வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, நவம்பர் 15, 2013

வினா ஆறு வகைப்படும்

வினா வாக்கியங்களை நாம் அறிவோம். வினவுவதற்காக எழுகின்ற வாக்கியங்கள். ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள வினாவின் வழியாகக் கேட்கிறோம். அந்த வினா வாக்கியங்களை ஆறு வகைகளாகப் பகுத்திருக்கிறார்கள்.

பொதுவாக, என்னென்ன நிலைமைகளில் ஒரு வினா எழும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அறியாமல் கேட்பது, அறிந்துகொண்டே கேட்பது, அறிந்திருந்தாலும் அதில் மேலும் உள்ள ஐயத்தைத் தீர்த்துக்கொள்ளக் கேட்பது, கொடுப்பதற்காகக் கேட்பது, கொள்வதற்காகக் கேட்பது, கட்டளையிடுவதற்காகக் கேட்பது என்று அந்த வினா எழும் சூழ்நிலைகளை ஆறாகப் பகுத்திருக்கிறார்கள்.

நானும் நீங்களும் சந்தித்துக்கொள்கிறோம். என்னை உங்களுக்குத் தெரிகிறது. எனக்கு இனிதான் உங்களோடு அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். நான் உங்களை அறியாத நிலையில் அறிந்துகொள்ள வேண்டி வினவுகிறேன்.

‘உங்கள் பெயர் என்ன ?’ - அறியாத நிலையில் நான் எழுப்பும் வினா என்பதால் இது ‘அறியா வினா.’ அடிப்படையான எளிமையான வினாக்கள் எல்லாமே அறியா வினாக்கள்தாம்.

உங்களுக்கு என்னைத் தெரிகிறது என்பதைக் காட்டிக்கொள்ளாமல் நீங்களும் என்னிடம் கேள்வியின் வழியாகவே பேசுகிறீர்கள். ‘என் பெயர் கண்ணன். உங்கள் பெயர் என்ன ?’ - அறிந்திருந்தும் நீங்கள் வினவுகிறீர்கள். அதனால் இது ‘அறிவினா.’ அறிந்திருந்தும் வினவுவது. ஆசிரியர் கேள்வி கேட்பது, ஒருவரைத் தோற்கடிக்கக் கேள்வி எழுப்புவது எல்லாம் இவ்வகை.

நம் அறிமுகத்தை அடுத்து உரையாடல் தொடர்கிறது. நான் எதையோ எழுதுவது உங்களுக்குத் தெரிகிறது. அது கதையா, கவிதையா என்பதைக் குறித்து உங்களுக்குத் தெளிவில்லை. அதில் ஐயமிருக்கிறது. அந்த ஐயத்தை என்னிடமே தீர்த்துக்கொள்ள ஒரு வினாவை எழுப்புகிறீர்கள். ’நீங்கள் கவிதை எழுதுகிறீர்களா ? அல்லது கதைகளை எழுதுகிறீர்களா ?’ - உங்களுக்குத் தெரிந்த ஒரு பொருளில் மேலும் எழுந்த ஐயத்தின் அடிப்படையில் வினா எழுப்பினீர்கள். அதனால் இது ‘ஐய வினா.’ நடத்துநர் நிறுத்தத்தில் பயணிகளை வினவுவது (நால்ரோடு யாராவது எறங்குறீங்களா ?), நிருபர் காவல்துறையை நுணுக்கிக் கேட்பது (குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் ?) எல்லாம் இவ்வகையில் வரும்.

இப்படி நீங்கள் கேட்டுவிட்டதால் என் கவிதைத் தொகுப்பு ஒன்றை உங்கள் கைகளில் திணித்துவிடவேண்டும் என்று விரும்புகிறேன். ‘என் கவிதைத் தொகுப்பு எதையும் படித்திருக்கிறீர்களா ?’ என்று கேட்கிறேன். நீங்கள் ‘இல்லை. உங்களிடம் இருக்கிறதா ?’ என்கிறீர்கள். நீங்களும் என் தொகுப்பை வாங்கிப் படிக்க விரும்பியதால் அவ்வாறு கேட்டீர்கள். ஆகவே, இங்கே நம் கேள்விகள் வெறும் கேள்விகள் அல்ல. நான் கொடுப்பதற்காகக் கேட்டேன். நீங்கள் பெற்றுக்கொள்வதற்காகக் கேட்டீர்கள். நான் கேட்டது ‘கொடைவினா.’ நீங்கள் கேட்டது ‘கொளல்வினா.’

நாம் இருவரும் தேநீர் அருந்தக் கிளம்புகிறோம். நம் மீது ஒருவன் வந்து நிதானமில்லாமல் மோதி விடுகிறான். நீங்கள் சினந்து அந்நபரை ‘இப்படித்தான் நிதானமில்லாமல் வருவீரா ?’ என்று கேட்கிறீர்கள். அவன் நிதானமில்லாமல் வந்தான், மோதினான்... அதை அவன் திருவாயால் தெரிந்துகொள்ளவா கேட்டீர்கள் ? இல்லை. ‘நிதானமாக வா’ என்று கட்டளையிட அவ்வாறு கேட்டீர்கள். அதனால் இது ‘ஏவல் வினா.’

இவ்வாறு வினா வாக்கியங்கள் மொத்தம் ஆறு வகைப்படும் என்று நன்னூல் வகுக்கிறது.

அறி வினா
அறியா வினா
ஐய வினா
கொடை வினா
கொளல் வினா
ஏவல் வினா

இந்த வகைப்படுத்தலின் பின்னணியில் தமிழினத்தின் பண்பாட்டுப் பொதிவுகள் எல்லாமே அடங்கிவிடுகின்றனதானே ?

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

* மூடர்கூடம் திரைப்படத்தில் இந்த விளக்கங்களைப் பிரதிபலிப்பதுபோல் இரண்டு காட்சிகள் உள்ளன. ( குரங்கு குல்லா காட்சியில் ‘இந்த இடத்தில நீங்க ஆமான்னு சொல்லக்கூடாது சென்றாயன். ஏன்னு சொல்லனும்’ )

* ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கும் வினா வகைகள் : (1). குற்றியலுகரம் என்றால் என்ன ? - அறிவினா (2). குறும்பு செய்வாயா ? - ஏவல்வினா (3). ஒழுங்காகப் படித்து நல்ல மதிப்பெண் பெறுவாயா ? - ஐய வினா (4). இங்க இருந்த சாக்பீஸ யாருப்பா எடுத்தது ? - கொடைவினா (5). தமிழ்ப் புத்தகம் யார் கொண்டு வந்தீங்க ? - கொளல்வினா 6). இவங்க எல்லாம் படிச்சு ஆளாகிறபோது இந்த உலகம் என்ன பாடுபடுத்தப் போகுதோ ? - அறியாவினா.


விடைகள் பற்றி நன்கு தமிழறிந்த நண்பர் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் அளித்ததும் இங்க பகிரப்படும்.

விடை எட்டு வகைப்படும் அவை:

(1) சுட்டுவிடை
(2) மறைவிடை
(3) நேர்விடை
(4) ஏவல்விடை
(5) வினாஎதிர்வினாதல் விடை
(6) உற்றது உரைத்தல் விடை
(7) உறுவது கூறல் விடை
(8) இனமொழி விடை

வியாழன், நவம்பர் 14, 2013

வலி மிகுதல் 12 – இன்னும் சில நிலைமைகள்

1. ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலிமிகும். ஓரெழுத்துச் சொற்களால் ஆகியவையே ஓரெழுத்தில் அமைந்த ஒருமொழி. பூப்பறித்தான். டீக்கடை. தீத்தெறித்தது. ஓரெழுத்து ஒருமொழியில் வலி மிகாத நிலைமைகளும் இருக்கின்றன. நீ செல். போ பணிந்து.

2. வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகவேண்டும் என்பது அடிப்படை. அதன்படி கொக்குப் பறந்தது, சிட்டுப் பாடியது என்றே எழுத வேண்டும். செய்யுளில் இவ்வாறு எழுதுகின்ற வழக்கம் இருக்கிறது. ஆனால் உரையில் இவ்வழக்கு கைவிடப்பட்டுவிட்டது. தமிழறிஞர்களின் வாதப் பிரதிவாதங்கள் இரண்டையும் சரியென்றே ஏற்கின்றன.

3. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகாது. ஆனால் சிற்சில இடங்களில் அதுவும் ‘கள்’ விகுதியிலும் கூட வலி மிகுத்து எழுதுவது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்துக்கள், பந்துக்கள், கந்துக்கடன். கந்துக்காரன்.

4. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பதால் மருந்து விற்கும் கடையை ‘மருந்து கடை’ என்று எழுதவேண்டும். இதற்கு ‘மருந்தைக் கடைந்து தா’ -இரண்டாம் வேற்றுமைத் தொகையில் - என்பதுபோன்ற ஒரு பொருளும் வருகிறது. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாக ‘மருந்தை விற்கும் கடை’ என்ற பொருளில் மருந்துக் கடை என்றே எழுதுகிறோம்.

5. ஊர்காவலர், மெய்க்காவலர் என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையாக வலிமிகாமல் எழுதப்படவேண்டும். ஆனால், ஊர்க்காவலர், மெய்க்காப்பாளர் என்றே எழுதப்படுகிறது.

6. ஒன்று, ஒரு, இரண்டு, இரு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, அறு, ஏழு, எழு – ஆகிய எண்சொற்களை அடுத்து வலி மிகாது. அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய சொற்களுக்குப் பின் கட்டாயம் வலி மிக வேண்டும்.

7. படி’ என்ற சொல் தான் சேர்ந்தாலும் தன்னை அடுத்து வல்லினம் வந்தாலும் வலி மிகாது. அதன்படி இதன்படி, சொன்னபடி, செய்தபடி. ஆனால் அப்படி, இப்படி, எப்படி – ஆகிய சொற்களை அடுத்து வலி மிக வேண்டும்.

8. அத்தனை, இத்தனை, எத்தனைக்கு வலி மிகாது. அத்துணை, இத்துணை, எத்துணைக்கு வலி மிகும்.

9. கீழ் என்பதை அடுத்து வலிமிகுவதும் மிகாததும் ஏற்கப்படுகிறது. கீழ்க்கணக்கு, கீழ்த்திசை, கீழ்தளம்.

10. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே- என்பதற்கொப்ப மரபையும் தொல் பெருமைகளையும் போற்றிக்காப்பதையும் தகுதியான புதுமைகளை ஏற்று நடப்பதையும் இருகண்களாகக் கருதி இந்தத் தொடரை இனிதே நிறைவு செய்கிறேன். ஆர்வத்துடன் பின்தொடர்ந்த அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

செவ்வாய், நவம்பர் 12, 2013

வலிமிகுதல் 11 - கள் விகுதிக்கு வலி மிகுமா ?


கள் - மது என்ற பொருளில் வந்தால் தனிச்சொல். பன்மைச் சொற்களில் கள் என்று இடம்பெறும் ஈற்று விகுதிக்குப் பன்மை விகுதி என்று பெயர். வெறும் விகுதியாய் வருவதால் அது தனிச்சொல் இல்லை.

சொல் வகைமையில் கள் விகுதியை இடைச்சொல்லில் சேர்ப்பார்கள். இடைச்சொல்லுக்கு வலி மிகாது. கிறு, கின்று, ஆநின்று - ஆகியவை கூட இடைச்சொல்தான்.

வாழ்த்துக்கிறோம் என்று வலி மிகை செய்து எழுதுவதில்லை. வாழ்த்துகிறோம் என்றே எழுதுகிறோம். அதுபோலவே வாழ்த்துகள் என்றே எழுத வேண்டும். வாழ்த்துக்கள் என்பது பெரும் பிழை.

வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் என்பதால்தான் வாழ்த்துக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள், பாட்டுக்கள் என்று எழுதுவதாகச் சொல்வார்கள். பரிமேலழகரே ‘எழுத்துக்கள்’ என்று எழுதியிருப்பதாக ஆதாரமும் உண்டு.

வன்தொடர்க் குற்றியலுகர வலிமிகும் விதி தன்னை அடுத்து மற்றொரு தனிச்சொல் வந்தால்தான் பொருந்துமே அன்றி கள் என்னும் இடைச்சொல்லான பன்மை விகுதிக்குப் பொருந்தாது.

கள் விகுதி வலிமிகுந்தும் மிகாமலும் குழப்பமான புழக்கத்தில் இருக்கிறது. அந்தப் பழக்கத்தால்தான் வாழ்த்துக்கள் என்கிறோம்.

1. தனி நெடிலை அடுத்தோ (ஓரெழுத்து ஒருமொழி) நெடிலில் முடியும் சொற்களை அடுத்தோ கள் விகுதிக்கு வலி மிகும்.

ஆக்கள், ஈக்கள், பாக்கள், தேனீக்கள், வெண்பாக்கள்.

ஆனால், ஐகாரத்திலும் ஔகாரத்திலும் வலி மிகாது. கைகள், பைகள், பண்டிகைகள்.

ஔகாரத்தில் ஏதும் சொற்கள் உள்ளதாகத் தெரியவில்லை.

2. உ’கரத்தில் முடியும் இரண்டு குறில் எழுத்துகள் (குறிலிணை) உள்ள சொற்களை அடுத்து கள் விகுதி வந்தால் வலிமிகும். தெருக்கள், அணுக்கள், வடுக்கள், பருக்கள்.

உ’கரத்தில் முடியும் இரண்டுக்கும் மேற்பட்ட குறில்கள் என்றாலோ அல்லது நெடிலை அடுத்த உகரக் குறில் என்றாலோ வலி மிகாது. அழகுகள், விழுதுகள், ஆடுகள், வீடுகள்.

ள்’ என்று முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் புணர்த்தவும் கூடாது. ஏனென்றால் புணர்ச்சி விதி ஏற்க இது தனிச்சொல் இல்லை. நாள்கள், பொருள்கள், வாள்கள், தோள்கள் என்றுதான் எழுதவேண்டும். நாட்கள், பொருட்கள் என்று எழுதக் கூடாது.

கள் விகுதி சார்ந்த ஐயங்களில் முழுமையாகத் தெளிவு பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.


****
புத்தகம்கள்-புத்தகங்கள்
பாடம்கள்-பாடங்கள்
இவ்வாறான சில வார்த்தைகளை பாடத்திலும் முக்கியமான சில பத்திரிகைகளிலும் படித்ததால் வந்த குழப்பம் ஐயா.
(பத்திரிக்கை -பத்திரிகை...??)

****
அதனால்தான்   ள்  என்று முடியும் பெயர்ச்சொற்கள் என்றேன். இதிலும் விதிவிலக்காக புள், முள் போன்றவை புட்கள், முட்கள் என்றாகும்  அது வேறு பாடம்.

*****
கள் மயக்கமே!வலியிட்டும் இடாமலும் எழுதுவதில் தப்பில்லை என்றார் என் ஆசிரியர்.ஒருவேளை அவர் தப்பிப்பதற்காக இருக்கலாம்.அதிகமானோர்மவவன்றொடர் குற்றியலுகரத்தின் பின் வலி மிகும் என்றே கொண்டெழுதுகின்றனர்.(முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்.......).

****
இசையின்பம் கருதிச் செய்தால் ஏற்பது இயல்பு.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

வலிமிகுதல் 10
வலிமிகுதல் 9
வலிமிகுதல் 8
வலிமிகுதல் 7
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1

ஞாயிறு, நவம்பர் 10, 2013

வலிமிகுதல் 10


வலிமிகுதல் தொடரின் கிளைமாக்ஸ்-ஐப் படிக்கவுள்ளீர்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் புரியாமை என்னும் வில்லன் வென்றுவிடுவான் என்பதால் ஊன்றிப் படியுங்கள்.

ஒரு சொற்றொடரின் பொருள் வெவ்வேறு விதமாகவும் வேற்றுமைப்படலாம். அந்த வேற்றுமையை உணர்த்த வேற்றுமை உருபுகள் எனச் சில இருக்கின்றன. மரவேலி என்பதை எத்தனை விதமாய் விரிக்கலாம் பாருங்கள். மரத்தில் செய்த வேலி, மரத்திற்கு வேலி, மரத்தினது வேலி, மரத்தால் ஆகிய வேலி என்று புலமைக்கு எட்டிய வகையில் பொருள் கொள்ளலாம்.

இவ்வாறு சொற்றொடர் இடையே துல்லியமாய்ப் பொருள் வேற்றுமை தோன்றப் புரிந்துகொள்ளத் தோன்றியதே வேற்றுமை. சொற்றொடரின் பொருள் நுணுக்கங்களில் வேற்றுமை கற்பிக்கிறது.

இந்த வேற்றுமைக்கு உருபுகள் உள்ளன. அவற்றை எண்வாரியாகப் பெயரிட்டு இனங்காட்டுகிறார்கள். ஒன்று முதல் எட்டு வரையிலான வேற்றுமைத் தொடர்கள் மற்றும் தொகைகள். தொடர் என்றால் இயல்பாய் வருவது, தொகை என்றால் தொகுத்துப் பொருள் பெறுவது என்று நமக்குத் தெரியும்.

முன்னதாக வேற்றுமை உருபுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல், ஆன், ஒடு, ஓடு.
நான்காம் வேற்றுமை உருபு – கு
ஐந்தாம் வேற்றுமை உருபு – இன், இல்
ஆறாம் வேற்றுமை உருபு – அது, ஆது
ஏழாம் வேற்றுமை உருபு – கண்
எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

இப்போது விளக்கத்திற்கு வருகிறேன். இந்த வேற்றுமை
உருபுகள் ஒரு சொற்றொடரில் மறைந்திருக்க நாம் அவற்றை விரித்துத் தொகுத்துப் பொருள் காண்கிறோம். அதுவே வேற்றுமைத் தொகை. விரிவு செய்து பொருள் காண்பதற்காக சம்பந்தப்பட்ட சொற்றொடரோடு உரிய வேற்றுமை உருபை இணைத்து இயல்பான ஒரு சொற்றொடரை விளைச்சலாய்ப் பெறுவோம் அல்லவா, அந்த இயல்பான சொற்றொடர் வேற்றுமைத் தொடர்.

மற்றொரு நிலைமையும் இங்கே உண்டு. ஒரு சொற்றொடரில் வேற்றுமை உருபை மட்டும் சேர்த்து விரித்துப் பொருள்கொண்டாலும் போதாத நிலை ஏற்படும். வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு ‘வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை’ என்று பெயர். புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கிறதல்லவா ? உதாரணத்திற்கே போவோம், வாருங்கள்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பதால் இரண்டாம் வேற்றுமையிலிருந்து தொடங்குகிறேன்.

தண்ணீர் குடித்தான் – இது இரண்டாம் வேற்றுமைத் தொகை – எப்படி ? – தண்ணீரைக் குடித்தான்’ என்றே ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபை முதற்சொல்லோடு இணைத்துப் பொருள் கொள்கிறோம். தண்ணீர் குடித்தான்’ என்பது வேற்றுமை உருபு உள்மறைந்து தொகுத்துப் பொருள்காணும்படி இருக்கிறது. அந்த வேற்றுமை உருபு இரண்டாம் வேற்றுமை உருபு. ஆக,

தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை (தொகுக்கச் சொல்கிறது)

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொடர் (தொகுத்தபின் இயல்பாகிவிட்டது).

தண்ணீர்க்குடம் – இதை எப்படிப் பொருள் விரிப்பீர்கள் ? ‘தண்ணீரை உடைய குடம், தண்ணீரைப் பிடிக்கும் குடம்’ இப்படி இரண்டாம் வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்து (அந்த வினைச்சொல் இரண்டாம் சொல்லின் – குடம் - பயனை விளக்குவதாக இருக்கும்) அர்த்தம் கண்டோம். இதுவே இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

இப்போது நாம் வழக்குக்குள் நுழைகிறோம்.

இரண்டாம் வேற்றுமை (ஐ)
--------------------------------------
தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்.

தண்ணீர்க் குடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

இப்படி எட்டு வேற்றுமைகளுக்கும் பார்க்கப் போகிறோம்.

மூன்றாம் வேற்றுமை (ஆல்)
---------------------------------------
கை காட்டினான் – மூன்றாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

கையால் காட்டினான் – மூன்றாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகாது

தங்கக் கிண்ணம் - தங்கத்தால் செய்த கிண்ணம் – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

நான்காம் வேற்றுமை (கு)
------------------------------------
வள்ளித் திருமணம் – நான்காம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

வள்ளிக்குத் திருமணம் – நான்காம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்

கூலிப்படை – கூலிக்குக் கூடிய படை – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலிமிகும்.

ஐந்தாம் வேற்றுமை (இன், இல்)
--------------------------------------------
தாய்மொழி கூறு – ஐந்தாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தாய்மொழியில் கூறு – ஐந்தாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

பழச்சாறு – பழத்தில் பிழிந்த சாறு – ஐந்தாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

ஆறாம் வேற்றுமை (அது)
------------------------------------
கிளிப்பேச்சு – ஆறாம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

கிளியினது பேச்சு – ஆறாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

ஆறாம் வேற்றுமைக்கு உடன் தொக்க தொகை அபூர்வம்.

ஏழாம் வேற்றுமை (கண்)
-----------------------------------
மலை திரிவோர் – ஏழாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

மலையின்கண் திரிவோர் – ஏழாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

மலைக்கோவில் – மலையின்கண் எழுந்த கோவில் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

முதலாம் வேற்றுமையை இன்னும் பார்க்கவில்லை. முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது. அது வேறொன்றுமில்லை. எழுவாய்த் தொடர் என்று பார்த்தோமில்லையா ? அதையே தொகையில் முதலாம் வேற்றுமைத் தொகை (எழுவாய் வேற்றுமை) என்பார்கள். எளிமையாய் இருக்கும். காற்று குளிர்ந்தது. கை சுருங்கியது. – வலி மிகாது.

இன்னொன்று - எட்டாம் வேற்றுமை, இதை விளி வேற்றுமை என்பார்கள். தொடரில் பார்த்த விளித்தொடர் போன்றதுதான் இதுவும். அண்ணா தோற்காதே – அண்ணா யாரிடம் தோற்காதே – என்பதுபோல் தொகுத்துக்கொள்ள இடமிருப்பதால். இங்கும் வலிமிகாது.

வலிமிகுதல் குறித்த பாடங்கள் ஏறத்தாழ நிறைவை எய்துகின்றன. இன்னும் எளிய விதிகள் சில இருக்கின்றன. அவற்றை அடுத்த பகுதியில் எழுதுவேன்.

பிறகு இவற்றில் உள்ள ஓரிரு முரண்கள், அவற்றைக் களையும் விதங்கள் பற்றிய தெளிவையும் எழுதவுள்ளேன். அத்துடன் இப்பகுதி நிறைவடையும்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

*****
வள்ளி திருமணம் நான்காம் வேற்றுமை உருபன்று. வள்ளியின் திருமணமென்றே உருபேறி வரும். எனவே வலிமிகுதல் இன்றி வள்ளி திருமணம் என்றே வருமென்றே எண்ணுகிறேன். நடைமுறைத் தமிழில் வள்ளி திருமணம் சீதா சீத்தா திருமணமென்றே வலி மிகுபடாமல் வரும் எனது ஊரான  திருகோணமலையை சிலர் வலிமிகு வடிவில் திருக்கோணமலை என்றும் சொல்வார்கள். கவிநயத்துக்கு அமைவாக திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் திருகோணமாமலை அமர்ந்தாரே என்பதற்குப் பதிலாக திருக்கோணமாமலை அமர்ந்தாரே என்றுதான் வருகிறது.

எனக்கு தூய இலக்கண அறிவு இல்லை.
ஆனால் அனுபவ அறிவும் நாட்டார் நடைமுறை அறிவும்
தமிழ்வழக்கு என்பார்களே அதுவும் கொஞ்சம் உண்டு.
இதுபற்றி தங்கள் புலமைக் கருத்தை அறியும் ஆவலில் உள்ளேன்.

*****
அதனால்தான் முதலிலேயே (இரண்டாம் பத்தியில்) சொல்லியிருக்கிறேன். ஒரு சொற்றொடரைப் பலவகைப்பட்ட தொகையாகவும் இனங்காண முடியும். உதாரணத்திற்கு : பொன்மணி -
1) பொன்னலாகிய மணி - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (கருவிப் பொருள்)
2) பொன்னாகிய மணி - பண்புத் தொகை
3) பொன்னின்கண் மணி - ஏழாம் வேற்றுமைத் தொகை
4) பொன்னோடு சேர்ந்த மணி - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (உடனிகழ்ச்சிப் பொருள்)
5) பொன்னும் மணியும் - உம்மைத் தொகை (நன்றி: முனைவர் இராச. திருமாவளவன்). ஊர்ப்பெயரோடு ‘திரு’ வந்தால் வலிமிக வேண்டும்.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

வலிமிகுதல் 9
வலிமிகுதல் 8
வலிமிகுதல் 7
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1

வெள்ளி, நவம்பர் 08, 2013

வலிமிகுதல் 9

வினையொன்றே உயிராகப்
பண்பு காத்திருந்தேன்.

என்மொழிக்குள் உன்மொழி
அன்றிலின் அன்மொழியானது.

வேற்றுமை தீர்ந்து
உவமையாய் முன் நின்றாய்.

‘உம்மைப் பிடிக்கும்’
என்றாய்.

‘உம்மைத் தொகை பிடிக்குமா ?’
என்றேன்.

‘உம்’ என்றாள்.
‘ஏன் ?’ என்றேன்.

‘உன்னையும் என்னையும்
அதுவே சேர்க்கிறது.
நீயும் நானும்
அதனால் இணைகிறோம்’ என்றாள்.

‘உம்’ என்னும்
உன் சம்மதச் சொல் கொண்டிருப்பதால்
எனக்கும் அதுவே பிடிக்கும்’ என்றேன்.

‘எனக்குப் பிடித்ததற்கு
இன்னொரு காரணமும் உண்டு’ என்றாள்.

‘என்ன ?’ என்றேன்.

‘இணைப்பில் வலி தோன்றாது.
உணர்த்த விரும்பும் பொருள் மட்டுமே
தோன்றும் ’ என்று கண் தாழ்ந்தாள்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

புதன், நவம்பர் 06, 2013

வலிமிகுதல் 8


முந்திய பகுதியில் ‘தொடர்’களின் வகைகளையும் அவற்றில் வலி மிகும் மிகா இடங்களையும் பார்த்தோம். இனி ‘தொகை’களின் வகைகளையும் அவற்றில் வலிமிகும் மிகா இடங்களையும் பார்ப்போம்.

தொகை என்பது இரண்டு சொற்களுக்கு இடையே தொகையுருபு மறைந்திருப்பதால் நாம் விரித்துப் பொருள் கொள்வதற்கு இடம் தருவது. அது ஆறு வகைப்படும்.

1. வேற்றுமைத் தொகை
2. வினைத் தொகை
3. உவமைத் தொகை
4. பண்புத் தொகை
5. உம்மைத் தொகை
6. அன்மொழித் தொகை

சென்ற பதிவில் ‘தொடர்’ வகைகளில் வேற்றுமைத் தொடரை விளக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். அத்துடன் இந்தப் பதிவிலும் முதல் வகையான வேற்றுமைத் தொகையையும் நிறுத்தி வைக்கிறேன். வேற்றுமைத் தொடரையும் வேற்றுமைத் தொகையையும் சேர்த்துத் தனியாகக் கற்க உள்ளோம். மீதமுள்ளவற்றைப் பார்ப்போம்.

வினைத்தொகை -
ஊறுகாய், சுடுசோறு, ஆடுகளம் - இரண்டு சொல்லில் முதற்சொல் ஏவல் பொருள் தந்து முக்காலத்திற்கும் விரித்துப் பொருள் காணும்படி அமைவது. வலி மிகாது என்பதைத் தெளிவாக அறிவீர்கள்.

உவமைத் தொகை -
தாமரைக்கண், மலைத்தோள், பனிப்பார்வை - முதற்சொல் இரண்டாம் சொல்லுக்கு உவமையாக வந்து இடையில் போன்ற என்ற உவம உருபை இட்டுத் தொகுத்துப் பொருள் காண்பது. வலி மிகும்.

பண்புத் தொகை -
பொய்ப்பேச்சு, மெய்க்கருத்து, கறுப்புக்குதிரை - முதற்சொல் இரண்டாம் சொல்லின் பண்பை விளக்குவதாய் அமைந்து ‘ஆன, ஆகிய’ போன்ற பண்புருவுகளை இட்டுத் தொகுத்துப் பொருள் காணும்படி இருப்பது. வலி மிகும்.

உம்மைத் தொகை -
காடுகரை, குழந்தைகுட்டி, தாய்தந்தை - இரண்டு பெயர்ச்சொற்களோடும் உம் விகுதியைச் சேர்த்துத் தொகுத்துப் பொருள் கொள்வது. வலி மிகாது.

அன்மொழித் தொகை -
துடியிடை தோன்றினாள், எழுகதிர் கிளம்பிற்று - மேற்காணும் எவ்வகைக்குள்ளும் அடங்காமல் தொகுத்துப் பொருள் காண வேண்டியிருப்பது. துடிபோன்ற இடையை உடைய பெண் தோன்றினாள். எழுந்த கதிர் கிழக்கிலிருந்து கிளம்புகிறது. இதில் வலி மிகுவதற்கும் மிகாமைக்கும் இதுவரை கற்ற விதிகளின்படி உரிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளும்படி இருக்கும்.

தொகைகளின் தனித்த குணம் - இரண்டும் வினைச்சொற்கள் என்றால் அவற்றுக்கு இடையே தொகை தோன்றாது.

அடுத்த பகுதியில் இந்தத் தொடரின் க்ளைமாக்ஸ் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வலிமிகுதல் 7

வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1

திங்கள், நவம்பர் 04, 2013

வலிமிகுதல் 7


இரண்டு சொற்கள் சேர்ந்தால் அது சொற்றொடராகிறது. அது எளிமையாய் வெளிப்படையாய் இருந்தால் தொகாநிலைத்தொடர் (தொடர்) என்றும், விரித்துப் பொருள் காண இடமிருக்குமானால் அது தொகைநிலைத்தொடர் (தொகை) என்றும் சென்ற பதிவில் புரிந்துகொண்டோம்.

முதலில் தொடரின் வகைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

எழுவாய்த் தொடர்
விளித் தொடர்
வினைமுற்றுத் தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
வேற்றுமைத் தொடர்
இடைச்சொற்றொடர்
உரிச்சொற்றொடர்
அடுக்குத் தொடர்

எழுவாய்த் தொடர் -
கிளி பேசியது, புலி பாய்ந்தது - கிளி, புலி என எழுவாய் தொடங்கி நகரும் எளிமையான சொற்றொடர்கள். வலி மிகாது.

விளித் தொடர் -
தம்பி பார் - முதற்சொல் அழைக்கிறது அதாவது விளிக்கிறது. வலி மிகாது.

வினைமுற்றுத் தொடர் -
பாடியது பறவை - முதல் சொல் வினைமுற்றாக இருந்தும் மேலும் தொடர்வது. வலி மிகாது. (கண்டேன் சீதையை - புகழ்பெற்ற உதாரணம். வலிமிகும் தேவை இதற்கு இல்லை என்பதால் நமக்கு உதவவில்லை).

பெயரெச்சத் தொடர் -
வாடிய பயிர் - முதற்சொல்லாய் அமைந்த வினை, தன்னை அடுத்து பெயர் வந்து பூர்த்தியடையும்படி எச்சமாக இருப்பது. வலி மிகாது.

வினையெச்சத் தொடர் -
வரச் சொன்னான், பாடித் திரிந்தான் - முதற்சொல் வினையின் எச்சமாக நின்று அடுத்து ஒரு வினைச்சொல் வந்து பூர்த்தியடையும்படி இருப்பது. வலி மிகும்.

வேற்றுமைத் தொடர் -
இதைத் தனிப்பதிவில் விளக்குகிறேன்.

இடைச்சொற்றொடர் -
மற்றொன்று - மன், மற்று, கொல், போன்ற சொற்கள் பெயர் அல்லது வினைச்சொல்லுக்கு முன் வரும். மற்று+ஒன்று = மற்றொன்று. இதில் மற்று இடைச்சொல். ஒன்று என்னும் பெயருக்கு முன் வந்தது. செய்யுள்களில் அதிகம் பயன்பட்டது. வலி மிகாது. இப்போது தற்கால எழுத்து வழக்கில் இல்லை.

உரிச்சொற்றொடர் -
நனி பேதை, கடிகமழ் மலர், உறுபுகழ் - பெயருக்கோ வினைக்கோ உரியதாய் வரும் சொற்கள். வலிமிகாது. இதுவும் தற்கால வழக்கில் இல்லை.

அடுக்குத் தொடர் -
பாடு பாடு, போ போ, சிறு சிறு, சின்ன சின்ன - பொருள்தருகின்ற சொற்கள் அடுக்கி வருவது - வலி மிகாது.

சுருக்கம் : வினையெச்சத் தொடர் தவிர்த்த வேறெந்தத் தொடர்களுக்கும் வலிமிகாது. (வேற்றுமைத் தொடரை நாம் கடைசியில் பார்க்கவிருக்கிறோம்).

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

  • உரிச்சொற்றொடர்: சால, உறு , தவ, கழி , நனி,கூர், ஆகிய சொற்கள் மிகுதி எனும் பொருளை உணர்த்தும் சொற்கள் உரிச்சொற்தொடர் ஆகும். அடுக்குத் தொடர் - முன் வரும் சொல்லெ பின்னும் வரும். சொற்களைப் பிரித்தாலும் பொருளில் மாற்றமிருக்காது.

  • இலக்கணப்படி உரிச்சொற்றொடருக்கு வலி மிகாது. வலி மிகுந்தது என்றால் இசையின்பம் கருதிச் செய்யப்பட்டது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வரிசையில் திரு’ என்பதையும் உரிச்சொல்லாகக் கருதலாமா ? பொதுவாக இத்தொடரின் பயன்பாடு அபூர்வமானது என்பதால் விவாதம் எதுவும் எழுந்ததாகத் தெரியவில்லை. சின்ன சின்ன - என்பதுதான் சரி. அடுக்குத் தொடர் என்றாலும் வலிமிகாது. குறிப்புப் பெயரெச்சம் என்றாலும் வலிமிகாது. (வலிமிகுதல் 4 - பகுதியில் இதை விரிவாக எழுதிவிட்டேன்).



வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1

சனி, நவம்பர் 02, 2013

வலிமிகுதல் 6

வலிமிகுதல் பற்றிய இலக்கண அறிவைப் பெறுவதில் மிகவும் கடினமானது என்று கருதப்படக்கூடிய பகுதிக்குள் இப்போது நுழைகிறோம். அவ்வாறு கருதிக்கொண்டிருந்தது எத்தனை பெரிய மடத்தனம் என்று நீங்களே புரிந்துணரத் தக்க இடத்திற்குச் செல்லவிருக்கிறீர்கள். இலக்கணக் கதவுகள் உங்கள் கண்முன்னே பூவிதழ்களைப்போல் திறக்கக் காண்பீர்கள்.

மொழியில் சொல் என்பது அடிப்படையான ஓர் அலகு. தனித்துவமான துண்டு. ஒன்றுக்கு மேற்பட்டு, குறைந்தது இரண்டு சொற்களால் ஆவது சொல் தொடர் - சொற்றொடர். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்றொடர்களால் ஆவதுதான் வாக்கியம். வாக்கியத்தின் வழியாக மொழி உச்சத்தை அடைந்து உலகை ஆள்கிறது.

வலிமிகுதல் என்பது இரண்டு சொற்களுக்கு இடையே நடைபெறும் செயல். சொற்றொடர் ஒன்றின் உள்ளுக்குள்ளே நடக்கும் மொழிவினைதான் வலிமிகுதல். வலிமிகுதலைப் பற்றிய பறவைப் பார்வையைப் பெற வேண்டுமானால் சொற்றொடர் குறித்த அறிதலையும் அதன் வகைகளையும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகைமைகளில் எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதை அறிந்தவுடன் இந்தப் பாடம் ஏறத்தாழ நிறைவு பெறவுள்ளது.

மாடு மேய்கிறது. மாடு ஒரு சொல். மேய்கிறது ஒரு சொல். மாடு மேய்கிறது என்பது சொற்களின் தொடர் வரிசை - சொற்றொடர். இந்தச் சொற்றொடர் மிக இயல்பாக எளிமையாக இருக்கிறது. ஆனால் மொழி என்பது இப்படி வெள்ளந்தியான எளிமையோடும் சாதாரண அம்சங்களோடும் இருப்பது மட்டுமில்லையே. அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நுண்மைகளையும் செறிவுகளையும் அறிவுப்புலத்தையும் தனக்குள் ஏற்றுச் செரித்து வன்மையடந்த ஒன்றல்லவா ?

முழுமையாகப் பொருள் காட்டும் எளிமையான சொற்றொடர்களால் ஆகியிருக்கும் தமிழ் மொழி, இன்னொரு புறத்தில், உள்மறைந்து தொக்கி நிற்கும் தன்மைகள் உள்ள சொற்றொடர்களாலும் உருவாகியிருக்கிறது. அத்தகைய சொற்றொடர்களை நாம் நம் அறிவைப் பயன்படுத்திச் சற்றே விரித்துப் பொருள் காண்கிறோம்.

மாடு புல் மேய்கிறது. இப்பொழுது ‘புல் மேய்கிறது’ என்கிற சொற்றொடரை மட்டும் கவனியுங்கள். புல் மேய்கிறது - முன் சொன்னதுபோல எளிமையாக அர்த்தப்படுத்தக் கூடாதல்லவா ? புல்லை மேய்கிறது’ என்று ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபை உடன் சேர்த்து விரித்துப் பொருள் கொள்கிறோம். மாடு புல்லை மேய்கிறது.

உள்ளுக்குள் ஒன்றும் தொக்கியிருக்காமல் வெகு இயல்பாய் எளிமையாய் அமைந்த சொற்றொடர்களைத் தொகாநிலைத் தொடர்கள் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொடர்’ என்பதும் உண்டு. மாடு மேய்கிறது மாதிரி.

உள்ளுக்குள் ஒன்று தொக்கி நிற்க (உருபு) அதைக்கொண்டு ஒரு சொற்றொடரை விரித்துப் பொருள்கொள்ள வேண்டிய, தொகுத்துப் பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர்களைத் தொகைநிலைத் தொடர் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொகை’ என்பார்கள். புல் மேய்கிறது மாதிரி.

தொடர்’ என்று சொல்லப்பட்ட எளிமையான சொற்றொடர் வடிவங்களிலும், தொகை’ என்று சொல்லப்பட்ட தொகுத்துப் பொருள்கொள்ளக்கூடிய சொற்றொடர் வடிவங்களிலும் - வலிமிகுமா மிகாதா என்பதைத்தான் நாம் இனி பார்க்கப் போகிறோம்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வியாழன், அக்டோபர் 31, 2013

வலிமிகுதல் 5

இத்தொடரின் முதல் பகுதியில் உம்மைத் தொகையில் வலிமிகாது என்று பார்த்தோம், நினைவிருக்கிறதா ?

பொதுவாக இரண்டு பெயர்ச் சொற்களுக்கு இடையே வலிமிகும் வாய்ப்பிருந்தால் மிகுவித்து விடுங்கள் (அது எப்படியும் சரியாகவே இருக்கும்) என்று ஆரம்பித்த நான் ஒரே ஒரு விதிவிலக்காக உம்மைத் தொகையைக் கூறினேன்.

காடுகரை என்பது உம்மைத் தொகை. காடும் கரையும் என்று இருபெயர்களுடன் ‘உம்’ சேர்த்து விரித்துப் பொருள் கொள்வதால் அது உம்மைத் தொகை என்றும் தெரிந்துகொண்டோம்.

மேலும் உதாரணங்கள் : பட்டிதொட்டி, செடிகொடி, இட்லி தோசை, இன்பதுன்பம், வள்ளி தெய்வானை, சேர சோழ பாண்டியர். இன்னும் சிலவற்றை நீங்களும் கற்பனை செய்து கண்டுபிடிக்கலாம். (அபூர்வமாக, ‘ஏற்றத்தாழ்வு’ போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்கிறார் அ.கி.ப.)

உம்மைத் தொகையைப் போலவே மேலும் இரண்டு தொகைகளைப் பார்க்கப் போகிறோம். உவமைத் தொகை மற்றும் பண்புத் தொகை.

தாமரைக்கண், மலைத்தோள் - இவற்றைத் தாமரை போன்ற கண், மலை போன்ற தோள் என விரித்துப் பொருள் காண்போம். முதலில் வருகின்ற சொல் அடுத்து வருகின்ற சொல்லுக்கு உவமையாய் இருப்பது. அச்சொற்கள் இரண்டுக்குமிடையில் போல, போன்ற என்று உவம உருபைத் தருவித்துப் பொருள் காண்பது வழக்கம். உவமைத்தொகை என்பது இதுதான். உவமைத் தொகைக்கு வலிமிகும்.

(உவமைத்தொகையைக் கண்ணாடி முன் நிறுத்தி இடவலம் மாற்றிப் போட்டால் அதுவே உருவகம் எனப்படும். மலைத்தோள் உவமைத்தொகை என்றால் தோள்மலை உருவகம்).

அடுத்து பண்புத் தொகை. உவமைத்தொகையில் முதற்சொல் உவமையாய் அமைந்ததைப் போல பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் அடுத்துள்ள சொல்லின் பண்பைக் குறிக்கும். அது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு (இன்னும் பல) என எவ்வொரு பண்பையும் குறிக்கக் கூடியது.

உவமைத்தொகைக்குப் ‘போன்ற’ என்ற உவம உருபை இடையிட்டுப் பொருள் விரித்ததுபோல பண்புத்தொகைக்கு ‘ஆகிய’ என்ற பண்புருபை இடையிட்டுப் பொருள் காண்பர்.
பண்புத்தொகையில் வலிமிகும்.

வெள்ளைத்தாள்
பொய்ப்பேச்சு
மெய்த்தன்மை

பண்புத்தொகையில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்ற வகையும் உண்டு. அதற்கும் வலிமிகும். நாம் அந்தப் பகுதிக்கே போக வேண்டியதில்லை. ஏனென்றால், முதலில் சொன்னதுபோல, இரண்டு பெயர்கள் காணப்பட்டாலே தயங்காமல் வலிமிகுவித்து விடுவோம்.

சுருக்கம் : உவமைத் தொகையிலும் பண்புத் தொகையிலும் வலிமிகும்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வலிமிகுதல் 6

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1


செவ்வாய், அக்டோபர் 29, 2013

வலிமிகுதல் 4


பெயரெச்சம் என்றால் என்னவென்று அறிவீர்களா ? முற்றுப்பெறாமல் முடிவுறாமல் எச்சமாகித் தொக்கி நிற்கும் ஒரு சொல் தன்னை அடுத்து ஒரு பெயரை வரவழைக்கும். அப்படி ஒரு பெயர்ச்சொல் வருவதால் மட்டுமே அது முற்றுப் பெறும். அத்தகைய சொற்கள் பெயரெச்சங்கள் எனப்படும்.

அடித்த கைகள், வெடித்த துப்பாக்கி, பணிந்த காவலன்.

மேலுள்ள இரண்டு சொற்களில் முதலில் உள்ள செயலைச் சொல்லும் சொல் தன்னை அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்தால் மட்டுமே நிறைவுறுவதைக் காண்கிறீர்கள் (அடித்த, வெடித்த, பணிந்த). இல்லையேல் பூர்த்தியடையாமல் எச்சமாகி அத்துவானத்தில் நிற்கும். அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்து முழுமையடைவது பெயரெச்சம்.

வினைச்சொல்லாக இருக்கையில் காலங்காட்டும்.

கடித்த பழம் - இறந்தகாலப் பெயரெச்சம்
கடிக்கின்ற பழம் - நிகழ்காலப் பெயரெச்சம்
கடிக்கும் பழம் - எதிர்காலப் பெயரெச்சம்

மேலுள்ள மூன்றும் வினையையும் காலத்தையும் காட்டுவதால் இவை தெரிநிலைப் பெயரெச்சங்கள் என்றும் வகைப்படும். இதில் கடித்த பழம் உடன்பாட்டுப் பெயரெச்சம். கடிக்காத பழம் என்று வந்தால் எதிர்மறைப் பெயரெச்சம்.

வினையையும் காலத்தையும் காட்டாமல் வெறுமனே பண்பை மட்டும் காட்டுகின்ற எச்சச்சொற்கள் உள்ளன. அவையும் தம்மை அடுத்துப் பெயர்ச்சொற்கள் வந்தால் மட்டுமே முழுமை பெறுவன. அவற்றைக் குறிப்புப் பெயரெச்சங்கள் என்று வகைப்படுத்துவர்.

சின்ன தம்பி
நல்ல குடும்பம்
அழகிய தமிழ்மகன்
புதிய பார்வை
இளைய தலைமுறை

மேலே காண்பவை பண்பை மட்டுமே சொல்லி அடுத்து ஒரு பெயர் வருவதால் மட்டுமே பூர்த்தியாகக் கூடிய குறிப்புப் பெயரெச்சங்கள்.

இப்பொழுது வலிமிகும் இடத்துக்கு வருகிறேன். மேலே விவரித்தபடியுள்ள பெயரெச்சங்கள் எவற்றுக்கும் - வினைச்சொல்லை அடுத்து வரும் பெயரெச்சங்கள் என்றாலும், அது மூன்று காலத்தைக் காட்டினாலும், உடன்பாடாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, வெறும் பண்பை மட்டுமே குறிக்கின்ற குறிப்புப் பெயரெச்சமாக இருந்தாலும் சரி - எங்கும் வலி மிகாது. எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள் - பெயரெச்சத்தை அடுத்து வலி மிகாது.

பாடாத தேனீ, ஓடாத குதிரை - போன்ற எதிர்மறைப் பெயரெச்சங்களில் கடைசி எழுத்து கெட்டு மறைவதும் உண்டு. பாடாத் தேனீ, ஓடாக் குதிரை - என. எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசி எழுத்து, ஈறு கெடுவதால் அது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று அழைக்கப்படும். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஆக பெயரெச்சங்களில் வலி மிகாது. உதாரணங்களின்படி - படித்த, அடித்த, நடக்கின்ற, ஓடுகின்ற, முடிக்கும், வெடிக்கும், உண்கின்ற, உண்ணாத, செய்த, செய்யாத, நல்ல, கெட்ட, தீய, சிறிய, பெரிய, பழைய, புதிய - எவ்வகைப் பெயரெச்சங்களிலும் வலி மிகா.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஒட்டுமொத்தமாக வகுத்துப் பகுத்துத் தொகுத்து கிளிப் பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

  • இலக்கணம் சொல்லித் தருபவர்கள் பெயரெச்சத்தின் பின் வலி மிகாது என்று உதாரணத்தைச் சொல்லிச் சென்றுவிடுவார்கள். வலி மிகுதல் என்ற தலைப்புக் குடையின்கீழ் பெயரெச்சத்தை விளங்கிக்கொண்டு அதன் வகைப்பாடுகளில் தெளிவுபெற்று வலிமிகுமா மிகாதா என்பதை அறியப் புகுந்தால் இரண்டும் தெள்ளத் தெளிவாக விளங்கிவிடும்.

  • கனிந்த பழம் இறந்தகால வினை எச்சமா? நிகழ்கால வினை எச்சமா? குனித்த புருவம் எக்கால வினை எச்சம்? எச்சம் என்பது எஞ்சி நிற்பதைக் குறிக்கும். நீங்கள் குறிப்பிட்ட - கனிந்த என்ற சொல்லைத் தனியே பார்த்தால், அது எஞ்சி நிற்பது தெரிகிறது. கனிந்த என்கிற சொல் அர்த்தம் தரக்கூடிய சொற்றொடராக மாற்றம் பெறவேண்டுமெனில், அதன்பின்பு ஒருசொல் வரவேண்டும். கனிந்த என்கிற சொல்லின் பின்னால் வருகிற சொல் பெயர்ச்சொல்லாயின் கனிந்த, பெயரெச்சம் ஆகும், பின்னால் வருகிற சொல் வினைச்சொல்லாயின் கனிந்த வினையெச்சமாகும். இங்கு பழம் என்கிற பெயர்ச்சொல் வருவதால், கனிந்த, பெயரெச்சமாகும். குனித்த என்கிற சொல்லின் பின் வருகிற புருவம் பெயர்ச்சொல் என்கிறபடியால், குனித்த, பெயரெச்சமாகும். ஓடி வந்தான். இங்கு ஓடி என்கிற சொல்லின் பின்பு வருகிற வந்தான், வினைச்சொல் என்கிறபடியால், ஓடி, வினைஎச்சமாகும். பொதுவாக பெயரெச்சம் அ என்கிற ஒலியுடனும், (பெரிய, அழகிய, சிறிய) வினைஎச்சம் இ, உ,அ என்கிற ஒலியுடனும் (ஆடி, ஓடி, கருகி, விழுந்து, சரிந்து, அழகாக) முற்றுப்பெறும்

  • வினையெச்சத்திற்குத் தனியாக எழுதுவேன். பொறுமை காக்கவும். இந்தத் தொடர் 15 பகுதிகள் வரை நீளக்கூடும். அதில் தமிழ் இலக்கணத்தின் முக்கியக் கூறுகள் அனைத்தும் தொட்டுத் துலக்கப்படும்.

வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1

சனி, அக்டோபர் 26, 2013

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 3
-------------------

இந்தத் தொடரின் அடுத்த இப்பதிவு சற்றே தாமதமானதற்குப் பொறுத்தருள்க. இந்த விளக்கங்களை எழுதியபின் பின்னூட்டங்களில்/உள்பெட்டியில் பதில் எழுதிக் கைவலி மிகுந்ததால் தள்ளிப் போட்டுவிட்டேன். பின்னூட்டங்களில் அவசியம் நான் விடையிறுத்தாக வேண்டிய இடங்களில் எப்போதும் தயங்காமல் எழுதியே வந்திருக்கிறேன். முடிந்தவரை அவ்வாறே செயல்படுவேன்.

குற்றியலுகரம் என்றால் என்னவென்று அறிவீர்கள்தாமே ? ஒரு சொல்லின் கடைசி எழுத்தாக வரும் கு,சு,டு,து.பு,று ஆகிய ஆறு உ’கர வல்லின உயிர்மெய்களும் உச்சரிப்பில் அரை மாத்திரையளவு தணிந்து ஒலிக்கும்.

க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று - என்று முடிகின்ற சொற்கள் யாவும் வல்லின மெய்யெழுத்தை அடுத்து வரும் குற்றியலுகரங்கள் என்பதால் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள் எனப்படும்.

இந்த வன் தொடர்க் குற்றியலுகரங்களை அடுத்து க,ச,த,ப-கர வரிசையில் உயிர்மெய் எழுத்துகள் வந்தால் வலி மிகும்.

எடுத்துச் செல்.
முடித்துக் கொடு.
கற்றுக் கொள்.

படித்துப் பார்த்தான்’ என்பதில் வலி மிகுந்ததற்கும் - எழுந்து பார்த்தான்’ என்பதில் வலி மிகாததற்கும் இப்போது
உங்களுக்குக் காரணம் புரிந்திருக்கும்.

ன்று, ந்து, ண்டு - என முடிபவை மெல்லின மெய்யெழுத்துகளை அடுத்துவரும் வல்லின உகர உயிர்மெய்கள். இவற்றுக்கு மென் தொடர்க் குற்றியலுகரங்கள் என்று பெயர். மென் தொடர்க் குற்றியலுகரங்களை அடுத்து வலி மிகாது.

உதாரணங்கள் :-

என்று சொன்னான்.
வந்து போனார்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வியாழன், அக்டோபர் 24, 2013

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 2 :
---------------------
இரண்டு பெயர்ச் சொற்களுக்கிடையே எளிதில் வலி மிகும் என்று பார்த்தோம். அடுத்து, சொற்கூட்டங்களின் பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள சொல்லை அடுத்து வருவது வல்லினமாக இருந்தால் கட்டாயம் வலிமிகும். இந்த விதியைக் கேள்வியே இல்லாமல் பின்பற்றலாம். வலிமிகுதலில் எல்லாருமே தவறவிடும் இடம் இதுதான். அந்தச் சொற்களின் பட்டியல் இதோ :-

அ, இ, எ
அந்த, இந்த , எந்த
அங்கு, இங்கு, எங்கு
ஆங்கு, ஈங்கு, யாங்கு
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு, ஈண்டு, யாண்டு
அவ்வகை, இவ்வகை, எவ்வகை
அத்துணை, இத்துணை, எத்துணை
இனி, தனி
அன்றி, இன்றி
மற்ற, மற்றை
நடு, பொது, அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து, முன்னர், பின்னர்

இவற்றை அடுத்து வல்லினம் வந்தால் கட்டாயம் வலி மிக வேண்டும். நாம் இவற்றில் வலி மிகுதலைப் பெரும்பாலும் அனுசரிப்பதில்லை.

பாரதியார் ‘அங்கு சென்றான்’ என்றே எழுதுவாராம். அங்குச் சென்றான்’ என்று வலி மிகுவித்து எழுதுவதே சரி. நண்பர்கள் பாரதியிடம் ‘அங்கு சென்றான் என்றெழுதுவது தவறாயிற்றே... நீரே இப்படிச் செய்யலாமா ?’ என்று வினவுவார்களாம். ‘தவறுதான் ஓய்... அங்குச் சென்றான் என்றெழுதினால் நன்றாகவே இல்லை... அதனால்தான் அங்கு சென்றான் என்றே எழுதுகிறேன்...’ என்பாராம் பாரதியார்.

இவ்விடங்களில் வலி மிகுவித்து எழுதுவதே பிழையற்றிருக்கும். மிகவும் பல் கூச்சமெடுக்கும் பயன்பாடாக இருக்கிறதே என்று கருதினால் எழுதும் ஆசிரியரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல், அணுகுண்டு என்று பிழையாக எழுதுகிறோம். அணுக்குண்டு என்பதுதான் சரி.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 1

செவ்வாய், அக்டோபர் 22, 2013

வலிமிகுதல் 1

வலிமிகுதல் 1 :
---------------------
இனி நிலைமொழி, வருமொழி என்கிற பயன்பாடு அடிக்கடி இருக்கும். இரண்டு சொற்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசுமிடத்தில் முதலில் உள்ள சொல் நிலைமொழி. அதை அடுத்து வருகிற இரண்டாம் சொல் வருமொழி. மல்லிகைப் பூ - என்பதில் முதலில் உள்ள மல்லிகை நிலைமொழி, அடுத்து வருகிற பூ வருமொழி. இதை நினைவில் வைத்துக்கொள்க.

இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையே வருமொழி வல்லினத்தில் இருந்தால் வலிமிகும். இது அடிப்படை.

ஆடித் தள்ளுபடி, போக்குவரத்துக் கழகம், கண்மணிப் பூங்கா. தமிழ்ப் பாட்டு, அழகுக் குறிப்புகள்.

உம்மைத் தொகையாக வரும் பெயர்ச்சொற்கள் எனில் வலிமிகாது.

சங்கப் புலவர்களில் கபிலர் பரணர் அறிவேன்.
தவறாமல் தினமணி கதிர் படிப்பேன்.

உம்மைத் தொகை என்றால் இரண்டு பெயர்ச்சொற்களையும் ‘உம்’ என்ற விகுதி சேர்த்துக் கருதுவது. சங்கப் புலவர்களில் கபிலரும் பரணரும் அறிவேன், தவறாமல் தினமணியும் கதிரும் படிப்பேன் - இவ்வாறு அவை பொருள் தருவன.


குறிப்பு:
இது முகநூலில் கவிஞர் மகுடேசுவரன் எழுதியது.   அவர் வலிமிகுதலை பற்றி எழுதியது 12 உள்ளது அவை அடுத்தடுத்து இங்கு பதியப்படும்.

கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

**

தினமணிக் கதிர் என்றால் வேற்றுமைத் தொகை. தினமணி கதிர் என்றால் உம்மைத் தொகை. இரண்டுமே சரிதான். தினமணியின் கதிர்’ என்ற பொருள் வேண்டுமென்றால் வலி மிகவேண்டும்(வேற்றுமைத் தொகை). இங்கே இரண்டும் வேறு வேறல்ல. தினமணியும் கதிரும் என்ற பொருள் வேண்டுமென்றால் வலி மிகுதல் கூடாது. உம்மைத் தொகை. எழுதுபவர் என்ன பொருளில் கூற வருகிறார் என்பதே இவ்விடம் பொருந்தும். தினமணி கதிர் என்றே பெயர் தாங்கி வருகிறது. தினமணி என்கிற செய்தித்தாள் தனி. கதிர் என்கிற இணைப்புப் புத்தகம் தனி - இதுவே அவர்கள் உணர்த்தும் பொருள்.

**

அடுக்குத் தொடரில் வலி மிகாது என்பதே விதி. ஆனால், அடுக்குத் தொடரில் அபூர்வமாக வலி மிகுதலையும் காண முடிகிறது. உதா: பூப்பூப்பூ, தீத்தீ. காரணம் இது ஓரெழுத்து ஒருமொழி.

தமிழ் இலக்கணம் தொடர்பான பதிவுகள் வரிசையில் இனி முக்கியமான பாடம் ஒன்றைச் சிறிய தொடராகவே எழுத உள்ளேன். வலி மிகுதல்’ பற்றியதே அது.

அ.கி. பரந்தாமனார் எழுதியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு இன்னும் விரிவுபடுத்தி அல்லது எளிமைப்படுத்தி எல்லாருக்கும் புரியும்படி எழுதுவேன்.

வலி மிகுதல் மற்றும் வலி மிகாமை குறித்த தெளிவு ஏற்பட்டுவிட்டால் எழுதுவன எல்லாம் பெரிதும் பிழையற்றனவாகும். தலைவலி மிகாமல் பார்த்துக்கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

வலி மிகுதல் என்றால் என்ன ? வல்லின மெய்யெழுத்துகள் வாக்கியக் கோவையில் இரண்டு சொற்களுக்கு இடையே கூடுதலாக மிகுதியாகி அமர்ந்துகொள்வது.

க்,ச்,ட்,த்,ப்,ற் - ஆகிய ஆறுமே வல்லின மெய்கள். டகர றகரங்களில் சொற்கள் இல்லாமல் இருப்பதால் இந்த இரண்டு எழுத்துகளும் பட்டியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். மீதியுள்ள க்,ச்,த்,ப் மிகுவது - மிகாதிருப்பது பற்றித் தெரிந்துகொள்வதே நம் நோக்கம்.

வலிமிகுதல் என்னும் மொழிப் பண்பு தமிழ் மற்றும் மலையாளம் தவிர்த்த வேறெந்த உலக மொழி இலக்கணங்களிலும் இல்லை என்று சொல்கிறார்கள்.


திங்கள், ஏப்ரல் 01, 2013

முள்கரண்டி

பிறந்து வளர்ந்து படித்தது கொசப்பள்ளம் என்னும் சிற்றூர் ஒன்றில். கப்பி சாலையை ஒட்டி எங்க வீடு இருந்தது. 6 எக்டேர் கிணற்று பாசனமுடைய எங்க தோட்டத்தில் தான் வீடு கட்டியிருந்தோம். எங்கவூட்டுக்கு பெரியசாளை அப்படின்னு பெயர். பெரியசாளை வூட்டு பையன் அப்படின்னு தான் என்னை அடையாளம் சொல்லுவாங்க. ஊரிலிருந்து 2 தோட்டத்தை தாண்டுனா எங்க வீடு வந்துடும். எங்கவூரில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு சிற்றூரான தருமாபாளையத்தில் தான் நான் படிச்ச துவக்கப்பள்ளி இருந்தது. அது தான் பக்கத்தில் இருந்த ஐந்து சிற்றூர்களுக்கான ஒரே பள்ளிக்கூடம். அங்க பெட்டிக்கடை, பால் கூட்டுறவு சங்கம் எல்லாம் உண்டு. இப்ப பெட்டிக்கடைல டீயும் போடறாங்க. மளிகை கடை அங்க இல்லை.

உயர்நிலைப்பள்ளி இருந்த ஊரில் தான் மளிகை கடை இருக்குது. நான் 9 வது படித்த போது அது மேல்நிலைப்பள்ளியாக உயர்வடைந்த காரணத்தால் என் பன்னிரண்டாவதும் அங்கே தான். எனக்கு மிதிவண்டி கிடைத்தது இங்க படிக்க வந்த பிறகு தான். ஏழாவது படிக்கும் போது வாங்கி கொடுத்தாங்க. ஆறாவது படிக்கறப்ப நடை இல்லாட்டி யார் வண்டியிலயாவது தொத்திக்கிட்டு போவேன்.

பணக்காரர்கள் போகும் உணவகங்களில் அதாவது பெரிய உணவகங்களில்  திங்கறவங்க கரண்டி, முள் கரண்டி எல்லாம் வச்சு தான் தின்பார்கள். கையால உணவை தொடுவது அரிதாக இருக்கும், இதை திரைப்படத்தில் தான் பார்த்திருக்கேன். எங்கவூர் பக்கமும் நிறைய பணக்காரர்கள் உண்டு ஆனால் அவர்கள் விவசாயத்தால் பணக்காரர்கள் ஆனவர்கள். எங்கவூர் அதாவது பக்கத்து நகரத்திலுள்ள (அதை பெரிய சிற்றூர் என்பதே பொருத்தம்) உணவகம் எதிலும் முள் கரண்டியை நான் பார்த்ததில்லை.  அந்த ஊரில் சில உணவகங்கள், ஒரு திரையரங்கு எல்லாம் இருக்கு. எங்க ஊரில் மாரியம்மன் நோம்பி (திருவிழா) போடும் போது நான் திரையரங்கு செல்ல அனுமதி கிடைக்கும். பக்கத்து தோட்டத்தில் உள்ள அண்ணனுடன் திரைப்படத்துக்கு போவேன். அந்த திரையரங்குங்குக்கு சிவசக்தி டாக்கீசு என்று பெயர். அதில் எப்பவும் பழைய படங்கள் தான் போடுவார்கள். இப்ப அங்க இன்னொரு திரையரங்கம் வந்திடுச்சு அதில் புது படத்தையும் போடறாங்க.
திரைப்படங்களில் உள்ளது போல் நானும் முள் கரண்டியை வைத்து தின்று பார்க்கவேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆண்டுகள் ஆனது தான் மிச்சம் என் முள் கரண்டி ஆசை நிறைவேறவில்லை.  திங்கறத விடுங்க பார்க்க கூட எனக்கு கொடுப்பினை இல்லை. ஒரு முறை பெரிய நகருக்கு செல்லும் வாய்ப்பும் அங்கு உள்ள பெரிய உணவகத்துக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அங்கேயும் முள் கரண்டியை காணல.  இருந்தாலும் மனசில் முள்ளு மாதிரி முள்கரண்டிய பார்க்கனும் அதால திங்கனும் என்பது குத்திக்கிட்டே இருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஊரிலேயே படித்ததால் முள் கரண்டி ஆசை நிறைவேற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.  பன்னிரெண்டாவதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் பெரிய நகரின் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தது. இதனால் வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி எனக்கு முள் கரண்டி ஆசை நிறைவேறும் என்று கூடுதல் மகிழ்ச்சி.

கல்லூரி இருந்தது நகரை விட்டு சற்று தொலைவில். நாங்கள் அறை எடுத்து தங்கியிருந்தது புறநகர் பகுதியில் அதனால் பேருந்தில் தான் கல்லூரிக்கு போகமுடியும். ஊர்ல இருந்தப்ப மரத்தில் இருந்து இறக்கியதும் கிடைக்கும்  கள்ளை குடிப்பேன், வெளியில் வாங்கி குடிக்கும் பழக்கம் இல்லை, மரத்திலிருந்து இறக்கியதும் குடிக்கற கள்ளுக்கு ருசியே தனி தான். வெளிநாட்டு மது பழக்கம் சுத்தமாக இல்லை. இப்ப மாதிரி குடிமக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாங்கம் அப்ப இல்லை. கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மது குடிக்கும் பழக்கம், சிகரெட்டு பழக்கம் வந்தது. நான் குடிகாரன்னு முடிவு கட்டாதிங்க, நண்பர்கள் பிறந்தநாளுக்கு அவர்களுடன் அதை கொண்டாட மது குடிப்பேன், சிகரெட்டும் அப்பதான் புகைப்பேன். மற்றபடி வேற எந்த கொண்டாடத்திலும் மது, புகையை தொடும் பழக்கம் இல்லை. கல்லூரிக்கு வந்துட்டு இதெல்லாம் இல்லைன்னா நாம கல்லூரியில் படிச்சோம்முன்னு சொல்றது கேவலம் இல்லையா அதுக்காக தான் நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மட்டும் . ஆனால் முள் கரண்டி ஆசை மட்டும் நிறைவேறாமல் இருந்தது.

நிறைய வீடுகள், கடைகள் என்று நாங்க இருந்த பகுதி நல்ல வளர்ச்சி கண்டது.  கல்லூரியில் சேரும் போது இருந்த அப்பகுதிக்கும் கல்லூரி படிப்பு முடிந்த போது அப்பகுதிக்கும் உள்ள வேறுபாடு நினைக்க முடியாத அளவு இருந்தது.  வளர்ச்சின்னா இதுதாண்டா வளர்ச்சி என்று சொல்லற மாதிரி இருந்தது.
எங்க பேருந்து நிறுத்தத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் நல்ல உயர்தர உணவகமும் வந்தது.  பேருந்தில் போகும் அந்த உணவகத்தை தாண்டி தான் கல்லூரிக்கு போகனும். அதனால் அதை கவனிப்பதுண்டு.  அங்கு வருபவர்கள் கார்களிலும் மோட்டார் சைக்கிளிலும் வருவார்கள். முதல் ஓராண்டு நாங்கள் போகவில்லை.  மது புகை பழக்கம் இல்லாத நண்பனின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்து அவனும் பங்கு கொள்ளும் விதத்தில் எங்கு கொண்டாடலாம் என்று யோசித்தப்ப  இந்த உணவகத்தில் மதிய உணவு உட்கொண்டு பின் திரைப்படத்திற்கு செல்வது என்று முடிவாகியது.

நான் வருவதற்கு சிறிது நேரமானதால் பசி பொறுக்காம (என்னை  விட்டுட்டு போயிட்டாங்கன்னு சொன்னா என் மரியாதைக்கு இழுக்கு ;) ) என் நண்பர்கள் அந்த உணவகத்திற்கு மதிய உணவுக்கு சென்று விட்டார்கள். நான் அங்கு போனபொழுது 2 பேர் தின்னுட்டு வெளியேவே வந்துட்டானுங்க.  வேகம் என்றால் இதுவல்லவோ வேகம். எனக்கு என்ன வாங்கி தின்பது என்று தெரியவில்லை (முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியும்) எனவே தின்னுட்டு நிக்கறவங்கிட்ட (உணவகத்துக்குள்ளயே) என்னடா திங்கறதுன்னு கேட்டேன். அறிவாளி அவன் தின்ன உணவையே எனக்கும் கொண்டுவர சொல்லிட்டு வெளிய போயிட்டான்.

முதலில் பீங்கான் தட்டு வந்தது அடுத்து அடுத்து அடுத்து என் கனவான சிறு வயது முதல் இருந்த ஆசையான 'முள்கரண்டி'  வந்தது.  அப்போது என் உணர்ச்சியை விவரிக்க சரியான சொற்களே இல்லை.  கரண்டி, கத்தி, முள்கரண்டி மூன்றையும் ஒன்றாக தான் கொண்டுவந்தது வைத்தார்கள். 5 நிமிடத்தில் சுடசுட கோழி பிரியாணியும் சிக்கன்-65ம் வந்தது.  கூடவே சிக்கலும். எனக்கு முள்கரண்டியை வைத்து திங்க தெரியலை. என் நிலைமை மாதிரி கொடுமை யாருக்கும் வரக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். பக்கத்து மேசையில் தின்பவர்களை பார்த்து நான் முயற்சி செய்தாலும் என்னால் சரியாக முள்கரண்டியை பயன்படுத்த முடியலை (தெரியவில்லை). 10 வயசு சின்னப்பசங்க எல்லாம் முள்கரண்டிய வைத்து அழகா எடுத்து திங்கறாங்க அது என் வேதனையை மேலும் அதிகமாக்கியது. 10 நிமிடம் நான் சிரமப்பட்டதை பார்த்து ஆண்டவன் என் (இவன் வெளியில் இருந்து வந்து சில பொருட்களை வாங்க வந்தவன் அதாவது என் பர்சு) நண்பனை நான் இருக்கும் பக்கம் அனுப்பினான். அவனிடம் முள்கரண்டியை வைத்து எப்படிடா தின்னைங்கன்னு கேட்டேன் (அவனுங்களும் முள் கரண்டியில் இதற்கு முன் தின்றிறுக்க மாட்டார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை) முள்கரண்டியை வைத்து யாரும் திங்கலை நமக்கு கைதான், முள்கரண்டியை தூக்கி போட்டுட்டு கையால தின்னு என்று சொல்லிட்டு போயிட்டான்.

அப்ப தான் என் மனம் அமைதியடைந்தது. முள்கரண்டியை தூக்கி போட்டுட்டு பிரியாணியையும் சிக்கன்-65ம் நல்லா கட்டிட்டு வெளியே வந்து பீடா போட்டுட்டு அறைக்கு போனோம்.

என் முள்கரண்டி ஆசை இப்படி சோகமா முடிஞ்சிருச்சுங்க.

செவ்வாய், ஜனவரி 29, 2013

விஸ்வரூபம் படம் பார்த்தவன் சொல்வது

விஸ்வரூபத்தை பற்றி ஆள் ஆளுக்கு பேசிட்டாங்க. படம் பார்க்காதவங்கதான் நிறைய, நான் படத்தை பார்த்த ஆளு சும்மா இருப்பது தகுமோ? இப்படத்தை எதிர்ப்பது சரியா என்றால் சரி என்பது தான் என் கருத்து.

இந்த படம் தீவிரவாதத்தை பற்றி எடுக்கப்பட்டது. அல் கொய்தா, தாலிபான் தீவிரவாதத்தை பற்றி. கமல் இந்திய முசுலிமாக வரார். முதல் 30 நிமிடத்துக்கு மேல் இவர் முசுலிம் என்பதே தெரியாது. இவர் பெண்டாட்டி இவரை தொடர வைத்த துப்பறியும் நிபுணரால் தான் இவர் முசுலிம் என்பது தெரியவருகிறது. படத்தில் இது குறைவா இருந்திருக்கலாம் அது அதிகமா இருந்திருக்கலாம் கதை இப்படி இருந்திருக்கலாம் என்று நாம் சொல்லதான் முடியும்.  படம்
நல்லா இருக்கலாம் ஆனா வெற்றியடையாது, படம் நல்லா இல்லாமல் இருக்கலாம் ஆனா வெற்றியடைந்துவிடும். படத்தை இந்த மாதிரி எடுத்தா வெற்றி உறுதின்னு யாருக்கும் தெரியாது. திரைப்படத்தயாரிப்பு பெரிய சூதாட்டம்.

இந்த படத்தால நம்மூர் துலுக்கங்க எப்படி பாதிக்கப்பட்டாங்கன்னு தான் எனக்கு புரியலை. இதுல முசுலிம்களையும் கெட்டவங்களா காட்டுல. நம்மூர் ஆளுங்களுக்கும் இப்படத்துக்கும் உள்ள தொடர்பு கமல் பெண்டாட்டி நம்மூர், கமல் இந்திய உளவாளி. அவருக்கு இந்திய உளவுத்துறை உதவுது அவ்வளவு தான். அல் கொய்தா ஆட்கள் தீவிர மதநம்பிக்கை கொண்டவர்கள் தினமும் சூடம் பற்றவைத்து சாமி கும்பிடறவங்களா காட்டுனா நல்லா இருக்காதுல்ல.  அதை காட்ட கமல் தொழுகை செய்வதை காட்டியிருக்கலாம் இதை தணிக்கை துறை குறைக்க சொல்லியிருந்தால் நல்லது, அல்ல நம்ம துலுக்கர்களுக்கு அது தான் சிக்கல் என்றால் அதை
கமலிடம் சொல்லியிருக்கலாம். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பினால் ஏற்படாத பாதிப்பு இப்படத்தால் நிச்சயம் ஏற்படாது.

இப்படத்தை நாம் எதிர்க்க வேண்டும். ஏன் என்றால் ஆண்களை பலசாலிகளாகவும் பெண்களை பலமில்லாதவர்களாகவும் காட்டியதற்காக. படம் முழுக்க இப்படித்தான் காட்டியுள்ளார். இது அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனை, இப்படத்தை பார்ப்பவர்களுக்கு ஆண் ஆதிக்க சிந்தனை வராதா? இப்படத்தை பார்க்கும் சின்ன குழந்தையின் பிஞ்சு மனசில் இது நஞ்சாக பதிந்து விடுமே?

பாப்பத்தியம்மா கறியோட ருசி எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லு என்று பார்பனர்களை கேவலப்படுத்தியுள்ளார் அதனால் தான் பாப்பத்தியம்மா தமிழ்நாட்டில் 2 வாரம் தடை போட்டுட்டாங்களோ? படம் விஜய் டிவிக்கு கைமாறியது கூட காரணமாக இருக்கலாம். படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று தடை போட்டது ஊரை ஏமாற்றும் வேலை. படம் வெளிவந்த எல்லா இடத்திலேயும் ஆர்பாட்டம் கலவரம் காவல்துறை பாதுகாப்பு என்று இருக்கான்னு சொல்லுங்கப்பா. நான் படிச்ச செய்தி
இதழ்கள் எதுலயும் அப்படி இல்லை.

பாப்பத்திய பற்றி பேசிய கமல் துலுக்கச்சிய பற்றி பேசினாரா? ஏன் பாப்பாத்தின்னா இளக்காரமா? கமல் மற்றும் பல திரைப்படங்களில் பார்த்துள்ளேன் வில்லனை சாமி கும்பிடுபவனாக காட்டுவார்கள். இது சாமி கும்பிடுபவர்களை அவமதிப்பது ஆகாதா? சாமி கும்பிடுபவர்களை கண்டால் இளக்காரம் வேறென்ன.

வெள்ளி, ஜனவரி 25, 2013

நான் கமல் அவர்களை ஆதரிக்கிறேன்!!!

நான் கமல் இரசிகன் அல்ல ஆனால் இப்படத்தை திரையரங்கில் தான் பார்க்கப்போகிறேன், எல்லா புகழும் இறைவனுக்கே. தாலிபானையும் ஆப்கானிஸ்தானையும் காட்டுனா முசுலிம்களை தான் காட்ட முடியும். அவனுங்க தொழுகை நடத்தும் குரானை வைத்துள்ள தீவிரவாதிகள் தான். சிக்கறவன் கழுத்தை கோழியை அறுக்கற மாதிரி அறுப்பவனுங்க தான் அப்படி செய்யும் போது அல்லாகு அக்பர் என்று கத்துவதை வீடியோவாக எடுத்து உலகுக்கு அவனுங்க தான் காட்டுனானுங்க. இதை கமல் தன் படத்தில் சொல்லக்கூடாது என்பது எவ்வளவு முட்டாள்தனம்.
** சார்வாகன் இடுகையை எடுத்து ஒட்டி உள்ளேன்**
I Support Kamal Haasan


வணக்க நண்பர்களே,
இந்திய ஜன்நாயக ,மதசார்பற்ற நமது நாட்டின் சட்டங்கள் மட்டுமே நம்க்கு முதன்மையானது.நமது சமூகத்தில் எழும் சிக்கல்களை சட்டம் மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும்.

கருத்துகளின் வடிவம் புத்தகம்,பேச்சு,பதிவுகள்,திரைப்படம் என பல வகைகளில் வெளிவருகின்றன. இவற்றில் வாழும் நாட்டின் சட்டங்களுக்கேற்றபடி மட்டுமே அனுமதிக்கலாம். சில கருத்துகள் தடை செய்யப் படுகின்றன என்றாலும் அவை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே!!

அந்த வகையில் விஸ்வரூபம் நாட்டின் தணிக்கை சட்டங்களின் படி அனுமதி பெற்ற ஒன்று.ஆகவே படத்தை எதிர்ப்போர் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கிறார்கள் என்றால் தணிக்கை சட்டங்களில் வேண்டி மாற்றங்கள் குறித்து ஆக்க பூர்வமான விவாதம் நடத்தி தேவையான மாற்றம் கொண்டு வரட்டும்.

அதை விட்டு தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தொனியில் செயல்படுவதும்,அதற்கு அரசு செவி சாய்ப்பதும் தவறான முன் உதாரணங்களையே ஏற்படுத்தும்.

இப்போது கூட எதிர்க்கும் மதத் தலைவர்கள் நீதிமன்றம் சென்று மட்டுமே தங்களின் வாதங்களை முன் வைக்க வேண்டுகிறோம். தேவையில்லாமல் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசு பாரபட்சம் காட்டாமல் ஒடுக்குவதே நாகரிக‌ சமூகத்தை காப்பாற்றும் வழியாகும்.

நான் கமல் அவர்களை இந்த விடயத்தில் ஆதரிக்கிறேன்.

என் கருத்தை ஆதரிக்கும் பதிவர்கள்  ஒரு பதிவிட்டு ஆதரவு காட்டுவது எதிர்காலத்தில் பலர் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்களை தவிர்க்கும்!!

நன்றி!!