஐரோஆசிய நிலத்தட்டுடன் மோதுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய "துணைக்கண்டம்" ஆசியாவில் ஒட்டியிருக்காமல் தனித்தீவாக தான் இருந்தது. ஆப்பிரிக்காவை ஒட்டி உள்ள மடகாசுக்கர் தீவு இந்திய துணைக்கண்டத்துடன் முன்பு ஒட்டியிருந்தது என்றும் கருதுகிறார்கள்.

7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்துக்கு அடுத்து வந்த பெரிய நிலநடுக்கத்தின் அளவு 6.9 ரிக்டர் என்று இந்தியாவும் 6.7 ரிக்டர்  என்று அமெரிக்கா காரனும் சொல்றாங்க.  இது இந்தியாவில் நிறைய இடங்களில் உணரப்பட்டுள்ளது. (மழைக்கு அப்பறம் வரும் தூவானம் -  கொழைஞர்) இது 7.9 வந்த இடத்துக்கு அருகில் தான் வந்தது. இதனால் உயிர் பலி குறைவாக தான் இருக்கும் ஏன்னா 7.9 வந்ததுக்கு அப்பறம் கட்டடங்களில் யாரும் தங்காமல் வெட்ட வெளியில் தான் தங்கியிருப்பாங்க.

எயிட்டி தான் அமெரிக்காக்களிலேயே மிக ஏழ்மையான நாடு.  லத்தீன் அமெரிக்காக்களில் முதலில் சுதந்திரம் பெற்றதும் இது தான். 1804 ஆண்டில் சுதந்திரம் பெற்றது  பிரான்சு, பிரித்தானியா, எசுப்பானியா ஆகிய மூன்று ஐரோப்பிய இராணுவபலம் உள்ள அரசுகளை இது தோற்கடித்துள்ளது. எயிட்டியின் வரலாறு படிக்க ஆர்வமூட்டுவது.

அமெரிகாக்களின் (வட, தென் அமெரிக்கா)  மேற்கு பகுதி, இமய மலை பகுதி, ஈரான், சப்பான், இந்தோனேசியா, இத்தாலி, எசுப்பானியா ஆகியவை நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் உள்ளவை.  நிலத்தட்டுகள் ஒரசினா நிலநடுக்கம் வரும் வாய்ப்பு மிக அதிகம்.

அதுக்காக மற்ற இடங்களில் நிலநடுக்கம் வராது என்று பொருளல்ல. வரும் வாய்ப்பு மிக குறைவு, வந்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது. கட்டடம் உறுதி இல்லைன்னா பாதிப்பு அதிகமாகிடும். சப்பானை நினைச்சு பாருங்க அவங்க நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் தான் கட்டடம் கட்டுவார்கள்.

கலிபோர்னியாவே குறிப்பாக சான் பிரான்சிசுகோ & லாசு ஏஞ்சலசு நகரங்கள் இருப்பது நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் தான்.  சான் பிரான்சிசுகோ  ஏற்கனவே 1906இல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கு அதனால அதுக்கு பயம் அதிகம். சான் ஆண்டிரியாசு பிளவு என்பது நீளமானது மட்டுமல்ல கலிபோர்னியாவின் மேற்கு கரை நகரங்களை பயமுறுத்தும் ஒன்று. அது பெரிய குறிப்பிடத்தகுந்த பிளவு அதை தவிர நிறைய பிளவுகளும் உள்ளன.  அதனை இதன் கிளைகள் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு 75 ஆண்டுக்குப் பிறகும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலோ அதற்கு அருகிலோ குறிப்பிடத்தகுந்த நிலநடுக்கம் வரும் என்கிறார்கள். அந்த கணக்குப்படி 2090 வரை நேபாளத்தில் பெரிய நிலநடுக்கம் வராது. 2090க்கு அப்பறம் பெரிய நிலநடுக்கம் வரும் வரை நேபாளம் பக்கம் தலைவச்சு படுக்காதிங்க.

புதன், மார்ச் 25, 2015

ஆம் ஆத்மி கட்சியும் உட்கட்சி பூசலும்


தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றதும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். பாசகவின் தடையற்ற பல சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு கிடைத்த பெரும் தடை மக்களாட்சிக்கு நல்லது. மற்ற எதிர்கட்சிகள் பாசகவை பார்த்து இதன் ஓட்டத்தை எப்படி தடுப்பது என்று செய்வதறியாமல் திகைத்த நேரத்தில் தில்லியில் பாசகவுக்கு பெரும் அடி. இது பாசகவுக்கும் நல்லது என்று தான் கூற வேண்டும்.

இன்னும் சொன்னால் 2014ஆம் ஆண்டின் பாசகவின் வெற்றிப்பயணம் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.
குல்லா

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி பெருவெற்றி பெற்றதும், யோகேந்திர யாதவும் பிரசாந் பூசணும் கட்சியை சில கேள்விகள் கேட்டார்கள். தேர்தலுக்கு முன்னமே கேட்டுள்ளார்கள் ஆனால் தேர்தலுக்கு பின் தான் அதற்கு மதிப்பு கூடியுள்ளது.  கேட்ட கேள்விகளும் மிகச்சரியானது, ஆனால் அதற்கு ஆம் ஆத்மியின் தில்லி பொறுப்பாளர்கள் அவர்கள் இருவரையும் துரோகிகள் என்றதும் மற்ற நடவடிக்கைகளும் ஆம் ஆத்மியும் மற்ற கட்சிகள் போல் தான் என்று காட்டியது. 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது, இது அக்கட்சியின் பலருக்கு செருக்கை (மமதை) தரும். இப்போது நடக்கும் சண்டையைப் பார்த்தால் பலருக்கு செருக்கு வந்தது போல் தான் தெரிகிறது. மேலும் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல் வெற்றி பெற்றவர்கள் அடுத்தவர்களை ஈர்ப்பர் புதிதாக வருபவர்களில் சிலரோ பலரோ மோசமான பேர்வழிகளாக இருப்பர். கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது அதனால் நாளாக ஆக கட்சி தன் கொள்கைகளிலிருந்து நழுவாமல் இருக்க கேள்விகள் மூலம் அதை ஒழுங்கு செய்வதே முறை. வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். தவறுகள் ஏற்படலாம் கட்சியினர் கேள்வி கேட்டால் தான் தவறுகளை களைய முடியும். உட்கட்சி குரல் கேட்கப்பட்டு அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டும். இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். இந்தி கட்சி என்று நினைக்க வைக்கக் கூடாது.

கேள்விகள் கேட்காவிட்டால் தவறு நடக்க வாய்ப்பு அதிகம், எண்ணம் தூய்மையாக இருந்தாலும் கேள்விகள் தேவை. பல ஆண்டுகள் கழித்தும் எண்ணம் மாசு படாமல் இருக்க வேண்டும். தலைவருக்கும் கட்சியின் மற்ற முதன்மையானவர்களுக்கும்

இடுப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

என்று வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் உள்ள பலர் மற்ற கட்சிகள் போல் இயங்க ஆசைப்படுகின்றனர் அது மாபெரும் தவறு. இவர்களின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையால் அது டெல்லி கட்சியாகவே இருக்கும். மற்ற மாநிலங்களில் வளர முடியாது. பஞ்சாபில் நாலு மக்களவை உறுப்பினர்களை பெற்றதால் அங்கு பெரிய கட்சியாகலாம். மற்ற மாநிலங்கள்?  மாநில தலைமை வலுப்பெற்றால் மட்டுமே அந்தந்த மாநிலங்களில் வளரமுடியும்.

இங்கு இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் தில்லி மாநிலம் என்று சொன்னாலும் அது பெரிய மாநகரம் மட்டுமே.  ஆம் ஆத்மிக்கு தில்லி, பஞ்சாப் தவிர மற்ற இடங்களில் பெருநகரங்களில் மட்டுமே சிறிய ஆதரவு உள்ளது.

  • ஆம் ஆத்மி கட்சி எல்லா மாநிலங்களிலும் வளருவது கடினம். ஆம் ஆத்மி என்பது கருத்தாக்கமே இத்கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பல மாநிலங்களில் கட்சி உருவாகலாம், ஆம் ஆத்மி கட்சி அவற்றுடன் கூட்டணி வைக்கலாம். அதாவது கூட்டாட்சி முறையே நல்லது. இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
  • கட்சியின் மேல் மட்டத்தலைவர்கள் அனைவரும் இந்திக்காரர்களே. இந்தி பேசாத பெருவாரியான மாநிலங்களில் வளர அம்மாநில மொழி பேசும் ஆளுமைகள் தேவை. அனைவருக்கும் குறிப்பிட்ட மாநிலத்தின் நிலைமையோ அது எதிர்கொள்ளும் சிக்கல்களோ புரிவது கடினம். ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு என்று சொன்னால் மிகையல்ல. உறுதியான மாநில தலைமை இங்கு தான் தேவைப்படுகிறது. 
  • கட்சி இப்போது பெருநகரங்களில் ஆதரவை கொண்டுள்ளது. ஊரகப்பகுதியில் கட்சி வளருவது அந்த மாநில கட்சியினரின் செயல்பாட்டை பொருத்தே உள்ளது. பஞ்சாபில் வளர்ந்து வருவதும் அங்கு பெறப்போகும் வெற்றியும் மற்ற மாநிலத்தவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். (என்னைப் பொருத்த அளவில் தில்லி வெற்றியை விட பஞ்சாபில் பெறப்போகும் வெற்றியே, அளவில் பெரிய ஊரகங்களை உடைய மாநிலங்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும்)
  • கட்சியின் மேல்மட்டக்குழுவில் மாநிலங்களுக்கு சிறப்பு தரப்பட வேண்டும். அவர்கள் சொல்வது கேட்கப்பட்டு முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 
  • மாநில கட்சி நிலவரங்களை மேல் மட்டம் தீர்மானிக்கக்கூடாது (மற்ற தேசிய கட்சிகளைப்போல). 
  • கட்சி செயற்குழு பொதுக்குழு கூட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். (இதைத்தான் பிரசாந்தும் யோகேந்திராவும் சொன்னார்கள்)
  • மாநில அளவு கட்சிக்கு தேசிய கட்சி உதவ வேண்டும் அவர்கள் செல்லுவது தவறு என்றால் அறிவுறுத்தவேண்டும்.

ஆம் ஆத்மியிடம் எனக்கு பிடிக்காதது குல்லா தான். குல்லாவை கண்டாலே ஒவ்வாமை வருகிறது. வடமாநிலங்களில் குல்லா சரி. தமிழ்நாட்டுக்கு?? குல்லா, தில்லி கட்சி இங்கே ஆதிக்கம் செலுத்த வருகிறதோ என்ற அச்சத்தை தரும். தமிழ்நாட்டுக்கு குல்லா பயன்படுத்தினால் கட்சி மக்களிடம் நெருக்கமாக முடியாது.  தமிழகத்தில் குல்லா செயற்கையாக இருக்கும்.\ இருக்கிறது. குல்லாவிற்கு பதில் துண்டு பயன்படுத்தலாம்.



திங்கள், மார்ச் 09, 2015

கிரண் பேடியின் முகமூடி

தில்லியில் தோற்றுவிட்டாலும் அவரைப்பற்றிய பிம்பம் நம் உள்ளத்தில் தவறாக பதியப்பட்டுள்ளது என்பதால் இக்கட்டுரை. தேர்தலோடு இக்கட்டுரையை தொடர்பு படுத்தி பார்க்க வேண்டாம் ஆனால் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் முன்நிறுத்தப்பட்டதால் தான் அவரை பற்றி தெரிந்தது. (தில்லி தேர்தலுக்கு முன்பு எழுத ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன் அவ்வளவு வேகம்)

கிரண் பேடி தில்லியின் கன்னாகட்டு பிளேசில்அனுமதியற்ற இடத்தில் நிறுத்தியிருந்த பிரதமர் இந்திரா காந்தி பயணம் செய்யும் மகிழுந்தை இழுத்து சென்றார் அதனால் அடுத்த நாளே பழிவாங்கப்பட்டு கோவாவுக்கு மாற்றப்பட்டார் என்று அறிந்திருந்தோம். இதையெல்லாம் கூறியது கிரண் பேடி என்ற கிரண் கேடி தான். தன்னைப் பற்றி இப்படியான உருவகத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். ஊடகங்களும் அதையே இத்தனை நாளும் வெளியிட்டன.

மேற்கண்ட செய்தியை ஏப்ரல் மாதம் 2010இல் போபாலில்  சமூக அறிவியல் பள்ளி மாணவர்களிடம் அவர்களின் இசுபெக்ட்ரம் 2010 நிகழ்ச்சியில் உரையாற்றும் போதும் கூறியுள்ளார்.


ஆனால் இப்போது தான் தெரிகிறது அவர் ஒன்றும் செய்யவில்லை போக்குவரத்து துணை ஆய்வாளர் நிர்மல் சிங் என்பவர் முறையற்ற முறையில் நிறுத்தியிருந்த மகிழுந்துக்கு அபராதம் விதித்தார் என்பது.  அச்சமயத்தில் இந்திரா காந்தி வெளிநாட்டில் இருந்தார். அதுவும் அது பிரதமர் பயணம் செய்யும் மகிழுந்து அல்ல அது பிரதமர் அலுவலக மகிழுந்து (DHI 1817). அங்கு வேலை செய்த யாரோ பயன்படுத்தியுள்ளார்கள். அம்மகிழுந்துக்கு தேவையான பொருட்களை அங்குள்ள கடையில் வாங்க நிறுத்தியுள்ளார்கள்.   அதனால் அக்கடைக்கு நிர்மல் சிங் தண்டம் விதித்து சீட்டு கொடுத்துள்ளார். அக்கடையின் பாதுகாவலர் இது பிரதமர் அலுவலக மகிழுந்து என்று கூறியும் தண்டம் விதித்தார் நிர்மல் சிங். நேர்மையான அதிகாரி நிர்மல் சிங்கிற்கு கிடைக்க வேண்டிய புகழை இத்தனை காலமும் அனுபவதித்து வந்துள்ளார். இதுல கொடுமை என்னன்னா உண்மையான செய்தி கிரண் பேடியின் பக்கத்தில் உள்ளது ஆனால் எல்லோரும் அப்பக்கத்தை பார்க்காமல் கிரண் பேடி கூறியதையே நம்பினர். கிரண் பேடி கூட அவர் பக்கத்தை பார்க்காத போது அடுத்தவர்கள் பார்க்கனும் என்பது சரியல்ல :). இப்போது இவர் தளம் மீளமைக்கப்பட்டதால் பழைய செய்தி கண்ணுக்கு தட்டுப்படவில்லை. இப்போது இவர் கடையில் டீ போடுகிறார்கள். நடக்கட்டும்.

இது நடந்தது ஆகத்து 1982இல். கிரண் பேடி கோவாவுக்கு மாற்றப்பட்டது 1983 மார்ச்சில். கோவாவில் பணியிலிருந்த இவர் விடுப்பு கடிதம் கொடுத்து விட்டு (விடுப்பு ஏற்படவில்லை) தில்லிக்கு ஓடி வந்துவிட்டார்.
மகளுக்கு உடல் நிலை மோசமடைந்ததால் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு உடனடியாக தில்லி வந்தார். நிருவாக ரீதியாக அதாவது சட்டப்படி இது தவறு என்றாலும் உணர்வு வழியில் இது சரி. ஆனால் இதற்கு நேர்மாறாக மிசோரமில் நடந்தார்.

காங்கிரசு அரசு இவரை பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டதால் தான் இவருக்கு பாசக மேல் அன்பு பொங்குகியது என்பதும் வடிகட்டிய பொய். இவருக்கு காங்கிரசு அரசாங்கம் இக்கட்டான நேரங்களில் உதவியுள்ளது. இவர் முறையற்ற முறையில் வழக்கறிஞர்கள் மேல் தடியடி நடத்தியதை அது பற்றி விசாரித்த விசாரணை ஆணையமும் (வாத்வா ஆணையம்) கண்டித்துள்ளது. குற்றம் செய்த வழக்கறிஞரை தண்டித்தது சரி என்றும் ஆனால் எல்லா வழக்கறிஞர்கள் மேலும் தடியடி நடத்தியது தவறு என்றும் கூறியது. இவருக்கு தில்லியில் பெரிய பதவி தரக்கூடாது என்றும் அது கூறியது. இவரை மாற்ற வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை இராசீவ் காந்தியின் அரசில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பூட்டா சிங் மறுத்துவிட்டார். இவருக்கு பாசக மேல் அன்பு பொங்கியது தவறில்லை அதற்கு காங்கிரசு அரசு பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டது தான் காரணம் என்பது இவருக்கு அழகல்ல.

1992ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட இவர் தன் மகளுக்கு அம்மாநில ஒதுக்கீட்டில் டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார். சட்டப்படி இதில் தவறு இல்லை என்றாலும் அவ்வொதுக்கீடு மிசோரம் மாநில மலை வாழ் மக்களுக்கானது. சட்டத்தின் ஓட்டையை தனக்காக பயன்படுத்தினார்.  மிசோரம் மாநில தலைமைச் செயலரும் அம்மாநில ஒதுக்கீட்டில் கிரண் பேடி தன் மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் தவறில்லை என்றாலும் பொது நலன் கருதி அவ்வொதுக்கீட்டை பயன்படுத்தாமல் மிசோரம் மக்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை பேடி ஏற்றுக்கொள்ளவில்லை. மிசோரம் இடவொதுக்கிடை இவர் பயன்படுத்தியதால் மிசோராமில் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  மிசோரம் அரசும் இவர் மிசோரமில் இருப்பது ஆபத்து என்றும் இவருக்கும் இவர் குடும்பத்தாருக்கும் 24 மணிநேரமும் பாதுகாப்பு தருவது இயலாத செயல் என்றும் இவருக்கு எதிராக குற்றம் நடக்கலாம் என்று கூறியதால் அம்மாநில நிருவாகத்தின் அறிவுரைப்படி அங்கிருந்து வந்துவிட்டார்.