வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், நவம்பர் 27, 2012

கார்த்திகை பெருவிளக்கு நன்னாள் வாழ்த்து

அனைவருக்கும் கார்த்திகை பெருவிளக்கு நன்னாள் வாழ்த்து. எங்க பகுதியில் இதை கூம்பு நோம்பி  என்று சொல்லுவோம். நோம்பி என்றால் திருவிழா. கூம்பு அவிஞ்ச பின் (கார்த்திகை விளக்கு ஏற்றிய பின்) எந்த நல்ல செயலையும் அம்மாதத்தில் தொடங்கமாட்டார்கள்.



தீபாவளி போல் இதுவும் அமாவாசை அன்று வரும் விழா என்றே நினைத்திருந்தேன், ஆனால் இது கார்த்திகை மாதத்தில் முழுநிலவு அன்று வரும் என்று இப்போ கண்டுகொண்டேன். சில சமயம் முன்ன பின்ன வருமோ? ஒரு இணையத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய நாளில் வரும் என்று போட்டுள்ளார்கள்.  சில இணையதளங்களில் கார்த்திகை மாதத்தில் வரும்  கார்த்திகை நட்சத்திர நாளில் வரும் என்று போட்டுள்ளார்கள். 

செவ்வாய் கிழமை நவம்பர் 27, 2012 அன்று கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இன்று பரணி நட்சத்திரம், சதுர்த்தசி திதி. புதன் கிழமை நவம்பர் 28, 2012 அன்று பௌர்ணமி திதி கார்த்திகை நட்சத்திரம் ஏன் ஒரு நாள் முன்னாடியே திருவண்ணாமலையில் கொண்டாடினார்கள்?


செவ்வாய் கூம்பு அப்படின்னா திங்கள் இரவிலிருந்தே வீட்டு வாசலில் விதவிதமாக கோலம் போடுவார்கள். வீட்டு வாசலுக்கு முன் மட்டுமே என்று நினைக்காதிர்கள். தங்கள் வீட்டிற்கு முன் உள்ள எல்லா இடத்திலேயும் கோலம் போடுவார்கள். யாரு கோலம் அழகா இருக்குங்கிறதில் ஒரு சின்ன போட்டி இருக்கும். சில பேர் புள்ளி வைத்த கோலம் போடுவதில் கில்லாடியாக இருப்பார்கள் அது நிறைய பேருக்கு நல்லா வராது அவங்க வண்ண பொடியை வைத்து கோலம் போடுவார்கள். கோலத்தில் விளக்கு வைத்து அதை இன்னும் அழகாக்குவார்கள். கோலம் காலை வரை அழியாமல் பத்தரமாக இருக்கும் பின் வீட்டிற்கு வருபவர்களால் அழியத்தொடங்கி விடும்.




திங்கள், நவம்பர் 12, 2012

இந்த தீபாவளியின் புது வெடிகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். ஐப்பசி மாத அமாவாசையை விட கார்த்திகை மாத அமாவாசை தான் தமிழர்கள் கொண்டாடும் உண்மையான ஒளித்திருநாள். எனக்கு தெரிந்து அதுக்கு யாரும் வாழ்த்து சொல்வதில்லை. அது இருக்கட்டும் இந்த தீபாவளியின் சில வெடி நகைச்சுவைகளை பார்ப்போம்.

1. மன்மோகன் சிங் வெடி:-
புகையும் வராது வெடிக்கவும் செய்யாது ஆனால் அமெரிக்கா காரன் வெடிச்சா மட்டும் வெடிக்கும் தன்மையுடையது.

2. சோனியா வெடி:-
இதுக்கு தீ வைத்தால் இதுக்கு பதிலா சுற்றியிருக்கும் சிவகங்கை வெடி, திக்கு விஜய் வெடி, சிபல் வெடி, நாராயணன் வெடி, சிங்வி வெடி போன்ற மற்ற வெடிகள் வெடிக்கும்.

3. கெஞ்ரிவால் வெடி:-
இந்த வெடியால் பாதிப்பு அதிகமா இருக்கும். சில முறை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் சில முறை சிறிய பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு எந்த அளவு என்பது வெடிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும்

4. கட்கரி வெடி:-
இது வெடிச்சால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. ஆனா கடுமையான வெடி போல் தோன்றும். இதை உதார் வெடி என்று தமிழல்லாத சொல்லால் குறிப்பிடுவார்கள். இது இன்னும் சந்தையில் கிடைக்குதுன்னா அதுக்கு காரணம் சங்கத்து ஆட்கள் இதை வாங்குவது தான்.

5. மோடி வெடி:-
முசுலிம்கள் இதை வெடித்தால் அவர்களுக்கு பாதிப்பு உறுதி. இவ்வெடியை தடை செய்ய பலர் முயன்றாலும் இதன் புகழ் அதிகளவில் பரவிவிட்டதால் தடை செய்வது இயலாத செயல.

6. மம்தா வெடி:-
பொதுவுடமைவாதிகள், காங்கிரசு காரங்க வெடிச்சா அவங்க கைய சுட்டுரும். நிறைய புகை வரும் சில முறை வெடிக்கும், வெடிச்சா சத்தம் அதிகமா இருக்கும்.

7. காரத் வெடி:-
இருசியா, சீனா ஆதரவு சொற்களை சொல்லிக்கொண்டு  வெடிச்சா அவங்களுக்கு புடிச்ச மாதிரி வெடிக்கும். அமெரிக்க ஆதரவு சொற்களை சொல்லிக்கொண்டு வெடிச்சா அவங்களை சுட்டு விடும்.

8. தாத்தா வெடி:-
வெடிக்கவே செய்யாது ஆனால் வெடிக்கற மாதிரி புஸ்சுன்னு போகும் சத்தமில்லாம இருக்கும் மறுபடியும் புஸ்சுன்னு போகும் வெடிக்கும் வெடிக்கும் அப்படின்னு நினைக்க வைச்சு ஏமாத்தும்.

9. ஆத்தா வெடி:-
வெடிக்காது ஆனா புகை மட்டும் நிறைய வரும். தாத்தா வெடிக்கூட இதை வைக்கக்கூடாது.

10. தரும தலைவி வெடி:-
ஒழுங்கு முறையில்லாமல் வெடிக்கும். வெடிக்கும் என்று சிலர் கூடி நின்று பார்த்தால் கண்டிப்பாக வெடிக்காது. தமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலத்தில் வெடிக்காது ஆனால் புகை வரும், சில சமயம் அதுவும் வராது.


உங்களுக்கும் இது மாதிரி நிறைய புது வெடிகள் தெரிந்திருக்கும்.

பொருப்பு துறப்பி:-
இது நகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்த அல்ல. I-T act 66A பண்ற பாட்டை பாருங்கப்பா :(




வியாழன், நவம்பர் 08, 2012

செனட் தேர்தலின் முடிவு.

2012ல் அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். அதிபர் தேர்தலுடன் இணைந்து 33 செனட் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அதைப்பற்றி முந்தைய அமெரிக்க செனட் தேர்தல் என்ற இடுகையில் சொல்லி இருந்தேன். செனட் முடிவுகளும் வந்து விட்டன. அவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். தேர்தலுக்கு பின் 100 உறுப்பினர் உடைய செனட்டில் சனநாயக கட்சிக்கு 53 உறுப்பினர்களும் குடியரசு கட்சிக்கு 45 உறுப்பினர்களும், எக்கட்சியும் சாராதவர்கள் 02 பேரும் உள்ளனர். குடியரசு கட்சி மூன்று இடங்களை இழந்து ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. சனநாயக கட்சிக்கு இரண்டு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன (மூன்றை கைப்பற்றி ஒன்றை இழந்துள்ளது). கட்சி சாரா இரு செனட் உறுப்பினர்களும் சனநாயக கட்சியுடன் சேர்ந்து செயலாற்றுவார்கள் என நம்பப்படுகிறது. விசுக்கான்சின் மாநில செனட்டர் டேம்மி பால்ட்வின் ஓரினச்சேர்க்கையாளர். செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஓரினச்சேர்க்கையாளர் இவர். குடியரசு கட்சியின் துணை அதிபராக போட்டியிட்ட பவுல் ரயனும் விசுக்கான்சின் மாநிலத்தவர். விசுக்கான்சின் ஆளுனரும் குடியரசு கட்சிக்காரர். நான் மிகவும் எதிர்பார்த்தது வர்ஜீனியா, மாசச்சூசெட்ஸ், கனெடிக்கட் செனட் தேர்தல் முடிவுகளை. கனெடிக்கட்டை முடிவை எதிர்பார்த்ததுக்கு காரணம் அங்கு போட்டியிட்ட குடியரசு கட்சிக்காரர் லின்டா மெக்மெகோன் (Linda McMahon) செலவு செய்த தொகை, 2010ல் நடந்த செனட் தேர்தலிலும் பணத்தை தண்ணீராய் செலவழித்தும் தோற்றார். லின்டா மெக்மெகோன் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவரின் நிறுவனம் உங்களுக்கு தெரிந்திருக்கும் அதாங்க அதிரடி மல்யுத்தம் (WWE- World Wrestling Entertainment)இசுடார் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீங்களே, நான் அதுல தான் பார்த்தேன் இப்ப எதுல வருதோ தெரியாது. இந்தியானாவில் வெற்றி பெற வேண்டிய குடியரசு கட்சி அதன் வேட்பாளர் கற்பழிப்பு பற்றி சொன்ன கருத்தால் தோற்றுவிட்டார். மிசௌரியிலும் அதேதான் கதை. 10 இடங்களில் போட்டியிட்டு ஒன்பதில் மட்டும் வென்றது குடியரசு கட்சிக்கு பின்னடைவாகும்.

மாநிலம் தற்போதய செனட்டரின் கட்சி கைப்பற்றியது வெற்றியாளர்
அரிசோனா குடியரசு கட்சி குடியரசு கட்சி ஜெஃவ் பிளேக்
மெய்ன் குடியரசு கட்சி கட்சி சாராதவர் ஆங்குசு கிங்
டெக்சாசு குடியரசு கட்சி குடியரசு கட்சி டெட் குருசு
மாசச்சூசெட்ஸ் குடியரசு கட்சி சனநாயக கட்சி எலிசபெத் வாரன்
மிசிசிப்பி குடியரசு கட்சி குடியரசு கட்சி ரோசர் விக்கர்
நெவாடா குடியரசு கட்சி குடியரசு கட்சி டீன் எல்லர்
டென்னிசி குடியரசு கட்சி குடியரசு கட்சி பாப் கோர்கர்
யூட்டா குடியரசு கட்சி குடியரசு கட்சி ஓர்ரின் ஏட்ச்சு
வயோமிங் குடியரசு கட்சி குடியரசு கட்சி ஜான் பார்ரசோ
இந்தியானா குடியரசு கட்சி சனநாயக கட்சி ஜோ டான்னிலி
அவாயி சனநாயக கட்சி சனநாயக கட்சி மாசி கிரனோ
நெப்ராசுக்கா சனநாயக கட்சி குடியரசு கட்சி டெப் பிச்சர்
நியூ மெக்சிக்கோ சனநாயக கட்சி சனநாயக கட்சி ஜெஃவ் பிங்கமன்
வட டக்கோட்டா சனநாயக கட்சி சனநாயக கட்சி எய்ட்டி எயிட்டாம்
வர்ஜீனியா சனநாயக கட்சி சனநாயக கட்சி டிம் கெய்ன்
விசுக்கான்சின் சனநாயக கட்சி சனநாயக கட்சி டேம்மி பால்ட்வின்
கலிபோர்னியா சனநாயக கட்சி சனநாயக கட்சி டையானா பெயின்சுஉடைன்
டெலவேர் சனநாயக கட்சி சனநாயக கட்சி டாம் கார்பர்
புளோரிடா சனநாயக கட்சி சனநாயக கட்சி பில் நெல்சன்
மேரிலாந்து சனநாயக கட்சி சனநாயக கட்சி பென் கார்டின்
மிச்சிகன் சனநாயக கட்சி சனநாயக கட்சி டெப்பி இசுடேப்னோ
மினசோட்டா சனநாயக கட்சி சனநாயக கட்சி ஏமி குலோபசர்
மிசௌரி சனநாயக கட்சி சனநாயக கட்சி கிளாரி மெக்காசுகில்
மான்டானா சனநாயக கட்சி சனநாயக கட்சி ஜான் டெசுட்டர்
நியூ செர்சி சனநாயக கட்சி சனநாயக கட்சி ராபர்ட் மென்ன்டேசு
நியூ யார்க் சனநாயக கட்சி சனநாயக கட்சி ரிசுட்டன் கில்லிபிராண்டு
ஓகியோ சனநாயக கட்சி சனநாயக கட்சி செர்ராடு பிரௌன்
பென்சில்வேனியா சனநாயக கட்சி சனநாயக கட்சி பாப் கேசி
ரோட் ஐலேண்ட் சனநாயக கட்சி சனநாயக கட்சி செல்டன் வொயிட்அவுசு
வாசிங்டன் சனநாயக கட்சி சனநாயக கட்சி மரியா கான்ட்வெல்
மேற்கு வர்ஜீனியா சனநாயக கட்சி சனநாயக கட்சி ஜோ மான்சின்
கனெடிகட் கட்சி சாரா செனட்டர் சனநாயக கட்சி கிரிசு மர்பி
வெர்மான்ட் கட்சி சாரா செனட்டர் கட்சி சாரா செனட்டர் பெர்னி சான்டர்சு


மொத்த இடங்கள் =100
சனநாயக கட்சி = 53
குடியரசு கட்சி = 45
கட்சி சாராதவர்கள் = 2
 

திங்கள், நவம்பர் 05, 2012

We oppose present I-T Act 66A, Demanding change on it.


I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.

*சாமானிய மக்கள் கருத்து தெரிவிப்பதை ஒடுக்கும் இச்சட்டம் மாற்றப்படவேண்டும்.

* இச்சட்டம் அரசியல் சட்டம் வழங்கிய பேச்சுருமையை முற்றிலும் பறிக்கிறது. இங்கு பேசுதல் என்பது எழுத்தில் கருத்து தெரிவிப்பது ஆகும்.

*மனஉழைச்சல் (annoyance) என்றால் என்ன தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.

* விசாரணை முடியும் வரை கைது செய்யக்கூடாது.

* Inconvenience, obstruction, insult, injury, hatred என்றால் என்ன தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.

* அரசியல் தலைவர்களை அல்லது பொதுவாழ்வில் உள்ளவர்களை விமர்சிக்கும் போது இச்சொற்களை பயன்படுத்த வேண்டி வரும் அவற்றை குற்றமாக கருதக்கூடாது.

சனி, நவம்பர் 03, 2012

அமெரிக்க செனட் தேர்தல்

2012, நவம்பர் 6ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது அனைவருக்கும் தெரியும். உலகின் செய்திஇதழ்கள் அனைத்திலும் அதைப்பற்றி தான் செய்தி இருக்கும். செனட் அவையின் 33 இடங்களுக்கு இச்சமயத்தில் தேர்தல் (நவம்பர் 6, 2012) நடைபெறுகிறது. இதுவும் கவனிக்கத்தக்க தேர்தலாகும். செனட்டை பற்றி இரத்தின சுருக்கமாக இவ்வாறு கூறலாம். அமெரிக்காவின் எந்த சட்டமும் செனட் ஒப்புதல் இல்லாமல் நிறைவேறாது. செனட் ஒப்புதல் இல்லாமல் நீதிபதிகளையோ
அமைச்சர்களையோ நியமிக்கமுடியாது. அதிபருக்கு நிறைய அதிகாரம் இருந்தாலும் செனட் அனுமதி இல்லாமல் சில நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும், நடவடிக்கையை தொடங்கிய பின்பு செனட் ஒப்புதல் பெற்றாகவேண்டும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை செனட் தேர்தல் நடைபெறும். செனட்டின் எல்லா இடத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் இரண்டு செனட் உறுப்பினர்கள் உண்டு. பெரிய கலிபோர்னியாவுக்கும் இரண்டு பேர், சிறிய ரோட்
ஐலேண்டுக்கும் இரண்டு பேர்.

தற்போதைய செனட்டில் ஜனநாயக கட்சிக்கு 51 உறுப்பினர்களும் குடியரசு கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். இருவர் கட்சி சாராதவர்கள் ஆனால் அவர்கள் சனநாயக கட்சி சார்பு உடையவர்கள். தேர்தல் நடைபெறும் 33 இடங்களில் 10 இடங்கள் குடியரசு கட்சி வசம் உள்ளவை, 21 சனநாயக கட்சி வசம் உள்ளவை. 2 இடங்கள் கட்சி சாராதவர்கள் வசம் உள்ளவை.  கட்சி சாராத இருவரும் சனநாயக கட்சியுடன் இணைந்து செயலாற்றுபவர்கள் அதனால் சனநாயக கட்சி 23 இடங்களில் போட்டியிடுகிறது என்பர். எனவே அதிக இடங்களை தக்க வைக்க வேண்டியது சனநாயக கட்சி. தற்போதைய சனநாயக கட்சிஉறுப்பினர்கள் 7 பேர் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளார்கள். குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் 3 பேர் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளார்கள். கட்சி சாராத உறுப்பினர் ஒருவரும் ட்டியிடுவதில்லை
என்று அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் 14 இடங்களில் வெற்றி பெற்றாலே குடியரசு கட்சிக்கு செனட்டில் பெரும்பான்மை கிடைத்துவிடும்.


ஓய்வு பெறும் குடியரசு கட்சி செனட்டர்கள் (அரிசோனா, மேய்ன், டெக்சாசு)

அரிசோனா
தற்போதய செனட் உறுப்பினர் குடியரசு கட்சியின் ஜான் கைல் (Jon Kyl)ஓய்வு.
குடியரசு கட்சி சார்பாக ஜெஃவ்  பிளேகும் (Jeff Flake) சனநாயக கட்சி சார்பாக ரிச்சர்ட் கார்மனாவும் (Richard Carmona) போட்டியிடுகிறார்கள்.

மேய்ன்
தற்போதய செனட் உறுப்பினர் குடியரசு கட்சியின் ஒலிம்பியா சுனோவி (Olympia Snowe) ஓய்வு.
இங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. சனநாயக கட்சி சார்பில் சிந்தியா டில்லும் (Cynthia Dill) குடியரசு கட்சி சார்பில் சார்ளி சம்மர்சும் (Charlie Summers), கட்சி சார்பற்றவராக முன்னாள் ஆளுனர் ஆங்குசு கிங்கும் (Angus King ) போட்டியிடுகிறார்கள் சனநாயக கட்சி தன் வேட்பாளருக்கு பெரும் ஆதரவை வழங்கவில்லை, கிங் வெற்றி பெற வேண்டும் என அது எதிர்பார்க்கிறது. கிங் சனநாயக கட்சியுடன் இணைந்து இயங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர் வெற்றி பெற வேண்டும் என சனநாயக கட்சி எதிர்பார்க்கிறது. கிங்கிற்கு நியூ யார்க் நகர தந்தை மைக்கேல் புளூம்பெர்க், மனித உரிமை அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன. கிங் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்சாசு
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் கேய் பெய்லி அச்சிசன் (Kay Bailey Hutchison) ஓய்வு.
குடியரசு கட்சியின் டெட் குருசை (Ted Cruz) எதிர்த்து சனநாயக கட்சியின் பால் சேட்லர் ( Paul Sadler) போட்டியிடுகிறார். டெட் எளிதாக வென்று விடுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியிடும் குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர்கள் (மாசச்சூசெட்ஸ், மிசிசிப்பி, நெவாடா, டென்னிசி, யூட்டா, வயோமிங்)


மாசச்சூசெட்ஸ்
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் இசுக்காட் பிரௌனுக்கு (Scott Brown) கடும் போட்டியை சனநாயக கட்சியின்  எலிசபெத் வார்ரென் (Elizabeth Warren)
கொடுக்கிறார். இம்மாநிலம் சனநாயக கட்சி சார்புடையது ஆனால் செனட்டர் டெட் கென்னடி மறைந்ததும் நடத்த இடைத்தேர்தலில் குடியரசு கட்சியின் இசுக்காட் பிரௌன் வெற்றி பெற்றார். இங்கு போட்டி கடுமையாக உள்ளது.

மிசிசிப்பி
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர்  ரோசர் விக்கரை (Roger Wicker) எதிர்த்து சனநாயக கட்சியின் ஆல்பர்ட் கோர் (Albert N. Gore) போட்டியிடுகிறார். ரோசர் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெவாடா
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் டீன் எல்லரை (Dean Heller) எதிர்த்து சனநாயக கட்சியின் செல்லி பெர்க்லி (Shelley Berkley)  போட்டியிடுகிறார்.
இம்மாநிலத்தில் அதிகளவில் சனநாயக கட்சியினர் இருப்பதால் (நாம் எக்கட்சியை சேர்ந்தவர் என வாக்காளராக பதிவு செய்யும் போதே சொல்லலாம்) செல்லி வெற்றி பெறுவார் என சனநாயக கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

டென்னிசி
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் பாப் கோர்கரை (Bob Corker) எதிர்த்து சனநாயக கட்சியின்  மார்க் கிளேடென் (Mark Clayton) போட்டியிடுகிறார். பாப் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூட்டா
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் ஓர்ரின் ஏட்ச்சு (Orrin Hatch) எதிர்த்து சனநாயக கட்சியின் இசுக்காட் ஆவெல் (Scott Howel) போட்டியிடுகிறார். உட்கட்சி தேர்தலில் டீ பார்ட்டி வேட்பாளர் டான் லிஜென்குயிசுட்டை (Dan Liljenquist) வென்று குடியரசு கட்சி வேட்பாளரான ஓர்ரின் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வயோமிங்
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் ஜான் பார்ரசசோவை (John Barrasso) எதிர்த்து சனநாயக கட்சியின் டிம் செசுநட் (Tim Chesnut) போட்டியிடுகிறார். ஜான்
எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பதவியில் உள்ள செனட்டர் உட்கட்சி தேர்தலில் தோற்றது.

இந்தியானாவில் தற்போதய குடியரசு கட்சி செனட்டர் ரிச்சர்ட் லுகர் உட்கட்சி தேர்தலில் டீ பார்ட்டி உறுப்பினர் ரிச்சர்ட் முர்டாகிடம் தோற்றதால் ரிச்சர்ட் முர்டாக் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடுகிறார். உட்கட்சி தேர்தலில் தோற்ற பதவியில் இருக்கும் செனட்டர் இவர் மட்டுமே ஆவார். ரிச்சர்ட் லுகர் 1977 முதல் இந்தியானா செனட்டராக தொடர்ந்து 6 முறை தேர்வாகி உள்ளார்.
தற்போதய செனட் உறுப்பினர் ரிச்சர்ட் லுகர் (Richard Lugar) குடியரசு கட்சியின் உட்கட்சி தேர்தலில் தோற்றதால் அவரை தோற்கடித்த ரிச்சர்ட் முர்டாக் (Richard Mourdock) குடியரசு கட்சி சார்பாகவும் ஜோ டான்னிலி (Joe Donnelly) சனநாய கட்சி சார்பாகவும் போட்டியிடுகிறார்கள். ரிச்சர்ட் முர்டாக் ' உயிர் கற்பழிப்பு போன்ற கடும் சூழலில் தோன்றினாலும் அது கடவுள் விருப்பப்படியே நடந்ததாகும்' என்று கற்பழிப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் இந்தியானா குடியரசு கட்சி சார்பு உடைய மாநிலமாக இருந்தபோதிலும் அவரின் போட்டி கடுமையாக உள்ளது.


ஓய்வு பெறும் சனநாயக கட்சி செனட்டர்கள் (அவாயி, நெப்ராசுக்கா, நியூ மெக்சிக்கோ, வட டக்கோட்டா, வர்ஜீனியா, விசுக்கான்சின்)

அவாயி
தற்போதய செனட் உறுப்பினர் சனநாயக் கட்சியின் டேனியல் அகாகா (Daniel Akaka) (இவர் சீன அமெரிக்கர்) ஓய்வு.
சனநாயக கட்சி சார்பில் மாசி கிரனோவும் (Mazie Hirono) குடியரசு கட்சி சார்பில் முன்னால் ஆளுனர் லின்டா லிங்களும் (Linda Lingle) போட்டியிடுகிறார்கள். 2002ல் நடந்த ஆளுனர் தேர்தலில் இவர் மாசியை தோற்கடித்தார் ஆனால் அதிபர் தேர்தல் நடைபெறும் இச்சமயத்தில் மாசி கிரனோவ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வென்றால் செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாக அவர் இருப்பார். (இவர் நிப்பான் அமெரிக்கர்).

நெப்ராசுக்கா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் பென் நெல்சன் (Ben Nelson) ஓய்வு.
சனநாயக கட்சியின் முந்தைய செனட்டர் & ஆளுனர் பாப் கெர்ரியை (Bob Kerrey)  எதிர்த்து குடியரசு கட்சியின் டெப் பிச்சர் (Deb Fischer)போட்டியிடுகிறார். நன்கு அறியப்பட்ட பாப் கெர்ரி முன்னால் ஆளுனராக இருந்தாலும்  செனட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தன் வாழ்வில் பெரும்பகுதியை நியூ யார்க் நகரில் கழித்ததால் பாப் கெர்ரியின் வெற்றி எளிதில்லை.

நியூ மெக்சிக்கோ
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ஜெஃவ் பிங்காமன் (Jeff Bingaman) ஓய்வு.
சனநாயக கட்சியின் மார்ட்டின் எய்ன்ரிசை (Martin Heinrich) எதிர்த்து குடியரசு கட்சியின் எதர் வில்சன் (Heather Wilson) போட்டியிடுகிறார். இச்செனட்டை கைப்பற்ற இது தக்க தருணம் என குடியரசு கட்சியினர் கருதுகின்றனர். சனநாயக கட்சியின் சார்புடைய இம்மாநிலத்தில் தீவிர போக்கில்லாத எதர் சரியான தேர்வு என கருதுகின்றனர். ஆனால் அவர் மார்ட்டினின் பரப்புரையை முறியடிக்க முடியாமல் உள்ளார்.

வட டக்கோட்டா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் கென்ட் கான்ராட் (Kent Conrad ) ஓய்வு.
சனநாயக கட்சியின் எய்ட்டி எயிட்டாமை (Heidi Heitkam) எதிர்த்து குடியரசு கட்சியின் ரிக் பெர்க்  (Rick Berg) போட்டியிடுகிறார். 2010ல் ஓய்வு பெற்ற சனநாயக கட்சியின் செனட் பதவியை கைப்பற்றியது போல் இம்முறையும் மீண்டும் நடக்கும் என குடியரசு கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். எய்ட்டி இச்செனட் பதவியை சனநாயக கட்சியினர் தக்கவைக்க உதவுவார் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வர்ஜீனியா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ஜிம் வெப் (Jim Webb) ஓய்வு
சனநாயக கட்சியின் டிம் கெய்னை (Tim Kaine) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜோர்ஜ் ஆலன் (George Allen) போட்டியிடுகிறார். இருவரும் வர்ஜீனியாவின் முன்னால் ஆளுனர்கள். இருவரும் புகழ்பெற்றவர்கள். ஜோர்ஜ் ஆலன் 1994-98 வரை ஆளுனராக இருந்தார். டிம் கெய்ன் 2007-2011 வரை ஆளுனராக இருந்தார். ஜோர்ஜ் ஆலன் 2001-2007 வரை செனட் உறுப்பினராக இருந்தார். 2007ல் சனநாயக கட்சியின் ஜிம் வெப்பிடம் 10,000 வாக்குகள் வேறுபாட்டில் தோல்வியுற்றார். அவர் கட்சி மாநாட்டை படம் பிடித்த இந்திய மாணவரை இனவாத சொற்களால் திட்டியதால் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. 2008ல் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தார். 2007ல்
ஏற்பட்ட தோல்வி அந்த எண்ணத்தை கைவிடச்செய்தது.

விசுக்கான்சின்
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் எர்ப்பு கோல் (Herb Kohl) ஓய்வு
சனநாயக கட்சியின் டேம்மி பால்ட்வினை (Tammy Baldwin) எதிர்த்து குடியரசு கட்சியின் டாம்மி தாம்சன் (Tommy Thompson) போட்டியிடுகிறார். டாம்மி முன்னால் ஆளுனர் ஆவார். இருவருக்கும் போட்டி கடுமையாக உள்ளது.


போட்டியிடும் சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர்கள்  (கலிபோர்னியா, டெலவேர், புளோரிடா, மேரிலாந்து, மிச்சிகன், மினசோட்டா, மிசௌரி, மான்டானா, நியூ செர்சி,  நியூ யார்க், ஓகியோ, பென்சில்வேனியா, ரோட் ஐலேண்ட், வாசிங்டன்,  மேற்கு வர்ஜீனியா)

கலிபோர்னியா
சனநாயக கட்சியின் தற்போதய செனட் உறுப்பினர் டையானா பெயின்சுஉடைனை (Dianne Feinstein) எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக எலிசபெத் எம்கென் (Elizabeth Emken) போட்டியிடுகிறார். டையானா எளிதாக வென்றுவிடுவார் என்று கருதுகிறார்கள்.

டெலவேர்
சனநாயக கட்சியின் தற்போதய செனட் உறுப்பினர் டாம் கார்பரை (Tom Carper) எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக கெவின் வேட் (Kevin Wade) போட்டியிடுகிறார். டாம் எளிதாக வென்றுவிடுவார் என்று கருதுகிறார்கள்.

புளோரிடா
சனநாயக கட்சியின் தற்போதய செனட் உறுப்பினர் பில் நெல்சனை (Bill Nelson) எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக கானி மேக் (Connie Mack IV) போட்டியிடுகிறார்.
நெல்சன் முன்னனியில் இருந்தாலும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேரிலாந்து
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் பென் கார்டின் (Ben Cardin)  எளிதாக குடியரசு கட்சியின் டானியல்  பாங்கினோவை (Daniel Bongino) தோற்கடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிச்சிகன்
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் டெப்பி  இசுடேப்னோவை (Debbie Stabenow)  எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக பீட்டர்  ஆக்சுடிரா (Peter Hoekstra)
போட்டியிடுகிறார். ஆரம்பத்தில் டெப்பி தோற்றுவிடுவார் என கருதப்பட்டாலும் குடியரசு கட்சியினர் தகுந்த வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்குள் அவர் நிதி திரட்டல் மற்றும் கருத்து கணிப்புகளில் பல மடங்கு முன்னேறி உள்ளார்

மினசோட்டா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ஏமி  குலோபசரை  (Amy Klobuchar)  எதிர்த்து குடியரசு கட்சியின் குர்ட் பில்சு (Kurt Bills) போட்டியிடுகிறார்.
சனநாயக கட்சியின் ஏமி எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிசௌரி
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் கிளாரி மெக்காசுகில்லை (Claire McCaskill) எதிர்த்து குடியரசு கட்சியின் டாட் அகின் (Todd Akin) போட்டியிடுகிறார். இவர் முறையான கற்பழிப்பு நடந்தால் பெண்கள் உடலானது கர்பமாவதை தடுத்துவிடும் என்று கற்பழிப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதனால் தோற்றுவிடும் சூழலில் இருந்த கிளாரி வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டார். 

மான்டானா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ஜான் டெசுட்டரை (Jon Tester) எதிர்த்து குடியரசு கட்சியின்  டென்னிசு ரெக்பெர்க் (Dennis Rehberg) போட்டியிடுகிறார். இருவருக்கும் செல்வாக்கு உள்ளதால் போட்டி மிக கடுமையாக உள்ளது.

நியூ செர்சி
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ராபர்ட் மென்ன்டேசு(Robert Menendez) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜோ  கிரில்லாசு (Joe Kyrillos) போட்டியிடுகிறார்.
ராபர்ட் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூ யார்க்
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் கிரிசுட்டன் கில்லிபிராண்டு (Kirsten Gillibrand) எதிர்த்து குடியரசு கட்சியின்  வென்டி லாங் (Wendy Long)
போட்டியிடுகிறார். கிரிசுட்டன்  எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓகியோ
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் செர்ராடு பிரௌனை (Sherrod Brown) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜோசு மாண்டெல் (Josh Mandel) போட்டியிடுகிறார்.
இவர் செனட்டில் உள்ள முற்போக்கான உறுப்பினர் என்பதால் குடியரசு கட்சி இம்முறை வென்று விடலாம் என்று கருதுகிறது. 

பென்சில்வேனியா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர்  பாப் கேசியை (Bob Casey) எதிர்த்து குடியரசு கட்சியின் டாம் சுமித்து (Tom Smith) போட்டியிடுகிறார். சில கருத்து
கணிப்புகள் குடியரசு கட்சி நம்பிக்கை அளித்தாலும் தற்போதய செனட்டர்  பாப் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் இது இவர் முன்னர் செய்யாதது ஆகும்.

ரோட் ஐலேண்ட்
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் செல்டன் வொயிட்அவுசை (Sheldon Whitehouse) எதிர்த்து குடியரசு கட்சியின் பாரி இன்க்லே  (Barry Hinckley)
போட்டியிடுகிறார். செல்டன் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிங்டன்
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர்  மரியா கான்ட்வெலை (Maria Cantwell) எதிர்த்து குடியரசு கட்சியின் மைக்கல் பவும்கார்ட்னெர் (Michael Baumgartner) போட்டியிடுகிறார். மரியா எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வர்ஜீனியா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர்  ஜோ மான்சினை (Joe Manchin) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜான் ரெச்சி (John Raese) போட்டியிடுகிறார். ஜோ மான்சின் மேற்கு வர்ஜீனியாவின் முன்னால் ஆளுனர் ஆவார். அப்போதய செனட்டர் ராபர்ட் பைர்டு (Robert Byrd) (இவரே அதிக காலம் அமெரிக்காவில் செனட் உறுப்பினராக இருந்தவர்) இறந்ததால் 2010ல் நடைபெற்ற செனட்டுக்கான இடைத்தேர்தலில் இருவரும் போட்டியிட்டனர். சனநாயக கட்சியில் இருந்தாலும் சுதந்திரமாக முடிவெடுக்கும் மான்சின் தற்போது எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஓய்வு பெறும் கட்சி சாரா செனட்டர்.

கனெடிகட்
தற்போதய உறுப்பினர் யோசப் லிபர்மன் (Joseph Lieberman) (கட்சி சார்பற்றவர்) ஓய்வு. இவர் சனநாயக கட்சி சார்பாக நடப்பவர். இவர் முன்னால் சனநாயக கட்சி உறுப்பினர். கடந்த சனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தலில் தோல்வியுற்றதால் கட்சி சார்பின்றி போட்டியிட்டு வென்றார்.
சனநாயக கட்சி சார்பில் கிரிசு மர்பியும் (Chris Murphy) குடியரசு கட்சி சார்பில் லின்சா மெக்மஓனும் (Linda McMahon) போட்டியிடுகிறார்கள்.  போட்டி கடுமையாக இருந்தாலும் மர்பி வென்றுவிடுவார் என கருதப்படுகிறது.


போட்டியிடும் கட்சி சாரா தற்போதய செனட்டர்

வெர்மான்ட்
தற்போதய கட்சி சாரா செனட்டர் பெர்னி சான்டர்சை (Bernie Sanders) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜான் மெக்கவர்ன் (John MacGovern) போட்டியிடுகிறார். பெர்னி சனநாயக கட்சியோடு சேர்ந்து இயங்குவதால் அவரை எதிர்த்து சனநாயக கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் அவர் வெற்றிக்கு பாடுபடுகிறது. பெர்னி எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

*************************************
http://www.cnn.com/2012/10/26/politics/senate-races/index.html?hpt=hp_t2
http://www.270towin.com/2012_senate_election/

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

மத்திய அமைச்சரைவை மாற்றம் அக்டோபர் 28

மத்திய அமைச்சரவையில் அக்டோபர் 28, 2012 அன்று நடைபெற்ற மாற்றத்தில் 17 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்கள் சிலருக்கு துறைகள் மாற்றப்பட்டன.

புதிய ஆய அமைச்சர்கள்:

ரகுமான் கான் - சிறுபான்மையினர் நலம்

தின்சா படேல் - சுரங்கம்

அஜய் மேக்கான் - வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு (விளைாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர்)

எம்.எம்.பல்லம் ராஜு - மனிதவள மேம்பாடு

அசுவனி குமார் - சட்டம், நீதி

ஹரீசு ராவத் - நீர்வளம் (உத்தராகண்டத்தில் முதலமைச்சர் பதவி தரப்படாததால் ஆய அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்)

சந்த்ரேசு குமாரி கடோச் - கலாசாரம்


துறை மாற்றப்பட்டுள்ள ஆய அமைச்சர்கள்:

வீரப்ப மொய்லி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

ஜெய்ப்பால் ரெட்டி - அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்தார்)

கமல்நாத் - நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரம்

வயலார் ரவி- வெளிநாட்டு இந்திய விவகாரம்

கபில் சிபல் - தொடர்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சி.பி.ஜோஷி - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

குமாரி செல்ஜா - சமூக நீதி மற்றும் நலம்

பவன் குமார் பன்சால் - ரயில்வே

சல்மான் குர்ஷித் - வெளியுறவு (சட்டம், நீதி, சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்தார்)

ஜெய்ராம் ரமேஷ் - கிராமப்புற வளர்ச்சி



புதிய இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

மனீஷ் திவாரி - செய்தி, ஒலிபரப்பு

கே.சிரஞ்சீவி - சுற்றுலா



துறை மாற்றப்பட்டுள்ள இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு):

ஜோதிர் ஆதித்யா சிந்தியா - மின்சாரம்

கே.எச்.முனியப்பா - குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (K ஊர் கோலார்,  H தந்தை அனுமப்பா)

பாரத்சின்ஹ் மாதவ்சிங் சோலங்கி - குடிநீர் மற்றும் உடல்நலம்

சச்சின் பைலட் - கார்ப்பரேட் / தொழில்துறை

ஜிதேந்திர சிங் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு



புதிய இணையமைச்சர்கள்

சசி தரூர் - மனித வள மேம்பாடு

கொடிகுன்னில் சுரேஷ் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

தாரிக் அன்வர் - வேளாண்மை

கோட்லா ஜெய சூர்ய பிரகாஷ் ரெட்டி- ரயில்வே

ராணீ நராஹ் - பழங்குடியினர் நலம்

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி - ரயில்வே

அபு அசிம் கான் சவுத்ரி - சுகாதாரம், குடும்ப நலம்

சர்வே சத்யநாராயணா - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை

நிநாங் எரிக் - சிறுபான்மையினர் நலம்

தீபா தாஸ் முன்ஷி - நகர்ப்புற வளர்ச்சி

போரிகா பல்ராம் நாயக் - சமூக நீதி மற்றும் அதிகாரம்

கிள்ளி க்ருபாராணி - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்

லால்சந்த் கடாரியா - பாதுகாப்பு


துறை மாற்றப்பட்டுள்ள இணையமைச்சர்கள்:

இ.அகமது - வெளியுறவு

டி.புரந்தேஸ்வரி - வர்த்தகம் மற்றும் தொழில்

ஜிதின் பிரசாதா - பாதுகாப்பு மற்றும் மனிதவள மேம்பாடு

எஸ்.ஜெகத்ரட்சகன் - புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

ரஞ்சித் பிரதாப் நாராயின் சிங் - உள்துறை

கே.சி.வேணுகோபால் - பயணிகள் விமானப் போக்குவரத்து

ராஜீவ் சுக்லா - நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்ட கமிஷன்


http://www.ndtv.com/article/india/cabinet-reshuffle-list-of-ministers-285220
http://news.vikatan.com/index.php?nid=10980#cmt241

சுரங்க ஊழல் வெளிவந்த போது யார் எப்போ அத்துறையின் அமைச்சர்களாக இருந்தார்கள் என்பது தெரியாததால் அமைச்சரவை மாற்றத்தை என்பதிவில் சேமிக்கலாம் என்று தோன்றியதின் விளைவு.

செவ்வாய், அக்டோபர் 23, 2012

என்னுடைய நிழற்படம் பல தளங்களில்

எனக்கு நிழற்படம் எடுப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சிறந்த நிழற்படம் கலைஞனாவது எனது ஆசைகளில் ஒன்று. தமிழில் புகைப்படக்கலை என்ற வலைப்பதிவு மூலம் நிழற்படம் பற்றி நான் அறிந்து கொண்டது நிறைய. படித்ததை செயல் படுத்தி பார்த்தேனா என்பது தனி. அப்படி செய்திருந்தால் இன்னேரம் பெரிய ஆளா வந்திருப்பேன். அவர்கள் மாதந்தோறும் நடத்தும் போட்டிகள் சிலவற்றில் நான் கலந்துகொண்டுள்ளேன். நிறைய போட்டிகளில் கலந்துக்க முடியாம போனதுக்கு காரணம் சிறந்த படத்தை அனுப்பவேண்டும் என்று நினைத்து அதை எடுப்பதற்குள் போட்டிக்கு படங்கள் அனுப்பவேண்டிய இறுதி நாள் வந்துடும். மாத போட்டிக்கு 2 மாசம் எடுத்துக்கிட்டா  எப்படி? இஃகி இஃகி.

5 ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு போயிருந்த பொழுது தமிழ் விக்கிபீடியாவுக்கு பயன்படுத்தலாம் என்று பல படங்கள் எடுத்து வந்திருந்தேன். சில படங்கள் கட்டற்ற முறையில் கிடைக்காது மேலும் சில படங்கள் வணிக ஊடகம் உட்பட எந்த இடத்திலும் (ஊடகத்திலும்) வந்திருக்காது. எடுத்த படங்களை பிளிக்கர் தளத்திலும் ஏற்றியிருந்தேன். எப்பொழுதாவது பிளிக்கர் கணக்கை திறந்து பார்ப்பது வழக்கம். நான் நொய்யல் ஆற்றை எடுத்த படத்தை பயன்படுத்த அனுமதி கேட்டு ஒரு பின்னூட்டம் சரி பயன்படுத்திக்கங்கன்னு சொல்லிட்டேன். நான் ஏற்றிய படங்கள் அனைத்துக்கும் காப்புரிமை விலக்கு அளித்துள்ளேன். இப்ப கணக்கை திறந்து பார்த்தா இன்னும் இரண்டு தளங்கள் இவற்றை பயன்படுத்தியுள்ளோம் என பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். 3 மாதத்துக்கு முன் புகழ்பெற்ற வணிக ஊடகத்திலிருந்து  இதை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டிருந்தார்கள். தக்க சன்மானம் தருகிறோம் அதிக resolution உள்ள படம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். இன்னும் அதிக resolution உள்ள என் படம் வேண்டுமா  என கேட்டுள்ளேன். புகழ்பெற்ற வணிக ஊடகம் என் படத்தை பயன்படுத்தியதா என தெரியவில்லை. என் படத்தையும் நாலு பேர் பயன்படுத்தாறங்ளேன்னு எனக்கு மகிழ்ச்சி.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் எந்த படம் எப்ப யாருக்கு பயன்படும் என்று சொல்ல முடியாது. படத்தை புடிச்சி போடுங்க. அமராவதி ஆறு, அணை, பவானி ஆறு, அணை, வைகை ஆறு, அணை, தாமிரபரணி ஆறு, அணை,  .....


திங்கள், அக்டோபர் 15, 2012

புரட்டாசி சனிக்கிழமை ஒருசந்தி - நைனாமலை


புரட்டாசி மாசம் நிறைய பேர் கறி திங்கமாட்டாங்க. நானும் அதில் ஒருத்தன் (இப்ப முட்டை மட்டும் உண்டு இஃகி இஃகி) ஆனா ஒருசந்தி விட்டாச்சுன்னா வீட்டுல் கறி திங்க சமைக்க, கடையில் கறி திங்க தடை இல்லை.கறி திங்கனும் என்பதற்காகவே சில முறை முதல் சனிக்கிழமையே ஒருசந்தி விட்டதும் நடந்திருக்கு இஃகி இஃகி. வழக்கமா நான் புரட்டாசி 3ம் சனிக்கிழமை தான் ஒருசந்தி இருப்பது வழக்கம். இந்த முறை 4ம் சனிக்கிழமை ஒருசந்தி இருந்தேன். டூயிங்... மலரும் நினைவுக்கு போயிட்டேன்

ஊரில் இருக்கும் போது ஒருசந்தி இடுவதற்கு முன் நைனா மலைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டில் ஒருசந்தி இடுவது(இருப்பது) வழக்கம். ஊர்ல இருக்கிறப்ப விடிய காலை 3~4 மணிக்கு நைனாமலைக்கு போய் மலை ஏறி உச்சியில் உள்ள வரதராச பெருமாள கும்பிட்டுவிட்டு சுமார் காலை 9~10 மணி அளவில் வீட்டுக்கு வருவேன்.

நைனா மலை என்பது உயரமான மலையான்னு கேட்டா இல்லை ஆம் என்று தான் சொல்ல வேண்டும். நைனா மலையில் விறு விறுன்னு எங்கேயும் நிக்காமல் வேகமாக ஏறினால் ஒரு மணி நேரத்தில் உச்சியை அடையலாம், உச்சியில் கல்லால் கட்டப்பட்ட வரதராச பெருமாள் கோயில் உள்ளது. ஏதோ இராசா அக்கோயிலை கட்டியிருக்கிறார் ஆனா யார் அந்த இராசா என்று தெரியவில்லை. பாதை சின்னது நிறைய இடத்துல ஒழுங்கா இருக்காது கோயில் கட்டின காலத்துல சில இடங்களில் கல் படிகளை கட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன், அந்தப்படிகள் சிலது வழியில் கொஞ்சம் இருக்கு. அதுக்கப்புறம் யாரும் படி அமைத்ததாக தெரியவில்லை. நடந்து தான்
உச்சிக்கு செல்ல முடியும் வண்டிகள் செல்ல பாதை இல்லை.  விடியகாலையில் ஏறுவது சிறந்தது ஏன்னா அப்ப கூட்டம் குறைவா இருக்கும் மேலும் 8 மணிக்கு அப்புறமா கூட்டம் அதிகமாகிடும் வெயில் இல்லாததால் சோர்வு குறைவாக இருக்கும், பலர் இரவு நேரத்தில் ஏறுவாங்க 6 மணிக்கெல்லாம் அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க. மேலும் கதிரவனின் தயவால் பகலில் மலை ஏறுவது சற்று கடினமாக இருக்கும்.  ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒரே வழிதான் அதனால சில இடங்களில் எச்சரிக்கையாக தான் ஏறனும்\இறங்கனும்.

அடிவாரத்துல நிறைய கடைங்க இருக்கும் மலை ஏறப்போகும் முன் பைநிறைய பொறி, கடலை, கொய்யா, சாத்துக்குடின்னு வாங்கிக்கிட்டு ஏறுவது சிறந்தது. அடிவாரத்துல அனுமார் கோயில் இருக்குது சிலர் மலை ஏறும் முன்னும் சிலர் மலையில் இருந்து இறங்கியபின்னும் அனுமாரை கும்பிடுவாங்க. மலை ஏறாத பெருங்கூட்டம் அனுமார கும்பிட நிற்கும் என்பதால் மலை ஏறும் முன் கும்பிடுவதே சிறந்தது. கோயில் பூட்டி இருந்தது என்றால் சாமிக்கு முன்னால இருக்கும் படியில்சூடத்தை பத்த வைச்சு கும்பிட்டு மலை ஏற வேண்டியது தான். கம்பி கதவு தான் போட்டிருப்பாங்க அதனால சாமி நல்லா தெரியும், அனுமாரும் கிட்டதட்ட 6 அடி உயரம் இருப்பார். 

நைனாமலை சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தையை நோக்கி செல்லும் சாலையில் கிட்டத்தட்ட 1~2 கி.மீ தொலைவில் இருக்கு. நாமக்கலில் இருந்து சென்றால் சேலம் சாலையில் புதன்சந்தையை அடைந்து அங்கிருந்து கிழபுறமாக சேந்தமங்கலத்துக்கு செல்லும் சாலையில் சென்றால் அடையலாம். மொத்த தூரம் 10~12 கிமீ இருக்கும். அதிக அளவான பேருந்துகள் இந்த தடத்தில் தான் இயக்கப்படுகின்றன. அதாவது நாமக்கல் - நைனைமலை. நாமக்கல்லில் இருந்து இன்னொரு வழியும் உள்ளது அது மரூர்பட்டி, பொட்டணம் வழியாக செல்லும் ஆனால் இத்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. சாலையும் நன்றாக இருக்காது மேலும் இது கொஞ்சம்
தூரமும் கூட. நான் பேருந்தில் போகக்கூடிய ஆளா? சைக்கிள் அல்லது டிவிஎசு 50 தான் நம்ம வண்டி. முதல் 3 ஆண்டுகள் சைக்கிள் அப்புறம் டிவிஎசு 50. இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து தான் போவோம்.

மலை ஏறும் போது அங்கங்க உள்ள நம் மூதாதையர்களுக்கு பொறியை போட்டுக்கிட்டு போவோம், நிறைய பேர் அங்க சுத்திக்கிட்டு இருப்பாங்க, கொஞ்சம் அசந்தா பையை நம்மாளு தூக்கிக்கிட்டு போயிடுவாறு அதனால உசாரா தான் இருக்கனும். வழியில் நிறைய இடங்களில் குச்சி ஐஸ், சாத்துக்குடி, கொய்யா போன்றவற்றை விற்பார்கள். விலை அதிகமா இருக்கும், நாங்க ஐஸ் மட்டும் வாங்கிக்குவோம். அதுமட்டுமல்லாமல் பிதாமகனில் சூரியா கட்டை உருட்டற மாதிரி நிறைய பேர் கட்டை உருட்டி பணம் பறிச்சிக்கிட்டு இருப்பாங்க. உச்சிக்கு பக்கத்துல பாலி (சிலருக்கு அது சுனை சிலருக்கு அது கிணறு எங்களுக்கு அது பாலி) ஒன்னு இருக்கு அங்க அச்சு வெல்லத்தை போடுவோம்,  மரு இருந்தால் அது மறைந்தால் பாலியில் வெல்லம் போடறேன் என்று வேண்டி இருப்பவர்கள் வெல்லத்தை குடுத்தனுப்புவார்கள். நமக்கு அல்லது நமக்கு தெரிஞ்சவங்களுக்கு மரு இருக்கும், மலை ஏற முடியாதவங்க பாலியில் மறக்காம வெல்லத்தை போடவேண்டும் என்று சொல்லி என்கிட்ட வெல்லம் குடுப்பார்கள். நான் மறுக்க முடியுமா?. பாலின்னா என்னன்னு அகரமுதலியில் காணவில்லை. பாலி என்ற சொல் புழக்கத்தில் உண்டு. பாறைகளில் தேங்கியிருக்கும் நீருக்கு பாலின்னு பெயர். கொஞ்சமா இருக்காது நிறைய நீர் இருக்கும். பாறையும் பெரியதாக இருக்கும். சில (எனக்கு தெரிந்து நிறைய இடங்களில்) இடங்களில் அது சீக்கிரம் வற்றாது, ஆண்டு முழுவதும் இருக்கும், மழை நீரே அதன் ஆதாரம்.

பாலிக்கிட்ட காத்து சில்லுன்னு வீசும் மலை ஏறி களைச்சு போனவங்களுக்கு அந்த காத்து சுகமா இருக்கும். அங்க நிறைய கடைங்க இருக்கும் அதாவது கயிற்று கடைகள், நிறைய பேர் குச்சி ஐஸ், சாத்துக்குடி, கொய்யா விப்பாங்க. அங்க இருந்து உச்சி வரை ஏற்றமாகவும் ஏற கொஞ்சம் கடினமாகவும் இருக்கும். உச்சியை கொஞ்சம் சீவிவிட்டு கோயில் கட்டியிருப்பாங்க. உச்சியில் கோயில் மட்டும் தான் இருக்கும். முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோயில். அடிச்சிபுடிச்சி சாமியை பார்க்கனும், கூட்டம் அதிகமா இருந்தா கோயிலில் சாமிய கும்பிடாம கோபுரத்துக்கு பின்புறம் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு இறங்குவோம்.
நான் மட்டும் இல்ல என்னைப்போல் நிறைய பேர் இப்படி தான் செய்வார்கள். புரட்டாசி  சனிக்கிழமை கூட்டம் குறைவா இருந்து பார்த்ததில்லை.  புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயிலில் கூட்டம் குறைவா இருந்து நீங்க பார்த்திருக்கிங்க? 2 முறை சாமியை பார்த்து இருக்கேன்.

இறங்கி வரப்ப கொண்டுபோனதெல்லாம் காலியாயிடும் அதனால காசு கொடுத்து வழியில் இருக்கும் கடையில் ஏதாவது தீனி வாங்கி தின்னுகிட்டே வர வேண்டியது தான். அடிவாரம் வந்ததும் நாமக்கட்டி, பூ, பொறி எல்லாம் வாங்கிட்டு வீடு வந்து சேருவோம். நாமக்கட்டிய மட்டும் மறக்காம வாங்கியாறனும், மலைக்கு போயிட்டு வந்து ஒருசந்தி விடுறோம் என்பதற்கு அதான் அடையாளம்.  சாமந்திப்பூ தான் முதலில் வாங்கும் வழக்கம் அதன் விலை அதிகமானதாலும் வரத்து குறைந்ததாலும் இப்ப எல்லாம் கதம்பம் தான், சில முறை துளசி மாலையும் வாங்கி வந்ததுண்டு. 1 மட்டும் வாங்குனா அது வண்டிக்கு போகும். வாங்கிய பூவில் 1 முழம் நாம வந்த வண்டிக்கு. சாமி கும்பிட்டுவிட்டு ஒருசந்தி இருக்கறவங்க எல்லாம் முதலில் தின்போம் (பசியோட இருக்காங்கல்ல). மலை ஏறவில்லை என்றாலும் ஒருசந்தி இருக்கலாம். பழம் பொறி மட்டும் தின்னாலும் அவங்க ஒருசந்தி இருக்கறதாதான் எடுத்துக்கனும், மலை ஏறுபவனும் அதை தின்னுகிட்டு தான் மலை ஏறுவான் என்பதால் அது சாமி குத்தம் ஆகாது இஃகி.  நாம வர தாமதம் ஆகிவிட்டால் சில முறை நாம இல்லாமலேயே சாமி கும்பிட்டுவிட்டுவார்கள் அப்ப கடும் கோபம் வரும், அது மலை ஏறி வந்த குதூகலத்தையே கெடுத்துடும். அப்படி இரு முறை ஆனதால் எப்பவும் நான் வந்த பிறகு தான் சாமி கும்மிடனும் என்று உறுதி வாங்கிட்டுதான் கிளம்பறது வழக்கம். அவங்கள நம்பமுடியாதுன்னு 8-9 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வர்ற மாதிரி தான் கிளம்பறது. சில முறை அசந்து தூங்கிட்டா . மலை ஏறுனா வீட்டுக்கு வர 10 மணிக்கு மேல ஆகிடும், நாம வரும் வரை ஒருசந்தி விட காத்திருக்கமாட்டார்கள் என்ற அனுபவ பாடம் உள்ளதால், மலை ஏறாம அடிவாரத்துல இருக்கும் அனுமார் கோயிலோட வந்துடுவேன் ஆனா பழம் , பொறி, பூ, நாமக்கட்டி எல்லாம் மறக்காம வாங்கிவந்துடுவேன் இஃகி.

சாமி படையலில் மஞ்ச பூசனிக்காய்  கூட்டு, வாழைக்காய் பொரியல், அப்புறம் எதாவது ஒரு பொரியல் அனேகமா அவரையா இருக்கும், நெய், பருப்பு போன்றவை இருக்கும். இந்த மாதிரி சாமி கும்பிடும் போது அல்லது வீட்டில் விருந்து வைத்தால் மட்டுமே நமக்கு பொரியல், கூட்டு எல்லாம் கிடைக்கும். பெருமாளுக்கு கோவிந்தா! கோவிந்தா!

செவ்வாய், ஜூலை 10, 2012

கண்ணதாசன் கவிஞன் அல்ல

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என முத்தமிழும் அறிந்த வித்தகர் (யாருங்க அந்தாளு?) ஒருவர் கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

புதன், பிப்ரவரி 01, 2012

தமிழ் விக்கிப்பீடியா போட்டி

நீங்க Digital camera வைத்திருப்பவரா? நீங்க தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க அருமையான வாய்ப்பு. நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை தமிழ் விக்கிப்பீடியா ஊடகப்போட்டி ஒன்றை அறிவிச்சிருக்காங்க. இதில் தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் போன்றவற்றை பதிவேற்றலாம். போட்டின்னா காசு இல்லாமலா?
  • முதல் பரிசுக்கு 200 அமெரிக்க டாலர். 
  • இரண்டாம் பரிசுக்கு 100 அமெரிக்க டாலர்.
  • மூன்றாம் பரிசுக்கு 50 அமெரிக்க டாலர்
  • ஆறுதல் பரிசுகள் இரண்டு,  அவற்றிற்கு தலா 25 அமெரிக்க டாலர்
  • மூன்று பேருக்கு தொடர் பங்காளிப்பாளர் பரிசு,  அவற்றிற்கு தலா 100 அமெரிக்க டாலர்
  • சிறப்புப் பரிசு ஒன்றிற்கு 150 அமெரிக்க டாலர்
மொத்தம் 850 அமெரிக்க டாலருக்கு பரிசுகள்.
உங்களிடம் இருக்கும் பழைய புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் போன்றவற்றை பதிவேற்றலாம். உங்களிடம்  Digital camera இல்லையா? கவலையை விடுங்க ஒலிக்கோப்புகளாகவும் பங்களிக்கலாம். உதாரணத்துக்கு சென்னை என்பதை சென்னை, ஷென்னை, க்ஷென்னை  இப்படி பலவிதமா உச்சரிப்பாங்க (பலுக்க). சிலருக்கு சரியான உச்சரிப்பு தெரியாது. அப்படிபட்டவர்களுக்கு ஒலிக்கோப்பு உதவும். மாம்பழம் என்பதன் உச்சரிப்பு நிறைய பேருக்கு சரியா வராது. ஒலிக்கோப்பு இதை சரிசெய்யும். இது தற்காலத்து மட்டும் அல்ல, உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் விக்கிப்பீடியாவை பார்க்கறாங்க. இந்த ஒலிக்கோப்புகள் குறிப்பா அயல் மாநில, நாட்டில் உள்ள தமிழருக்கு நிறைய பயன்படும். ஏதாவது சந்தேகமா இந்த சுட்டியில் கேக்கலாம்.

போட்டி முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு. என்ன கோதாவில் இறங்கிட்டிங்களா? பரிசு உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்.

புதன், ஜனவரி 25, 2012

சிறு குறிப்புகள் - 01 25 2012

எனக்கும் சமையல் கட்டுக்கும் காத தூரம். சில குறிப்புகள் எனக்கு தெரிஞ்சிடுச்சி, அதை யார்கிட்டயாவது சொல்லலைன்னா என் மண்டை வெடிச்சிடும், அதான் இங்க இஃகி இஃகி.

வீட்டுல சூடம் வாங்கி வைத்திருப்போம். கொஞ்ச நாள் ஆனா அது கரைய தொடங்கும்.  குப்பியில் போட்டு மூடி வைத்திருந்தாலும் கரைவதை தடுக்க முடியாது. சூடம் கரைவதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. குப்பியில் சில மிளகுகளை போட்டு மூடி வைத்தால் சூடம் கரையாது.

காய்கறிகளை வாங்கி அதை குளிர்சாதன பெட்டியில்  வைத்தாலும் விரைவில் அது கெட்டு விடும். இதை தவிர்க்க காய்கறிகளில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துவிட்டு (தாளில் காய்கறிகளை ஒற்றி எடுத்தால் ஈரப்பதம் நீங்கிவிடும்) தாளில் சுற்றி வைத்தால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.


சிலர் ஆனா ஊன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பார்கள்.  நிறைய தேங்காய்கள் (உடைந்த தேங்காய் மூடி தான்) சேர்ந்து விடும். அந்த தேங்காயை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். சமையலுக்கும் எவ்வளவு தான் பயன்படுத்தறது, மீதியை என்ன செய்வது? தேங்காய் மூடியை நன்றாக துருவி தேங்காய் துருவல்களை எடுத்து அதை நெகிழி பையில்(plastic bag) போட்டு நன்றாக மூடி குளிர்சாதன பெட்டியின் உறையவை (freezer - குளிர்சாதன பெட்டியின் மேல் கதவுடன் பனிக்கட்டி செய்யக்கூடிய ஒரு பகுதி இருக்குமே அதான்) இல் வைத்துவிடவும். தேவையான போது பையில் உள்ள தேங்காய் துருவலில் தேவையான அளவு எடுத்து அதை நுண்ணலை சூடாக்கல் கருவியில் (microwave) வைத்து சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம், நுண்ணலை சூடாக்கல் கருவி இல்லாதவர்கள் அல்லது அதை பயன்படுத்துவதை விரும்பாதவர்கள் வாணலியில் சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம். சூடாக்காமலும் தேங்காய் துருவலை பயன்படுத்தலாம் ஆனால் அப்படி பயன்படுத்தினால் திரி திரியாக (திப்பி திப்பியாக) தேங்காய் இருக்கும் சுவையே இருக்காது, சூடாக்கி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

திங்கள், ஜனவரி 09, 2012

அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு

நவம்பர் 2012ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் சனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுவார் /போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து நிற்க ஆளை தேர்ந்தெடுக்கும் பணியில்(உட்கட்சி தேர்தல்) குடியரசு கட்சி உள்ளது.

உட்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று யார் ஒபாமாவை எதிர்க்க போகிறார் அப்படிங்கிற எதிர்பார்ப்பு தினமும் கூடிக்கிட்டே இருக்கு. நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. இவர் தான் முன்னனியில் இருக்காருன்னு யாரையும் சொல்லமுடியலை. ஆனா சீரா எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  மிட் ராம்னி முன்னனியில் இருக்கார் ஆனா அவர் ஆதரவு பெரிய அளவில் இல்லை அதனால அவர் தான் வெற்றி பெறுவார் அப்படின்னு யாராலும் சொல்ல முடியலை. "Anybody but Romney" - ராம்னிய தவிர யாரு வேண்டுமானாலும் சரி- அப்படின்னு பலம் வாய்ந்த கிருத்துவ பழமைவாதிகள் குழு குடியரசு கட்சியில் இருக்கு. ராம்னிக்கு மாற்றா வேற ஆள அவங்க தேடறாங்க, அவங்க யாராவது ஒருத்தரை ஆதரிக்க முடிவு எடுத்தா ராம்னி காலி.

ராம்னியும் கிருத்துவர் தான் ஆனா அவர் மொர்மன் என்ற பிரிவை சார்ந்தவர். அது தான் அவருக்கு சிக்கலே. பெரும்பாலான குடியரசு கட்சிகாரர்கள் சீர்திருத்த சபையை(புரட்டதசுட்டன்\ Protestant) சார்த்த கிருத்துவர்கள். எவங்கலிசம் , பாப்டிசம், பெத்தகொசுத்தே,  மற்ற பிரிவுகள் எல்லாம் இதுல வருது. இவங்களுக்கு மொர்மன் பிரிவை சுத்தமா பிடிக்காது. சில பேர் அவங்க கிருத்துவர்களே அல்ல அப்படிப்பாங்க.

டீ பார்ட்டி
டீ பார்ட்டி குழு என்று திடீர்ன்னு ஒன்று 2009 வாக்குல குடியரசு கட்சியில் முளைத்தது. இவர்களை ஆரம்பத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட குடியரசு கட்சிக்காரங்க கண்டுக்கலை. ஆனா இவங்களை மீறி கொட்டை போட்ட ஆட்களால் பிரைமரி எனப்படும் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. இவங்க பலம் 2010 காங்கிரசு மற்றும் செனட் தேர்தலில் நன்கு வெளிப்பட்டது. இப்ப குடியரசு கட்சி கீழவையான காங்கிரசில் பெரும்பான்மை பெற்று இருக்குன்னா அதுக்கு டீ பார்ட்டி குழு தான் காரணம்.

ஆரம்பத்தில் இருந்த நிலை

டீ பார்ட்டி முதலில் மிச்சால் பாக்மன் அவர்களை ஆதரித்தது. அவர் முன்னனியில் இருந்தார், ரிக் பெர்ரி வந்தவுடன் எல்லாரும் அவரை ஆதரித்ததால் மிச்சால் பாக்மன் முன்னிலை தகர்ந்தது. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட குடியரசு கட்சி போட்டியாளர்க்கிடையேயான தருக்கத்தில் மோசமாக செயல் பட்டதால் (பலமுறை) இவரின் முன்னனி தகர்ந்தது. தருக்கத்தில் 9-9-9 என்று வரி விதிப்பு பற்றி எளிமையாக விளக்கியதால் கெர்மன் கெய்னுக்கு ஆதரவு பெருகியது. இதை அவரே எதிர்பார்க்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இவரின் ஆதரவு குறைந்தது. ராம்னிக்கு எதிரா உறுதியான வேட்பாளர் வேண்டும் என்பதால் நியுட் கிங்ரிச்க்கு ஆதரவு கூடியது. ஆரம்பத்தில் இவரின் போக்கு பிடிக்காமல் இவரின் குழுவில் பலர் விலகியதும் நடந்தது. இவரு போட்டி போடறது தண்டம் என்று பலர் நினைத்திருக்க திடீர் என்று இவருக்கு ஆதரவு பெருகியது.  பிரடி மே என்ற வீட்டு கடன் வழங்கும் நிறுவனத்திற்கு ஆலோசனை சொன்னதற்கு கூலியாக 1.5 மில்லியன் டாலருக்கு மேல் பெற்றது வெளியில் வந்ததால் இவரின் ஆதரவு குறைந்தது (அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டதில் இவ்வகையான வீட்டுக்கடன் கொடுத்த நிறுவனங்களும் காரணம், சகட்டு மேனிக்கு எல்லாருக்கும் கடன் கொடுத்தா கொடுத்த காசு திரும்பி வருமா), ராம்னிக்கு மாற்றாக யாரை ஆதரிக்கலாம் என்று பழமைவாதிகள் தடுமாறிக்கிட்டு இருந்தாங்க. ரான் பவுல் என்பவரை ஆதரிப்பது கடினம். ரான் பவுல் சுதந்திரவாதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவர். தாராண்மியவாத கொள்கையை கடைபிடிப்போர் அவரின் ஆதரவாளர்கள், இவர்கள் பெரும்பான்மையாக இல்லாவிடிலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். திடீர்ன்னு பென்சில்வேனியா மாநிலத்தின் சார்பாக அமெரிக்க மேலவையில்  செனட்டராக இருந்த ரிக் சாண்ட்ரமுக்கு ஆதரவு பெருகியது.

அயோவா
இந்நிலையில் உட்கட்சி தேர்தல் முதலில் நடைபெறும் அயோவா மாநிலத்தின் caucus நெருங்கி வந்தது.  caucus என்றால்  வேட்பாளரை தீர்மானிக்க சந்திக்கும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் என சொல்லலாம். அயோவா மாநிலத்தில் நடந்த வாக்கெடுப்பில் ராம்னி முதல் இடத்தையும் ரிக் சாண்ட்ரம் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள். வேறுபாடு 8 வாக்குகள் மட்டுமே. ரான் பவுல் மூன்றாவது இடத்தை பிடித்தார். ராம்னி 30,015 சாண்ட்ரம்  30,007, ரான் பவுல் 26,219 வாக்குகளும் பெற்றனர். 4வது இடம் பிடித்த கிங்ரிச் ராம்னிக்கு எதிராகவும் ரான் பவுலுக்கு எதிராகவும் தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளார். 5வது இடம் பிடித்த ரிக் பெர்ரி வாங்கடா தென் கரோனிலாவுக்கு (இது பழமைவாதிகள் நிறைந்த மாநிலம்) அங்க பார்க்கலாமுன்னு சொல்லிட்டார். 6வது இடம் பிடித்த மிச்சால் பாக்மன் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

 அயோவுக்கு அடுத்து
இந்நிலையில் அயோவாவில் கலந்துக்காத ஜோ ஹண்ட்சுமேன்  நியு ஹாம்சுபியர் மாநில உட்கட்சி தேர்தலில் கலந்துக்கறார். இவரும் மோர்மன் பிரிவை சார்ந்த கிருத்துவர். பழமைவாதிகளின் வாக்குகள் பல்வேறு வேட்பாளர்களுக்கு சிதறியதால் தான் ராம்னி அயோவாவில் வெற்றி பெற்றார் என்பதால் பழமைவாதிகள் அனைவரும் ஒரே வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என சில பழமைவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் சாண்ரோமை ஆதரிப்பது சிறந்தது எனவும் மற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளனர்.  நியு ஹாம்சுபியர் தேர்தலில் ராம்னி வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இவர் பக்கத்து மாநிலமான மாசசூட்ச்சசின் ஆளுனராக இருந்தவர் அதனால் இப்பகுதியில் இவருக்கு மற்றவர்களை விட செல்வாக்கு அதிகம். ஆனால் அவரின் உண்மையான சோதனைக்கட்டம் அதற்கடுத்த தேர்தல்களில் தான் இருக்கிறது.

வர்ஜீனியா கூத்து
வர்ஜீனியா மாநில தேர்தலில் கலந்துக்க மிட் ராம்னி, ரான்  பவுல் ஆகிய இருவர் மட்டுமே தகுதிபெற்று இருக்காங்க, மற்றவங்க எல்லாம் ஆட்டத்துக்கு சேர்த்துக்கப்படலை. கிங்ரிச் இப்ப வாசிங்டன் டிசி பெருநகரத்தின் எல்லையில் வர்ஜீனியாவில் மெக்லீன் என்ற இடத்தில் 1999 ல் இருந்து வசிக்கிறார்.வர்ஜீனியா குடியரசு கட்சி சட்டப்படி 10,000 வர்ஜீனியா வாக்காளர்களின் கையெழுத்தை பெற்று குடுத்திருந்தால் மட்டுமே உட்கட்சி தேர்தலில் கலந்துக்கமுடியும். இதை உரிய காலத்திற்குள் செய்தவர்கள் இருவர் மட்டுமே. செய்யாத மற்றவங்க இப்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்காங்க.

குடியரசு கட்சி ஆதரவாளரான என் நண்பனிடம் யாருடா வருவாங்க அப்படின்னு கேட்டேன். மிட் ராம்னி தான் கடைசியில் வெற்றிபெறுவார் பாரேன் அப்படின்னான். பார்க்கலாம். எனக்கென்னமோ நம்பிக்கையில்லை, 2008 குடியரசு கட்சி உட்கட்சி தேர்லை மறக்கமுடியுமா?