வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, நவம்பர் 02, 2013

வலிமிகுதல் 6

வலிமிகுதல் பற்றிய இலக்கண அறிவைப் பெறுவதில் மிகவும் கடினமானது என்று கருதப்படக்கூடிய பகுதிக்குள் இப்போது நுழைகிறோம். அவ்வாறு கருதிக்கொண்டிருந்தது எத்தனை பெரிய மடத்தனம் என்று நீங்களே புரிந்துணரத் தக்க இடத்திற்குச் செல்லவிருக்கிறீர்கள். இலக்கணக் கதவுகள் உங்கள் கண்முன்னே பூவிதழ்களைப்போல் திறக்கக் காண்பீர்கள்.

மொழியில் சொல் என்பது அடிப்படையான ஓர் அலகு. தனித்துவமான துண்டு. ஒன்றுக்கு மேற்பட்டு, குறைந்தது இரண்டு சொற்களால் ஆவது சொல் தொடர் - சொற்றொடர். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்றொடர்களால் ஆவதுதான் வாக்கியம். வாக்கியத்தின் வழியாக மொழி உச்சத்தை அடைந்து உலகை ஆள்கிறது.

வலிமிகுதல் என்பது இரண்டு சொற்களுக்கு இடையே நடைபெறும் செயல். சொற்றொடர் ஒன்றின் உள்ளுக்குள்ளே நடக்கும் மொழிவினைதான் வலிமிகுதல். வலிமிகுதலைப் பற்றிய பறவைப் பார்வையைப் பெற வேண்டுமானால் சொற்றொடர் குறித்த அறிதலையும் அதன் வகைகளையும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகைமைகளில் எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதை அறிந்தவுடன் இந்தப் பாடம் ஏறத்தாழ நிறைவு பெறவுள்ளது.

மாடு மேய்கிறது. மாடு ஒரு சொல். மேய்கிறது ஒரு சொல். மாடு மேய்கிறது என்பது சொற்களின் தொடர் வரிசை - சொற்றொடர். இந்தச் சொற்றொடர் மிக இயல்பாக எளிமையாக இருக்கிறது. ஆனால் மொழி என்பது இப்படி வெள்ளந்தியான எளிமையோடும் சாதாரண அம்சங்களோடும் இருப்பது மட்டுமில்லையே. அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நுண்மைகளையும் செறிவுகளையும் அறிவுப்புலத்தையும் தனக்குள் ஏற்றுச் செரித்து வன்மையடந்த ஒன்றல்லவா ?

முழுமையாகப் பொருள் காட்டும் எளிமையான சொற்றொடர்களால் ஆகியிருக்கும் தமிழ் மொழி, இன்னொரு புறத்தில், உள்மறைந்து தொக்கி நிற்கும் தன்மைகள் உள்ள சொற்றொடர்களாலும் உருவாகியிருக்கிறது. அத்தகைய சொற்றொடர்களை நாம் நம் அறிவைப் பயன்படுத்திச் சற்றே விரித்துப் பொருள் காண்கிறோம்.

மாடு புல் மேய்கிறது. இப்பொழுது ‘புல் மேய்கிறது’ என்கிற சொற்றொடரை மட்டும் கவனியுங்கள். புல் மேய்கிறது - முன் சொன்னதுபோல எளிமையாக அர்த்தப்படுத்தக் கூடாதல்லவா ? புல்லை மேய்கிறது’ என்று ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபை உடன் சேர்த்து விரித்துப் பொருள் கொள்கிறோம். மாடு புல்லை மேய்கிறது.

உள்ளுக்குள் ஒன்றும் தொக்கியிருக்காமல் வெகு இயல்பாய் எளிமையாய் அமைந்த சொற்றொடர்களைத் தொகாநிலைத் தொடர்கள் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொடர்’ என்பதும் உண்டு. மாடு மேய்கிறது மாதிரி.

உள்ளுக்குள் ஒன்று தொக்கி நிற்க (உருபு) அதைக்கொண்டு ஒரு சொற்றொடரை விரித்துப் பொருள்கொள்ள வேண்டிய, தொகுத்துப் பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர்களைத் தொகைநிலைத் தொடர் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொகை’ என்பார்கள். புல் மேய்கிறது மாதிரி.

தொடர்’ என்று சொல்லப்பட்ட எளிமையான சொற்றொடர் வடிவங்களிலும், தொகை’ என்று சொல்லப்பட்ட தொகுத்துப் பொருள்கொள்ளக்கூடிய சொற்றொடர் வடிவங்களிலும் - வலிமிகுமா மிகாதா என்பதைத்தான் நாம் இனி பார்க்கப் போகிறோம்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

3 கருத்துகள்:

நம்பள்கி சொன்னது…

மாடு புல் மேய்கிறது.
மாடு புல்லை மேய்கிறது.
இரண்டும் சரி தானே!

ராமன் சாப்பாடு சாப்பிட்டான்!
ராமன் சாப்பாட்டை சாப்பிட்டான்!
எப்படி எழுதினாலும் அர்த்தம் ஒன்னு தானே!

நம்பள்கி சொன்னது…

tamilmanam vote +1

குறும்பன் சொன்னது…

சரி தான். ஆனா பேச்சு வழக்கில் ஐ சேர்ந்து தானே சொல்லுவோம். புல்லை , சாப்பாட்டை