வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஜூலை 31, 2006

இலங்கையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதா?

இலங்கை அரசு "மனிதாபிமான" நடவடிக்கையாக தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட வான் படை & தரைப்படை குண்டுவீச்சை தொடர்ந்து இலங்கையில் போர்நிறுத்தம் காலாவதியாகிவிட்டதாக புலிகளின் திருகோணமலை அரசியல் பிரிவு தலைவர் எழிலன் அறிவித்துள்ளார்.

இலங்கை அரசு போர்நிறுத்தத்தை முறித்துக்கொள்ளவில்லை என்றும் இப்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை மனிதாபிமானத்தின் பால் எடுக்கப்பட்டதென்றும் கூறியுள்ளது. சிங்கள விவசாயிகளின் பயிர்கள் வாடுவது குறித்து மனிதாபிமான முறையில் கவலை கொள்ளும் அரசு தமிழ் மக்கள் குடிநீருக்காக தவிப்பது குறித்தும் மனிதாபிமான முறையில் கவலை கொண்டு அவர்கள் கவலையை போக்கினால் நன்றாக இருக்கும்.

இலங்கை அரசின் மனிதாபிமான நடவடிக்கையே குண்டுவீச்சு என்றால் இராணுவ நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அப்பட்டமான போர் நிறுத்தமீறலாக இருந்த போதிலும் இந்த குண்டுவீச்சை எந்த நாடும் கண்டித்ததாக தெரியவில்லை. ஒரு வேளை அவர்களும் இந்த குண்டுவீச்சு மனிதாபிமானது என்று நினைக்கிறார்களோ என்னவோ. கண்காணிப்பு குழு தலைவர் மட்டும் இந்த மனிதாபிமான தாக்குதல் தவறு என்று கூறியுள்ளார்.

இது வரை புலிகளின் நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் தாகுதலுக்கு எதிர் நடவடிக்கையாகவே உள்ளது.

பொதுவாக போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்துவிட்டதாக புலிகள் நினைத்தால் அது பலமான ஒரு தாக்குதலின் மூலம் உலகுக்கு தெரியப்படுத்தப்படும். இது வரை அப்படியொரு பலமான தாக்குதல் ஏதும் நடைபெறாததால் புலிகள் இன்னும் போர்நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்கிறார்கள் என்று கொள்வோமா?

6 கருத்துகள்:

Jay சொன்னது…

இவங்கள திருத்த முடியாது. அது மட்டும் வெட்ட வெளிச்சம்!!!!
கடவுள்தான் இலங்கையைக் காப்பாற்ற வேண்டும்

வெற்றி சொன்னது…

சிங்கள அரசின் இத் தாக்குதல்களில் எந்த மனிதாபிமான நோக்கமும் இல்லை. இதை போர்க்கண்காணிப்புக் குழுவின் தலைவர் கூடத் தெரிவித்திருக்கிறார். தமிழர்களின் தலைமை உணர்ச்சிவசப் படாமல் மிகவும் நிதானமாக பிரச்சனையைக் கையாளுகிறது. வரும் செப்ரம்பர் மாதத்தின் பின் தமிழர் தரப்பு தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும்.

வசந்தன்(Vasanthan) சொன்னது…

குறிப்பிட்ட மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றவென்று இரண்டு நாட்களாக அரசு இராணுவ முன்னேற்ற நடவடிக்கையைச் செய்துள்ளது. 'மிஷன் வோட்டர் செட்' என்று பெயர் வைத்து இந்நடவடிக்கை நடத்தப்படுகிறது.
அதையெதிர்த்து புலிகள் பதில்தாக்குதல் நடத்தியுள்ளனர். இருநாட் சண்டையிலும் படையினர் அப்பகுதியைக் கைப்பற்ற முடியவில்லை.

போர் தொடுத்து இடங்களைக் கைப்பற்றவென்று அரசு நடவடிக்கை எடுத்திருப்பது, ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதையே காட்டுகிறது.
ஆனால் நீங்கள் சொல்வதுபோல் புலிகள் இன்னும் முழுமையான யுத்தத்தைத் தொடங்கவில்லை.
புலிகள் பெரிய வலிந்த தாக்குதலொன்றைத் தொடுத்து தமது போரைத் தொடங்குவார்கள்.

பிரச்சினையைப் பேசித்தீர்க்கலாம் என்று ஈழத்தவர்க்குப் புத்திமதி சொல்பவர்களுக்கு இது சரியான பாடம். ஒரு நீர்ப்பிரச்சினையையே பேசித்தீர்க்க யோசிக்காமல் போர்தொடுத்துத் தான் தீர்க்க நினைக்கிறது அரசதரப்பு. இதில் தமிழர் தரப்பில் நியாயங்கள் நிறையவே உண்டு. அப்படியானால் நாலரை வருட ஒப்பந்தக் காலத்தில் பலமுறை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிமீது பொருளாதாரத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. பாதைகள் படையினரால் மூடப்பட்டன. அபிவிருத்திப் பணிகள் அரசால் நிறுத்தப்பட்டன. எவ்வித நியாயமுமற்ற இந்நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தடவையும் புலிகள் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு தமது பிரச்சினையைத் தீர்த்திருக்க வேண்டும்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு புலிகளோடும் தமிழ்மக்களோடும் சம்பந்தப்பட்ட நீர்ப்பிரச்சினை தொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த இடத்தில் வான்படையால் குண்டுகள் வீசப்பட்டன. அரசுக்கு அறிவித்து, அனுமதி பெற்றுத்தான தாம் அப்பேச்சில் கலந்துகொண்டதாகவும், ஆனால் அரசபடை தாம் பேசிக்கொண்டிருக்கும்போது தம்கண்முன்னாலேயே குண்டுகளைப் போட்டதாகவும் கண்காணிப்புக்குழு விசனம் தெரிவித்ததோடு, தாக்குதல்கள் நிறுத்தப்படும்வரை தான் தமது பணியிலிருந்து விலகியிருப்பதாகவும் அறிவித்துள்ளது. (ஆக முறைப்படி போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இல்லை.)

யாரோடு, எதைப்பற்றிப் பேசித்தீர்த்துக் கொள்வது என்பது முக்கிய கேள்வி.

Machi சொன்னது…

விசனத்தை பகிந்ததுக்கு நன்றி மயூரேசன். எல்லோரின் விசனமும் அது தானே

Machi சொன்னது…

கருத்துக்கு நன்றி வெற்றி.
மாவீரர் உரைக்கு முன்னோ பின்னோ புலிகளின் பெரிய தாக்குதல் இருக்கும் என்று நினைத்திருந்தேன் இப்போது சூழல் வேறுமாதிரியாக இருப்பதால் இத்தாக்குதலின் ஊடே பெரிய தாக்குதல் நடத்தப்படலாம். அது இலங்கை படையினரின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் என்ற முறையில் வெளியில் அறியப்படலாம் என்று என்ணுகிறேன்

மனிதாபிமானம் என்ற பெயரில் கொலை தாண்டமாடுகிறது சிங்களப்படை. வேறு காரணம் சொல்லி தாக்குதல் நடத்தியிருக்கலாம் இப்போ மனிதாபிமானம் என்ற சொல்லுக்கு உரிய பொருளே மாறிவிட்டது.

Machi சொன்னது…

கருத்துக்கு நன்றி வசந்தன்.

/ஒரு நீர்ப்பிரச்சினையையே பேசித்தீர்க்க யோசிக்காமல் போர்தொடுத்துத் தான் தீர்க்க நினைக்கிறது அரசதரப்பு. /

இவர்கள் எப்படி தமிழர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பார்கள்? அப்படி சொன்னால் அதை நம்புபவர் முட்டாள் அல்லது உண்மை நிலை அறியாதவர் என்று கொள்ளலாம்.

/அரசுக்கு அறிவித்து, அனுமதி பெற்றுத்தான தாம் அப்பேச்சில் கலந்துகொண்டதாகவும், ஆனால் அரசபடை தாம் பேசிக்கொண்டிருக்கும்போது தம்கண்முன்னாலேயே குண்டுகளைப் போட்டதாகவும் கண்காணிப்புக்குழு விசனம் தெரிவித்ததோடு, தாக்குதல்கள் நிறுத்தப்படும்வரை தான் தமது பணியிலிருந்து விலகியிருப்பதாகவும் அறிவித்துள்ளது./

கண்காணிப்பு குழுவுக்கு இலங்கை அரசு கொடுக்கும் மரியாதை அவ்வளவு தான். ஐ.நா. கண்காணிப்பாளர்கள் மீது இஸ்ரேல் குண்டு போட்டதை நினைத்து இலங்கையும் அவ்வாறு செய்ததோ?

தமிழக கர்நாடக காவேரி நதி நீர் பிரச்சனையை விடவா இந்த மாவிலாறு பெரிய பிரச்சனை?