வலிமிகுதல் பற்றிய இலக்கண அறிவைப் பெறுவதில் மிகவும் கடினமானது என்று கருதப்படக்கூடிய பகுதிக்குள் இப்போது நுழைகிறோம். அவ்வாறு கருதிக்கொண்டிருந்தது எத்தனை பெரிய மடத்தனம் என்று நீங்களே புரிந்துணரத் தக்க இடத்திற்குச் செல்லவிருக்கிறீர்கள். இலக்கணக் கதவுகள் உங்கள் கண்முன்னே பூவிதழ்களைப்போல் திறக்கக் காண்பீர்கள்.
மொழியில் சொல் என்பது அடிப்படையான ஓர் அலகு. தனித்துவமான துண்டு. ஒன்றுக்கு மேற்பட்டு, குறைந்தது இரண்டு சொற்களால் ஆவது சொல் தொடர் - சொற்றொடர். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்றொடர்களால் ஆவதுதான் வாக்கியம். வாக்கியத்தின் வழியாக மொழி உச்சத்தை அடைந்து உலகை ஆள்கிறது.
வலிமிகுதல் என்பது இரண்டு சொற்களுக்கு இடையே நடைபெறும் செயல். சொற்றொடர் ஒன்றின் உள்ளுக்குள்ளே நடக்கும் மொழிவினைதான் வலிமிகுதல். வலிமிகுதலைப் பற்றிய பறவைப் பார்வையைப் பெற வேண்டுமானால் சொற்றொடர் குறித்த அறிதலையும் அதன் வகைகளையும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகைமைகளில் எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதை அறிந்தவுடன் இந்தப் பாடம் ஏறத்தாழ நிறைவு பெறவுள்ளது.
மாடு மேய்கிறது. மாடு ஒரு சொல். மேய்கிறது ஒரு சொல். மாடு மேய்கிறது என்பது சொற்களின் தொடர் வரிசை - சொற்றொடர். இந்தச் சொற்றொடர் மிக இயல்பாக எளிமையாக இருக்கிறது. ஆனால் மொழி என்பது இப்படி வெள்ளந்தியான எளிமையோடும் சாதாரண அம்சங்களோடும் இருப்பது மட்டுமில்லையே. அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நுண்மைகளையும் செறிவுகளையும் அறிவுப்புலத்தையும் தனக்குள் ஏற்றுச் செரித்து வன்மையடந்த ஒன்றல்லவா ?
முழுமையாகப் பொருள் காட்டும் எளிமையான சொற்றொடர்களால் ஆகியிருக்கும் தமிழ் மொழி, இன்னொரு புறத்தில், உள்மறைந்து தொக்கி நிற்கும் தன்மைகள் உள்ள சொற்றொடர்களாலும் உருவாகியிருக்கிறது. அத்தகைய சொற்றொடர்களை நாம் நம் அறிவைப் பயன்படுத்திச் சற்றே விரித்துப் பொருள் காண்கிறோம்.
மாடு புல் மேய்கிறது. இப்பொழுது ‘புல் மேய்கிறது’ என்கிற சொற்றொடரை மட்டும் கவனியுங்கள். புல் மேய்கிறது - முன் சொன்னதுபோல எளிமையாக அர்த்தப்படுத்தக் கூடாதல்லவா ? புல்லை மேய்கிறது’ என்று ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபை உடன் சேர்த்து விரித்துப் பொருள் கொள்கிறோம். மாடு புல்லை மேய்கிறது.
உள்ளுக்குள் ஒன்றும் தொக்கியிருக்காமல் வெகு இயல்பாய் எளிமையாய் அமைந்த சொற்றொடர்களைத் தொகாநிலைத் தொடர்கள் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொடர்’ என்பதும் உண்டு. மாடு மேய்கிறது மாதிரி.
உள்ளுக்குள் ஒன்று தொக்கி நிற்க (உருபு) அதைக்கொண்டு ஒரு சொற்றொடரை விரித்துப் பொருள்கொள்ள வேண்டிய, தொகுத்துப் பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர்களைத் தொகைநிலைத் தொடர் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொகை’ என்பார்கள். புல் மேய்கிறது மாதிரி.
தொடர்’ என்று சொல்லப்பட்ட எளிமையான சொற்றொடர் வடிவங்களிலும், தொகை’ என்று சொல்லப்பட்ட தொகுத்துப் பொருள்கொள்ளக்கூடிய சொற்றொடர் வடிவங்களிலும் - வலிமிகுமா மிகாதா என்பதைத்தான் நாம் இனி பார்க்கப் போகிறோம்.
குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
சனி, நவம்பர் 02, 2013
வியாழன், அக்டோபர் 31, 2013
வலிமிகுதல் 5
இத்தொடரின் முதல் பகுதியில் உம்மைத் தொகையில் வலிமிகாது என்று பார்த்தோம், நினைவிருக்கிறதா ?
பொதுவாக இரண்டு பெயர்ச் சொற்களுக்கு இடையே வலிமிகும் வாய்ப்பிருந்தால் மிகுவித்து விடுங்கள் (அது எப்படியும் சரியாகவே இருக்கும்) என்று ஆரம்பித்த நான் ஒரே ஒரு விதிவிலக்காக உம்மைத் தொகையைக் கூறினேன்.
காடுகரை என்பது உம்மைத் தொகை. காடும் கரையும் என்று இருபெயர்களுடன் ‘உம்’ சேர்த்து விரித்துப் பொருள் கொள்வதால் அது உம்மைத் தொகை என்றும் தெரிந்துகொண்டோம்.
மேலும் உதாரணங்கள் : பட்டிதொட்டி, செடிகொடி, இட்லி தோசை, இன்பதுன்பம், வள்ளி தெய்வானை, சேர சோழ பாண்டியர். இன்னும் சிலவற்றை நீங்களும் கற்பனை செய்து கண்டுபிடிக்கலாம். (அபூர்வமாக, ‘ஏற்றத்தாழ்வு’ போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்கிறார் அ.கி.ப.)
உம்மைத் தொகையைப் போலவே மேலும் இரண்டு தொகைகளைப் பார்க்கப் போகிறோம். உவமைத் தொகை மற்றும் பண்புத் தொகை.
தாமரைக்கண், மலைத்தோள் - இவற்றைத் தாமரை போன்ற கண், மலை போன்ற தோள் என விரித்துப் பொருள் காண்போம். முதலில் வருகின்ற சொல் அடுத்து வருகின்ற சொல்லுக்கு உவமையாய் இருப்பது. அச்சொற்கள் இரண்டுக்குமிடையில் போல, போன்ற என்று உவம உருபைத் தருவித்துப் பொருள் காண்பது வழக்கம். உவமைத்தொகை என்பது இதுதான். உவமைத் தொகைக்கு வலிமிகும்.
(உவமைத்தொகையைக் கண்ணாடி முன் நிறுத்தி இடவலம் மாற்றிப் போட்டால் அதுவே உருவகம் எனப்படும். மலைத்தோள் உவமைத்தொகை என்றால் தோள்மலை உருவகம்).
அடுத்து பண்புத் தொகை. உவமைத்தொகையில் முதற்சொல் உவமையாய் அமைந்ததைப் போல பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் அடுத்துள்ள சொல்லின் பண்பைக் குறிக்கும். அது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு (இன்னும் பல) என எவ்வொரு பண்பையும் குறிக்கக் கூடியது.
உவமைத்தொகைக்குப் ‘போன்ற’ என்ற உவம உருபை இடையிட்டுப் பொருள் விரித்ததுபோல பண்புத்தொகைக்கு ‘ஆகிய’ என்ற பண்புருபை இடையிட்டுப் பொருள் காண்பர்.
பண்புத்தொகையில் வலிமிகும்.
வெள்ளைத்தாள்
பொய்ப்பேச்சு
மெய்த்தன்மை
பண்புத்தொகையில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்ற வகையும் உண்டு. அதற்கும் வலிமிகும். நாம் அந்தப் பகுதிக்கே போக வேண்டியதில்லை. ஏனென்றால், முதலில் சொன்னதுபோல, இரண்டு பெயர்கள் காணப்பட்டாலே தயங்காமல் வலிமிகுவித்து விடுவோம்.
சுருக்கம் : உவமைத் தொகையிலும் பண்புத் தொகையிலும் வலிமிகும்.
குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1
பொதுவாக இரண்டு பெயர்ச் சொற்களுக்கு இடையே வலிமிகும் வாய்ப்பிருந்தால் மிகுவித்து விடுங்கள் (அது எப்படியும் சரியாகவே இருக்கும்) என்று ஆரம்பித்த நான் ஒரே ஒரு விதிவிலக்காக உம்மைத் தொகையைக் கூறினேன்.
காடுகரை என்பது உம்மைத் தொகை. காடும் கரையும் என்று இருபெயர்களுடன் ‘உம்’ சேர்த்து விரித்துப் பொருள் கொள்வதால் அது உம்மைத் தொகை என்றும் தெரிந்துகொண்டோம்.
மேலும் உதாரணங்கள் : பட்டிதொட்டி, செடிகொடி, இட்லி தோசை, இன்பதுன்பம், வள்ளி தெய்வானை, சேர சோழ பாண்டியர். இன்னும் சிலவற்றை நீங்களும் கற்பனை செய்து கண்டுபிடிக்கலாம். (அபூர்வமாக, ‘ஏற்றத்தாழ்வு’ போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்கிறார் அ.கி.ப.)
உம்மைத் தொகையைப் போலவே மேலும் இரண்டு தொகைகளைப் பார்க்கப் போகிறோம். உவமைத் தொகை மற்றும் பண்புத் தொகை.
தாமரைக்கண், மலைத்தோள் - இவற்றைத் தாமரை போன்ற கண், மலை போன்ற தோள் என விரித்துப் பொருள் காண்போம். முதலில் வருகின்ற சொல் அடுத்து வருகின்ற சொல்லுக்கு உவமையாய் இருப்பது. அச்சொற்கள் இரண்டுக்குமிடையில் போல, போன்ற என்று உவம உருபைத் தருவித்துப் பொருள் காண்பது வழக்கம். உவமைத்தொகை என்பது இதுதான். உவமைத் தொகைக்கு வலிமிகும்.
(உவமைத்தொகையைக் கண்ணாடி முன் நிறுத்தி இடவலம் மாற்றிப் போட்டால் அதுவே உருவகம் எனப்படும். மலைத்தோள் உவமைத்தொகை என்றால் தோள்மலை உருவகம்).
அடுத்து பண்புத் தொகை. உவமைத்தொகையில் முதற்சொல் உவமையாய் அமைந்ததைப் போல பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் அடுத்துள்ள சொல்லின் பண்பைக் குறிக்கும். அது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு (இன்னும் பல) என எவ்வொரு பண்பையும் குறிக்கக் கூடியது.
உவமைத்தொகைக்குப் ‘போன்ற’ என்ற உவம உருபை இடையிட்டுப் பொருள் விரித்ததுபோல பண்புத்தொகைக்கு ‘ஆகிய’ என்ற பண்புருபை இடையிட்டுப் பொருள் காண்பர்.
பண்புத்தொகையில் வலிமிகும்.
வெள்ளைத்தாள்
பொய்ப்பேச்சு
மெய்த்தன்மை
பண்புத்தொகையில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்ற வகையும் உண்டு. அதற்கும் வலிமிகும். நாம் அந்தப் பகுதிக்கே போக வேண்டியதில்லை. ஏனென்றால், முதலில் சொன்னதுபோல, இரண்டு பெயர்கள் காணப்பட்டாலே தயங்காமல் வலிமிகுவித்து விடுவோம்.
சுருக்கம் : உவமைத் தொகையிலும் பண்புத் தொகையிலும் வலிமிகும்.
குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1
செவ்வாய், அக்டோபர் 29, 2013
வலிமிகுதல் 4
பெயரெச்சம் என்றால் என்னவென்று அறிவீர்களா ? முற்றுப்பெறாமல் முடிவுறாமல் எச்சமாகித் தொக்கி நிற்கும் ஒரு சொல் தன்னை அடுத்து ஒரு பெயரை வரவழைக்கும். அப்படி ஒரு பெயர்ச்சொல் வருவதால் மட்டுமே அது முற்றுப் பெறும். அத்தகைய சொற்கள் பெயரெச்சங்கள் எனப்படும்.
அடித்த கைகள், வெடித்த துப்பாக்கி, பணிந்த காவலன்.
மேலுள்ள இரண்டு சொற்களில் முதலில் உள்ள செயலைச் சொல்லும் சொல் தன்னை அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்தால் மட்டுமே நிறைவுறுவதைக் காண்கிறீர்கள் (அடித்த, வெடித்த, பணிந்த). இல்லையேல் பூர்த்தியடையாமல் எச்சமாகி அத்துவானத்தில் நிற்கும். அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்து முழுமையடைவது பெயரெச்சம்.
வினைச்சொல்லாக இருக்கையில் காலங்காட்டும்.
கடித்த பழம் - இறந்தகாலப் பெயரெச்சம்
கடிக்கின்ற பழம் - நிகழ்காலப் பெயரெச்சம்
கடிக்கும் பழம் - எதிர்காலப் பெயரெச்சம்
மேலுள்ள மூன்றும் வினையையும் காலத்தையும் காட்டுவதால் இவை தெரிநிலைப் பெயரெச்சங்கள் என்றும் வகைப்படும். இதில் கடித்த பழம் உடன்பாட்டுப் பெயரெச்சம். கடிக்காத பழம் என்று வந்தால் எதிர்மறைப் பெயரெச்சம்.
வினையையும் காலத்தையும் காட்டாமல் வெறுமனே பண்பை மட்டும் காட்டுகின்ற எச்சச்சொற்கள் உள்ளன. அவையும் தம்மை அடுத்துப் பெயர்ச்சொற்கள் வந்தால் மட்டுமே முழுமை பெறுவன. அவற்றைக் குறிப்புப் பெயரெச்சங்கள் என்று வகைப்படுத்துவர்.
சின்ன தம்பி
நல்ல குடும்பம்
அழகிய தமிழ்மகன்
புதிய பார்வை
இளைய தலைமுறை
மேலே காண்பவை பண்பை மட்டுமே சொல்லி அடுத்து ஒரு பெயர் வருவதால் மட்டுமே பூர்த்தியாகக் கூடிய குறிப்புப் பெயரெச்சங்கள்.
இப்பொழுது வலிமிகும் இடத்துக்கு வருகிறேன். மேலே விவரித்தபடியுள்ள பெயரெச்சங்கள் எவற்றுக்கும் - வினைச்சொல்லை அடுத்து வரும் பெயரெச்சங்கள் என்றாலும், அது மூன்று காலத்தைக் காட்டினாலும், உடன்பாடாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, வெறும் பண்பை மட்டுமே குறிக்கின்ற குறிப்புப் பெயரெச்சமாக இருந்தாலும் சரி - எங்கும் வலி மிகாது. எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள் - பெயரெச்சத்தை அடுத்து வலி மிகாது.
பாடாத தேனீ, ஓடாத குதிரை - போன்ற எதிர்மறைப் பெயரெச்சங்களில் கடைசி எழுத்து கெட்டு மறைவதும் உண்டு. பாடாத் தேனீ, ஓடாக் குதிரை - என. எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசி எழுத்து, ஈறு கெடுவதால் அது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று அழைக்கப்படும். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.
ஆக பெயரெச்சங்களில் வலி மிகாது. உதாரணங்களின்படி - படித்த, அடித்த, நடக்கின்ற, ஓடுகின்ற, முடிக்கும், வெடிக்கும், உண்கின்ற, உண்ணாத, செய்த, செய்யாத, நல்ல, கெட்ட, தீய, சிறிய, பெரிய, பழைய, புதிய - எவ்வகைப் பெயரெச்சங்களிலும் வலி மிகா.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.
ஒட்டுமொத்தமாக வகுத்துப் பகுத்துத் தொகுத்து கிளிப் பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.
- இலக்கணம் சொல்லித் தருபவர்கள் பெயரெச்சத்தின் பின் வலி மிகாது என்று உதாரணத்தைச் சொல்லிச் சென்றுவிடுவார்கள். வலி மிகுதல் என்ற தலைப்புக் குடையின்கீழ் பெயரெச்சத்தை விளங்கிக்கொண்டு அதன் வகைப்பாடுகளில் தெளிவுபெற்று வலிமிகுமா மிகாதா என்பதை அறியப் புகுந்தால் இரண்டும் தெள்ளத் தெளிவாக விளங்கிவிடும்.
- கனிந்த பழம் இறந்தகால வினை எச்சமா? நிகழ்கால வினை எச்சமா? குனித்த புருவம் எக்கால வினை எச்சம்? எச்சம் என்பது எஞ்சி நிற்பதைக் குறிக்கும். நீங்கள் குறிப்பிட்ட - கனிந்த என்ற சொல்லைத் தனியே பார்த்தால், அது எஞ்சி நிற்பது தெரிகிறது. கனிந்த என்கிற சொல் அர்த்தம் தரக்கூடிய சொற்றொடராக மாற்றம் பெறவேண்டுமெனில், அதன்பின்பு ஒருசொல் வரவேண்டும். கனிந்த என்கிற சொல்லின் பின்னால் வருகிற சொல் பெயர்ச்சொல்லாயின் கனிந்த, பெயரெச்சம் ஆகும், பின்னால் வருகிற சொல் வினைச்சொல்லாயின் கனிந்த வினையெச்சமாகும். இங்கு பழம் என்கிற பெயர்ச்சொல் வருவதால், கனிந்த, பெயரெச்சமாகும். குனித்த என்கிற சொல்லின் பின் வருகிற புருவம் பெயர்ச்சொல் என்கிறபடியால், குனித்த, பெயரெச்சமாகும். ஓடி வந்தான். இங்கு ஓடி என்கிற சொல்லின் பின்பு வருகிற வந்தான், வினைச்சொல் என்கிறபடியால், ஓடி, வினைஎச்சமாகும். பொதுவாக பெயரெச்சம் அ என்கிற ஒலியுடனும், (பெரிய, அழகிய, சிறிய) வினைஎச்சம் இ, உ,அ என்கிற ஒலியுடனும் (ஆடி, ஓடி, கருகி, விழுந்து, சரிந்து, அழகாக) முற்றுப்பெறும்
- வினையெச்சத்திற்குத் தனியாக எழுதுவேன். பொறுமை காக்கவும். இந்தத் தொடர் 15 பகுதிகள் வரை நீளக்கூடும். அதில் தமிழ் இலக்கணத்தின் முக்கியக் கூறுகள் அனைத்தும் தொட்டுத் துலக்கப்படும்.
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)