வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், டிசம்பர் 05, 2016

செயலலிதாவுக்கு உண்மையில் ஏற்பட்டது மாரடைப்பா?

அப்பலோ மருத்துவமனை நிருவாகம் செயலலிதாவிற்கு Cardiac Arrest வந்துள்ளது என்று அறிவித்துள்ளது, மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்றது.

நம்ம செய்தி ஊடகங்கள் அவருக்கு மாரடைப்பு என்றன. பிபிசி ஆங்கில பதிப்பும் தமிழ் பதிப்பும் கூட அவருக்கு மாரடைப்பு என்று தான் செய்தி இட்டுள்ளன. மாரடைப்பு என்றால் Heart Attack. Heart Attack என்பது வேறு Cardiac Attack என்பது வேறு என்பது ஊடகவியலாளர்களுக்கு தெரியவில்லை என்பது அவர்களின் தரத்தை காட்டுகிறது. நாம் அவர்கள் சொல்வதை தான் நம்பிக்கொண்டு உள்ளோம், எல்லாம் விதி. பிபிசி ஊடகவியலாளர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பது தான் வேதனையின் உச்சம். மற்ற தமிழ் ஊடகங்களை விட அவர்கள் தரமானவர்கள் என்பது தான் அதற்கு காரணம்.


ஊடகவியலாளர்கள் புதிதாக எந்த கலைச் சொல்லையும் உருவாக்க விட்டாலும் இருக்கும் கலைச் சொல்லையாவது பயன்படுத்த வேண்டும். Cardiac arrest  என்பதற்கு தமிழ் சொல்  இதய நிறுத்தம் என்பதாகும்.


மாரடைப்பு (Heart Attack ) என்றால் என்ன?
இதயத்தசைக்குச் செல்லும் குருதி (இரத்தம்) வழக்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது மாரடைப்பு.  எளிமையாக சொல்வது என்றால் இதயத்தின் ஒரு பகுதி குருதியோட்டம் தடைபடுவதால் செயலிழப்பது.


இதய நிறுத்தம் (Cardiac arrest) என்றால் என்ன?
இதயத்தின் சுருங்கி விரியும் செயல்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச் சுற்றோட்டம் நிறுத்தப்படுவது இதய நிறுத்தம் ஆகும். எளிமையாக சொல்வது என்றால் இதயம் முழுவதும்  குருதியோட்டம் தடைபடுவதால் செயலிழப்பது. இது மாரடைப்பைவிட தீவிரமானது.

நாமாவது வேறுபாட்டை புரிந்து கொள்வோம். தமிழ் விக்கிப்பீடியாவில் இவற்றைப் பற்றி கட்டுரைகள் உள்ளது.


சனி, டிசம்பர் 03, 2016

குடும்பத்தில் சண்டை வராமல் இருப்பதன் காரணம்


ஒரு வீட்டில் எந்த சிறு விடயத்திற்கும் சண்டை, கணவன் மனைவி இருவரும்  சண்டைக் கோழிகள். ஆனா அவங்க பக்கத்து வீட்டில் 10 ஆண்டுகளாக இருக்கும் கணவன் மனைவி அவர்களுக்குள் சண்டையே போடுவதில்லை.

இது இவர்களுக்கு வியப்பு. அவங்க சண்டை போடாம இருக்கும் காரணத்தை அறிய ஆவல் ஆனார்கள், தெரிந்தால் இவர்களும் அப்படி இருக்கலாம் அல்லவா.  காரணத்தை அறிய கணவன் போனான். அவர்கள் வீட்டை மறைந்திருந்து கவனித்தான்.

கணவன் பட்டாசாலையிலும் மனைவி சமையலறையிலும் அமைதியாக அவர் அவர் வேலையை செய்துகொண்டிருந்தனர்.

மனைவி காஃபி கொண்டு வந்து கணவனுக்கு கொடுத்தாள், தவறி அது கணவனின் சட்டையில் சிந்திவிட்டது. உடனே மனைவி பதறி தான் கவனமாக கொடுத்திருக்கனும் என்றும் தன் தவறை மன்னிக்கும் படியும் கூறினாள். கணவன் இது உன் தவறில்லை நான் திடீர் என்று திரும்பியதால் தான் காஃபி கொண்டு வந்த உன் கை என் மேல் பட்டு காஃபி சிந்திவிட்டது அதனால் தவறு என் மேல் தான் என்றான்.

கணவன் அடுத்த அறைக்கு செல்லும் போது வழுக்கி விழுந்துவிட்டான்.  தரையில் இருந்த தண்ணீரை துடைக்காத தன் தவறினால் தான் விழுந்துவிட்டார் என்றும் அதற்காக தன் தவறை மன்னிக்கும் படியும் வேண்டினாள், தரையில் உள்ள தண்ணீரை கவனிக்காமல் வந்ததால் தான் தான் தவறி விழுந்து விட்டதாக கூறி தவறு தன் மீது தான் என்று கணவன் கூறினான்.

மனைவி இயந்திர அம்மியை (Mixie) சட்னியை அரைக்க போட்டாள். அது வேலை செய்யவில்லை, உடனே கணவன் அதை சரிசெய்யாதது தன் குற்றம் என்று கூறினான், மனைவி தான் அது வேலை செய்யாது என்று தெரிந்தும் அம்மியை பயன்படுத்தாமல் மறந்து  இயந்திர அம்மியை  போட்டது தன் மீது தான் தவறு என்றாள்.

மனைவி மின்விசிறியை போட்டதும் அது வேலை செய்யவில்லை, புது மின்விசிறி தான் போடனும் என்று மின் பழுதாக்குநர் கூறியும் தான் வேறு மின்விசிறி வாங்கி பொருத்தாதது தன் தவறு என்று கணவன் கூறினான். மின் விசிறி இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதை மறந்து அதை போட்டது தன் தவறு என்று மனைவி கூறினாள்.

இவர்கள் இப்படி இருப்பதால் இவர்களுக்குள் எப்பவும் சண்டை வருவதில்லை \ வந்ததில்லை

சண்டைக்கார மனைவி தன் கணவனிடம் அடுத்த வீட்டு அமைதிப்புறா குடும்பத்தை கவனித்தீர்களே அவர்கள் சண்டையிடாமல் இருக்கும் இரகசியத்தை கண்டுபிடித்தீர்களா என்று கேட்டாள்.

இருவரும் எப்போதும் குற்றவுணர்வோடு இருப்பதால் அவர்களுக்குள் சண்டை வருவதில்லை என்றும் இவர்கள் இருவரும் எப்போதும் தாங்கள் செய்வது சரி என்று கருதுவதால் சண்டை ஏற்படுகிறது என்றும் கூறினான்.

இதிலிருந்து தெரிவது குடும்பத்தில் சண்டை இல்லையென்றாள் அவர்களிடம் குற்ற உணர்ச்சி உள்ளது என்று பொருள். குற்ற உணர்ச்சி இருப்பவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது என்பது நாம் அறிந்ததே.