வணக்கம்
வெள்ளி, ஜனவரி 30, 2009
போர் நிறுத்தம் குறித்து புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்
இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில்,
இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?.
இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது.
புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.
போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.
இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார் அன்பழகன்.
திமுக ஈழதமிழர்களுக்கு உதவும் என இனியும் நம்புகிறீர்களா? அவர்களுக்கு ஆட்சி தான் தேவை. இதே திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் வேற மாதிரி அறிக்கை விட்டிருப்பார்கள்.
திங்கள், ஜனவரி 26, 2009
பத்மா விருது யாருக்கு?
2009-ம் ஆண்டுக்கான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளை அரசு அறிவித்துள்ளது. தகுதியில்லாத சிலருக்கும் இது கொடுக்கப்பட்டுள்ளது என்பது சிலரின் அங்கலாய்ப்பு. தமிழ்நாட்டிலிருந்து யாருக்கும் பத்ம விபூசன் கிடைக்கவில்லை.
வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், கொஞ்சிவரம் ஸ்ரீரங்காச்சாரி சேசாத்திரி, சரோஜினி வரதப்பன் , ஜெயகாந்தன் போன்றோருக்கு பத்ம பூசன் கிடைத்துள்ளது.
விவேக், ஐராவதம் மகாதேவன், அருணா சாய்ராம் , சுப்ரமணியம் கிருஷ்ணசாமி, P.R.கிருஷ்ணகுமார் , மருத்துவர் R.சிவராமன், பேராசிரியர் தணிகாச்சலம் சடகோபன் , ஆறுமுகம் சக்திவேல், ஷேக் காதர் நூர்தின் போன்றோருக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது. நல்லது.
எதற்காக அவர்களுக்கு இவ்விருதுகள் கொடுக்கப்பட்டது என்று அரசு தெரிவிக்கலாம். பல பேர் யார் என்றே தெரியவில்லை, எப்படி அவர்களை பற்றி அறிந்து கொள்வது? தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களைப்பற்றியே தெரியாத போது மற்ற மாநிலத்தவர்களை பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது? பத்மா விருது வாங்கியவர்களின் பட்டியலை தெரிவிக்கும் அரசு தளத்தில் அவர்களைப்பற்றி சிறு குறிப்பாவது இருந்தால் தேவலை. இது பத்மா விருதுக்கு பெருமை சேர்க்கும்.
விவேக், ஐராவதம் மகாதேவன், ஆறுமுகம் சக்திவேல், கணபதி ஸ்தபதி, ஜெயகாந்தன் ஆகியோரைத்தவிர மற்றவர்களைத் தெரியாது. சுப்ரமணியம் கிருஷ்ணசாமி சென்னை தூர்தர்சனில் குறும்படம் (கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்) காட்டுபவர் என்று நினைக்கிறேன். அவரைப்பற்றிய குறிப்பு இருந்தால் இந்த ஐயம் எழுந்திருக்காது.
அப்புறம் அனைத்திந்திய அளவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், டோனி, ஹர்பஜன் சிங் பற்றி பெரும்பாலோருக்கு தெரியும். இஃகி இஃகி....