வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, நவம்பர் 22, 2014

திருப்பதி பயணம்(ங்கள்)

திருப்பதி வேங்கடவனை பார்க்கனுமுன்னு ரொம்ப நாளா ஆசை ஆனா பாருங்க அதுக்கு கொடுப்பினை இல்லாமல் இருந்தது. எங்க குடும்பத்தில் வேங்கிய பார்க்க போவனும்னு பேசிக்குவோம். அது பேச்சாவே இருந்தது.

வேங்கடவன் அலங்காரம் இல்லாமல்
அலங்காரம் இல்லாமல் உள்ள வேங்கடவன் திருமலை வேங்கி இல்லைன்னு நினைக்கிறேன். திருமலை வேங்கியின் புகைப்படம் (நிழற்படம்) வெளியில் வந்திருக்கான்னு தெரியலை. அலங்காரத்தோடு உள்ள வேங்கி மற்ற இடத்திலுள்ள வேங்கி என்பது என் எண்ணம்.

தனக்கு பிடித்த மலர் அலங்காரத்தோட வேங்கி.
நான் சின்ன பயனா இருந்தப்போ (வயசு மறந்துடுச்சி) எனக்கு உடம்பு சரியில்லை (வயித்துக்கடுப்பு) அதை சொல்லியும் கூட, சுற்றுலா போறவங்க யாரோ வரலைன்னு என்னை விடாப்பிடியா கூப்பிட்டாங்க. என் அத்தை மூலமா அந்த சுற்றுலா ஆளு எங்க வீட்டுக்கு வந்து என்னை பிடிச்சார். அலுவல் காரணமா எங்க அம்மாவால வர முடியாத நிலை என்ன பண்றது என்னை சுற்றுலா குழுவோடு அனுப்பி வைச்சாங்க. திருமலை போற வரைக்கும் எனக்கு உடல்நிலை சரியாகலை. அங்க கூண்டுக்குள்ள காத்துக்கிட்டு இருக்கறப்ப அங்க (அதுக்குன்னு கூண்டிலிருந்த இடத்தில்) குளிச்சேன் உடல் நிலை நல்லாயிடுச்சி. அது வரைக்கும் ரொம்ப பட்ட பாடு சொல்லி மாளாது :( .

கூண்டிலிருந்து (தர்ம தரிசன கூண்டு) மக்கள் சாமியை பார்க்க செல்கின்றனர்..

அடுத்த முறை குடும்பத்தோட போனோம் காட்பாடிய தாண்டினதும் விஜயவாடா அல்ல விசயநகரத்தில் உண்ணாவிரதம் இருந்த காங்கிரசு மக்களவை உறுப்பினர் இறந்ததாலோ அல்ல தாக்கப்பட்டு கவலைக்கிடமானதாலோ ஆந்திராவுல மறியல் அப்ப இராமாராவ் ஆட்சி, எந்த வண்டியும் ஓடல. சோத்து மூட்டைய தூக்கிக்கிட்டு நாங்க நடந்தோம் அப்ப யாரோ புண்ணியவான்கள் எங்களை ஜீப்பில் ஏற்றிக்கிட்டாங்க. சித்தூரில் எங்களை இறக்கிவிட்டாங்க. அங்க காத்திருந்து தொடருந்து புடிச்சி திருப்பதி போனோம்.  அடுத்த தேர்தலில் காங்கிரசு ஆட்சிக்கு வர அந்நிகழ்வும்  "கை" கொடுத்தது. இது தான் நன்றாக நினைவு தெரிந்து நான் போன முதல்  தொடருந்து பயணம். எல்லாப்புகழும்  காங்கிரசு செய்த மறியலுக்கே :)

அலிப்பிரி என்னும் அடிவாரத்தில் உள்ள கோபுரம்
அப்புறம் மாமா பையனுக்கு மொட்டை அடிக்கிறதுக்காக குடும்பத்தோட போனோம். இப்ப வாடகை மகிழுந்தில் போனோம். பாவிநாசனத்தில் உள்ள அணையில் ஓரமா எல்லோரும் குளிக்க மேல இருந்து தண்ணி வருமே அதுல நல்லா குளிச்சோம். அங்க பூங்கா இருக்கு. சோத்து மூட்டைய அவிழ்த்து திங்க தொடங்கினோம். கொஞ்சம் தெம்பு வந்ததும் நானும் என் மாமா பையனும் தனியா போயி அங்கு வந்திருந்த பெண்களை (வயசு காரணம்;) ) சைட் அடித்தோம். பெண்களும் நைசா சைட் அடித்தார்கள். அங்கிருந்து வரவே மனசில்லை. எப்படி? அங்கிருந்து கிளம்ப மனசு வரும் இஃகி இஃகி. அங்கே அணை உள்ளது ஆனால் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை. திருமலையில் உள்ள கட்டடங்களுக்கும் கோயில்களுக்கும் இங்க இருந்து தான் நீலு (தெலுங்கு சொல் ஒன்னு கத்துக்குங்க) வருது.

பாபவிநாசனம் என்ற இடத்தில் குளியல்




படி இல்லா சம தள நடைபாதை







அடுத்த முறை என் மாமா பையனும் நானும் (நான் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் போது) திருப்பதி போனோம். திருப்பதியில் தமிழ் பேசும் இருவர் கூட சேர்ந்து கொண்டோம், அவர்களால் திருப்பதியில் உள்ள கோவிந்தராச பெருமாளை கும்பிட்டோம், எத்தனை பேர் கோவிந்தனை பார்த்திருக்காங்கன்னு தெரியலை, பெரும்பாலோர் வேங்கிய பார்ப்பதோட சரி.  பின்னர் மலைப்பாதை வழியாக நடந்து மேல(திருமலை) போனோம். மேல போனதும் நாங்க அவங்களிடம் இருந்து பிரிஞ்சிட்டோம். நல்லா சாமி கும்பிட்டோம். Semester (செமசுடர்) தேர்வில் எல்லாம் தேர்வாகனும் என்று வேண்டிக்கொண்டோம். அதுக்குத் தானே போனது.

திருப்பதி நகரிலுள்ள கோவிந்த ராச பெருமாள் கோவில் கோபுரம்.
கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு வேலை தேடி வந்தாச்சு. நானும் என் நண்பனும் நினைச்சா சின்ன நண்பர்கள் குழுவ (3~6 பேர் ) சேர்த்துக்கிட்டு திருப்பதி போயிடுவோம். பல முறை போயிருக்கோம் எப்பவும் மேல போறப்ப நடை பின் தேவசுதான அறைய பிடிச்சு குளிச்சுட்டு சாமிய கும்பிட்டுட்டு பேருந்தில் கீழே. அப்புறம் நேரா சென்னை. சில முறை திருத்தணி வழியா போகும் பேருந்து, சில முறை தடா வழியா போகும் பேருந்து. போகும் போதும் வரும் போதும். சில முறைக்கு அப்புறம் தடாவுக்கு தடை போட்டுட்டோம் ஏன்னா அவ்வழி சாலை மோசமாக இருந்ததுதான்.
அடிவாரத்தில் படி. காலுக்கு நல்ல பயிற்சி.
அடிவாரம் வரை (மலைப்பாதை தொடங்கும் இடம்) போவதற்கு பேருந்து நிலையத்தில் இருந்து ஜீப் அதுக்கு ஆளுக்கு 10 ரூபா. நடு இரவில் (12 மணி வாக்குல) அது கிடைப்பதே பெரிசு இல்லையா? ஆளு நிறைய சேர்ந்த பின் தான் வண்டிய எடுப்பார்கள். மலைப்பாதைகளில் நிறைய கடைகள் உண்டு தண்ணி (நீலு), கோக், இட்லி, தோசை எல்லாம் கிடைக்கும். சிகரெட், பீடி விற்க திருமலையில் தடை. ஆனால் புகை பிடிக்க \இலுக்க தடையில்லை.

 திறந்தவெளி கூண்டுக்குள் மான்
மலைப்பாதையில் நிறைய இடங்களில் மான்களை பார்க்கலாம் திறந்த வெளி கூண்டுக்குள் இருக்கும். கம்பி வலை நமக்காக (நம்மிடமிருந்து மானை காப்பாத்தனுமே) அப்புறம் தான் மானுக்காக. முதல் முறை போனபோது தெரிந்த கோபுரத்தை பார்த்து திருமலைக்கு வந்ததாக நினைத்தோம். நிறைய பேர் இப்படி ஏமாறுவார்கள். அதுவரை படி. அப்புறம் படி இல்லை. சாலையில் சிறிது நேரம் அப்புறம் படி அப்புறம் திருமலை. சாலையை அடையும் முன் பெரிய அனுமன் சிலை வரும் அவ்விடத்தில் யோகநரசிம்மர் கோவிலும் உண்டு. கிட்டதட்ட ஒரு கிமீ சாலையில் நடக்கனும். தூரம் ஒன்னா அல்லது இரண்டு கிமீரா? எனக்கு தெரியவில்லை, நேக்கு தெலுசா?. சாலைப்பயணம் முடிந்ததும் படி. இதில் ஏற கடினமா இருக்கும்.  ஏற்றம் (சாய்வு) கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த படி ஏற்றம் முடிந்ததும் திருமலை வந்திடும்.
சாலையை அடையும் முன் உள்ள அனுமன்
இந்த சாலையில் தான் நடக்கனும் இங்க படி இல்லை.

தேவசுத்தான அறைய வாடகைக்கு எடுக்க பெருங்கூட்டம் இருக்கும் நாங்க 3 ~ 4 க்கெல்லாம் திருமலைக்கு சென்றுவிடுவதால் அறை எங்களுக்கு கிடைத்துவிடும். 6 மணிக்கு மேல தான் அறை (கன்னத்தில் அல்ல) கொடுக்க ஆரம்பிப்பாங்க.  அறைக்கு பக்கத்திலேயே இட்லி கிடைக்கும் சில முறை கிடைக்காது எங்கு அறை உள்ளதோ அதைப்பொருத்து இது மாறும். அறையை காலி செய்யும் பொழுது கூட்டுபவர்களுக்கு காசு கொடுக்கனும், கொடுக்காமலும் வரலாம், அவர்கள் நமக்கு செய்யும் உதவியை பொருத்து நாம் முடிவு செய்யலாம். இதை அங்குள்ளவர்கள் பங்கிட்டுக்கொள்வார்கள்( காக்கா பரம்பரையான்னு கேக்காதிங்க ). ஆனா சாவியை ஒப்படைக்கும் இடத்திலும் காசு கேட்பார்கள் (நம்ம முன் பணம் அவங்ககிட்ட இருக்கில்ல) அடேய் என்னமோ நான் வந்ததும் அறையை கொடுத்த மாதிரி கேக்கறானேன்னு கோபம் வரும் ஆனா அதை வெளிக்காட்டிக்காமல் நம் முழு முன் பணத்தையும் வாங்கிட்டு வரனும். நிறைய பேர் முன் பணத்தில் ஒரு பங்கை கொடுத்துவிடுவார்கள்.(அரசு பணத்தை அவன் நமக்கு இலவசமா குடுக்கிற மாதிரி நினைப்பு, இது ஒரு வகையான உடலியல் மிகப்பெரும்பாலோர் இதற்கு இரையாவார்கள்) 100 என்று சொல்லாமல் 99.99 என்று விலை வைப்பதும் இதனால் தான். (இந்த உடலியலை நம்பித்தான்)


வீடு திரும்பும் முன் இங்க சூடம் பத்த வைச்சு சாமி கும்பிடும் இடம்

ஒரு முறை சாமி இருக்கும் உள் கோவிலை உடலால் உருண்டு வர (அங்கபிரதட்ணம்) செய்ய நானும் என் நண்பனும் முடிவு செய்து அங்க கேட்டா ஒருத்தரும் உருப்படியான தகவலை சொல்லலை. இறுதியில் ஒருத்தர் சொன்னார் உடனே ஓடினோம் ஏன்னா இன்னும் 5 நிமிடம் தான் அதுக்கு இருந்தது. அங்க இருந்த குழாயில் குளித்து விட்டு சென்றோம் குளித்துவிட்டா என்றால் உடலை தண்ணீரால் நனைத்துக்கொண்டு. நாங்க பல மணி நேரமா கேட்டுக்கிட்டு இருந்தோம் அப்பவே இத்தகவல் தெரிந்திருந்தால் வரதனோட குளத்தில் முழுக்கு போட்டு விட்டு அவதியில்லாம பொறுமையாக கூட்டத்துடன் சேர்ந்திருப்போம். அப்புறம் தான் தெரிந்தது அங்கபிரதட்சனம் செய்பவர்களுக்கு தான் முதலில் சாமி காட்சி தருவாராம். அப்புறம் தான் மற்றவர்களுக்காம்.
மேல் செல்லும் வழியுள்ள நடைபாதை கடைகள்

இதனாலயே இப்ப நிறைய பேர் அங்கபிரதட்சனம் செய்ய வருவதால் கூட்டம் அதிகமாகி விட்டது, 150 பேர் தான் உள் கோயிலை உடம்பால் சுற்ற முடியுமுன்னா 500 பேருக்கு மேல வந்தா என்ன பண்றது அதனால இப்ப  அதுக்கு சீட்டு முறை கொண்டு வந்துட்டாங்க.  நிறைய பேர் சீட்டு வாங்க முயல்வதால் அது கிடைப்பது கடினம் என்ற நிலை.

இரவில் ஒளிரும் வேங்கியின் இல்லம்.
ஒரு முறை எங்களில் பலசாலியான  ஒருத்தன் மேல ஏற திணருனான். நோஞ்சான் மாதிரி இருந்தவன் எல்லாத்துக்கும் முன்னாடி ஏறிக்கிட்டு இருந்தான். அப்ப தான் புரிஞ்சது மேல படி வழியே செல்வதற்கு பலசாலியா இருந்தா மட்டும் பத்தாது என்பது.

பகலில் பறவை பார்வையில் வேங்கியின் இல்லம்.
நாங்க எப்பவும் காசு இல்லா முறையில் தான் சீனியை பார்ப்போம். ஒரு முறை 50 ரூபா கொடுத்து போனோம் ஆனா பாருங்க அப்ப 50 ரூபா வரிசையை மெதுவாகவும் காசு இல்லா வரிசையை விரைவாகவும் விட்டாங்க. அப்ப முடிவு பண்ணினோம் இனி என்ன ஆனாலும் காசு கொடுத்து சீனியை பார்ப்பதில்லை என்று. 
இது 50 ரூ வரிசை லட்டுக்கா அல்ல சாமிய பார்க்கவான்னு தெரியலை
நாங்க உணவுக்கு வாடகை கட்டடத்தில் இயங்கும் உணவகத்தை நாடமாட்டோம். எப்பவும் கையேந்தி பவன் தான். காசு குறைவு என்பதோடு அங்க தான் ருசி அருமையா இருக்கும். சீனியை பார்த்துட்டு வந்ததும் விலையில்லா (இலவச) சோற்றுக்கு டோக்கன் கொடுப்பார்கள். அதை வாங்கி வந்து வெளியில் வந்து விலையில்லா சோறு வேண்டாம் என்பவர்கள் அதற்காகவே காத்து இருப்பவர்களுக்கு கொடை அளித்து அன்னகொடை அளிக்கலாம்.
பக்தர்களை நம்பி திருமலையில் உள்ள கடைகள்
கிளம்பும் முன் சீனியை பார்த்தமாதிரி இருக்கும் இடத்தில் சூடம் கொளுத்தி கும்பிட்டு வருவோம். அனுமார், கருடாழ்வார் கோவிலுக்கு எதிர்த்தாப்ல இருக்குமே. அவ்விடத்தை விரிவாக்கம் என்ற பெயரில் இப்ப இடிச்சுட்டாங்களாமே?  படத்தில் உள்ள மரத்தை வெட்டிட்டாங்களான்னு தெரியலை.

இந்த லட்டை வாங்க என்ன கூட்டம். லட்டே திருமலைக்கு சென்றதற்கு அறிகுறி
இன்னொரு முறை பேருந்தில் சென்னைக்கு வரும் போது நண்பன் ஒருத்தன் "தண்ணிலு" என்பது தெலுங்கு என்று கூறி எங்களை ஏமாத்திக்கிட்டு வந்தான்.  தெலுங்கு தெரியாது ஆனா சில வார்த்தைகளுக்கு பொருள் தெரியும்னான். நாங்க அவன் சொல்றத நம்பினோம் (நாங்கல்லாம் அப்பாவிங்க நம்புங்க). நாங்க சென்னை வருவதற்கள் எங்களுடன் வந்த இன்னொருவனுக்கு இவனுக்கு தெலுங்கு வார்த்தை எதுக்கும் பொருள் தெரியாது, தண்ணிலு தெலுங்கு அல்ல சும்மா புருடா விடுறான் அப்படின்னு ஐயம் வந்திருச்சு. சும்மா அவனை இரண்டு அடி போட்டதும் அவன் தனக்கு தெலுங்கு தெரியாது என்பதையும் தண்ணிலு என்பது இவன் கண்டுபிடிப்பு என்றும் ஒத்துக்கிட்டான். தமிழ் சொல்லோட "லு" போட்டா அது தெலுங்கு அப்படினுட்டான்.
யாரு முதல்ல இந்த கல்லை அடுக்கிவச்சாங்களோ இப்ப தொடருது
நடைபாதையில் நிறைய இடங்களில் கல்லை ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காணலாம். ஏறும் போதோ இறங்கம் போதே ஓய்வு எடுத்த யாரோ பொழுதை கழிக்க கல்லை அடுக்கி இருப்பார்கள் இப்ப மக்கள் அதை தொடர்கிறார்கள். இப்படி கல்லை அடுக்கினா விரைவில் வீடு கட்டும் வாய்ப்பு வரும் என்று நம்புகிறார்கள். நாங்க சும்மா இருப்பமா நாங்களும் நிறைய கல் வீடு கட்டி இருக்கோம்.

இறுதி படி. இது முடியும் இடம் திருமலையே.

 தடுப்பு ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பிரிப்பதற்காக. ஆனால் ஏறுபவர்களுக்கு கைப்பிடியாக துணையாகவும் இருக்கும். தொடக்கத்தில் உள்ள படியில் தடுப்பு இருக்காது ஆனா தொடக்க படி முடியும் முன்பு சில இடங்களில் தடுப்பு இருக்கும். சமதளத்தில் தடுப்பு இருக்காது. இறுதி படிக்கட்டில் தடுப்பு இருக்கும்.

இப்ப கூட்டமும் அதிகமாகி விட்டது கோவிலும் மிகவும் வணிக முறை ஆகிவிட்டது. சீனியை இன்னும் விற்காம இருக்காங்களேன்னு மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். திருப்பதி கோவில் லட்டு முன்ன மாதிரி இல்லை. அளவும் சின்னதாகி விட்டது, ருசி கூட பழைய மாதிரி இல்லை.  ஏதோ அதிக வணிகமுறைக்கு கோவில் மாறுவதற்குள் அங்க அடிக்கடி போனேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். முதலில் அங்க நிறைய தமிழும் அறிந்த (ஏறக்குறைய 90%) ஊழியர்கள் இருந்தார்கள். மெதுவா தமிழ் அறியாத மற்றவர்கள் அதிகளவில் ஊழியர்கள் ஆகிவிட்டார்கள். உள்ளூர் ஆட்களுக்கு திருமலையில் வேலையில்லாமல் போனது வருத்தம் தான். அங்க தமிழ் பக்தர்களின் வருகை மிக மிக அதிகம் ஆனால் சில அறிவிப்பு பலகைகளில் தமிழ் இருக்காது. தமிழிலும் எழுதினால் பக்தர்களுக்கு சிரமம் இருக்காது என்பதை ஏன் தேவசுதானம் புரிந்து கொள்ள மாட்டிக்குது?
.

இப்ப தெரிந்து கொண்ட சில மனவாடு வார்த்தைகள்:

மனவாடு மனதேசம் - நம்மஆளு நம்ம தேசம்.
நீளு - நீர்
காவலா - வேண்டுமா
காவாலி - வேண்டும்
போ - போ (மென்மையா போ என்பதை அதாவது கிளம்பு என்பதை வெள்ளு என்பார்கள்)
வெள்ளு - கிளம்பு
சம்பேஸ்தானு - கொன்னுடுவேன்
சால - நல்லா
சால பாகுந்தி - நன்றாக இருக்கிறது.
பாகுனானா - எப்படிய்யா இருக்க என்று கேட்போம்மில்ல அது மாதிரி
சால பாகுனானு - நன்றாக உள்ளேன் (மேலே கேட்டதற்கு பதில்)

பெள்ளி -திருமணம்
மிர்ச்சி - மிளகாய்
ஆவுதா - அப்படியா
கொடுக்கு - மகன்
கூத்துரு  - மகள்
அம்மாயி - பெண்
தெல்லிது - தெரியாது
தெலுசா - தெரியுமா
 செப்பு- சொல்லு
இடி - இது
கடவு - படி
அத்தடு - அவன்
போஜனம் \ அன்னம் - சோறு\சாப்பாடு
சேசாவா - முடிச்சாச்சா
நிஜமா - நிசமா நாமளும் நிஜமா என்று சொல்லுவோம்
ஏமிட்டி - என்ன
அத்தனு - அந்தாளு
எவரு - யார்\எவர்
அக்கடிக்கி  வெள்ளு - அங்கே போ
எந்த \ எல - எப்படி
இக்கட சூடு ஹ ஹ ஹா - இங்கே பார் (இரஜினியால் இச்சொல்லை அறிந்தேன்)





புதன், அக்டோபர் 29, 2014

நரிமனும் அறமும் நீதியும் செயலலிதாவின் பிணையும்


நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக இருந்தால் அவரது நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது என்பது மரபு. ஆனால் இந்தியாவில் இம்மரபு ஒழுங்காக கடைபிடிக்கப்படுவதில்லை.

தந்தை நரிமன் - வழக்குரைநர்

இப்போது மூத்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பாலி சாம் நரிமன் செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குக்காக (பிணைக்காக) வாதாடியது இப்பிரச்சனைக்கு  உயிர் கொடுத்துள்ளது. பாலி சாம் நரிமனின் மகன் ரோகின்டன் பாலி நரிமன் உச்ச நீதிமன்றத்தில் யூலை 2014 முதல் நீதிபதியாக உள்ளார்.  கோபால் சுப்பரமணியத்தை நீதிபதியாக ஆக்க விடாமல் பாசக அரசு பல தகிடுதத்தங்களை செய்தது அப்போது தான், இல்லாவிட்டால் கோபாலும் ரோகின்டனுடன் நீதிபதியாகி இருப்பார்.  தந்தை நரி வழக்குரைஞராக அவ்வழக்கில் தோன்றுவது குறித்து அப்போது எழுத்த குற்றச்சாட்டுகளை புறம் தள்ளிய தந்தை நரி தான் வழக்காடுவது குறித்து சட்டப்பூர்வ தடையில்லை என்றார். எல்லோரும் சட்டப்படி ஒரே மாதிரி பார்க்கப்படுகிறார்கள் என்றார்.
மகன் நரிமன் - நீதிபதி

1961 வரை பலமுறை வழக்குரைஞர்கள் அவர்கள் உறவினர்களின் நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினார்கள். 1961இல் இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு இது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் கிடைத்தது. இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதி  எண் 6ன் கீழ் நீதிபதியின் உறவினர்கள் யாரெல்லாம் வாதடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.  அதன் படி  நீதிபதியின் மகன், மகள், மருமகள், மருமகன், சம்பந்தி, சகோதர சகோதரிகள், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தா, சித்தப்பா, பெரியப்பா அவர்கள் குழந்தைகள் மற்ற நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது. எனினும் இதிலும் குறை இருந்தது. நீதிபதி பணியாற்றும் நீதிமன்றத்திலேயே (நீதிமன்ற வளாகம்?) வாதாடக்கூடாதா? (அவர் அங்கு இருக்கும் வரை) அந்நீதிபதியின் கீழ் வரும் வழக்குளுக்கு வாதாட கூடாதா? என்ற தெளிவு இல்லை. (வழக்குரைஞர்களுக்கு சட்டத்தின் ஓட்டையை கொடுக்கலாமா?)

 1980களின் தொடக்கத்தில் கருநாடக உயர் நீதிமன்றம் இவ்விதியை பற்றி விளக்கமளித்தது.  அச்சமயத்தில் கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி நசர்கி மனைவியை இழந்திருந்தார். அவரை பெண் வழக்கரைஞர் பிரமிளா நசர்கி மணமுடித்தார். அச்சமயம் பிரமிளா மூத்த வழக்குரைஞர் அல்ல எனவே அவர் பெயர் வழக்காடும் அனுமதி பெற்றதாக அவர் வாதாடும் வழக்கில் குறிப்பிடப்படவில்லை. இதை கவனித்த நீதிபதி அவர் வாதாடும் வழக்குக்குக்கு அவரை வழக்காடும் அனுமதி பெறும் படி கூறினார். அடுத்த நாள் அவர் பெயர் வழக்காடும் அனுமதி பட்டியலில் இருந்தது. ஆனால் அவர் வாதாடும் வழக்கின் நீதிபதி அவரை அனுமதிக்க மறுத்து விட்டார்.

அவர்  இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதியின் படி நீதிபதியின் எந்த உறவினரும் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றக்கூடாது என்றார்.  ஆனால் நீதிமன்றம் என்றது மொத்த கருநாடக உயர் நீதிமன்றத்தையும் (உயர் நீதிமன்றத்தில் பல நீதிமன்றங்கள் இருக்கும் - வளாகம்) என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. இது தான் முன்னமே தெரியுமே அப்படிங்கிறிங்களா? அதுவும் சரிதான்.


இப்பிரச்சனை உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. உச்ச நீதிமன்றம் இதைப்பற்றி அறிவிப்பை இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது.   ஆனால் இப்பிரச்சனையில் தொடர்புடைய  பிரமிளா மூத்த வழக்குரைஞராக மாறிவிட்டதாலும் அவரின் நீதிபதி  கணவர்  ஓய்வு பெற்றுவிட்டதாலும் இப்பிரச்சனை முடிவு எடுக்கப்படமாலே முடிந்தது (நீதியின் வேகத்தால் இஃகி இஃகி).  ஆனாலும் இவ்விதியை சரியாக விளங்கிக்கொள்வதில் \  விளக்குவதில் நீதிமன்றங்களால் இன்னும் சரியான முடிவு எடுக்கமுடியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருட்டிண ஐயர் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் வழக்குரைஞர்  மகன் கிருட்டிணமூர்த்தி வேறு மாநிலத்துக்கு சென்று வழக்குரைஞர் தொழிலை செய்தார்.  1970களில் இன்னொரு விவரமான வேலையை சில வழக்குரைஞர்கள் செய்தார்கள். பிணை வழங்குவதில் கண்டிப்பான அவர்களின் நீதிபதி மாமனாருக்கு செல்லும் பிணை மனுக்களில் இவர்களும் தோன்றுவதாக கையெழுத்து இடுவார்கள் அதனால் அது வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டுவிடும்.  அப்புறம் என்ன...


உச்ச நீதிமன்ற நீதிபதியாக கிருட்டிண ஐயர் பதவியேற்றதும் அவரின் வழக்குரைஞர் மகன் இந்தியாவின் எந்த நீதிமன்றங்களிலும் பணியாற்றுவதில்லை என்று முடிவெடுத்தார். கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சிவராமன் நாயரின் மகளும் மருமகளும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்கியதும் சிவராமன் நாயர் குடியரசு தலைவரிடம் கேட்டு வேறு மாநிலத்திற்கு மாற்றலாகி சென்றார்.


இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத் தன் வரலாறு கூறும் நூலில் பாட்னா  உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அங்குள்ள வழக்குரைஞர்கள் சிவப்புக் கொடி என்ற முறையை கையாண்டதை குறிப்பிடுகிறார்.

மகன், தந்தையின் நீதிமன்றத்தில்\அமர்வில் வழக்காட முடியாது என்பதால் சிலர் அவரின் நீதிமன்றத்துக்கு\அமர்வுக்கு தங்களுடைய வழக்கு செல்லக்கூடாது என்று கருதும் போது மகனிடம் வழக்கின் விபரங்களை கூறி வழக்கு அவரின் தந்தையிடம் செல்லாமல் தடுத்துவிடுவார்கள். இம்முறையானது சிவப்பு கொடி என்று அழைக்கப்பட்டது. இவ்வகையில் சட்டத்தின் விதியை முறையற்ற முறையில் கையாள்வது இங்கு அதிகம் காணப்பட்டது. சில இளம் வழக்குரைஞர்கள் இதன் மூலம் நிறைய சம்பாதிக்கவும் செய்தார்கள். சில நீதிபதிகள் தங்கள் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதியின் மகன்களுக்கு ஆதராவாக இருந்ததாகவும் கேள்வியுற்றேன் என்றும் லீலா சேத் கூறுகிறார். இம்முறையிலும் சிவப்பு கொடி முறை வளர்ந்தது.


1981இல் குப்தா வழக்கில் நீதிபதிகளை இடமாற்றும் போது அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் அவரின் உறவினர் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் உறவினர் நீதிபதிக்கு மற்ற நீதிபதிகளைவிட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நிலை உருவாகிறது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓர் கருத்தரங்கில் கூறிய அறிவுரையை பின்பற்றுவது என்று முடிவாகியது. அக்கருத்தரங்கில் அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி அவரின் உறவினர் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் போது மற்றவர்களை விட தனக்கு அதிக வாய்ப்புகள் வரலாம் என்பதாலும் அது முறையற்றது என்பதாலும் அவ் வாய்ப்பை பயன்படுத்த கூடாது என்று நீதியை காக்கும் பொருட்டு வேறு மாநில நீதிமன்றத்துக்கு சென்றுவிட வேண்டும் என்றார்.

1997இல் அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் "சட்டவாழ்வின் மதிப்புகள்" என்ற தீர்மானத்தை கடைபிடிப்பதாக உறுதியேற்றார்கள். அத்தீர்மானம் நீதிபதியின் உறவினர் நீதிபதியின் நீதிமன்றத்தில் வாதாடுவதை தடுப்பது என்றும் நீதிபதியின் வீட்டில் தங்கி அவரின் உறவினர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய நீதிபதி அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியது.


மார்கண்டேய கட்சு சில நீதிபதிகளின் உறவினர்கள் அதே நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்கள் என்றும் சில ஆண்டுகளிலேயே அவர்களின் உறவினர் வழக்குரைஞர்கள் பெரும் செல்வந்தர்களாகி விடுவதையும், விலையுயர்ந்த மகிழுந்து & வீடு என்று  ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையும் குறிப்பிட்டார்.

லோதா - முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
சதாசிவத்திற்கு அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்ற லோதாவிடம் நீதிபதியின் உறவினர்கள் அவர் பணியாற்றும் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞனர் தொழில் புரிய தடை விதிக்கப்படுமா என்று கேட்டப்பட்டபோது இது பற்றி  வழக்குரைஞர் மன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமென்றார். இது தொடர்பாக பொது நல வழக்கை வழக்குரைஞர் சர்மா தொடுத்ததை தள்ளுபடி செய்தார்.

தற்போது நரி தன் மகன் நீதிபதியாக உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்.  நீதியின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை கெடுவதற்குள் வழக்குரைஞர் மன்றம் இது தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்.

ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு எழுதுய கட்டுரை ஆங்கிலத்தில் இருந்தது. நான் தமிழாக்கம். கட்டுரையை படித்தபோது சில இடங்கள் புரியவில்லை. அச்சுக்கு தகுந்த மாதிரி வெட்டி நாம புரிஞ்சிக்காம செய்துவிட்டார்கள் என்று தைரியமாக கூறலாம். சில இடங்களில் என் கருத்தை சேர்த்துள்ளேன் நான் என்ன தொழில் முறை மொழிபெயர்ப்பாளரா? ஆனால் அவரின் கருத்தில் இருந்து மாறவில்லை என்றே எண்ணுகிறேன்.

இக்கட்டுரையை படித்தால் வழக்குரைநர் தொழிலிலும் அறத்தை கடைபிடித்தவர்கள் இருந்ததை காணலாம்.

நரிமன் நிறைய பணம் சேர்த்துள்ளவர் இன்னும் ஏன்?  இவரின் செயல் சட்டப்படி சரியென்றாலும் அறமில்லையே? செயலலிதாவுக்கு வேறு திறமையான வழக்குரைநர்கள் கிடைக்கமாட்டார்களா? உச்ச நீதி மன்றத்தில் வேறு திறமையான வழக்குரைஞர்கள் இல்லையா?  நடுவண் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக  இருந்த இவர் தவறான முன்னுதாரணம் ஆனது நீதியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறைக்கும் செயல் அன்றி வேறு என்ன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த லோதா ஒரு உறுதியான முடிவை அப்போது எடுத்து இச்சிக்கலுக்கு தீர்வுகண்டிருக்கலாம்.

வியாழன், அக்டோபர் 16, 2014

நோபல் அமைதி பரிசு சரியானவர்களுக்கு கொடுத்தார்களா


நோபல் அமைதி பரிசு என்பது அரசியல் தொடர்புடையது. சில முறை சரியானவர்கள் பெற்றுள்ளார்கள் என்ற போதிலும் இதில் நிறைய அரசியல் உள்ளது. அதற்காக மற்ற  துறைகளில் அரசியல் இல்லை என்று கருதவேண்டாம் அங்கு மிக குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம். அண்மைய கால அமைதிப்பரிசை மட்டும் எடுத்துக்கொண்டால் ஒபாமா (இது அவருக்கே அதிர்ச்சியளிக்கும் ஒன்று), வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், பன்னாட்டு அணுசக்தி முகமையகம், ஐநா போன்றவை நிறையவே சொல்லும்.

இப்போது இந்தியாவின் கைலாசு சத்தியார்த்திக்கும் பாக்கித்தானின் மலாலா யூசப்சையி ஆகியோருக்கும் கொடுத்துள்ளார்கள்.

 கைலாசு சத்தியார்த்தி சுதந்திர இந்தியாவில் பிறந்து இந்தியராக இருந்து நோபல் பரிசு பெறும் முதல் இந்தியர். அன்னை தெரசா இந்தியர் தான் என்றாலும் அவர் ஐரோப்பாவிலுள்ள மாசிடோனிய குடியரசில் பிறந்தவர்.

மற்ற இந்தியர்கள் சுதந்திரத்துக்கு முன் நோபல் வாங்கியவர்கள் (இராமன், தாகூர்), வெளிநாடுகளில் குடியேறியவர்கள் (அவர்கள் இந்திய வம்சாவழியினர் இந்தியர் அல்ல)

இதில் கொடுமை கைலாசு சத்தியார்த்திக்கு இந்திய அரசு  இது வரை எச்சிறப்பையும் செய்யவில்லை. பத்மா விருது என்பார்களே நம்ம சின்ன கலைவாணர் விவேகிற்கு கொடுத்தார்களே அதைக்கூட தரவில்லை.

வெளிநாடுகள் நிறைய விருதுகளை இவருக்கு கொடுத்துள்ளன. இவரை பரிந்துரைத்தது கூட சில வெளிநாட்டினர் தான்.

நம் அனைத்து (அச்சு, இணைய, தொக்கா) ஊடகங்களும்  இவரைப்பற்றி இது வரை விரிவாக சொன்னதில்லை.  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறகாவது இவரைப்பற்றி சொல்லியிருக்கலாம். இப்போதும் இவரைப்பற்றி பெரிய அளவு செய்தி இல்லை.  நோபல் பரிசு இந்தியருக்கு என்றவுடன் செய்திபோட்டாக வேண்டும் ஆனால் அவர்களுக்கு இவரைப்பற்றி விரிவாக செய்திபோட இயலவில்லை. மலாலாவுக்கும் கொடுத்ததால் தப்பித்தார்கள், அவரைப்பற்றி தான் நிறைய காணொளிகள் உள்ளதே. சத்தியார்த்தி பற்றி கால் பங்கு மலாலாவைப்பற்றி முக்கால் பங்கு வெளியிட்டு தப்பித்தார்கள்.

 நம் ஊடகங்களும் அரசும் எப்படி என்பது இதன் மூலம் மேலும் விளங்கும் (இவர்களைப்பற்றி தெரியும் என்றாலும்).

30 ஆண்டுகளாக குழந்தைத்தொழிலாளர் ஒழிப்புக்காக போராடி வரும் இவருக்கு நோபல் விருது கிடைத்தது மிகவும் பொருத்தம். இவரைப்பாதுக்காக்க இந்த விருது உதவும்.  எப்படியோ இவ்வளவு காலம் கொலைவெறித்தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். இவ்விருதால் இவருக்கு கிடைத்த  ஆகச்சிறந்த பயன் இதுவென்று கூறலாம். இவர் அமைப்புக்கு பணம் கிடைத்ததை விட இதுவே சிறப்புடையது. இப்ப இவர் சென்றால் இவரை தாக்க குழந்தைகளை பணிக்கு அமர்த்திய அரசியல் பணபல ஆள்பல செல்வாக்கு உடையவர்கள் அஞ்சுவார்கள், புகார் அளித்தால் காவல்துறை தட்டி கழிக்க முடியாது. இப்ப இவர் சொல்லுக்கு ஊடகத்தில் மரியாதை இருக்கும்.

மலாலாவுக்கு கொடுத்தது சரியா என்றால் இல்லை என்று கூறலாம். 

மலாலாவின் சாதனை குறைவானதா என்றால் இல்லை.  இப்போது வாங்க அவருக்கு தகுதியில்லை என்பதே உண்மை. அவர் தாலிபான்களுக்கு எதிராக தாலிபான் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கல்வி வேண்டும் என்று போராடினார். அந்த அஞ்சா நெஞ்சத்தை பாராட்ட வேண்டும். பின் தாலிபான்களால் சுடப்பட்டு பாக்கித்தானில் சரியான சிகிட்சை முறை இல்லாததால் பிரித்தானியாவுக்கு சென்று மருத்துவம் பார்த்து உயிர் பிழைத்தார். இவரை தாலிபான்களுக்கு எதிரான பரப்புரைக்கு மேற்குலகம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை இசுலாம் மதத்தை சேர்ந்தே பெண்ணே எதிர்ப்பது சில முட்டாள் தீவிரவாத முசுலிம்களுக்கு செருப்படியாக இருக்கும்.

பிரித்தானியாவுக்கு வந்ததில் இருந்து அவர் பாக்கித்தானுக்கு செல்லவில்லை. சென்றால் உயிருக்கு பாதுகாப்பில்லை. பாக்கித்தான் அரசால் அப்பகுதியிலிருந்து தாலிபான்களை விரட்ட முடியவில்லை. தாலிபான்களால் பெண் குழந்தைகளின் படிப்பு பாழ் படுகிறது என்பது உண்மை ஆனால் இசுலாமாபாத்துக்கு வடபுறம் நிறைய நிலப்பரப்பு அவர்கள் கட்டுப்பாட்டில் அல்லவா உள்ளது? பரப்புரைக்கு மட்டுமே மலாலா பயன்படுத்தப்பட்டு வருகிறார். அப்போது தாலிபான்களை எதிர்த்ததுக்கா நோபல்?

நிறைய பெண்கள் தாலிபான்களை எதிர்த்து களத்தில் உயிருக்கு பயப்படாமல் இன்னும் போராடி வருகிறார்கள். அவர்களை சிறப்பிக்கலாம்.

இப்போது மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் விருது கொடுக்கப்பட்டதற்கான காரணம் (கிடைத்தது) அரசியல் தானே தவிர வேற ஒன்றும் இல்லை.

இதில் அவர் பகடைக்காய்.