வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 12, 2010

விவாகரத்து

ஊர்ல பேசிக்கிட்டு இருந்தப்ப எங்கம்மா நம்ம சின்னுசாமி மகளுக்கு போன வருசம் கல்யாணம் ஆச்சுல்ல, அதுக்குள்ள ஏதோ மனக்கசப்பு வந்து புருசன்  வேண்டான்னு வெட்டிக்கிட்டு வந்துட்டாளாம் என்று சொன்னாங்க.

சின்னுசாமி மகள் மட்டுமா?? முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருக்கும். இப்ப ஆன்னா ஊன்னா விவாகரத்துன்னு ஆகிப்போச்சு. அதுக்கு பல காரணங்கள்.

பொருளாதாரம்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரும்படி ஆண்கள் கையில் இருந்தது. இப்ப அப்படி அல்ல, பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கறாங்க. துணையில்லாம வாழராங்க. பெண்களை அதிகம் படிக்க வைக்காம இருந்தது ஒரு காலம், ஏன்னா பொண்ணு நிறையா படிச்சா நிறைய படிச்ச மாப்பிளையா பார்க்கணும் அந்த மாதிரி மாப்பிளைக்கு நிறைய சீர் வரிசை செய்யனும். இதுக்கு பொண்ண அதிகம் படிக்க வைக்காம இருந்தா சிக்கலே இல்லை, அதுவும் அல்லாமல் படிச்சா எங்க வேலை கிடைக்கும்? மென்பொருள் துறை வேலைவாய்ப்புகள் இதனை புரட்டி போட்டுள்ளது.

நான் எட்டாவது படித்த பொழுதபோது கூட படித்த நண்பனின் அக்கா பத்தாவது படித்தார்கள், அவங்க வகுப்பில் முதல் பத்து இடத்துக்குள் வருவாங்க. எட்டாவதுடன் அவங்க வேற ஊருக்கு போயிட்டாங்க. இரண்டு ஆண்டு கழித்து ஒரு குழந்தையுடன் அவனோட அக்காவை பார்த்தேன். நன்றாக படித்த பெண்ணை பத்தாவது முடித்த கையுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பெற்றோரின் சுமை குறைஞ்சது பாருங்க ஆனா என் நண்பனின் அக்காவோட நிலை? இந்த மாதிரி பலபேர் உங்களுக்கும் தெரிந்து இருப்பார்கள்.

பெண்களை படிக்க வைக்க இருந்த தயக்கம் கொஞ்சம் ஒழிந்தது. அடுத்தபடியா படித்த பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெரிய தயக்கம் இருந்தது, அப்படியே அனுப்ப ஒத்துக்கிட்டாலும் வெளியூரா? மூச். இப்ப இந்த நிலையிலும் நல்ல மாற்றம். அதிகளவில் நகரங்களில் உள்ள மகளிர் விடுதிகள் இதற்கு சான்று.

பொருளாதார நிலையில் பெண்களின் நிலை மேம்பட்டு  உள்ளதால் அடிமையாக இருக்க அவர்கள் மறுக்கிறார்கள். ஆணாதிக்கம் மிக்கவன் கணவனாக வந்தால் பழைய காலம் போல் அல்லாமல் குடும்பநல நீதிமன்றத்தை அனுகிவிடுகிறார்கள். கல் ஆனாலும் கணவன்,  புல் ஆனாலும் புருசன் போன்றஆணாதிக்க பழமொழிகள் எல்லாம் இப்ப செல்லாது என்பது பலருக்கு புரிவதில்லை.

பெற்றோர்
செல்லம் கொடுத்து வளர்த்த பெண், கணவனுடன் கோபம் கொண்டு சீராட்டிகிட்டு வந்தா பெற்றோர் அவளை சமாதான படுத்தனும் அதை விட்டு விட்டு பெண்ணை விட இவர்கள் அதிகம் சண்டை போட்டு சமாதானத்திற்கான வழிகளை அடைத்து விவாகரத்து தான் ஒரே வழி என்று ஆக்கி பெண் வாழ்வை சிதைப்பவர்கள்.

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்குமா? அவற்றை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் தகுந்த அறிவுரை கூறி அதை சரி செய்ய முயலவேண்டும். ஆனால் சிலர் அப்படி நடப்பதில்லை. நிறைய இடங்களில் பெற்றோர் (ஆண் மற்றும் பெண்) மீது தான் குற்றம் சொல்ல வேண்டியதாக உள்ளது.

நானும் நட்சத்திரம் ஆயிட்டேன்

என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தமிழ்மணத்துக்காரங்க நட்சத்திரமா தேர்ந்தெடுத்து இருக்காங்க. எப்படி இந்த முடிவு எடுத்தாங்கன்னு தெரியலை. என் இடுகைகளை பார்த்த பின்னும் என்னை கூப்பிட்டுறுக்காங்கன்னா அதுக்கு காரணம் என்னுடைய நல்லூழ் தான்.  இந்த தேதியில் நட்சத்திரமா இருக்க சம்மதமான்னு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாங்க அதுக்கு நான் பதில் அனுப்பலை, காரணம் அந்த மின்னஞ்சலை சரியான சமயத்தில் நான் பார்க்கலை, இரண்டு வாரம் கழித்து தான் பார்த்தேன். பார்த்ததும் அடடா வாய்ப்பு போச்சேன்னு கவலைப்பட்டாலும், மன்னிக்கவும் இந்த தேதியில் என்னால் இருக்க முடியாது, வேற தேதி இருந்தா சொல்லுங்கன்னு பதில் போட்டேன். அப்புறம் இரண்டு நாளைக்கு ஒரு தரம் தமிழ்மணத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பார்ப்பதே பொழப்பா போச்சு. ஒரு நாள் ஏப்ரல் 12ல் தொடங்கும் வாரத்துக்கு நட்சத்திரமாக முடியுமான்னு கேட்டாங்க.  இந்த வாய்ப்பை விடுவனா?  எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் அப்படின்னு 3 பதில் மின்னஞ்சல் அனுப்பிட்டேன்.அவங்க மனசு மாற கூடாது பாருங்க.

என்னை பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. தமிழ்மண நட்சத்திரம் என்பதால் ஏதாவது சொல்லியாகனும் இல்லையா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த 24 நாடுகளில் ஒன்றாகிய கொட நாட்டின் மன்னிக்க வாழவந்தி நாட்டின் துணை நாடாகிய தூசூர் நாட்டிலுள்ள பெரிய ஊரில் பிறந்து வளர்ந்தேன், வாழவந்தி நாட்டுலயும் அது தான் பெரிய ஊர். ஓர் ஆண்டு சிலிகான் பள்ளத்தாக்கில் குப்பை கொட்டிட்டு 9 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாசிங்டன் பெருநகரத்திற்கு அருகில் வர்ஜீனியா மாநிலத்தில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். தமிழில் புலமை கிடையாது, ஆர்வம் உண்டு.

பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுதெல்லாம் தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்ததில்லை. பள்ளி முழுஆண்டு விடுமுறையில் எங்கப்பா இந்தி படிக்க சொல்லி தொல்லை படுத்தினார். அதனால் நான் இந்தி எதிர்ப்பாளனாக மாறினேன். விடுமுறையில் விளையாட விடாம இந்தி படி சிந்தி படின்னு... அப்பாக்களே இப்படித்தானோ? அப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இராஜீவ்காந்தி தான் பிரதமர். ஏன் நடந்தது? காரணம் தெரியவில்லை, அப்ப திமுக எதிர்கட்சி, ஆளுங்கட்சியா இருந்தா கண்டுக்காம விட்டுருப்பாங்களோ என்னவோ. ஏன் அப்ப இராஜீவ்காந்தி பிரதமர் அப்படின்னு சொன்னேன்? இல்லைன்னா என்னை  ரொம்ப ரொம்ப யூத்துன்னு நீங்க நினைச்சிருவீங்களேன்னு தான். இந்தியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் வெறியர்கள் என்ற கருத்தாக்கத்தின் படி நான் தமிழ் வெறியன் ஆனேன். அமெரிக்கா வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆர்வம் அதிகமாகியது. 2005 நவம்பர் மாதத்தில் முதல் இடுகையை இட்டேன் அதனால் நான் ஒரு மூத்த பதிவர் என்பதை விருப்பம் இல்லாவிடிலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதாவது 6 ஆண்டுகளாக நான் அப்பப்ப வலைப்பதிவு எழுதிக்கிட்டு வலைப்பதிவின் தொடர்பு அறுந்து போகாமா பார்த்துக்கிட்டிருக்கேன்.

என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வைத்திருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது).

குறும்பன் என்ற பெயரை வைச்சது நண்பனுக்கு பின்னூட்டம் போட. உண்மையான பெயரை வெளியில் சொல்லல. அது வசதியா இருந்ததால அப்படியே தொடர்ந்தேன், இப்ப தமிழ்மணம் நட்சத்திரம் ஆகியிருக்கறதால அந்த வசதியை விட்டு கொடுக்கனும்மா என்ன? அதனால குறும்பன் என்ற பெயரிலேயே தொடர்கின்றேன்.

இந்த வாரம் குறைந்தது ஏழு இடுகைகள் உறுதி.  ஆதரவு காட்டுங்கப்பா. (ஆதரவு காட்டவில்லை என்றாலும் நான் இடுகை இடுவதில் இருந்து விலகமாட்டேன்). 

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

கோவை - மாநாடு - சாலை

கோவையின் வழியாக தேநெ 47, தேநெ 67, தேநெ 209 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. திருச்சி, தஞ்சை, கரூர் பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 67ஐயும் சேலம், ஈரோடு, சென்னை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 47ஐயும் திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 209ஐயும் பயன்படுத்துவார்கள்.

கோவைக்கு தொழில் நிமித்தமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பஞ்சாலைகள் நிறைய இருக்கா அதனால் சுமையுந்துகளும் அதிகமாக வரும். வடநாட்டு வண்டிகள் நிறைய இங்கு வரும். பக்கத்தில் மற்றொரு பெரிய தொழில் நகரம் திருப்பூர் இருக்கிறது, அங்க காசு இருக்கறவங்க எதுக்கெடுத்தாலும் இங்க தான் வருவாங்க. பல கல்லூரிகளும், பெரிய மருத்துவமனைகளும் உள்ளதால் மேற்கு மாவட்ட மக்கள் இங்கு தான் அதிகம் வருவாங்க.

நான் ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்ற போது பெருமாநல்லூர் வரை விரைவாக போக்குவரத்து நெரிச்சல் இல்லாமல் போனேன். அதுவரை இரட்டை வழி சாலையும் இருந்தது. பெருமாநல்லூரில் திருப்பூரில் இருந்து வரும் வண்டிகள் இணைந்து கொள்ளும். சாலையில் செல்லும் வண்டிகளின் எண்ணிக்கையும் இருமடங்காக பெருகிடும். அங்கிருந்து ஒற்றை வழி சாலை தான். வண்டி மெதுவாக நகர்ந்து தான் செல்லும். நம்ம வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டாகிடும். இது வழமை.
மற்ற சாலைகளில் போக்குவரத்து எப்படி என்று தெரியாது. தெரிஞ்சவங்கதான் சொல்லனும்.

ஜூன் மாதத்தில் செம்மொழி மாநாடு நடக்கப்போகுது. அப்ப மாநாட்டு கூட்டம் கோவையை மொய்க்கப்போகுது. சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் தே.நெ 47 ஐ பயன்படுத்தி தான் கோவைக்கு வரனும். அப்ப போக்குவரத்து நெரிச்சல் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்.

தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் இரட்டை வழி சாலைகளாக உள்ள போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரும் தொழில் நகருமான கோவைக்கு இரட்டை வழி சாலை இல்லாதது பெரிய குறை. தி. ரா. பாலு அமைச்சரா இருந்தப்ப தமிழகத்தின் நெடுஞ்சாலைகளுக்கு நிறைய பணம் ஒதுக்கி நெடுஞ்சாலைகளை விரைவாக இரு வழி சாலைகள் (4 வழி) அமைத்து புண்ணியம் பண்ணினார். ஆனால் ஏனோ கோவைக்கு மட்டும் அவர் செய்யவில்லை. கோயம்புத்தூர்காரங்க ஏதாவது எக்குதப்பா நடந்து இருப்பாங்க. பொங்கலூர் பழனிச்சாமிக்கும் பாலுவுக்கும் தகராறா? ஏதோ ஒன்னு. கோவைக்கு இரட்டை வழி சாலை இன்னும் கிடைக்கலை. இப்ப பாருங்க எவ்வளவு தொந்தரவுன்னு.

ஏதாவது ஒரு வண்டி பழுதுபட்டு நின்றால் இரு பக்கமும் போக்குவரத்து பாதிக்கப்படும். அதிலும் நிறைய வண்டிகள் செல்லும் சாலையில் ஏற்பட்டால் சொல்லத்தேவையில்லை. மாநாட்டை ஒட்டி நிறைய வண்டிகள் செல்லும் போது அவ்வாறு பழுதுபட்டு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் தேவையில்லாமல் மாநாடு நடக்கும் நாட்களில் கோவைக்கு வண்டிகளில் செல்லாதீர்கள். தொடருந்தில் செல்லலாம், மாநாட்டை ஒட்டி சிறப்பு தொடருந்துகள் இயக்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.