வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஏப்ரல் 15, 2010

விக்கிப்பீடியா போட்டி.

தமிழில் விக்கிப்பீடியா இருப்பது வலைப்பதிவர்கள் அனேகருக்கு தெரியும். கோவையில் நடக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடக்கிறது. தமிழ் இணைய மாநாட்டை சார்ந்தவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்காக ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்துள்ளார்கள். கட்டுரை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30. இதில் வெளிநாட்டிலுள்ள கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.  உங்களுக்கு தெரிந்த கல்லூரி மாணவர்களுக்கு இத்தகவலை சொல்லி அவர்களை போட்டியில் கலந்துக்க சொல்லுங்க. மேலும் விபரங்களுக்கு விரிவான தகவல்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அனுகவும்.



மேல் இருக்கும் போட்டி கல்லூரி மாணவர்களுக்கு மற்றவர்களுக்கு? இப்போதைக்கு மற்றவர்களுக்கு போட்டியெல்லாம் இல்லை.  ஆனா நீங்க உதவலாம். நீங்க தான் உதவமுடியும். தமிழ் விக்கிப்பீடியா என்பது எனக்கோ உங்களுக்கோ உரிமையானது அல்ல. இது நம் அனைவருக்கும் உரிமையானது. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க தொடங்கினால் நீங்களும் அதன் அங்கம். ஏதாவது பிழைகள் தென்பட்டால் நீங்கள் திருத்தலாம். அடுத்தவங்க அதை சரி செய்யட்டும் என காத்திருக்க தேவையில்லை. அங்கு பங்களிக்கும் எல்லோரும் நம்மளைப்போன்றோரே. யார் என்ன மாற்றம் செய்தாலும் அது பதிவாகிவிடும். தவறுதலாக நீக்கிவிட்டால் அதை மீட்டுவிடலாம். கட்டுரையின் வரலாறு என்ற tabல் யார் எப்போ என்ன எழுதினார்கள் என்ற விபரம் இருக்கும்.

தமிழ் வலைப்பதிவர்கள் நிறைய பங்களிக்கலாம். ஏன்னா இவங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியும்.  நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் ஆனா பங்களித்திருக்கமாட்டார்கள். ஏதோ ஓர் சிறு தடை. என்னய்யா அது? அதான் புரியமாட்டிக்குது.

சில பேர் விக்கிப்பீடியாவில் பங்களித்தால் எனக்கு என்ன லாபம் என்று கேட்பார்கள். உங்களுக்கு பொருளாதார அளவில் லாபம் ஏதும்  இருக்காது ஆனால் நீங்க எழுதும் கட்டுரையை படிக்கும் வாசகருக்கு பயன் இருந்தால் அது தான் உங்களுக்கு கிடைக்கும் வெகுமதி.

நான் எழுதுனது வேற இப்ப இருக்கறது வேற கட்டுரை என்பது விக்கிப்பீடியா கொள்கை பற்றி அறியாததால் எழும் கேள்வி. விக்கிப்பீடியாவில் நீங்கள் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் உரிமை கோர முடியாது. அது எல்லோருக்கும் பொதுவானது. அடுத்தவர் எழுதிய கட்டுரையிலும் நீங்கள் திருத்தம் செய்யலாம். மேலதிக தகவல்களை சேர்க்கலாம். அக்கட்டுரையை வளர்த்தெடுக்கலாம். இது ஒரு கூட்டுழைப்பு.

வலைப்பதிவில் எழுதும் நடையில் எழுதக்கூடாது. எதையும் ஆதாரத்துடன் எழுதவேண்டும். அதற்கான சுட்டிகளை இணைக்கவும். இதை மற்றவர்கள் சரிபார்த்துக்கொள்ள உதவும்.

எழுத்துப்பிழையை திருத்தலாம், தகவல் தவறென்றால் அதை திருத்தலாம், ஆதாரங்களை சேர்க்கலாம், படங்களை இணைக்கலாம், தெரிந்த தகவல்களை சேர்க்கலாம் லாம் லாம் லாம் எவ்வளவோ செய்யலாம்.

வலைப்பதிவில் தலைவர்களை பற்றிய பல இடுகைகளை பார்த்துள்ளேன். அவற்றை நீங்கள் இணையத்திலோ, புத்தகத்திலோ படித்து தான் எழுதியிருப்பீர்கள். நீங்கள் அத்தலைவரை பற்றி விக்கிப்பீடியாவில் ஏன் எழுதக்கூடாது? மேற்கோள்களையும் கொடுத்தால் நீங்கள் எழுதிய கட்டுரையின் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும். இங்கு எழுதினால் பலரைச் சென்றடையும் அல்லவா?

உங்க ஊரைப்பற்றி மற்றவரை விட உங்களுக்கு தான் நல்லா தெரியும்.  உங்கள் ஊரைப்பற்றி எழுதலாம். எல்லா ஊர்களைப்பற்றிய தகவல்களும் விக்கிப்பீடியாவில் உண்டு ஆனால் விரிவான தகவல்கள் சில ஊர்களுக்கு தான் உள்ளது. உங்களுக்கு பிடித்தமான தலைப்பிலோ அல்லது துறை சார்ந்த கட்டுரைகளோ எழுதலாம். தமிழில் எழுதவேண்டிய கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

சிறுக சிறுக தகவல்களை சேர்க்கலாம். தவறில்லை. உங்களிடம் உள்ள சிறு தடையை உடைத்து மடை திறந்த வெள்ளமாக அல்லாவிடினும் வயலுக்கு பாயும் சிறிய வாய்காலாகவாவது அல்லது சென்னை குழாய் தண்ணி அளவாவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களியுங்கள். அது நாம் தமிழ் சமூகத்துக்கு செய்யும் பெரும் உதவி.


.
.

புதன், ஏப்ரல் 14, 2010

ஆண் குழந்தை வேண்டாம்

என் நண்பனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைதான் வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். என்ன பண்றது பிறக்கும் குழந்தை எந்த பால் அப்படிங்கிறத முடிவுபண்ற வசதி நம்ம கிட்ட இல்லையே (இருந்திருந்தா 100 பசங்களுக்கு 10 பிள்ளைங்க கூட தேறாது). நான்கு ஆண்டு கழித்து இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்ப அவன் மருத்துவமனையில் இல்லை. அவனுக்கு செய்தி சொல்லி விட்டாங்க. அவன் கேட்ட கேள்வி குழந்தை பையனா பிள்ளையா? பையன் பிறந்திருப்பதாக சொன்னதும் அவன் பிறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஏகப்பட்ட பேர் அவன்கிட்ட பேசி சமாதானம் செய்து குழந்தையை பார்க்கவைத்தார்கள். குழந்தை பிறந்து இரண்டு நாள் கழித்து தான் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு போனான் என்றால் அவனுக்கு ஆண் குழந்தை மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

ஊருக்கு போனப்ப ஏண்டா பிறந்த குழந்தையை பாக்க மாட்டேன்னு அடம்பிடிச்சன்னு கேட்டேன். நீ அமெரிக்காவுல இருக்கற இங்க இருக்குற நிலைமை உனக்கு தெரியாதுன்னு சொன்னான். துருவி கேட்டதும் பையனுக்கு திருமணம் பண்ண பொண்ணு கிடைப்பது கடினம் அதான் காரணம்ன்னு  சொன்னான். அடப்பாவி, அது பையன் பெரியவன் ஆனதும் கவலைப்படுறது அதுக்கு இப்பவே ஏண்டா கவலைப்படுற அப்படின்னேன்.

பெண் குழந்தை பிறந்தா நல்ல மாப்பிளை கிடைக்கனுமே நிறைய சீர்வரிசை செய்யனுமே அவ்வளவு வசதி நம்மகிட்ட இல்லையேன்னு மக்கள் கவலைப்படுவதை தான் பார்த்திருப்போம், பலர் முதிர் கன்னிகளாக இருப்பதும் இக்காரணத்தால் தான். பெண் கிடைக்கலை அப்படிங்கிறது புதிது இல்லையா. அவன் கவலைப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அரியானா மாநிலத்தில் பெண் வேண்டாம் பையன் தான் வேண்டும் என்று பலர் நினைத்ததன் பலனை இப்போ அனுபவிக்கறாங்க.திருமணத்துக்கு பெண் கிடைக்காம நிறைய ஆண்கள் வேறு வழியில்லாம பிரமச்சாரிகளாக இருக்காங்களாம். அதாவது முதிர் காளைகள். பணம் இருக்கறவங்க அடுத்த மாநிலத்திலிருந்து பெண் எடுக்கறாங்க. பெண் வீட்டு காரங்க சீர் கொடுத்து மாப்பிள்ளை எடுத்ததுக்கு பதிலாக மாப்பிளை வீட்டுக்காரங்க சீர் கொடுத்து பெண் எடுக்கறாங்க.

ஏன் நாம அரியானாவுக்கு போகனும்.  தங்க தமிழகத்திலேயே அந்த கதை நடந்துகிட்டிருக்கு. என் நண்பனின் வீட்டில் மூன்று பேர். இரண்டு பசங்க, ஒரு பெண். பெண்ணுக்கு சுலபமா மாப்பிள்ளை கிடைத்து கட்டிகொடுத்து நல்லபடியா வாழுது. மாமன் பெண்ணையே இவன் கட்டிக்கிட்டான். இவன் தம்பிக்கு பெண் கிடைக்குங்குள்ள தவிடு தின்னுட்டாங்க. எத்தனை பெண் பார்க்கறது? அப்பப்பா...

இவன் தம்பிக்கு மட்டும் இந்த நிலையா என்றால் அது தான் இல்லை. இவன் நண்பர்கள் (எனக்கும் அவர்கள் நண்பர்கள் தான்) முக்கால்வாசி பேருக்கு இந்த நிலை தான்.  இரண்டு பேர் இங்க தேடுனா நமக்கு பெண்கிடைப்பது என்று கடினம் என்று கேரளா போய் பெண் எடுத்துக்கிட்டு வந்துட்டானுங்க. மாப்பிள்ளை தேடும் மலையாள பெண்களை தெரிந்த தரகருக்கு இப்ப எங்கூருல நல்ல கெராக்கியாம். 30 நாளில் மலையாளம் கற்பது எப்படி? அப்படிங்கிற புத்தகம் அதிகளவு விக்குதாம். எங்க பக்கம் இருக்கற தரகருங்க எல்லாம் இப்ப மலை நாட்டில் தான் இருக்கறதா கேள்வி.

ஏண்டா இந்த நிலைமைன்னா... இவனுங்க பள்ளி படிப்பே போதும் அப்படின்னு தொழிலில் இறங்கிட்டானுங்க. பட்டபடிப்பு படிச்சாலும் இதே தொழில் தான் பண்ணனும் அதுக்கு 3 ஆண்டு வீண் பண்ணறதுக்கு அந்த 3 ஆண்டை தொழிலில் பயன்படுத்தினால்  பணம் கிடைக்கும் என்பது இவனுங்க வாதம். அதுவும் சரிதான். ஆனா இப்ப என்னடான்னா பெண்கள் பட்டபடிப்பு படிச்சிட்டு படிக்காத பையனுங்களை கட்டிக்க மாட்டேங்குது. இப்படியெல்லாம் ஆகுமுன்னு யாருக்கு தெரியும்?

இவனுங்க பட்டபடிப்பு படிக்காதது தான் திருமணம் ஆகாம தள்ளிபோனதுக்கு காரணம் (படிக்காத பையனை எந்த படித்த பிள்ளையப்பா கட்டிக்கும்? ஒரு நியாயம் இருக்குள்ள). அதை புரிந்து கொள்ளாத என் நண்பன் ஆண் குழந்தையே வேண்டாம் என்று சொல்றான். இப்படியாவது பெண் குழந்தைக்கு ஆதரவு இருக்கேன்னு மகிழவேண்டியது தான்.

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டு எந்த மாசத்துல பிறக்குது? சித்திரையில் சிலபேருக்கும் தையில் சிலபேருக்கும் பிறக்கிறது. 99% திருக்கணிதகாரங்களுக்கு (சோசியக்காரங்க) சித்திரை மாதம் தான் புத்தாண்டு பிறக்கும். புத்தாண்டு  தை மாதம் பிறந்தா ஒழுங்கா கணிக்கமுடியாதா?. சித்திரையில் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு சித்திரையில் பிறப்பதை ஒத்துக்கொள்ளாத மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

நான் தை மாதம் தான் ஆண்டு பிறப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் நபர். இப்ப சட்டம் போட்டதால் அல்ல முதலில் இருந்தே தை மாதத்துக்கு தான் என் ஆதரவு. சித்திரை மாதத்தை நான் கொண்டாடியதே இல்லை. தை மாசம்ன்னா அப்படியா? வெகு விமரிசையா கொண்டாடுறோம். புத்தாண்டை பொங்கல் விழா மூலம் வரவேற்கிறோம். கையில் காசு வந்தவுடன் குடியானவன் கொண்டாடுற முதல் விழா பொங்கல் தான் அதாவது புத்தாண்டு பிறப்பு.

ஒவ்வோரு மாதத்துக்கும் பழமொழிகள் இருந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்துக்கு சொல்லும் மொழிக்கு சிறப்பு உண்டு. அதாவது அறுவடை முடிந்து கைல பணம் புழங்கற மாதம் தை. கேட்பவர்களுக்கு பணம் கொடுக்க முடியும்.  வாரிசு திருமண செலவுக்கு வேண்டிய பணம் அறுவடை முடிஞ்சா தான கைக்கு வரும்.  தை, மாசி திருமண மாதங்கள். சித்திரை மாதத்தில் அவ்வளவாக திருமணம் நடப்பதில்லை. 

வானியல் படி கதிரவன் மேல் நோக்கி கடக ரேகை நோக்கி செல்லும் நாள் தை 1. ஆறு மாதம் மேல் ஆறு மாதம் கீழ். தமிழரின் ஆறு காலங்களில்  ஒன்றாகிய  இள வேனில் காலம் தொடங்குவதும் தை மாதத்தில் இருந்துதான். வெயில் காய்ச்சற காலத்திலிருந்து யாரு புத்தாண்ட தொடங்குவாங்க?

சித்திரையில் தொடங்கும் புத்தாண்டில் ஒன்று கூட தமிழ் பெயர் அல்ல. அப்புறம் எப்படி சித்திரை ஆண்டுபிறப்பை தமிழ் புத்தாண்டாக சொல்றாங்கன்னு புரியலை. சித்திரையில் தொடங்கும் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று சொல்லாதீர்கள்.

திங்கள், ஏப்ரல் 12, 2010

விவாகரத்து

ஊர்ல பேசிக்கிட்டு இருந்தப்ப எங்கம்மா நம்ம சின்னுசாமி மகளுக்கு போன வருசம் கல்யாணம் ஆச்சுல்ல, அதுக்குள்ள ஏதோ மனக்கசப்பு வந்து புருசன்  வேண்டான்னு வெட்டிக்கிட்டு வந்துட்டாளாம் என்று சொன்னாங்க.

சின்னுசாமி மகள் மட்டுமா?? முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருக்கும். இப்ப ஆன்னா ஊன்னா விவாகரத்துன்னு ஆகிப்போச்சு. அதுக்கு பல காரணங்கள்.

பொருளாதாரம்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரும்படி ஆண்கள் கையில் இருந்தது. இப்ப அப்படி அல்ல, பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கறாங்க. துணையில்லாம வாழராங்க. பெண்களை அதிகம் படிக்க வைக்காம இருந்தது ஒரு காலம், ஏன்னா பொண்ணு நிறையா படிச்சா நிறைய படிச்ச மாப்பிளையா பார்க்கணும் அந்த மாதிரி மாப்பிளைக்கு நிறைய சீர் வரிசை செய்யனும். இதுக்கு பொண்ண அதிகம் படிக்க வைக்காம இருந்தா சிக்கலே இல்லை, அதுவும் அல்லாமல் படிச்சா எங்க வேலை கிடைக்கும்? மென்பொருள் துறை வேலைவாய்ப்புகள் இதனை புரட்டி போட்டுள்ளது.

நான் எட்டாவது படித்த பொழுதபோது கூட படித்த நண்பனின் அக்கா பத்தாவது படித்தார்கள், அவங்க வகுப்பில் முதல் பத்து இடத்துக்குள் வருவாங்க. எட்டாவதுடன் அவங்க வேற ஊருக்கு போயிட்டாங்க. இரண்டு ஆண்டு கழித்து ஒரு குழந்தையுடன் அவனோட அக்காவை பார்த்தேன். நன்றாக படித்த பெண்ணை பத்தாவது முடித்த கையுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பெற்றோரின் சுமை குறைஞ்சது பாருங்க ஆனா என் நண்பனின் அக்காவோட நிலை? இந்த மாதிரி பலபேர் உங்களுக்கும் தெரிந்து இருப்பார்கள்.

பெண்களை படிக்க வைக்க இருந்த தயக்கம் கொஞ்சம் ஒழிந்தது. அடுத்தபடியா படித்த பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெரிய தயக்கம் இருந்தது, அப்படியே அனுப்ப ஒத்துக்கிட்டாலும் வெளியூரா? மூச். இப்ப இந்த நிலையிலும் நல்ல மாற்றம். அதிகளவில் நகரங்களில் உள்ள மகளிர் விடுதிகள் இதற்கு சான்று.

பொருளாதார நிலையில் பெண்களின் நிலை மேம்பட்டு  உள்ளதால் அடிமையாக இருக்க அவர்கள் மறுக்கிறார்கள். ஆணாதிக்கம் மிக்கவன் கணவனாக வந்தால் பழைய காலம் போல் அல்லாமல் குடும்பநல நீதிமன்றத்தை அனுகிவிடுகிறார்கள். கல் ஆனாலும் கணவன்,  புல் ஆனாலும் புருசன் போன்றஆணாதிக்க பழமொழிகள் எல்லாம் இப்ப செல்லாது என்பது பலருக்கு புரிவதில்லை.

பெற்றோர்
செல்லம் கொடுத்து வளர்த்த பெண், கணவனுடன் கோபம் கொண்டு சீராட்டிகிட்டு வந்தா பெற்றோர் அவளை சமாதான படுத்தனும் அதை விட்டு விட்டு பெண்ணை விட இவர்கள் அதிகம் சண்டை போட்டு சமாதானத்திற்கான வழிகளை அடைத்து விவாகரத்து தான் ஒரே வழி என்று ஆக்கி பெண் வாழ்வை சிதைப்பவர்கள்.

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்குமா? அவற்றை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் தகுந்த அறிவுரை கூறி அதை சரி செய்ய முயலவேண்டும். ஆனால் சிலர் அப்படி நடப்பதில்லை. நிறைய இடங்களில் பெற்றோர் (ஆண் மற்றும் பெண்) மீது தான் குற்றம் சொல்ல வேண்டியதாக உள்ளது.

நானும் நட்சத்திரம் ஆயிட்டேன்

என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தமிழ்மணத்துக்காரங்க நட்சத்திரமா தேர்ந்தெடுத்து இருக்காங்க. எப்படி இந்த முடிவு எடுத்தாங்கன்னு தெரியலை. என் இடுகைகளை பார்த்த பின்னும் என்னை கூப்பிட்டுறுக்காங்கன்னா அதுக்கு காரணம் என்னுடைய நல்லூழ் தான்.  இந்த தேதியில் நட்சத்திரமா இருக்க சம்மதமான்னு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாங்க அதுக்கு நான் பதில் அனுப்பலை, காரணம் அந்த மின்னஞ்சலை சரியான சமயத்தில் நான் பார்க்கலை, இரண்டு வாரம் கழித்து தான் பார்த்தேன். பார்த்ததும் அடடா வாய்ப்பு போச்சேன்னு கவலைப்பட்டாலும், மன்னிக்கவும் இந்த தேதியில் என்னால் இருக்க முடியாது, வேற தேதி இருந்தா சொல்லுங்கன்னு பதில் போட்டேன். அப்புறம் இரண்டு நாளைக்கு ஒரு தரம் தமிழ்மணத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பார்ப்பதே பொழப்பா போச்சு. ஒரு நாள் ஏப்ரல் 12ல் தொடங்கும் வாரத்துக்கு நட்சத்திரமாக முடியுமான்னு கேட்டாங்க.  இந்த வாய்ப்பை விடுவனா?  எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் அப்படின்னு 3 பதில் மின்னஞ்சல் அனுப்பிட்டேன்.அவங்க மனசு மாற கூடாது பாருங்க.

என்னை பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. தமிழ்மண நட்சத்திரம் என்பதால் ஏதாவது சொல்லியாகனும் இல்லையா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த 24 நாடுகளில் ஒன்றாகிய கொட நாட்டின் மன்னிக்க வாழவந்தி நாட்டின் துணை நாடாகிய தூசூர் நாட்டிலுள்ள பெரிய ஊரில் பிறந்து வளர்ந்தேன், வாழவந்தி நாட்டுலயும் அது தான் பெரிய ஊர். ஓர் ஆண்டு சிலிகான் பள்ளத்தாக்கில் குப்பை கொட்டிட்டு 9 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாசிங்டன் பெருநகரத்திற்கு அருகில் வர்ஜீனியா மாநிலத்தில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். தமிழில் புலமை கிடையாது, ஆர்வம் உண்டு.

பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுதெல்லாம் தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்ததில்லை. பள்ளி முழுஆண்டு விடுமுறையில் எங்கப்பா இந்தி படிக்க சொல்லி தொல்லை படுத்தினார். அதனால் நான் இந்தி எதிர்ப்பாளனாக மாறினேன். விடுமுறையில் விளையாட விடாம இந்தி படி சிந்தி படின்னு... அப்பாக்களே இப்படித்தானோ? அப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இராஜீவ்காந்தி தான் பிரதமர். ஏன் நடந்தது? காரணம் தெரியவில்லை, அப்ப திமுக எதிர்கட்சி, ஆளுங்கட்சியா இருந்தா கண்டுக்காம விட்டுருப்பாங்களோ என்னவோ. ஏன் அப்ப இராஜீவ்காந்தி பிரதமர் அப்படின்னு சொன்னேன்? இல்லைன்னா என்னை  ரொம்ப ரொம்ப யூத்துன்னு நீங்க நினைச்சிருவீங்களேன்னு தான். இந்தியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் வெறியர்கள் என்ற கருத்தாக்கத்தின் படி நான் தமிழ் வெறியன் ஆனேன். அமெரிக்கா வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆர்வம் அதிகமாகியது. 2005 நவம்பர் மாதத்தில் முதல் இடுகையை இட்டேன் அதனால் நான் ஒரு மூத்த பதிவர் என்பதை விருப்பம் இல்லாவிடிலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதாவது 6 ஆண்டுகளாக நான் அப்பப்ப வலைப்பதிவு எழுதிக்கிட்டு வலைப்பதிவின் தொடர்பு அறுந்து போகாமா பார்த்துக்கிட்டிருக்கேன்.

என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வைத்திருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது).

குறும்பன் என்ற பெயரை வைச்சது நண்பனுக்கு பின்னூட்டம் போட. உண்மையான பெயரை வெளியில் சொல்லல. அது வசதியா இருந்ததால அப்படியே தொடர்ந்தேன், இப்ப தமிழ்மணம் நட்சத்திரம் ஆகியிருக்கறதால அந்த வசதியை விட்டு கொடுக்கனும்மா என்ன? அதனால குறும்பன் என்ற பெயரிலேயே தொடர்கின்றேன்.

இந்த வாரம் குறைந்தது ஏழு இடுகைகள் உறுதி.  ஆதரவு காட்டுங்கப்பா. (ஆதரவு காட்டவில்லை என்றாலும் நான் இடுகை இடுவதில் இருந்து விலகமாட்டேன்).