வணக்கம்
வியாழன், ஏப்ரல் 23, 2009
முழு அடைப்பின் போது டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி
அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகள் ஏன் திறந்திருந்தன என்பதே அவர்களில் பெரும்பான்மையோர் கேட்கும் கேள்வி.
அஞ்சா நெஞ்சனை பெற்ற அருந்தவச் செல்வரும், வாழும் வள்ளல் ரித்திசை வேட்பாளராக்கி வள்ளலுக்கெல்லாம் வள்ளலானவரும், மக்கள் நலனுக்காக யார் காலையும் பிடிக்க தயங்காதவரும் அதன் காரணமாக அன்னை சோனியாவின் காலை கையை பிடித்து கெஞ்சியவரும், அண்ணா & பெரியார் கொள்கைகளை இப்போதும் கடைபிடிக்கும் சுயமரியாதைச்சிங்கமான தானைத்தலைவர் தன்மானச்சிங்கம் தமிழினக்காவலர் கலைஞர் அவர்கள் சார்பாக நான் பதில்களை சொல்கிறேன்.
1. திமுக என்ற கட்சி தான் முழு அடைப்பு நடத்தியதே தவிர அரசு அல்ல.
2. இந்த அரசு குடிமகன்கள் நலனில் அக்கரை உள்ள அரசு.
3. குடிமகன்கள் முழுஅடைப்பின் போது தகராறு செய்திருந்தால் இந்த அரசை கலைக்க வேண்டும் இதே குள்ள நரிகள் பேசியிருக்கும். இப்போது அவர்களுக்கு அந்த வாய்ப்பை இந்தஅரசு கொடுக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் என்னனமோ பேசுகிறார்கள்.
4. அன்று மட்டும் டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி. இந்த 10,000 கோடி இந்த அரசுக்கு கிடைக்கக்கூடாது அதன் மூலம் இது பல மக்கள் நல செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற வஞ்சகர்களின் எண்ணம் பலிக்காததால் அவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அவர்களைப் பற்றி தமிழினம் நன்கு அறியும்.
5. ஈழ மக்கள் சிக்கல் தீரவேண்டும் என்று முழுஅடைப்பு, பேரணி நடத்தியது இந்த அரசுதான். கலைஞரே பல கடிதங்களை பிரதமருக்கு எழுதியுள்ளார். பல இலட்சம் தந்திகளை உடன்பிறப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். இதை எதிர்கட்சிகளால் மறுக்க முடியுமா?
6. கலைஞரின் சொல்வன்மைக்கு ஈடு கொடுக்கமுடியாதவர்கள் அவர் உளருகிறார், மாற்றி மாற்றி பேசுகிறார், பல்டி அடிக்கிறார் என்கிறார்கள்.
தமிழக மக்களே மறக்காமல் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் சார்பு வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்.
திங்கள், ஏப்ரல் 20, 2009
கருணா சிறையில் கொடுமை - வருத்தப்படுகிறேன்.
வேற ஒன்றும் இப்போது என்னால் சொல்ல முடியாது. நீங்களாக கருணா என்பதை கருணாநிதி என்று எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய துரோகி கருணாவும் இப்போது அரசியல்வாதி தான் என்பதை நினைவில் கொள்க.
வெள்ளி, ஏப்ரல் 17, 2009
பிரியங்கா வதேரா - காந்தி
பின்னாளில் சில செய்திகளை ஆவணப்படுத்த முயலும் போது இது எல்லோரையும் குழப்பும்.
நளினியை பிரியங்கா சந்தித்ததை எழுதிய போது கூட பிரியங்கா வதேராவை பிரியங்கா காந்தி என்றே எழுதினார்கள். நளினி - பிரியங்கா காந்தி சந்திப்பு...
தமிழ்நாட்டின் முதல்வர் யாருன்னு கேட்டா MGR ன்னும், பிரதமர் இந்திரா காந்தின்னும் சிலர் சொல்லுவாங்க. அவங்களுக்கும் இந்த செய்தியாளர்களுக்கும் என்ன வேறுபாடு?
வெள்ளி, ஏப்ரல் 03, 2009
சோனியா காந்தியின் சம்பந்தி தூக்கு மாட்டி மரணம்
அகில இந்திய காங்கிரசு தலைவி சோனியா காந்தியின் சம்பந்தி இராசேந்தர் வதேரா மின் விசிறியில் தூக்கு மாட்டி மரணமடைந்தார்.
60வயதுடைய இவர் நுறையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில காலமாக டில்லியில் யூசப் சராய் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். காலை 9:30 க்கு இவரது உடலை விடுதி ஊழியர் கண்டு சொல்லியுள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றனர், அங்கு இவர் இறந்து விட்டதாக கூறினர். பின் இவரது உடல் சப்தர்சங் மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதபரிசோதனைக்கு பின் இவரது உடல் மகன் இராபர்ட் வதேராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரியங்கா வதேராவின் கணவர் இராபர்ட் வதேராவின் தந்தை இராசேந்தர் வதேரா. இவருக்கும் இவர் மகன் இராபர்ட் வதேராவுக்கும் சுமூக உறவு இல்லை.
7 ஆண்டுகளுக்கு முன் இராபர்ட் வதேரா தன் தந்தைக்கும் சகோதரர் இரிச்சர்டு வதேராவுக்கும் வழக்குரைஞர் மூலம் நோட்டீசு அனுப்பி இருந்தார். அதில் தனக்கும் பிரியங்காவுக்கும் உள்ள உறவை பயன்படுத்தி இவர்கள் உத்திரப்பிரதேச காங்கிரசு செயற்குழுவிலும், மொரதாபாத் மாவட்ட காங்கிரசு செயற்குழுவிலும் சிலரை நியமிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஒரு பேட்டியில் இந்த புகார்களை மறுத்திருந்த இராசேந்தர் வதேரா, தனது மகன் பிரியங்காவை மணந்தது பிடிக்கவில்லை என்றும் சொல்லி இருந்தார்.
செப்டம்பர் 30, 2003 ல் இராசேந்தர் வதேராவின் மூத்த மகன் இரிச்சர்டு வதேரா மொரதாபாத் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 2001ல் இவரின் மகள் மிச்சேல், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கார் விபத்தில் அடிபட்டு இறந்தார்.
ஏப்ரல் 3ம் தேதி எழுத ஆரம்பித்து இப்போது முடித்துவிட்டேன். அப்பாடி.....
செவ்வாய், மார்ச் 17, 2009
போப்பும் ஆணுறையும்.
போப்போட வேலை என்ன? உலகம் முழுக்க கிருத்துவ மதத்தை (கத்தோலிக கிருத்துவம்) பரப்புவது. குறிப்பா சீனா, இந்தியா & ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் பரப்புவது. கிருத்துவ மதத்தினர் மீது தாக்குதல் நடந்தால் அதை கண்டிப்பது. அப்பப்ப கருத்துகளை சொல்வதும் அவர் வேலை தான். ஆணுறை எயிட்சை கட்டுப்படுத்துவதில்லை அதற்கு மாறாக அதிகம் பரவ காரணமாக உள்ளது என போப் சான்பெனடிக்ட் தன் ஆப்பிரிக்க பயணத்தில் கூறியுள்ளார். இக்கருத்துக்கு பலரும் குறிப்பாக மேற்கு நாடுகளை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்மூர்ல இதைப்பற்றி ஏதாவது செய்தி வந்ததா என்று தெரியவில்லை.
இக்கருத்து மிகவும் அபாயமானது. ஆப்பிரிக்க கண்டத்தில் தான் அதிகளவில் எயிட்சு நோய் உள்ளது. உடலுறவு கொள்ளணுமா? குறைந்தபட்சம் ஆணுறை கொண்டு அதை செய்யுங்கள் என்பது எயிட்சுக்கு எதிராக போராடுபவர்களின் கோரிக்கை. ஆணுறை மூலம் எயிட்சு கட்டுபடுத்தப்படுமா? இதன் மூலம் பலன் உண்டு. இது எயிட்சை கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்று. குறிப்பா உடல் உறவு மூலம் பரவும் முறையை இது தடுக்கும். அதிக அளவிலான எச்.ஐ.வி கிருமிகள், பாதிக்கப்பட்டோர் உடல் உறவு கொள்வதன் மூலமே அடுத்தவருக்கு பரவுகிறது. அதாவது உடல்உறவு எயிட்சு நோயை பரப்புவதில் முதலிடத்தில் உள்ளது.
ஏன் போப் சொன்னதுக்கு இவ்வளவு எதிர்ப்பு? போப் நிறுவனத்தப்பட்ட சமயத்தின் ஒரு பெரும் பிரிவின் தலைவர். இலத்தின் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆசியா கண்டத்தைச் சார்ந்த நாடுகள் குறிப்பாக சொல்வதானால் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் கத்தோலிக கிருத்துவம் அதிகளவில் பின்பற்றப்படுகிறது. இங்குள்ள சர்ச்சுகள் இவரின் உத்தரவு (பேச்சு) காரணமாக ஆணுறைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டால் அதனால் பாதிக்கப்படப்போவது யார்? அறியா மக்கள் தான்.
போப் இது போன்ற மக்களை பாதிக்கும் கருத்துக்களை சொல்வதை நிறுத்த வேண்டும்.