வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், பிப்ரவரி 21, 2018

காவிரி கடந்து வந்த பாதை

காலைக்கதிரில் பிப்பரவரி 17அன்று வந்தது.  காலைக்கதிர் தினமலரின் சண்டையால் உருானது, இது தினமலரின் நிறுவனர் குடும்பத்துக்கு உரியது அல்ல. ஆகப்பெரும் பழைய தினமலர் ஊழியர்கள் இதில் தான் பணிபுரிகின்றனர்.

1924 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு.

1956 - மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. சென்னை மாகாணம் தமிழ்நாடாகியது மைசூர் கருநாடகம் ஆகியது சென்னை மாகாணத்தின் குடகு கருநாடகத்திற்கு போனது.

1974 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு நீங்கியது.

1980 யூன் 2 - 1970இலிருந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச  நீதிமன்றம் ஆணையிட்டது

1991 யூன் 25 - தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தர நடுவர் மன்றம் இடைக்கால ஆணையிட்டது

1991 டிச 11 - நடுவர் மன்ற ஆணையை ஏற்று தமிழகத்துக்கு நீர் திறக்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை. அதனால்  கருநாடகத்தில் தமிழர்கள் மீது வன்முறை இதில் 20 தமிழர்கள் பலி.

1993 யூலை - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி அப்போதைய முதல்வர் செயா  4 நாள்கள் உண்ணாவிரதம்

1996 ஆக 1997 சன 5- உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் கருநாடக முதல்வர் சே. எச். பாட்டிலுக்கும் இடையே நடத்த 5 சுற்று பேச்சில் முடிவு  எதுவும் எட்டப்படவில்லை.

1997 யூலை 3 - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி ஒன்றிய அரசிடம் தமிழகம் கோரிக்கை.

1998 ஏப் 10- தமிழகத்தின் கோரிக்கைக்கு பிரதமர் வாச்பாய் பணிந்து விடக்கூடாது என கருநாடக முதல்வர் பாட்டில் பேட்டி.

1998 யூன் 16 -காவிரி குடி நீர் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கக்கூடாதென கருணாநிதி கூறியது தவறான முன்னுதாரணம் என முன்னாள் முதல்வர் தேவகௌடா பேட்டி.

1998 யூன் 24 - கிருட்டிணா ஆற்று திட்டத்தின்  மூலம் தமிழகத்துக்கு வழங்கப்படும் 5 டிஎம்சி  நீரும் நிறுத்தப்படும் என கருநாடகம் எச்சரிக்கை.

1998 யூலை 20 -நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்தினால் தமிழகத்துக்கும் கருநாடகத்தும் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருநாடக அனைத்து கட்சி எம்பிக்கள் பிரதமர் வாச்பாயிடம் மனு.

1998 யூலை 21 - ஆகத்து 21இக்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 205  டிஎம்சி நீரை கருநாடகா வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணை.

1998 ஆக 7 - பிரதமர் வாச்பாயி முன்னிலையில் தமிழகம் கருநாடகம் கேரளா புதுச்சேரி முதல்வர்கள்  பேச்சு.

1998 ஆக 8 - காவிரி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணாவிட்டால் வாச்பாய் அரசுக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என் செயா மிரட்டல்.

1999 மே 7 - 1991-92இல் கருநாடகத்தில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் மே 15இக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை

2002 அக் - கருநாடக முதல்வர் கிருட்டிணா உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காததிற்கு  நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி காவிரி நீரை  திறந்துவிட ஆணையிட்டார்.

2002 அக் 11 - தமிழக திரைப்படத்துறையினர் கருநாடகத்தை கண்டித்து சென்னையிலிருந்து நெய்வேலி வரை பேரணி.

2002 அக் 12 - கருநாடகம் காவிரியில் நீர் திறந்து விடக்கோரி நடிகர் இரசனி சென்னையில் உண்ணாவிரதம்

நவ 29 - காவிரி நடுவர் மன்றக் கூட்டம் தமிழக முதல்வர் செயா பங்கேற்க இயலாததால் ஒத்திவைப்பு.

2003 சன 13 - தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் நீரை தர கருநாடகம் ஒப்புதல்.

2005 ஆக 5 - காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுள் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.

2006 ஏப்பில் 24 - நடுவர் மன்றத்தின் இறுதி வாதம் முடிவு.

2006 ஆக 3 - காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு.

2007 பிப் 5 - காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி திறந்து விட வேண்டுமென தன் இறுதி தீர்ப்பை அறிவித்தது. கேரளத்துக்கும் புதுவைக்கும் நீரை திறக்க ஆணை. இதை தமிழகம் ஏற்றது. கருநாடகா ஏற்காமல் மேல் முறையீடு செய்தது.

2012 செப் 13 - காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து நீர் தர முடியாது என கருநாடக முதல்வர் செகதீசு செட்டர் அறிவிப்பு.

செப் 19 - காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் ஆணை.

செப் 21- ஒன்றிய அரசு முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கருநாடகம் மனு.

செப் 24-தண்ணீர் திறந்து விடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் மனு.

செப் 28 - தண்ணீர் திறந்து விடாத கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் கண்டிப்பு

அக் 4 - தமிழகத்துக்கு அக்டோபர் 15 வரை தண்ணீர் தர முடியாது என உச்ச நீதி மன்றத்தில் கருநாடகம் மனு

அக் 8 -  காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென  உச்ச நீதி மன்றம் ஆணை.

அக் 8 -  பிரதமர் அக்டோபர் 20 வரை தண்ணீர் தர ஆணை, பிரதமர் & உச்ச நீதி மன்ற ஆணையை கருநாடகம் சில மணி நேரங்களிலேயே அவமதித்தது.

அக் 9 - கருநாடக அரசு மீது தமிழகம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை  தொடுத்தது.

அக் 9- கருநாடகாவை  கண்டித்து காவிரி கழிமுக மாவட்டங்களில் இரயில் மறியல்.

அக் 17- நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனுவை உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் அளித்தது.

நவ 15 - நவம்பர் 16இக்குள் 4.8  டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்து விட காவிரி நதி நீர் ஆணையம் ஆணை.

நவ 29- காவிரிப்பிரச்சனை குறித்து கருநாட முதல்வர் செகதீசு செட்டருடன் தமிழக முதல்வர் செயா பெங்களூரில் பேச்சு.

டிச 6 - தமிழகத்துக்கு உடனடியாக 10,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 7 - நீரை திறக்க முடியாதென எம்பிகளுடன் செகதீசு செட்டர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தல்.

டிச 7 - தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திறப்பு.

டிச 10 - தமிழகத்துக்கு உடனடியாக 15,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 21 -  நடுவர் மன்ற தீர்ப்பை அரசின் அழைப்பிதழில் (கெசட்டில்) வெளிடக்கோரி பிரதமருக்கு செயா இரண்டாவது முறையாக கடிதம்.

டிச 25 - அரசின் அழைப்பிதழில்  நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை வெளியிடக்கூடாதென பிரதமருக்கு செட்டர் கடிதம்.

2013 சன 4 - நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிடாதற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்

பிப் 4 - காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பிப் 20இக்குள் அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிட உச்ச நீதி மன்றம் ஆணை.

பிப் 9 - தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி நீர் திறப்பு.

பிப் 13 - குறைந்த அளவு  நீரை திறந்து விட்ட கருநாடகத்தின் மீது தமிழகம் அவமதிப்பு வழக்கு.

பிப் 20- காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஒன்றிய அரசு  அரசிதழலில் வெளியிட்டது

2014 சன 6-  காவிரி நடுவர் நீதிமன்ற புதிய  தலைவராக சவுகான் அறிவிக்கப்பட்டார்


2015 மார்ச் 30 -காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்படும் என்று  கருநாடக சட்டசபையில் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.

செப் 6 - காவிரியில் 227.55 டிஎம்சி நீரை  விடச் சொல்லி ஆணையிட பிரதமருக்கு செயா கடிதம்.

நவ 15 - தமிழகத்தின் கோரிக்கைக்கு உச்ச நீதி மன்றத்தில் கருநாடகா எதிர்ப்பு.

2016 ஆக 16 - உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்  செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் செயா அறிவிப்பு.

செப் 2 - வாழ்வோம் வாழ விடுவோம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விட கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 7 - இதைத்தொடர்ந்து கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம். தமிழர்களின் வண்டிகள் தீ வைத்து எரிப்பு.

செப் 11 -  உத்தரவை மாற்றக்கோரி கருநாடகம் உச்ச நீதி மன்றத்தில் மனு.

செப் 12 - 15,000 கன அடிக்கு பதிலாக 12,000 கன அடி நீரை  திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 16 - தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகத்தில் முழு கடையடைப்பு.

செப் 20 -  4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு.

அக் 03 - காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க தனக்கு ஆணையிட உச்ச நீதி மன்றத்துக்கு அதிகாரமில்லையென ஒன்றிய அரசு நீதி மன்றதில் தெரிவித்தது

2018 பிப் 16 - உச்ச நீதி மன்றத்தில்  தீர்ப்பு. இதில் 177.25 நீரை தமிழகத்திற்கு வழங்க உத்திரவு. தமிழகத்தின் நிலத்தடி நீர் 20 டிஎம்ச்சியாக உள்ளதால் கருநாடகம் வழங்க  வேண்டிய நீர் 192 டிஎம்சியிலிருந்து 14.25 டிஎம்சி  ஆக குறைப்பு

.
எனக்கு தெரிந்த பல செய்திகளே இதில் இல்லை. இருந்தாலும் இதை பத்திரப்படுத்துவோம். வரலாறு முக்கியம் மக்களே.






ஞாயிறு, ஜனவரி 21, 2018

Ice Cream செய்வது எப்படி? சர்க்கரை இல்லை கொழுப்பு உண்டு என்பதால் பேலியோ மக்களுக்கு இது உதவலாம்

Ice Cream செய்வது எப்படி? Ice Cream கருவி இல்லாமலும் சர்க்கரை இல்லாமலும் சேர்த்தும்.ஆனா முட்டை கரு உண்டு

தேவையான பொருட்கள்
முட்டை 8
Heavy Cream பால்
கொழுப்பு  நீக்காத பால்
வெண்ணிலா சாறு
       * வேண்டுமென்றால் - சிவப்பு பெர்ரி பழம், வாழைப்பழம், சாக்லெட், சர்க்கரை


அடுப்பில் வைத்து சூடாக்கும் முறை 

1. எட்டு முட்டை மஞ்சக்கருவை நன்றாக அடித்து வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளைக்கருவை பயன்படுத்தக்கூடாது. சர்க்கரை வேண்டுமென்றால் மஞ்சக்கருவுடன் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளுங்கள். சர்க்கரை வேண்டாம் ஆனா இனிப்பு வேணும் என்பவர்கள் சர்க்கரைக்கு மாற்றாக உள்ள சர்க்கரையை பயன்படுத்தவும்.  எச் சர்க்கரையையும் பயன்படுத்தாமலும் இருக்கலாம்.
2.Heavy Cream பாலையும் கொழுப்பு நீக்காத பாலையும் சம அளவில் கலந்து குறைந்த மிதமான சூட்டுக்கு நடுவில் சூடாக்குங்கள். அதில் வெண்ணிலா பொடி அல்லது வெண்ணிலா சாறு அல்லது வெண்ணிலா கொட்டையை போட்டு சூடாக்கவும். அப்ப அப்ப கிளரிவிடவும். பொங்குவது போல் வரும்போது (பால் சிறிது மேலே வரும் போது) அடுப்பு தீயை அணைத்து விடவும்.
3. கொதிநிலைக்கு இந்த பால் கரைசலில் சிறிதை அடித்து வைத்த மஞ்சள் கருவுடன் சேர்த்து நன்றாக அடிக்கவும். (முதலில் நிறைய சேர்த்தால் முட்டை வெந்து விடும்) பின்பு கொதிநிலையில் உள்ள பால் சிறிது சேர்த்து அடிக்கவும். கொஞ்ச கொஞ்சமா சேர்த்து அடிக்கவும். பாதி பாலுக்கு மேல் தீர்ந்ததும் எல்லாத்தையும் கொட்டி நன்றாக அடிக்கவும்\கிளரவும்.
4. இப்ப மஞ்சள் கருவுடன் பாலும் கலந்து உள்ள கரைசலை அடுப்பில் குறைந்த சூட்டில் பொங்குவது போல் வரும் வரை சூடாக்குங்கள். இதில் மீண்டும் வெண்ணிலா சாறை சிறிது சேருங்கள். துக்கியூண்டு உப்பையும் சேருங்கள். இக்கரைசலை கிளரிக்கொண்டே இருக்கவேண்டும். பொங்கும் நிலைக்கு வந்ததும் தீயை அணைத்து பாத்திரத்தை தூக்கிவிடுங்கள்.
5. பால் உள்ள பாத்திரத்தின் சூடு போக வேண்டும். அதனால் பாத்திரத்தை குளிர் நீர் உள்ள சட்டியில் வைத்து குளிர்வியுங்கள், இது விரைவாக குளிர்விக்க உதவும்.
6. குளிர்ந்த கரையலை நன்றாக கிளரவும் பின் அக்கரைசலை Freezer வெப்பநிலையை தாங்கும் டப்பாவிலோ கண்ணாடி பாத்திரத்திலோ ஊற்றி அதை மிகுதியாக குளிர வைக்கவும் Freezer part of fridge. அரை மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக கிண்டவும் இப்போது பெர்ரி பழத்தை மிக்சியில் அடித்து அதை கலந்து பின் நன்றாக கிளரவும். (பெர்ரி இனிப்பு ஆகும்) பெர்ரி சுவைக்கு பதில் சாக்ல்லேட் Ice Cream வேண்டுபவர்கள் சாக்லேட்டை கரைத்து ஊற்ற வேண்டும் என்ன சுவை வேண்டுமோ அதை ஊற்றுங்கள். மீண்டும் Freezers இல் வைக்கவும்.
7. மீண்டும் அரை மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக கிண்டி மீண்டும் Freezers இல் வைக்கவும். இப்படியாக நன்றாக Ice Cream ஆனது கெட்டியாகும் (Freeze) வரை அரை மணிக்கு ஒரு முறை எடுத்து கிளரிவிடவும்.
8. கெட்டியானதும் ஒரு அல்லது இரண்டு மணி நேரம் கழித்து சுவையுங்கள்.


மற்றொரு முறை - இதில் சூடு பண்ண வேண்டாம்.

1. முழு கொழுப்பு உள்ள பாலையும் Heavy Cream . பாலையும் ஒரு மணி நேரம் fridge இல் வைத்து குளிர வைக்கவும்.
2. முட்டை மஞ்சள் கரு 4 அல்லது 6 உடன்1 மணி நேரம் குளிர்ந்த முழு கொழுப்பு உள்ள பாலையும் Heavy Cream பாலையும் வெண்ணிலா சாறு சில துளிகளையும் சர்க்கரை தேவைப்படும் அளவு அல்லது சேர்க்காலும் இருங்கள். இதை நன்றாக அடித்து சிறிது நேரம் கிளருங்கள்.கரைசலை கடுங் குளிரை தாங்கும் கண்ணாடி பாத்திரத்துக்கு மாற்றவும்.
3. இதை Freezer sல் 1 மணி நேரம் வைக்கவும். சிவப்பு பெர்ரி பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
4. Freezer ஒரு மணி நேரம் இருந்த Ice Cream கரைசலை வெளியே எடுத்து நன்றாக கிளரவும் அதனுடன் சிவப்பு பெர்ரி பழம் அரைத்த கரைசலை ஊற்றவும். பின்பு நன்றாக கிளரவும். பின்பு அதை எடுத்து Freezer இல் வைக்கவும். மீண்டும் அரை மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக கிண்டி மீண்டும் Freezer இல் வைக்கவும். பின்பு 5 மணி நேரம் Freezers லேயே இருக்கட்டும்.
5. Freezer இல் எடுத்து சுவையுங்கள்.
முட்டை இல்லாமலும் Ice Cream செய்யலாம். முட்டையுடன் செய்வது பழங்காலத்து முறை. கொழுப்பு வேண்டும் என்பவர்களுக்கானது. எனக்கு கொழுப்பே இல்லை அதனால் முட்டையுடன் உள்ளது தான் எனக்கு

புதன், டிசம்பர் 13, 2017

சொற்களின் சேர்க்கை - பகுதி ஒன்று

இலக்கணத்தில் தொடர்ச்சியாய் எல்லார்க்கும் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது புணர்ச்சி இலக்கணம்தான்.
தமிழைத் தலைகீழாய்க் கற்று முடித்தாலும் புணர்ச்சி இலக்கணத்தில் தெளிந்த அறிவைப் பெற்றிராவிட்டால் தவறிழைத்துவிடுவீர்கள்.
தனியாக அமர்ந்து புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றுத் தேர்வது என்று முடிவெடுத்தாலும் மேற்செல்லும்போது நாமே நம்மைக் கைவிட வேண்டி வரும்.
முகநூல் பதிவுபோன்ற ஓர் உரையாடல் இழையில் புணர்ச்சி இலக்கணத்தைக் கற்பது மிகச் சிறப்பான கூட்டுப் படிப்பாக அமையும் என்று கருதுகிறேன்.
தமிழ் இலக்கணத்தை எப்படிக் கற்க வேண்டும், தெரியுமா ? ஐயத்திற்கிடமின்றி அடிப்படையிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
முதலில் ஒலிப்புகளைத் தெளிவாய் அறிய வேண்டும். அவ்வொலிப்புகள் எழுத்துகளாய் எவ்வாறு குறியிடப்படுகின்றன என்பதை அறிய வேண்டும்.
ஒலிப்பின்படி எழுத்துகள் என்னென்ன என்று அறிந்து, நம் மொழியின் ஒலிகளுக்கேற்ற எழுத்துகளை எழுதக் கற்றுக்கொள்கிறோம்.
இப்போது உங்களுக்கு ஒலிப்புகள் தெரியும். அதிலேயும் நணன – ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்தி ஒலிப்பது என்பதில் குழப்பம் வரும்.
எடுத்ததும் ந என்று சொல்லுங்கள். அதுதான் நகரத்தின் ஒலி.
ணன-கரங்கள் ஒருபோதும் ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாக மாட்டாதவை. அதனால் அவை ந என்று அதே ஒலிப்பில் தனக்கு முன்னால் வரும் எழுத்துக்கேற்பவும் தனக்குப் பின்னால் வரும் எழுத்துக்கேற்பவும் ஒலித்துக்கொள்ளும். அவ்வளவுதான்.
நகர எழுத்துகள் சொல்லுக்கு நடுவிலோ கடைசியிலே எங்கேயும் வரமாட்டாதவை. அப்படி வந்தாலும் செய்ந்நன்றி, தந்நலம், வெரிந் போன்று சிற்சில சொற்களே உள்ளன.
அந்நியன், அநாதை, அநியாயம் போன்றவை வடசொற்கள். நகரங்கள் மொழி நடுவில் வரமாட்டா என்ற கொள்கையுடையவர்கள் அன்னியன், அனாதை, அனியாயம் என்று எழுதுவார்கள்.
சொல்லுக்கு முதலாவது நகர ஒலிப்பு. சொல்லுக்கு நடுவிலும் கடைசியிலும் தோன்றுவது ணன-கர ஒலிப்பு. இப்படிப் பல நுண்மைகள் உள்ளன.
இப்போது நாம் இத்தொடரில் புணர்ச்சி இலக்கணத்தைத்தான் தொடப்போகிறோம்.
நமக்கு வழிகாட்டியாக நன்னூலை வைத்துக்கொள்ளலாம். அந்நூற்படி புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றுக்கொண்டாலே நாம் தமிழில் செழுமை அடைந்துவிட்டதாக இறுமாப்பு அடையலாம்.
நம் மொழிக்குத் தொன்மையான இலக்கண நூல்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவை தோன்றியிருக்கின்றன. அவை அனைத்தையும் நாம் வழிகாட்டியாகக் கொள்வதைவிடவும் தொல்காப்பியமோ நன்னூலோ சிறப்பாக இருக்கும்.
தொல்காப்பியத்தை அடைய நாம் இன்னும் பல கற்றல் படிகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதால் காலத்தால் சற்றே பிந்திய நன்னூலை எடுத்துக்கொண்டோம்.
எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதைத் தலைகீழாய் நின்று மனப்பாடம் செய்தாலும் புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றால் ஒழிய நமக்கு விடிவில்லை.
புகட்டும்போதே வாந்தியெடுக்கக்கூடியவாறு இருப்பது இலக்கணம் என்ற கற்பனையிலிருந்து வெளியே வாருங்கள்.
புணர்ச்சி இலக்கணம் கடினமே இல்லை.
பாலும் தண்ணீரும் சேர்ந்தால் என்னாகும், எண்ணெய்யும் தண்ணீரும் சேர்ந்தால் என்னாகும் என்பது நமக்குத் தெரியும்.
பாலும் தண்ணீரும் சேரும். எண்ணெய்யும் தண்ணீரும் சேராது.
மொழிச்சொற்களுக்கிடையிலும் இதைப் போன்றே சேர்க்கையும் சேராமையுமான இயற்கை காணப்படும். அதை இழையிழையாக விளக்குவதுதான் புணர்ச்சி இலக்கணம்.
ஓர் ஒலி தனித்து ஒலிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகள் நிரல்பட ஒலித்தால் அங்கே சொல் தோன்றுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்ந்து நடந்தால் வாக்கியம் பிறக்கிறது. வாக்கியம் என்பதைத் தமிழில் சொற்றொடர் (சொற்களின் தொடர் வரிசை) என்பார்கள்.
ஓரெழுத்தோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ கூடி எவ்வாறு சொற்களைத் தோற்றுவிக்கின்றன என்பதைச் சொல் இலக்கணம் கற்றுத் தருகிறது.
இரண்டு சொற்கள் எவ்வாறெல்லாம் சேரலாம் சேரக்கூடாது என்பதைப் புணர்ச்சி இலக்கணம் கற்பிக்கிறது.
புணர்ச்சி என்றால் சேர்க்கை. தனித்துக் கிடப்பவற்றால் ஆனதில்லை மொழி. சேர்ந்து சேர்ந்து சேர்ந்து சேர்ந்து ஆவதுதான் மொழி.
சின்ன சின்ன ஒலிகளின் சேர்க்கை. சொற்களின் சேர்க்கை. சொற்றொடர்களின் சேர்க்கை. இதுதான் மொழியின் கட்டமைப்பு.
புணர்ச்சி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் எப்படிச் சேரும் என்பதை விளக்கும் இயல். அதைத்தான் அடிமுதல் நுனிவரை கற்றுத் தெளியப் போகிறோம்.
- தொடரும்
- கவிஞர் மகுடேசுவரன்
https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/1672296679475481

சனி, டிசம்பர் 02, 2017

இந்துசுத்தானி (பல மொழிகள்) இந்தி அல்ல.





எந்த மொழிகள் எல்லாம் இந்தி என்று கூறப்படுகிறது. தேவநகரி என்ற  எழுத்து முறையை இவை பயன்படுத்துவதால் இவைக்கை இந்தியில் அடக்கி சுமார் 40 கோடி பேர் பேசுவதாக பொய்யாக கூறுகின்றனர்.








தானியங்கு மாற்று உரை இல்லை.

பயனுள்ள விழியங்களும் சுட்டியும் -



https://brightside.me/inspiration-tips-and-tricks/10-uses-for-coca-cola-you-probably-didnt-know-about-296960/?utm_source=fb_brightside&utm_medium=fb_organic&utm_campaign=fb_gr_5mincrafts









சிரிக்க


1983 உலகக்கோப்பை போட்டியில் நமக்கு தெரியாத விசயங்கள்

திங்கள், நவம்பர் 06, 2017

திருமூலரின் பிராணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி


சிவசிவ என்று கூறுவது நான்கு மாத்திரையாகும். தமிழ் இணைய பல்கலைக்கழகம் இவ்வாறு கூறுகிறது.

550.
           ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே


(ப. இ.) வளிநிலையாகிய மூச்சுப்பயிற்சி முறை இதிற் காணப்படுகிறது. ஏறுதல் - பூரகம். ஆறுதல் - கும்பகம். ஊறுதல் - இரேசகம். பூரகம் - உள்ளிழுத்தல். கும்பகம் - அடக்குதல். இரேசகம் - வெளிவிடுதல். வாமம் - இடகலை; இடமூக்கு. ஈரெட்டு - பதினாறுமாத்திரை, அறுபத்து நாலு மாத்திரை, முப்பத்திரண்டு மாத்திரை. இப் பயிற்சிக்குச் 'சிவ சிவ' என்னும் செந்தமிழ்த் திருமாமறை முடிவினை நான்குமுறை கணித்துத் தூய காற்றை உள்வாங்குதல் வேண்டும். அதுபோல 'சிவசிவ' என்பதனைப் பதினாறுமுறை கணித்து இரண்டு மூக்கையும் அடைத்து உள் நிறுத்துதல் வேண்டும். பின் 'சிவசிவ' என எட்டுமுறை கணித்து வலமூக்கைத் திறந்து வெளிவிடுதல் வேண்டும். இம்முறையே இடமூக்கிலும் பயிலுதல் வேண்டும் இவ்வாறு மாறிமாறி இயன்ற அளவு செய்தல் வேண்டும். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.
(அ. சி.) மாறுதல் - மடைமாறுதல்.

551. 
           வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.

(ப. இ.) அகத்தவப் பயிற்சியால் உயிர்ப்பினை வாங்கி உந்திக்கண் அடக்கி வயப்படுத்தினால் உடம்புக்கு காலவரையறைப்படி ஏற்படும் முதுமை புறத்துக் காணப்படினும் அகத்து முதுமைப்பண்பு ஒருசிறிதும் காணப்படமாட்டாது. அதற்கு மாறாக இளமைப்பண்பு கிளர்ந்தெழுந்து கொழுந்துவிடும். அதனையே பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் என்று ஓதினர். அகத்துப்பண்பு இளமையாகப் புறத்துப் பொலிவு முதுமையாவது எதன்பொருட்டெனின்? அவர்தம் பயிற்சியின் சிறப்பும்

கேவல கும்பகம் என்று ஒன்றுள்ளது. அது மூச்சில்லாத (உயிர் வளியில்லாத) நிலை. அதாவது மூச்சை வெளியிட்ட பின் மூச்சை இழுப்போம் அல்லவா அந்த இடைப்பட்ட நேரம். இந்த நேரத்தை பற்றி ஏதும் கூறவில்லை அதாவது கேவல கும்பகம் எவ்வளவு நேரம்  இருக்கவேண்டும் என்று கூறவில்லை.

இடைகலை  இடது நாசில் மூச்சை வெளியிடுவது    -    பிங்கலை வலது நாசியில் மூச்சை வெளியிடுவது. 

திங்கள், அக்டோபர் 23, 2017

நாள் கணக்கு - மண்டலம்


கோள்கள் (நவகிரகங்கள்) 9
விண்மீன்கள் *(நட்சத்திதரங்கள்) 27
ராசிகள் 12
எல்லாத்தையும் கூட்டுனா 48 (9+12+27)
ஒரு மண்டலம் 48 நாட்கள்

இந்திய இந்து மரபில் பதினெட்டு என்ற எண் சிறப்பு பெற்றது. வியாசர் எழுதிய தொன்மங்கள் (புராணங்கள்) 18, ஐயப்பனின் புனித படிகள் 18, சபரிமலையை சுற்றி உள்ள மலைகள் 18 , கீதையின் அத்தியாயங்கள் 18 இப்படி.



ஏன் ஓம் முருகா போற்றி, ஓம் வேலவா போற்றி ,.... என்பது போன்ற அனைத்து போற்றி மந்திரங்களையும் 108 முறை ஓதுகிறார்கள்? அது என்ன 108? எச்சமிச்சா இருக்கக்கூடாதா?

108 என்பது 12, 9, 27, 18 என்ற எண்களால் வகுபடும் மிகச்சிறிய எண்.

மேலும் 1, 2, 3, 4, 6, 9  என்பதால் வகுபடும் எண் என்பதும் அதற்கு மேலும் சிறப்பை கூட்டுகிறது.






திங்கள், அக்டோபர் 09, 2017

நாற்பதுக்கும் மேலும் நின்று விளையாட - 18+

எக்சைல் புத்தகத்தில் சாரு நிவேதிதா கூறியதை அப்படியே எழுதியுள்ளேன்.

காயகல்பம்
காயம் - உடல்
கல்பம் - நரை திரை பிணி மூப்பு இல்லாமல் உடலை கல் போன்று வைத்துக்கொள்வது

கற்ப மூலிகைளில் ஒன்றான தூதுவளைக் கீரையை  மிளகு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு  மண்டலம் தின்றால் ஆண்மை அதிகரிக்கும்.

தூதுவளை பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி  பாலில் கலந்து உட்கொண்டாலும் ஆண்மை அதிகரிக்கும்.

தாலிக் கீரை என்று ஒரு கீரை உள்ளது. இதன் இலை தாலியை போல் இருக்கும். இதை தொடர்ந்து உண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

வெந்தையத்தை காலையில் ஊறப்போட்டு மாலையில் அதன் நீரை வடிகட்டி ஒரு தம்ளரில் போட்டு கவிழ்த்து போட்டு மூடி வைத்து விடவேண்டும். மறு நாள் காலையில் முளை விட்டிருக்கும் வெந்தயத்தை தின்ன வேண்டும். இதனால் சர்க்கரை அளவு குறைவதோடு ஆண்மை அதிகரிக்கும்.

துளசி கொழுப்பை குறைக்கும்.

கருந்துளசி இலைகள் 9உம் மூன்று நாட்டுப் பூண்டும் கொஞ்சம் இஞ்சியும் பச்சையாக படுக்க போகும் முன் உண்டேன் கொழுப்பு பெருமளவில் குறைந்தது என்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

பசலிப் பழம், நாவல் பழம் இரண்டும்  கொழுப்பை குறைக்கும்.


  1. அரசம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி வெல்லத்துடன் பருகுதல்.
  2. ஓரிலைத் தாமரையை அரைத்து பாலில் கலந்து குடித்தல்.
  3. ஒற்றைச் செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து  நீரில் கொதிக்க வைத்து வெண்சூட்டில் சர்க்கரை சேர்த்து குடித்தல்.
  4. கசகசாவை ஊற வைத்து தின்பது
  5. இலுப்பைப் பூவை  பாலில் போட்டு காய்ச்சி குடித்தல்
  6. சீரகப்பொடி வில்வப் பட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து தின்பது
  7. நெய் மிளகு உப்பு பொன்னாங்கண்ணிக் கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை இவைகளை சேர்த்து  துவையலாக்கி தின்பது.
  8. வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேக வைத்து தினமும் இரு வேளை தின்பது.
தாது விருத்தி நீடித்த உடல் உறவு ஆகியவற்றுக்கு மேற்கண்ட மூலிகைகளுக்கு ஈடாக எந்த வயாக்ராவும் இல்லை. இதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்ட நான் மண்டலம் மண்டலமாக மாற்றி மாற்றி இவ்விசயங்களை உண்டு வருகிறேன்.

அதனால் தான் 2 மணி நேரம் foreplay இல்லாமல் என்னால் கலவியில் ஈடுபட முடிகிறது.     2 மணி நேரம் foreplay  இல்லாமலேவா என்று சில அப்பாவிகள் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்வது காலையில் இஞ்சி இரவு கடுக்காய்  ஒரு மண்டலம் உட் கொள்ளுங்கள்  நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என்பது.

துவர்ப்பு சுவைக்கும் தாது விருத்திக்கும் தொடர்பு உண்டு என்பது என் இளமை ஆராய்ச்சியில் தெரிய வந்தது.
காட்டு;- மாதுளம் பழம், அதிமதுரம், கொட்டைப் பாக்கு

உடல் உறவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு கொட்டைப் பாக்கைக் கடித்து தின்று விட்டால் விந்து நின்று போகும். நின்று போகும் என்றால் விந்து வெளிவர மணிக்கணக்கில் ஆகும்..

நின்று ஆட வாழ்த்து.😊 😄

                                                                                                                                                                                                                                                                                                                                                     






ஆத்தி - குறிஞ்சிப்பாட்டு

45. தோற்பது நும் குடியே!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை: வஞ்சி. 
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது. 

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; 

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,

குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!

பொருளுரை: 

சோழ அரசனே, இந்தப் போர்க்களத்தில் உன்னை எதிர்த்து நிற்பது, பனம்பூ சூடிய சேரன் அல்ல, வேப்பம்பூ சூடிய பாண்டியனும் அல்ல, நீயும் ஆத்திப் பூ அணிந்திருக்கிறாய், உன்னை எதிர்த்து நிற்பவனும் ஆத்திப்பூதான் சூடியிருக்கிறான்!போரில் நீங்கள் இருவருமே ஜெயிக்கமுடியாது, யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும், அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா?இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள்.

http://sekalpana.blogspot.in/2016/04/blog-post_36.html


ஆத்தி மலரைக் குறிஞ்சிப்பாட்டு ‘அமர் ஆத்தி’ என்று குறிப்பிடுகிறது. அமர் என்னும் சொல்லுக்கு விரும்புதல் என்பது பொருள்.
ஆத்தி மரதைக் கருங்காலி என்கின்றனர்
சோழப் பெருவேந்தர்களின் குடிப்பூ ‘ஆர்’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
இந்த ஆர்-மலரை ஆத்தி என்கின்றனர்.

சிவபெருமான் ஆத்திப் பூவைச் சூடியுள்ளான் என்பர். (ஆத்தி சூடி – நூல்)

http://vaiyan.blogspot.in/2015/09/kurinjipattu_12.html

ஞாயிறு, அக்டோபர் 08, 2017

இளமை திரும்பி வர இஞ்சி சுக்கு கடுக்காய்

குடு குடுத்த கிழவனுக்கும் இளமை ஆடி வர ... இஞ்சி  சுக்கு  கடுக்காய்  ஒரு மண்டலம் தின்னவும் 
கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய் மண்டலம் 
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 
நடப்பவனும் கோலை வீசி குலாவி 

நடப்பானே ...

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு-
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு - -------- சுக்கு 
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி 
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -------- கடுக்காய் 

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை  நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும். 

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை  நஞ்சு எனவே  நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் 

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும். 

உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்

நன்றி !

அரவின் தீபன்...

http://siththamaruththuvavilakkam.blogspot.in/2012/08/blog-post.html

ஞாயிறு, அக்டோபர் 01, 2017

MRI -ஸ்கேன் என்னும் மின்காந்த ஒத்ததிர்வுப் படமாக்கி

அறிவியலின் வழியாக அளப்பரிய பயன்களை மட்டும் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், அதன் அடிப்படைகளைப் பற்றி என்றேனும் அறிந்துகொள்ள முயன்றிருக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லைதான். அறிவியற்கண்டுபிடிப்புகள் யாவையும் அறிவியலாளர்களின் நோக்கற்கரிய நோக்கால், நுண்ணறிவால் விளைபயனை உலகிற்கு கொடுக்கப்பட்ட கொடைகள். அதுவும் இதுபோன்ற நோயுணர்த்தும் கருவிகளைக் (diagnostic tools) கண்டுபிடித்தவர்களைத் தெய்வங்கள் என்று சொன்னாலும் மிகையாக இருக்காது. இந்தக் கண்டுபிடிப்புகள், கோபுரத்தையும், குடிசையையும் ஒன்றெனக் கருதும் மழையைப்போல, கோடிகளில் புரள்பவரையு ம், அடுத்தவேளை உணவுக்காகப் போராடும் ஏழையையும் ஒன்றெனக்கருதிப் பயனளிக்க வல்லவை. சரி MRI (Magnetic Resonance Imaging) என்றால் என்ன? அதன் அடிப்படைகள், பயன்கள், வேதியியலின் பங்கு என்ன என்பது பற்றியும் தமிழ்கூறும் நல்லுலகத்துக்குப் பகிர்ந்துகொள்ள முயல்கிறேன். தமிழ் இளநிலை -முதுநிலை அறிவியலாளர்களுக்கும், அறிவியல் விரும்பிகளுக்கும், பயனுள்ளதாக இருக்குமென்றும் நம்புகிறேன்.
நோயுணர்த்திகள் (Diagnostic Tools)
1895 களுக்கு முன்னம், உடலில் உள்ளுறுப்புகளில் ஏதேனும் பழுது என்றால், உடலை அறுத்துத்தான் கண்டறியமுடியும். வெறும் அனுமானத்தில், அவதானிப்பில், பட்டறிவில் தான் மருத்துவம் செய்தார்களேயொழிய, உடலின் உள்ளே, இன்ன இடத்தில், இன்னது ஏற்பட்டிருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்லும் முறையெல்லாம் சாத்தியமாகி இருக்கவில்லை. 1895 களில் இராயின்டஜன் என்பவர், அதிவேக மின்காந்த அலைகளை, கடினமான உலோகப்பரப்பில் மோதவிட்டபோது, ஒருவகையான அதிக ஆற்றலுடைய, அதேசமயம் அதன் பண்புகள் இன்னதுதான் என்று முழுமையாக அறுதியிட முடியாத, ஒருவகைக் கதிர்கள் வெளியாவதைக் கண்டுபிடித்தார். அவ்வாறு, முழுமையாக கண்டுணரமுடியாத, அவ்வகைக் கதிர்வீச்சுக்கு "X" வகை, அதாவது unknown (X) rays என்று பெயரிட்டார். இந்த X-Ray கதிர்வீச்சானது, சதையை ஊடுருவிச் செல்லும். ஆனால் எலும்பை ஊடுருவமுடியாமல் எதிரொளித்துத் திரும்பிவந்துவிடும். அந்த எதிரொளிப்பைத்தான் நாம் X-Ray படமாக மாற்றிக் கொள்கிறோம். ஆகவே X-Ray தான் முதன்முதலாக மனித உடலுக்குள் நடந்திருக்கும் சீர்கேட்டை அல்லது எலும்பு முறிவை, கத்தியின்றி இரத்தமின்றி தெளிவாகக்காட்டிய கருவி ஆகும். இதன்பின்னர்தான், அதே மின்காந்த அலைகளை மூலமாகக் கொண்ட Computer Tomography (CT-Scan), நுண்ஒலியலைகளை (அதாவது நுண்ணிய சத்தத்தை) உடலுக்குள் அனுப்பி உள்ளுறுப்புகளில் மோதவிட்டு, எதிரொலியாகத் திரும்புவதைக் கணினியில் படமாக்கிக் காட்டும் கருவியான Ultrasound Scan, அணுக்கரு கதிர்வீச்சைக் (Nuclear Energy) கொண்டு உருவாக்கப்படும் Positran Emission Tomography (PET) என்று படிப்படியாக நோயுணர்த்தும் நுட்பங்கள் பெருவுருவாக வளர்ந்து நிற்கின்றன. அந்தவரிசையில் காந்தஅலைகளை, ரேடியோ அலைகளுடன் சேர்த்து உடலுக்குள் அனுப்பி உள்ளுறுப்புகளைத் தெள்ளறப் படமாக்குவதுதான் MRI-Scanning முறை ஆகும். இதைக் கண்டுபிடித்தவர்கள் Paul Lauterbur மற்றும் Sir Peter Mansfield (நோபல் பரிசும் பெற்றனர்)
தண்ணீர் தண்ணீர்!!
உண்மையிலேயே MRI கருவியின் முதன்மையான வேலை என்னவென்றால் நம் உடலுக்குள் இருக்கும் தண்ணீரைப் படமெடுப்பதுதான். தண்ணீரைப் படமெடுப்பதென்றால்?? இவ்வுலகம் நீராலானது என்பதைப்போல, நம் உடலும் 70% தண்ணீரால் ஆனதுதான். தண்ணீரென்பது இரண்டு ஹைட்ரஜன்கள், ஒரு ஆக்சிஜன் பிணைந்துதான் H2O உருவாகிறது. MRI க்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஏனென்றால் ஆக்சிஜன் காந்தவிசைக்குக் கட்டுப்படுவதில்லை. ஆனால் ஹைட்ரஜன் அணுவானது மந்திரவாதிக்குக் கட்டுப்படும் குட்டிச்சாத்தானைப்போல, காந்தவிசைக்குக் கட்டுப்பட்டு தானும் ஒரு காந்தமாக மாறிவிடுகிறது.
ஹைட்ரஜன் காந்தமாகுமா?
உலகிலிதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 118 தனிமங்களுக்கெல்லாம் முதன்மையானதாகவும், மிகமிகமிகச் சிறிய அணுவாகவும் இருப்பதுதான் இந்த ஹைட்ரஜன். ஹைட்ரஜன் அணுவில் ஒரு எலக்ட்ரானும் (எதிர்மின்துகள்-Negatively charged), ஒரேயொரு புரோட்டானும் (நேர்மின்துகள்-Positively charged) இருக்கின்றன. "வார்டன் ன்னா அடிப்போம்" ங்கற வடிவேலு காமெடி யைப்போல, எந்தவொரு மின்னேற்றம் பெற்ற (Charged species) துகளை காந்தப்புலத்தில் வைத்தாலும் அது தன்னைத்தானே காந்தவிசையின் அச்சை மையமாகக் கொண்டு சுழலும். அதாவது நேர்மின்னேற்றம் (Positively charged) பெற்ற புரோட்டானையோ அல்லது எதிமின்னேற்றம் (Negatively charged) பெற்ற எலக்ட்ரானையோ காந்தப்புலத்தில் வைத்தால் அது தன்னைத்தானே சுழலத் தொடங்கும். அப்படியானால், மேற்சொன்ன இரண்டு வகையான துகள்களையும் பெற்றிருக்கிற ஹைட்ரஜனும் சுழலுமல்லவா? ஆம்!! காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு ஹைட்ரஜனும் தன்னைத்தானேச் சுழலும். அவ்வாறு சுழலும்போது தன்னைச்சுற்றி ஒரு காந்தப்புலத்தையும் உருவாக்கிக் கொள்கிறது. ஹைட்ரஜன் அணுவானது, ஒரே ஒரு நொடிக்குள் 63,000,000 முறைகள் தன்னைத்தானேச் சுழன்று விடுகிறது.
மனிதவுடலுக்குள் எண்ணிலடங்காக் காந்தங்கள்
மனித உடலுக்குள் 70% தண்ணீர் இருக்கிறதென்பதால் கோடானுகோடி நீர் மூலக்கூறுகள் இருக்குமல்லவா? அப்படியென்றால்
மனித உடலை காந்தப்புலத்துக்குள் கொண்டுசெல்லும்போது, ஒரு நீர் மூலக்கூறுக்கு இரண்டு ஹைட்ரஜன் காந்தங்கள் என்ற கணக்கில், உடலில் இருக்கும் கோடானுகோடி நீர் மூலக்கூறுகளின் இருமடங்கு ஹைட்ரஜன் காந்தங்கள் உடலுக்குள் உருவாகின்றன. அத்தனை ஹைட்ரஜன் காந்தங்களும், நம் உடலுக்குள் காந்தவிசை செலுத்தப்படும் திசையையே அச்சாகக் கொண்டுத் தன்னைத்தானேச் சுழல்கின்றன. அண்டத்தின் விசையில், நாமிருக்கும் இந்தப் புவிப்பந்தும் இப்படித்தான் சுழல்கிறது, புவிகாந்தப்புலமும் உருவாகிறது.
உடலென்பது ஒன்றானாலும், பல்வேறுபட்ட உள்ளுறுப்புகளால் யாக்கப்பட்டது அல்லவா? அதுபோல நீர் மூலக்கூறின் வடிவம் (H2O) ஒன்றானாலும், அதன் வேகம், அடர்த்தி, சுற்றுப்புறம் போன்றவை உறுப்புக்கு உறுப்பு மாறுபடும். ஆகவே அதன் சுழலும் வேகமும், அதனால் உருவாகும் காந்தப்புலத்தின் தன்மையும் மாறுபடுகின்றன. இதயத்திற்குச் செல்லும் இரத்தக்குழாய் ஒன்றை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், புரதங்கள், நுண்தாதுக்கள், இன்னபிற என்று யாவும் தண்ணீரில் கலந்துதான் இரத்தம் உருவாகிறது. இரத்தக் குழாயில் எந்தவொரு தடையுமில்லாமல் இருந்தால் ஹைட்ரஜன் அணுக்களின் சுழற்சியிலோ, உருவாகும் காந்தப்புலத்திலோ எவ்வித மாறுதலும் இருக்காது. ஆனால் அதன் வழியில் ஏதேனுமொரு அடைப்போ, துளையோ அல்லது வேறு ஏதேனுமொரு தடையோ இருந்தால் அவ்விடத்தில் (நீர்மூலக்கூறில் இருக்கும்) ஹைட்ரஜனின்
சுழற்சியில், காந்தப்புலத்தில் மாற்றமிருக்கும். அந்த மாற்றத்தைப் படமாக்கி உணர்த்துகின்ற கருவிதான் MRI.
MRI செயல்படும் முறை
வட்டவடிவமாக இருக்கும் MRI கருவிக்குள் நம்மைக் கொண்டுசென்று உடலின் எல்லாப்பகுதிக்கும் சரிசமானமாகக் காந்தவிசையைச் செலுத்துவார்கள். அப்போது நம் உடலிலுள்ள அத்தனை நீர் மூலக்கூறுகளின் ஹைட்ரஜன்களும் காந்தமாகிச் சுழலத் தொடங்குகின்றன. பெரும்பாலும் MRI கருவிகளில் 1.5 முதல் 3.0 Tesla அளவிலான காந்தவிசை மனித உடலுக்கு கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட புவியின் காந்தப்புலத்தின் விசையைவிட 50000 மடங்கு அதிகம். ஒரு ஹைட்ரஜன் அணுவை நொடிக்கு சராசரியாக 63,000,000 முறைகள் சுழல வைக்கவே இவ்வளவு மிகையான காந்தப்புலவிசை கொடுக்கப்படுகிறது. கூடவே ரேடியோ அலைகளையும் 63.9 MHz நம் உடலுக்குள்ளே செலுத்தப்படுகிறது. எதற்காக என்று தெரிந்துகொள்ள ஒரு சுழல்கின்ற பம்பரத்தைக் கற்பனை செய்துகொள்வோம். சாட்டையில் சுழற்றிவிட்ட பம்பரம் மிகவேகமாகச் சுழலும்போது, தன்னைத்தானே சுழன்றுகொண்டே பம்பரத்தின் தலைப்பகுதியும் சற்று வெளிப்பக்கமாகச் சாய்ந்து சுற்றுவதைப் பார்க்கலாம். அதையேதான் ஹைட்ரஜனும் அதிவேகத்தில் சுழலும்போது பம்பரத்தைப்போலவே காந்தவிசை அச்சுக்கு வெளிப்பக்கமாகச் சாய்ந்து சுற்றுகிறது. சாட்டையிலிருந்து கொடுக்கப்படும் ஆற்றலால் பம்பரம் சுழன்றுகொண்டே சுற்றுவதைப்போல, ஹைட்ரஜன் சுழன்றுகொண்டே வெளிப்பக்கம் சாய்ந்து சுற்றுவதற்கு ரேடியோ அலை ஆற்றல் (63,000,000 rotations per second = 63.9 MegaHertz) தேவைப்படுகிறது. அதாவது நிலையான காந்தப்புலத்தில் மனித உடலை வைத்துவிட்டு, படிப்படியாக ரேடியோ அலைகளின் செறிவைக் கூட்டிக்கொண்டே சென்று ஹைட்ரஜன்களின் சுழற்சியை, சுற்றும் ஆற்றலை, காந்தப்புலத்தைக் கணக்கிடுவதன் மூலம் உடலில் மாறுபாடு அடைந்த பகுதியை படமாக்கிக் காண்பிப்பதைத்தான் காந்தவிசை ஒத்ததிர்வு படமாக்கி ஒருசில நிமிடங்களில் கத்தியின்றி, இரத்தமின்றிச் செய்துவிடுகிறது.
MRI தொழில்நுட்பத்தில் வேதியியலின் பங்கு
இயற்பியல், பொறியியல், உயிரியல், மருந்தியல் என்று எல்லாத் துறைகளும் சேர்ந்து உருவாக்கிய படைப்புதான் இந்த MRI கருவி ஆகும். ஆயினும் வேதியியல் துணைசெய்யவில்லை என்றால் நான் மேலே விளக்கியதைப்போல உடல் உள்ளுறுப்புகளைப் படமாக்கினாலும் அவ்வளவு தெள்ளத்தெளிவாக இருக்காது. காரணம் மற்ற அணுக்களைவிட ஹைட்ரஜனின் காந்தமாகும் பண்பு சற்று குறைவு என்பதால்தான். அதற்காக அதிக காந்தமாகும் திறமுள்ள கடோலினியம் என்னும் உலோகத்தாலான சேர்மத்தை MRI படமெடுப்பதற்கு முன்னால் நம் உடலுக்குள் செலுத்தப்படும். காரணம் கடோலினியம் சிறந்த காந்தமாக்கியாகச் செயல்படுவதால் உடலிலுள்ள எல்லாப் பகுதியிலிருக்கும் (நீர்) ஹைட்ரஜன்களை மிகவேகமாக காந்தமாக்கிவிடும். தடையுள்ள பகுதியிலிருக்கும் தண்ணீர் ஹைட்ரஜனும் காந்தமாகிவிடுவதால் எளிதில் அவற்றின் சுழற்சி, ஆற்றல், காந்தப்புல வேறுபாடுகளைக் கொண்டு கணினி நமக்குப் படமாக மாற்றிக் காட்டிவிடுகிறது. ஆகவே தான் இதுபோன்ற காந்தமாக்கும் மற்ற உலோகங்களான தாமிரம், இரும்பு, மாங்கனீசு போன்றவைகளாலான சேர்மங்களை MRI Contrasting Agents (MRI படத்தெளிவாக்கி) ஆகப் பயன்படுத்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன (என்னுடையது உட்பட).
முனைவர் செ. அன்புச்செல்வன் .
01/10/2017 (4.00 am)
https://www.facebook.com/sanbu.selvan.7/posts/1593441640714654 

வியாழன், செப்டம்பர் 07, 2017

அஸ்வின்களும் அனிதாக்களும்!- சு. வெங்கடேசன்

இன்றைய தீக்கதிரில், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள " அஸ்வின்களும் அனிதாக்களும்" கட்டுரை, மிகவும் முக்கியமானது. அவசியம் படிக்கவேண்டியது.
ஒடுக்கப்படுபவர்களின் தொடர் சங்கிலியில். அனிதா ஒரு கண்ணி.....
அஸ்வின்களும் அனிதாக்களும்!- சு. வெங்கடேசன்
அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதாவை நாம் அறிவோம். அனிதாவின் மரணத்தை புரிந்து கொள்ள அஸ்வினை நாம் அறிந்து கொள்வது அவசியம். மருத்துவம் என்ற அறிவுத்துறை சார்ந்த செயல்பாட்டுக்காகத்தான் அஸ்வின்களும் அனிதாக்களும் பலியாக்கப்பட்டார்கள்.
அஸ்வின் அனிதாவைப்போல சுமைப்பணியாளர் வீட்டிலே பிறந்தவன் அல்ல, இன்னும் சொல்லப்போனால் அஸ்வின் மனிதனே அல்ல, அவன் கடவுள். அப்படித்தான் அழைக்கப்படுகிறான். தெய்வத்தோடு தெய்வமாக வைத்து போற்றப்பட்ட ஒருவனுக்கும், ஏழை மாணவி அனிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருவரும் மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். அதன் பொருட்டே பலியாக்கப்பட்டவர்கள். ரிக்வேதத்தைப் பாடிய ஆதிக்கவிஞர்கள் அஸ்வினை பெரிதும் போற்றுகிறார்கள். காரணம் அவனது மருத்துவ ஆற்றல். அவன் மருத்துவம் பார்ப்பதால் மனிதனின் அன்பைப்பெற்றவனாக இருக்கிறான். அதனால் தேவர்களுக்கும் மருத்துவம் பார்ப்பவனாக போற்றப்படுகிறான். பின்னர் தேவர்களின் மருத்துவராகவும் வர்ணிக்கப்படுகிறான்.
இந்த ரிக்வேத கதையின் தொடர்ச்சி தான் மகாபாரதத்தில் மருத்துவ ஞானம் பெற்றவர்களான நகுலனும், சகாதேவனும் அஸ்வினி புத்திரர்கள் என்று அழைக்கப்படுவது.ஆனால் அஸ்வினுக்கு இந்த நல்ல பெயர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. நால்வர்ண கோட்பாடு வலிமை பெற்றதும் அதன் தாக்குதலுக்கு மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்களும் தப்பவில்லை.
வேதத்தில் மிகப்பிந்தியதான யஜூர்வேதம் சொல்கிறது. ”பிராமணர்கள் மருத்துவத்தில் ஈடுபடலாகாது”. ஏனென்றால் மருத்துவன் புனிதமற்றவன், யாகத்துக்கு தகுதியற்றவன். எனவே பிராமணன் அத்தொழிலினை செய்யக் கூடாது எனச்சொல்லுகிறது.
மருத்துவன் ஏன் புனிதமற்றவன்? என்று கேட்டால் அதற்கும் யஜூர்வேதம் சொல்லுகிறது, மருத்துவத் தொழில் எல்லோருடனும் பழகுகிற, எல்லோரையும் சிகிச்சையின் பொருட்டு தொட்டுப்புழங்குகிற தொழில். அது வர்ணக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதால் மருத்துவனை தனது கோட்பாட்டின் படி புனிதமற்றவன் என்று முடிவு கட்டுகிறது.
இங்கு தான் புதிய பிரச்சனையை அது சந்திக்கிறது. அப்படியென்றால் தம் முன்னோர்கள் தேவர்களிலே மருத்துவ ஆற்றல் கொண்ட தேவராக அஸ்வினை சொல்லியுள்ளனரே. அவரை என்ன செய்வது? மருத்துவத் தொழிலே கேவலமானது, தீட்டானது என்ற முடிவுக்கு வந்த பின் அத்தொழிலை தேவர்களில் ஒருவன் எப்படி பார்க்க முடியும்? இந்த கேள்விகளோடு அஸ்வினை அணுகுகிற யஜூர்வேதம் வெளிப்படையாக அஸ்வின் மீது தாக்குதல் தொடுக்கிறது. அத்தாக்குதலின் உச்சமாக அது அறிவிக்கிறது “தனது மருத்துவத் தொழில் காரணமாக அஸ்வின் தேவர்களில் ஒருவன் என்ற தகுதியை இழக்கிறான்”. அதன்பின் அஸ்வின் அழித்தொழிக்கப்பட்டு விடுகிறான்.மருத்துவம் பார்க்கும் மனிதனின் மீதும், தெய்வத்தின் மீதும் இவ்வளவு கடுமையான தாக்குதலை தொடுப்பதற்கான காரணத்தை யஜூர் வேதம் சொல்லுகிறது. “எல்லாவகையான மனிதர்களும் மருத்துவர்களை நோக்கி ஓடுகிறார்கள்”. அதுதான் இந்தக் கோபத்தின் அடிப்படை.
சரி. இதற்காக ஏன் யஜூர் வேதாந்திகள் மருத்துவர்களின் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என்று கேட்டால், மருத்துவன் உடலை மையப்படுத்தி தனது பகுத்தறிவால் வினை புரிகிறான். பாவ புண்ணியம், அதிர்ஷ்டம் துரதிஷ்டம், மாயாவாதம் என எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டு கண்ணுக்கு முன்னால் இரத்தம் வலியும் காயத்துக்கு மருந்துகட்டி சரிப்படுத்துகிறான்.
உலகம் நான், அண்டசராசரம் நான், நீயும் நான், அவனும் நான். புண்ணும் நான் மருந்தும் நான் என்று வியாக்கியானம் பேசுவோருக்கும் எதிராகத்தான் மருத்துவ அறிவியலின் ஒவ்வொரு செயலும் இருந்தது. எனவே அவ் அறிவியலை ஒழிப்பதே அடுத்து வந்த மதவாதிகளின் தலையாய கடமையாக இருந்தது.
இந்திய வரலாற்றில் மருத்துவர்களின் மீதும், மருத்துவ அறிவின் மீதும் கொடூரமான தாக்குதல் அதன் பின் அரங்கேறத்துவங்கின. தர்மச் சட்டங்கள் என்ற பெயரில் எழுதப்பட்ட எல்லா சட்டங்களும் மருத்துவர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தையே கொண்டிருந்தது.
அபஸ்தாம்பர் எழுதிய சட்ட நூல் “மருத்துவன் அல்லது அறுவையாளன் தருகிற உணவு அருவருக்கத்தக்கது, அதனை உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் ஏற்கலாகாது” என்று கூறுகிறது. வசிஷ்டரின் சட்ட நூலோ “மருத்துவன் தரும் உணவை ஏற்பது விலைமகளீர் தரும் உணவைப் போல அசுத்தமானது” என்கிறார். இந்தப் போக்கின் உச்சத்தை மநுவின் சட்டநூலிலே பார்க்கலாம். மநு சொல்கிறான் “மருத்துவர்கள் தரும் உணவு புண்ணிலிருந்து வரும் சீழுக்குச் சமம்”.
இந்த தர்மச்சட்டங்களே இந்தியாவில் அதிகாரத்தில் இருந்தவர்களால் பெரும்பாலான காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் தான் ஆதியில் பெரும் அறிவுத்துறையாக வளர்ந்த இந்திய மருத்துவத் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனாலும் இதற்கு எதிரான தத்துவ மரபு கொண்டவர்களும் எளிதில் வீழ்ந்துவிடவில்லை.
ஏனென்றால் வலியால் துடிப்பவன் மருந்தைத் தேடித்தான் ஓடுவானே தவிர மந்திரத்தை தேடியல்ல. எனவே மருத்துவனை நோக்கி மக்கள் ஓடியபடியேதான் இருந்தனர். மருத்துவ அறிவு மதவாதிகளுக்கு எதிராக தன்னை தக்கவைக்கிற போராட்டத்தை நடத்தியபடியே இருந்தது.
இந்தியாவின் தென்புலத்தில் தமிழர்மரபு சுமார் அறுநூறு ஆண்டு பரப்பினைக் கொண்ட சங்ககாலம் முழுவதும் இயற்கையை புரிந்து கொள்ளவும், அதன் ஆற்றலை கற்றுக் கொள்ளவும், இயற்கைக்கும் மனித வாழ்வுக்குமான உயிரோட்டமான தொடர்பை விளங்கிக் கொள்ளவுமான தத்துவமரபை வளர்த்தெடுத்து வைத்திருந்தது.
அதனால்தான் நோய்நாடும் முன் நோயின் முதன்மை காரணத்தை கண்டறியும் பகுத்தறிவு இங்கு வளர்த்தெடுக்கப்பட்டது. மருந்தனெப்படுவது வேண்டாவாம் என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கத்துவங்கியது. தனக்கென்ற தனித்துவமான மருத்துவ முறையை அது உருவாக்கிக் கொண்டது. பல்லாயிரம் செடி கொடிகளின் பேரறிவை தனது இலக்கியம் எங்கும் அது பதிவு செய்துவைத்தது.
ஆனால் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் வைதீகக்கோட்பாடே தமிழக அரசியல் அதிகாரத்தில் கோலோச்சியது. அது பாரம்பரிய மருத்துவ அறிவின் மீதான தாக்குதல் தொடுத்தது. முளைவிடும் ஒவ்வொரு மூலிகை இலையும் மாயாவாதத்துக்கு எதிராகத்தான் தழைக்க வேண்டியிருந்தது. அதனால் தான் இந்த மண்ணில் மருத்துவத்தை இறுகப்பிடித்த சித்தமரபு வைதீகத்துக்கு எதிரான போர்க்குரலை தனது அடையாளமாகக் கொண்டது. மருத்துவ அறிவு தழைக்க வர்ணக்கோட்பாடும், வைதீக சிந்தனையும் ஒழிய வேண்டும் என்பதே சித்தர்கள் கண்ட அறிவியல் உண்மை. அதனால் தான் காய்ச்சலுக்கும் இருமலுக்கும் மருந்தை காய்ச்சிக் கொண்டிருக்கையிலே அவர்களின் வாய் “பறச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா?” என முழங்கியது. “ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்” என நம்மை காறி உமிழ்ந்தவனைப் பார்த்து அவர்கள் காறி உமிழ்ந்தனர். தாவாரம் இல்லாதவனுக்கு தேவாரம் ஏதுக்கடா என நெற்றிப்பொட்டில் சொல்லால் அடித்தனர்.
தனக்கென்ற தனித்த அறிவியலையும், தத்துவத்தையும் இறுகப்பிடித்திருந்ததால் தான் சித்தர் மரபு எளிதில் வீழ்த்தமுடியாததாக நிலைபெற்றது. இந்திய மருத்துவ மரபில் வேறு எதிலும் இல்லாத அளவு கனிம, உலோக அறிவினைக் கொண்டு வளர்ந்த மருத்துவ முறையாக அது பரிணமித்தது.
இது நவீன அலோபதி மருத்துவத்தின் ஆரம்பக் கூறுகளுக்கு இணையான பயணவெளி. அதனால் தான் சரஸ்வதி மஹால் நூலகத்தின் மருத்துவம் சார் மூல ஏடுகளை 1869இல் அட்டவணைப்படுத்தி மூன்று தொகுதிகளாக லண்டனில் வெளியிடப்பட்ட போது பல மூல ஏட்டுச்சுவடிகள் ஜெர்மனுக்கு கொண்டுசெல்லப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. அதை மறுப்பதற்கு இல்லை, அதற்கான வாய்ப்பிருந்தது என்று பின்னால் வந்த அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளதைப் பார்க்கிறோம். காலனிய ஆட்சியின் ஆரம்ப நாட்களின் கண்மருத்துவத்துக்கு இங்கு இருந்த பாரம்பரிய வைத்தியமுறை மிகச்சிறப்பானது என்பதை ஏற்று ஆணைபிறப்பித்ததைப் பார்க்கிறோம்.
அதேபோலத்தான் மருத்துவம்சார் மரபு வலிமை கொண்டிருந்ததால் தான் நவீன மருத்துவம் பற்றி ஆசிய மொழியில் எழுதப்பட்ட முதல் நூலாக தமிழ் நூற்கள் திகழ்கின்றன. டாக்டர் சாமுவேல் கிறீன் இரண வைத்தியம், மருத்துவ வைத்தியம், கெமிஸ்தம் உள்ளிட்ட பல நூல்களை 1850 களிலே எழுதினார். அலோபதி மருத்துவத்தை தமிழ் வழியில் கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலைகளும் உருவாக்கப்பட்டன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு 24 மருத்துவக்கல்லூரியை அரசே நடத்தும் மாநிலமாக தமிழகம் இருப்பது தற்செயல் அல்ல, தனக்கென்ற தனித்த மருத்துவ மரபை, பகுத்தறிவுப் பார்வையை, தத்துவக்கண்ணோட்டத்தை, வைதீகத்துக்கு எதிரான போர்க்குணத்தைக் கொண்டதொரு மாநிலத்தின் அடையாளம் தான் இது.
13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோடி குஜராத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியைக் கூட உருவாக்காததும் தற்செயல் அல்ல, அதுவும் வர்ணக்கோட்பாட்டுக்கு மண்டியிட்ட ஒரு வரலாற்றின் அடையாளம்தான்.இப்பொழுதும் அதே வரலாறு தான் நீடிக்கிறது. மருத்துவர்களை நோக்கி மக்கள் பாய்ந்து போவதால் அவர்களின் மீது கடும் தாக்குதலை அன்று நடத்தியவர்கள், இன்று வேறுவிதத்தில் அத்தாக்குதலை நடத்துகின்றனர். சமூகத்தின் பெரும்பான்மையோரை மருத்துவத்தில் இருந்து வெளியேற்றும் உத்திகளுக்கு அவர்கள் மாறியுள்ளனர்.
இவர்களின் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் தேவனாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, அஸ்வினாக இருந்தாலும் சரி, அனிதாவாக இருந்தாலும் சரி அவர்கள் இரக்கமின்றி அப்புறப்படுத்தப்படுவார்கள்.
இம்மண்ணின் மருத்துவ அறிவினை காக்கும் போராட்டம் அன்றும் இன்றும் ஒரே எதிரியோடுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்துவதில் அன்றுபோல் இன்றும் முன்னணியில் தமிழகமே இருக்கிறது.

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

புதிய தமிழகம் மருத்துவர் கிருட்டிணசாமியின் யோக்கியம்

நீட் தேர்வுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் கிருஷ்ணசாமி, அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஊடகங்களுக்கு  நீலி கண்ணிர் வடித்து பேட்டியளித்து வருகிறார்.

பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி  'கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் மருத்துவ சீட் பெறுவதற்குப் போதிய மதிப்பெண் எடுக்காததால், ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும் ஜெயலலிதா உதவிசெய்ததாகவும்’ குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியிடம் கேள்வியெழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பினார் கிருஷ்ணசாமி.


http://www.vikatan.com/news/tamilnadu/101337-krishnaswamy-daughters-medical-seat-issue-what-happened-on-the-day-of-assembly.html?artfrm=news_most_read


கிருஷ்ணசாமி மகளுக்கு சீட் கொடுக்கப்பட்டது குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக பிரபல ஆங்கிலப் பத்திரிகை 2014-ம் ஆண்டு ஜூலை

23-ம் தேதியில் செய்தி வெளியிட்டுள்ளது.  

அப்போதையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வர் சட்டமன்றத்தில் மருத்துவர் கிச்சாவிடம், ''முதல்வர் ஜெயலலிதா உங்கள் மகளுக்குக்கூட மெடிக்கல் சீட் ஒதுக்கித் தந்தாரே'' என்றார்.


http://www.vikatan.com/news/tamilnadu/101327-jawahirullah-agrees-balabharathi-facebook-post.html


''கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி கூறியது முற்றிலும் உண்மை'' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்


14-வது சட்டமன்றத்தில் கிருஷ்ணசாமிக்கு 6-வது இருக்கையில் அமர்ந்திருந்தவர் பாலபாரதி. காவி கண்ணாடிக்காரருக்கு உழைக்கும் மக்களின் பிரதிநிதி கண்ணுக்குத் தெரிய மாட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், ஜூலை 31, 2017

வைரமுத்து எழுதிய சிவன் பாடல் ஜென்மம் நிறைந்த

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க ! 



https://www.youtube.com/watch?v=MG79HQDIDzM&spfreload=5