இரண்டு சொற்கள் சேர்ந்தால் அது சொற்றொடராகிறது. அது எளிமையாய் வெளிப்படையாய் இருந்தால் தொகாநிலைத்தொடர் (தொடர்) என்றும், விரித்துப் பொருள் காண இடமிருக்குமானால் அது தொகைநிலைத்தொடர் (தொகை) என்றும் சென்ற பதிவில் புரிந்துகொண்டோம்.
முதலில் தொடரின் வகைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
எழுவாய்த் தொடர்
விளித் தொடர்
வினைமுற்றுத் தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
வேற்றுமைத் தொடர்
இடைச்சொற்றொடர்
உரிச்சொற்றொடர்
அடுக்குத் தொடர்
எழுவாய்த் தொடர் -
கிளி பேசியது, புலி பாய்ந்தது - கிளி, புலி என எழுவாய் தொடங்கி நகரும் எளிமையான சொற்றொடர்கள். வலி மிகாது.
விளித் தொடர் -
தம்பி பார் - முதற்சொல் அழைக்கிறது அதாவது விளிக்கிறது. வலி மிகாது.
வினைமுற்றுத் தொடர் -
பாடியது பறவை - முதல் சொல் வினைமுற்றாக இருந்தும் மேலும் தொடர்வது. வலி மிகாது. (கண்டேன் சீதையை - புகழ்பெற்ற உதாரணம். வலிமிகும் தேவை இதற்கு இல்லை என்பதால் நமக்கு உதவவில்லை).
பெயரெச்சத் தொடர் -
வாடிய பயிர் - முதற்சொல்லாய் அமைந்த வினை, தன்னை அடுத்து பெயர் வந்து பூர்த்தியடையும்படி எச்சமாக இருப்பது. வலி மிகாது.
வினையெச்சத் தொடர் -
வரச் சொன்னான், பாடித் திரிந்தான் - முதற்சொல் வினையின் எச்சமாக நின்று அடுத்து ஒரு வினைச்சொல் வந்து பூர்த்தியடையும்படி இருப்பது. வலி மிகும்.
வேற்றுமைத் தொடர் -
இதைத் தனிப்பதிவில் விளக்குகிறேன்.
இடைச்சொற்றொடர் -
மற்றொன்று - மன், மற்று, கொல், போன்ற சொற்கள் பெயர் அல்லது வினைச்சொல்லுக்கு முன் வரும். மற்று+ஒன்று = மற்றொன்று. இதில் மற்று இடைச்சொல். ஒன்று என்னும் பெயருக்கு முன் வந்தது. செய்யுள்களில் அதிகம் பயன்பட்டது. வலி மிகாது. இப்போது தற்கால எழுத்து வழக்கில் இல்லை.
உரிச்சொற்றொடர் -
நனி பேதை, கடிகமழ் மலர், உறுபுகழ் - பெயருக்கோ வினைக்கோ உரியதாய் வரும் சொற்கள். வலிமிகாது. இதுவும் தற்கால வழக்கில் இல்லை.
அடுக்குத் தொடர் -
பாடு பாடு, போ போ, சிறு சிறு, சின்ன சின்ன - பொருள்தருகின்ற சொற்கள் அடுக்கி வருவது - வலி மிகாது.
சுருக்கம் : வினையெச்சத் தொடர் தவிர்த்த வேறெந்தத் தொடர்களுக்கும் வலிமிகாது. (வேற்றுமைத் தொடரை நாம் கடைசியில் பார்க்கவிருக்கிறோம்).
குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.
- உரிச்சொற்றொடர்: சால, உறு , தவ, கழி , நனி,கூர், ஆகிய சொற்கள் மிகுதி எனும் பொருளை உணர்த்தும் சொற்கள் உரிச்சொற்தொடர் ஆகும். அடுக்குத் தொடர் - முன் வரும் சொல்லெ பின்னும் வரும். சொற்களைப் பிரித்தாலும் பொருளில் மாற்றமிருக்காது.
- இலக்கணப்படி உரிச்சொற்றொடருக்கு வலி மிகாது. வலி மிகுந்தது என்றால் இசையின்பம் கருதிச் செய்யப்பட்டது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வரிசையில் திரு’ என்பதையும் உரிச்சொல்லாகக் கருதலாமா ? பொதுவாக இத்தொடரின் பயன்பாடு அபூர்வமானது என்பதால் விவாதம் எதுவும் எழுந்ததாகத் தெரியவில்லை. சின்ன சின்ன - என்பதுதான் சரி. அடுக்குத் தொடர் என்றாலும் வலிமிகாது. குறிப்புப் பெயரெச்சம் என்றாலும் வலிமிகாது. (வலிமிகுதல் 4 - பகுதியில் இதை விரிவாக எழுதிவிட்டேன்).
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1