வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, மே 06, 2006

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.


               தேர்தல் வந்தாலும் வந்தது அரசியல் கட்சிகளின் பரபரப்பை தூக்கி சாப்பிடற மாதிரி நம் வலைபதிவர்கள் தூள் கிளப்பிட்டாங்க. வலைப்பதிவு மக்களோட சிறப்பு எல்லோரும் பட்டதாரிகள். திமுக, அதிமுக, தேதிமுக, மதிமுக, பாமக, வி.சிறுத்தைகள், பாசக என்று எல்லோரையும் ஆதரித்தும் எதிர்த்தும் காரசாரமான பதிவுகள். பினாத்தல் சுரேஷ் அடுத்த முறை "கொள்கை டிராக்கரில்" வலைப்பதிவில் எப்படி எழுதுவார்கள் என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

                மே 8 உடன் இதற்கு முடிவு வரப்போகிறது. ( அப்படின்னு நீ சொல்லலாம் நாங்க சொல்லலையே என்று சிலர் சொல்வது கேட்குது. ;-))

               இப்படி விலாவாரியா காரசாரமா சமூக, சாதி, மத, இன, கட்சி அக்கறையுடன் தேர்தலை அலசுன எத்தனை பேர் இந்த தேர்தலில் வாக்கு போட போறாங்க?

               படிச்சவன் வாக்கு போட போகமாட்டான். அரசியல்வாதிகளே நாட்டின் சீர்கேட்டுக்கு காரணம் இந்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாடு உருப்படாது என்று வாய் கிழிய வெட்டி வியாக்கானம் பேசுபவன் வாக்கு போட போகமாட்டான். பணத்துக்காக வாக்கு போடுபவர்கள் இருப்பதால் தான் நாடு உருப்படாமல் இருக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும் என்று வியாக்கானம் பேசுபவன் வாக்கு போட போகமாட்டான். அரசியல்வாதிகள் படிப்புக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டார்கள் படிக்காத மக்கள் நிறைய இருந்தாதான் அவங்க பொழப்பு ஓடும்ன்னு சொல்ற படித்தவன் வாக்கு போட போகமாட்டான்.

               இந்த மாதிரி படித்தவர்களை பற்றிய உண்மை குற்றச்சாட்டுகள் பல உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதனால் வலைபதிவர்களே நீங்கள் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகிவிடாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

               வாய்ப்பு இருந்தும் வாக்கு போடாமல் இருப்பது மாபெரும் தவறு என்பதை குறைந்தபச்சம் வலைப்பதிவர்களாவது உணர்ந்து வாக்கு போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

               வாக்கு பதிவு நிறைய இருந்தால் தான் மாற்றம் வரும், ஆட்சியில் இருக்கும் அரசுக்கும் பயம் (கொஞ்சமாவது) வந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும்.

               நான் வெளிநாட்டில் வசிப்பதால் என்னால் வாக்கு போடமுடியாது ஆனா என் பெற்றோர்களை வாக்கு போடசொல்லுவேன். ( என் வாக்கையல்ல அவங்க வாக்கை ;-) ) என் வாக்கையும் யாராவது போட்டு விடுவார்கள் என்பது வேற கதை.

               வாக்கு போடமுடியாத சூழலில் நீங்கள் இருந்தால் உங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகளை வாக்கு போட சொல்லுங்கள். நம்மால் முடிந்த சனநாயக கடமை.

புதன், மே 03, 2006

கருத்துக்கணிப்பு - திமுக 6.12% வாக்குகள் முன்னனி

                கருத்துக்கணிப்பு எல்லாம் சரியாக கணிப்பதில்லை என்பது என் கணிப்பு . 2001ல் Exit Poll கூட தவறாக வந்ததை மறக்ககூடாது.

                தற்போது தமிழ்நாட்டில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒரு வேடிக்கையான வேதனை. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரங்கற கதையா ஊடகத்துறையில் ( லாப நோக்கோடு )இருப்பவர்கள் எல்லாம் கருத்துகணிப்பு நடத்துறாங்க. சரி அதையாவது முறையா செய்யறாங்களா என்றால் அதுவும் இல்லை. கொஞ்சம் கூட பேனா கூசாமல் கருத்துகணிப்பு என்ற பெயரில் தனது கருத்துக்களை மக்களிடம்(வாசகர்களிடம்) திணிக்கிறார்கள். கெட்டிக்காரன் புழுகு எத்தனை நாளைக்கு ? என்பது அவர்களுக்கு தெரிந்தாலும் இந்த வகையில் ஒரு பொய்யான தகவலை பரப்பி மக்களை குழப்புவது & திசை திருப்புவது தான் அவர்கள் குறிக்கோள். இது தான் சனநாயகத்தின் நாலாவது தூணின் வேலை என்னும் போது சனநாயகத்தின் நிலைமை நமக்கு சொல்லாமலே புரியும். ஒரு பத்திரிக்கை கூட சார்பு தெரியாம எழுதுவது இல்லை. ( விகடனை பற்றி எனக்கு தெரியாது ).

                வலைபூக்களும் ஓரு ஊடகமே, வலைப்பதிவன் என்ற முறையில் நானும் ஒரு கருத்து கணிப்பு நடத்துவதாக முடிவு கட்டினேன் ( ஊரோடு / ஊடகத்தோடு ஒத்து வாழ் ) அதனால் வந்ததே இந்த பதிவு. ;)

                இப்போ 2006 சட்டசபை தேர்தல் குறித்த என் கருத்துகணிப்பு. ( என் ஊகம் )


  •                 தேர்தலில் வாக்கு பதிவு 60% குறைவாக இருந்தால் கூட்டணியே வெற்றியை நிர்ணயிக்கும். அந்த வகையில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெரும்.

  •                 தேர்தலில் வாக்கு பதிவு 60% அதிகமாக இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும். வெற்றிக்கு திமுக கூட்டணி கடுமையாக உழைக்க வேண்டும்.

  •                 தேர்தலில் வாக்கு பதிவு 70% அதிகமாக இருந்தால் தேதிமுக (விஜயகாந்த்) பெருமளவில் வாக்குகளை பெறும். வெற்றிக்கு திமுக கூட்டணி மிக கடுமையாக உழைக்க வேண்டும்.


  •                 தேதிமுக, திமுக கூட்டணி வாக்குகளை விட அதிமுக வாக்குகளையே அதிகம் பிரிக்ககூடும். காரணம் விஜயகாந்திற்கு நகரங்களை விட கிராமங்களில் செல்வாக்கு (ரசிகர்கள்) அதிகம்.


                சும்மா ஊகமா சொன்னா மக்கள் ஒத்துக்க மாட்டாங்க, அதனால நான் தமிழத்தின் பல பகுதி மக்களிடம் கருத்து கேட்டு அதன் முடிவை உங்களுக்கு இங்கு அளிக்கிறேன்.


                                திமுக                - 42.85

                                அதிமுக            - 36.73

                                தேதிமுக          - 10.20

                                பாசக                  - 6.12

                                மற்றவர்கள் - 4.08


                திமுக, அதிமுக வெற்றியை விட தேதிமுக எவ்வளவு வாக்குகள் பெறப்போகிறார்கள் என்பதே இத்தேர்தலின் சிறப்பு அம்சம்.

வியாழன், ஏப்ரல் 27, 2006

அங்கிள், ஆன்ட்டி, அ(+க்)சின் உறவு முறைகள்



               தமிழில் உறவுகளுக்கு ஏராளமான பெயர்கள் உள்ளன. அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, மாமா, அத்தை, மச்சான், மச்சினன், மாப்பிள்ளை, பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா, சகலை, அண்ணி, கொழுந்தியா, கொழுந்தனார், நங்கியா, நாத்தனார்,மாமனார், மாமியார், அம்மாயி, அப்புச்சி, பாட்டன், பாட்டியா, கணவன், மனைவி, சக்களத்தி, ஓப்பிடியா, ஓரகத்தி, பொறந்தவன், பொறந்தவள் ...... உறவின் பெயரைக்கொண்டு உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதை படிக்கிறவங்க எவ்வளவு பேர் இந்த உறவுமுறைப்பெயர்களை தெரிஞ்சவங்க என்று பார்த்தா குறைவா தான் இருப்பாங்க. கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் வசித்தவர்களுக்கு இந்த உறவு முறை பெயர்கள் தெரிந்திருக்கும் மற்றும் புழங்கியிருப்பார்கள் ஆனால் பெரு நகரத்தில் வசித்தவர்களுக்கு இப்பெயர்கள் தெரிந்திருப்பது கடினம்.

              இப்ப நகரமயமாதல் அதிகரித்து கிராமங்களில் வசிப்போரின் என்ணிக்கை குறைந்து வருவது எல்லோருக்கும் தெரியும். இப்படி நகரங்களுக்கு குடியேரும் கிராமத்தினரின் வாரிசுகள் தமிழ் உறவுமுறை பெயர்களை புழங்கும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இப்படி தமிழ் உறவுமுறை சொற்கள் என்பது வயசானவர்கள் புழங்கும் சொற்களாக மாறி இன்னும் சிறிது காலத்தில் மறைந்துவிடும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

              இந்த பதிவு போட காரணம் சிறு வயதில் என்கூட ஒன்னா ஊர்சுத்துன என் நண்பன் என்கிட்ட அவனோட மாமா அத்தையை அங்கிள் ஆன்ட்டின்னான் பாருங்க அது தான். அவனை ரெண்டு வாங்கு வாங்கிட்டேன் அப்புறம் தான் மனசு ஆறுதல் அடைந்தது.

              அப்புறம் கவனிச்சா தமிழ்கூறும் நல்லுலகின் பெரும்பான்மையான மக்கள் மம்மி டாடியிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று அங்கிள் ஆன்ட்டி யின் ஆதிக்கத்துக்குள் இருப்பது தெரிய வந்தது. இதுல கொடுமை என்னன்னா சில தமிழ் ஆர்வலர்களும் ( அம்மாவை மம்மின்னும் அப்பாவை டாடின்னும் கூப்பிடாதவர்கள் ) "சொல்லுங்க ஆன்ட்டி", "சரிங்க அங்கிள்" என்பது தான்.

              என் நண்பரோட மனைவிடம் யாருங்க இவரு என்று அவங்ககூட வந்தவரை பற்றி கேட்டேன், என்னோட "கசின்" அப்படின்னாங்க. நானும் கசின்னு மொட்டையா சொன்னா எப்படிங்க எந்த முறையில் கசின் அப்படின்னு கேட்டேன் அவங்க விட்டாங்களா என் "அன்கிளோட சன்" அப்படின்னாங்க, நான் அன்கிள்ன்னா? மாமாவா? சித்தப்பாவா?, பெரியப்பாவா? என்று கேட்டேன், என் பெரியப்பாவோட பையன் அப்படின்னாங்க. எனக்கு அப்பாடான்னு இருந்தது. ( அவங்களுக்கும் தான் என்று சொல்லத்தேவையிலை :-) ) .

              அவங்க "என் பெரியப்பாவின் பையன்" அப்படின்னு சொல்லி இருந்தா பளிச்சுன்னு புரிந்து இருக்கும் "அன்கிள்ன்னு" சொன்னதால எனக்கு சரியான உறவுமுறை தெரியாம போக ஏகப்பட்ட கேள்வி கேட்டும்படி ஆயிடுச்சு. இந்த மாதிரி கேட்டாதான் குறைந்தபச்சம் என்னிடமாவது அங்கிள், ஆன்ட்டி, கசின் என்று சொல்லாம தமிழில் உறவுமுறைகளை சொல்லுவாங்க என்பது எண்ணம்.

              என் நண்பரோட அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன், அவரு பிரதர் இன் லா, ஸிஸ்டர் இன் லா, பாதர் இன் லா, மதர் இன் லா அப்படின்னு ஒரே இன் லா கதையா நிறையா பேசினார் எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை அவரு பெரியவர் நான் ஏதாவது சொல்லப்போயி அவரு மனசு புண்பட்டிருச்சுன்னா என்ன பண்றது? இருந்தாலும் நம்ம வாயி சும்மா இருக்குமா? ஒரு நாள் என்னங்க பாரிஸ்டர் இன் லா கணக்கா பிரத்ர் இன் லா, ஸிஸ்டர் இன் லான்னு சொல்லறீங்க தமிழ்ல உறவுமுறையை சொல்லுங்க நமக்கு இந்த இன் லா முறையில் சொன்னீங்கன்னா என்ன சொல்லறீங்கன்னு புரியறதுக்கு கொஞ்சம் நேரமாயிடுது, நீங்க தமிழ்ல சொன்னாதானே எங்களுக்கும் உறவுமுறை பேரெல்லாம் தெரியும் அப்படின்னேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஆல் ரைட் தம்பி அப்படீன்னார். அதுக்கப்புறம் அவர் இந்த இன் லா கதையை என்னிடம் பேசுவதையே விட்டுவிட்டார்.

              நம்ம மொழியை நாம் பேசாவிட்டால் யார் பேசுவார்கள்? உங்களை தமிழ் தெரியாத ஆளுங்ககிட்ட தமிழ் பேச சொல்லலை, தமிழ் தெரிந்த ஆளுங்ககிட்ட தமிழில் பேசங்க. அதனால யாரும் உங்களை இங்கிலிஸ் தெரியாதவன் அதாவது முட்டாள்ன்னு நினைக்க மாட்டார்கள். வெள்ளைக்காரன் தமிழில் பேசுனாதான் நானும் பேசுவேன் என்று அடம் பிடிக்ககூடாது, அழிச்சாட்டியம் பண்ணகூடாது.

              சிறு தகவல் / கொசுறு : - வெள்ளைக்காரன் மாமான்னு சொன்னா அது அம்மாவை குறிக்கும், அதே மாதிரி மாமின்னு சொன்னாலும் அம்மாவைதான் குறிக்கும்.
அமெரிக்காவில் இங்கிலிஸ் தெரியாமல் காலத்தை ஓட்டிடலாம் ( உங்களை யாரும் முட்டாள்ன்னு நினைக்கமாட்டார்கள்) ஆனா தாய் தமிழ் நாட்டில் இங்கிலிஸ் தெரியாதுன்னா கேவலமா போயிடும் ( என்ன தான் அறிவாளியா இருந்தாலும் மக்கள் ஒத்துக்க மாட்டார்கள்) - இதுதாங்க கொடுமை.

              இந்த அங்கிள், ஆன்ட்டி, அசின் மன்னிக்க கசின் வலையில் விழாத ஒரு ஆளை எனக்கு நன்றாக தெரியும் அது நான் தான் - ஹி ஹி.