வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், மார்ச் 09, 2017

அமுக்குப் பிசாசு

நாங்க ஐந்து நண்பர்கள் சென்னையில் தங்கியிருந்தோம். நானும் இன்னொரு நண்பனும் எப்பவும் மொட்டை மாடியில் தூங்குவது தான் வழக்கம். அங்கிருந்து கொஞ்சம்  தள்ளி இன்னொரு மாடி வீடு இருந்தது அந்த வீட்டுக்காரங்களின் அழகான கல்லூரி பொண்ணு காலையில் மாடிக்கு வந்து உடற்பயிற்சி செய்வா ஆனா அங்கிருந்து பார்த்தா நாங்க மாடியிலிருந்து அவளை பார்ப்பது தெரியாது, ஏன்னா எங்களது இரண்டு மாடி கட்டடம் அவங்களது ஒரு மாடி கட்டடம். சுற்றி மாடி கட்டடம் இல்லாதது எங்களுக்கு வசதியாக இருந்தது. அப்படியிருந்தாலும் நாங்க எச்சரிக்கையா ஒளிந்து இருந்து தான் பார்ப்போம். அவ போனதையும்  நாங்களும் அறைக்கு போய் விடுவோம். அப்புறம் அவ அண்ணன் மேல வருவான் அவ அம்மா துணி காயப்போட வருவாங்க. இவங்கள் வந்தா எங்களுக்கென்ன வராட்டி எங்களுக்கென்ன.

என் மற்ற அறை நண்பர்களுக்கு இது தெரியும் ஆனா என்னை மாதிரி பொண்ணுங்களை கண்டால் வாயில் எச்சில் ஒழுகுபவர்கள்  அல்ல அவர்கள்  என்பதால் என் மாடி தூக்கத்துக்கு இடையூறு இல்லாமல் இருந்தது. இது கிட்டத்தட்ட ஓராண்டு நல்லா போய்க்கிட்டு இருந்தது.

இந்த சமயத்தில் தான் ஒரு நாள் நடு இரவில் என் முகத்தை அமுக்கிக்கிட்டது போல இருந்தது, திமிறினேன் யாரோ என்  கையையும் காலையும் அமுக்கிட்ட மாதிரி இருந்தது என்னால எதுவும் செய்ய முடியவில்லை.  சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு முழித்துக்கொண்டேன். சில்லுன்னு காத்து வீசியபோதும் என் முகம் உடம்பு முழுக்க வியர்வை. என்  செப்பத்தின் (இதயம்) தேளை (லப் டப் என்னும் இதய ஒலி) ஒரு பர்லாங் தூரத்துக்கு கேட்பது மாதிரி அவ்வளவு சத்தமா அடிச்சிக்சி.  என் நண்பனை பார்க்கிறேன் போர்வையை இழுத்துப்போர்த்தி குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கான். உடனே அவனை எழுப்பி இவ்விடயத்தை சொன்னேன். அவனுக்கும் ஏதும் புரியவில்லை. உடனே போர்வையை சுருட்டிக்கிட்டு அறைக்கு வந்துவிட்டோம், அன்றைய இரவு என் தூக்கமே போச்சி. அன்றைக்கு அறைக்கு வரும் போது நான் சுடுகாட்டு பக்கம் இருந்து வந்தேன் அப்போது பிணம் எரிந்து கொண்டு இருந்ததை பார்த்தேன்.

மற்றவர்கள் பயப்படலாம் என்று இரவே கூற என்னை தடுத்து விட்டதால், விடிந்ததும் எனக்கு இரவு மொட்டை மாடியில் நடந்ததை கூறினேன். சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்த்ததால் கெட்ட கனவு வந்திருக்கும் என்றனர். ஆனா எனக்கு பயம் போகலை நான் மொட்டை மாடிக்கு போய் தூங்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். மாடியில் தூங்க இனி வரமுடியாது என்று கூறிவிட்டான்.  .இன்னொரு நண்பன் வீரமானவன் மனத்திடம் உள்ளவன் பேய், பிசாசு இதுக்கெல்லாம் பயப்படாதவன், நான்  சொல்வதைக்கேட்டு கடுப்பாயிட்டான். இனிமே நான் உங்கூட மேல வந்து தூங்கறேன் எது வருது என்று பார்க்கலாம் என்றான். என்னால அந்த அழகு தேவதையை விடிந்ததும் பார்க்காம இருக்க முடியாது என்பதால் சரின்னு ஒத்துக்கொண்டேன்.

புதுசா மாடியில் தூங்க வந்த நண்பனோட என் தூக்கம் மாடியில் நான்கு மாதத்திற்கு நல்லா போயிக்கிட்டு இருந்தது. என் நண்பனுக்கும் எனக்கு நடந்த மாதிரியே பேய் அமுக்கிருச்சு.  நெஞ்சாங்குலை படபடக்க உடம்பு வியர்த்து கொட்ட நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி நடந்ததை கூறி அறைக்கு போகலாம் என்றான். இரண்டு பேரும் பாயையும் போர்வையும் சுருட்டிக்கிட்டு அறைக்கு அடிச்சுக்க பிடிச்சுக்கன்னு ஓடிப்போனோம்.

விடிந்ததும், இரவு மொட்டை மாடியில் நடந்ததை எங்கள் அறையின் மிக திடமான மனதும் வலுவும் உடைய என் நண்பன் விளக்கினான். அவன் வரும் வழியில் சுடுகாடு எல்லாம் கிடையாது. நிறுவனத்திலிருந்து எங்கள் அறைக்கு அவன் வரும் சாலை மக்கள் நடமாட்டம் மிக்கது. அவனுக்கும் எனக்கு நடந்தது போலவே நடந்ததால் மாடியில் பிசாசு இருக்குன்னு முடிவு செய்தோம். துணி காயப்போட மாடிக்கு தான் போகனும். குறைந்தது மூன்று பேர் சேர்ந்து தான் மாடிக்கு போவோம். 9 மணிக்கு மேல தான் போவோம் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு துணி காய்ந்தாலும் காயாவிட்டாலும் அறைக்கு எடுத்து வந்து விடுவோம்.

இரண்டு வாரங்கள் கழித்து என் நண்பன் என்னை பார்க்க வந்தான். அவனிடம் எனக்கு நேர்ந்ததையும் என் நண்பனுக்கு நேர்ந்ததையும் கூறினேன். அவன் இத்தெருவின் கோட்டு வீட்டில் அதாவது கடைசியில் உள்ள வீட்டில் இரண்டு  ஆண்டுகளுக்கு முன் இளம் பெண்  தன் இரண்டு வயது குழந்தையை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதுக்கு காரணம் தன் கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் என்றும் மாமியார் வீட்டு கொடுமை என்றும் பல விதமாக கூறுகிறார்கள் என்றும் அப் பெண் பேய் அமுக்கி இருக்கலாம் என்றும் கூறினான். நாங்க இங்க வந்து இன்னும் மூன்று மாதங்கள் ஆனா தான் இரண்டு ஆண்டு ஆகும் என்பதால் இவ்விபரம் எங்களுக்கு தெரியவில்லை.  நிறைவேறா ஆசையுடனோ ஏமாற்றப்பட்டதாகவோ நினைக்கும் பெண்ணோ ஆணோ தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பேயாக பிசாசாக திரிவார்கள் என்றும் அவர்கள் மற்றவர்களின் மூச்சை அடக்கி கொல்ல முயல்வதால் அப்பிசாசை அமுக்குப் பிசாசு என்று அழைப்பார்கள் என்று அவனின் ஆயா கூறியுள்ளதாகவும் கூறினான்

அமுக்குப் பிசாசிடம் இருந்து  போராடி தப்பிய நாங்கள் ,சரி நான், இனி மாடிக்கு தூங்கப்போவோம் \வேன்? அழகு தேவதையை விடிந்ததும் பார்ப்பதை விட உயிர் முக்கியமில்லையா? வாடகைக்கு வீடு பார்க்கும் படலம் தொடங்கி விட்டது.

திங்கள், மார்ச் 06, 2017

காருண்யா என்னும் கொலைக்களம்.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா  இப்போது பெரிய சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. ஆனா அவர்களை விட ஏழு மடங்கு நிலத்தை வனப்பகுதியில் வளைத்துப் போட்டு யானைகளின் வழித்தடத்தை மறித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் பால் தினகரனின் காருண்யா குழுமம் பற்றி இது வரை யாரும் மூச்சு விடவில்லை. அது ஏனோ? நமக்கு ஈசாவோ காருண்யாவோ சட்ட விரோதமாக வளைத்துப் போட்டுள்ள வனத்துறையின் நிலங்கள் பற்றி தெரியாது. நான் அதைப் பற்றி சொல்லப் போவதில்லை.

பல ஆண்டுகளாக நிறைய பேரிடம் காருண்யா பற்றி பேசியிருக்கிறேன் ஆனால்எ இவர்களைப் பற்றி எழுதி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இப்ப ஈசா சூட்டுல்ல சொன்னா சிலருக்கு மண்டையில் ஏறலாம்.

என் எதிர்த்த வீட்டு நண்பன் கூறிய உண்மைச் சம்பவங்கள் இது.  இது இப்போ கூறினது இல்லை. கூறி கிட்டதட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. அவனுக்கு மருத்துவம் படிக்கனும் என்று ஆசை,  1992ஆம் ஆண்டு எடுத்த மதிப்பெண்கள் பற்றாததால் மீண்டும் தேர்வு எழுதினான் அப்பவும் மருத்துவம் படிக்கும் அளவு மதிப்பெண் பெறவில்லை அதனால் காருண்யாவில் பொறியியல் (1993-1997) சேர்ந்தான்.

அங்கு எல்லோரும் கல்லூரி விடுதியில் தான் தங்க வேண்டுமாம். வீடு கல்லூரிக்கு அடுத்த தோட்டம் என்றாலும் அவர்களுக்கும் கல்லூரி விடுதி தான். வீட்டிலிருந்து எம்மாணவரும் கல்லூரிக்கு வரமுடியாது அனுமதியில்லை. யாரும் பொட்டு வைத்துக்கொள்ளக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக் கூடாது. யாரும் திரு நீறு, குங்குமம், சந்தனம் வைத்துக்கொள்வது கூடாது, அவை\ தினகரன் குடும்பத்தால் அதாவது கல்லூரி நிருவாகத்தால் தடை செய்யப்பட்டவை.

இதனால் பல மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கோபம். என்ன செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளியில் போய் வர அனுமதியுண்டு அதனால் ஞாயிறன்று நகர பேருந்து மூலம் அருகிலுள்ள சின்மயா மிசனுக்கு போவார்கள். இப்படித்தான் தங்கள் எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்தார்கள். இதில் சாமி என்றாலே காத தூரம் ஓடுபவனும் அடக்கம். அப்ப  எந்த அளவு நொந்து போயிருப்பார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

தேர்வு சமயத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது அப்பாடத்தை நடத்திய ஆசிரியர் மாணவர்களுக்காக அதற்காக உள்ள அறையில் செபம் செய்து கொண்டிருப்பார். எதுக்கய்யா செபம்? ஒழுங்காக சொல்லிக்கொடுத்திருந்தால் அப்பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கப்போகிறார்கள். இவரின் இப்போதைய செபத்தால் ஏதும் மாறப்போகிறதா?

மதமாற்ற முயற்சிகளும் விடுதியில் நடக்குமாம். அதன் விளைவாக சிலர் மதம் மாறியும் உள்ளார்கள். இங்கு நிறைய மலையாள கிறுத்துவர்களும் படிக்கிறார்கள்.  அதில் சிலர் பெரும் பணக்கார மலையாள கிறுத்துவர்கள்.

1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களுக்கும் நிருவாகத்துக்கும் மோதல். மாணவர்களுக்கு தலைமை பெரும் பணக்கார மலையாள கிறுத்துவ மாணவன். நிருவாகம் காலிப்பயல்களை இரும்பு தடிகளுடன் விடுதியில் இறக்கி காருண்யம் இல்லாமல் மாணவர்களை தாக்கியுள்ளது. பலருக்கு மண்டை உடைந்தது. காயமுற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

விடுதி மூடப்பட்டது.  தலைவன் அசரலை, கேரளாவில் இருந்து ஆட்களை கொண்டாந்தான். கோயமுத்தூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். எந்த தமிழ் இதழ்களும் அதை துண்டு செய்தியாக கூட போடவில்லை. இந்துவோ இந்தியன் எக்சுபிரசோ தான் ஒரு முறை துண்டு அதாவது பெட்டி செய்தியாக போட்டது. இத்தனைக்கும் ஆதாரத்துடன் அனைத்து இதழ்களிடமும் கல்லூரி நிருவாகம் செய்ததை சொல்லி இதழில் எழுதுமாறு கேட்டனர். காவல் துறையில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை. கல்லூரி சார்பில் எதிர் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தினகரனின் வீச்சு அப்படிப்பட்டது.

இந்த அடிதடி கேரள இதழ்களில் இடம்பெற்றது. மாணவர்கள் கோயமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடமும் புகார் அளித்துள்ளனர்.  அப்போது திமுகவின் ஆட்சி என்பது தெரியும் தினகரனை பகைத்துக்கொண்டால் திருநெல்வேலி பக்கம் சில ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் திமுகவும் கண்டு கொள்ளவில்லை.

1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களை கல்லூரி நிருவாகம் இறுதில தேர்வை (8th semester எழுத அனுமதிக்க வில்லை. மன்னிப்பு கேட்டால் தான் அனுமதி என்றதால் மன்னிப்பு கேட்ட  நாலைந்து பேர் மட்டும் எழுதினர். மற்றவர்கள் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை.  என் நண்பன் பிரச்சனையில் கலந்து கொள்ளாமல் வீட்டுக்கு வந்து விட்டாலும் மன்னிப்பு கேட்க மறுத்து அடுத்த முறை தேர்வு எழுதி 1998 தான் பட்டம் பெற்றான். கல்லூரியில் ஒவ்வொரு தேரவிலும் 75% இக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மற்றவர்களுடன் இணைந்தே தேர்வு எழுதினான். அவங்க அப்பா கண்டிப்பானவர் எப்போதும் கல்லூரி நிருவாகத்தை ஆதரித்து பேசி வந்தாலும் இறுதி தேர்வை மன்னிப்பு கேட்டு எழுத வேண்டும் என்பதை புறக்கணித்து இறுதியில் மாணவர்கள் பக்கம் நின்றார் என்பதையும் சொல்ல வேண்டும்.

இப்போ மாணவர்கள் வெளியில் தங்கி கல்லூரிக்கு வரலாம் என்று கேள்விப்பட்டேன்.  அதுக்கு 1997இல் அடிவாங்கி மண்டை உடைந்து நடந்திய போராட்டமே காரணம். இப்போது பூ வைக்க, பொட்டு வைக்க, திருநீறு வைக்க அனுமதியுண்டா என்று அறியேன். போராடாமல் அடிப்படை உரிமை கூட இக்காலத்தில் கிடைக்காது.

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

தமிழகத்தின் குழப்பமும் ஒன்றிய அரசின் சித்து விளையாட்டும்

தமிழகம் தற்போது கடும் குழப்பத்தில் உள்ளது, இந்த கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க திமுகவும் ஒன்றிய ஆளும் அரசான பாசகவும் முயல்கின்றன.

அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களே முதல்வராக வரவேண்டும்.  எட்டாந் தேதி இரவு வரை ஆளுநர் சென்னைக்கு வரவில்லை. அதாவது அடுத்த முதல்வரை நியமிக்க காலதாமதம் எடுத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் சொல் கேட்காமல் போகக்கூடிய பணபலம் பொருந்திய சசிகலா வருவதை விரும்பவில்லை. செயலலிதா உயிரோடு இருந்த பொழுது சசிகலாவின் ஆதிக்கம் அதிகமிருந்ததும் காரணமாக இருக்கும். அவர் விலகியிருந்த போது தான் சோக்களிடம் சசிகலா நிருவகித்த  மிடாசு சாராய ஆலை உட்பட பொருப்புகளை தற்காலிகமாக செயா தந்தார். அவாளிடம் அவாள் அல்லாத ஆளின் நெருக்கம் அவாள் அவாளை தன்னிடம் நெருங்க விடாதது எல்லாம் பாசகவின் சசிகலா வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம்.

சசிகலா முதல்வர் பதவி ஏற்றால் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றே தீரவேண்டும். அவரை எதிர்ப்பவர்கள் அங்கு அவரை மக்கள் ஆதரவுடன் தோற்கடித்தால் பிரச்சனை சுலபமாக முடிந்து விடுமே. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து அவரது தலைமையால் அதிமுகவிற்கு பயன் இல்லை என்று காட்டலாமே. அதிமுக நிருவாகிகளே அப்போ அவரை எதிர்ப்பார்களே.

ஆளுநர் ஐந்தாம் தேதியே சென்னையில் இருந்திருந்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமையை ஏற்று ஆட்சி அமைக்க அழைத்திருப்பார் அல்லவா?  ஏன் ஐந்தாம் தேதி ஊட்டியிலிருந்து மும்பைக்கு போகிறார்? ஏன் பன்னீரின் பதவி விலகல் மடலை ஏற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்? எதற்காக காலதாமதம்?  காலதாமதம் குதிரை பேரத்தை வளர்ப்பது அல்லவா. பன்னீருக்கு இரு நாட்களுக்கு பிறகு செயா ஆவியிடம் பேச தோன்றி கட்டாயப்படுத்தி கையெழுத்து என சொன்னது ஏன்?. ஏன்னா மோதி சொல்லியிருப்பார் அதனால செயா சமாதிக்கு சென்று 5 நிமிடம் சிறு உறக்கம் போடுகிறார். தியானம் என்பது கடும் பயிற்சி இல்லாம வராது தம்பி.

மோதி ஆட்டுவித்தது போல் பன்னீர் பேசியாயிற்று, பாசக ஆளுநர் அதற்காகத்தானே தாமதம் செய்தார்.  பன்னீரின் வயசென்ன அரசியல் அனுபவம் என்ன? (எத்தனை பேரை மிதித்துவிட்டு மேல வந்திருப்பார்) இப்ப முதல்வராகவும் உள்ளார். அவரை மிரட்டி கையெழுத்து வாங்க முடியுமா அப்படியே வாங்கியிருந்தாலும் மிரட்டலுக்கு பணிகின்றவர் நமக்கு முதல்வராக இருக்கலாமா?முதல்வரே கட்டாயத்திற்கு உள்ளாகி கையைழுத்து போட்டால் குடிகளின் கதி? அவர்களுக்கு என்ன பாதுகாப்பு?  நாளைக்கு வேறொருவரின் மிரட்டலுக்கு பன்னீர் பணியமாட்டார் என்பதற்கு என்ன உறுதியிருக்கு?

ஆகசட்டு 31, 2017 தமிழக ஆளுநராக ரோசையாவின் கடைசி நாள். அவருக்கு பதவி நீடிப்பு இல்லை என்று ஒன்றிய அரசு முடிவெடுத்தபின் வழக்கமாக இறுதி நாளுக்கு முன்பே ஒரு மாதத்திற்கு முன் அடுத்த ஆளுநரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி விடும். சரி ஒரு மாதத்தில் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் அடுத்த மாதத்திற்குள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தமிழகமும் மகாராட்டிரமும் இந்தியாவின் பெரிய மாநிலங்கள், ஒன்றியத்துக்கு பெரும் அளவில் வரியை ஈட்டி தருபவை. பெரிய மாநிலமான தமிழகத்திற்கு இன்னும் நிரந்தர ஆளுநரை போடாடதன் அரசியல் என்ன? ஒன்றிய பாசக அரசே விளக்கவேண்டும்.

துரை முருகன் பழுத்த அரசியல்வாதி எப்படி பேசி, எதை புரியவைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். துரைமுருகன் உங்களுக்கு துணையாக இருப்போம் என்பதை புரிந்து கொண்டால் சரி. ஊழல்வாதி செயலலிதா மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்த போதே நடைபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல், முழு தேர்தல்களில் 20,000இக்கும் அதிகமான வாக்கு வேறுபாட்டில் திருக்குவளை கொள்ளைக்கூட்டத்தின் கட்சி தோற்றது. இத்தனைக்கும் கருணாநிதி, இசுடாலின் பரப்புரை இருந்தது. தமிழக மக்களின் நம்பிக்கையை பெறமுடியாததால் இப்போ குழப்பத்தை பயன்படுத்தி குறுக்கு சால் ஓட்டுகிறார்கள். திமுக நண்பர்கள் இந்த ஆட்சி கவிழவேண்டும் அடுத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணி இந்த ஆட்சி கவிழாதா என்று ஆசையாக காத்துக்கொண்டுள்ளார்கள்.

சசிகலா கூட்டம் ஒழுங்கா என்றால் இல்லை அவர்கள் செயலலிதா உயிருடன் இருந்த போது அவரின் உதவியுடன் தமிழகத்தை கொள்ளையடித்தவர்கள் தான். பல ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள், கங்கை அமரனின் சிறுதாவூர் பங்களாவை (உண்மையில் பையனூர்  பங்களா தான், அருகில் சிறுதாவூர் உள்ளது) மிரட்டி வாங்கியவர்கள் மன்னிக்க அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். வாங்கிய கோடிக்கனக்கான மதிப்புள்ள நகைகளுக்கு பணம் தர மறுத்ததால் நகைக்கடையாளர் பாலு இறப்பிற்கு காரணமானவர்கள். அமிர்ந்தாஞ்சன் தலைவலி தைல முதலாளியின் வீட்டை மிரட்டி அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். மிரட்டி அடி மாட்டு விலைக்கு தான் எந்த நிலத்தையும் வாங்குவார்கள் மன்னிக்க பரிப்பார்கள். மிடாசு சாராய ஆலை அதிபர்கள் இது உருவானது அதிமுக ஆட்சி காலத்தில் தான். டாசுமாக் அவர்களிடம் சரக்கு வாங்குவதிலேயே பல்லாயிரம் கோடிகள் பார்த்திருப்பர்.

பன்னீர் ஒழுங்கா என்றால் அவரும் இல்லை பெரும் ஊழல்வாதி ரெட்டியுடன் பிணைந்திருப்பவர்.  மெரினா போராட்டத்தை கடைசி நாளில் இரத்தக்களறி ஆக்கியது அவர் தான். இது அலங்காநல்லூரிலும் கோவையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்தது. மெரினா  போராட்டக்காரர்களை ஒரு முறை கூட சந்திக்காதவர். காவல்துறை அமைச்சரும் இவரே. ஆறு இலட்சம் பேர் மெரினாவில் ஒரு வாரம் இடைவிடாமல் போராட்டம் நடத்தியதை மாநில அரசும் ஒன்றிய அரசும் எளிதில் புறம் தள்ளிவிட முடியாது. ஏன் உச்ச நீதிமன்றமும் புறம் தள்ளமுடியாது. மெரினா மட்டுமல்ல போராட்டம் தமிழகம் முழுக்க நடந்தது. உலகம் முழுக்க நடந்தது. வெளிநாட்டு நாளேடுகளில் செய்தி வந்த பிறகு அதை புறக்கணிக்க முடியாது. அழுத்தமும் முடிவும் போராட்டத்தால் தான் வந்தது,  செயலலிதா உயிரோடு இருந்த போதே அவருக்கு தெரியாமல் ஊழல் செய்து பணம் சேர்த்ததால் செயாவின் கோபத்திற்கு ஆளானவர் (செயா பங்கு போனதால் தான் கோபம்). இவருக்கும் கரூரில் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கும் தொடர்பு இருந்தல்லவா? சேகர் ரெட்டிக்கு தமிழகத்தின் மணல் குத்தகையை மொத்தமாக தாரைவார்த்து தமிழக ஆறுகளை சுரண்டியவர் இவரே. தம்பி ராசா பையன் ரவீந்திரநாத் மூலம் வெளிநாட்டு (முறைகளை மீறி) முதலீடுகளுக்கு அடித்தளம் அமைத்தார். டீ கடையும் பால் பண்ணையும் விவசாயமும் பார்த்தவரிடம் எப்படி பல கோடிகள் சேர்ந்தது? சசி கொள்ளை பற்றி தெரிந்த அளவுக்கு நமக்கு பன்னீரின் கொள்ளைகள் தெரியவில்லை என்பது உண்மையே.

சசிகலா கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம், பன்னீர் கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம். இருவருக்கும் உள்ள வேறுபாடு கொள்ளையடிக்கும் முறையில் தான் உள்ளது. ஆனால் நம் பொருட்கள் கொள்ளை போவது உறுதி. எனக்கு இவன் தான் கொள்ளையடிக்கனும் , இவன் கொள்ளையடிக்கும் அழகு தான் பிடித்துள்ளது என்று மக்கள் கேட்பது புரியாதது.

அதிமுகவிலும் பழ.கருப்பையா போன்ற நல்லவர்கள் உள்ளார்கள் (பழ. கருப்பையா வெளியேறிவிட்டார் என்பது வேறு) . அவர்களை யாராவது அடையாளம் காட்டி அவர்கள் முதல்வர் ஆக மாணவ & இளைஞர் சமூகம் குரல் கொடுத்தால் ஏற்கலாம் ஆனால் மெரினா சல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களை  ஒரு முறை கூட சந்திக்காதவருக்கு ஆதரவு தருவதை நினைக்க முடியவில்லை.

நமக்கு சசிகலா கூட்டத்தின் மேல் ஒவ்வாமை இருக்கலாம் அதற்காக ஆளுநர் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்த சசிகலாவை ஆட்சியமைக்க கூப்பிடாதது நம் மாநில உரிமையை ஒன்றிய அரசுக்கு தாரை வார்ப்பது ஆகும். இப்பவே மாநில உரிமைகள் ஆடுது, அதை மீட்கவே எத்தனை ஆண்டுகள் போராடனும் என்று தெரியவில்லை! என்பதை நினைவில் கொள்க. ஆளுநருக்கு ஏதாவது ஐயம் இருந்தால் தனித்தனியாக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை ஆளுநர் மாளிகையில் கேட்கலாம் அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சசிகலாவை கேட்கலாம். அது தான் முறை. ஒன்பதாம் தேதி ஆளுநர் சென்னை வந்தார் பன்னிரெண்டாம் தேதி வரை முடிவு எதையும் எடுக்கவில்லை. நிறைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர் பின் போக அவகாசம் கொடுக்கிறார் அப்படியும் 15 உறுப்பினர்கள் கூட பன்னீர் பின் இன்னும் திரளவில்லை. என்று எட்டுவார் என்றும் தெரியவில்லை, இந்த ஆண்டு நடுவில் குடியரசு தலைவர் தேர்தல் வருகிறது அதற்கா ஒன்றிய பாசக ஏதேனும் சித்து விளையாட்டை அரங்கேற்றுகிறதோ என்னவோ.