வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், டிசம்பர் 28, 2010

தேசிய மால்

நமக்கு தமிழில் உள்ள கோல் மால் என்றால் என்ன என்று நன்கு தெரியும், மால் கொடுத்தியா என்றால் அதன் பொருளும் புரியும். -

இப்ப அமெரிக்காவ பாத்து நம்பெரு நகர்களிலும் மால் (இது இங்கலிபீசு மால்)நிறைய வந்திருச்சு. நானும் மால் அப்படின்னா பெரிய வணிக வளாகம் அதில் நிறைய கடைகள் இருக்கும் என்று புரிந்து வைத்திருந்தேன். நானும் பல மால்களுக்கு பொருட்கள், துணிகள் வாங்க சென்றிருக்கறேன்.  அமெரிக்காவின் பெரிய மால் புளூமிங்டன் மின்னசோட்டாவில் உள்ள மால் ஆப் அமெரிக்கா அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா அமெரிக்காவின் தேசிய மால் அப்படி கிடையாது சொல்லப்போனா அது மாலே கிடையாது. அது ஒரு வெட்ட வெளி.


தேசிய மால் படம்:-  அமெரிக்க காங்கிரசு கட்டடம் - வாசிங்டன் நினைவுத்தூண் தூரத்தல தெரியறது லிங்கன் நினைவகம். 

எனக்கு இது மொதல்ல தெரியல. அமெரிக்க விடுதலை தினத்தன்று அமெரிக்காவின் கிட்டதட்ட எல்லா ஊர்லயும் வாண வாடிக்கை நடக்கும். நான் இருந்த ஊர்லயும் நடந்திச்சு அதை கண்டு நான் வாய பொழந்தப்ப  பக்கத்திலிருந்த நண்பர் வாசிங்டன் டிசில நடக்கும் வாண வேடிக்கை பெருசா இருக்குமுன்னார். அடுத்த ஆண்டு அங்க போங்கன்னு சொன்னார். அந்த வாண வேடிக்கை தேசிய மால்ல தான் நடத்துவாங்கன்னு கூட வேலை செய்யறவங்க சொன்னாங்க.. மால்ல எப்படி வாண வேடிக்கைன்னு நினைச்சேன். மால்ல எப்படின்னு கேட்டேன், அதுக்கு மால் பெரிசா இருக்கறதால அங்க தான் பட்டாசு கொளுத்துவாங்கன்னு சொல்லிட்டாங்க.. நான் மாலில் ஏன் என்று ஏன் கேக்கறன்னு அவங்களுக்கு புரியலை. திருப்பி திருப்பி மால பத்தி கேட்டா நல்லா இருக்காதுன்னு அதைப்பத்தி கேக்கறத விட்டுட்டேன். நம்ம மரியாதையை நாமே கெடுத்துக்கலாமா?  எப்படி போகனும் எங்க உட்கார்ந்தா வாண வேடிக்கை நல்லா தெரியும் என்று எல்லா விவரத்தையும் கூட வேலை செய்யும் மக்கள் சொல்லிட்டாங்க. வாசிங்டன் டி.சி-யில் வாண வேடிக்கைக்கு போகாதது தான் பாக்கி. எனக்கு மால்ல எப்படி? அப்படிங்கற சந்தேகம் மட்டும் தீரவேயில்லை.

சூலை 4-லும் வந்தது. மெட்ரோ ஏறி (அதாங்க local train) வாசிங்டன் நினைவுத்தூண் போயி லிங்கன் நினைவகத்தை பார்க்கற மாதிரி துண்ட போட்டு எடத்தை புடிச்சேன். நமக்கு முன்னாடியே பல பேர் குடும்பத்தோட வந்து துண்டு மன்னிக்க சமக்காளத்தையே போட்டு இடத்தை புடிச்சிருந்தாங்க. நாற்காலி, தண்ணி, தின்பண்டம், போர்வை என்று அனைத்து வசதிகளோடும் முகாம் போட்டிருந்தாங்க. நேரம் ஆக ஆக கூட்டம் நிறைய வந்தது. கூட்டத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். சிறுநீர் கழிக்கவும் ஆய் போகவும் தற்காலிக கழிவறைகளை அமைத்திருந்தனர். கூட்டம் நிறைய வர இடத்துல இது முக்கியம் இல்லைன்னா இடம் நாறிடும்.


தேசிய மால் படம்:-  லிங்கன் நினைவகம் - வாசிங்டன் நினைவுத்தூண் தூரத்தல தெரியறது அமெரிக்க காங்கிரசு கட்டடம்.

தேசிய மால் அப்படிங்கிறது லிங்கன் நினைவகத்திலுருந்து அமெரிக்க காங்கிரசு கட்டடம் வரை உள்ள வெட்ட வெளி தான். இதன் நீளம் கிட்டதட்ட 3 கி.மீ.  லிங்கன் நினைவகத்துக்கும் அமெரிக்க காங்கிரசு கட்டடத்துக்கும் இடையில் வாசிங்டன் நினைவுத்தூண் இருக்கு. லிங்கன் நினைவகத்துக்கு முன்னாடி செவ்வக வடிவில் குளம் உள்ளது. (ஆழம் குறைவு அதனால வாத்த தவிர யாரும் நீச்சல் அடிக்க முடியாது) வாசிங்டன் நினைவுத்தூணின் நிழல் இதில் விழும் அதனால இதை எதிரொலிக்கும் குளம் (reflecting pool) அப்படின்னு சொல்லுவாங்க. வாசிங்டன் நினைவுத்தூணில் இருந்து வலது பக்கதில்  வெள்ளை மாளிகை இருக்குது.

வாண வேடிக்கை நடக்கறப்ப இந்த குளத்து தண்ணிய காலி செய்து அங்கிருந்து தான் வாண வேடிக்கை நடத்துவாங்க. அதனால லிங்கன் நினைவகத்தை நோக்கி வாசிங்டன் நினைவுத்தூண் பக்கம் உட்கார்ந்து பார்த்தா வாண வேடிக்கை நல்லா தெரியும். 20 நிமிடம் நடக்கும் இந்த வாண வேடிக்கை நல்லாவே இருக்கும்.

அறிவது: எல்லா மாலும் மாலல்ல.

ஞாயிறு, டிசம்பர் 05, 2010

கருத்துப்படம் - இதில் 3 இருக்கு

தினமணியில் வந்த 3 கருத்துப்படங்கள். அனைத்தும் பார்க்கவேண்டியவை....



சொல்றது நியாமாதான் படுது, அவருக்குன்னு ஏதாவது மதிப்பு உண்டா?



இந்த நெருப்பு  போர்ஸ்ன்னா சுடும் ஸ்பெக்டர்ம்ன்னா அணைஞ்சிடும்.


பிரதமரை எருமைன்னு சொல்லிட்டாங்களே.....

வெள்ளி, டிசம்பர் 03, 2010

திமுக வரலாறு - கருத்துப்படம்

நல்லா பாருங்க.  புரிஞ்சுக்குங்க . 2G-spectrumத்துக்கு இதில் இடம் இல்லையா? ஓ! இது 2007ல போட்ட படமா.

திங்கள், நவம்பர் 29, 2010

கஜேந்திர மோட்சம் தவறியது

கஜேந்திர மோட்சம் என்றால் என்ன பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.
தெரியாதவங்களுக்கு -  பாகவதத்தில் கூறப்பட்ட கதை...

கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜா தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல, பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. கதை முடிந்தது என்று நினைத்த கஜா, ஆதிமூலமே என்று அலறியது. அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் புள்ளேறி ( கருடன்), சுதர்சன சக்கரத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோட்சம் அளித்தான்.
சுருக்கமா --- தண்ணிக்குள்ள வந்த யானையை அங்கிருந்த முதலை பிடிச்சுக்கிச்சி உடனே யானை பெருமாளே காப்பாத்துன்னு கத்த அதைக்கேட்ட திருமால் விரைந்து அங்குவந்து தன் சக்ராயுதத்தால் முதலையை கொன்று யானையை காப்பாற்றினார். பின்பு யானைக்கு மறுபிறவி இல்லாத நிலையை (மோட்சம்) திருமால் அருளினார். சுதர்சனத்தால் முதலை கொல்லப்பட்டதால் அதற்கும் மோட்சம் கிடைத்திருக்கும் ஆனா அதை பற்றி யாரும் ஒன்னும் சொல்லக்காணோம் ஏன்னு தெரியலை. 

இக்காலத்தில் நடந்தது -
கால கடிச்சு துதிக்கையை சும்மா விட்டதால தான யானை ஆதிமூலமேன்னு கத்துச்சு. அதனால முதலை இம்முறை காலை கடிக்காமல் துதிக்கையை கவ்விறுச்சு. இப்ப ஆதிமூலமேன்னு கத்தமுடியாதில்லையா. அதாவது யானைக்கு மோட்சம் கிடைக்காம தடுத்து விட்டது இந்த புத்திசாலியான முதலை.  (முடிவு:- முதலையின் பிடியில் இருந்து யானை தப்பி ஓடிவிட்டது)
குறிப்பு :- இது களிறு (ஆண் யானை) அல்ல பிடி (பெண் யானை)



முதலை யானையின் துதிக்கையை கடிக்கும் காட்சி.


முதலையிடம் இருந்து தப்ப யானை போராடும் காட்சி.

பிபிசி-யில் இந்த காட்சிகள் வந்திருக்கு. அதிலிருந்து சுட்டதுதான் மேல் இருக்கும் 2 படமும்.

திங்கள், செப்டம்பர் 20, 2010

எச்சு மிச்சு - அனுபவம்

நான் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் போது அடிக்கடி குளிக்க பக்கத்திலிருக்கும் கிணத்துக்கு போவோம் (தண்ணி இருக்கறப்பதான்). நீச்சல் தெரியாத பசங்களும் வருவாங்க. கிணறு பெரிசா வட்டமா இருக்கும்.

எங்க ஊர்ப்பகுதியில் எல்லாம் செவ்வகம் அல்லது சதுர வடிவில் தான் கிணறு இருக்கும். பொதுவாக ஒரக்கிணறு (பொதுக்கிணறு) சதுரமாவும் விவசாய கிணறு செவ்வகமாகவும் இருக்கும்.  அதாவது சிறு கிணறு சதுரமாகவும் பெருங்கிணறு செவ்வகமாகவும் இருக்கும். விவசாய கிணறில் மேல இருந்து கிட்டதட்ட 5அடி கீழ போனா பாம்பேரின்னு ஒன்னு இருக்கும் அந்த பகுதி கிட்டதட்ட 2 அடி அகலத்துக்கு இருக்கும். பாம்பேரிக்கு மேல் தண்ணி வராது. இப்பவெல்லாம் 2 அடிக்கு தண்ணி இருக்கறதே பெரிசு. பாம்பேரிக்கு வேலையே இல்லை.

எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் மத்தவனுங்க மரியாதையா பார்ப்பானுங்க. என்னையும் சேர்த்து 2 பேருக்கு நல்லாவும் 3 பேருக்கு சுமாராவும் மத்தவனுங்களுக்கு நல்லா கடப்பாரை நீச்சலும் தெரியும்.

ஒரு முறை நாங்க வட்ட கிணத்துல குளிச்சிட்டு விடுதிக்கு வந்துக்கிட்டு இருந்தோம், அப்ப பேச்சு வாக்குல நான் ஏதோ சொன்னேன் (தப்பா எல்லாம் இல்லிங்க) , கூட இருந்த நண்பன் (சோழ நாட்டான்) இப்ப  என்ன சொன்னன்னு கேட்டான்.
சொன்ன வாக்கியம் மறந்திடுச்சு ஆனா அவன் புதுசா கேட்ட சொல் மட்டும் நினைவு இருக்கு.

அதிகமா இருக்கு. ஜாஸ்தியா இருக்கு, நிறைய இருக்கு,  ரொம்ப இருக்கு இப்படி பல சொற்களை சொன்னேன். அவன் அதெல்லாம் இல்லை வேற சொன்ன அப்படின்னான். எனக்கு ஒன்னும் தோணவேயில்லை.

கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு கொங்கு நாட்டான் என்ன எச்சான்னு கேட்டான். ஆமா அதே தான் அப்படின்னு நம்ம சோழ நாட்டான் புடிச்சிக்கிட்டான். எனக்கு அதை கேட்டதும் அட இதை நாம்ப ஏன் சொல்லவேயில்லை அப்படின்னு தோன்றியது. எச்சு அப்படிங்கிற புதிய சொல்லை நம்ம சோழநாட்டான் தெரிஞ்சுக்கிட்டான். கொங்கு பகுதியில் அதிகம் என்பதற்கு பதிலா எச்சு என்ற சொல்(லும்) புழங்குவதை அங்க போன மற்ற பகுதி\நாட்டுக் காரங்க கவனிச்சிருக்கலாம். சரி எச்சு-ன்னா அதிகம் அதென்ன மிச்சுன்னு கேக்கறிங்களா? எல்லாம் எதுகை மோனை தான் இஃகி இஃகி.

காட்டு: விலை எச்சா இருக்கே.

சனி, செப்டம்பர் 04, 2010

போக்குவரத்து நெரிசல் 100 கிமீ தூரத்துக்கு

சீனாக்காரங்க எதை பண்ணுனாலும் பெரிசா தான் பண்ணுவாங்க. உலகத்திலேயே நீளமான சுவர் எது சீனப் பெருஞ்சுவர் தான். இப்ப அவங்க கட்டியிருக்கும் மூன்று ஆழ் பள்ளத்தாக்கு அணை தான் அணைகளிலேயே மிகப்பெரியது. மிகப்பெரிய கடல் வழி பாலம் எதுன்னா 32.673 கிமீ நீளமுள்ள கன்சு பே பாலம் (Hangzhou Bay Bridge) தான். நில வழி பாலமும் சீனாவில் தான் இருக்கு அது வினன் விகி பெரிய பாலம் (Weinan Weihe Grand Bridge).

இந்த மாதிரி பெரிசுகளுக்கு சொந்த காரங்களான சீனர்களுக்கு குறையாக இருந்த மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் என்ற பெயரும் தற்போது கிடைத்து விட்டது.  கிட்டதட்ட 100 கிமீக்கு வண்டிங்க நின்னுது. 10 நாட்களுக்கு மேலாகியும் இது சரியாகலை. நிலக்கரி ஏற்றிக்கிட்டு வர சுமையுந்துகள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை. இந்த நெரிசலுக்கு காரணமும் அவை தான், வடக்கில் உள்ள உள் மங்கோலியா மாகாணத்திலிருந்து  நிலக்கரி  ஏற்றிக்கிட்டு வருவதால் நெரிச்சல் (வரும் வண்டிகளின் எண்ணிக்கையை பீஜிங் நகர எல்லையில் உள்ள பகுதி சமாளிக்க முடியலை மேலும் பீஜிங் நகர எல்லையிலுள்ள சாலையில் மேம்பாட்டு பணி நடந்துகிட்டு இருக்கு இதனால் நெரிச்சல் அதிமாயிடுச்சி.  வடக்கே உள்ள திபெத்-பீஜிங் சாலையில் தான் இது நடந்துக்கிட்டிருக்கு. எதுக்கு திபெத் பேர் வச்சாங்க? திபெத் தென் மேற்கு மூலையில் அல்ல இருக்கு? ஏதாவது தொடர்பு இருக்கா???  எதிர்காலத்தில் மங்கோலியாவை ஆட்டய போட இது அச்சாரமா? என்னமோ ஒன்னும் புரியலை. பீஜி்ங் முதல் ஜினிங் (Jining) வரை நெரிசல் இருக்காம்.



பாவம்யா லாரி ஓட்டுனர்கள்.

விசைக்கு எதிர் விசை இருக்குமில்லையா. மாபெரும் நெரிசல் மூலமா பலருக்கு எரிச்சல் இருந்தால் சிலருக்காவது குளிர்ச்சி இருக்கனுமில்லையா? பத்து பதினைந்து நாளா வண்டி அங்குலம் கூட நகராம இருக்கறப்ப அதுக்கு தீனி வேணாம் ஆனா அதில் இருக்கும் மக்களுக்கு? குடிக்க தண்ணி, திங்க சோறு வேணுமே. அதுக்கு அவங்க எங்க போவாங்க? எங்கயும் போக முடியாது. சாலையோரம் உள்ள ஊர்க்காரங்க தான் கதி.  இதையறிந்த ஊர்க்காரங்க சாலையில் எங்கும் போகமுடியாம மாட்டிக்கிட்டு இருக்கற வண்டியோட்டிகளுக்கு தண்ணி, சோறு எல்லாம் கொடுத்து உதவராங்க. என்ன எல்லாத்தையும் உண்மையான விலையை விட 5 முதல் 10 மடங்கு விலை வைத்து கொடுக்கறாங்க அதாவது விக்கறாங்க.  நல்ல வசூல் வேட்டை தான். இதுபோன்ற ஒரு வாய்ப்பு இன்னொருமுறை அவங்களுக்கு கிடைக்குமோ என்னவோ அதனால இப்பவே லாபம் பார்க்கறாங்க.




குறிப்பு:
10 நாளுக்கு  முந்தியே எழுதிவிட்டு மெதுவாக இப்ப பதிவிடுவதற்காக மன்னிக்கவும். செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த நெரிசல் சரி செய்யப்பட்டுவிடும் என்கிறார்கள். சரியானா நல்லது தான்.


அண்ணா சாலையில் அல்லது எந்த சாலையிலும் சில மணி நேரம் நெரிசல் இருந்தாலே எரிச்சல் படுபவர்களுக்கு இந்த இடுகை மன நிம்மதியை கொடுக்கும் என்று நம்புகிறேன். இது அவர்களுக்காகன இடுகை.

படங்கள் உதவி பல தளங்கள் :)

வெள்ளி, செப்டம்பர் 03, 2010

உமாசங்கர் மீதான தடையை தமிழக அரசு நீக்கியது

http://thatstamil.oneindia.in/news/2010/09/03/tamilnadu-umashankar-ias-suspension-tansi-md.html

நேர்மையான உமாசங்கர் இ.ஆ.ப மீது தமிழக அரசு வீண் பழி சுமத்தி அவரை பதவி நீக்கம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்த அரசுக்கு இவர் வலைந்து கொடுக்கவில்லை என்பதே காரணம். முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் மீது இவர் பல குற்றசாட்டுகளை சுமத்தியிருந்தார். 

இவரின் நீக்கத்தை அடுத்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதை விசாரித்த உயர்நீதிமன்றம், உமாசங்கர் மீதான விசாரணையை தொடங்கலாம். ஆனால் இறுதி விசாரணை முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

தற்போது தமிழக அரசு அவர் மீதானா நீக்கல் உத்தரவை திரும்ப பெற்று அவரை தமிழ்நாடு சிறு தொழில்கள் கழக (டான்சி) நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது.

அவர் மீதான மீதான விசாரணையை தொடங்கியதால் அரசு நீக்கல் ஆணையை திரும்ப பெற்றுக்கொண்டது.

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

குத்திக் காட்டியது - என் தமிழ்!!!

மின்னஞ்சலில் வந்தது இங்கே இடுகையாக
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry '
தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks '
ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy
Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle'
என்று …!
 
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai'
என்று …!
 
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I
Love You' என்று …!
 
இரவில்
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள்
'அம்மா' என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்
                                           -- நம்மை போல் ஒரு தமிழன்

நான் தமிழறிவு நிறைந்தவன்

என்னடா சுய தம்பட்டமா இருக்கேன்னு பார்க்கறீங்களா. இல்லைங்க அது என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் சொன்னது. அவர் அப்படி சொன்னதை நம்ம வலையில் கூட ஏத்தலைன்னா எப்படி? இஃகி இஃகி.


எங்க அலுவலகத்தில் தமிழ் பேசறவங்களும் உண்டு (7 பேர் இருக்கோம்). எல்லா இடத்துலயும் தெலுங்குகாரங்க கண்டிப்பா இருப்பாங்க, பல இடங்களில் அவங்க மட்டும் இருப்பாங்க.

நாங்க தமிழில் தான் பேசிக்குவோம். அதாவது தமிழ்நாட்டுல பேசற மாதிரி தமிலிங்கிலிஸ். அரசியல் அது இதுன்னு பேசினாலும் அரசியல் தான் 70 விழுக்காடு இருக்கும். மீதி மத்த சங்கதிகளை பற்றி இருக்கும். இது எல்லா இடத்துலயும் நடக்கறதுதான அப்படிங்கிறிங்களா.


எங்களில் தமிழ் சொற்களை அதிகமா பயன்படுத்தறவன் நான். அதாவது செகண்ட் என்ற நற்தமிழ் சொல்லுக்கு பதிலா வினாடி என்ற சொல்லை நான் பயன்படுத்தி பேசுவேன். எப்பவும் அப்படி கிடையாது பல முறை நற்றமிழ் தான். ஆனா மத்தவங்க எப்பவும் நற்றமிழ் தான்.  இது ஒரு காட்டுதான் இது மாதிரி பல நற்றமிழ் சொற்களை நாங்கள் எங்கள் பேச்சில் புழங்குவோம். இது என்ன பெரிய மேட்டர் , இது நார்மல் தான அப்படிங்கிறிங்களா அதுவும் சரிதான்.


ஒரு முறை அந்த விளம்பரம் பார்த்தீங்களா அப்படின்னு கேட்டேன். எங்களில் மூத்தவர் நாம அட்வர்டைஸ்மெண்ட் என்று தான் சொல்லுவோம் இவன் பாருயா விளம்பரம் அப்படிங்கறான் என்று சொல்லிவிட்டு எங்க அலுவலகத்திலேயே நான் தான் தமிழறிவு நிறைந்தவன் என்று சொல்லிட்டார்.
எனக்கு ஒரே கூச்சமா போயிடுச்சி, அந்த கூச்சம் போக ஒரு இடுகை எழுதிட்டேன், எல்லாம் விளம்பரம் தான் இஃகி இஃகி. .



எங்க அலுவலகத்திலேயே நான் தான் தமிழறிவு நிறைந்தவன் என்று தான் தலைப்பு இருக்கனும் ஆனா தலைப்பு பெரிசா இருக்குமேன்னு தான் சின்னதா நான் தமிழறிவு நிறைந்தவன் என்று வைத்துவிட்டேன்.

புதன், ஆகஸ்ட் 18, 2010

உமாசங்கருக்கு நீதி கிடைக்குமா?

சுடுகாட்டு ஊழலை(யும்) சொல்லி ஆட்சிக்கு வந்தாச்சு. சுடுகாட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர் இப்ப திமுகவில்.  அரசியலில் இது மாதிரி நடக்கலைன்னா தான் வியப்புன்னு சொல்லறிங்களா.
சுடுகாட்டு ஊழலை வெளியில் கொண்டுவந்தவர் உமாசங்கர்.

அவர் திறமையானவர் நேர்மையானவர் என்று திமுக பெரிய தலைக்கு தெரிந்ததால் தான் திருவாரூர் மாவட்டம் உருவானப்ப அவரை அங்க மாவட்ட ஆட்சித்தலைவரா போட்டாங்க. தன் மகனுக்கும் ஒன்றுவிட்ட பேரனுக்கும் சண்டை மூண்டப்ப பேரனின் சுமங்கலி கேபிள் விசனுக்கு எதிராக உருவான அரசு கேபிளுக்கு திறமையானவர் வேண்டும் என்பதால் உமாசங்கர் அதன் தலைவராக்கப்பட்டார்.

முதல்வரின் மனைவிக்கு, மகனுக்கு வேண்டியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளார். (அவங்க மீது எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை)

பல இஆப அதிகாரிகளுக்கு (ஊழலில் ஈடுபட்டவங்க தான், இவருக்கு என்ன அவங்களோட வரப்பு தகராறா) எதிராகவும் நடவடிக்கை எடுக்க சொல்லி அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

இது போல் பல வகைகளில் ஊழலுக்கு எதிராக இருந்த காரணத்தினால் இப்போ பழி வாங்கப்படுகிறார். இது அரசு மீது பொது சனம் வைத்திருக்கும் நம்பிக்கையை (இருக்கும் கொஞ்சத்தையும்) சிதைப்பதாக உள்ளது.

அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் தவறான நடவடிக்கையை நீக்கிக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நீதிமன்றம் மூலமாகவோ தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேசிய அமைப்பு மூலமாகவாவது அவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என வேண்டுகிறேன்.

உங்கள் கண்டனத்தை இங்கும் பதிவு செய்யுங்கள்.

இது தொடர்பான இடுகைகள்

http://dharumi.blogspot.com/2010/08/424-complaint-filed-by-cumashankar-ias.html
http://dharumi.blogspot.com/2010/08/426-just-idea.html
http://dharumi.blogspot.com/2010/08/427.html

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

EAD கிடைப்பதில் தாமதம்.

அமெரிக்காவில் EAD எனப்படும் வேலை செய்ய அனுமதி அட்டை இருந்தால் விசா இல்லாமல் வேலை செய்யமுடியும் அதாவது பச்சை அட்டை மாதிரி ஆனால் பச்சை அட்டை கிடையாது. 
பச்சை அட்டைக்கு முன் இது கொடுப்பார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமாகும் போது இதை பயன்படுத்தி வேலைக்கு செல்லலாம். இது பற்றி விளக்கினால் நிறைய சொல்லவேண்டி இருக்கும் அதனால் இந்த சுருக்கம் போதும்.

நம்ம மக்கள் நிறைய பேர் இப்ப EAD-ல் வேலை செய்கிறார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமானால் EADஐ புதுபித்துக்கொள்ள வேண்டும். முன்பு ஆண்டுக்கு ஒரு முறை என்று இருந்ததை இரு ஆண்டுகளுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றம் கொண்டுவந்துள்ளார்கள். ஆனால் இரு ஆண்டுகளுக்கு புதுபிப்பார்கள் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஒரு ஆண்டு உறுதி.

EAD காலாவதி ஆவதற்குள் அடுத்த EAD வாங்கிவிட வேண்டும். வழக்கமா EADஐ புதுபிக்க விண்ணபித்தால் விரைவில் கிடைத்துவிடும். இவ்வளவு காலமா இப்படி தான் இருந்தது.

இப்ப புதுபிக்கும் EAD கிடைக்க தாமதமாகிறது. EAD இல்லாட்டி வேலை செய்யமுடியாது. 60 நாட்களுக்கு முன் விண்ணபித்தவர்கள் பலருக்கு இன்னும் புது EAD வராததால் அவர்கள் வேலை செய்யமுடியாத நிலை.சிலருக்கு 75 நாட்கள் ஆனதாக கேள்வி.

எனவே மக்களே நீங்களோ உங்கள் நண்பரோ EADஐ புதுபிப்பதாக இருந்தால் 120 நாட்களுக்கு முன் விண்ணபித்து விடுங்கள்.

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

நீதி கதை- நாயும் கழுதையும்

ஒரு ஊர்ல இருந்த சலைவைத்தொழிலாளி ஒரு நாயையும் கழுதையையும் வளர்த்து வந்தான். நாயிக்கு சலவைத் தொழிலாளி மேல் கோபம். என்னடான்னு கேக்கறீங்களா? அது சில முறை முதலாளி மேல் தொழிலாளி படுவானே அந்த மாதிரியான கோபம்.

எந்த மாதிரி?

கதை சொல்றப்ப குறுக்க பெரியமனுசனாட்டம் பேசக்கூடாது. சொன்னா இம் போட்டு கேட்டுக்கனும்.

ஒரு நாள் சலைவைத்தொழிலாளி நல்லா தூங்கி கிட்டு இருக்கறப்ப ஊர் சனத்து துணியை துவச்சு அவன் சேர்த்து வைச்சிருக்கற காசையெல்லாம் ஆட்டைய போடலாம்ன்னு ஒரு திருடன் வந்தான்.

அவனென்ன உங்களை மாதிரியா தினம் சம்பாதிக்கிற காச வங்கியில் போட.

திருடன கண்டா அதாவது நடு நசில தெரியாதவன் வீட்டுக்கு வந்தா நாய் என்ன பண்ணனுமோ அத பண்ணல.  ஏன்னா அதுக்கு தான் முதலாளி மேல் கோபமாச்சே. அதுக்காக கடமை தவறுவதா என்று கடுப்பான கழுதை நாமாவது முதலாளியை எழுப்புவோம்னு நினைச்சி கத்துச்சு. கழுதை கத்தற சத்தம் கேட்டு முதலாளி முழுச்சிட்டாரு. பார்த்தா நாய் சும்மா இருக்கு கழுதை கத்திக்கிட்டு இருக்கு, அவருக்கு சரியான கோவம். பின்ன நடு நசில நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கழுதை சத்துத்தால தூக்கம் கெட்டா கோவம் வருமா வராதா.  பக்கத்தில் கிடந்த கட்டைய எடுத்து கழுதை மண்டைல ஒரு போடு போட்டு கத்துன பாருன்னுட்டு தூங்கப்போயிட்டார். பாவம் கழுதை நல்லது பண்ண போயி மண்டைல அடி வாங்கினது தான் மிச்சம்.


நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்ம வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சாப்போதும்.

மேலுள்ள கதை முடிவு இப்படியும் இருக்கலாம்.

கழுதை சத்தம் கேட்டு முழிச்ச முதலாளி திருடன் ஓடுவதை பார்த்தார். நல்ல வேலை கழுதை கத்தினதால திருடன் ஓடிட்டான் நம்ம பணம் தப்பிச்சுதுன்னு கழுதை மேல் பாசம் அதிகமாயிடுச்சி. கழுதைக்கு நல்ல தீனியா போட்டார். கொஞ்சம் கொஞ்சமா நாயோட வேலையெல்லாத்தையும் கழுதை மேல கட்டிட்டார். பாவம் கழுதை. நாய் நல்லா தின்னுட்டு ஒரு வேலையும் செய்யாம இருந்தது.



நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்மல பாராட்டுரேன்னுட்டு அடுத்தவன் வேலையையும் நம்ம தலையிலேயே கட்டிடுவாங்க.

புதன், ஆகஸ்ட் 04, 2010

தமிழ்மணம் நட்சத்திரத்தை படிக்க முடிகிறதா?

உங்களால் தமிழ்மணம் நட்சத்திரத்தை (புதியமாதவி) படிக்க முடிகிறதா? என்னால் முடியவில்லை. வெத்து பக்கமா வருது. :-( , அவங்க பதிவை நச்சு நிரல் ஏதாவது பாதிச்சிருச்சோ??

.

புதன், ஜூலை 14, 2010

வானூர்தி, வானூர்தி நிலையம் பற்றி சில தகவல்கள்

உலகில் எது வேகமாக செல்லும் வானூர்தி? எது பெரியது?  எது மிக மும்முரமாக இயங்கும் வானூர்தி நிலையம்? எது எங்கும் நிற்காமல் நெடுந்தொலைவு செல்லும் வானூர்தி? விடை தெரியுமா உங்களுக்கு?



(1). நெடுங்காலம் இயக்கத்தில் இருக்கும் வானூர்தி நிறுவனம்.


ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் 1920லிருந்து பயணிகளை சுமந்து செல்கிறது. டச்சு கேஎல்எம் (Koninklijke Luchtvaart Maatschappij voor Nederland en Koloniën - KLM) 1919 ம் ஆண்டிலிருந்து இயங்குகிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் சிறிது காலத்துக்கு இது இயங்கவில்லை. எனவே முதல் இடம் குவாண்டாசுக்கு இரண்டாவது இடம் கேஎல்எம் -க்கு.


(2). உயரமான வான் கட்டுப்பாட்டு கோபுரம்.


பாங்காக் சுவர்ணபூமி வானூர்தி நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமே மிக உயரமானது. இது 434 அடி உயரமுடையது. இந்த நவீன கட்டுப்பாட்டு அறை மூலம் மணிக்கு 70 வானூர்திகளை கையாளலாம்.


(3). வடகோடியில் இருக்கும் பயணிகள் வானூர்தி நிலையம்.


நார்வே நாட்டினுடைய ஆர்ட்டிக் பகுதியில் இருக்கும் சுவால்பர்ட் நிலையமே வட கோடியில் இருப்பது. இது 78 பாகை வடக்கில் இருக்கிறது.


(4). தென்கோடியில் இருக்கும் பயணிகள் வானூர்தி நிலையம்.


அர்ஜண்டைனா நாட்டின் உஸ்ஆயிஅ நகரில் உள்ள உஸ்ஆயிஅ-மால்வினாஸ்  (Ushuaia-Malvinas) வானூர்தி நிலையமே அது. இதுவே தென்கோடியில் உள்ள நகரமும் ஆகும். அண்டார்டிக்கா செல்லுவோர் இந்நிலையத்தை அடிக்கடி பயன்படுத்துவர்.


(5). எங்கும் நிற்காமல் அதிக நேரம் பயணிக்கும் வானூர்தி?


நிவார்க்கில் (நியுயார்க் அருகிலுள்ளது) இருந்து சிங்கப்பூருக்கு இடையேயான 9,535 மைல் தொலைவை 19 மணி நேரம் எங்கும் நிற்காமல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் பயணிக்கலாம். இதுவே அதிக நேரம் எங்கும் நிற்காமல் செல்லும் பயணம்.


(6). தொலை தூரத்தில் அமைந்திருக்கும் நிலையம்?


ஈஸ்டர் தீவே தொலை தூரத்தில் அமைந்திருக்கும் நிலப்பகுதியாகும். இத்தீவிலுள்ள மாடவேரி (Mataveri) பன்னார்ட்டு வானூர்தி நிலையமே தொலை தூரத்தில் அமைந்திருப்பது. 2336 மைல் தொலைவில் இருக்கும் சிலியின் சான்டியோகோவிற்கு செல்லும் பயணமே குறைந்த தொலைவு பயணமாகும்.


(7). அதிக தாமதத்தை ஏற்படுத்தும் நிலையம்?


பெய்ஜிங் தலைநகர பன்னாட்டு நிலையத்தில் இருந்து புறப்பாடு 38% மட்டுமே சரியான நேரத்துக்கு இருக்கும். 62% வானூர்திகள் சரியான நேரத்துக்கு புறப்பட முடிவதில்லை. புறப்படுறதுல சீனாக்காரன் பெயர் வாங்கிட்டான் என்ற போட்டியில் இந்தியா இறங்குவதில்(வருகை) பெயர் எடுத்துள்ளது.


புதுடெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு நிலையத்தில் இறங்குவது 45% சரியான நேரத்துக்கு இருக்கும். 55% வானூர்திகள் இறங்குவது தாமதம் தான். நம்ம போட்டிக்கு அளவே இல்லாம போச்சு.


(8). அகலமான இருக்கைகள் கொண்ட வானூர்தி.


கேத்தே பசிபிக் 747-700 & 777-300 ER, கல்ப் ஏர், துருக்கி ஏர்லைன்ஸ் 777-300 ER ஆகியவற்றின் முதல் வகுப்பு இருக்கை 36 அங்குலம் அகலமானது. டெல்டா ஏர்லைன்ஸ் சாப் 340 வானூர்தியின் இருக்கை அகலம் 16 அங்குலம். அதுல உட்கார்றதுக்கு நின்னுக்கிட்டே போகலாம்.


(9). நீண்ட பயணிகள் முனையம்.


ஜப்பானின் ஒசாகா நகரிலுள்ள கன்சாய் பன்னாட்டு நிலையத்தில் ஒரே ஒரு முனையமே உள்ளது. ஆனால் இது ஒரு மைல் தொலைவு உள்ளது.


(10). மும்முரமான வானூர்தி நிலையம்.


அட்லாண்டா நகரின் ஹார்ட்பீல்ட் ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு நிலையத்தில் 2009ல் 88 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளார்கள். புதிதாக கட்டப்படும் துபாய் வானூர்தி நிலையம் மும்முரமான வானூர்தி நிலையம் என்ற பெயரை சில ஆண்டுகள் கழித்து எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


(11). வேகமான வானூர்தி.


மணிக்கு 600 மைல் வேகத்தில் பறக்கும் செஸ்னா சிட்டேசன் X பயணிகள் வானூர்தியே வேகமானது. போயிங்கின் புதிய தயாரிப்பான டிரிம்லைனர் 0.85 மேக் வேகம் செல்லக்கூடியது. 0.85 மேக் என்பது மணிக்கு 647 மைல் ஆகும்.  போயிங் டிரிம்லைனர் இன்னும்  பயன்பாட்டுக்கு வரவில்லை, எனவே இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.


(12).  பெரிய வானூர்தி.


எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ஏர் பஸ் A380 என்பதே அது என்பது. இதில் 555 பயணிகள் அமரலாம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் பிரான்ஸ், எமிரேட்ஸ், குவாண்டாஸ், லுப்தான்சா ஆகியவற்றில் ஏர் பஸ் A380 உள்ளது.

செவ்வாய், ஜூன் 29, 2010

நண்பர் தன் குழந்தைக்கு தமிழ் பெயர் வைத்த கதை

நண்பர் கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர். இதுக்கு காரணம் அவரோட நண்பர்களில் பெரும் பகுதி கொல்டிங்க என்பதும் காரணம். கொல்டிங்க கூட அரசியல் பேசறப்ப தமிழ்நாட்டை விட்டு கொடுக்க முடியுமா? எப்ப வாய்ப்பு கிடைத்தாலும் ஆந்திராவையும் ஐதராபாத்தையும் வாருவதும் சென்னையை தூக்கிபிடிப்பதும் அவர் வேலை. அதே போல அவர்களும் தமிழ்நாட்டை பற்றி பேசி இவரை வம்பு பண்ணுவதும் வழக்கம்.

தன்னுடைய பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பதாக முடிவு செய்திருப்பதாகவும் தனக்கு நிறைய தமிழ் பெயர்கள் தெரியாததால் நல்ல பெயர் இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார். சின்ன பேரா இருக்கனும் என்பது நிபந்தனை. நானும் எனக்கு தெரிந்த சில பெயர்களை சொன்னேன். சில என்றால் 5 பெயர்கள் தான். எவ்வளவு தான் யோசிச்சாலும் தமிழ் பெயர்கள் நினைவுக்கு வரலை. இணையத்தில் தேடினாலும் எல்லாம் தமிழர்கள் வைக்கும் பெயர்களாக இருக்கே தவிர தமிழ் பெயர் குறைவு. நாம நிறைய கொடுத்தா தான அவர் அதில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும். நாம கொடுக்கறதே குறைச்சலா இருந்தா எப்படி? என்னடா தமிழ் பெயர் வைக்கறேன்னு ஒருத்தர் சொல்லறார் அவருக்கு உதவமுடியலையேன்னு எனக்கு விசனம். நல்ல தமிழ் பெயர் கிடைக்கலைன்னா தமிழ் பெயர் வைக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு நானும் எனக்கு தெரிந்த மக்களிடம் எல்லாம் தமிழ் பெயர் கேக்கறதே வேலையாப்போச்சு. என் முயற்சிக்கு வெற்றி கிடைக்கலை.

தமிழில்  பெயர் வைக்கனும் என்று ஆசைப்பட்டாலும் பெயர்கள் கிடைக்காமல் பெரும்பான்மை மக்கள் போல் தமிழல்லாத பெயர் வைப்பவர்கள் எத்தனை பேரோ?

இந்தக்குறையை போக்குவதற்காக தமிழ் பெயர்களுக்கான இணையதளத்தை இரவிசங்கர் உருவாக்குவதாக சொன்னார்.  இன்னும் அந்த தளம் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்.

நண்பரின் பக்கத்து வீட்டுக்காரரும் தமிழ் பற்றாளர். அவரும் இவருக்காக பெயர் வேட்டையை நடத்தினார். அவர் தன் தங்கமணியிடம் சில பெயரை சொல்லுவார் அவர் அதை கேலி பேசுவார்...

பக்கத்துவீட்டுகாரரின் தங்கமணி அவர் போல் தமிழ் பற்றாளர் எல்லாம் கிடையாது. அதே போல் தமிழ் எதிரியும் கிடையாது.  இவர் தமிழ் தமிழ் என்பதை கேலி பண்ணுவதே அவர் வேலை. இவர் சில பெயர்களை சொல்ல அதை அவர் கேலி பண்ணுவதுமாக நாட்கள் போய்கிட்டிருந்தது. இதனால் அவங்க இரண்டு பேருக்கும் இடையில் சண்டையே வந்தது. பக்கத்துவீட்டுகாரர் குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதற்கு இவங்களுக்குள்ள அடிக்கடி சண்டை. குழந்தை பிறக்கும் முன் இவர்கள் இந்தியா செல்லவேண்டிவந்தது.

குழந்தையும் பிறந்து பெயரும் வைத்தாயிற்று. ஊர்ல வந்ததும் இவங்க கேட்ட முதல் கேள்வி குழந்தைக்கு என்ன பெயர் என்பது தான்.

சொன்னதும் அவங்க முகம் போன போக்க பார்க்கனுமே. அவருக்கு மட்டுமாபெயரை கேட்ட எனக்கும் என்னடா இதுன்னு தான் இருந்துச்சி. அந்த பெயரை வச்சி அவரை கேலி பண்ணினாலும் மனதுக்கு சங்கடமா இருந்ததென்னவோ உண்மை. என்னய்யா அந்த பெயர் அப்படின்னு கேட்கறீங்களா.



                                                                  ஸ்மித்தா

வெள்ளி, ஜூன் 11, 2010

நர்சிம் சந்தனமுல்லை சண்டையில் தெரிந்து கொண்டது.

 
  • பதிவர் நர்சிமுக்கும் சந்தன முல்லைக்கும் முன்பே ஆகாது.
  • ஆதிமூலகிருஷ்ணன் நர்சிம்மை பேட்டி கண்டு எழுதிய இடுகையை நையாண்டிசெய்து இந்த இடுகை எழுதப்பட்டதாகவும் இவ்வாறு எழுத நர்சிம்மின் அனுமதியை வாங்கியுள்ளதாகவும் கூறி இது ஒரு கும்மி இடுகை எல்லோரும் வாங்க என்று பதிவர் மயில் விஜி கூவி அழைக்கிறார்.
  • அவரது மேலான அறிவிப்பை தொடர்ந்து பலர் அங்கு கும்மியடித்தார்கள். அதில் சந்தன முல்லையும் ஒருவர். பின்னூட்டத்தில் நர்சிமை பெயர் குறிப்பிடாமல் நல்லா கும்மியிருக்காங்க. கடுமையாக கும்மியவர் சந்தன முல்லை.
  • குறிப்பிட்ட கும்மி இடுகை மற்றொரு தளத்திலிருந்து எடுத்து ஒட்டப்பட்டிருப்பதாக சில பதிவர்கள் குற்றம் சாட்டியபோது குறிப்பிட்ட இடுகை தன்னாலேயே எழுதப்பட்டதாகவும் தான் வேறு எந்த தளத்திலயும் எழுதவில்லை என்று பதிவர் மயில் விஜி கூறுகிறார். 
  • இந்த இடுகை வேறொரு தளத்தில் இருந்ததாகவும், பதிவர் மயில் விஜி தளத்தில் வெளியியான பின்பு அங்கு இல்லை என பதிவர்களால் கூறப்படுகிறது. 
  • சந்தன முல்லை தான் இந்த இடுகையை எழுதி விஜிக்கு கொடுத்து வெளியிட சொல்லியிருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர். 
  • கும்மி இடுகையால் கோபமடைந்த நர்சிம் பூக்காரி என்ற ஆபாச புனைவு எழுதுகிறார். இதில் இவர் யார் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை ஆனால் எல்லோருக்கும் தெரியும் இது யார் குறித்தென. 
  • பதிவர் மயில் விஜியிடமும், நர்சிமிடமும் இடுகையை நீக்க பதிவர்கள் கேட்ட போது அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். இதனால் ஏற்படும் விளைகளை தாங்கள் பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டார்கள்.
  • வினவு தளத்தில் பூக்காரி எழுதிய நர்சிம் பொறுக்கி என இடுகை வந்து வலையுலகம் 2 வாரமாக இதே பேச்சாக இருந்தது. வாசகர் பரிந்துரையில் வந்த இடுகையெல்லாம் இது தொடர்பாக இருக்கவே தமிழ்மணம் வாசகர் பரிந்துரை என்ற பகுதியை தூக்கிவிட்டார்கள். 
  • வினவு தளத்தில் நீங்கள் தானா எழுதியது என்ற போது மறுத்த பைத்தியக்காரன்(சிவராமன்), ஆதாரம் வெளிவந்ததும் ஆமாம் என்கிறார். 
  • நர்சிமும் பைத்தியக்காரனும் நெடுநாளைய நண்பர்கள்
  • இப்போது நர்சிமும், மயில் விஜியும் குறிப்பிட்ட சண்டைக்குரிய இடுகையை நீக்கிவிட்டார்கள். (இத முன்னாடியே செஞ்சிருந்தா என்னவாம்?)

 பார்ப்பனர்கள் --- 
  1. நர்சிம்
  2. பைத்தியக்காரன் 
  3.  ஜியோவ் ராம் சுந்தர்
  4. பால பாரதி
  5. பத்ரி

 நர்சிமின் அப்பா பிராமணர்கள் சங்கமான தாம்பிரஸில் உயர் பொறுப்பில் இருப்பவர். 

சந்தன முல்லை - வன்னியர், வன்னியர் ஆர்குட் தளத்தில் சந்தன முல்லை ஓர் உறுப்பினர்.  
  • சுகுணா திவாகர் ஆனந்த விகடனில் வேலை செய்பவர்.
  • கார்க்கி ஐதராபாத்தில் வேலை செய்துவிட்டு இப்போ தனியாக ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
  • நர்சிம் பைத்தியக்காரனுக்கும் சுகுணா திவாகருக்கும் தண்ணி வாங்கி ஊத்தி இருக்கார்.
  • பைத்தியக்காரன் நர்சிமிடம் கடன் வாங்கியிருக்கார்.
  • பைத்தியக்காரன் குங்குமத்திலோ, தினகரனிலோ வேலையில் இல்லை. நாகவல்லி என்ற தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதியிருக்கார்.
  • பைத்தியக்காரன் பூணூல் அனிந்திருப்பவர் ஆனால் பார்ப்பானை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்பவர்..
  • நர்சிம் பணக்காரர்.
  • பைத்தியக்காரன் பார்வையில் லதானந், அபிஅப்பா, மங்களூர் சிவா ஆகியோர் வழியல் ஆசாமிகள்.
  • நான் வழியல் ஆசாமி என்பதற்கு ஆதாரம் கொடு என்று மங்களூர் சிவா கேட்டதற்கு பைத்தியக்காரன் சில பொண்ணுங்க அத்தகவலை இவரிடம் சொன்னதாகவும் அந்த பொண்ணுங்க சொன்னாதான் ஆதாரம் வெளியிடுவேன் என்று மறுத்துவிட்டார். 
  • குசும்பன் மேல் உள் கோபம் கொண்டிருந்த காரணத்தால் இச்சண்டையை பயன்படுத்தி பைத்தியக்காரன் அவருக்கு கோமாளி என்ற பட்டம் கொடுக்கிறார்.

 இன்னும் எழுதலாம் தான் தான்  தான்  தான் ......

 

வியாழன், ஜூன் 03, 2010

எண்ணெய் கசிவும் அமெரிக்காவும்

மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டிசு பெட்ரோலியத்துக்கு உரிய ஆழ்கடல் எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் தளம் வெடித்து 45 நாட்கள் ஆகிறது.  எண்ணெய் கிணறை அடைக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இது வரை 50 மில்லியனுக்கு மேலான காலன் கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்துள்ளது. உண்மையா எவ்வளவு எண்ணெய் வெளியேறி உள்ளது என்று யாருக்கும் தெரியாது. 

இந்த எண்ணெய் வெளியேற்றத்தால் மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களின் மீன் பிடிப்பு மற்றும் கடற்கரையை சார்ந்த சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் இப்ப தான் புளோரிடா பக்கம் வர தொடங்கியிருக்கு.

மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவான குடியரசு கட்சி செல்வாக்கு உடையது.

இது அப்பகுதியின் புயல் காலம். கண்டிப்பா புயல் உண்டு. அது எண்ணெய் பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும். இவங்க எண்ணெய் வெளியேற்றத்தை இப்ப நிறுத்தப்போறதில்லை (முடிஞ்சா தான).

மக்களுக்கு என்ன மாதிரியான நிவாரணம் கிடைக்குதுன்னு பார்க்கலாம்.

குறிப்பு -- என் வலைப்பதிவு இன்னும் முழுமையாக சரியாகவில்லை.

புதன், ஜூன் 02, 2010

YOU TUBE VIDEO - TEST

செவ்வாய், மே 25, 2010

என் வலைப்பதிவு நச்சுநிரலால் பாதிக்கப்பட்டுள்ளது.

என் வலைப்பதிவு நச்சுநிரலால் பாதிக்கப்பட்டுள்ளது.   இதை சரி செய்ய முயன்று வருகிறேன்.  எப்படியும் அடுத்த மாதத்துக்குள் சிக்கலுக்கான காரணத்தை கண்டுபிடிச்சுடுவேன்னு நினைக்கிறேன்.

சரிசெய்துவிட்டேன் என்று நினைத்த  tamilers.com சிக்கல் மீண்டும் வந்துவிட்டது.

திங்கள், மே 24, 2010

Tamilersஆல் ஏற்பட்ட தொல்லை நீங்கியது

இரண்டு மூன்று நாளா என்னோட வலைப்பதிவுக்கு வந்தா 10 வினாடி கழித்து tamilers.com தளத்துக்கு போயிடும், இதுவும் உருப்படியான தளம் இல்லை, இது விற்பனைக்கு உள்ளது வேண்டுமா? என்ற தகவலும் சில விளம்பர தகவல்களும் தான் அதில் உள்ளவை. நான் புகழ்பெற்ற பதிவர் கிடையாது, என் இடுகைகளை படிப்பவர்களும் குறைவு (ஒழுங்கா எழுதுனா தான நிறைய பேர் படிப்பாங்கன்னு நீங்க சொல்வது என் காதில் கேட்கிறது).  ஏன் என் வலைப்பதிவுக்கு இந்த நிலைமை? ஒன்னும் புரியலை.

என்னோட பதிவில் ஏகப்பட்ட Gadget களும் இல்லை இருப்பதும் சிலவே, அவையும் நம்பகமானவை... என் வார்ப்புருவும் கூகுள் கொடுத்தது தான், மற்றவர்களிடம் இருந்து தரவிறக்கம் பண்ணியது இல்லை. அப்படி இருக்கும் போது ஏன்? என்ன காரணத்தால் இப்படி ஆகுதுன்னு மண்டைய பிச்சுக்கிட்டேன்.

blogspotக்கு  மயில் அனுப்பலாம்ன்னா மயில் முகவரி தெரியலை... நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சேன்னு கவலையாயிடுச்சு.

நம்ம சிக்கலை சொல்லி தேடுனா சில பேரு தரவிருக்கம் செய்யப்பட்ட வார்ப்புருவில் மாற்றம் செய்தா அல்லது மூன்றாவது ஆளோட Gadget ஐ நீக்கிட்டா சிக்கல் தீர்ந்திடும்ன்னு சொல்லியிருந்தாங்க. சில பேர் அந்த மாதிரி செய்து சிக்கல் தீர்ந்துன்னு சொல்லியிருந்தாங்க. 

நானும் உருப்படியா இருந்த சில Gadget களை நீக்கிபார்த்தேன். புண்ணியம் இல்லை. வார்ப்புரு கூகுள் கொடுத்த எளிமையான ஒன்று, அதனால அதில் சிக்கல் இருக்க வாய்ப்பில்லை...

வேற வழியில்லை\தோன்றவில்லை என்பதால் வார்ப்புருவ சோதனை பண்ணிபார்ப்போம்ன்னு முடிவு எடுத்தேன். வார்ப்புருவ நோட்பேட்ல வெட்டி ஒட்டி Tamilers இருக்கான்னு பார்த்தா,அட, அந்த கருமம் அங்க இருந்துச்சு. அது tamilish கொடுத்த ஜாவா சிகிரிப்டுக்கு மேல இருந்துச்சு. உடனே Tamilers இருந்த ஜாவா சிகிரிப்டை வார்ப்புருவில் இருந்து நீக்கிட்டு சேமித்ததும் நம்ம வலைப்பதிவு ஒழுங்கா வேலை செய்யுதுங்க.

எப்படி  Tamilers ஜாவா சிகிரிப்டு என் வார்ப்புருவில் வந்ததுன்னு தான் தெரியலை.
.

வெள்ளி, மே 14, 2010

பியான்சேவின் பாட்டுக்கு குழந்தைகளின் அபார நடனம்.

குழந்தைகளின் அபார நடனம்.



பியான்சேவின் மூல நடனம் இங்கே.



குழந்தைங்க உடை மற்றும் நடனம் இங்கே விவாதத்துக்குரியதாக மாறியிருக்கு. நாம அந்த மாதிரி எல்லாம் விவாதம் பண்ண வேண்டாம். இரண்டையும் பாருங்க. 

.
.

திங்கள், மே 03, 2010

ஆதவனின் கொதிப்பு - அசையும் அசையா படங்கள்

கதிரவனை ஆராய 850 மில்லியன் செலவில் நாசா சூரிய இயக்க வானாய்வகம் (Solar Dynamics Observatory) என்ற வான்ஆய்வகத்தை பிப்ரவரி 11 அன்று வானில் செலுத்தியது. அதிலிருந்து பெறப்பட்ட கதிரவனின் படங்களை இப்போது நாசா வெளியிட்டுள்ளது. இவை இது வரை காணக்கிடைக்காத படங்கள். இன்னும் இது முறையாக செயல்பட தொடங்கவில்லை சோதனை ஓட்டம் நிலைநிறுத்தும் பணி நடந்துக்கிட்டு இருக்கு, இன்னும் ஒரு மாதத்தில் பணி முழுமையடைந்து முழு செயல்பாட்டுக்கு இவ்வாய்வகம் வந்துடும். இப்பவே இந்த மாதிரியான அற்புதமான காணகிடைக்காத படங்கள் கிடைக்க ஆரம்பிச்சாச்சு. முழுமையாக செயல்பட தொடங்கினதும் சூரியனைப்பற்றிய பல தகவல்கள் புரிதல்கள் நமக்கு கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.

கதிரவனின் இப்படங்கள் நாசாவினால் தற்போது வெளியிடப்பட்டன.


ஆதவனின் அளவுடன் ஒப்பீடு. ஆதவனிலிருந்து வரும் தீ கனலின் அளவுக்கு கூட பூமி இல்லையேப்பா... நம்ம பூமி இவ்ளோ சிறுசா?


புற ஊதா கதிர்கள் வெளியிடும் கதிரவனின் தோற்றம். வண்ணங்கள் நமக்காக தீட்டப்பட்டவை. சிவப்பு ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பமுடையது (தோராயமாக 60,000 கெல்வின் அல்லது 107,540 டிகிரி பாரன்கீட்), நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் சிவப்பை வண்ண இடத்தை விட சூடானவை. (மில்லியன் கெல்வின் அல்லது 1,799,540 டிகிரி பாரன்கீட்டைவிட அதிகம்)





கொதிக்கும் கதிரவன் கனல் வெளிவரும் படம்.  


மிகச்சிறந்த முறையில் படம் பிடிக்கப்பட்ட கதிரவன் கனல். அனல் கக்கும் ஆதவன் -

நீல நிறத்தில் ஆதவன் - கதிரவனின் பல கனல்களும் அதனுடன் தொடர்புடைய அலைகளும்.

நிழற்படம் மட்டும் இல்லாமல் அசையும் படங்களையும் நாசாக்காரங்க வெளியிட்டிருக்காங்க. அதையும் பாருங்க.




.
.

ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

நன்றி நன்றி - எரிமலை வெடித்தது.

தமிழ்மண நட்சத்திரமாக இருந்த இந்த ஒரு வார காலத்தில் என் பதிவை படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. படித்து பின்னூட்டம் போட்டவர்களுக்கு இரட்டை நன்றி.

நான் நட்சத்திரமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும் அதுவரை உறங்கிக்கிடந்த எரிமலை வெடித்து தன் கோபத்தை காட்டியுள்ளது. அதன் கோபத்தால் ஐரோப்பில் உள்ள வான் வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிந்திருக்கலாம்.

ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை வெடித்து கற்குழம்புகளை வெளித்தள்ளிக்கொண்டுள்ளது. அதனால் பெரும் புகை  உருவாகியுள்ளது அதில் நிறைய சாம்பல் உள்ளது. இது ஐரோப்பாவை நோக்கி நகர்வதால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான் வழியை மூடிவிட்டன.

இந்த சுட்டியில் 18  நிழற்படங்கள் உள்ளன. எல்லாமே அருமையாக உள்ளன, சுட்டு போட்டால் 18ஐயும் போடனும் அதனால் இணைப்பை கொடுத்துவிட்டேன், பார்க்கவும்.

எரிமலை வெடித்து சிதறும் காட்சி.




எரிமலை வெடிச்சா புகை வரத்தான் செய்யும், அதில் சாம்பல் இருக்கத்தான் செய்யும். செருமனியின் அதிபர் தன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து வான் வழியே தன் நாட்டுக்கு செல்ல முடியவில்லை. இத்தாலிக்கு போய் அங்கிருந்து தரை வழி பயணமாக தான் தன் நாட்டுக்கு சென்றார்.

போலந்து அதிபரின் இறுதி ஊர்வலத்துக்கு இதனால் அமெரிக்க அதிபர், பிரெஞ் அதிபர், செருமன் அதிபர், சுவிடன் மன்னர், எசுப்பானிய மன்னர், வேல்ஸ் இளவரசர், துருக்கி அதிபர், பின்லாந்து அதிபர், கனடா பிரதமர், தென் கொரிய பிரதமர் மற்றும் ஐஸ்லாந்து அதிபர். இதிலிருந்து இந்த எரிமலை சாம்பல் புகையின் பாதிப்பை அறியலாம்.

எல்லா எரிமலை வெடிப்பும் சாம்பல் புகையை வெளியிடும் அவை அனைத்தும் வான் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல. ஏனென்றால் அந்த சாம்பல் 20000-55000 அடி உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். வணிக நோக்கில் பறக்கும் வான் ஊர்திகள் இந்த உயரத்தில் தான் பறக்கும். மேலும் இந்த எரிமலை சாம்பல் மிக நுண்ணியது இரவிலும் மேகமூட்டத்திலும் கண்ணுக்கு புலப்படாது. ரேடார்களும் இவற்றை சரியாக கணிக்காது. இந்த துகள்கள் வானூர்தியின் அனைத்து பகுதிகளையும் எளிதாக அரித்துவிடும் தன்மை கொண்டது. வானூர்தியின் வெளிப்புறமுள்ள பல கருவிகளும் இதனால் பாதிக்கப்படும் இதனால் வானூர்தி பறக்கும் உயரம், காற்றின் வேகம், வெப்பநிலை போன்ற பல அவசியமான கருவிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வானூர்தியின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும்.

1980ல் இந்தோனிசியாவின் ஜாவா தீவிலுள்ள எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சாம்பல் புகையினால் போயிங் 747 வானூர்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அது பிரிட்டிஸ் ஏர்வேசுக்கு சொந்தமானது. அதன் 4 இயந்திரங்களும் செயல் இழந்துவிட்டன, அதன் வானோடிகள் முயன்றதில் வானூர்தி குறைந்த உயரத்தில் இருக்கும் போது இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது மேலும் எரிமலை சாம்பலின் பாதிப்பும் தெரியவந்தது.

இந்த எரிமலை வெடிப்பின் பாதிப்பு அதிகமாக இருக்க காரணம் இது அதிக அளவிலான வான் போக்குவரத்து உள்ள பகுதியில் ஏற்பட்டதே.

பசிபிக் எரிமலை வளையம் எனப்படும் பகுதியில் தான் அதிகளவில் வெடிப்பு ஏற்படும் அது வான் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதி.

நன்றி.

சனி, ஏப்ரல் 17, 2010

மதம் நம்மை ஒன்றுபடுத்துகிறதா?

இந்து

யார் இந்து? இதுக்கு தெளிவான பதில் உண்டா? இல்லை என்பதே பதில். ஏன்னா இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை. இந்து என்ற பதம் ஈரான் நாட்டை சார்ந்த மக்களால் சிந்து ஆற்றுக்கு அப்பால் இருந்த மக்களை குறிக்க பயன்பட்டது.

இப்ப இந்து மதம் என்ற பெயரால் குறிப்பிடப்படுவர்கள் பல்வகையான நம்பிக்கைகளை உடையவர்கள். வைணவத்துக்கும் சைவத்துக்கும் நடந்த சண்டை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டதிலும் இந்து மதம் என்பதைப்பற்றி வரையறை இல்லை. என் நண்பன் ஒருவன் சிவ பக்தன், தவறியும் பெருமாள் கோயிலுக்கு போகமாட்டான். சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மடம் திருமலை கோயிலில் சில மாற்றம் சொல்ல ஜீயர் மடத்துக்காரங்க அதெல்லாம் எங்களுக்கு தெரியும் உன் வேலை எதுவோ அதை ஒழுங்கா பாருன்னு சத்தம் போட்டாங்கில்லையா... எல்லாம் இந்த சண்டையால தான்.

இசுலாம்

இசுலாம் தோன்றிய சிறிது காலத்திலேயே யார் உண்மையான தலைமை என்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் சன்னி, சியா என இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இஃப்படி (Ibadi) அப்படிங்கிற பிரிவு மற்ற இசுலாமிய பிரிவினரை நம்பிக்கையற்றவர்கள் (கபீர்கள்) என்று கருதுகிறது. அகமதியா என்பவர்களை முசுலிம்களாகவே பெரும்பான்மை பிரிவை சார்ந்த முசுலிம்கள் நினைப்பதில்லை. ஒவ்வொரு பிரிவுளிலும் உட்பிரிவு உண்டு.குரானை மட்டுமே நம்பும் பிரிவு உண்டு அவங்க கதீசு கிதீசு அப்படிங்கிற எதையும் ஒத்துக்கமாட்டாங்க. குரான்ல இல்லாததா கதீசுல இருக்கு? அப்படிங்கிறது அவங்க வாதம்.

கிருத்துவம்

உரோமை தலைமையிடமாக கொண்டு ரோமன் கத்தோலிகர்கள் உள்ளார்கள். அவர்களின் செயல்பாடு பிடிக்காதவர்கள் பிரிந்து சென்று அமைத்தது புரட்ஸ்தாந்து. மரபு வழாத (பழமைக்கோட்பாடு சார்ந்த) கிருத்துவர்கள். சிரியன் கிருத்துவர்கள், மாரோனைட் கிருத்துவர்கள், ஆர்மினியன் அபோஷ்டோலிக் கிருத்துவர்கள், காப்டிக் மரபு வழாத கிருத்துவர்கள் ... இவங்க எல்லாம் புரட்ஸ்தாந்து அல்ல. ரோமன் கத்தோலிகர்களுக்கு முன்னாடியே உருவான பிரிவுகள்.

ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களை குறிக்க புரட்ஸ்தாந்து என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலிக்கன், அட்வண்டிஸ்ட், பாப்டிஸ்ட், லுதரேன, பின்னாளைய துறவி கிருத்துவர்கள் (மோர்மன்), மெத்தோடசிம் கிருத்துவர்கள், ஆமிஸ் கிருத்துவர்கள், ஜகோவா கிருத்துவர்கள்....  ....

இன்னும் ஏகப்பட்டது இருக்கு.


பௌத்தம்

ஈனயாணம், மகாயாணம், வச்ரயாணம் என்று  பிரிந்து உள்ளது. இலங்கை, பர்மா, தாய்லாந்தில் கடைபிடிக்கப்படும் தேரவாதம் மகாயாணத்தை சார்ந்தது.
அசோகர் காலத்தை சார்ந்தது ஈனயாணம். 

தேரவாதத்துக்கும் தமிழர்களுக்கும் ஆகாது. பர்மா, ஈழம் மறந்து போச்சா? கடைசி கட்ட ஈழ போரில் தாய்லாந்து இலங்கைக்கு போர் விமானம் எல்லாம் கொடுத்து உதவுச்சாம். 

நாத்திகம்

நாத்திகம் என்பதால் நமக்கு தெரிந்த திராவிட கழகத்தை எடுத்துக்கொள்வோம்.

திராவிட கழக வீரமணியின் செயல்பாடு பிடிக்காமல் பலர் பிரிந்து சென்று வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். தொல்லை கொடுப்பவர்கள்\எதிர்ப்பவர்கள் பிரிந்து போனதும் அவரும் தான் பெத்த ராசாவை அடுத்த திக தலைவராக தயார்படுத்தி வருகிறார். இப்ப அந்த இயக்கத்திலிருப்பவர்களும் ஆமாம் சாமி நீங்க சொல்றது தான் சரி என்று தலையாட்டிக்கொண்டுள்ளார்கள்.





எந்த மதமும் மக்களை ஒன்றிணைக்கவில்லை. அதிலுள்ள பிரிவுகளே இதற்கு சாட்சி. மதமெல்லாம் மக்களை சுரண்ட வந்த  பம்மாத்து என கூறிய நாத்திக இயக்கங்களும் மதங்கள் போன்றே உள்ளன. இந்த பிரிவுகளுக்கு காரணம் அதிகாரம் தனக்கு மட்டுமே வேண்டும் என நினைப்பதே. அதிகாரம் கிடைக்காது என்று தெரிந்தால் அதிகாரம் வேண்டுபவர் தன் ஆதரவாளர்களுடன் தனியாக பிரிந்து வந்திடுவார் இல்லையென்றால் அதிகாரத்துக்கு போட்டியாக உள்ளவர்கள் அதிகாரத்திலுள்ளவர்களால் பிரிக்கப்படுவார்கள்\ஓரங்கட்டப்படுவார்கள்\ஒழிக்கப்படுவார்கள்.


தவறாக இருந்தாலும் மக்களுக்கு ஏதாவது ஒன்று தேவையாக உள்ளது. இந்த தேவை தான் மதத்துக்காரர்களின் முதலீடு. மதச்சண்டை எல்லாம் வருவது இதனால் தான். யாரும் சண்டை போடலைன்னா அவங்க எப்படி பொழப்ப ஓட்டறது?

நமக்கு ஏதோவொரு நம்பிக்கை வேண்டும். தவறில்லை ஆனால் நம்ம நம்பிக்கைக்கு எதற்கு அடுத்தவர்கள் தரகு வேலை பார்க்கனும்? தரகுகாரர்கள் அவர்கள் சுயநலத்துக்காக நம்மை அல்லவா பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  
இல்ல எனக்கு தரகர் வேண்டும் என்பவர்கள் தரகர் தங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஊருல நிலத்தின் விலை அநியாயத்துக்கு ஏறியதுக்கு யார் காரணம் எல்லாம் தரகரின் சுயநலம் தான். சமூகத்தில் தரகரின் பங்கு பற்றி விலாவரியாக இன்னொரு இடுகை தான் போடனும், இந்த இடுகைக்கு இது போதும் என்று எண்ணுகிறேன்.

நம் நம்பிக்கையை மற்றவர்கள் முதலீடாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்



.
.

வெள்ளி, ஏப்ரல் 16, 2010

சமூக சேவை அமைப்புகள்

நம்ம நாட்டுல உண்மையா சேவை புரியும் பல சேவை அமைப்புகள் இருக்குது.
நான் இருக்குற இரண்டு அமைப்புகளை பற்றி உங்களுக்கு சொல்லலாம் என்று இருக்கேன். இவை இரண்டும் இங்குள்ள தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது.

எயிம்ஸ் இந்தியா - aimsindia.net 

வாசிங்டன் பகுதியில் வசித்த சில நண்பர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. உருவாக்கிய பலர் அமெரிக்க வாழ்க்கை போதும் என்று  இப்ப இந்தியாவில்  வசிக்கிறாங்க.

மக்களை ஒன்று சேர்ப்போம் (மொழி பெயர்ப்பு சரியா?) (Bringing People Together) என்பது இந்த அமைப்பின் சூளுரை. இவங்க தனியாகவும் மற்ற அமைப்புகளுடன் இணைந்தும் செயலாற்றுகிறார்கள். பலதரப்பட்ட பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள். பள்ளிகளுக்கு உதவுதல் (கழிப்பறை கட்டுவது, சுற்றுச்சுவர் கட்டுவது, பற்றாக்குறையாக உள்ள ஆசியரை நியமிப்பது (சம்பளமும் இவங்கதான்), மேசைகள் தருவது போன்றவை), கிராமபுறத்தில் மருத்துவமனை கட்டுவது, ஏரியை தூர் எடுப்பது, கிராமபுற பெண்களுக்கு வருமானம் வருவதற்கு உதவுவது, சுனாமி விழிப்புணர்வு மற்றும் நலம் பற்றி மாணவர்களுக்கும் கிராம மக்களுக்கும் சொல்வது, கிராமபுற மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிப்பது என்பது சில. இதுவல்லாமல் இவர்கள் பல சேவைகளை செய்து வருகிறார்கள். எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் வலைதளத்தில் விரிவாக அவற்றை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வாசிங்டன் பகுதியில் நிருவாக குழு கூடி அன்றைய மாதம் நடந்த திட்டங்களையும், நிதி நிலை அறிக்கையையும் அதை பொருத்து அடுத்து எந்த திட்டத்தை ஏற்பது என்பது பற்றியும் முடிவெடுக்கிறார்கள்.

ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடுவது, நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடத்துவது என்று நிதி சேகரித்தார்கள். அதில் வேலை அதிகம், தன்னார்வலர்கள் அதிகம் ஆனால் நிதி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

மாரத்தான் ஓட்டத்திற்கு மாறினார்கள். இதுவே இவர்களின் தற்போதய முதன்மையான நிதி வருமானம் ஆகும். அதாவது நீங்கள் இந்த அமைப்பு சார்பாக ஓடுகின்றீர்கள் என்றால் இவ்வளவு பணம் புரட்ட வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அதற்கு அவர்களும் உதவுவார்கள். காசு கொண்டாற வேண்டியது உன் பொறுப்பு என்று விட்டுவிட மாட்டார்கள். மாரத்தான் ஓட ஆசை, அதே சமயம் சமூக அமைப்புக்கும் பணம் கொடுக்க விருப்பம் அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு அல்லவா? மாரத்தான் ஓட பயிற்சியும் கொடுக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் குறிப்பிட்ட இடத்தில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி நடைபெறும்.மே மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை இந்த பயிற்சி இருக்கும். அக்டோபர் மாத கடைசியில் வாசிங்டன் பகுதியில் பெரிய அளவில் நடைபெறும் மெரைன் கார்ப் மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். முழு மாரத்தான் ஓட முடியாதவங்க பால்டிமோர் பகுதியில் நடைபெறும் அரை மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். ஓடறது தான தேவை.

எந்த திட்டத்துக்கும் இவர்கள் முழு பணமும் தருவதில்லை. குறைந்தது 30% உள்ளூர் மக்களின் பணம், பற்றாக்குறைக்கு இவங்க உதவுவாங்க. இலவசம் என்றால் அதற்கு மதிப்பில்லை பாருங்க. நீங்க சமூக சேவை செய்துகொண்டிருந்தால் பணம் போதவில்லை என்றால் இந்த அமைப்பை அணுகலாம். 

இந்த அமைப்பு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வரிவிலக்கு பெற்றது. எனவே இந்த அமைப்புக்கு நன்கொடை அளித்தால் அதற்கு வரி விலக்கு பெற முடியும்.



 இந்தியா டீம் - indiateam.org 


இந்த அமைப்பு கலிபோர்னியா மாநிலத்தில் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு உதவுவது தான் இவர்களின் குறிக்கோள். பல குழுக்கள் உள்ளன. மாதம் பத்து டாலர் போடனும், மாதாமாதம் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 500 டாலர் கொடுக்கப்படும் அந்த பணத்தை கொண்டு அவர் தான் தேர்ந்தெடுக்கும் பள்ளிக்கு அதை செலவு செய்யலாம். இது அவர் பணம். முதல் மாதமே அவருக்கு பணம் கிடைத்தாலும் $490ஐயும் அவர் கொடுத்தாக வேண்டும். மாதம் $10 கொடுப்பதால் அவர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்பதே தெரியாது. 

நான் வேலை செய்யும் நிறுவனம் சமூக சேவைக்கு பணம் கொடுக்குது, பல நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் $1 போட்டா $1ஐ அவர்கள் கொடுப்பார்கள் , நான் கொஞ்சம் பணத்தை போட்டு செலவழிக்கலாம் (சமூக சேவைக்கு தான்) என்று இருக்கிறேன் அதற்கு ஏதாவது வழி உண்டா? அதற்காக FSA என்ற கணக்கு இருக்கிறது. இதில் நீங்கள் விருப்பப்படும் தொகையை போடலாம். அது உங்க கணக்கு, வேற யாரும் உங்க பணத்தை எடுத்து செலவு செய்ய முடியாது. நீங்கள் விருப்பப்பட்டால் அடுத்தவருக்கு பணம் கொடுக்கலாம். முதலில் நீங்க உங்க கை காச போட்டு செலவழிக்கனும் பின் எல்லா ரசீதுகளையும் கொடுத்து பணத்தை திரும்பபெறலாம்.  அமெரிக்க மக்களே உங்க கை காச போட்டு பள்ளிகளுக்கு செலவு செய்யனும் என்று நினைத்தால் டீமில் FSA கணக்கு தொடங்கி செலவழிக்கலாம். உங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்.

இது அமெரிக்காவில் வரிவிலக்கு பெற்ற அமைப்பு.


வியாழன், ஏப்ரல் 15, 2010

விக்கிப்பீடியா போட்டி.

தமிழில் விக்கிப்பீடியா இருப்பது வலைப்பதிவர்கள் அனேகருக்கு தெரியும். கோவையில் நடக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடக்கிறது. தமிழ் இணைய மாநாட்டை சார்ந்தவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்காக ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்துள்ளார்கள். கட்டுரை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30. இதில் வெளிநாட்டிலுள்ள கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.  உங்களுக்கு தெரிந்த கல்லூரி மாணவர்களுக்கு இத்தகவலை சொல்லி அவர்களை போட்டியில் கலந்துக்க சொல்லுங்க. மேலும் விபரங்களுக்கு விரிவான தகவல்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அனுகவும்.



மேல் இருக்கும் போட்டி கல்லூரி மாணவர்களுக்கு மற்றவர்களுக்கு? இப்போதைக்கு மற்றவர்களுக்கு போட்டியெல்லாம் இல்லை.  ஆனா நீங்க உதவலாம். நீங்க தான் உதவமுடியும். தமிழ் விக்கிப்பீடியா என்பது எனக்கோ உங்களுக்கோ உரிமையானது அல்ல. இது நம் அனைவருக்கும் உரிமையானது. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க தொடங்கினால் நீங்களும் அதன் அங்கம். ஏதாவது பிழைகள் தென்பட்டால் நீங்கள் திருத்தலாம். அடுத்தவங்க அதை சரி செய்யட்டும் என காத்திருக்க தேவையில்லை. அங்கு பங்களிக்கும் எல்லோரும் நம்மளைப்போன்றோரே. யார் என்ன மாற்றம் செய்தாலும் அது பதிவாகிவிடும். தவறுதலாக நீக்கிவிட்டால் அதை மீட்டுவிடலாம். கட்டுரையின் வரலாறு என்ற tabல் யார் எப்போ என்ன எழுதினார்கள் என்ற விபரம் இருக்கும்.

தமிழ் வலைப்பதிவர்கள் நிறைய பங்களிக்கலாம். ஏன்னா இவங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியும்.  நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் ஆனா பங்களித்திருக்கமாட்டார்கள். ஏதோ ஓர் சிறு தடை. என்னய்யா அது? அதான் புரியமாட்டிக்குது.

சில பேர் விக்கிப்பீடியாவில் பங்களித்தால் எனக்கு என்ன லாபம் என்று கேட்பார்கள். உங்களுக்கு பொருளாதார அளவில் லாபம் ஏதும்  இருக்காது ஆனால் நீங்க எழுதும் கட்டுரையை படிக்கும் வாசகருக்கு பயன் இருந்தால் அது தான் உங்களுக்கு கிடைக்கும் வெகுமதி.

நான் எழுதுனது வேற இப்ப இருக்கறது வேற கட்டுரை என்பது விக்கிப்பீடியா கொள்கை பற்றி அறியாததால் எழும் கேள்வி. விக்கிப்பீடியாவில் நீங்கள் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் உரிமை கோர முடியாது. அது எல்லோருக்கும் பொதுவானது. அடுத்தவர் எழுதிய கட்டுரையிலும் நீங்கள் திருத்தம் செய்யலாம். மேலதிக தகவல்களை சேர்க்கலாம். அக்கட்டுரையை வளர்த்தெடுக்கலாம். இது ஒரு கூட்டுழைப்பு.

வலைப்பதிவில் எழுதும் நடையில் எழுதக்கூடாது. எதையும் ஆதாரத்துடன் எழுதவேண்டும். அதற்கான சுட்டிகளை இணைக்கவும். இதை மற்றவர்கள் சரிபார்த்துக்கொள்ள உதவும்.

எழுத்துப்பிழையை திருத்தலாம், தகவல் தவறென்றால் அதை திருத்தலாம், ஆதாரங்களை சேர்க்கலாம், படங்களை இணைக்கலாம், தெரிந்த தகவல்களை சேர்க்கலாம் லாம் லாம் லாம் எவ்வளவோ செய்யலாம்.

வலைப்பதிவில் தலைவர்களை பற்றிய பல இடுகைகளை பார்த்துள்ளேன். அவற்றை நீங்கள் இணையத்திலோ, புத்தகத்திலோ படித்து தான் எழுதியிருப்பீர்கள். நீங்கள் அத்தலைவரை பற்றி விக்கிப்பீடியாவில் ஏன் எழுதக்கூடாது? மேற்கோள்களையும் கொடுத்தால் நீங்கள் எழுதிய கட்டுரையின் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும். இங்கு எழுதினால் பலரைச் சென்றடையும் அல்லவா?

உங்க ஊரைப்பற்றி மற்றவரை விட உங்களுக்கு தான் நல்லா தெரியும்.  உங்கள் ஊரைப்பற்றி எழுதலாம். எல்லா ஊர்களைப்பற்றிய தகவல்களும் விக்கிப்பீடியாவில் உண்டு ஆனால் விரிவான தகவல்கள் சில ஊர்களுக்கு தான் உள்ளது. உங்களுக்கு பிடித்தமான தலைப்பிலோ அல்லது துறை சார்ந்த கட்டுரைகளோ எழுதலாம். தமிழில் எழுதவேண்டிய கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

சிறுக சிறுக தகவல்களை சேர்க்கலாம். தவறில்லை. உங்களிடம் உள்ள சிறு தடையை உடைத்து மடை திறந்த வெள்ளமாக அல்லாவிடினும் வயலுக்கு பாயும் சிறிய வாய்காலாகவாவது அல்லது சென்னை குழாய் தண்ணி அளவாவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களியுங்கள். அது நாம் தமிழ் சமூகத்துக்கு செய்யும் பெரும் உதவி.


.
.

புதன், ஏப்ரல் 14, 2010

ஆண் குழந்தை வேண்டாம்

என் நண்பனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைதான் வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். என்ன பண்றது பிறக்கும் குழந்தை எந்த பால் அப்படிங்கிறத முடிவுபண்ற வசதி நம்ம கிட்ட இல்லையே (இருந்திருந்தா 100 பசங்களுக்கு 10 பிள்ளைங்க கூட தேறாது). நான்கு ஆண்டு கழித்து இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்ப அவன் மருத்துவமனையில் இல்லை. அவனுக்கு செய்தி சொல்லி விட்டாங்க. அவன் கேட்ட கேள்வி குழந்தை பையனா பிள்ளையா? பையன் பிறந்திருப்பதாக சொன்னதும் அவன் பிறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஏகப்பட்ட பேர் அவன்கிட்ட பேசி சமாதானம் செய்து குழந்தையை பார்க்கவைத்தார்கள். குழந்தை பிறந்து இரண்டு நாள் கழித்து தான் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு போனான் என்றால் அவனுக்கு ஆண் குழந்தை மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

ஊருக்கு போனப்ப ஏண்டா பிறந்த குழந்தையை பாக்க மாட்டேன்னு அடம்பிடிச்சன்னு கேட்டேன். நீ அமெரிக்காவுல இருக்கற இங்க இருக்குற நிலைமை உனக்கு தெரியாதுன்னு சொன்னான். துருவி கேட்டதும் பையனுக்கு திருமணம் பண்ண பொண்ணு கிடைப்பது கடினம் அதான் காரணம்ன்னு  சொன்னான். அடப்பாவி, அது பையன் பெரியவன் ஆனதும் கவலைப்படுறது அதுக்கு இப்பவே ஏண்டா கவலைப்படுற அப்படின்னேன்.

பெண் குழந்தை பிறந்தா நல்ல மாப்பிளை கிடைக்கனுமே நிறைய சீர்வரிசை செய்யனுமே அவ்வளவு வசதி நம்மகிட்ட இல்லையேன்னு மக்கள் கவலைப்படுவதை தான் பார்த்திருப்போம், பலர் முதிர் கன்னிகளாக இருப்பதும் இக்காரணத்தால் தான். பெண் கிடைக்கலை அப்படிங்கிறது புதிது இல்லையா. அவன் கவலைப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அரியானா மாநிலத்தில் பெண் வேண்டாம் பையன் தான் வேண்டும் என்று பலர் நினைத்ததன் பலனை இப்போ அனுபவிக்கறாங்க.திருமணத்துக்கு பெண் கிடைக்காம நிறைய ஆண்கள் வேறு வழியில்லாம பிரமச்சாரிகளாக இருக்காங்களாம். அதாவது முதிர் காளைகள். பணம் இருக்கறவங்க அடுத்த மாநிலத்திலிருந்து பெண் எடுக்கறாங்க. பெண் வீட்டு காரங்க சீர் கொடுத்து மாப்பிள்ளை எடுத்ததுக்கு பதிலாக மாப்பிளை வீட்டுக்காரங்க சீர் கொடுத்து பெண் எடுக்கறாங்க.

ஏன் நாம அரியானாவுக்கு போகனும்.  தங்க தமிழகத்திலேயே அந்த கதை நடந்துகிட்டிருக்கு. என் நண்பனின் வீட்டில் மூன்று பேர். இரண்டு பசங்க, ஒரு பெண். பெண்ணுக்கு சுலபமா மாப்பிள்ளை கிடைத்து கட்டிகொடுத்து நல்லபடியா வாழுது. மாமன் பெண்ணையே இவன் கட்டிக்கிட்டான். இவன் தம்பிக்கு பெண் கிடைக்குங்குள்ள தவிடு தின்னுட்டாங்க. எத்தனை பெண் பார்க்கறது? அப்பப்பா...

இவன் தம்பிக்கு மட்டும் இந்த நிலையா என்றால் அது தான் இல்லை. இவன் நண்பர்கள் (எனக்கும் அவர்கள் நண்பர்கள் தான்) முக்கால்வாசி பேருக்கு இந்த நிலை தான்.  இரண்டு பேர் இங்க தேடுனா நமக்கு பெண்கிடைப்பது என்று கடினம் என்று கேரளா போய் பெண் எடுத்துக்கிட்டு வந்துட்டானுங்க. மாப்பிள்ளை தேடும் மலையாள பெண்களை தெரிந்த தரகருக்கு இப்ப எங்கூருல நல்ல கெராக்கியாம். 30 நாளில் மலையாளம் கற்பது எப்படி? அப்படிங்கிற புத்தகம் அதிகளவு விக்குதாம். எங்க பக்கம் இருக்கற தரகருங்க எல்லாம் இப்ப மலை நாட்டில் தான் இருக்கறதா கேள்வி.

ஏண்டா இந்த நிலைமைன்னா... இவனுங்க பள்ளி படிப்பே போதும் அப்படின்னு தொழிலில் இறங்கிட்டானுங்க. பட்டபடிப்பு படிச்சாலும் இதே தொழில் தான் பண்ணனும் அதுக்கு 3 ஆண்டு வீண் பண்ணறதுக்கு அந்த 3 ஆண்டை தொழிலில் பயன்படுத்தினால்  பணம் கிடைக்கும் என்பது இவனுங்க வாதம். அதுவும் சரிதான். ஆனா இப்ப என்னடான்னா பெண்கள் பட்டபடிப்பு படிச்சிட்டு படிக்காத பையனுங்களை கட்டிக்க மாட்டேங்குது. இப்படியெல்லாம் ஆகுமுன்னு யாருக்கு தெரியும்?

இவனுங்க பட்டபடிப்பு படிக்காதது தான் திருமணம் ஆகாம தள்ளிபோனதுக்கு காரணம் (படிக்காத பையனை எந்த படித்த பிள்ளையப்பா கட்டிக்கும்? ஒரு நியாயம் இருக்குள்ள). அதை புரிந்து கொள்ளாத என் நண்பன் ஆண் குழந்தையே வேண்டாம் என்று சொல்றான். இப்படியாவது பெண் குழந்தைக்கு ஆதரவு இருக்கேன்னு மகிழவேண்டியது தான்.

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டு எந்த மாசத்துல பிறக்குது? சித்திரையில் சிலபேருக்கும் தையில் சிலபேருக்கும் பிறக்கிறது. 99% திருக்கணிதகாரங்களுக்கு (சோசியக்காரங்க) சித்திரை மாதம் தான் புத்தாண்டு பிறக்கும். புத்தாண்டு  தை மாதம் பிறந்தா ஒழுங்கா கணிக்கமுடியாதா?. சித்திரையில் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு சித்திரையில் பிறப்பதை ஒத்துக்கொள்ளாத மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

நான் தை மாதம் தான் ஆண்டு பிறப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் நபர். இப்ப சட்டம் போட்டதால் அல்ல முதலில் இருந்தே தை மாதத்துக்கு தான் என் ஆதரவு. சித்திரை மாதத்தை நான் கொண்டாடியதே இல்லை. தை மாசம்ன்னா அப்படியா? வெகு விமரிசையா கொண்டாடுறோம். புத்தாண்டை பொங்கல் விழா மூலம் வரவேற்கிறோம். கையில் காசு வந்தவுடன் குடியானவன் கொண்டாடுற முதல் விழா பொங்கல் தான் அதாவது புத்தாண்டு பிறப்பு.

ஒவ்வோரு மாதத்துக்கும் பழமொழிகள் இருந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்துக்கு சொல்லும் மொழிக்கு சிறப்பு உண்டு. அதாவது அறுவடை முடிந்து கைல பணம் புழங்கற மாதம் தை. கேட்பவர்களுக்கு பணம் கொடுக்க முடியும்.  வாரிசு திருமண செலவுக்கு வேண்டிய பணம் அறுவடை முடிஞ்சா தான கைக்கு வரும்.  தை, மாசி திருமண மாதங்கள். சித்திரை மாதத்தில் அவ்வளவாக திருமணம் நடப்பதில்லை. 

வானியல் படி கதிரவன் மேல் நோக்கி கடக ரேகை நோக்கி செல்லும் நாள் தை 1. ஆறு மாதம் மேல் ஆறு மாதம் கீழ். தமிழரின் ஆறு காலங்களில்  ஒன்றாகிய  இள வேனில் காலம் தொடங்குவதும் தை மாதத்தில் இருந்துதான். வெயில் காய்ச்சற காலத்திலிருந்து யாரு புத்தாண்ட தொடங்குவாங்க?

சித்திரையில் தொடங்கும் புத்தாண்டில் ஒன்று கூட தமிழ் பெயர் அல்ல. அப்புறம் எப்படி சித்திரை ஆண்டுபிறப்பை தமிழ் புத்தாண்டாக சொல்றாங்கன்னு புரியலை. சித்திரையில் தொடங்கும் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று சொல்லாதீர்கள்.

திங்கள், ஏப்ரல் 12, 2010

விவாகரத்து

ஊர்ல பேசிக்கிட்டு இருந்தப்ப எங்கம்மா நம்ம சின்னுசாமி மகளுக்கு போன வருசம் கல்யாணம் ஆச்சுல்ல, அதுக்குள்ள ஏதோ மனக்கசப்பு வந்து புருசன்  வேண்டான்னு வெட்டிக்கிட்டு வந்துட்டாளாம் என்று சொன்னாங்க.

சின்னுசாமி மகள் மட்டுமா?? முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருக்கும். இப்ப ஆன்னா ஊன்னா விவாகரத்துன்னு ஆகிப்போச்சு. அதுக்கு பல காரணங்கள்.

பொருளாதாரம்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரும்படி ஆண்கள் கையில் இருந்தது. இப்ப அப்படி அல்ல, பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கறாங்க. துணையில்லாம வாழராங்க. பெண்களை அதிகம் படிக்க வைக்காம இருந்தது ஒரு காலம், ஏன்னா பொண்ணு நிறையா படிச்சா நிறைய படிச்ச மாப்பிளையா பார்க்கணும் அந்த மாதிரி மாப்பிளைக்கு நிறைய சீர் வரிசை செய்யனும். இதுக்கு பொண்ண அதிகம் படிக்க வைக்காம இருந்தா சிக்கலே இல்லை, அதுவும் அல்லாமல் படிச்சா எங்க வேலை கிடைக்கும்? மென்பொருள் துறை வேலைவாய்ப்புகள் இதனை புரட்டி போட்டுள்ளது.

நான் எட்டாவது படித்த பொழுதபோது கூட படித்த நண்பனின் அக்கா பத்தாவது படித்தார்கள், அவங்க வகுப்பில் முதல் பத்து இடத்துக்குள் வருவாங்க. எட்டாவதுடன் அவங்க வேற ஊருக்கு போயிட்டாங்க. இரண்டு ஆண்டு கழித்து ஒரு குழந்தையுடன் அவனோட அக்காவை பார்த்தேன். நன்றாக படித்த பெண்ணை பத்தாவது முடித்த கையுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பெற்றோரின் சுமை குறைஞ்சது பாருங்க ஆனா என் நண்பனின் அக்காவோட நிலை? இந்த மாதிரி பலபேர் உங்களுக்கும் தெரிந்து இருப்பார்கள்.

பெண்களை படிக்க வைக்க இருந்த தயக்கம் கொஞ்சம் ஒழிந்தது. அடுத்தபடியா படித்த பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெரிய தயக்கம் இருந்தது, அப்படியே அனுப்ப ஒத்துக்கிட்டாலும் வெளியூரா? மூச். இப்ப இந்த நிலையிலும் நல்ல மாற்றம். அதிகளவில் நகரங்களில் உள்ள மகளிர் விடுதிகள் இதற்கு சான்று.

பொருளாதார நிலையில் பெண்களின் நிலை மேம்பட்டு  உள்ளதால் அடிமையாக இருக்க அவர்கள் மறுக்கிறார்கள். ஆணாதிக்கம் மிக்கவன் கணவனாக வந்தால் பழைய காலம் போல் அல்லாமல் குடும்பநல நீதிமன்றத்தை அனுகிவிடுகிறார்கள். கல் ஆனாலும் கணவன்,  புல் ஆனாலும் புருசன் போன்றஆணாதிக்க பழமொழிகள் எல்லாம் இப்ப செல்லாது என்பது பலருக்கு புரிவதில்லை.

பெற்றோர்
செல்லம் கொடுத்து வளர்த்த பெண், கணவனுடன் கோபம் கொண்டு சீராட்டிகிட்டு வந்தா பெற்றோர் அவளை சமாதான படுத்தனும் அதை விட்டு விட்டு பெண்ணை விட இவர்கள் அதிகம் சண்டை போட்டு சமாதானத்திற்கான வழிகளை அடைத்து விவாகரத்து தான் ஒரே வழி என்று ஆக்கி பெண் வாழ்வை சிதைப்பவர்கள்.

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்குமா? அவற்றை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் தகுந்த அறிவுரை கூறி அதை சரி செய்ய முயலவேண்டும். ஆனால் சிலர் அப்படி நடப்பதில்லை. நிறைய இடங்களில் பெற்றோர் (ஆண் மற்றும் பெண்) மீது தான் குற்றம் சொல்ல வேண்டியதாக உள்ளது.

நானும் நட்சத்திரம் ஆயிட்டேன்

என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தமிழ்மணத்துக்காரங்க நட்சத்திரமா தேர்ந்தெடுத்து இருக்காங்க. எப்படி இந்த முடிவு எடுத்தாங்கன்னு தெரியலை. என் இடுகைகளை பார்த்த பின்னும் என்னை கூப்பிட்டுறுக்காங்கன்னா அதுக்கு காரணம் என்னுடைய நல்லூழ் தான்.  இந்த தேதியில் நட்சத்திரமா இருக்க சம்மதமான்னு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாங்க அதுக்கு நான் பதில் அனுப்பலை, காரணம் அந்த மின்னஞ்சலை சரியான சமயத்தில் நான் பார்க்கலை, இரண்டு வாரம் கழித்து தான் பார்த்தேன். பார்த்ததும் அடடா வாய்ப்பு போச்சேன்னு கவலைப்பட்டாலும், மன்னிக்கவும் இந்த தேதியில் என்னால் இருக்க முடியாது, வேற தேதி இருந்தா சொல்லுங்கன்னு பதில் போட்டேன். அப்புறம் இரண்டு நாளைக்கு ஒரு தரம் தமிழ்மணத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பார்ப்பதே பொழப்பா போச்சு. ஒரு நாள் ஏப்ரல் 12ல் தொடங்கும் வாரத்துக்கு நட்சத்திரமாக முடியுமான்னு கேட்டாங்க.  இந்த வாய்ப்பை விடுவனா?  எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் அப்படின்னு 3 பதில் மின்னஞ்சல் அனுப்பிட்டேன்.அவங்க மனசு மாற கூடாது பாருங்க.

என்னை பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. தமிழ்மண நட்சத்திரம் என்பதால் ஏதாவது சொல்லியாகனும் இல்லையா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த 24 நாடுகளில் ஒன்றாகிய கொட நாட்டின் மன்னிக்க வாழவந்தி நாட்டின் துணை நாடாகிய தூசூர் நாட்டிலுள்ள பெரிய ஊரில் பிறந்து வளர்ந்தேன், வாழவந்தி நாட்டுலயும் அது தான் பெரிய ஊர். ஓர் ஆண்டு சிலிகான் பள்ளத்தாக்கில் குப்பை கொட்டிட்டு 9 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாசிங்டன் பெருநகரத்திற்கு அருகில் வர்ஜீனியா மாநிலத்தில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். தமிழில் புலமை கிடையாது, ஆர்வம் உண்டு.

பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுதெல்லாம் தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்ததில்லை. பள்ளி முழுஆண்டு விடுமுறையில் எங்கப்பா இந்தி படிக்க சொல்லி தொல்லை படுத்தினார். அதனால் நான் இந்தி எதிர்ப்பாளனாக மாறினேன். விடுமுறையில் விளையாட விடாம இந்தி படி சிந்தி படின்னு... அப்பாக்களே இப்படித்தானோ? அப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இராஜீவ்காந்தி தான் பிரதமர். ஏன் நடந்தது? காரணம் தெரியவில்லை, அப்ப திமுக எதிர்கட்சி, ஆளுங்கட்சியா இருந்தா கண்டுக்காம விட்டுருப்பாங்களோ என்னவோ. ஏன் அப்ப இராஜீவ்காந்தி பிரதமர் அப்படின்னு சொன்னேன்? இல்லைன்னா என்னை  ரொம்ப ரொம்ப யூத்துன்னு நீங்க நினைச்சிருவீங்களேன்னு தான். இந்தியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் வெறியர்கள் என்ற கருத்தாக்கத்தின் படி நான் தமிழ் வெறியன் ஆனேன். அமெரிக்கா வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆர்வம் அதிகமாகியது. 2005 நவம்பர் மாதத்தில் முதல் இடுகையை இட்டேன் அதனால் நான் ஒரு மூத்த பதிவர் என்பதை விருப்பம் இல்லாவிடிலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதாவது 6 ஆண்டுகளாக நான் அப்பப்ப வலைப்பதிவு எழுதிக்கிட்டு வலைப்பதிவின் தொடர்பு அறுந்து போகாமா பார்த்துக்கிட்டிருக்கேன்.

என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வைத்திருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது).

குறும்பன் என்ற பெயரை வைச்சது நண்பனுக்கு பின்னூட்டம் போட. உண்மையான பெயரை வெளியில் சொல்லல. அது வசதியா இருந்ததால அப்படியே தொடர்ந்தேன், இப்ப தமிழ்மணம் நட்சத்திரம் ஆகியிருக்கறதால அந்த வசதியை விட்டு கொடுக்கனும்மா என்ன? அதனால குறும்பன் என்ற பெயரிலேயே தொடர்கின்றேன்.

இந்த வாரம் குறைந்தது ஏழு இடுகைகள் உறுதி.  ஆதரவு காட்டுங்கப்பா. (ஆதரவு காட்டவில்லை என்றாலும் நான் இடுகை இடுவதில் இருந்து விலகமாட்டேன்). 

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

கோவை - மாநாடு - சாலை

கோவையின் வழியாக தேநெ 47, தேநெ 67, தேநெ 209 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. திருச்சி, தஞ்சை, கரூர் பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 67ஐயும் சேலம், ஈரோடு, சென்னை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 47ஐயும் திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 209ஐயும் பயன்படுத்துவார்கள்.

கோவைக்கு தொழில் நிமித்தமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பஞ்சாலைகள் நிறைய இருக்கா அதனால் சுமையுந்துகளும் அதிகமாக வரும். வடநாட்டு வண்டிகள் நிறைய இங்கு வரும். பக்கத்தில் மற்றொரு பெரிய தொழில் நகரம் திருப்பூர் இருக்கிறது, அங்க காசு இருக்கறவங்க எதுக்கெடுத்தாலும் இங்க தான் வருவாங்க. பல கல்லூரிகளும், பெரிய மருத்துவமனைகளும் உள்ளதால் மேற்கு மாவட்ட மக்கள் இங்கு தான் அதிகம் வருவாங்க.

நான் ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்ற போது பெருமாநல்லூர் வரை விரைவாக போக்குவரத்து நெரிச்சல் இல்லாமல் போனேன். அதுவரை இரட்டை வழி சாலையும் இருந்தது. பெருமாநல்லூரில் திருப்பூரில் இருந்து வரும் வண்டிகள் இணைந்து கொள்ளும். சாலையில் செல்லும் வண்டிகளின் எண்ணிக்கையும் இருமடங்காக பெருகிடும். அங்கிருந்து ஒற்றை வழி சாலை தான். வண்டி மெதுவாக நகர்ந்து தான் செல்லும். நம்ம வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டாகிடும். இது வழமை.
மற்ற சாலைகளில் போக்குவரத்து எப்படி என்று தெரியாது. தெரிஞ்சவங்கதான் சொல்லனும்.

ஜூன் மாதத்தில் செம்மொழி மாநாடு நடக்கப்போகுது. அப்ப மாநாட்டு கூட்டம் கோவையை மொய்க்கப்போகுது. சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் தே.நெ 47 ஐ பயன்படுத்தி தான் கோவைக்கு வரனும். அப்ப போக்குவரத்து நெரிச்சல் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்.

தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் இரட்டை வழி சாலைகளாக உள்ள போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரும் தொழில் நகருமான கோவைக்கு இரட்டை வழி சாலை இல்லாதது பெரிய குறை. தி. ரா. பாலு அமைச்சரா இருந்தப்ப தமிழகத்தின் நெடுஞ்சாலைகளுக்கு நிறைய பணம் ஒதுக்கி நெடுஞ்சாலைகளை விரைவாக இரு வழி சாலைகள் (4 வழி) அமைத்து புண்ணியம் பண்ணினார். ஆனால் ஏனோ கோவைக்கு மட்டும் அவர் செய்யவில்லை. கோயம்புத்தூர்காரங்க ஏதாவது எக்குதப்பா நடந்து இருப்பாங்க. பொங்கலூர் பழனிச்சாமிக்கும் பாலுவுக்கும் தகராறா? ஏதோ ஒன்னு. கோவைக்கு இரட்டை வழி சாலை இன்னும் கிடைக்கலை. இப்ப பாருங்க எவ்வளவு தொந்தரவுன்னு.

ஏதாவது ஒரு வண்டி பழுதுபட்டு நின்றால் இரு பக்கமும் போக்குவரத்து பாதிக்கப்படும். அதிலும் நிறைய வண்டிகள் செல்லும் சாலையில் ஏற்பட்டால் சொல்லத்தேவையில்லை. மாநாட்டை ஒட்டி நிறைய வண்டிகள் செல்லும் போது அவ்வாறு பழுதுபட்டு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் தேவையில்லாமல் மாநாடு நடக்கும் நாட்களில் கோவைக்கு வண்டிகளில் செல்லாதீர்கள். தொடருந்தில் செல்லலாம், மாநாட்டை ஒட்டி சிறப்பு தொடருந்துகள் இயக்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.

வியாழன், ஏப்ரல் 08, 2010

வழக்கறிஞர் நகைச்சுவை

ஒரு விருந்தில் மருத்துவரும் வழக்கறிஞரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்களால் தொடர்ச்சியா தடங்கல் இல்லாமல் பேசமுடியவில்லை. ஏகப்பட்ட பேர் மருத்துவரிடம் தங்கள் உடல் நிலையை, நோயை கூறி இலவச மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் இது மாதிரி நடந்தது, மருத்துவரின் பொறுமை போயிடுச்சி (யாரும் தப்பு சொல்ல முடியாது, மனுசன நிம்மதியா விருந்தில் பேச விடறாங்களா), அவர் வழக்கறிஞரிடம் நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது சட்ட ஆலோசனை கேட்டு வருபவர்களை தடுக்க என்ன செய்யறீங்கன்னார்.

நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் அப்புறம் அவர்களுக்கு அதற்கான கட்டணத்தை கட்ட சொல்லி கட்டண ரசீதை அஞ்சலில் அனுப்பிடுவேன் என்று வழக்கறிஞர் சொன்னதைக்கேட்ட மருத்துவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தவறு என்பது அவர் கருத்து ஆனாலும் இம்முறையை ஒரு தடவை முயற்சித்து பார்க்க முடிவு செய்தார். குற்ற உணர்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் நேற்றைய விருந்தில் மருத்துவ ஆலோசனை கேட்டவர்களுக்கான கட்டண ரசீதை தயார் படுத்திக்கிட்டு இருந்தார். அப்பவந்த அஞ்சல்காரர் ஒரு உறையை இவர்கிட்ட கொடுத்திட்டு போனார். அது வழக்கறிஞரிடம் இருந்து வந்த கட்டண ரசீது அஞ்சல்.



சோமசுந்தரம் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்துக்கு தொலை பேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் என்னடா இந்த ஆளோட ஒரே தொல்லையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டு மன்னிக்கனும் ஐயா அவர் இறந்துட்டாருன்னு சொன்னேனே மறந்துட்டீங்களான்னு கேட்டாங்க. அதுக்கு சோமசுந்தரம் அவர் இறந்திட்டாருன்னு தெரியுங்க ஆனாலும் அவர் இறந்துட்டாருன்னு அடுத்தவங்க சொல்றத கேக்கறப்ப இனிமையா இருக்குன்னார்


மருத்துவர் ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது தன் பழைய வழக்கறிஞர் நண்பரை சந்தித்தார். இங்க என்ன பண்றங்கீன்னு கேட்டார். நான் ஒரு தண்டாம போன வீட்டை வாங்கினேன் இல்லையா, அது தீ பிடித்து எரிந்து விட்டது. தீ காப்பீட்டு திட்டதில் இருந்து கொஞ்சம் பணம் வந்தது, செலவழிந்து போக மீதமான பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். ஆமா நீங்க  இங்க என்ன பண்றங்கீன்னு மருத்துவரை பார்த்து வழக்கறிஞர் கேட்டார்.  ஆத்தோரமா நிலம் வாங்கி இருந்தேன் இல்லையா, ஆத்துல வெள்ளம் வந்து நிலம் பாதிக்கப்பட்டுச்சு, வெள்ள காப்பீட்டு திட்டத்தில் இருந்து வந்த பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். அதை கேட்டதும் வழக்கறிஞரின் முகத்தில் வியப்பு, குழப்பம் எல்லாம் தெரிந்தது. மருத்துவரிடம் வெள்ளத்தை எப்படிங்க தொடங்கனிங்கன்னு கேட்டார்.



வழக்கறிஞர் தனக்கு குணப்படுத்த முடியாத கட்டி மூளையில் இருப்பதை அறிந்து கொண்டார். அது பெரிசாகவும் இருந்தது. மூளையை மாற்றுவது தான் ஒரே வழி. என்னென்ன மூளைகள் தங்களிடம் உள்ளது என்பதை மருத்துவர் அவருக்கு காட்டினார். ஒரு சாடியில் ஏவுகணை அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 5000 ரூபாய். ஒரு சாடியில் சாதாரண அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 8000 ரூபாய். ஒரு சாடியில் வழக்கறிஞர் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 90,000 ரூபாய்.

இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் இது பகல் கொள்ளை அது எப்படி வழக்கறிஞர் மூளை மட்டும் விலை அதிகமாக இருக்க முடியும் என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர் உங்களுக்கு தெரியுமா? ஒரு அவுன்சு எடுக்க எவ்வளவு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டாங்கன்னு கேட்டார்.



பொறியாளர், கணக்கர் மற்றும் வழக்கறிஞரிடம் 2+2 எவ்வளவுன்னு கேட்டாங்க.
பொறியாளர் நான்கு என்று பதில் சொன்னார்.
கணக்கர் 3 அல்லது 4 ஆக இருக்கலாம் என்று சொல்லிட்டு இருங்க எதுக்கும் என்னோட ஸ்பிரட் சீட்ல கேள்விய ஓட்டி பார்க்கறேன்னு சொன்னார்.
வழக்கறிஞர் அது இதுன்னு அலப்பறை பண்ணிட்டு மெதுவான குரலில் எவ்வளவா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறிங்க என்று கேட்டார்.


புதன், மார்ச் 31, 2010

விளம்பரத்தில் ரஜினிகாந்த்

அமீரக பதிவர் செந்தில்வேலன் இந்தி ஜாக்கிகள் ரஜினிகாந்தை கேலி செய்தது குறித்து வருத்தப்பட்டிருந்தார். அவருக்காக இந்த இடுகை. இஃகிஃகி.

கேஸ்ட்ரால் எண்ணெய் விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்) - அனேகம்பேர் பார்த்ததா இருக்கும்.




IDBI Kismat விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்).



திரைப்படத்துல ரஜினிகாந்த் சண்டை :-))

திங்கள், மார்ச் 29, 2010

சிரிங்க சிரிங்க

ஒரு இளைஞனுக்கு மிகச் சிறந்த எழுத்தாளனாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. எந்த மாதிரியான "சிறந்த எழுத்தாளனாக" வர நீ ஆசைபடுகிறாய் என்று ஒருவர் கேட்டார்.
என்னுடைய எழுத்துக்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் படிக்க வேண்டும். படிப்பவர்களுக்கு ஒரு உண்மையான உணர்ச்சியை கொடுக்கவேண்டும். படிப்பவர்கள் துடிக்க வேண்டும், கத்த வேண்டும், கதற வேண்டும், கோவப்பட வேண்டும், திட்ட வேண்டும் என்றார்.

இப்போது அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் "Error Message" எழுதும் வேலை செய்கிறார்.



முதலாளி எனக்கு சம்பளத்தை நீங்கள் உயர்த்தி தந்தாக வேண்டும், 3 நிறுவனத்துக்காரங்க என்னை தொல்லை பண்றாங்க என்றார் பணியாள்..
இப்ப வியாபாரம் நல்லா போயிக்கிட்டிருக்கு, இன்னும் 3 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்று இருக்கிறப்போ இவன் சம்பளத்தை உயர்த்தலைன்னா வேலையை விட்டு விலகிடற மாதிரி பேசறானே என்று யோசித்துவிட்டு, சம்பளத்தை உயர்த்த ஒப்புக்கொண்டார்.

இவனை தொல்லை பண்ணுன 3 நிறுவனத்துக்காரங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்ட முதலாளி சரி எந்த 3 நிறுவனத்துக்காரங்க உன்னை தொடர்பு கொண்டது என்று கேட்டார்.

மின்சார நிறுவனம், சமையல் எரிவாயு நிறுவனம், தொலைபேசி நிறுவனம் என்றார் பணியாள்.



ஒரு கணவன் மருத்துவரிடம் சென்று ஐயா என் மனைவிக்கு இப்பவெல்லாம் சரியா காது கேட்கமாட்டக்குது என்ன செய்யறது என்று கேட்டார். மருத்துவர் நான் சொல்லும் சிறு சோதனையை செய்துபாருங்க, காது எந்த அளவுக்கு கேட்குதுன்னு தெரிந்து கொள்ளலாம், அதற்கு தகுந்த மாதிரி மருத்துவம் பார்க்கலாம் என்று சொன்னார்.

சரின்னு கணவர் மனைவியின் செவியை சோதனை செய்ய வீட்டுக்கு வந்துவிட்டார்.

மனைவி சமையல் அறையில் பாத்திரம் கழுவும்போது, 15 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 10 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 5 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், இப்பவும் பதிலில்லை. வெறுத்துப்போயி மனைவியின் பின்னால் நின்று இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார்.

4-வது தடவையா சொல்றேன் இன்னைக்கு வெண்டைக்கா குழம்பு என்றார் மனைவி.



ஒரு விழாவில் வயதான பாட்டி ஒருவர் தற்போதைய இளம்பெண்களின் போக்கு குறித்து கவலைகொண்டார்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் அந்த பெண்ணை பாருங்க , பசங்க ஜீன்ஸ், பசங்க சட்டை, பசங்க மாதிரி முடி ஒரு பெண் மாதிரியே இல்லை, நீங்க என்ன சொல்லறீங்க என்றார்.
இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றவர் அவ என் பெண் தான் என்று பாட்டியிடம் கூறினார்.
பாட்டிக்கு தர்மசங்கடமா போச்சு, மன்னிக்கனும் நீங்க அவளோட அப்பான்னு தெரியாம போச்சு என்றார்.

நான் அவளோட அப்பா கிடையாது அம்மா என்றார். 



அஞ்சல் நிலையத்தில் வயதான பெரியவர் ஒரு வாலிபனை அணுகி தம்பி எனக்கு இந்த அஞ்சல் அட்டையை எழுதி தர முடியுமான்னு கேட்டார்.
வாலிபனும் சரி என்று பெரியவர் சொன்ன செய்தியை அஞ்சல் அட்டையில் எழுதிவிட்டு குறிப்பு ஏதாவது எழுத வேண்டுமா என்று கேட்டார்.

பெரியவர் ஒரு நிமிடம் யோசித்து விட்டு , ஆமாப்பா, கையெழுத்து கோழி கிறுக்கல் மாதிரி இருப்பதற்கு மன்னிகவும் என்று எழுதவும் என்றார்.




நான்கு எறும்புகள் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு யானை எதிர்பட்டது. உடனே முதல் எறும்பு சொன்னது, "நாம் அதை கொன்று விடுவோம்".
இரண்டாவது எறும்பு, "நாம் அதன் காலை உடைத்து விடுவோம்" என்று சொன்னது.
மூன்றாவது எறும்பு, "அதை நாம் நமது பாதையிலிருந்து தூக்கியெறிந்து விடுவோம்" என்றது.

கடைசியாக நான்காவது எறும்பு, "பாவம்! அதை நாம் விட்டு விடுவோம். ஏனென்றால், அது தனியாக வந்திருக்கிறது. நாம் நான்கு பேர் இருக்கிறோம்.
.
.

சனி, மார்ச் 20, 2010

கிராம மாணவர் நலனில் அக்கரையுள்ள தமிழக அரசு

தமிழ் படித்தால் போதுமா? ஆங்கிலம் தெரிந்தால் தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும். நகர மக்களுக்கு பல ஆங்கில வழி கல்வி நிலையங்கள் அதற்கு துணை புரிகின்றன. கிராம மக்கள் கதி? அதோ கதிதான். ஆங்கில வழி கல்வி கற்று வரும் நகர மாணவர்களின் அறிவுக்கு முன் போட்டி போட முடியாமல் திண்டாடுகிறார்கள். கிராம மாணவர்களின் அறிவை எப்படி வளர்ப்பது? அவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி கிடைப்பதன் மூலம் இது கைகூடும். ஆனால் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வசதி குறைவாக இருக்கும். என்ன தீர்வு? அரசே ஆங்கில வழி கல்வி கொடுப்பது தான் ஒரே வழி. இதை கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு ஆங்கில வழி பள்ளிகளை கிராம்ப்புறங்களில் தொடங்க உள்ளது. ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளதை தினமணி செய்தியில் இருந்து அறியலாம்.

தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.

இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.

இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


http://tinyurl.com/yh2lt6v

ஈரோடு மாவட்டத்தில் ​ இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்

ஈரோடு,​​ மார்ச்.​ 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.​ ​

இதுகுறித்து அவர் கூறியது:​ ஈரோடு மாவட்டம்,​​ நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம்,​​ அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது.​ இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.​ வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.​ ​

பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.​ ​ பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த ​ பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும்.​ ​ இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.​ ​

தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும்.​ தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும்.​ ​ இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.​ ​

நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.​ ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.​ இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.​ ​