வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, டிசம்பர் 28, 2007

பெனசிர் பூட்டோ கொலை - அலசல்

பெனசிர் பூட்டோ கொலைக்கான காரணம் என்ன? யார் காரணம்? என்பது பற்றி பல அலசல்கள் நடந்து கொண்டுள்ளன. மேற்கு நாடுகள் இதற்கு அல்கொய்தா அல்லது தாலிபான் காரணமாக இருக்கும் என்று சொல்லி அதைச்சார்ந்த காரணிகளை முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியை சார்ந்த தொண்டர்கள் இதற்கு முசாரப் தான் காரணம் என்று சொல்லி நாய் முசாரப் நாய் என்று திட்டுகிறார்கள். பெனசிரும் தான் இறந்தால் அதற்கு முசாரப் தான் பொறுப்பு என்று மின்அஞ்சல் வழியாக அமெரிக்க நிருபருக்கு முன்பே தெரிவித்துள்ளார். பல பேட்டிகளில் அரசில் உள்ள சில அதிகாரிகள் தன்னை கொல்ல முயல்வதாக சொல்லியுள்ளார்.


1. அரசு பேச்சாளர் பிரிகேடியர் சிமா (Cheema) பெனசிர் பூட்டோவின் தலை காரின் sun roofல் மோதியதால் இறந்ததாக கூறுகிறார்.
2. பெனசிருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முசாதிக் கான் shrapnel காயத்தினால் இறந்திருக்கலாம் என்கிறார்.
3. பூட்டோவின் பாதுகாப்பு ஆலோசகர் ரகுமான் மாலிக் பெனசிர் பூட்டோ கழுத்திலும் மார்பிலும் சுடப்பட்டதனால் இறந்ததாக கூறுகிறார்.

எத்தனை முரண்பாடு? ஏன் இந்த முரண்பாடு? எல்லாம் முசாரப்புக்கே வெளிச்சம்.

பெனசிர் பூட்டோ கொலையினால் முசாரப் அடையும் ஆதாயம் என்ன? என்று பார்த்தால் இக்கொலையில் அவரின் பங்கு புழப்படும்.

* பெனசிர் பூட்டோ இல்லாத நிலையில் மேற்கு நாடுகளுக்கு தற்போதைக்கு முசாரப்பை விட்டால் வேறு வழியில்லை.
* முசாரப்புக்கு மாற்றாக மேற்கு நாடுகள் பெனசிர் பூட்டோவை அதிகார மையத்துக்கு கொண்டு வர முயன்றது.
* மேற்கத்திய மிடையங்கள் பெனசிர் பூட்டோவுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்தது, இது மேற்கத்திய மிடையங்கள் புகழ் விரும்பி முசாரப்புக்கு பிடிக்காமல் போனது.
* முசாரப் விரும்பியபடி பெனசிர் அதிகார பரவல் ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கொள்ளாதது.
* கராச்சியில் தற்கொலை தாக்குதல் நடந்தும் பெனசிருக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க தவறியது திட்டமிட்ட செயலேயன்றி வேறல்ல.
* பாதுகாப்பு மிக்க பாசரை நகரான ராவல்பிண்டியில் இக்கொலை நடந்தது பெனசிருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை சொல்லாமல் சொல்லும்.

பெனசிர் பூட்டோ கொலையில் முசாரப்புக்கு நேரடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்தது.

செவ்வாய், செப்டம்பர் 18, 2007

Cyclone Typhoon Hurricane என்ன வேறுபாடு?

இப்ப சீனாவை Typhoon விப்கா (Wipha ) தாக்க வருவதால் சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து கிட்டத்தட்ட 16 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளனர்.

சரி Typhoon ன்னா என்ன? நம்ம ஊருல Cyclone வரும், அமெரிக்காவில் Hurricane வரும் இல்லையா அது போல சீனாவில் வரும் Cyclone க்கு பேரு Typhoon. அவ்வளவு தான்.

அதாவது அமெரிக்காவில் வரும் Cyclone க்கு பேரு Hurricane, சீனாவில் வரும் Cyclone க்கு பேரு Typhoon. அவ்வளவு தான். ஊருக்கு ஊர் ஓர் பேர்வைச்சுக்கிட்டு நம்மல குழப்பறாங்கப்பா. நாம மட்டும் தான் Cyclone ன Cyclone ன்னு சொல்லற ஆளுங்க. ;-))

இன்னும் குறிப்பா சொல்லனும்னா அட்லாண்டிக் & கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் Cyclone க்கு பேரு Hurricane. மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் Cyclone க்கு பேரு Typhoon. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் Cyclone க்கு பேரு Cyclone.

ஞாயிறு, செப்டம்பர் 16, 2007

மதுரை, நெல்லை தஞ்சை சென்னை ஈழ தமிழர்களே

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைத் தமிழ் எப்படிங்கண்ணே இருக்கும்? , தற்போதைய தமிழ் பல்கலைக்கழகம் உள்ள தஞ்சைத் தமிழ் எப்படி இருக்கும்? , பல நல்ல தமிழ் சொற்களை 'மெய்'யாலுமே புழங்கும் சென்னைத் தமிழ் எப்படி கீறும்?, நன்றாக கதைக்கும் ஈழத் தமிழ் எப்படி இருக்கும்? ஈழத் தமிழ் என்பது யாழ்பாணத் தமிழ் மட்டுமா? நாஞ்சில் தமிழ் நெல்லைத் தமிழுக்குள் வருமா? அல்லது இரண்டும் வேறு வேறா?

இதைப்பற்றிய குறிப்பு எங்காவது இருக்குமா? என்று தேடிப்பார்த்தேன். இதையெல்லாம் எங்கு போய் தேடுவது? கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிபீடியாவில் (www.ta.wikipedia.org) போய் தேடி பார்க்கவேண்டியதுதானே என்கிறீர்களா? நானும் அங்க போய் தேடி பார்த்தேன், என்ன கொடுமை, எல்லாம் வெத்து பக்கமா இருந்தது. ;-((

மதுரை, நெல்லை, நாஞ்சில், தஞ்சை, சென்னை, ஈழ தமிழர்கள் நிறைய பேர் வலை பதியராங்களே அவங்களாவது ஒரு 2 வரி எழுதக்கூடாதா?

விக்கிப்பீடியாவின் தமிழ் பற்றிய பக்கம்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#.E0.
AE.AA.E0.AF.87.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.
AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_-_.E0.AE.89.E0.AE.B0.E0.AF.88.E0.AE.A8.E0.AE.9F.
E0.AF.88.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_.E0.AE.
B5.E0.AF.87.E0.AE.B1.E0.AF.81.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.81.E0.AE.95.E0.AE.
B3.E0.AF.8D

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2007

Miss Teen USA South Carolina 2007 Answer

2007 ம் ஆண்டுக்கான 'Real Blonde' பரிசை தட்டிச்செல்பவர் "Miss Lauren Caitlin Upton".
நிறைய Blonde நையாண்டியை படித்திருக்கேன் இப்ப பார்த்தேன், நீங்களும் பார்த்து ரசிங்க. :-))

Miss Teen USA South Carolina 2007 Answer with Subtitles.


வியாழன், ஆகஸ்ட் 23, 2007

Apartment ல் இந்தியர்களின் எண்ணிக்கை

Apartment Complex ல் எவ்வளவு இந்தியர்கள் இருக்கறாங்கன்னு எப்படி கண்டுபிடிக்கறது?






ஒரு சுலப வழி இருக்கிறது.




அதாவது எவ்வளவு Honda and Toyota company வாகனங்கள் அந்த Apartment Complex ல் இருக்குதுன்னு கண்டுபிடிச்சா போதும். +\- 5 சத இந்தியர்கள் அங்க வசிப்பாங்க.

செவ்வாய், மே 15, 2007

இந்திய அமெரிக்கர்களிடம் பரபரப்பு.

நேற்று மாலையில் இருந்து இந்திய அமெரிக்கர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது, ஆளாளுக்கு தொலைபேசி மச்சி தெரியுமா செய்தி என்று செய்தியை பரிமாறிக்கொண்டார்கள்.

அதுவும் புதிதாக அமெரிக்காவிற்கு வந்தவர்களிடம் தான் இந்த பரபரப்பு காணப்பட்டது, பழைய ஆளுங்ககிட்ட சுத்தமா இல்லை. ஏன்னா அவங்களுக்கு இது தேவையில்லை. அதாவது பச்சை அட்டை.

இந்தியர், சீனர், பிலிப்பைன்ஸ்காரர், மெக்சிகோகாரர்களுக்கு மட்டும் அமெரிக்க அரசாங்கம் பச்சை அட்டை பெறுவதற்கான முன்னுருமை தேதியை (priority date) பின்னுக்கு தள்ளி வைத்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் பாடு மோசமாக இருந்தது.

நாளாக ஆக ஆக முன்னோக்கி செல்லாமல் தேதியானது பின்னோக்கி சென்றது. பல பேர் பச்சை அட்டைக்கு விண்ணப்பித்ததுடன் அதை மறந்து விட்டார்கள், அதாவது fire and forget வகை ஏவுகணை போல.

இப்போது 2001ல் இருந்த முன்னுருமை தேதியை 2003 June க்கு மாற்றியுள்ளார்கள், அதான் இந்த பரபரப்பு. 2 ஆண்டு ஏற்றம் என்றால் சும்மாவா? :-)

சனி, மே 12, 2007

1 2 3 - கொடுமை

ஒரு கருத்துக்கணிப்பு, இரண்டு வாரிசு, மூன்று கொலை என்று இந்தியன் எக்ஸ்பிரசில் பொருத்தமாக தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

திமுகவின் அழிவுக்கு காரணம் கருணாநிதியின் குடும்பமாக இருக்கப்போகிறது. இதை தான் காலத்தின் போக்கு என்பதோ? தனது மகனின் அரியணைக்கு போட்டியாக வைகோ இருப்பார் என்பதால் அவரை கட்சியில் இருந்து துரத்திய கருணாநிதி இப்போது என்ன செய்யப்போகிறார்? முன்பே ஸ்டாலினின் ஆதரவாளர் என்று மூத்த திமுக ஆளான முன்னால் அமைச்சர் தா.கிருட்டிணனை அழகிரி கொலை செய்தபோதே இவர் கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிள்ளை பாசம் தடுத்தது, இப்போது அதே பிள்ளையால் குடும்பத்துக்குள்ளேயே சிக்கல், ஆனால் இவர்களின் யார் வாரிசு என்ற சண்டையில் 3 அப்பாவி உயிர்கள் பலி போனது தான் கொடுமை.

கருத்து கணிப்பை வெளியிட வேண்டாம் என்று சொன்னேன் கேட்காமல் தினகரன் வெளியிட்டுவிட்டார்கள் என்று கருணாநிதி சொல்கிறார். பிரச்சனை என்னவென்றால் தினகரன் கருத்து கணிப்பை வெளியிட்டது அல்ல, தான் முதல்வர் மகன் என்ற தைரியத்தில் அழகிரி செய்த அடாவடியும் அவரின் தொண்டரடிப்பொடி செய்த அட்டூழியங்களுமே.

கருத்துக்கணிப்பு பிடிக்கவில்லை என்றால் கண்டன அறிக்கை விடலாம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம், தந்தையிடம் முறையிடலாம், அல்லது சன் தொலைக்காட்சி மதுரையில் தெரியாமல் தடை பண்ணலாம் ( இது கொஞ்சம் சிரமமான செயல் தான் ) , வெளியே தெரியாமல் குடும்பத்திற்குள்ளேயே சமரசம் பேசி அடுத்த கருத்து கணிப்பில் அழகிரியின் ஆதரவு பெருகிவிட்டதாக காட்டலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் ஏன் அடியாட்களை விட்டு அட்டூழியம் செய்ய வேண்டும்? அதிகாரபூர்வமாக கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத போதே நிலைமை இப்படியென்றால் அதிகாரபூர்வமாக கட்சி பொறுப்பு வகித்தால் என்ன செய்வாறோ? எல்லாம் கருணாநிதிக்கே வெளிச்சம்.

இவர்கள் செய்ததிற்கும் அதிமுக காரர்கள் தர்மபுரியில் பேருந்தை எரித்து மாணவிகளை கொன்றதிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

இத்தகராறு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வந்த போதும் காவல் துறை என்ன செய்வதென்று தெரியாமல் கை கட்டி கொலைக்கு சாட்சியாக இருந்துள்ளார்கள். நினைத்துப்பாருங்கள் ஒரு சாதாரண மனிதனின் நிலையை?

இப்படி பட்ட சூழ்நிலையில் மதுரையில் இடைத்தேர்தல் வர இருக்கிறது, அழகிரியின் இந்த அடாவடி தேர்தலில் எதிரொலித்தால் மட்டுமே கருணாநிதி அவர்கள் கொஞ்சமாவது நடவடிக்கை எடுப்பார். பார்க்கலாம் மதுரை மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று.

வியாழன், ஏப்ரல் 12, 2007

முதலை பயங்கரம் - எச்சரிக்கை

எச்சரிக்கை:- படங்கள் கோரமானவை..

தைவான் நாட்டின் கோசியுங் ( Kaohsiung ) நகர முதலைப்பண்ணையில் இக்கொடூரம் நடந்துள்ளது. அப்பண்ணையின் விலங்கு மருத்துவர் 17 வயதுடைய நைல் நதி முதலைக்கு மருத்துவம் பார்க்கும் போது முதலையானது அவரது கையை கடித்து எடுத்து விட்டது. நல்ல வேலையாக அவர் தப்பிவிட்டார். துண்டான கையை துப்பாக்கியால் முதலையை சுட்டு மீட்டுள்ளனர். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவரது கையை ஒட்டியுள்ளார்கள்.

துப்பாக்கியால் சுட்டும் முதலை மீது ஒரு குண்டும் படவில்லை ( சுட்ட ஆளு அப்படி சுட்டு இருக்கார் :-(( ). வெடிச்சத்தத்தினால் முதலை அதிர்ச்சியாகி வாயை திறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.


முதலையிடம் கையை கொடுத்தவர் பெயர் சேங்-பொ-யு (Chang Po-yu)





முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலைக்கு கையை கொடுத்த சேங்-பொ-யு (Chang Po-yu)

சனி, மார்ச் 31, 2007

உலகின் மாபெரும் நிறுவனங்கள்

போர்ப்ஸ் இதழ் உலக அளவில் பெரிய 2000 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. விற்பனை, சந்தை மதிப்பு, சொத்து, லாபம் என்ற காரணிகளை கொண்டு எது பெரிய நிறுவனம் என்பதை இவர்கள் கணித்துள்ளார்கள்.

வங்கி & எண்ணெய் நிறுவனங்கள் தான் பணம் கொழிக்கிற நிறுவனங்களா இருக்கு. Microsoft 66 வது இடத்திலயும், Google 289 வது இடத்திலயும், நம்ம மிட்டலின் Archelor Mittal 72 வது இடத்திலயும் இருக்கு.

உலக தர வரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள நிறுவனங்களை இந்த அட்டவணையில் காணலாம்.





சரி எந்தெந்த இந்திய நிறுவனங்கள் 2000 பட்டியலில் இருக்குதுன்னு தெரியனுமா? இந்த அட்டவணையை பாருங்க. 34 இந்திய நிறுவனங்கள் 2000 பட்டியலில் இருக்கு.





தொடர்புடைய சுட்டிகள் :

http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000_Rank.html


http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000-India_10Rank.html

திங்கள், மார்ச் 26, 2007

2006ன் உலகின் பெரிய விமான நிலையங்கள்

உலகின் பெரிய விமான நிலையங்கள் அப்படின்னா பரப்பளவில் பெரியதுன்னு நினைச்சுக்காதிங்க 2006ல் அதிக பயணிகளை கையாண்ட நிலையங்களை தான் பெரியதுன்னு சொல்றேன். Airports Council International இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளது.


1. அட்லாண்டாவின் - ஹார்ட்ஸ் பீல்ட் ஜாக்சன் ( Hartsfield-Jackson ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 84,846,639 .

2. சிகாகோவின் - ஓ கரே ( O'Hare ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 76,248,911 .

3. லண்டனின் ஹீத்ரோ ( Heathrow ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 67,530,223 .

4. டோக்கியோவின் ஹனெடா ( Haneda ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 65,225,795 .

5. லாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 61,048,552 .

6. டல்லஸ் & போர்ட் வொர்த் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 61,048,552 .

7. பாரிஸ் - சார்லஸ் டே கவ்லே ( Charles de Gaulle ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 56,808,967 .

8. ஜெர்மனியின் பிராங்பர்ட் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 52,810,683 .

9. சீனாவின் பெய்ஜிங் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 48,501,102 .

10. டென்வர் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 47,324,844 .

11. லாஸ் வேகாஸ் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 46,194,882 .

12. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam Schiphol Airport) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 46,088,221 .

13. ஸ்பெயினின் மாட்ரிட் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 45,500,489 .

14. ஹாங்காங் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 44,020,000 .

15. தாய்லாந்தின் பாங்காக் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 42,799,532 .


2006ன் சிறந்த விமான நிலையத்துக்கான பரிசை கண்கானிப்பு அமைப்பான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) அறிவித்துள்ளது.

அது எதுன்னு சொல்லுங்க?

அது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தான். 2ம், 3ம் இடங்கள் ஹாங்காங் & ஜெர்மனியின் முனிச்சுக்கு.



சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 35,033,083 மில்லியன், இது 22வது இடத்தில் உள்ளது.

அதிக சரக்குகளை கையாண்ட விமான நிலையங்கள் :

1. மெப்சிஸ் - இது FedEx ன் மையம், முதல் இடத்தை பிடித்த காரணம் தெரியுத? ;) - கையாண்ட சரக்கு 3,692,205 டன்

2. ஹாங்காங் - கையாண்ட சரக்கு 3,608,789 டன்

3. அங்கோர்ச் - கையாண்ட சரக்கு 2,803,792 டன்

4. சியோல் - கையாண்ட சரக்கு 2,336,571 டன்

5. டோக்கியோவின் நரிடா (Narita- NRT) - கையாண்ட சரக்கு 2,280,028 டன்

மேலதிக செய்திகளுக்கு

http://www.airports.org/aci/aci/file/Press%20Releases/2007_PRs/PR060307_PrelimResults2006.pdf

http://www.forbes.com/2007/03/22/worlds-busiest-airports-biz-logistics-cx_rm_0322airports.html



சனி, மார்ச் 24, 2007

300 ஆல் 15 கடத்தப்பட்டதா ?

பிரிட்டானிய கப்பற்படை வீரர்கள் 15 பேரை ஆயுதம் தாங்கிய இரானிய படைகள் கைது செய்துள்ளது.


ஈராக்கின் கடல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரானிய படைகள் தனது கடற்படை வீரர்களை கைது செய்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதற்காக தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியுள்ளது.

ஆனால் இரான், பிரிட்டானிய கடற்படை வீரர்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததனாலயே கைது செய்ததாக கூறியுள்ளது.

எது உண்மை ? யாம் அறியோம் பராபரமே.

ஏன் இந்த கைது நடவடிக்கை?

1. யுரேனிய செறிவூட்டல் தொடர்பாக இரானுக்கு எதிராக ஐ.நா மூலம் தடை கொண்டு வருவதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மும்முரமாக உள்ளதால்.

2. இரானிய கடற்பகுதியில் அத்துமீறி பிரிட்டானியர்கள் நுழைந்ததனால்.

3. அமெரிக்க Hollywood 300 படம், இரானிய / பெர்சிய மக்களை கேவலமாக சித்தரித்ததனால்.



என்னைப்பொருத்தவரை 300 படமே இதற்கு காரணம் என்பேன். 300 பேர் கொண்ட ஸ்பார்ட்டா நகர படை மாபெரும் பெர்சிய படையை தோற்கடித்த வரலாற்று நிகழ்வு தான் படம். அந்த படத்தில் ரொம்ப கேவலமாக பெர்சிய (தற்போதய இரான்) படைகளை / மக்களை காட்டியிருப்பர்கள்.

கொசுறு:

மதன் ஸ்பார்ட்டா பெர்சிய சண்டையை வைத்து ஒரு தொடர் எழுத போறார் தலைப்பு - "போனாங்க தோத்தாங்க" , இது தொடர்பாக ஏகப்பட்ட நூல்கள் உள்ளன, மதன் 90 சத நூற்களை படித்து குறிப்பெடுத்து விட்டார் 10 சத நூற்கள் தான் பாக்கி, தோத்து போன பெர்சிய மன்னனே இது தொடர்பாக ஒரு நூல் எழுதி அதில் ஸ்பார்ட்டா மக்களின் திறமையை புகழ்ந்திருப்பார். போதாதுக்கு அற்புதமான graphics உடன் படமே வந்தாச்சு. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அதிலிருந்து ஒரு படத்தை போடுவதாக உள்ளார்கள்


ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் இரானியர்களை கோபப்படுத்தியுள்ளது, அதனால் தங்களது வீரத்தை காட்ட வேண்டி பிரிட்டானிய வீரர்கள் 15 பேரை கோழி அமுக்கர மாதிரி அமுக்கிட்டாங்க.

பின்ன இரானியனா கொக்கா...

ஸ்பார்ட்டா நாட்டு படையை பிடிக்காம வெள்ளைக்காரனை புடிச்சு என்ன சாதிக்கப்போறாங்க அப்படின்னு கேக்கறீங்களா? மதனின் போனாங்க தோத்தாங்க தொடரில் இது தொடர்பாகவும் அவர் விளக்கப்போறார்.

அதுவரைக்கும் பொறுக்க முடியாதவர்களுக்கு இப்ப ஸ்பார்ட்டா என்ற நாடே இல்லை, அது பழங்காலத்து கிரேக்க நாடுகளில் ஒன்று.

வியாழன், மார்ச் 22, 2007

பாப் ஊல்மர் கொலை செய்யப்பட்டார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் 58 வயதான பாப் ஊல்மர் கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பதற்கான தடயம் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஜமைக்கா நாட்டு காவல் துறை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அவர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி தென்படுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.


முன்பு முகத்தை அழுத்தியதால் அவர் கழுத்து எழும்பு முறிந்துள்ளதாக ( gland க்கு அருகில் ) அதிகாரபூர்வமல்லாத செய்தி வந்தது.


ஜமைக்காவின் காவல் துறை துணை ஆணையர் மார்க் சீல்ட்ஸ் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றார். அவர்களை உடனடியாக சரணடையும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


பாப் ஊல்மரின் மரணம் தொடர்பாக பாகிஸ்தான் அணியினரிடம் விசாரணை நடத்திய ஜமைக்கா காவல் துறை அவைகளின் கைரேகையையும் சேகரித்துள்ளது.

இக்கொலையை கிரிக்கெட் சூதாடிகள் செய்திருக்கலாம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது. இக்கொலை கிரிக்கெட் விளையாட்டின் நீக்க முடியாத கரை என்பதை உறுதியாக கூற முடியும்.

வெள்ளி, மார்ச் 02, 2007

சனிக்கிழமை முழு சந்திர கிரகணம்.

3 ஆண்டுகளுக்கு பிறகு நாளை சனிக்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. அப்போழுது வெண்ணிலா செந்நிலாவாக காட்சியளிக்கும். இதை அனைவரும் எந்தவித சிறப்பு கருவிகளும் இன்றி வெறும் கண்ணாலயே பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பது பாதுகாப்பானது, அதனால் கவலையில்லாமல் வெறும் கண்ணால் பார்க்கலாம். பைனாகுலர் மூலம் பார்த்தால் இன்னும் சிறப்பாக காட்சி தெரியும்.

கிரகணம் தொடங்கும் நேரம் - 2018 GMT
முழு கிரகணம் தெரியும் நேரம் - 2244 TO 2358 GMT.



மேலுள்ளது எவ்வாறு கிரகணம் உருவாகிறது என்பதை காட்டும் படம்..


ஐரோப்பா , மத்திய கிழக்கு & ஆப்பிரிக்காவில் உள்ளவர்களுக்கு முழுதாக இது தெரியும். இந்தியா & அமெரிக்க, கனடா கிழக்கு கரை மக்களுக்கு முழுதாக இல்லாவிட்டாலும் பெரும்பகுதி தெரியும். நியுசிலாந்து, கிழக்கு ஆஸ்திரேலியா பகுதி மக்களுக்கு சுத்தமா ஒன்னும் தெரியாது.


மேலுள்ளது எங்கு கிரகணம் தெரியும் என்பதை காட்டும் படம்.









புதன், பிப்ரவரி 28, 2007

செயலலிதா - லட்சுமி மிட்டல் ஒப்பீடு

நண்பனுடன் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருந்தபோது பணக்கார ஆசாமிகளை பற்றிய பேச்சு வந்தது. இந்தியாவிலேயே பெரிய பணக்காரர் அம்பானியா, டாடாவா என்று வந்தபோது நான் அம்பானி சகோதரர்கள் என்க அவன் டாடா என்றான்.

டாடா பழைய ஆளு, அம்பானி தான் இப்ப பெரிய பணக்காரர் என்றேன் நான், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. எங்க சண்டைய யாராவது தீர்த்து வைங்கப்பா...

சரி யார் பணக்கார இந்தியர் என்ற கேள்வி வந்த போது இருவரும் இரும்பு ஆலை முதலாளி மார்வாடி லட்சுமி மிட்டல் என்பதை ஒத்துக்கொண்டோம்.

இந்த வெட்டி அரட்டைல இருந்து சேட்டும் சேக்கும் தான் பணத்துல குளிக்கிற ஆளுங்கன்னு புரிந்தது.

நம்ம சேட்டு லட்சுமி மிட்டலை பாராட்டணும், உலகின் 5 வது பெரிய பணக்காரரா இருந்தாலும் , இங்கிலாந்தில் வசித்தாலும் இன்னும் இந்திய கடவுச்சீட்டை (Passport) தான் வைத்துள்ளார். நாமல்லாம் அப்படியா? எப்படா குடியுரிமை கிடைக்கும்ன்னு அல்லாடறோம்.

முன்னாள் முதல்வர் ஏழைகளின் தலைவி, புரட்சித்தலைவி வெற்றிச்செல்வி ( செயலலிதா தாங்க) க்கும் லட்சுமி மிட்டலுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது என்றான். எனக்கு ஆச்சரியம் என்னன்னு சொல்லுடான்னு கேட்டேன்.

இரண்டு பேரும் அவங்க பசங்களுக்கு உலகம் வியக்கற அளவு மா மா மா பெரும் அளவில் திருமணம் நடத்துனாங்க அந்த விதத்தில் இரண்டு பேருக்கும் ஒற்றுமை என்றான்.

நான் கடுப்பாயிட்டேன் , டேய் லட்சுமி மிட்டல் அவரு காசை போட்டு திருமணம் நடத்தினார், முன்னாள் முதல்வர் வெற்றிச்செல்வி நம்ம காசை ( அதாங்க நம்ம அரசாங்கம்) வைத்து திருமணம் நடத்தினார், இரண்டையும் ஒப்பிடாதன்னு திட்டினேன்.

நீங்களே சொல்லுங்க செயலலிதாவே அந்த திருமணத்தை மறக்க நினைக்கறப்போ இவன் அதை வைத்து ஒப்பீடெல்லாம் நடத்தினா நல்லா இருக்குங்களா?

புதன், ஜனவரி 03, 2007

விமானம் எப்படி பறக்கிறது? ஒரு விளக்கம்

விமானம் எப்படி பறக்கிறது? என்று கல்லூரி காவலாளிக்கு ஒரு ஐயம் வந்துவிட்டது. என் நண்பனை பார்த்து எப்படிப்பா ஏரோபிளேன் வானத்துல பறக்குது? அங்க தான் ரோடு இல்லையே என்று கேட்டார்.

என் நண்பன் அவருக்கு விளக்க ஆரம்பித்து விட்டான். இவ்வளவு உயரத்தில் பறக்கனும் அதை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அவர்களுக்கு சொல்லும் என்று விலாவாரியாக எடுத்துச்சொன்னான். பாவம் அவர் ஒன்னும் புரியாம விழிச்சார். அதை கவனித்த நான் உடனே களத்தில் குதித்தேன். தள்ளுடா உனக்கு சொல்ல தெரியலை என்று சொல்லிவிட்டு நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்.

அதலாம் இல்லிங்க மெட்ராசுல இருந்து பிளேன் கிளம்புனதும் 10000 அடி உயரத்துக்கு போயிடும் அங்கயே அது நிக்கும், பூமி சுத்துதா? சுத்தி அமெரிக்காவுக்கு கீழ பிளேன் வந்ததும் போன் போட்டு சொன்னதும் பிளேன் கீழ இறங்கி வந்துடும் என்று சொன்னேன்.

என் விளக்கம் அவருக்கு புரிந்துவிட்டது. அதான பார்த்தேன் பிளேன் எப்படி ரோடு இல்லாம ஓடும்? தம்பி சரியா சொன்னப்பா என் சந்தேகம் தீர்ந்து போச்சுன்னு சொல்லி எனக்கு நன்றி சொன்னார்.

அவர் எனக்கு நன்றி சொன்னதை கேட்ட நண்பன் நொந்து போயிட்டான், இப்பவும் என்கிட்ட பேசும் போது என்னடா பிளேன் பறக்கற கதையை இன்னும் எத்தனை பேருக்கு சொன்ன அப்படின்னு பொறாமைல கேட்பான். ;-)

இது என் அனுபவம் இல்லை, இது நண்பரின் அனுபவம் ;-) சொன்னார் இங்க போட்டாச்சு.