வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, நவம்பர் 15, 2013

வினா ஆறு வகைப்படும்

வினா வாக்கியங்களை நாம் அறிவோம். வினவுவதற்காக எழுகின்ற வாக்கியங்கள். ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள வினாவின் வழியாகக் கேட்கிறோம். அந்த வினா வாக்கியங்களை ஆறு வகைகளாகப் பகுத்திருக்கிறார்கள்.

பொதுவாக, என்னென்ன நிலைமைகளில் ஒரு வினா எழும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அறியாமல் கேட்பது, அறிந்துகொண்டே கேட்பது, அறிந்திருந்தாலும் அதில் மேலும் உள்ள ஐயத்தைத் தீர்த்துக்கொள்ளக் கேட்பது, கொடுப்பதற்காகக் கேட்பது, கொள்வதற்காகக் கேட்பது, கட்டளையிடுவதற்காகக் கேட்பது என்று அந்த வினா எழும் சூழ்நிலைகளை ஆறாகப் பகுத்திருக்கிறார்கள்.

நானும் நீங்களும் சந்தித்துக்கொள்கிறோம். என்னை உங்களுக்குத் தெரிகிறது. எனக்கு இனிதான் உங்களோடு அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். நான் உங்களை அறியாத நிலையில் அறிந்துகொள்ள வேண்டி வினவுகிறேன்.

‘உங்கள் பெயர் என்ன ?’ - அறியாத நிலையில் நான் எழுப்பும் வினா என்பதால் இது ‘அறியா வினா.’ அடிப்படையான எளிமையான வினாக்கள் எல்லாமே அறியா வினாக்கள்தாம்.

உங்களுக்கு என்னைத் தெரிகிறது என்பதைக் காட்டிக்கொள்ளாமல் நீங்களும் என்னிடம் கேள்வியின் வழியாகவே பேசுகிறீர்கள். ‘என் பெயர் கண்ணன். உங்கள் பெயர் என்ன ?’ - அறிந்திருந்தும் நீங்கள் வினவுகிறீர்கள். அதனால் இது ‘அறிவினா.’ அறிந்திருந்தும் வினவுவது. ஆசிரியர் கேள்வி கேட்பது, ஒருவரைத் தோற்கடிக்கக் கேள்வி எழுப்புவது எல்லாம் இவ்வகை.

நம் அறிமுகத்தை அடுத்து உரையாடல் தொடர்கிறது. நான் எதையோ எழுதுவது உங்களுக்குத் தெரிகிறது. அது கதையா, கவிதையா என்பதைக் குறித்து உங்களுக்குத் தெளிவில்லை. அதில் ஐயமிருக்கிறது. அந்த ஐயத்தை என்னிடமே தீர்த்துக்கொள்ள ஒரு வினாவை எழுப்புகிறீர்கள். ’நீங்கள் கவிதை எழுதுகிறீர்களா ? அல்லது கதைகளை எழுதுகிறீர்களா ?’ - உங்களுக்குத் தெரிந்த ஒரு பொருளில் மேலும் எழுந்த ஐயத்தின் அடிப்படையில் வினா எழுப்பினீர்கள். அதனால் இது ‘ஐய வினா.’ நடத்துநர் நிறுத்தத்தில் பயணிகளை வினவுவது (நால்ரோடு யாராவது எறங்குறீங்களா ?), நிருபர் காவல்துறையை நுணுக்கிக் கேட்பது (குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் ?) எல்லாம் இவ்வகையில் வரும்.

இப்படி நீங்கள் கேட்டுவிட்டதால் என் கவிதைத் தொகுப்பு ஒன்றை உங்கள் கைகளில் திணித்துவிடவேண்டும் என்று விரும்புகிறேன். ‘என் கவிதைத் தொகுப்பு எதையும் படித்திருக்கிறீர்களா ?’ என்று கேட்கிறேன். நீங்கள் ‘இல்லை. உங்களிடம் இருக்கிறதா ?’ என்கிறீர்கள். நீங்களும் என் தொகுப்பை வாங்கிப் படிக்க விரும்பியதால் அவ்வாறு கேட்டீர்கள். ஆகவே, இங்கே நம் கேள்விகள் வெறும் கேள்விகள் அல்ல. நான் கொடுப்பதற்காகக் கேட்டேன். நீங்கள் பெற்றுக்கொள்வதற்காகக் கேட்டீர்கள். நான் கேட்டது ‘கொடைவினா.’ நீங்கள் கேட்டது ‘கொளல்வினா.’

நாம் இருவரும் தேநீர் அருந்தக் கிளம்புகிறோம். நம் மீது ஒருவன் வந்து நிதானமில்லாமல் மோதி விடுகிறான். நீங்கள் சினந்து அந்நபரை ‘இப்படித்தான் நிதானமில்லாமல் வருவீரா ?’ என்று கேட்கிறீர்கள். அவன் நிதானமில்லாமல் வந்தான், மோதினான்... அதை அவன் திருவாயால் தெரிந்துகொள்ளவா கேட்டீர்கள் ? இல்லை. ‘நிதானமாக வா’ என்று கட்டளையிட அவ்வாறு கேட்டீர்கள். அதனால் இது ‘ஏவல் வினா.’

இவ்வாறு வினா வாக்கியங்கள் மொத்தம் ஆறு வகைப்படும் என்று நன்னூல் வகுக்கிறது.

அறி வினா
அறியா வினா
ஐய வினா
கொடை வினா
கொளல் வினா
ஏவல் வினா

இந்த வகைப்படுத்தலின் பின்னணியில் தமிழினத்தின் பண்பாட்டுப் பொதிவுகள் எல்லாமே அடங்கிவிடுகின்றனதானே ?

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

* மூடர்கூடம் திரைப்படத்தில் இந்த விளக்கங்களைப் பிரதிபலிப்பதுபோல் இரண்டு காட்சிகள் உள்ளன. ( குரங்கு குல்லா காட்சியில் ‘இந்த இடத்தில நீங்க ஆமான்னு சொல்லக்கூடாது சென்றாயன். ஏன்னு சொல்லனும்’ )

* ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கும் வினா வகைகள் : (1). குற்றியலுகரம் என்றால் என்ன ? - அறிவினா (2). குறும்பு செய்வாயா ? - ஏவல்வினா (3). ஒழுங்காகப் படித்து நல்ல மதிப்பெண் பெறுவாயா ? - ஐய வினா (4). இங்க இருந்த சாக்பீஸ யாருப்பா எடுத்தது ? - கொடைவினா (5). தமிழ்ப் புத்தகம் யார் கொண்டு வந்தீங்க ? - கொளல்வினா 6). இவங்க எல்லாம் படிச்சு ஆளாகிறபோது இந்த உலகம் என்ன பாடுபடுத்தப் போகுதோ ? - அறியாவினா.


விடைகள் பற்றி நன்கு தமிழறிந்த நண்பர் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் அளித்ததும் இங்க பகிரப்படும்.

விடை எட்டு வகைப்படும் அவை:

(1) சுட்டுவிடை
(2) மறைவிடை
(3) நேர்விடை
(4) ஏவல்விடை
(5) வினாஎதிர்வினாதல் விடை
(6) உற்றது உரைத்தல் விடை
(7) உறுவது கூறல் விடை
(8) இனமொழி விடை

வியாழன், நவம்பர் 14, 2013

வலி மிகுதல் 12 – இன்னும் சில நிலைமைகள்

1. ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலிமிகும். ஓரெழுத்துச் சொற்களால் ஆகியவையே ஓரெழுத்தில் அமைந்த ஒருமொழி. பூப்பறித்தான். டீக்கடை. தீத்தெறித்தது. ஓரெழுத்து ஒருமொழியில் வலி மிகாத நிலைமைகளும் இருக்கின்றன. நீ செல். போ பணிந்து.

2. வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகவேண்டும் என்பது அடிப்படை. அதன்படி கொக்குப் பறந்தது, சிட்டுப் பாடியது என்றே எழுத வேண்டும். செய்யுளில் இவ்வாறு எழுதுகின்ற வழக்கம் இருக்கிறது. ஆனால் உரையில் இவ்வழக்கு கைவிடப்பட்டுவிட்டது. தமிழறிஞர்களின் வாதப் பிரதிவாதங்கள் இரண்டையும் சரியென்றே ஏற்கின்றன.

3. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகாது. ஆனால் சிற்சில இடங்களில் அதுவும் ‘கள்’ விகுதியிலும் கூட வலி மிகுத்து எழுதுவது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்துக்கள், பந்துக்கள், கந்துக்கடன். கந்துக்காரன்.

4. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பதால் மருந்து விற்கும் கடையை ‘மருந்து கடை’ என்று எழுதவேண்டும். இதற்கு ‘மருந்தைக் கடைந்து தா’ -இரண்டாம் வேற்றுமைத் தொகையில் - என்பதுபோன்ற ஒரு பொருளும் வருகிறது. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாக ‘மருந்தை விற்கும் கடை’ என்ற பொருளில் மருந்துக் கடை என்றே எழுதுகிறோம்.

5. ஊர்காவலர், மெய்க்காவலர் என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையாக வலிமிகாமல் எழுதப்படவேண்டும். ஆனால், ஊர்க்காவலர், மெய்க்காப்பாளர் என்றே எழுதப்படுகிறது.

6. ஒன்று, ஒரு, இரண்டு, இரு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, அறு, ஏழு, எழு – ஆகிய எண்சொற்களை அடுத்து வலி மிகாது. அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய சொற்களுக்குப் பின் கட்டாயம் வலி மிக வேண்டும்.

7. படி’ என்ற சொல் தான் சேர்ந்தாலும் தன்னை அடுத்து வல்லினம் வந்தாலும் வலி மிகாது. அதன்படி இதன்படி, சொன்னபடி, செய்தபடி. ஆனால் அப்படி, இப்படி, எப்படி – ஆகிய சொற்களை அடுத்து வலி மிக வேண்டும்.

8. அத்தனை, இத்தனை, எத்தனைக்கு வலி மிகாது. அத்துணை, இத்துணை, எத்துணைக்கு வலி மிகும்.

9. கீழ் என்பதை அடுத்து வலிமிகுவதும் மிகாததும் ஏற்கப்படுகிறது. கீழ்க்கணக்கு, கீழ்த்திசை, கீழ்தளம்.

10. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே- என்பதற்கொப்ப மரபையும் தொல் பெருமைகளையும் போற்றிக்காப்பதையும் தகுதியான புதுமைகளை ஏற்று நடப்பதையும் இருகண்களாகக் கருதி இந்தத் தொடரை இனிதே நிறைவு செய்கிறேன். ஆர்வத்துடன் பின்தொடர்ந்த அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

செவ்வாய், நவம்பர் 12, 2013

வலிமிகுதல் 11 - கள் விகுதிக்கு வலி மிகுமா ?


கள் - மது என்ற பொருளில் வந்தால் தனிச்சொல். பன்மைச் சொற்களில் கள் என்று இடம்பெறும் ஈற்று விகுதிக்குப் பன்மை விகுதி என்று பெயர். வெறும் விகுதியாய் வருவதால் அது தனிச்சொல் இல்லை.

சொல் வகைமையில் கள் விகுதியை இடைச்சொல்லில் சேர்ப்பார்கள். இடைச்சொல்லுக்கு வலி மிகாது. கிறு, கின்று, ஆநின்று - ஆகியவை கூட இடைச்சொல்தான்.

வாழ்த்துக்கிறோம் என்று வலி மிகை செய்து எழுதுவதில்லை. வாழ்த்துகிறோம் என்றே எழுதுகிறோம். அதுபோலவே வாழ்த்துகள் என்றே எழுத வேண்டும். வாழ்த்துக்கள் என்பது பெரும் பிழை.

வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் என்பதால்தான் வாழ்த்துக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள், பாட்டுக்கள் என்று எழுதுவதாகச் சொல்வார்கள். பரிமேலழகரே ‘எழுத்துக்கள்’ என்று எழுதியிருப்பதாக ஆதாரமும் உண்டு.

வன்தொடர்க் குற்றியலுகர வலிமிகும் விதி தன்னை அடுத்து மற்றொரு தனிச்சொல் வந்தால்தான் பொருந்துமே அன்றி கள் என்னும் இடைச்சொல்லான பன்மை விகுதிக்குப் பொருந்தாது.

கள் விகுதி வலிமிகுந்தும் மிகாமலும் குழப்பமான புழக்கத்தில் இருக்கிறது. அந்தப் பழக்கத்தால்தான் வாழ்த்துக்கள் என்கிறோம்.

1. தனி நெடிலை அடுத்தோ (ஓரெழுத்து ஒருமொழி) நெடிலில் முடியும் சொற்களை அடுத்தோ கள் விகுதிக்கு வலி மிகும்.

ஆக்கள், ஈக்கள், பாக்கள், தேனீக்கள், வெண்பாக்கள்.

ஆனால், ஐகாரத்திலும் ஔகாரத்திலும் வலி மிகாது. கைகள், பைகள், பண்டிகைகள்.

ஔகாரத்தில் ஏதும் சொற்கள் உள்ளதாகத் தெரியவில்லை.

2. உ’கரத்தில் முடியும் இரண்டு குறில் எழுத்துகள் (குறிலிணை) உள்ள சொற்களை அடுத்து கள் விகுதி வந்தால் வலிமிகும். தெருக்கள், அணுக்கள், வடுக்கள், பருக்கள்.

உ’கரத்தில் முடியும் இரண்டுக்கும் மேற்பட்ட குறில்கள் என்றாலோ அல்லது நெடிலை அடுத்த உகரக் குறில் என்றாலோ வலி மிகாது. அழகுகள், விழுதுகள், ஆடுகள், வீடுகள்.

ள்’ என்று முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் புணர்த்தவும் கூடாது. ஏனென்றால் புணர்ச்சி விதி ஏற்க இது தனிச்சொல் இல்லை. நாள்கள், பொருள்கள், வாள்கள், தோள்கள் என்றுதான் எழுதவேண்டும். நாட்கள், பொருட்கள் என்று எழுதக் கூடாது.

கள் விகுதி சார்ந்த ஐயங்களில் முழுமையாகத் தெளிவு பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.


****
புத்தகம்கள்-புத்தகங்கள்
பாடம்கள்-பாடங்கள்
இவ்வாறான சில வார்த்தைகளை பாடத்திலும் முக்கியமான சில பத்திரிகைகளிலும் படித்ததால் வந்த குழப்பம் ஐயா.
(பத்திரிக்கை -பத்திரிகை...??)

****
அதனால்தான்   ள்  என்று முடியும் பெயர்ச்சொற்கள் என்றேன். இதிலும் விதிவிலக்காக புள், முள் போன்றவை புட்கள், முட்கள் என்றாகும்  அது வேறு பாடம்.

*****
கள் மயக்கமே!வலியிட்டும் இடாமலும் எழுதுவதில் தப்பில்லை என்றார் என் ஆசிரியர்.ஒருவேளை அவர் தப்பிப்பதற்காக இருக்கலாம்.அதிகமானோர்மவவன்றொடர் குற்றியலுகரத்தின் பின் வலி மிகும் என்றே கொண்டெழுதுகின்றனர்.(முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்.......).

****
இசையின்பம் கருதிச் செய்தால் ஏற்பது இயல்பு.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

வலிமிகுதல் 10
வலிமிகுதல் 9
வலிமிகுதல் 8
வலிமிகுதல் 7
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1