வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஜனவரி 25, 2012

சிறு குறிப்புகள் - 01 25 2012

எனக்கும் சமையல் கட்டுக்கும் காத தூரம். சில குறிப்புகள் எனக்கு தெரிஞ்சிடுச்சி, அதை யார்கிட்டயாவது சொல்லலைன்னா என் மண்டை வெடிச்சிடும், அதான் இங்க இஃகி இஃகி.

வீட்டுல சூடம் வாங்கி வைத்திருப்போம். கொஞ்ச நாள் ஆனா அது கரைய தொடங்கும்.  குப்பியில் போட்டு மூடி வைத்திருந்தாலும் கரைவதை தடுக்க முடியாது. சூடம் கரைவதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. குப்பியில் சில மிளகுகளை போட்டு மூடி வைத்தால் சூடம் கரையாது.

காய்கறிகளை வாங்கி அதை குளிர்சாதன பெட்டியில்  வைத்தாலும் விரைவில் அது கெட்டு விடும். இதை தவிர்க்க காய்கறிகளில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துவிட்டு (தாளில் காய்கறிகளை ஒற்றி எடுத்தால் ஈரப்பதம் நீங்கிவிடும்) தாளில் சுற்றி வைத்தால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.


சிலர் ஆனா ஊன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பார்கள்.  நிறைய தேங்காய்கள் (உடைந்த தேங்காய் மூடி தான்) சேர்ந்து விடும். அந்த தேங்காயை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். சமையலுக்கும் எவ்வளவு தான் பயன்படுத்தறது, மீதியை என்ன செய்வது? தேங்காய் மூடியை நன்றாக துருவி தேங்காய் துருவல்களை எடுத்து அதை நெகிழி பையில்(plastic bag) போட்டு நன்றாக மூடி குளிர்சாதன பெட்டியின் உறையவை (freezer - குளிர்சாதன பெட்டியின் மேல் கதவுடன் பனிக்கட்டி செய்யக்கூடிய ஒரு பகுதி இருக்குமே அதான்) இல் வைத்துவிடவும். தேவையான போது பையில் உள்ள தேங்காய் துருவலில் தேவையான அளவு எடுத்து அதை நுண்ணலை சூடாக்கல் கருவியில் (microwave) வைத்து சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம், நுண்ணலை சூடாக்கல் கருவி இல்லாதவர்கள் அல்லது அதை பயன்படுத்துவதை விரும்பாதவர்கள் வாணலியில் சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம். சூடாக்காமலும் தேங்காய் துருவலை பயன்படுத்தலாம் ஆனால் அப்படி பயன்படுத்தினால் திரி திரியாக (திப்பி திப்பியாக) தேங்காய் இருக்கும் சுவையே இருக்காது, சூடாக்கி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

திங்கள், ஜனவரி 09, 2012

அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு

நவம்பர் 2012ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் சனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுவார் /போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து நிற்க ஆளை தேர்ந்தெடுக்கும் பணியில்(உட்கட்சி தேர்தல்) குடியரசு கட்சி உள்ளது.

உட்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று யார் ஒபாமாவை எதிர்க்க போகிறார் அப்படிங்கிற எதிர்பார்ப்பு தினமும் கூடிக்கிட்டே இருக்கு. நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. இவர் தான் முன்னனியில் இருக்காருன்னு யாரையும் சொல்லமுடியலை. ஆனா சீரா எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  மிட் ராம்னி முன்னனியில் இருக்கார் ஆனா அவர் ஆதரவு பெரிய அளவில் இல்லை அதனால அவர் தான் வெற்றி பெறுவார் அப்படின்னு யாராலும் சொல்ல முடியலை. "Anybody but Romney" - ராம்னிய தவிர யாரு வேண்டுமானாலும் சரி- அப்படின்னு பலம் வாய்ந்த கிருத்துவ பழமைவாதிகள் குழு குடியரசு கட்சியில் இருக்கு. ராம்னிக்கு மாற்றா வேற ஆள அவங்க தேடறாங்க, அவங்க யாராவது ஒருத்தரை ஆதரிக்க முடிவு எடுத்தா ராம்னி காலி.

ராம்னியும் கிருத்துவர் தான் ஆனா அவர் மொர்மன் என்ற பிரிவை சார்ந்தவர். அது தான் அவருக்கு சிக்கலே. பெரும்பாலான குடியரசு கட்சிகாரர்கள் சீர்திருத்த சபையை(புரட்டதசுட்டன்\ Protestant) சார்த்த கிருத்துவர்கள். எவங்கலிசம் , பாப்டிசம், பெத்தகொசுத்தே,  மற்ற பிரிவுகள் எல்லாம் இதுல வருது. இவங்களுக்கு மொர்மன் பிரிவை சுத்தமா பிடிக்காது. சில பேர் அவங்க கிருத்துவர்களே அல்ல அப்படிப்பாங்க.

டீ பார்ட்டி
டீ பார்ட்டி குழு என்று திடீர்ன்னு ஒன்று 2009 வாக்குல குடியரசு கட்சியில் முளைத்தது. இவர்களை ஆரம்பத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட குடியரசு கட்சிக்காரங்க கண்டுக்கலை. ஆனா இவங்களை மீறி கொட்டை போட்ட ஆட்களால் பிரைமரி எனப்படும் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. இவங்க பலம் 2010 காங்கிரசு மற்றும் செனட் தேர்தலில் நன்கு வெளிப்பட்டது. இப்ப குடியரசு கட்சி கீழவையான காங்கிரசில் பெரும்பான்மை பெற்று இருக்குன்னா அதுக்கு டீ பார்ட்டி குழு தான் காரணம்.

ஆரம்பத்தில் இருந்த நிலை

டீ பார்ட்டி முதலில் மிச்சால் பாக்மன் அவர்களை ஆதரித்தது. அவர் முன்னனியில் இருந்தார், ரிக் பெர்ரி வந்தவுடன் எல்லாரும் அவரை ஆதரித்ததால் மிச்சால் பாக்மன் முன்னிலை தகர்ந்தது. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட குடியரசு கட்சி போட்டியாளர்க்கிடையேயான தருக்கத்தில் மோசமாக செயல் பட்டதால் (பலமுறை) இவரின் முன்னனி தகர்ந்தது. தருக்கத்தில் 9-9-9 என்று வரி விதிப்பு பற்றி எளிமையாக விளக்கியதால் கெர்மன் கெய்னுக்கு ஆதரவு பெருகியது. இதை அவரே எதிர்பார்க்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இவரின் ஆதரவு குறைந்தது. ராம்னிக்கு எதிரா உறுதியான வேட்பாளர் வேண்டும் என்பதால் நியுட் கிங்ரிச்க்கு ஆதரவு கூடியது. ஆரம்பத்தில் இவரின் போக்கு பிடிக்காமல் இவரின் குழுவில் பலர் விலகியதும் நடந்தது. இவரு போட்டி போடறது தண்டம் என்று பலர் நினைத்திருக்க திடீர் என்று இவருக்கு ஆதரவு பெருகியது.  பிரடி மே என்ற வீட்டு கடன் வழங்கும் நிறுவனத்திற்கு ஆலோசனை சொன்னதற்கு கூலியாக 1.5 மில்லியன் டாலருக்கு மேல் பெற்றது வெளியில் வந்ததால் இவரின் ஆதரவு குறைந்தது (அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டதில் இவ்வகையான வீட்டுக்கடன் கொடுத்த நிறுவனங்களும் காரணம், சகட்டு மேனிக்கு எல்லாருக்கும் கடன் கொடுத்தா கொடுத்த காசு திரும்பி வருமா), ராம்னிக்கு மாற்றாக யாரை ஆதரிக்கலாம் என்று பழமைவாதிகள் தடுமாறிக்கிட்டு இருந்தாங்க. ரான் பவுல் என்பவரை ஆதரிப்பது கடினம். ரான் பவுல் சுதந்திரவாதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவர். தாராண்மியவாத கொள்கையை கடைபிடிப்போர் அவரின் ஆதரவாளர்கள், இவர்கள் பெரும்பான்மையாக இல்லாவிடிலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். திடீர்ன்னு பென்சில்வேனியா மாநிலத்தின் சார்பாக அமெரிக்க மேலவையில்  செனட்டராக இருந்த ரிக் சாண்ட்ரமுக்கு ஆதரவு பெருகியது.

அயோவா
இந்நிலையில் உட்கட்சி தேர்தல் முதலில் நடைபெறும் அயோவா மாநிலத்தின் caucus நெருங்கி வந்தது.  caucus என்றால்  வேட்பாளரை தீர்மானிக்க சந்திக்கும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் என சொல்லலாம். அயோவா மாநிலத்தில் நடந்த வாக்கெடுப்பில் ராம்னி முதல் இடத்தையும் ரிக் சாண்ட்ரம் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள். வேறுபாடு 8 வாக்குகள் மட்டுமே. ரான் பவுல் மூன்றாவது இடத்தை பிடித்தார். ராம்னி 30,015 சாண்ட்ரம்  30,007, ரான் பவுல் 26,219 வாக்குகளும் பெற்றனர். 4வது இடம் பிடித்த கிங்ரிச் ராம்னிக்கு எதிராகவும் ரான் பவுலுக்கு எதிராகவும் தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளார். 5வது இடம் பிடித்த ரிக் பெர்ரி வாங்கடா தென் கரோனிலாவுக்கு (இது பழமைவாதிகள் நிறைந்த மாநிலம்) அங்க பார்க்கலாமுன்னு சொல்லிட்டார். 6வது இடம் பிடித்த மிச்சால் பாக்மன் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

 அயோவுக்கு அடுத்து
இந்நிலையில் அயோவாவில் கலந்துக்காத ஜோ ஹண்ட்சுமேன்  நியு ஹாம்சுபியர் மாநில உட்கட்சி தேர்தலில் கலந்துக்கறார். இவரும் மோர்மன் பிரிவை சார்ந்த கிருத்துவர். பழமைவாதிகளின் வாக்குகள் பல்வேறு வேட்பாளர்களுக்கு சிதறியதால் தான் ராம்னி அயோவாவில் வெற்றி பெற்றார் என்பதால் பழமைவாதிகள் அனைவரும் ஒரே வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என சில பழமைவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் சாண்ரோமை ஆதரிப்பது சிறந்தது எனவும் மற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளனர்.  நியு ஹாம்சுபியர் தேர்தலில் ராம்னி வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இவர் பக்கத்து மாநிலமான மாசசூட்ச்சசின் ஆளுனராக இருந்தவர் அதனால் இப்பகுதியில் இவருக்கு மற்றவர்களை விட செல்வாக்கு அதிகம். ஆனால் அவரின் உண்மையான சோதனைக்கட்டம் அதற்கடுத்த தேர்தல்களில் தான் இருக்கிறது.

வர்ஜீனியா கூத்து
வர்ஜீனியா மாநில தேர்தலில் கலந்துக்க மிட் ராம்னி, ரான்  பவுல் ஆகிய இருவர் மட்டுமே தகுதிபெற்று இருக்காங்க, மற்றவங்க எல்லாம் ஆட்டத்துக்கு சேர்த்துக்கப்படலை. கிங்ரிச் இப்ப வாசிங்டன் டிசி பெருநகரத்தின் எல்லையில் வர்ஜீனியாவில் மெக்லீன் என்ற இடத்தில் 1999 ல் இருந்து வசிக்கிறார்.வர்ஜீனியா குடியரசு கட்சி சட்டப்படி 10,000 வர்ஜீனியா வாக்காளர்களின் கையெழுத்தை பெற்று குடுத்திருந்தால் மட்டுமே உட்கட்சி தேர்தலில் கலந்துக்கமுடியும். இதை உரிய காலத்திற்குள் செய்தவர்கள் இருவர் மட்டுமே. செய்யாத மற்றவங்க இப்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்காங்க.

குடியரசு கட்சி ஆதரவாளரான என் நண்பனிடம் யாருடா வருவாங்க அப்படின்னு கேட்டேன். மிட் ராம்னி தான் கடைசியில் வெற்றிபெறுவார் பாரேன் அப்படின்னான். பார்க்கலாம். எனக்கென்னமோ நம்பிக்கையில்லை, 2008 குடியரசு கட்சி உட்கட்சி தேர்லை மறக்கமுடியுமா?

செவ்வாய், நவம்பர் 08, 2011

வேலாயுதம் - விமர்சனம் (ரசித்து மகிழுங்கள்)

நான் எந்த படத்துக்கும் விமர்சனம் எழுதுவதில்லை. இது முகநூலில் படித்தது பிடித்திருந்ததால் இங்கே வெட்டி ஒட்டிவிட்டேன். :-)))

வேலாயுதம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்த நொடியில் இருந்தே துவங்கிவிட்டது. அதிலும் விஜய் அணிந்திருந்த சூப்பர் ஹீரோ உடையை எதோ ஒரு வெள்ளைக்காரன் திருடி தன் வீடியோகேமில் பயன்படுத்தி இருப்பதை அறிந்து வியந்தேன். விஜய்க்குதான் எங்கெல்லாம் ரசிகர்கள்!!


நண்பர் ஒருவர் "வேலாயுதம் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்தாளமிக்க விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்" என்று முகநூலில் செய்தி அனுப்பியிருந்தார். எனக்குத் தெரிந்து என் பரம்பரை விரோதிகள் கூட இவ்வளவு அசிங்கமாக என்னிடம் ஒரு கேள்வியை கேட்டதில்லை! அதன் பொருட்டே இந்த விமர்சனம்.


எத்தனைப் பேருக்கு பழையதை மறந்து மீண்டும் புதிதாய் வாழும் வாய்ப்பு அமையும்? விஜய்க்கு அந்த வாய்ப்பு, அந்த வரம் ஒவ்வொரு படத்துக்கும் அமைந்துவிடுகிறது. தன் பழைய பட கதைகளை(??) மறந்துவிட்டு அடுத்த படத்தில் புதிதாக முதலில் இருந்து தொடங்குவார்.


வேலாயுதம் படம் ஓடத்துவங்கி சிறிது நேரத்தில் தியேட்டரில் ஒரே ரகளை, சத்தம். ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். "என்னடா டேய்!! வேலாயுதம்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு திருப்பாச்சி படம் போட்டு ஏமாத்துறீங்களா?" என்று. பின் தியேட்டர் உரிமையாளர் சரண்யா மோகனையும், திருப்பாச்சியில் தங்கையாய் வந்த மல்லிகாவையும் ஒப்பிட்டு, "அந்த பொண்ணு சிவப்பு, இந்த பொண்ணு கருப்புய்யா! பாருங்க" என்று விளக்கி சமாதானம் செய்தார். இதில் தங்கச்சியை அழைத்துக்கொண்டு சென்னை வந்து அங்கிருக்கும் தீவிரவாதிகளை அழிக்கிறார். "ஏய் இதானப்பா திருப்பாச்சில பண்ணாரு"னு சொல்லாதீங்க. அது ரவுடி, இது தீவிரவாதி!


"அவரு யாரு தெரியுமா?" என போன படத்தில் ரசிகர்களைப் பார்த்து கேட்ட அதே கிழவரே இந்த படத்திலும் கேட்டது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இந்த வசனத்தை வேறு கிழவரை வைத்து எடுத்திருந்தால் சூப்பராக இருக்கும் என 'variety' எதிர்பார்க்கும் விஜய் ரசிகர்கள் முணுமுணுத்தார்கள்.


பின் "சொன்னா புரியாது செத்தாதான் புரியும்" என்ற அறிமுகப் பாடலை பாடி ஆடினார் விஜய். பாடல் மிக வித்தியாசமாக சமூக அக்கறையுடன், ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும்படி இருந்தது. போன பட அறிமுகபாடலில் போட்டிருந்த சட்டையை மாற்றி இதில் வேறு சட்டை அணிந்து ஆடியது ஒவ்வொரு படத்திற்கும் விஜய் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதைக் காட்டியது. இளைஞர்களுக்கு அவர் ஒரு inspiration!


ஹன்சிகா மோத்வானி விஜய் மேல் காதல்வெறிகொண்டு அலைகிறார். பெண் இனத்தையே பெருமைப்படுத்தும் இது போன்ற கதாப்பாத்திரங்கள் விஜய் படத்தில ஏராளமாக பார்க்கலாம். பின் ஜெனிலியா வருகிறார். அவருக்கும் விஜய் மீது காதல் வெறி! பெயரைக்கேட்டால் "வேலூஊஊஊஊஊஉ வேலாஆஆஆயுதம்ம்ம்ம்ம்" என அமாவசை இரவில் ஊளையிடுவதைப் போல ஸ்டைலாக பதில் சொல்லும் ஆணின் மேல் யாருக்குதான் காதல் வராது?


என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சியைப் பற்றி சொல்கிறேன். வில்லன் "காட்டுடா காட்டுடா" என சொன்னதும், விஜய் "நான் சும்மாவே காட்டுவேன். நீ காட்டு காட்டுனு சொல்ற" என பதில் சொன்னதும் அதிர்ச்சியின் உறைந்துபோனேன். எதையோ காட்டப் போகிறார் என பயந்து அனைவரும் கண்களை மூடிக்கொண்டவுடன் துவங்கியது வில்லன் பறந்து போய் விழுந்த அந்த புதுமையான ஆக்சன் காட்சி!


உலக திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமையை செய்துள்ளார் ரீமேக் ராஜா. வேற்றுமொழி திரைப்படத்தை ரீமேக் செய்யும் கேவலமான உலகத்தில், வேற்றுமொழி வீடியோகேமை ரீமேக் செய்திருக்கிறார். ரசாயன ஆலையில் ரயிலை மோதச் செய்ய வில்லன்கள் போடும் திட்டம், அதற்காக வில்லன் வைத்திருக்கும் மேப், கிராஃபிக் காட்சிகள் என அனைத்துன் 'ஹிட்டன் டேஞ்சரஸ்' என்ற கணிணி விளையாட்டில் வருபவை. தமிழ்ப்படத்தை அடுத்த கட்டத்துக்கு நகட்டிய ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.


பின் ட்ரெயினை விஜய் sudden break போட்டு நிறுத்தி ஆலையைக் காப்பாற்றுகிறார். நல்லவேளை அந்த ட்ரெயினில் 'டிஸ்க் ப்ரேக்' இருந்தது! அருமையான படம் அதோடு முடிந்துவிட்டதே என ரசிகர்கள் வருந்திய நேரத்தில் 'ரத்தத்தின் ரத்தமே' என்ற பாடல் வருகிறது. பின் சரண்யா மோகன் சாகிறார். ஏன் சாகிறார் என கேட்காதீர்கள்! அவர் உயிர் போய்விட்டது அதனால் சாகிறார்!


அதன் பின் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வில்லனை கொல்கிறார் வேலாயுதம். முதல் பாதியில் ஹன்சிகாவின் வயிற்றையே காண்பித்துக்கொண்டிருந்தவர்கள் இறுதி சண்டைக்காட்சியில் விஜயின் வயிற்றையே காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எதற்கு என தெரியவில்லை! ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் சம உரிமை கொடுத்து காட்டினார்களோ என்னவோ!


மக்களுக்கு அறிஞர் டாக்டர் விஜய்யின் நீண்ட அறிவுரையோடு படம் முடிந்தது. விஷால் போன்ற பொடியன்கள் லோக்கல் ரவுடிகளுடன் இன்னும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது விஜய் ஆஃப்கன் தீவிரவாதிகளோடு மோதுவதன் மூலம் தன் திரைப்பயணத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். தமிழ்ப்படங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் வித்தியாசமான முயற்சிதான் இந்த 'வேலூஊஊஊஊஊஊ வேலாஆஆஆஅயுதம்ம்ம்ம்'!