வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், டிசம்பர் 21, 2009

ஆழ்கடலுக்குள் எரிமலை வெடிப்பு

நாம எல்லோரும் எரிமலை வெடிச்சு சிதறுவதை பார்த்திருப்போம். நேர்ல இல்லைங்க, படத்துல தொலைக்காட்சியில யூ டியூப்-ல தான். அறிவியலாளர்களும் பூமில எரிமலை வெடிச்சு சிதறி பார்த்திக்காங்க, கடல்ல எரிமலை வெடிச்சு சிதறி பார்த்திக்காங்க ஆனா ஆழ் கடலுக்குள் எரிமலை வெடிச்சு சிதறி பார்த்ததில்லை. இதுக்காக தவம் இருந்திருக்காங்க. பூமியிலிருந்து 1.2 கி.மீ கடலுக்குள்ள இருக்கற எரிமலை வெடிச்சு சிதறுனத ரோபோ மூலமா படம் புடிச்சி ஆகா ஆகான்னு கொண்டாடுறாங்க. ஆடட்டும் தப்பில்ல. இப்ப நாமும் அத பார்க்கலாமா. (அவங்க படம் பார்த்தாங்க நாமளும் பார்க்கப்போறோம் அதனால நாமளும் அறிவியலாளர்கள் தான், என்ன நான் சொல்லறது சரியா இஃகிஃகி)




இது பசிபிக் கடலில் இருக்கும் சமோவாவுக்கு தென் மேற்கே 200 கிமீ தள்ளி இருக்கு. இந்த எரிமலைக்கு பெயர் மேற்கு மாடா.

கடலில் உள்ள எரிமலைகளை நிறைய பார்த்தாலும் ஆழ்கடல் எரிமலை வெடிப்பை படம் பிடிப்பது இது தான் முதல். ஹவாய் தீவுகளில் ஒருவகையான எரிமலை குமறி அதன் குழம்பு கடலுக்கு செல்லும். எப்ப போனாலும் அதை பார்க்கலாம். அது புகழ் பெற்ற சுற்றுலா தளம் கூட. அது போன்றவற்றுடன் மேற்கு மாடாவை சேர்க்காதிங்க. இது தனி வகை.

ஆழ்கடலில் இருந்ததால் தண்ணீரின் அழுத்தம் இதன் வெடிப்பின் பாதிப்பு அல்லது சீற்றத்தை வெகுவாக குறைத்து விட்டதால் ரோபோ மூலம் எரிமலை வெடிப்பிற்கு சில அடி தூரம் வரை செல்ல முடிந்ததாம். நில மற்றும் கடல் மட்டத்திற்கு அருகிலுள்ள எரிமலைகளில் அவ்வாறு செல்ல முடியாது காரணம் அவற்றின் சீற்றம் மற்றும் வெப்பம்.

மேற்கு மாடா எரிமலையானது 9 கிமீ நீளமும் 6 கிமீ அகலமும் உடையது. இதன் அடி 3 கிமீ ஆழத்தில் உள்ளது. இது பசிபிக் டெக்டோனிக் தட்டு ஆசுத்திரிலேயா தட்டுக்கு அடியில் சொருகும் இடத்தில் இருக்கு. இது மிகவும் சிறப்பான இடம். இந்த பகுதியில தான் பாறைகள் மறுபயனீடுக்கு பூமிக்கு உள்ளாற போகும். அதே போல் இங்க தான் உருகிய பொருட்கள் பூமியின் உள்ளுக்குள் இருந்து மேல் பரப்புக்கு வரும். (உள்ளாற போனா வெளியில் வந்து தான ஆகனும்)


இது தொடர்பான செய்தி;
http://edition.cnn.com/2009/TECH/science/12/18/volcano.underwater.explosion.pacific/
http://news.bbc.co.uk/2/hi/science/nature/8419736.stm

குறிப்பு :- வழக்கம் போல் இது நான் எழுதும் தாமதமான சூடான செய்தி.
.
.

செவ்வாய், டிசம்பர் 01, 2009

கூம்பு நோம்பி வாழ்த்து

கூம்பு நோம்பி என்பது கார்த்திகை ஒளித் திருவிழாவைக் குறிக்கும் அதாங்க கார்த்திகை தீபம். கொங்கு நாட்டில் விழாவை நோம்பி என்று தான் அழைப்பார்கள். அன்று தெருக்களில் கோலம் போட்டு வீடுகளை அகல் விளக்கால் அலங்காரம் செய்வார்கள். அன்று ஆடம்பரம் ஏதும் இருக்காது. ஆனால் விழாக் களை இருக்கும். காசு இருந்தா தான் இதை கொண்டாட முடியும் என்றில்லை, இது அனைவராலும் கொண்டாடப்படக்கூடியது. குறிப்பா தீபாவளிக்கு செலவழிக்கும் எந்த செலவும் இதுக்கு கிடையாது. எனக்கு தெரிந்து வாழ்த்தெல்லாம் இதுக்கு சொல்லி கேட்டதில்லை. அப்புறம் ஏண்டா வாழ்த்து இடுகைன்னு கேக்கறீங்களா? இஃகி இஃகி நானும் இடுகை போடனும்முல்ல. தீபாவளிக்கு இணையானது இது. சொல்லப்போனா தமிழர்கள் கொண்டாடும் ஒளி விழா இது தான்.

எங்கள் ஊரில்:-

விவசாயிகள் தங்கள் சோளக்(த்) கருதை(தட்டை) கூம்பு வடிவில் வைத்து தீ மூட்டுவார்கள். எல்லோரும் தங்கள் சார்பாக ஒரு கட்டு தருவார்கள். இது காய்ந்த சோளத்தட்டாகும். சாமி பூசை முடிந்தவுடன் ஒரு அகல்விளக்கை கொண்டு கூம்பில் தீ மூட்டுவார்கள். எரியும் பொருள் மீது உப்பை (கல் உப்பு) எரிந்தால் அது வெடிக்கும். எனவே சிறிதளவு உப்பும் எரியப்படும். சில விளையாட்டுப் பசங்களால் ஊசி வெடியும் அதில் எரியப்படும். யார் வீசியது என்று தெரிந்தால் திட்டு விழும் என்பது தனி. சில சமயம் சிலரால் பெரிய வெடிகளும் எரியும் கூம்பில் வீசப்படும் அது யாருன்னு தெரிஞ்சா அவனுங்க கதி அதோ கதி தான். தான் பெரிய ஆளுன்னு பெண்கள் கிட்ட காட்டத்தான். ஆனா அது வெளியில் தெரிஞ்சா பெரிய ஆளு ஆக முடியாது. போக்கிரி, ரவுடி, வெளங்காதவன் என்ற பெயர் தான் கிடைக்கும்.

கூம்பு அணைந்த பிறகு எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள். அதாவது பெண்\மாப்பிளை பார்ப்பது, புது வீட்டுக்கு கடக்கால் போடுவது, வண்டி வாங்குவது, நிலம் வாங்குவது என்று. மற்ற இடங்களில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியாது.

சைவ நெறி - வைணவ நெறி

தீபாவளி வைணவ நெறி சார்ந்த விழாவாகும். கூம்பு நோம்பி சைவ நெறி சார்ந்த விழாவாகும்.

தீபாவளி - திருமாலை வைத்து கொண்டாடப்படுவது. இராமன் வனவாசம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் அயோத்திக்கு வருவதால் வீடெங்கும் தெருவெங்கும் விளக்கு வைத்து அலங்கரித்து வரவேற்பு கொடுத்தார்கள். இராசாவை வரவேற்க விளக்கு மட்டும் போதுமா அதனால வாணவேடிக்கையும் இருந்தது. புது துணி உடுத்தி மக்கள் அவரை வரவேற்றாங்க. வடநாட்டுல நடக்கும் இது தான் உண்மையான தீபாவளி.

நரகாசுரனை கொன்றார் கிரகாசுரனை கொன்றார் என்று சொல்லி நம்மூரில் தீபாவளி கொண்டாடுவது ஏமாத்து வேலை. நாமளும் பட்டாசு வெடிக்கனும் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்துராங்கப்பா...

கூம்பு நோம்பி - திருவண்ணாமலையில் அண்ணாமலையானை வைத்து கொண்டாடப்படுவது. அங்க பெரிய விழாவே எடுப்பாங்களே. இது சிவனுக்கு உகந்ததா அல்ல முருகனுக்கு உகந்ததா? எனக்கு தெளிவில்லை. ஏன்னா பல கதைகள் இருக்கறதால சரியா சொல்ல முடியலை. ஆனா ஒன்னு இத எல்லோர் வீட்லயும் கொண்டாடுறாங்க.
.
.

திங்கள், நவம்பர் 09, 2009

குமாரமங்கலம் - புரியாதது

குமாரமங்கலம் அப்படின்னு சொன்னா உங்களில் பல பேருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராசன் குமாரமங்கலம் நினைவுக்கு வருவார். சிலருக்கு ஆதித்ய குமாரமங்கலம் பிர்லா நினைவுக்கு வருவார். ரங்கராசன் குமாரமங்கலம் முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தோட மகன் என்று பலருக்கு தெரிந்திருக்கும், அவரு முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பராயனோட மகன். சுப்பராயன் விடுதலைக்கு முன் சென்னை மாகாண முதல்வராக இருந்திருக்கிறார். இது நிறைய பேருக்கு தெரியாது.

இவங்க சொந்த ஊர் திருச்செங்கோடுக்கு பக்கத்திலுள்ள குமரமங்கலம். குமரமங்கலத்துல இருந்த ஜமீன் பரம்பரையை சேர்ந்தவங்களாம் இவங்க. இவங்க பேரு ரங்கராசன் குமரமங்கலம், மோகன் குமரமங்கலம் அப்படின்னு தான் இருந்திருக்கனும். குமரமங்கலம் எப்படி குமாரமங்கலம் ஆச்சின்னு தெரியலை. kumar - குமார் மாதிரி Kumaramagalam என்று ஆங்கிலத்தில் எழுதினதை குமாரமங்கலம் என்று தப்பா படிச்சு அப்படி ஆகி இருக்கலாம் என்பது என் கணிப்பு.

பிர்லா குழுமத்தை சார்ந்தவரோட பெயருல எப்படி குமாரமங்கலம் சேர்ந்துச்சுன்னு தான் புரியலை. ஆதித்ய குமாரமங்கலம் பிர்லாவோட அம்மா இராஜசிரீ தமிழ்நாட்டை சேர்ந்தவங்க. மதுரை மார்வாரி குடும்பத்தை சேர்ந்தவங்க. மதுரைல படிப்ப முடிச்சாங்க. அவங்களுக்கும் குமாரமங்கலம்\குமரமங்கலத்துக்கும் எந்த தொடர்பும் இல்ல. இவரு அப்பா பேரு ஆதித்திய விக்ரம் பிர்லா. இவங்க நிருவாகத்தின் கீழ் தான் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான BITS பிலானி வருது.

குமார் மங்கலம் அப்படிங்கிறத தான் சிலர் குமாரமங்கலம் அப்படின்னு சொல்லறாங்களா அல்ல குமாரமங்கலம் அப்படிங்கிறதை சிலர் குமார் மங்கலம் அப்படிங்கறாங்களான்னு புரியலை. இந்த இடுகையை படிக்கறவங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க