வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஜூலை 31, 2006

இலங்கையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதா?

இலங்கை அரசு "மனிதாபிமான" நடவடிக்கையாக தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட வான் படை & தரைப்படை குண்டுவீச்சை தொடர்ந்து இலங்கையில் போர்நிறுத்தம் காலாவதியாகிவிட்டதாக புலிகளின் திருகோணமலை அரசியல் பிரிவு தலைவர் எழிலன் அறிவித்துள்ளார்.

இலங்கை அரசு போர்நிறுத்தத்தை முறித்துக்கொள்ளவில்லை என்றும் இப்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை மனிதாபிமானத்தின் பால் எடுக்கப்பட்டதென்றும் கூறியுள்ளது. சிங்கள விவசாயிகளின் பயிர்கள் வாடுவது குறித்து மனிதாபிமான முறையில் கவலை கொள்ளும் அரசு தமிழ் மக்கள் குடிநீருக்காக தவிப்பது குறித்தும் மனிதாபிமான முறையில் கவலை கொண்டு அவர்கள் கவலையை போக்கினால் நன்றாக இருக்கும்.

இலங்கை அரசின் மனிதாபிமான நடவடிக்கையே குண்டுவீச்சு என்றால் இராணுவ நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அப்பட்டமான போர் நிறுத்தமீறலாக இருந்த போதிலும் இந்த குண்டுவீச்சை எந்த நாடும் கண்டித்ததாக தெரியவில்லை. ஒரு வேளை அவர்களும் இந்த குண்டுவீச்சு மனிதாபிமானது என்று நினைக்கிறார்களோ என்னவோ. கண்காணிப்பு குழு தலைவர் மட்டும் இந்த மனிதாபிமான தாக்குதல் தவறு என்று கூறியுள்ளார்.

இது வரை புலிகளின் நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் தாகுதலுக்கு எதிர் நடவடிக்கையாகவே உள்ளது.

பொதுவாக போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்துவிட்டதாக புலிகள் நினைத்தால் அது பலமான ஒரு தாக்குதலின் மூலம் உலகுக்கு தெரியப்படுத்தப்படும். இது வரை அப்படியொரு பலமான தாக்குதல் ஏதும் நடைபெறாததால் புலிகள் இன்னும் போர்நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்கிறார்கள் என்று கொள்வோமா?

வெள்ளி, ஜூலை 28, 2006

2006 Tour De France சட்டை கைமாறுகிறது

Tour De France -ன் இந்த ஆண்டு வெற்றியாளரான Floyd Landis ஊக்க மருந்து உட்கொண்டதாக சோதனையில் அறியப்பட்டுள்ளார். இதனால் இவரின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது, அவரது அணி பொனக்(Phonak) அவரை அணியிலிருந்து விலக்கி வைத்துள்ளது. 2வது மாதிரியை இன்னும் சோதனை செய்யவில்லை. அதன் முடிவை பொருத்து பன்னாட்டு சைக்கிள் அமைப்பு லெண்டிஸ் மீது நடவடிக்கை எடுக்கும்.


சைக்கிள் போட்டிகளிலேயே "Tour De France" தான் ராசா போட்டி அதாவது இது சைக்கிளின் உலக போட்டி. இதன் தூரம் எவ்வளவு தெரியுமா? 3000 - 4000 கி.மீ. ஒவ்வொரு ஆண்டும் இதன் தூரம் மாறும் ஆனால் 3000 கி.மீ க்கு கீழ் செல்லாது. இந்த ஆண்டு தூரம் 3657 கி.மீ. இது 20 கட்டங்களாக நடத்தப்படுகிறது, ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒரு நாள் அதன் படி 20 நாள், 2 நாள் ஓய்வு, ஆக மொத்தம் 22 நாள் இந்த போட்டி நடக்கும்.


இவ்வளவு கடுமையான போட்டியாக இருந்தாலும் முதல் இடத்தை பிடிப்பவருக்கும் 2 ம் இடத்தை பிடிப்பவருகும் இருக்கும் நேர இடைவெளி மிக குறைவு அதாவது ஒரு நிமிடம் இருக்கும் போட்டியின் கடுமை புரிகிறதா?

15 தாவது கட்டத்தில் முன்னனியாளராக இருந்த லெண்டிஸுக்கு கடும் சோதனை 16வது கட்டத்தில் வந்தது, தடுமாறி விழுந்தார் அதில் மதிப்புமிக்க 10 நிமிடங்களை இழந்தார், 16-ம் கட்ட முடிவில் அவருக்கும் முன்னனியாளரான ஆஸ்கார் பெரைரோவுக்கும் (Oscar Pereiro)இடையேயான நேர இடைவெளி 8 நிமிடமாக அதிகரித்தது. 11-ம் இடதுக்கு தள்ளப்பட்டார். இன்னும் 4 கட்டங்களே உள்ளன அதில் 8 நிமிட நேர இடைவெளியை குறைத்து வெற்றி பெறுவது என்பது மிக கடினம் என்பதால் லெண்டிஸின் கதை 2006 போட்டியில் காலி என்று அனைவரும் முடிவு செய்துவிட்டனர்.

ஆனால், எல்லோரும் அதிசயத்தக்கவகையில் பெரும் சாதனையாக 17வது கட்டத்தை லெண்டிஸ் வென்றார் இது சாதாரண வெற்றியல்ல இதில் அவருக்கும் முன்னனியாளரான ஆஸ்கார் பெரைரோவுக்கும் ஆன நேர இடைவெளியை 8 நிமிடத்தில் இருந்து 30 வினாடிகளாக கொண்டுவந்தார்.

19 & 20 ம் கட்டங்களில் முதல் நிலையை அடைந்து "Tour De France"ன் மஞ்சள் சட்டையை தனதாக்கிக்கொண்டார். 2வது இடத்தை பிடித்த ஆஸ்கார் பெரிரோவுக்கும் இவருக்குமான நேர இடைவெளி 57 வினாடிகள்.

இப்ப மஞ்சா சட்டை பறிபோகும் போல இருக்கு. 2வது மாதிரியின் முடிவை பொறுத்தே இது அமையும். முதல் மாதிரியிலிருந்து 2வது மாதிரியின் முடிவு பெரும்பாலும் மாறாது என்று கூறுகிறார்கள் அதன் படி முதல் இடம் ஆஸ்கார் பெரைரோவுக்கு போகப்போகிறது. 17வது கட்ட முடிவில் எடுக்கப்பட்ட மாதிரியில் தான் "டெஸ்டாஸ்டரோன்" (testosterone)அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக கண்டுள்ளார்கள்.

இப்பந்தயத்தில் லெண்டிஸ் இடுப்பு எலும்பு (Hip ailment -osteonecrosis) பிரச்சனையோடே கலந்து கொண்டார். விரைவில் இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போகிறார்.

கடுமையான இடுப்பு எலும்பு வலியுடன் 3567 கி.மீ சைக்கிள் ஓட்டியது என்னை பிரமிக்க வைக்கிறது. பதிவு எழுத தூண்டியதும் இந்த பிரமிப்பே.

என்ன சாதனை செய்து என்ன பயன்? ஊக்க மருந்து உட்கொண்டதால் அனைத்தும் வீணாவதுடன் பழிச்சொல்லும் அல்லவா காலத்துக்கும் உடன் வரும்.


செவ்வாய், ஜூலை 18, 2006

அமெரிக்காவில் கண்ணையன்

அமெரிக்காவுக்கு வந்த 'கண்ணன்' ஒரு 'பீரங்கி' ஆனார். எப்படினு கேட்கரீங்களா?
.
.
.
.
.
.
அமெரிக்கர்கள் கண்ணனை '"கேனன்'" என்று தான் உச்சரிப்பார்கள். பெருமையா இருக்கா? நல்லது.

ஆனா பாருங்க அமெரிக்காவில் "கண்ணையன்" பொழப்புதான் மோசம். எப்படினு கேட்கரீங்களா?
.
.
.
.
.
.
கண்ணன் 'கேனன்' ஆனா கண்ணையன் "கேனயன்" ஆகிடுவாரே.

வெள்ளி, ஜூலை 07, 2006

இலங்கையில் தடை செய்யப்பட்டவை.


1) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பாம் "டைகர் பாம்"

2) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பானம் (பியர்) - " மில்லர் பியர்"

3) இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் " பாயும் புலி "

4) இலங்கை தடைசெய்யப்போகும் திரைப்படம் வைகைப் புயலின் " இம்சை அரசன் 2-ம் புலிகேசி"

5) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆட்டம் " புலி ஆட்டம்".

6) இலங்கையில் தடை செய்யப்பட்ட பாட்டு கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் " அண்ணாத்தே ஆடுறார் " என்ற பாட்டு காரணம் அதில் கமல் புலி வேசம் கட்டி ஆடுவார்.

7) இலங்கை அரசு வெறுக்கும் அரச பரம்பரை " புலிக்கொடி தாங்கிய சோழ அரச பரம்பரை"

8) இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர் " டைகர் வுட்ஸ் "

9) இலங்கை அரசுக்கு பிடிக்காத விலங்கு "புலி".

10) இலங்கையில் தடை செய்யப்பட்ட உணவு பண்டம் " புளி " புளியை புலியா நினைத்து தடை பண்ணிட்டாங்க. அதனால கொழும்பு போனா புளிக் குழம்பு வேண்டும், புளி இரசம் வேண்டும் என்று கேட்காதிங்க. ஆனா அதிரசம் கிடைக்கும். :-)

11) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஏப்பம் "புளி ஏப்பம்" புளியை புலியா நினைத்து தான் காரணம்.


புதன், ஜூலை 05, 2006

AIIMS போராட்டத்தால் இதய நோயாளி மரணம்

உத்தர பிரதேசத்திலுள்ள ஃபருக்காபாத் நகரில் வசிக்கும் சர்வேஷ் குமார் என்பவர் புதன் மாலை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், உடனே அவரை அருகிலுள்ள புது டில்லி AIIMS மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனையில் அப்போது வேணுகோபால் நீக்கத்தை எதிர்த்து AIIMS மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அவரை அங்கு அனுமதிக்க முடியாது என்று கூறி அருகிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிறுந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் AIIMS மருத்துவமனையிலிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே 35 வயதுடைய சர்வேஷ் குமார் மரணமடைந்து விட்டார்.



http://www.newindpress.com/Newsitems.asp?ID=IEL20060705131345&Title=B+R+E+A+K+I+N+G++++N+E+W+S&Topic=-463&



என்ன கொடுமை..... மருத்துவர்கள் போராட்டம் நடத்தட்டும் அதற்காக அவசர சிகிச்சை நோயாளிகளை பந்தாடி உயிரை எடுப்பது மன்னிக்க முடியாத செயல்.
அவசர சிகிச்சை வேண்டுவோர் தாமதமாக மருத்துவமனைக்கு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள்( பல சமயம் உயிரிழப்புகள் ) மருத்துவர்கள் அறியாததா? அதுவும் குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டும் இல்லையெனில் சங்கு தான் ஊத வேண்டும். இங்கு AIIMS மருத்துவர்கள் காக்கும் வேலையை செய்வதை விட்டுவிட்டு சங்கு ஊதும் வேலையை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
மிக முக்கியமான கடமையை செய்ய தவறிய இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

செவ்வாய், ஜூலை 04, 2006

சேவல் பலியிட்டு சங்கர மட வேலை தொடக்கம்

கொலை, கைது, ஜெயில் என்று இதுவரை சந்தித்திராத அளவு பெரும்சோதனையில் காஞ்சி மட சங்கராச்சாரியார்கள் உள்ளனர். இதனால் மட மக்கள் மடத்தில் வாஸ்து தோசம் ஏதாவது உள்ளதா என்று வாஸ்து அறிஞர்களை கொண்டு ஆராய்ந்தனர்.

ஆராய்ந்ததில் காஞ்சி சங்கர மடத்தின் முன் பகுதி நுழைவாயில் வாஸ்து குறைபாடுடன் உள்ளதாக வாஸ்து அறிஞர்களால் அறியப்பட்டது.

அதனால் வட பகுதியிலுள்ள நுழைவாயிலை இடித்துவிட்டு கிழக்கு திசையில் நுழைவாயிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆகையால் கிழக்குப்பகுதியில் இருந்த கடைகள் காலிசெய்யப்பட்டன.

தற்போது காலிசெய்யப்பட்ட கடைகளை இடித்து புதிய நுழைவாயில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை தொடங்குவதற்கு முன் சேவல் பலி கொடுக்கப்பட்டது.


http://thatstamil.oneindia.in/news/2006/07/03/kanchi.html

காஞ்சி மடத்தில் சேவல் பலி கொடுத்து நுழைவாயில் மாற்றும் பணி தொடங்கப்பட்டது என்ற செய்தியை படித்ததும் என்னடா இது குப்பன் சுப்பன் ஆண்டுக்கு ஒரு முறை அவனோட கோயிலில் கோழி, கெடா வெட்டி சாமி கும்பிட்டப்போ இது ஆகாது தப்பு பிராணி வதை இந்து மத விரோதம்னு சொன்ன மட ஆளுங்க சேவலை பலி கொடுத்து வேலை செய்யறாங்களேன்னு தோன்றியது. எல்லாம் காலத்தின் கோலம் என்ன செய்வது.

ஒரு வேளை இவர்களின் சோதனைக்கு காரணம் அய்யனாருக்கும் கருப்பணாருக்கும் முனீஸ்வரனுக்கும் உரிய படையலை ஆட்சியாளர்களின் (அப்போது) நெருக்கத்தை வைத்து தடுத்ததால் நேர்ந்த தெய்வ குற்றமோ என்னமோ யார் கண்டது.

காதோலை, கருவமணி, சுருட்டு, சாராயம் படைத்து முனீஸ்வரனுக்கு ஒரு கெடா அல்லது கோழி வெட்டுனா எல்லா தோசமும் நீங்கி வாழ்வில் வளம் பெருகும். எனக்கு தெரிந்த பரிகாரம் இது.