வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, அக்டோபர் 23, 2009

வாஸ்து - எதிரில் கண்டது 3

வாஸ்துவ பற்றி முதல் இடுகையிலும் அடி அளவுகள் பற்றி இரண்டாம் இடுகையிலும் எழுதியிருந்தேன். நான் வாஸ்துவை பற்றி எழுத காரணமான நிகழ்வு இங்கே.

தெரிந்த ஒருவரின் நிலம்\வீடு இரண்டு கிழமேற்கு தெருக்களுக்கு நடுவில் இருந்தது. தெற்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலமானது. வடக்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலம் சற்று குறைவானது. வடக்கு பார்த்த தெருவை அவர்கள் புழங்கவில்லை. உயரமான (8 ~ 10 அடி) மதிலெலுப்பி இருந்தார்கள். அதனால் அவங்க வீட்டை கூட இத்தெருவில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. செல்வாக்காக இருந்தார்கள். புதிய வீடு கட்டலாமென முடிவு செய்தார்கள். எல்லோரும் வாஸ்து வாஸ்து-ன்னு அலையறப்போ அவங்க மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? வாஸ்துகாரங்க அறிவுரைப்படி தான வீடு கட்ட முடியும்.

வாஸ்துகாரங்க வந்தாங்க டும் டும் டும்
தெற்கு பார்த்த தெருவுக்கு மதில் வந்தது டும் டும் டும்
வடக்கு பார்த்த தெருவின் மதில் போச்சு டும் டும் டும்


பூமி பூசை, கடக்கால் அதாவது அஸ்திவாரம் எல்லாம் தொழில் முறை வாஸ்துகாரரின் சொல்படி கேட்டு வீடு கட்டதொடங்கினார்கள். பல சிக்கல்கள் எழுந்தன, (எனக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் என்று தெரியவில்லை). வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார் அப்படியும் சிக்கல் தீரவில்லை வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார். எனக்கு தெரிந்து 4 ~ 5 வாஸ்துகாரரை அழைத்து காட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இப்படின்னு வீடு கட்டி முடித்து புது மனை புகுவிழா நடத்தினார்கள். 3 மாடி கட்டடம். மார்பிள் தரை, தேக்கு மர கதவுன்னு நல்லா செலவு பண்ணி கட்டினார்கள். என்ன இந்த வீடு கட்டினதில் அவர்களுக்கு சில பண நட்டங்கள் ஏற்பட்டது. அதாவது அவர்கள் உடைமைகள் சிலவற்றை விற்க நேரிட்டது.

இவ்வளவு செலவு பண்ணி கட்டிய வீட்டில் அவர்கள் எப்படி இருந்தார்கள்? குடி இருந்தா தான சொல்ல முடியும். மேலும் பல சிக்கல்கள் வரவே சோசியக்காரரின் அறிவுரைப்படி அவர்கள் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தார்கள். பல லட்சங்கள் போட்டு கட்டிய புது வீட்டை வாடகைக்கு விட்டார்கள். நாலஞ்சு வாடகை வீடு மாற்றி விட்டார்கள். என்ன கொடுமை சரவணன் மன்னிக்க வாஸ்து இது?

ஐந்து ஆண்டுக்குப்பிறகு மூன்றாவது மாடிக்கு குடி வந்துட்டாங்க. மூன்றாவது மாடியில் 2 அறைதான் உள்ளது. உங்களுக்கே தெரியும் கடைசி மாடியை நாம் எப்படி கட்டுவோம் என்று. இதற்கு மேல் சொன்னால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்வது போல் ஆகும், அதனால மேலும் சொல்லாம நிறுத்திக்கிறது தான் நல்லது.


.
.

கருத்துகள் இல்லை: