வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 13, 2017

சொற்களின் சேர்க்கை - பகுதி ஒன்று

இலக்கணத்தில் தொடர்ச்சியாய் எல்லார்க்கும் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது புணர்ச்சி இலக்கணம்தான்.
தமிழைத் தலைகீழாய்க் கற்று முடித்தாலும் புணர்ச்சி இலக்கணத்தில் தெளிந்த அறிவைப் பெற்றிராவிட்டால் தவறிழைத்துவிடுவீர்கள்.
தனியாக அமர்ந்து புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றுத் தேர்வது என்று முடிவெடுத்தாலும் மேற்செல்லும்போது நாமே நம்மைக் கைவிட வேண்டி வரும்.
முகநூல் பதிவுபோன்ற ஓர் உரையாடல் இழையில் புணர்ச்சி இலக்கணத்தைக் கற்பது மிகச் சிறப்பான கூட்டுப் படிப்பாக அமையும் என்று கருதுகிறேன்.
தமிழ் இலக்கணத்தை எப்படிக் கற்க வேண்டும், தெரியுமா ? ஐயத்திற்கிடமின்றி அடிப்படையிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
முதலில் ஒலிப்புகளைத் தெளிவாய் அறிய வேண்டும். அவ்வொலிப்புகள் எழுத்துகளாய் எவ்வாறு குறியிடப்படுகின்றன என்பதை அறிய வேண்டும்.
ஒலிப்பின்படி எழுத்துகள் என்னென்ன என்று அறிந்து, நம் மொழியின் ஒலிகளுக்கேற்ற எழுத்துகளை எழுதக் கற்றுக்கொள்கிறோம்.
இப்போது உங்களுக்கு ஒலிப்புகள் தெரியும். அதிலேயும் நணன – ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்தி ஒலிப்பது என்பதில் குழப்பம் வரும்.
எடுத்ததும் ந என்று சொல்லுங்கள். அதுதான் நகரத்தின் ஒலி.
ணன-கரங்கள் ஒருபோதும் ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாக மாட்டாதவை. அதனால் அவை ந என்று அதே ஒலிப்பில் தனக்கு முன்னால் வரும் எழுத்துக்கேற்பவும் தனக்குப் பின்னால் வரும் எழுத்துக்கேற்பவும் ஒலித்துக்கொள்ளும். அவ்வளவுதான்.
நகர எழுத்துகள் சொல்லுக்கு நடுவிலோ கடைசியிலே எங்கேயும் வரமாட்டாதவை. அப்படி வந்தாலும் செய்ந்நன்றி, தந்நலம், வெரிந் போன்று சிற்சில சொற்களே உள்ளன.
அந்நியன், அநாதை, அநியாயம் போன்றவை வடசொற்கள். நகரங்கள் மொழி நடுவில் வரமாட்டா என்ற கொள்கையுடையவர்கள் அன்னியன், அனாதை, அனியாயம் என்று எழுதுவார்கள்.
சொல்லுக்கு முதலாவது நகர ஒலிப்பு. சொல்லுக்கு நடுவிலும் கடைசியிலும் தோன்றுவது ணன-கர ஒலிப்பு. இப்படிப் பல நுண்மைகள் உள்ளன.
இப்போது நாம் இத்தொடரில் புணர்ச்சி இலக்கணத்தைத்தான் தொடப்போகிறோம்.
நமக்கு வழிகாட்டியாக நன்னூலை வைத்துக்கொள்ளலாம். அந்நூற்படி புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றுக்கொண்டாலே நாம் தமிழில் செழுமை அடைந்துவிட்டதாக இறுமாப்பு அடையலாம்.
நம் மொழிக்குத் தொன்மையான இலக்கண நூல்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவை தோன்றியிருக்கின்றன. அவை அனைத்தையும் நாம் வழிகாட்டியாகக் கொள்வதைவிடவும் தொல்காப்பியமோ நன்னூலோ சிறப்பாக இருக்கும்.
தொல்காப்பியத்தை அடைய நாம் இன்னும் பல கற்றல் படிகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதால் காலத்தால் சற்றே பிந்திய நன்னூலை எடுத்துக்கொண்டோம்.
எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதைத் தலைகீழாய் நின்று மனப்பாடம் செய்தாலும் புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றால் ஒழிய நமக்கு விடிவில்லை.
புகட்டும்போதே வாந்தியெடுக்கக்கூடியவாறு இருப்பது இலக்கணம் என்ற கற்பனையிலிருந்து வெளியே வாருங்கள்.
புணர்ச்சி இலக்கணம் கடினமே இல்லை.
பாலும் தண்ணீரும் சேர்ந்தால் என்னாகும், எண்ணெய்யும் தண்ணீரும் சேர்ந்தால் என்னாகும் என்பது நமக்குத் தெரியும்.
பாலும் தண்ணீரும் சேரும். எண்ணெய்யும் தண்ணீரும் சேராது.
மொழிச்சொற்களுக்கிடையிலும் இதைப் போன்றே சேர்க்கையும் சேராமையுமான இயற்கை காணப்படும். அதை இழையிழையாக விளக்குவதுதான் புணர்ச்சி இலக்கணம்.
ஓர் ஒலி தனித்து ஒலிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகள் நிரல்பட ஒலித்தால் அங்கே சொல் தோன்றுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்ந்து நடந்தால் வாக்கியம் பிறக்கிறது. வாக்கியம் என்பதைத் தமிழில் சொற்றொடர் (சொற்களின் தொடர் வரிசை) என்பார்கள்.
ஓரெழுத்தோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ கூடி எவ்வாறு சொற்களைத் தோற்றுவிக்கின்றன என்பதைச் சொல் இலக்கணம் கற்றுத் தருகிறது.
இரண்டு சொற்கள் எவ்வாறெல்லாம் சேரலாம் சேரக்கூடாது என்பதைப் புணர்ச்சி இலக்கணம் கற்பிக்கிறது.
புணர்ச்சி என்றால் சேர்க்கை. தனித்துக் கிடப்பவற்றால் ஆனதில்லை மொழி. சேர்ந்து சேர்ந்து சேர்ந்து சேர்ந்து ஆவதுதான் மொழி.
சின்ன சின்ன ஒலிகளின் சேர்க்கை. சொற்களின் சேர்க்கை. சொற்றொடர்களின் சேர்க்கை. இதுதான் மொழியின் கட்டமைப்பு.
புணர்ச்சி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் எப்படிச் சேரும் என்பதை விளக்கும் இயல். அதைத்தான் அடிமுதல் நுனிவரை கற்றுத் தெளியப் போகிறோம்.
- தொடரும்
- கவிஞர் மகுடேசுவரன்
https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/1672296679475481

சனி, நவம்பர் 26, 2016

வெண்பா ஆசை என்னையும் பிடித்துக் கொண்டது.

வெண்பா ஆசை என்னையும் பிடித்துக்  கொண்டது. அதனால் கூகுள் ஆண்டவர் கிட்ட வெண்பா இலக்கணம் கேட்டேன். தெளிவா ஏதும் எனக்கு கிடைக்கவில்லை, அதனால் தேடுன்னு தேடி முழு இலக்கணத்தையும் இங்க எழுதி உள்ளேன்.

தமிழ் விக்கிப்பீடியா மூலம் தெளிவா கத்துக்கிட்டேன்
அதாவது வெண்பா 2 முதல் 12 அடிகள் வரை இருக்கலாம்.  ஒவ்வொரு அடியிலும் 4 வார்த்தைகள் இருக்கனும் ஆனா கடைசி அடியில் 3 வார்த்தை தான் இருக்கனும்.
திருக்குறள் 2 அடியில் உள்ள வெண்பா.

ஈரசைச்சீர் வரும். மூவசையில் கனிச்சீர் (தேமாங்கனி, ..) வராது.  காய்ச்சீர் மட்டும் வரும்.
ஈரசைச்சீர்கள் - தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்
மூவசைசீர்கள் - தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்  மட்டுமே வெண்பாவில் வரும்.

காய்ச்சீருக்கு அடுத்து நேர் அசை தான் வரனும் அதாவது தே.மாங்.காய் இதற்கு அடுத்து தே.மா அல்லது கூ.விளம் தான் வரனும்.

தளை தட்டுது என்பார்கள்.  தளை தட்டாமல் இருக்கனும். வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
  1. இயற்சீர் வெண்டளை - மாச்சீருக்கு அடுத்து நிரை அசையே வருனும். அதாவது தேமா, புளிமாவுக்கு அடுத்து கூவிளம், கருவிளம், கூவிளங்காய், கருவிளங்காய் தான் வரனும் அதே மாதிரி விளச்சீருக்கு அடுத்து நேர் அசையே வரனும் அதாவது கூவிளம், கருவிளம் என்பவற்கு அடுத்து தேமா, தேமாங்காய், கூவிளங்காய் தான் வரனும்.
  2. வெண்சீர் வெண்டளை - காய்சீருக்கு அடுத்து நேரசையே வரனும்.  அதாவது மூவசைச்சீர்களான காய்ச்சீருக்கு அடுத்து தேமா, கூவிளம் தான் வரனும்.
மாமுன்நிரை விளமுன்நேர் காய்முன்நேர் என்ற இலக்கண நெறிகளை மனதில் கொண்டால் தலை அல்ல தளையை பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஈற்றுச்சீர் அதாவது இறுதி அடியில்(வரி) உள்ள கடைசி சொல் நாள், காசு, மலர், பிறப்பு  என்பது மாதிரி முடியவேண்டும்.

அசை பிரிப்பது எப்படி?
மெய் எழுத்து இருந்தால் அது தான் கடைசி
கப் , காக், வாய்க் - நேரசை
விளம், டமாம், மலர்க்   நிரையசை

கபாலி  கபா.லி - நிரை. நேர்
மாதம் மா.தம் ,  வேண்டு வேண்.டு - நேர் . நேர்


அதாவது நெடிலுக்கு முன் குறில் வரலாம். அது நிரை ஆகிவிடும். நெடிலுக்கு பின் குறில் வராது. மெய் எழுத்து (புள்ளி வைத்த எழுத்து) வரலாம்.

நெடில் வந்தால் அதனுடன் அசை பிரிப்பு நின்று விடும் & புள்ளி வைத்த எழுத்து (மெய் எழுத்து) உடன் அசை பிரிப்பு நின்று விடும்
காட்டு :- வாண்டு  , காதணி -வாண்.டு  ,  கா.தணி


வெண்பாவுக்கான இலக்கண நெறி - மாமுன் நிரை விளமுன் நேர் காய்முன் நேர் என்பதாகும்.
மாமுன் நிரை - தேமா, புளிமாவிற்கு அடுத்த சொல் நிரை அசையில்  ஆரம்பமாக\ இருக்க வேண்டும்,
விளமுன் நேரும் - கூவிளம், கருவிளம் போன்றவற்றிற்கு அடுத்த சொல் நேர் அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும். காய் சீராக இருந்தாலும் அது கூவிளங்காய், கருவிளங்காயில் ஆரம்பமாக கூடாது.
காய்முன் நேரும் வரும். - மூவிசை சீர்களான காய்ச்சீருக்கு அடுத்த  சொல் நேர் அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும்.

திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி யென்றோதுந் தையலாள் மென்றோள்
அமையந்தி யென்றோ ரணங்கு

என்ற நளவெண்பா பாட்டை எடுத்துக்கொள்வோம். இது எப்படி அசைகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த சொற்கள் எந்த சீர் என்பதையும் பார்ப்போம். குறள் வெண்பா தான் எடுத்துக்காட்டுக்கு சுலபம் என்றாலும் நான் நேரிசை வெண்பாவான நளவெண்பா பாட்டை எடுத்துக்கொண்டுள்ளேன்.

திசை| முகந்| த          வெண்| கவி| தைத்           தேர்| வேந்| தே        உன்| றன்
நிரை நிரை நேர்            நேர் நிரை நேர்               நேர் நேர் நேர்         நேர் நேர்
கருவிளங்காய்          கூவிளங்காய்                    தேமாங்காய்           தேமா


இசை| முகந்| த        தோ| ளுக்       கிசை| வாள்         வசை| யில்
நிரை நிரை நேர்       நேர் நேர்        நிரை நேர்              நிரை நேர்
கருவிளங்காய்        தேமா              புளிமா                   புளிமா

தமை| யந்| தி             யென்| றோ| துந்          தை| யலாள்      வென்| றோள்
நிரை நேர் நேர்         நேர் நேர் நேர்               நேர் நிரை           நேர் நேர்
புளிமாங்காய்           தேமாங்காய்                கூவிளம்            தேமா

அமை| யந்| தி         யென்| றோ    ரணங்| கு
நிரை நேர் நேர்      நேர் நேர்        நிரை பு
புளிமாங்காய் தேமா      பிறப்பு


பிறப்பு  & காசு ஆகியவற்றில் உள்ள இறுதி அசையை நேர்பு என்பர்
பிறப்பு  =    பிறப்| பு - நிரை நேர்பு 
காசு    =      கா| சு - நேர் நேர்பு
இறுதியில் குற்றியலுகரம் வரவேண்டும் ஆனால் அது சு வு லு பு உ ளு ழு னு ணு மு ஙு நு து   போன்ற "உ"கர குற்றியலுகரமாக இருக்க வேண்டும்

நாள், மலர் போன்றவை நேர்,  நிரை அவ்வளவு தான். இதற்கு சிறப்பு விதிகள் இல்லை.   அதாவது 
நாள் - நேர் அசை;          காட்டு -    புல் பல் பால் மா க . 
மலர் -நிரை அசை;        காட்டு-     மது இதே அல்லி மல்லி பொழில் கலாம் 

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் - என்ற குறளையும்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவையிரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - என்ற குறளையும் அசை பிரித்துப் பாருங்கள்.


விக்கி மூலத்தில் நளவெண்பா உள்ளது.

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

குத்திக் காட்டியது - என் தமிழ்!!!

மின்னஞ்சலில் வந்தது இங்கே இடுகையாக
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry '
தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks '
ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy
Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle'
என்று …!
 
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai'
என்று …!
 
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I
Love You' என்று …!
 
இரவில்
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள்
'அம்மா' என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்
                                           -- நம்மை போல் ஒரு தமிழன்

நான் தமிழறிவு நிறைந்தவன்

என்னடா சுய தம்பட்டமா இருக்கேன்னு பார்க்கறீங்களா. இல்லைங்க அது என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் சொன்னது. அவர் அப்படி சொன்னதை நம்ம வலையில் கூட ஏத்தலைன்னா எப்படி? இஃகி இஃகி.


எங்க அலுவலகத்தில் தமிழ் பேசறவங்களும் உண்டு (7 பேர் இருக்கோம்). எல்லா இடத்துலயும் தெலுங்குகாரங்க கண்டிப்பா இருப்பாங்க, பல இடங்களில் அவங்க மட்டும் இருப்பாங்க.

நாங்க தமிழில் தான் பேசிக்குவோம். அதாவது தமிழ்நாட்டுல பேசற மாதிரி தமிலிங்கிலிஸ். அரசியல் அது இதுன்னு பேசினாலும் அரசியல் தான் 70 விழுக்காடு இருக்கும். மீதி மத்த சங்கதிகளை பற்றி இருக்கும். இது எல்லா இடத்துலயும் நடக்கறதுதான அப்படிங்கிறிங்களா.


எங்களில் தமிழ் சொற்களை அதிகமா பயன்படுத்தறவன் நான். அதாவது செகண்ட் என்ற நற்தமிழ் சொல்லுக்கு பதிலா வினாடி என்ற சொல்லை நான் பயன்படுத்தி பேசுவேன். எப்பவும் அப்படி கிடையாது பல முறை நற்றமிழ் தான். ஆனா மத்தவங்க எப்பவும் நற்றமிழ் தான்.  இது ஒரு காட்டுதான் இது மாதிரி பல நற்றமிழ் சொற்களை நாங்கள் எங்கள் பேச்சில் புழங்குவோம். இது என்ன பெரிய மேட்டர் , இது நார்மல் தான அப்படிங்கிறிங்களா அதுவும் சரிதான்.


ஒரு முறை அந்த விளம்பரம் பார்த்தீங்களா அப்படின்னு கேட்டேன். எங்களில் மூத்தவர் நாம அட்வர்டைஸ்மெண்ட் என்று தான் சொல்லுவோம் இவன் பாருயா விளம்பரம் அப்படிங்கறான் என்று சொல்லிவிட்டு எங்க அலுவலகத்திலேயே நான் தான் தமிழறிவு நிறைந்தவன் என்று சொல்லிட்டார்.
எனக்கு ஒரே கூச்சமா போயிடுச்சி, அந்த கூச்சம் போக ஒரு இடுகை எழுதிட்டேன், எல்லாம் விளம்பரம் தான் இஃகி இஃகி. .



எங்க அலுவலகத்திலேயே நான் தான் தமிழறிவு நிறைந்தவன் என்று தான் தலைப்பு இருக்கனும் ஆனா தலைப்பு பெரிசா இருக்குமேன்னு தான் சின்னதா நான் தமிழறிவு நிறைந்தவன் என்று வைத்துவிட்டேன்.

செவ்வாய், ஜூன் 29, 2010

நண்பர் தன் குழந்தைக்கு தமிழ் பெயர் வைத்த கதை

நண்பர் கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர். இதுக்கு காரணம் அவரோட நண்பர்களில் பெரும் பகுதி கொல்டிங்க என்பதும் காரணம். கொல்டிங்க கூட அரசியல் பேசறப்ப தமிழ்நாட்டை விட்டு கொடுக்க முடியுமா? எப்ப வாய்ப்பு கிடைத்தாலும் ஆந்திராவையும் ஐதராபாத்தையும் வாருவதும் சென்னையை தூக்கிபிடிப்பதும் அவர் வேலை. அதே போல அவர்களும் தமிழ்நாட்டை பற்றி பேசி இவரை வம்பு பண்ணுவதும் வழக்கம்.

தன்னுடைய பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பதாக முடிவு செய்திருப்பதாகவும் தனக்கு நிறைய தமிழ் பெயர்கள் தெரியாததால் நல்ல பெயர் இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார். சின்ன பேரா இருக்கனும் என்பது நிபந்தனை. நானும் எனக்கு தெரிந்த சில பெயர்களை சொன்னேன். சில என்றால் 5 பெயர்கள் தான். எவ்வளவு தான் யோசிச்சாலும் தமிழ் பெயர்கள் நினைவுக்கு வரலை. இணையத்தில் தேடினாலும் எல்லாம் தமிழர்கள் வைக்கும் பெயர்களாக இருக்கே தவிர தமிழ் பெயர் குறைவு. நாம நிறைய கொடுத்தா தான அவர் அதில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும். நாம கொடுக்கறதே குறைச்சலா இருந்தா எப்படி? என்னடா தமிழ் பெயர் வைக்கறேன்னு ஒருத்தர் சொல்லறார் அவருக்கு உதவமுடியலையேன்னு எனக்கு விசனம். நல்ல தமிழ் பெயர் கிடைக்கலைன்னா தமிழ் பெயர் வைக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு நானும் எனக்கு தெரிந்த மக்களிடம் எல்லாம் தமிழ் பெயர் கேக்கறதே வேலையாப்போச்சு. என் முயற்சிக்கு வெற்றி கிடைக்கலை.

தமிழில்  பெயர் வைக்கனும் என்று ஆசைப்பட்டாலும் பெயர்கள் கிடைக்காமல் பெரும்பான்மை மக்கள் போல் தமிழல்லாத பெயர் வைப்பவர்கள் எத்தனை பேரோ?

இந்தக்குறையை போக்குவதற்காக தமிழ் பெயர்களுக்கான இணையதளத்தை இரவிசங்கர் உருவாக்குவதாக சொன்னார்.  இன்னும் அந்த தளம் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்.

நண்பரின் பக்கத்து வீட்டுக்காரரும் தமிழ் பற்றாளர். அவரும் இவருக்காக பெயர் வேட்டையை நடத்தினார். அவர் தன் தங்கமணியிடம் சில பெயரை சொல்லுவார் அவர் அதை கேலி பேசுவார்...

பக்கத்துவீட்டுகாரரின் தங்கமணி அவர் போல் தமிழ் பற்றாளர் எல்லாம் கிடையாது. அதே போல் தமிழ் எதிரியும் கிடையாது.  இவர் தமிழ் தமிழ் என்பதை கேலி பண்ணுவதே அவர் வேலை. இவர் சில பெயர்களை சொல்ல அதை அவர் கேலி பண்ணுவதுமாக நாட்கள் போய்கிட்டிருந்தது. இதனால் அவங்க இரண்டு பேருக்கும் இடையில் சண்டையே வந்தது. பக்கத்துவீட்டுகாரர் குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதற்கு இவங்களுக்குள்ள அடிக்கடி சண்டை. குழந்தை பிறக்கும் முன் இவர்கள் இந்தியா செல்லவேண்டிவந்தது.

குழந்தையும் பிறந்து பெயரும் வைத்தாயிற்று. ஊர்ல வந்ததும் இவங்க கேட்ட முதல் கேள்வி குழந்தைக்கு என்ன பெயர் என்பது தான்.

சொன்னதும் அவங்க முகம் போன போக்க பார்க்கனுமே. அவருக்கு மட்டுமாபெயரை கேட்ட எனக்கும் என்னடா இதுன்னு தான் இருந்துச்சி. அந்த பெயரை வச்சி அவரை கேலி பண்ணினாலும் மனதுக்கு சங்கடமா இருந்ததென்னவோ உண்மை. என்னய்யா அந்த பெயர் அப்படின்னு கேட்கறீங்களா.



                                                                  ஸ்மித்தா

சனி, மார்ச் 20, 2010

கிராம மாணவர் நலனில் அக்கரையுள்ள தமிழக அரசு

தமிழ் படித்தால் போதுமா? ஆங்கிலம் தெரிந்தால் தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும். நகர மக்களுக்கு பல ஆங்கில வழி கல்வி நிலையங்கள் அதற்கு துணை புரிகின்றன. கிராம மக்கள் கதி? அதோ கதிதான். ஆங்கில வழி கல்வி கற்று வரும் நகர மாணவர்களின் அறிவுக்கு முன் போட்டி போட முடியாமல் திண்டாடுகிறார்கள். கிராம மாணவர்களின் அறிவை எப்படி வளர்ப்பது? அவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி கிடைப்பதன் மூலம் இது கைகூடும். ஆனால் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வசதி குறைவாக இருக்கும். என்ன தீர்வு? அரசே ஆங்கில வழி கல்வி கொடுப்பது தான் ஒரே வழி. இதை கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு ஆங்கில வழி பள்ளிகளை கிராம்ப்புறங்களில் தொடங்க உள்ளது. ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளதை தினமணி செய்தியில் இருந்து அறியலாம்.

தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.

இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.

இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


http://tinyurl.com/yh2lt6v

ஈரோடு மாவட்டத்தில் ​ இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்

ஈரோடு,​​ மார்ச்.​ 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.​ ​

இதுகுறித்து அவர் கூறியது:​ ஈரோடு மாவட்டம்,​​ நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம்,​​ அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது.​ இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.​ வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.​ ​

பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.​ ​ பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த ​ பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும்.​ ​ இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.​ ​

தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும்.​ தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும்.​ ​ இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.​ ​

நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.​ ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.​ இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.​ ​

புதன், மார்ச் 17, 2010

நாஞ்சில் தமிழும் நானும்

கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நாஞ்சில் நாட்டு (அதாங்க கன்னியாகுமரி மாவட்டம்) நண்பன் கிடைச்சான். நாங்கள் எல்லாம் விடுதியில் தங்கி படிச்சதால படிப்பு முடியும் முன் எல்லோர் வீட்டுக்கும் ஒரு முறை போவதுன்னு முடிவு பண்ணி இருந்தோம். நாஞ்சில் நாடான் முறைக்கு அவங்க வீட்டுக்கு போனோம். அவன் நாஞ்சில் நாட்டான் தான் ஆனால் நாங்க அவனோட வீட்டுக்கு போன போது அவங்க நாஞ்சில் நாட்டில் இல்லை, தொண்டை நாட்டுக்கு பக்கமா இருந்தாங்க.

அவனோட பெற்றோர் ஆசிரியர்கள். காலையில் அவங்க பள்ளிக்கு போனதும் எங்க ஆட்டம் ஆரம்பமானது. என்ன ஆட்டமா? அது இந்த இடுகைக்கு தொடர்பில்லாதது மேலும் அது பற்றி சொன்னால் இந்த இடுகையின் போக்கு திசை மாறிவிடும் என்பதால் அதை நான் இங்கு விவரிக்கவில்லை. எத்தனை பேர் பதிவுல இந்த மாதிரி படிச்சிருக்கேன். அதை நான் இங்கு பயன்படுத்தி பதிவு படித்ததின் பலனை அனுபவிக்கறேனே. இஃகிஃகி..

பள்ளியில் இருந்து வீட்டுக்கு முதலில் வருவது அவனோட அப்பா தான். அவங்க அம்மா கொஞ்சம் நேரம் கழித்து தான் வருவாங்க. ஏன்னா அவனோட அப்பா பணியாற்றும் பள்ளி பக்கம், அம்மா பணியாற்றும் பள்ளி சற்று தூரம். அவனோட அப்பா வரும் நேரத்தில் எல்லோரும் நல்ல பசங்களா இருந்தோம். ஒருத்தன் புத்தகம் (கதை புத்தகம் தான்) படிச்சிக்கிட்டிருந்தான் ஒருத்தன் வெளியே பராக்கு பாத்துக்கிட்டு இருந்தான். ஒருத்தன் வீட்டு தோட்டத்தை சுற்றி பாத்துக்கிட்டு இருந்தான்.

மிதி வண்டியில் வீட்டிற்கு வந்தவர் உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தார். என்னிடம் ஏதோ கேட்டார் எனக்கு ஒன்னும் புரியலை பேந்த பேந்த முழித்தேன். என்னை காப்பாற்ற என் நாஞ்சில் நண்பன் வந்தான் அவங்க அப்பா கேட்ட கேள்விக்கு பதிலை கூறி என்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றினான். ஏன் நான் முழிச்சன்னா அவரு பேசிய தமிழ் எனக்கு புரியலை. எனக்கு மட்டும் அல்ல என் நண்பர்கள் யாருக்கும் அவரின் நாஞ்சில் தமிழ் புரியலை. அவர் பேச்சில் மலையாள வாடை அதிகம். நாஞ்சில் தமிழ் அப்படிதான் இருக்குமோ??? எனக்கு தெரியலை. நாஞ்சில் நாடான் அப்படியெல்லாம் பேசமாட்டான்.
அவனோட அம்மாவும் நாஞ்சில் நாடு என்றாலும் எங்களிடம் நாஞ்சில் தமிழ் பேசவில்லை.

நல்ல பிள்ளைகளாட்டம் அடுத்த நாள் காலையில் வண்டியேறி விடுதிக்கு வந்துட்டோம். வந்ததும் நாஞ்சில் நாடானிடம் கேட்ட\பேசிய முதல் கேள்வி\பேச்சு இது தான்.
நாங்க பரவாலைடா, உங்க அப்பா வாத்தியாரு அவருக்கிட்ட படிக்கற பசங்க நிலைமையை நினைச்சு பாத்தா தான் பாவமா இருக்கு.

ஆனா பாருங்க அந்த பள்ளியிலேயே இவரு பாடத்தில் தான் மாணவர்கள் தேர்ச்சி அதிகமா இருக்குமாம். உடனே நாங்க வாத்தியாரு நடத்துவது புரியலைன்னு பசங்களே படிச்சிக்கிட்டா நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்பதை இதுல இருந்து புரிஞ்சிக்கிட்டோம் அப்படின்னோம். ஒரு மாசத்துக்கு இதை வச்சு நாஞ்சில் நாடானை நையாண்டி பண்ணிக்கிட்டிருந்தோம்.

அவனோட அப்பா கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர். கணிதத்துக்கு மொழி பெரிய தடை இல்லையே இஃகிஃகிஃஃஃஃ...

புதன், அக்டோபர் 28, 2009

அரசு பேருந்தில் தமிழ் பதிவு எண்

தமிழக அரசு பேருந்துகளில் வளர்க்கப்படும் தமிழ்.

TN 33 N 5231 என்ற பேருந்து எண்ணானது தநா 33 நா 5231 என்று தமிழ் படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்கு N என்பது நா ஆகும்.

எனக்கும் என் வண்டியின் எண்களை தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசு பேருந்து எண் போல் பாதி தமிழ் அல்லாமல் கர்நாடக அரசு பேருந்துகளில் முழு கன்னடத்தில் இருப்பதை போல் முழு தமிழில் எழுதவே விருப்பம். எனக்கு தமிழ் எண்கள் தெரியும். என் வண்டியின் எண் TN 12 A 3456 அதை தநா ௧௨ A ௩௪௫௬ என்று எழுத ஆசை. இங்கு A என்பதற்கு என்ன தமிழ் எழுத்தை எழுதுவது என்று குழப்பம். A என்பதற்கு அ என்று எழுதலாமா? N என்பதற்கு 'நா' என்று எப்படி எழுதினார்கள் என்று புரியவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலோ அல்லது மற்ற அரசு அலுவலகங்களிலோ இது தொடர்பான செய்தி அல்லது உத்தரவு உண்டா? அவ்வாறு இருந்தால் ஏன் இதை பரவலாக அறியச்செய்யக்கூடாது? எந்த உத்தரவும் இல்லையென்றால் எதை கொண்டு இவர்கள் N என்பதை 'நா' என்று முடிவெடுத்தார்கள்? தமிழ் பரப்பும் இவர்கள் முயற்சியை மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது? அதற்கான தகவலை அரசு ஏன் மறைக்கவேண்டும்?
கர்நாடக அரசு பேருந்து மற்றும் தமிழக அரசு பேருந்துகளை படம் பிடிக்க மறந்து விட்டேன். இப்போ எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. பெங்களூர், தமிழக பதிவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால் தான் உண்டு.

தமிழ் எண்கள்;
௧ - 1
௨ - 2
௩ - 3
௪ - 4
௫ - 5
௬ - 6
௭ - 7
௮ - 8
௯ - 9
௰ - 10
௱ - 100
௲ - 1000

வியாழன், ஜூன் 04, 2009

"ற்க்" பிழையும் பதிவர்களும்


நன்கு அறியப்பட்ட பதிவர்களும் பல புதிய (எனக்கு) பதிவர்களும் தங்களது இடுகைகளில் "ற்க்" பிழை செய்வதை காண முடிந்தது. நான் பிழையின்றி தமிழ் எழுதுபவன் இல்லை, எழுதவேண்டும் என்று முயற்சிப்பவன். ஆனால் எனக்கு நன்கு தெரிந்த தமிழ் இலக்கண விதி இது. அதாவது "ற்" என்ற எழுத்திற்கு அப்புறம் மெய்யெழுத்து வராது. சந்திப்பிழையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

வல்லினப் புள்ளி எழுத்து ஆறின் (க், ச், ட், த், ப், ற்) பின்னும் மெய்யெழுத்து வராது என்பது பதிவர் சவுக்கடியால் அறிந்துகொண்ட புது விதி.




அதற்க்கு, இதற்க்கு (தவறு) ---> அதற்கு, இதற்கு (சரி)
முயற்ச்சி, அயற்ச்சி (தவறு) ---> முயற்சி, அயற்சி (சரி)
என்பதற்க்காக (தவறு) ---> என்பதற்காக (சரி)
தற்ப்போது (தவறு) ---> தற்போது (சரி)


இன்னுமொரு விதி , எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் (புள்ளி வைத்தயெழுத்தில்) தொடங்காது. இந்த விதியை மீற கிரந்த எழுத்தை பயன்படுத்துறாங்க. கிரந்தம் தமிழ் எழுத்து இல்லை எனவே தமிழ் இலக்கண விதி இதற்கு பொருந்தாது என்று நினைக்கிறார்கள் போலும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்டாலின் என்ற பெயரை காட்டுவார்கள். இதை இசுடாலின் என்று எழுதலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் இசுடாலின் கருணாநிதியின் மகன், தற்போதய துணை முதல்வர், எனவே இந்த பெயரை காட்டுக்கு அழைப்பவர்கள் ஏராளம். ருசுய அல்லது ஜார்ஜிய மொழியில் இசுடாலினை எப்படி பலுக்குவார்கள்\உச்சரிப்பார்கள் என்று தெரியாது. இதைக்காட்டி பலரும் புள்ளிவைத்த கிரந்தம் எழுத்தில் தமிழ் சொற்களை தொடங்கி எழுதுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் தமிழ் மெய்யெழுத்திலேயே தமிழ் சொற்களை தொடங்கி எழுதவும் ஆரம்பித்துள்ளார்கள். இது மிக மிக தவறான போக்கு....


விதி என்பதே அதை மீறுவதற்கு தான் என்று சப்பை கட்டு கட்டாமல் இருந்தால் சரி. :-((

வெள்ளி, ஜனவரி 16, 2009

பண்டிட்டுக்கு எதிராக அமெரிக்கர்கள்

சிட்டி குழும தலைவர் விக்ரம் பண்டிட்டுக்கு எதிராக அமெரிக்கர்கள் உள்ளனர். இவரது செயல் சரியில்லை என்று இவரை சிட்டி குழும தலைவர் பதவியிலுருந்து தூக்கி விட சில வால் ஸ்டீரீட் மக்கள் முனைவது தெரிந்ததே. அது எப்படியோ போகட்டும். ஆனால் அவர்கள் பண்டிட் पंडित என்ற எளிமையான அழகான பொருள் உள்ள சொல்லை அப்படி உச்சரிப்பதில்லை அது தான் என் வருத்தமெல்லாம். ஒவ்வொரு முறையும் TVயில் அவர் பெயரை தவறாக உச்சரிக்கும் போதும் எனக்கு கடும் கோபம் வரும். அமெரிக்கா காரங்க அப்படிதான் உச்சரிப்பாங்கன்னு என் நண்பன் சமாதானம் சொன்னாலும் அவங்க பழனியப்பன், அழகப்பன், சோமசுந்தரம், ஆண்டி, செந்தில், சரவணன், கண்ணன் போன்ற பெயர்களை தப்பா உச்சரிச்சா பொறுத்துக்கலாம் ஆனா பண்டிட் ... Pandit..... முடியலையே....

சனி, டிசம்பர் 27, 2008

ஷெட்டி - செட்டி

என் நண்பனின் குழந்தை பெயர் சுவேதா (ஷ்வேதா). இப்பெயரை எல்லோரும் தவறாக உச்சரிக்கறாங்க என்று அவனுக்கு ஒரே வருத்தம். அதாவது ஷ்வேதா என்று உச்சரிக்காம சுவேதான்னு உச்சரிக்கறாங்களாம். குறிப்பா அவங்க அப்பா, அம்மா, மாமனார், மாமியாரெல்லாம் சுவேதாதாதாதா ன்னு கூப்பிடறாங்கன்னு அலுத்துக்கிட்டான். நானும் சுவேதான்னு உச்சரிக்கற ஆளு தான் ;-) .

இரண்டு மூன்று நாளா பார்கரப்பல்லாம் புலம்புனான். இதுல ஏதோ சங்கதி இருக்குன்னு எனக்கு புரிஞ்சிபோச்சி. ஆனா என்னன்னு தான் புரியலை. சில்பா செட்டி ( ஷில்பா ஷெட்டி ) பற்றிய செய்தியை இணையத்தில் பார்த்த பிறகு தான் எனக்கு அவன் புலம்பலுக்கான காரணம் புரிஞ்சிபோச்சி. உங்களுக்கும் இப்ப காரணம் புரிஞ்சி இருக்கனுமே?

'ஊர் குருவி பருந்தாக முடியாது'ன்னு சொன்னேன், அவனுக்கு ஒன்னும் புரியலை. விளக்கி சொன்ன பிறகு தான் அவனுக்கு புரிந்தது. டேய் நீ வடநாட்டுல இருந்தா தான் ஷெட்டி ஆக முடியும் தமிழ்நாட்டுல இருந்தா செட்டியா தான் இருக்க முடியும் என்று சொன்னேன். அதாவது தமிழ்நாட்டுல் ஷெ ன்னு சொல்றதுக்கு பதிலா செ ன்னு தான் சொல்லுவாங்க குறிப்பா உங்க எங்க அப்பா அம்மா எல்லாம் என்றேன். அதனால ரொம்ப கவலைப்படாத. எப்படியாவது கிரந்தம் பயன்படுத்தி எழுதுவது பேசுவது என்று பல பேரு கங்கணம் கட்டிக்கிட்டு தஇருக்காங்க, அவங்க சட்டிய கூட ஷட்டி அல்லது ஸட்டி ன்னு தான் எழுதுவாங்க அது மாதிரி நீ ஆயிடாதேன்னு சொன்னேன். சட்டியாவே இருக்கான்னா அல்ல ஷட்டி (ஸட்டி)ஆகிட்டான்னு எனக்கு தெரியாது.

ஞாயிறு, மே 18, 2008

தமிழ் எண்கள்

எனக்கு மின் அஞ்சலில் வந்த தமிழ் எண்கள் பற்றிய மடல்.


1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்து நூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகர்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கனம்
1000000000000 = கர்பம்
10000000000000 = நிகர்ப்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெல்லம்
100000000000000000 = அன்னியம்
1000000000000000000 = அர்த்தம்
1000000000000000000 0 = பர்ரர்த்தம்
1000000000000000000 00 = பூரியம்
1000000000000000000 000 = முக்கோடி
1000000000000000000 0000 = மகாயுகம்

ஞாயிறு, செப்டம்பர் 16, 2007

மதுரை, நெல்லை தஞ்சை சென்னை ஈழ தமிழர்களே

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைத் தமிழ் எப்படிங்கண்ணே இருக்கும்? , தற்போதைய தமிழ் பல்கலைக்கழகம் உள்ள தஞ்சைத் தமிழ் எப்படி இருக்கும்? , பல நல்ல தமிழ் சொற்களை 'மெய்'யாலுமே புழங்கும் சென்னைத் தமிழ் எப்படி கீறும்?, நன்றாக கதைக்கும் ஈழத் தமிழ் எப்படி இருக்கும்? ஈழத் தமிழ் என்பது யாழ்பாணத் தமிழ் மட்டுமா? நாஞ்சில் தமிழ் நெல்லைத் தமிழுக்குள் வருமா? அல்லது இரண்டும் வேறு வேறா?

இதைப்பற்றிய குறிப்பு எங்காவது இருக்குமா? என்று தேடிப்பார்த்தேன். இதையெல்லாம் எங்கு போய் தேடுவது? கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிபீடியாவில் (www.ta.wikipedia.org) போய் தேடி பார்க்கவேண்டியதுதானே என்கிறீர்களா? நானும் அங்க போய் தேடி பார்த்தேன், என்ன கொடுமை, எல்லாம் வெத்து பக்கமா இருந்தது. ;-((

மதுரை, நெல்லை, நாஞ்சில், தஞ்சை, சென்னை, ஈழ தமிழர்கள் நிறைய பேர் வலை பதியராங்களே அவங்களாவது ஒரு 2 வரி எழுதக்கூடாதா?

விக்கிப்பீடியாவின் தமிழ் பற்றிய பக்கம்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#.E0.
AE.AA.E0.AF.87.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.
AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_-_.E0.AE.89.E0.AE.B0.E0.AF.88.E0.AE.A8.E0.AE.9F.
E0.AF.88.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_.E0.AE.
B5.E0.AF.87.E0.AE.B1.E0.AF.81.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.81.E0.AE.95.E0.AE.
B3.E0.AF.8D