வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

குத்திக் காட்டியது - என் தமிழ்!!!

மின்னஞ்சலில் வந்தது இங்கே இடுகையாக
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry '
தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks '
ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy
Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle'
என்று …!
 
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai'
என்று …!
 
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I
Love You' என்று …!
 
இரவில்
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள்
'அம்மா' என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்
                                           -- நம்மை போல் ஒரு தமிழன்

நான் தமிழறிவு நிறைந்தவன்

என்னடா சுய தம்பட்டமா இருக்கேன்னு பார்க்கறீங்களா. இல்லைங்க அது என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் சொன்னது. அவர் அப்படி சொன்னதை நம்ம வலையில் கூட ஏத்தலைன்னா எப்படி? இஃகி இஃகி.


எங்க அலுவலகத்தில் தமிழ் பேசறவங்களும் உண்டு (7 பேர் இருக்கோம்). எல்லா இடத்துலயும் தெலுங்குகாரங்க கண்டிப்பா இருப்பாங்க, பல இடங்களில் அவங்க மட்டும் இருப்பாங்க.

நாங்க தமிழில் தான் பேசிக்குவோம். அதாவது தமிழ்நாட்டுல பேசற மாதிரி தமிலிங்கிலிஸ். அரசியல் அது இதுன்னு பேசினாலும் அரசியல் தான் 70 விழுக்காடு இருக்கும். மீதி மத்த சங்கதிகளை பற்றி இருக்கும். இது எல்லா இடத்துலயும் நடக்கறதுதான அப்படிங்கிறிங்களா.


எங்களில் தமிழ் சொற்களை அதிகமா பயன்படுத்தறவன் நான். அதாவது செகண்ட் என்ற நற்தமிழ் சொல்லுக்கு பதிலா வினாடி என்ற சொல்லை நான் பயன்படுத்தி பேசுவேன். எப்பவும் அப்படி கிடையாது பல முறை நற்றமிழ் தான். ஆனா மத்தவங்க எப்பவும் நற்றமிழ் தான்.  இது ஒரு காட்டுதான் இது மாதிரி பல நற்றமிழ் சொற்களை நாங்கள் எங்கள் பேச்சில் புழங்குவோம். இது என்ன பெரிய மேட்டர் , இது நார்மல் தான அப்படிங்கிறிங்களா அதுவும் சரிதான்.


ஒரு முறை அந்த விளம்பரம் பார்த்தீங்களா அப்படின்னு கேட்டேன். எங்களில் மூத்தவர் நாம அட்வர்டைஸ்மெண்ட் என்று தான் சொல்லுவோம் இவன் பாருயா விளம்பரம் அப்படிங்கறான் என்று சொல்லிவிட்டு எங்க அலுவலகத்திலேயே நான் தான் தமிழறிவு நிறைந்தவன் என்று சொல்லிட்டார்.
எனக்கு ஒரே கூச்சமா போயிடுச்சி, அந்த கூச்சம் போக ஒரு இடுகை எழுதிட்டேன், எல்லாம் விளம்பரம் தான் இஃகி இஃகி. .



எங்க அலுவலகத்திலேயே நான் தான் தமிழறிவு நிறைந்தவன் என்று தான் தலைப்பு இருக்கனும் ஆனா தலைப்பு பெரிசா இருக்குமேன்னு தான் சின்னதா நான் தமிழறிவு நிறைந்தவன் என்று வைத்துவிட்டேன்.

புதன், ஆகஸ்ட் 18, 2010

உமாசங்கருக்கு நீதி கிடைக்குமா?

சுடுகாட்டு ஊழலை(யும்) சொல்லி ஆட்சிக்கு வந்தாச்சு. சுடுகாட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர் இப்ப திமுகவில்.  அரசியலில் இது மாதிரி நடக்கலைன்னா தான் வியப்புன்னு சொல்லறிங்களா.
சுடுகாட்டு ஊழலை வெளியில் கொண்டுவந்தவர் உமாசங்கர்.

அவர் திறமையானவர் நேர்மையானவர் என்று திமுக பெரிய தலைக்கு தெரிந்ததால் தான் திருவாரூர் மாவட்டம் உருவானப்ப அவரை அங்க மாவட்ட ஆட்சித்தலைவரா போட்டாங்க. தன் மகனுக்கும் ஒன்றுவிட்ட பேரனுக்கும் சண்டை மூண்டப்ப பேரனின் சுமங்கலி கேபிள் விசனுக்கு எதிராக உருவான அரசு கேபிளுக்கு திறமையானவர் வேண்டும் என்பதால் உமாசங்கர் அதன் தலைவராக்கப்பட்டார்.

முதல்வரின் மனைவிக்கு, மகனுக்கு வேண்டியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளார். (அவங்க மீது எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை)

பல இஆப அதிகாரிகளுக்கு (ஊழலில் ஈடுபட்டவங்க தான், இவருக்கு என்ன அவங்களோட வரப்பு தகராறா) எதிராகவும் நடவடிக்கை எடுக்க சொல்லி அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

இது போல் பல வகைகளில் ஊழலுக்கு எதிராக இருந்த காரணத்தினால் இப்போ பழி வாங்கப்படுகிறார். இது அரசு மீது பொது சனம் வைத்திருக்கும் நம்பிக்கையை (இருக்கும் கொஞ்சத்தையும்) சிதைப்பதாக உள்ளது.

அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் தவறான நடவடிக்கையை நீக்கிக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நீதிமன்றம் மூலமாகவோ தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேசிய அமைப்பு மூலமாகவாவது அவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என வேண்டுகிறேன்.

உங்கள் கண்டனத்தை இங்கும் பதிவு செய்யுங்கள்.

இது தொடர்பான இடுகைகள்

http://dharumi.blogspot.com/2010/08/424-complaint-filed-by-cumashankar-ias.html
http://dharumi.blogspot.com/2010/08/426-just-idea.html
http://dharumi.blogspot.com/2010/08/427.html

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

EAD கிடைப்பதில் தாமதம்.

அமெரிக்காவில் EAD எனப்படும் வேலை செய்ய அனுமதி அட்டை இருந்தால் விசா இல்லாமல் வேலை செய்யமுடியும் அதாவது பச்சை அட்டை மாதிரி ஆனால் பச்சை அட்டை கிடையாது. 
பச்சை அட்டைக்கு முன் இது கொடுப்பார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமாகும் போது இதை பயன்படுத்தி வேலைக்கு செல்லலாம். இது பற்றி விளக்கினால் நிறைய சொல்லவேண்டி இருக்கும் அதனால் இந்த சுருக்கம் போதும்.

நம்ம மக்கள் நிறைய பேர் இப்ப EAD-ல் வேலை செய்கிறார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமானால் EADஐ புதுபித்துக்கொள்ள வேண்டும். முன்பு ஆண்டுக்கு ஒரு முறை என்று இருந்ததை இரு ஆண்டுகளுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றம் கொண்டுவந்துள்ளார்கள். ஆனால் இரு ஆண்டுகளுக்கு புதுபிப்பார்கள் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஒரு ஆண்டு உறுதி.

EAD காலாவதி ஆவதற்குள் அடுத்த EAD வாங்கிவிட வேண்டும். வழக்கமா EADஐ புதுபிக்க விண்ணபித்தால் விரைவில் கிடைத்துவிடும். இவ்வளவு காலமா இப்படி தான் இருந்தது.

இப்ப புதுபிக்கும் EAD கிடைக்க தாமதமாகிறது. EAD இல்லாட்டி வேலை செய்யமுடியாது. 60 நாட்களுக்கு முன் விண்ணபித்தவர்கள் பலருக்கு இன்னும் புது EAD வராததால் அவர்கள் வேலை செய்யமுடியாத நிலை.சிலருக்கு 75 நாட்கள் ஆனதாக கேள்வி.

எனவே மக்களே நீங்களோ உங்கள் நண்பரோ EADஐ புதுபிப்பதாக இருந்தால் 120 நாட்களுக்கு முன் விண்ணபித்து விடுங்கள்.

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

நீதி கதை- நாயும் கழுதையும்

ஒரு ஊர்ல இருந்த சலைவைத்தொழிலாளி ஒரு நாயையும் கழுதையையும் வளர்த்து வந்தான். நாயிக்கு சலவைத் தொழிலாளி மேல் கோபம். என்னடான்னு கேக்கறீங்களா? அது சில முறை முதலாளி மேல் தொழிலாளி படுவானே அந்த மாதிரியான கோபம்.

எந்த மாதிரி?

கதை சொல்றப்ப குறுக்க பெரியமனுசனாட்டம் பேசக்கூடாது. சொன்னா இம் போட்டு கேட்டுக்கனும்.

ஒரு நாள் சலைவைத்தொழிலாளி நல்லா தூங்கி கிட்டு இருக்கறப்ப ஊர் சனத்து துணியை துவச்சு அவன் சேர்த்து வைச்சிருக்கற காசையெல்லாம் ஆட்டைய போடலாம்ன்னு ஒரு திருடன் வந்தான்.

அவனென்ன உங்களை மாதிரியா தினம் சம்பாதிக்கிற காச வங்கியில் போட.

திருடன கண்டா அதாவது நடு நசில தெரியாதவன் வீட்டுக்கு வந்தா நாய் என்ன பண்ணனுமோ அத பண்ணல.  ஏன்னா அதுக்கு தான் முதலாளி மேல் கோபமாச்சே. அதுக்காக கடமை தவறுவதா என்று கடுப்பான கழுதை நாமாவது முதலாளியை எழுப்புவோம்னு நினைச்சி கத்துச்சு. கழுதை கத்தற சத்தம் கேட்டு முதலாளி முழுச்சிட்டாரு. பார்த்தா நாய் சும்மா இருக்கு கழுதை கத்திக்கிட்டு இருக்கு, அவருக்கு சரியான கோவம். பின்ன நடு நசில நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கழுதை சத்துத்தால தூக்கம் கெட்டா கோவம் வருமா வராதா.  பக்கத்தில் கிடந்த கட்டைய எடுத்து கழுதை மண்டைல ஒரு போடு போட்டு கத்துன பாருன்னுட்டு தூங்கப்போயிட்டார். பாவம் கழுதை நல்லது பண்ண போயி மண்டைல அடி வாங்கினது தான் மிச்சம்.


நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்ம வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சாப்போதும்.

மேலுள்ள கதை முடிவு இப்படியும் இருக்கலாம்.

கழுதை சத்தம் கேட்டு முழிச்ச முதலாளி திருடன் ஓடுவதை பார்த்தார். நல்ல வேலை கழுதை கத்தினதால திருடன் ஓடிட்டான் நம்ம பணம் தப்பிச்சுதுன்னு கழுதை மேல் பாசம் அதிகமாயிடுச்சி. கழுதைக்கு நல்ல தீனியா போட்டார். கொஞ்சம் கொஞ்சமா நாயோட வேலையெல்லாத்தையும் கழுதை மேல கட்டிட்டார். பாவம் கழுதை. நாய் நல்லா தின்னுட்டு ஒரு வேலையும் செய்யாம இருந்தது.



நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்மல பாராட்டுரேன்னுட்டு அடுத்தவன் வேலையையும் நம்ம தலையிலேயே கட்டிடுவாங்க.

புதன், ஆகஸ்ட் 04, 2010

தமிழ்மணம் நட்சத்திரத்தை படிக்க முடிகிறதா?

உங்களால் தமிழ்மணம் நட்சத்திரத்தை (புதியமாதவி) படிக்க முடிகிறதா? என்னால் முடியவில்லை. வெத்து பக்கமா வருது. :-( , அவங்க பதிவை நச்சு நிரல் ஏதாவது பாதிச்சிருச்சோ??

.