வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, அக்டோபர் 28, 2012

மத்திய அமைச்சரைவை மாற்றம் அக்டோபர் 28

மத்திய அமைச்சரவையில் அக்டோபர் 28, 2012 அன்று நடைபெற்ற மாற்றத்தில் 17 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்கள் சிலருக்கு துறைகள் மாற்றப்பட்டன.

புதிய ஆய அமைச்சர்கள்:

ரகுமான் கான் - சிறுபான்மையினர் நலம்

தின்சா படேல் - சுரங்கம்

அஜய் மேக்கான் - வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு (விளைாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர்)

எம்.எம்.பல்லம் ராஜு - மனிதவள மேம்பாடு

அசுவனி குமார் - சட்டம், நீதி

ஹரீசு ராவத் - நீர்வளம் (உத்தராகண்டத்தில் முதலமைச்சர் பதவி தரப்படாததால் ஆய அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்)

சந்த்ரேசு குமாரி கடோச் - கலாசாரம்


துறை மாற்றப்பட்டுள்ள ஆய அமைச்சர்கள்:

வீரப்ப மொய்லி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

ஜெய்ப்பால் ரெட்டி - அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்தார்)

கமல்நாத் - நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரம்

வயலார் ரவி- வெளிநாட்டு இந்திய விவகாரம்

கபில் சிபல் - தொடர்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சி.பி.ஜோஷி - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

குமாரி செல்ஜா - சமூக நீதி மற்றும் நலம்

பவன் குமார் பன்சால் - ரயில்வே

சல்மான் குர்ஷித் - வெளியுறவு (சட்டம், நீதி, சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்தார்)

ஜெய்ராம் ரமேஷ் - கிராமப்புற வளர்ச்சி



புதிய இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

மனீஷ் திவாரி - செய்தி, ஒலிபரப்பு

கே.சிரஞ்சீவி - சுற்றுலா



துறை மாற்றப்பட்டுள்ள இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு):

ஜோதிர் ஆதித்யா சிந்தியா - மின்சாரம்

கே.எச்.முனியப்பா - குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (K ஊர் கோலார்,  H தந்தை அனுமப்பா)

பாரத்சின்ஹ் மாதவ்சிங் சோலங்கி - குடிநீர் மற்றும் உடல்நலம்

சச்சின் பைலட் - கார்ப்பரேட் / தொழில்துறை

ஜிதேந்திர சிங் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு



புதிய இணையமைச்சர்கள்

சசி தரூர் - மனித வள மேம்பாடு

கொடிகுன்னில் சுரேஷ் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

தாரிக் அன்வர் - வேளாண்மை

கோட்லா ஜெய சூர்ய பிரகாஷ் ரெட்டி- ரயில்வே

ராணீ நராஹ் - பழங்குடியினர் நலம்

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி - ரயில்வே

அபு அசிம் கான் சவுத்ரி - சுகாதாரம், குடும்ப நலம்

சர்வே சத்யநாராயணா - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை

நிநாங் எரிக் - சிறுபான்மையினர் நலம்

தீபா தாஸ் முன்ஷி - நகர்ப்புற வளர்ச்சி

போரிகா பல்ராம் நாயக் - சமூக நீதி மற்றும் அதிகாரம்

கிள்ளி க்ருபாராணி - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்

லால்சந்த் கடாரியா - பாதுகாப்பு


துறை மாற்றப்பட்டுள்ள இணையமைச்சர்கள்:

இ.அகமது - வெளியுறவு

டி.புரந்தேஸ்வரி - வர்த்தகம் மற்றும் தொழில்

ஜிதின் பிரசாதா - பாதுகாப்பு மற்றும் மனிதவள மேம்பாடு

எஸ்.ஜெகத்ரட்சகன் - புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

ரஞ்சித் பிரதாப் நாராயின் சிங் - உள்துறை

கே.சி.வேணுகோபால் - பயணிகள் விமானப் போக்குவரத்து

ராஜீவ் சுக்லா - நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்ட கமிஷன்


http://www.ndtv.com/article/india/cabinet-reshuffle-list-of-ministers-285220
http://news.vikatan.com/index.php?nid=10980#cmt241

சுரங்க ஊழல் வெளிவந்த போது யார் எப்போ அத்துறையின் அமைச்சர்களாக இருந்தார்கள் என்பது தெரியாததால் அமைச்சரவை மாற்றத்தை என்பதிவில் சேமிக்கலாம் என்று தோன்றியதின் விளைவு.

செவ்வாய், அக்டோபர் 23, 2012

என்னுடைய நிழற்படம் பல தளங்களில்

எனக்கு நிழற்படம் எடுப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சிறந்த நிழற்படம் கலைஞனாவது எனது ஆசைகளில் ஒன்று. தமிழில் புகைப்படக்கலை என்ற வலைப்பதிவு மூலம் நிழற்படம் பற்றி நான் அறிந்து கொண்டது நிறைய. படித்ததை செயல் படுத்தி பார்த்தேனா என்பது தனி. அப்படி செய்திருந்தால் இன்னேரம் பெரிய ஆளா வந்திருப்பேன். அவர்கள் மாதந்தோறும் நடத்தும் போட்டிகள் சிலவற்றில் நான் கலந்துகொண்டுள்ளேன். நிறைய போட்டிகளில் கலந்துக்க முடியாம போனதுக்கு காரணம் சிறந்த படத்தை அனுப்பவேண்டும் என்று நினைத்து அதை எடுப்பதற்குள் போட்டிக்கு படங்கள் அனுப்பவேண்டிய இறுதி நாள் வந்துடும். மாத போட்டிக்கு 2 மாசம் எடுத்துக்கிட்டா  எப்படி? இஃகி இஃகி.

5 ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு போயிருந்த பொழுது தமிழ் விக்கிபீடியாவுக்கு பயன்படுத்தலாம் என்று பல படங்கள் எடுத்து வந்திருந்தேன். சில படங்கள் கட்டற்ற முறையில் கிடைக்காது மேலும் சில படங்கள் வணிக ஊடகம் உட்பட எந்த இடத்திலும் (ஊடகத்திலும்) வந்திருக்காது. எடுத்த படங்களை பிளிக்கர் தளத்திலும் ஏற்றியிருந்தேன். எப்பொழுதாவது பிளிக்கர் கணக்கை திறந்து பார்ப்பது வழக்கம். நான் நொய்யல் ஆற்றை எடுத்த படத்தை பயன்படுத்த அனுமதி கேட்டு ஒரு பின்னூட்டம் சரி பயன்படுத்திக்கங்கன்னு சொல்லிட்டேன். நான் ஏற்றிய படங்கள் அனைத்துக்கும் காப்புரிமை விலக்கு அளித்துள்ளேன். இப்ப கணக்கை திறந்து பார்த்தா இன்னும் இரண்டு தளங்கள் இவற்றை பயன்படுத்தியுள்ளோம் என பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். 3 மாதத்துக்கு முன் புகழ்பெற்ற வணிக ஊடகத்திலிருந்து  இதை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டிருந்தார்கள். தக்க சன்மானம் தருகிறோம் அதிக resolution உள்ள படம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். இன்னும் அதிக resolution உள்ள என் படம் வேண்டுமா  என கேட்டுள்ளேன். புகழ்பெற்ற வணிக ஊடகம் என் படத்தை பயன்படுத்தியதா என தெரியவில்லை. என் படத்தையும் நாலு பேர் பயன்படுத்தாறங்ளேன்னு எனக்கு மகிழ்ச்சி.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் எந்த படம் எப்ப யாருக்கு பயன்படும் என்று சொல்ல முடியாது. படத்தை புடிச்சி போடுங்க. அமராவதி ஆறு, அணை, பவானி ஆறு, அணை, வைகை ஆறு, அணை, தாமிரபரணி ஆறு, அணை,  .....


திங்கள், அக்டோபர் 15, 2012

புரட்டாசி சனிக்கிழமை ஒருசந்தி - நைனாமலை


புரட்டாசி மாசம் நிறைய பேர் கறி திங்கமாட்டாங்க. நானும் அதில் ஒருத்தன் (இப்ப முட்டை மட்டும் உண்டு இஃகி இஃகி) ஆனா ஒருசந்தி விட்டாச்சுன்னா வீட்டுல் கறி திங்க சமைக்க, கடையில் கறி திங்க தடை இல்லை.கறி திங்கனும் என்பதற்காகவே சில முறை முதல் சனிக்கிழமையே ஒருசந்தி விட்டதும் நடந்திருக்கு இஃகி இஃகி. வழக்கமா நான் புரட்டாசி 3ம் சனிக்கிழமை தான் ஒருசந்தி இருப்பது வழக்கம். இந்த முறை 4ம் சனிக்கிழமை ஒருசந்தி இருந்தேன். டூயிங்... மலரும் நினைவுக்கு போயிட்டேன்

ஊரில் இருக்கும் போது ஒருசந்தி இடுவதற்கு முன் நைனா மலைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டில் ஒருசந்தி இடுவது(இருப்பது) வழக்கம். ஊர்ல இருக்கிறப்ப விடிய காலை 3~4 மணிக்கு நைனாமலைக்கு போய் மலை ஏறி உச்சியில் உள்ள வரதராச பெருமாள கும்பிட்டுவிட்டு சுமார் காலை 9~10 மணி அளவில் வீட்டுக்கு வருவேன்.

நைனா மலை என்பது உயரமான மலையான்னு கேட்டா இல்லை ஆம் என்று தான் சொல்ல வேண்டும். நைனா மலையில் விறு விறுன்னு எங்கேயும் நிக்காமல் வேகமாக ஏறினால் ஒரு மணி நேரத்தில் உச்சியை அடையலாம், உச்சியில் கல்லால் கட்டப்பட்ட வரதராச பெருமாள் கோயில் உள்ளது. ஏதோ இராசா அக்கோயிலை கட்டியிருக்கிறார் ஆனா யார் அந்த இராசா என்று தெரியவில்லை. பாதை சின்னது நிறைய இடத்துல ஒழுங்கா இருக்காது கோயில் கட்டின காலத்துல சில இடங்களில் கல் படிகளை கட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன், அந்தப்படிகள் சிலது வழியில் கொஞ்சம் இருக்கு. அதுக்கப்புறம் யாரும் படி அமைத்ததாக தெரியவில்லை. நடந்து தான்
உச்சிக்கு செல்ல முடியும் வண்டிகள் செல்ல பாதை இல்லை.  விடியகாலையில் ஏறுவது சிறந்தது ஏன்னா அப்ப கூட்டம் குறைவா இருக்கும் மேலும் 8 மணிக்கு அப்புறமா கூட்டம் அதிகமாகிடும் வெயில் இல்லாததால் சோர்வு குறைவாக இருக்கும், பலர் இரவு நேரத்தில் ஏறுவாங்க 6 மணிக்கெல்லாம் அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க. மேலும் கதிரவனின் தயவால் பகலில் மலை ஏறுவது சற்று கடினமாக இருக்கும்.  ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒரே வழிதான் அதனால சில இடங்களில் எச்சரிக்கையாக தான் ஏறனும்\இறங்கனும்.

அடிவாரத்துல நிறைய கடைங்க இருக்கும் மலை ஏறப்போகும் முன் பைநிறைய பொறி, கடலை, கொய்யா, சாத்துக்குடின்னு வாங்கிக்கிட்டு ஏறுவது சிறந்தது. அடிவாரத்துல அனுமார் கோயில் இருக்குது சிலர் மலை ஏறும் முன்னும் சிலர் மலையில் இருந்து இறங்கியபின்னும் அனுமாரை கும்பிடுவாங்க. மலை ஏறாத பெருங்கூட்டம் அனுமார கும்பிட நிற்கும் என்பதால் மலை ஏறும் முன் கும்பிடுவதே சிறந்தது. கோயில் பூட்டி இருந்தது என்றால் சாமிக்கு முன்னால இருக்கும் படியில்சூடத்தை பத்த வைச்சு கும்பிட்டு மலை ஏற வேண்டியது தான். கம்பி கதவு தான் போட்டிருப்பாங்க அதனால சாமி நல்லா தெரியும், அனுமாரும் கிட்டதட்ட 6 அடி உயரம் இருப்பார். 

நைனாமலை சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தையை நோக்கி செல்லும் சாலையில் கிட்டத்தட்ட 1~2 கி.மீ தொலைவில் இருக்கு. நாமக்கலில் இருந்து சென்றால் சேலம் சாலையில் புதன்சந்தையை அடைந்து அங்கிருந்து கிழபுறமாக சேந்தமங்கலத்துக்கு செல்லும் சாலையில் சென்றால் அடையலாம். மொத்த தூரம் 10~12 கிமீ இருக்கும். அதிக அளவான பேருந்துகள் இந்த தடத்தில் தான் இயக்கப்படுகின்றன. அதாவது நாமக்கல் - நைனைமலை. நாமக்கல்லில் இருந்து இன்னொரு வழியும் உள்ளது அது மரூர்பட்டி, பொட்டணம் வழியாக செல்லும் ஆனால் இத்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. சாலையும் நன்றாக இருக்காது மேலும் இது கொஞ்சம்
தூரமும் கூட. நான் பேருந்தில் போகக்கூடிய ஆளா? சைக்கிள் அல்லது டிவிஎசு 50 தான் நம்ம வண்டி. முதல் 3 ஆண்டுகள் சைக்கிள் அப்புறம் டிவிஎசு 50. இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து தான் போவோம்.

மலை ஏறும் போது அங்கங்க உள்ள நம் மூதாதையர்களுக்கு பொறியை போட்டுக்கிட்டு போவோம், நிறைய பேர் அங்க சுத்திக்கிட்டு இருப்பாங்க, கொஞ்சம் அசந்தா பையை நம்மாளு தூக்கிக்கிட்டு போயிடுவாறு அதனால உசாரா தான் இருக்கனும். வழியில் நிறைய இடங்களில் குச்சி ஐஸ், சாத்துக்குடி, கொய்யா போன்றவற்றை விற்பார்கள். விலை அதிகமா இருக்கும், நாங்க ஐஸ் மட்டும் வாங்கிக்குவோம். அதுமட்டுமல்லாமல் பிதாமகனில் சூரியா கட்டை உருட்டற மாதிரி நிறைய பேர் கட்டை உருட்டி பணம் பறிச்சிக்கிட்டு இருப்பாங்க. உச்சிக்கு பக்கத்துல பாலி (சிலருக்கு அது சுனை சிலருக்கு அது கிணறு எங்களுக்கு அது பாலி) ஒன்னு இருக்கு அங்க அச்சு வெல்லத்தை போடுவோம்,  மரு இருந்தால் அது மறைந்தால் பாலியில் வெல்லம் போடறேன் என்று வேண்டி இருப்பவர்கள் வெல்லத்தை குடுத்தனுப்புவார்கள். நமக்கு அல்லது நமக்கு தெரிஞ்சவங்களுக்கு மரு இருக்கும், மலை ஏற முடியாதவங்க பாலியில் மறக்காம வெல்லத்தை போடவேண்டும் என்று சொல்லி என்கிட்ட வெல்லம் குடுப்பார்கள். நான் மறுக்க முடியுமா?. பாலின்னா என்னன்னு அகரமுதலியில் காணவில்லை. பாலி என்ற சொல் புழக்கத்தில் உண்டு. பாறைகளில் தேங்கியிருக்கும் நீருக்கு பாலின்னு பெயர். கொஞ்சமா இருக்காது நிறைய நீர் இருக்கும். பாறையும் பெரியதாக இருக்கும். சில (எனக்கு தெரிந்து நிறைய இடங்களில்) இடங்களில் அது சீக்கிரம் வற்றாது, ஆண்டு முழுவதும் இருக்கும், மழை நீரே அதன் ஆதாரம்.

பாலிக்கிட்ட காத்து சில்லுன்னு வீசும் மலை ஏறி களைச்சு போனவங்களுக்கு அந்த காத்து சுகமா இருக்கும். அங்க நிறைய கடைங்க இருக்கும் அதாவது கயிற்று கடைகள், நிறைய பேர் குச்சி ஐஸ், சாத்துக்குடி, கொய்யா விப்பாங்க. அங்க இருந்து உச்சி வரை ஏற்றமாகவும் ஏற கொஞ்சம் கடினமாகவும் இருக்கும். உச்சியை கொஞ்சம் சீவிவிட்டு கோயில் கட்டியிருப்பாங்க. உச்சியில் கோயில் மட்டும் தான் இருக்கும். முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோயில். அடிச்சிபுடிச்சி சாமியை பார்க்கனும், கூட்டம் அதிகமா இருந்தா கோயிலில் சாமிய கும்பிடாம கோபுரத்துக்கு பின்புறம் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு இறங்குவோம்.
நான் மட்டும் இல்ல என்னைப்போல் நிறைய பேர் இப்படி தான் செய்வார்கள். புரட்டாசி  சனிக்கிழமை கூட்டம் குறைவா இருந்து பார்த்ததில்லை.  புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயிலில் கூட்டம் குறைவா இருந்து நீங்க பார்த்திருக்கிங்க? 2 முறை சாமியை பார்த்து இருக்கேன்.

இறங்கி வரப்ப கொண்டுபோனதெல்லாம் காலியாயிடும் அதனால காசு கொடுத்து வழியில் இருக்கும் கடையில் ஏதாவது தீனி வாங்கி தின்னுகிட்டே வர வேண்டியது தான். அடிவாரம் வந்ததும் நாமக்கட்டி, பூ, பொறி எல்லாம் வாங்கிட்டு வீடு வந்து சேருவோம். நாமக்கட்டிய மட்டும் மறக்காம வாங்கியாறனும், மலைக்கு போயிட்டு வந்து ஒருசந்தி விடுறோம் என்பதற்கு அதான் அடையாளம்.  சாமந்திப்பூ தான் முதலில் வாங்கும் வழக்கம் அதன் விலை அதிகமானதாலும் வரத்து குறைந்ததாலும் இப்ப எல்லாம் கதம்பம் தான், சில முறை துளசி மாலையும் வாங்கி வந்ததுண்டு. 1 மட்டும் வாங்குனா அது வண்டிக்கு போகும். வாங்கிய பூவில் 1 முழம் நாம வந்த வண்டிக்கு. சாமி கும்பிட்டுவிட்டு ஒருசந்தி இருக்கறவங்க எல்லாம் முதலில் தின்போம் (பசியோட இருக்காங்கல்ல). மலை ஏறவில்லை என்றாலும் ஒருசந்தி இருக்கலாம். பழம் பொறி மட்டும் தின்னாலும் அவங்க ஒருசந்தி இருக்கறதாதான் எடுத்துக்கனும், மலை ஏறுபவனும் அதை தின்னுகிட்டு தான் மலை ஏறுவான் என்பதால் அது சாமி குத்தம் ஆகாது இஃகி.  நாம வர தாமதம் ஆகிவிட்டால் சில முறை நாம இல்லாமலேயே சாமி கும்பிட்டுவிட்டுவார்கள் அப்ப கடும் கோபம் வரும், அது மலை ஏறி வந்த குதூகலத்தையே கெடுத்துடும். அப்படி இரு முறை ஆனதால் எப்பவும் நான் வந்த பிறகு தான் சாமி கும்மிடனும் என்று உறுதி வாங்கிட்டுதான் கிளம்பறது வழக்கம். அவங்கள நம்பமுடியாதுன்னு 8-9 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வர்ற மாதிரி தான் கிளம்பறது. சில முறை அசந்து தூங்கிட்டா . மலை ஏறுனா வீட்டுக்கு வர 10 மணிக்கு மேல ஆகிடும், நாம வரும் வரை ஒருசந்தி விட காத்திருக்கமாட்டார்கள் என்ற அனுபவ பாடம் உள்ளதால், மலை ஏறாம அடிவாரத்துல இருக்கும் அனுமார் கோயிலோட வந்துடுவேன் ஆனா பழம் , பொறி, பூ, நாமக்கட்டி எல்லாம் மறக்காம வாங்கிவந்துடுவேன் இஃகி.

சாமி படையலில் மஞ்ச பூசனிக்காய்  கூட்டு, வாழைக்காய் பொரியல், அப்புறம் எதாவது ஒரு பொரியல் அனேகமா அவரையா இருக்கும், நெய், பருப்பு போன்றவை இருக்கும். இந்த மாதிரி சாமி கும்பிடும் போது அல்லது வீட்டில் விருந்து வைத்தால் மட்டுமே நமக்கு பொரியல், கூட்டு எல்லாம் கிடைக்கும். பெருமாளுக்கு கோவிந்தா! கோவிந்தா!

செவ்வாய், ஜூலை 10, 2012

கண்ணதாசன் கவிஞன் அல்ல

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என முத்தமிழும் அறிந்த வித்தகர் (யாருங்க அந்தாளு?) ஒருவர் கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

புதன், பிப்ரவரி 01, 2012

தமிழ் விக்கிப்பீடியா போட்டி

நீங்க Digital camera வைத்திருப்பவரா? நீங்க தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க அருமையான வாய்ப்பு. நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை தமிழ் விக்கிப்பீடியா ஊடகப்போட்டி ஒன்றை அறிவிச்சிருக்காங்க. இதில் தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் போன்றவற்றை பதிவேற்றலாம். போட்டின்னா காசு இல்லாமலா?
  • முதல் பரிசுக்கு 200 அமெரிக்க டாலர். 
  • இரண்டாம் பரிசுக்கு 100 அமெரிக்க டாலர்.
  • மூன்றாம் பரிசுக்கு 50 அமெரிக்க டாலர்
  • ஆறுதல் பரிசுகள் இரண்டு,  அவற்றிற்கு தலா 25 அமெரிக்க டாலர்
  • மூன்று பேருக்கு தொடர் பங்காளிப்பாளர் பரிசு,  அவற்றிற்கு தலா 100 அமெரிக்க டாலர்
  • சிறப்புப் பரிசு ஒன்றிற்கு 150 அமெரிக்க டாலர்
மொத்தம் 850 அமெரிக்க டாலருக்கு பரிசுகள்.
உங்களிடம் இருக்கும் பழைய புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் போன்றவற்றை பதிவேற்றலாம். உங்களிடம்  Digital camera இல்லையா? கவலையை விடுங்க ஒலிக்கோப்புகளாகவும் பங்களிக்கலாம். உதாரணத்துக்கு சென்னை என்பதை சென்னை, ஷென்னை, க்ஷென்னை  இப்படி பலவிதமா உச்சரிப்பாங்க (பலுக்க). சிலருக்கு சரியான உச்சரிப்பு தெரியாது. அப்படிபட்டவர்களுக்கு ஒலிக்கோப்பு உதவும். மாம்பழம் என்பதன் உச்சரிப்பு நிறைய பேருக்கு சரியா வராது. ஒலிக்கோப்பு இதை சரிசெய்யும். இது தற்காலத்து மட்டும் அல்ல, உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் விக்கிப்பீடியாவை பார்க்கறாங்க. இந்த ஒலிக்கோப்புகள் குறிப்பா அயல் மாநில, நாட்டில் உள்ள தமிழருக்கு நிறைய பயன்படும். ஏதாவது சந்தேகமா இந்த சுட்டியில் கேக்கலாம்.

போட்டி முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு. என்ன கோதாவில் இறங்கிட்டிங்களா? பரிசு உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்.

புதன், ஜனவரி 25, 2012

சிறு குறிப்புகள் - 01 25 2012

எனக்கும் சமையல் கட்டுக்கும் காத தூரம். சில குறிப்புகள் எனக்கு தெரிஞ்சிடுச்சி, அதை யார்கிட்டயாவது சொல்லலைன்னா என் மண்டை வெடிச்சிடும், அதான் இங்க இஃகி இஃகி.

வீட்டுல சூடம் வாங்கி வைத்திருப்போம். கொஞ்ச நாள் ஆனா அது கரைய தொடங்கும்.  குப்பியில் போட்டு மூடி வைத்திருந்தாலும் கரைவதை தடுக்க முடியாது. சூடம் கரைவதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. குப்பியில் சில மிளகுகளை போட்டு மூடி வைத்தால் சூடம் கரையாது.

காய்கறிகளை வாங்கி அதை குளிர்சாதன பெட்டியில்  வைத்தாலும் விரைவில் அது கெட்டு விடும். இதை தவிர்க்க காய்கறிகளில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துவிட்டு (தாளில் காய்கறிகளை ஒற்றி எடுத்தால் ஈரப்பதம் நீங்கிவிடும்) தாளில் சுற்றி வைத்தால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.


சிலர் ஆனா ஊன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பார்கள்.  நிறைய தேங்காய்கள் (உடைந்த தேங்காய் மூடி தான்) சேர்ந்து விடும். அந்த தேங்காயை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். சமையலுக்கும் எவ்வளவு தான் பயன்படுத்தறது, மீதியை என்ன செய்வது? தேங்காய் மூடியை நன்றாக துருவி தேங்காய் துருவல்களை எடுத்து அதை நெகிழி பையில்(plastic bag) போட்டு நன்றாக மூடி குளிர்சாதன பெட்டியின் உறையவை (freezer - குளிர்சாதன பெட்டியின் மேல் கதவுடன் பனிக்கட்டி செய்யக்கூடிய ஒரு பகுதி இருக்குமே அதான்) இல் வைத்துவிடவும். தேவையான போது பையில் உள்ள தேங்காய் துருவலில் தேவையான அளவு எடுத்து அதை நுண்ணலை சூடாக்கல் கருவியில் (microwave) வைத்து சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம், நுண்ணலை சூடாக்கல் கருவி இல்லாதவர்கள் அல்லது அதை பயன்படுத்துவதை விரும்பாதவர்கள் வாணலியில் சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம். சூடாக்காமலும் தேங்காய் துருவலை பயன்படுத்தலாம் ஆனால் அப்படி பயன்படுத்தினால் திரி திரியாக (திப்பி திப்பியாக) தேங்காய் இருக்கும் சுவையே இருக்காது, சூடாக்கி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

திங்கள், ஜனவரி 09, 2012

அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு

நவம்பர் 2012ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் சனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுவார் /போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து நிற்க ஆளை தேர்ந்தெடுக்கும் பணியில்(உட்கட்சி தேர்தல்) குடியரசு கட்சி உள்ளது.

உட்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று யார் ஒபாமாவை எதிர்க்க போகிறார் அப்படிங்கிற எதிர்பார்ப்பு தினமும் கூடிக்கிட்டே இருக்கு. நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. இவர் தான் முன்னனியில் இருக்காருன்னு யாரையும் சொல்லமுடியலை. ஆனா சீரா எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  மிட் ராம்னி முன்னனியில் இருக்கார் ஆனா அவர் ஆதரவு பெரிய அளவில் இல்லை அதனால அவர் தான் வெற்றி பெறுவார் அப்படின்னு யாராலும் சொல்ல முடியலை. "Anybody but Romney" - ராம்னிய தவிர யாரு வேண்டுமானாலும் சரி- அப்படின்னு பலம் வாய்ந்த கிருத்துவ பழமைவாதிகள் குழு குடியரசு கட்சியில் இருக்கு. ராம்னிக்கு மாற்றா வேற ஆள அவங்க தேடறாங்க, அவங்க யாராவது ஒருத்தரை ஆதரிக்க முடிவு எடுத்தா ராம்னி காலி.

ராம்னியும் கிருத்துவர் தான் ஆனா அவர் மொர்மன் என்ற பிரிவை சார்ந்தவர். அது தான் அவருக்கு சிக்கலே. பெரும்பாலான குடியரசு கட்சிகாரர்கள் சீர்திருத்த சபையை(புரட்டதசுட்டன்\ Protestant) சார்த்த கிருத்துவர்கள். எவங்கலிசம் , பாப்டிசம், பெத்தகொசுத்தே,  மற்ற பிரிவுகள் எல்லாம் இதுல வருது. இவங்களுக்கு மொர்மன் பிரிவை சுத்தமா பிடிக்காது. சில பேர் அவங்க கிருத்துவர்களே அல்ல அப்படிப்பாங்க.

டீ பார்ட்டி
டீ பார்ட்டி குழு என்று திடீர்ன்னு ஒன்று 2009 வாக்குல குடியரசு கட்சியில் முளைத்தது. இவர்களை ஆரம்பத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட குடியரசு கட்சிக்காரங்க கண்டுக்கலை. ஆனா இவங்களை மீறி கொட்டை போட்ட ஆட்களால் பிரைமரி எனப்படும் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. இவங்க பலம் 2010 காங்கிரசு மற்றும் செனட் தேர்தலில் நன்கு வெளிப்பட்டது. இப்ப குடியரசு கட்சி கீழவையான காங்கிரசில் பெரும்பான்மை பெற்று இருக்குன்னா அதுக்கு டீ பார்ட்டி குழு தான் காரணம்.

ஆரம்பத்தில் இருந்த நிலை

டீ பார்ட்டி முதலில் மிச்சால் பாக்மன் அவர்களை ஆதரித்தது. அவர் முன்னனியில் இருந்தார், ரிக் பெர்ரி வந்தவுடன் எல்லாரும் அவரை ஆதரித்ததால் மிச்சால் பாக்மன் முன்னிலை தகர்ந்தது. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட குடியரசு கட்சி போட்டியாளர்க்கிடையேயான தருக்கத்தில் மோசமாக செயல் பட்டதால் (பலமுறை) இவரின் முன்னனி தகர்ந்தது. தருக்கத்தில் 9-9-9 என்று வரி விதிப்பு பற்றி எளிமையாக விளக்கியதால் கெர்மன் கெய்னுக்கு ஆதரவு பெருகியது. இதை அவரே எதிர்பார்க்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இவரின் ஆதரவு குறைந்தது. ராம்னிக்கு எதிரா உறுதியான வேட்பாளர் வேண்டும் என்பதால் நியுட் கிங்ரிச்க்கு ஆதரவு கூடியது. ஆரம்பத்தில் இவரின் போக்கு பிடிக்காமல் இவரின் குழுவில் பலர் விலகியதும் நடந்தது. இவரு போட்டி போடறது தண்டம் என்று பலர் நினைத்திருக்க திடீர் என்று இவருக்கு ஆதரவு பெருகியது.  பிரடி மே என்ற வீட்டு கடன் வழங்கும் நிறுவனத்திற்கு ஆலோசனை சொன்னதற்கு கூலியாக 1.5 மில்லியன் டாலருக்கு மேல் பெற்றது வெளியில் வந்ததால் இவரின் ஆதரவு குறைந்தது (அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டதில் இவ்வகையான வீட்டுக்கடன் கொடுத்த நிறுவனங்களும் காரணம், சகட்டு மேனிக்கு எல்லாருக்கும் கடன் கொடுத்தா கொடுத்த காசு திரும்பி வருமா), ராம்னிக்கு மாற்றாக யாரை ஆதரிக்கலாம் என்று பழமைவாதிகள் தடுமாறிக்கிட்டு இருந்தாங்க. ரான் பவுல் என்பவரை ஆதரிப்பது கடினம். ரான் பவுல் சுதந்திரவாதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவர். தாராண்மியவாத கொள்கையை கடைபிடிப்போர் அவரின் ஆதரவாளர்கள், இவர்கள் பெரும்பான்மையாக இல்லாவிடிலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். திடீர்ன்னு பென்சில்வேனியா மாநிலத்தின் சார்பாக அமெரிக்க மேலவையில்  செனட்டராக இருந்த ரிக் சாண்ட்ரமுக்கு ஆதரவு பெருகியது.

அயோவா
இந்நிலையில் உட்கட்சி தேர்தல் முதலில் நடைபெறும் அயோவா மாநிலத்தின் caucus நெருங்கி வந்தது.  caucus என்றால்  வேட்பாளரை தீர்மானிக்க சந்திக்கும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் என சொல்லலாம். அயோவா மாநிலத்தில் நடந்த வாக்கெடுப்பில் ராம்னி முதல் இடத்தையும் ரிக் சாண்ட்ரம் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள். வேறுபாடு 8 வாக்குகள் மட்டுமே. ரான் பவுல் மூன்றாவது இடத்தை பிடித்தார். ராம்னி 30,015 சாண்ட்ரம்  30,007, ரான் பவுல் 26,219 வாக்குகளும் பெற்றனர். 4வது இடம் பிடித்த கிங்ரிச் ராம்னிக்கு எதிராகவும் ரான் பவுலுக்கு எதிராகவும் தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளார். 5வது இடம் பிடித்த ரிக் பெர்ரி வாங்கடா தென் கரோனிலாவுக்கு (இது பழமைவாதிகள் நிறைந்த மாநிலம்) அங்க பார்க்கலாமுன்னு சொல்லிட்டார். 6வது இடம் பிடித்த மிச்சால் பாக்மன் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

 அயோவுக்கு அடுத்து
இந்நிலையில் அயோவாவில் கலந்துக்காத ஜோ ஹண்ட்சுமேன்  நியு ஹாம்சுபியர் மாநில உட்கட்சி தேர்தலில் கலந்துக்கறார். இவரும் மோர்மன் பிரிவை சார்ந்த கிருத்துவர். பழமைவாதிகளின் வாக்குகள் பல்வேறு வேட்பாளர்களுக்கு சிதறியதால் தான் ராம்னி அயோவாவில் வெற்றி பெற்றார் என்பதால் பழமைவாதிகள் அனைவரும் ஒரே வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என சில பழமைவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் சாண்ரோமை ஆதரிப்பது சிறந்தது எனவும் மற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளனர்.  நியு ஹாம்சுபியர் தேர்தலில் ராம்னி வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இவர் பக்கத்து மாநிலமான மாசசூட்ச்சசின் ஆளுனராக இருந்தவர் அதனால் இப்பகுதியில் இவருக்கு மற்றவர்களை விட செல்வாக்கு அதிகம். ஆனால் அவரின் உண்மையான சோதனைக்கட்டம் அதற்கடுத்த தேர்தல்களில் தான் இருக்கிறது.

வர்ஜீனியா கூத்து
வர்ஜீனியா மாநில தேர்தலில் கலந்துக்க மிட் ராம்னி, ரான்  பவுல் ஆகிய இருவர் மட்டுமே தகுதிபெற்று இருக்காங்க, மற்றவங்க எல்லாம் ஆட்டத்துக்கு சேர்த்துக்கப்படலை. கிங்ரிச் இப்ப வாசிங்டன் டிசி பெருநகரத்தின் எல்லையில் வர்ஜீனியாவில் மெக்லீன் என்ற இடத்தில் 1999 ல் இருந்து வசிக்கிறார்.வர்ஜீனியா குடியரசு கட்சி சட்டப்படி 10,000 வர்ஜீனியா வாக்காளர்களின் கையெழுத்தை பெற்று குடுத்திருந்தால் மட்டுமே உட்கட்சி தேர்தலில் கலந்துக்கமுடியும். இதை உரிய காலத்திற்குள் செய்தவர்கள் இருவர் மட்டுமே. செய்யாத மற்றவங்க இப்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்காங்க.

குடியரசு கட்சி ஆதரவாளரான என் நண்பனிடம் யாருடா வருவாங்க அப்படின்னு கேட்டேன். மிட் ராம்னி தான் கடைசியில் வெற்றிபெறுவார் பாரேன் அப்படின்னான். பார்க்கலாம். எனக்கென்னமோ நம்பிக்கையில்லை, 2008 குடியரசு கட்சி உட்கட்சி தேர்லை மறக்கமுடியுமா?

செவ்வாய், நவம்பர் 08, 2011

வேலாயுதம் - விமர்சனம் (ரசித்து மகிழுங்கள்)

நான் எந்த படத்துக்கும் விமர்சனம் எழுதுவதில்லை. இது முகநூலில் படித்தது பிடித்திருந்ததால் இங்கே வெட்டி ஒட்டிவிட்டேன். :-)))

வேலாயுதம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்த நொடியில் இருந்தே துவங்கிவிட்டது. அதிலும் விஜய் அணிந்திருந்த சூப்பர் ஹீரோ உடையை எதோ ஒரு வெள்ளைக்காரன் திருடி தன் வீடியோகேமில் பயன்படுத்தி இருப்பதை அறிந்து வியந்தேன். விஜய்க்குதான் எங்கெல்லாம் ரசிகர்கள்!!


நண்பர் ஒருவர் "வேலாயுதம் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்தாளமிக்க விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்" என்று முகநூலில் செய்தி அனுப்பியிருந்தார். எனக்குத் தெரிந்து என் பரம்பரை விரோதிகள் கூட இவ்வளவு அசிங்கமாக என்னிடம் ஒரு கேள்வியை கேட்டதில்லை! அதன் பொருட்டே இந்த விமர்சனம்.


எத்தனைப் பேருக்கு பழையதை மறந்து மீண்டும் புதிதாய் வாழும் வாய்ப்பு அமையும்? விஜய்க்கு அந்த வாய்ப்பு, அந்த வரம் ஒவ்வொரு படத்துக்கும் அமைந்துவிடுகிறது. தன் பழைய பட கதைகளை(??) மறந்துவிட்டு அடுத்த படத்தில் புதிதாக முதலில் இருந்து தொடங்குவார்.


வேலாயுதம் படம் ஓடத்துவங்கி சிறிது நேரத்தில் தியேட்டரில் ஒரே ரகளை, சத்தம். ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். "என்னடா டேய்!! வேலாயுதம்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு திருப்பாச்சி படம் போட்டு ஏமாத்துறீங்களா?" என்று. பின் தியேட்டர் உரிமையாளர் சரண்யா மோகனையும், திருப்பாச்சியில் தங்கையாய் வந்த மல்லிகாவையும் ஒப்பிட்டு, "அந்த பொண்ணு சிவப்பு, இந்த பொண்ணு கருப்புய்யா! பாருங்க" என்று விளக்கி சமாதானம் செய்தார். இதில் தங்கச்சியை அழைத்துக்கொண்டு சென்னை வந்து அங்கிருக்கும் தீவிரவாதிகளை அழிக்கிறார். "ஏய் இதானப்பா திருப்பாச்சில பண்ணாரு"னு சொல்லாதீங்க. அது ரவுடி, இது தீவிரவாதி!


"அவரு யாரு தெரியுமா?" என போன படத்தில் ரசிகர்களைப் பார்த்து கேட்ட அதே கிழவரே இந்த படத்திலும் கேட்டது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இந்த வசனத்தை வேறு கிழவரை வைத்து எடுத்திருந்தால் சூப்பராக இருக்கும் என 'variety' எதிர்பார்க்கும் விஜய் ரசிகர்கள் முணுமுணுத்தார்கள்.


பின் "சொன்னா புரியாது செத்தாதான் புரியும்" என்ற அறிமுகப் பாடலை பாடி ஆடினார் விஜய். பாடல் மிக வித்தியாசமாக சமூக அக்கறையுடன், ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும்படி இருந்தது. போன பட அறிமுகபாடலில் போட்டிருந்த சட்டையை மாற்றி இதில் வேறு சட்டை அணிந்து ஆடியது ஒவ்வொரு படத்திற்கும் விஜய் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதைக் காட்டியது. இளைஞர்களுக்கு அவர் ஒரு inspiration!


ஹன்சிகா மோத்வானி விஜய் மேல் காதல்வெறிகொண்டு அலைகிறார். பெண் இனத்தையே பெருமைப்படுத்தும் இது போன்ற கதாப்பாத்திரங்கள் விஜய் படத்தில ஏராளமாக பார்க்கலாம். பின் ஜெனிலியா வருகிறார். அவருக்கும் விஜய் மீது காதல் வெறி! பெயரைக்கேட்டால் "வேலூஊஊஊஊஊஉ வேலாஆஆஆயுதம்ம்ம்ம்ம்" என அமாவசை இரவில் ஊளையிடுவதைப் போல ஸ்டைலாக பதில் சொல்லும் ஆணின் மேல் யாருக்குதான் காதல் வராது?


என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சியைப் பற்றி சொல்கிறேன். வில்லன் "காட்டுடா காட்டுடா" என சொன்னதும், விஜய் "நான் சும்மாவே காட்டுவேன். நீ காட்டு காட்டுனு சொல்ற" என பதில் சொன்னதும் அதிர்ச்சியின் உறைந்துபோனேன். எதையோ காட்டப் போகிறார் என பயந்து அனைவரும் கண்களை மூடிக்கொண்டவுடன் துவங்கியது வில்லன் பறந்து போய் விழுந்த அந்த புதுமையான ஆக்சன் காட்சி!


உலக திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமையை செய்துள்ளார் ரீமேக் ராஜா. வேற்றுமொழி திரைப்படத்தை ரீமேக் செய்யும் கேவலமான உலகத்தில், வேற்றுமொழி வீடியோகேமை ரீமேக் செய்திருக்கிறார். ரசாயன ஆலையில் ரயிலை மோதச் செய்ய வில்லன்கள் போடும் திட்டம், அதற்காக வில்லன் வைத்திருக்கும் மேப், கிராஃபிக் காட்சிகள் என அனைத்துன் 'ஹிட்டன் டேஞ்சரஸ்' என்ற கணிணி விளையாட்டில் வருபவை. தமிழ்ப்படத்தை அடுத்த கட்டத்துக்கு நகட்டிய ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.


பின் ட்ரெயினை விஜய் sudden break போட்டு நிறுத்தி ஆலையைக் காப்பாற்றுகிறார். நல்லவேளை அந்த ட்ரெயினில் 'டிஸ்க் ப்ரேக்' இருந்தது! அருமையான படம் அதோடு முடிந்துவிட்டதே என ரசிகர்கள் வருந்திய நேரத்தில் 'ரத்தத்தின் ரத்தமே' என்ற பாடல் வருகிறது. பின் சரண்யா மோகன் சாகிறார். ஏன் சாகிறார் என கேட்காதீர்கள்! அவர் உயிர் போய்விட்டது அதனால் சாகிறார்!


அதன் பின் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வில்லனை கொல்கிறார் வேலாயுதம். முதல் பாதியில் ஹன்சிகாவின் வயிற்றையே காண்பித்துக்கொண்டிருந்தவர்கள் இறுதி சண்டைக்காட்சியில் விஜயின் வயிற்றையே காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எதற்கு என தெரியவில்லை! ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் சம உரிமை கொடுத்து காட்டினார்களோ என்னவோ!


மக்களுக்கு அறிஞர் டாக்டர் விஜய்யின் நீண்ட அறிவுரையோடு படம் முடிந்தது. விஷால் போன்ற பொடியன்கள் லோக்கல் ரவுடிகளுடன் இன்னும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது விஜய் ஆஃப்கன் தீவிரவாதிகளோடு மோதுவதன் மூலம் தன் திரைப்பயணத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். தமிழ்ப்படங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் வித்தியாசமான முயற்சிதான் இந்த 'வேலூஊஊஊஊஊஊ வேலாஆஆஆஅயுதம்ம்ம்ம்'!


வெள்ளி, நவம்பர் 04, 2011

தினமணி கருத்துப்படம் - பிரிட்டிசுகாரன் கட்டியதால் தப்பிய கட்டடங்கள்

தாத்தா கட்டிய அனைத்து கட்டடங்களையும் இடிக்க ஆத்தா முடிவெடுத்துவிட்டார். பிரிட்டிசுகாரன் கட்டியதால் ரிப்பன், சென்ட்ரல் தொடருந்து நிலையம், எக்மோர் தொடருந்து நிலையம், கன்னிமாரா நூலகம் (ஆத்தா நூலகத்துக்கு எதிரியில்லை என்பதற்கு இது சாட்சி),  புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவை தப்பின. புனித ஜார்ஜ் கோட்டை இராணுவத்துக்கிட்ட இருந்து குத்தகைக்கு எடுத்திருப்பதால் அதில் கை வைக்க முடியாது, அதனால தான் தலைமை செயலகத்தையே வேற இடத்துக்கு மாற்ற முடிவெடுத்தார். ஆத்தா நினைத்து முடிக்காமல் விட்ட செயல்களில் இதுவும் ஒன்று. 


புதன், அக்டோபர் 05, 2011

இலங்கை மீது போர் குற்றம் & மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை தேவையா இல்லையா

வெள்ளை மாளிகையின் இணைய தளத்தில் இலங்கையில் நடந்த போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை தேவை என்று ஒரு கையெழுத்து விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் வெற்றிகரமாவதற்கு 5000 கையெழுத்துகள் தேவை. இது வரை 1547 மட்டுமே விழுந்துள்ளது. இன்னும் 3453 கையெழுத்துகள் தேவை. 5000 கையெழுத்துகள் விழுந்தால் மட்டுமே அமெரிக்க அரசு போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும். நான் குறைந்தது 15,000 கையெழுத்தாவது விழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஈழப்படுகொலை தொடர்பாக பதிவுகளில் மக்கள் பொறிந்ததை பார்த்ததால் 5000 கையெழுத்துகளை இன்னேரம் தாண்டி இருக்கும் என நினைத்தேன். இது வெள்ளை மாளிகையின் இணைய தளத்தில் உள்ள விண்ணப்பம் என்பதால் இதற்கு அமெரிக்க அரசின் ஆதரவு உறுதியாக இருக்கும் அதற்கு அவர்கள் எதிர்பார்ப்பது குறைந்தது 5000 கையெழுத்துகள்.
மக்களே உங்கள் கையெழுத்துகளை இந்த இணைப்பில் செலுத்தி அமெரிக்க அரசு போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள். பெரியண்ணன் பேச்சுக்கு மதிப்பு உண்டு, இலங்கையும் பெரியண்ணன் பேச்சை தட்டி எதுவும் செய்யமுடியாது.  குறிப்பாக உங்கள் நண்பர் அமெரிக்காவில் இருந்தால் அவரை கட்டாயம் கையெழுத்து இடச்சொல்லுங்கள்.

https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg

WE THE PEOPLE

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

ஐக்கிய முன்னனி அரசின் பலம்- அலசல்

தற்போதய ஐக்கிய முன்னனி அரசு பல்வேறு பெரிய ஊழல்களில் சிக்கி தவிக்கிறது.  இவை இது வரை யாரும் கண்டிருக்காத பெரிய ஊழல்கள். இன்னும் எத்தனை வரப்போகுதோ. இத்தகைய பெரிய ஊழல்கள் மற்றும் ஆட்சி நிர்வாக குறைகளினால் பலவீனமாக உள்ளது. ஆனாலும் அடுத்த ஆட்சி தங்களுடையது என்று நம்பிக்கையோடு இருக்கிறது. அதுக்கு காரணம்  காங்கிரசுக்கு எதிரான பாசக கூட்டணி அல்லது மூன்றாம் அணி வலுவாக இல்லாததே.


பொதுவுடமை கட்சி
பொதுவுடமை கட்சியின் பலமே வங்கமும் கேரளாவும் தான். வங்கத்துல பல்பு வாங்கியாச்சு வரும் மக்களவைத்தேர்தல் வரும்முன்பு  எந்த அளவு செல்வாக்கு உயருமுன்னு தெரியலை. எல்லாம் மம்தா அக்கா கைல தான் இருக்கு. கேரளாவில் நிறைய தொகுதிகளை பிடிப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம். ஓமன் சாண்டி மேல அதாவது காங்கிரசுகாரன் மேல அவ்வளவு நம்பிக்கை மேலும் கேரள அரசியலே அப்படிதான். இப்ப காங்கரசுன்னா அடுத்த முறை பொதுவுடமை.  இவர்களால் அதிகபட்சம் 50 க்கு மேல் வெற்றி பெற முடியாது. இதுவும் வங்கம் கை கொடுத்தால் மட்டுமே சாத்தியம். 34 ஆண்டுகளுக்கு பின் பொதுவுடமைவாதிகளிடம் இருந்து திரிணாமுல் காங்கிரசுக்கு ஆட்சி போயிருப்பதால் பொதுவுடமைவாதிகளுக்கு வரும் மக்களவைத்தேர்தலில் 25 இடங்கள் கிடைத்தாலே பெரிது. பொதுவுடமைவாதிகளின் ஆதரவு காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியான பாசகவுக்கு கிடைக்காது. வேற வழி இல்லாம இவங்க காங்கிரசுக்கு நிபந்தனை அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாகனும். அதாவது தோல்வி அடைந்தாலும் சுளையா 62 தொகுதிங்க காங்கிரசுக்கு ஆதரவு ( கேரளம் 20 + வங்கம் 42 ). இவர்கள் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை பெறமாட்டார்கள் என கருதுவதால் மூன்றாம் அணி ஆட்சிக்கு வருவதை மறந்துவிடலாம்.

மகாராட்டிரம்
தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் மோசம் என்றாலும் சிவசேனா+பாசக பாதிக்கு மேல் வெற்றி பெறுவது கடினம். சிவசேனையின் பலமான மும்பையில் பால் தாக்ரேவின் தம்பி மகனான  ராஜ் தாக்ரேவால் பாதிப்பு இவர்களுக்கு உண்டு. அதன் பலன் காங்கிரசு+சரத்பவார் கட்சிக்கு கிடைக்கும். ராஜ் தாக்ரேவுடன் சிவசேனா+பாசக  ஏதாவது உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே பாசக கூட்டணி நிறைய இடங்களை வெல்ல முடியும். ஆதர்ஸ் ஊழல், மும்பை தீவிரவாத தாக்குதலை பாசக சிவசேனா கூட்டணி திறமையாக பயன்படுத்திக்கொள்ளுமா?

பீகார்
இங்க பாசக+ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி பலமாக இருந்தாலும் லல்லு என்ன லொள்ளு பண்ணுவாருன்னு இப்ப சொல்ல முடியாது. லல்லு பஸ்வான் கூட்டணி நிதிசிடம் செல்லுபடியாகலை. தனியா போட்டியிட்டா ஒரு தொகுதி கூட காங்கிரசுக்கு கிடைக்காது. காங்கிரசோட சேர்ந்தா லல்லுவுக்கு கொஞ்சம் அதிகம் வாக்குகள் கிடைக்கும். இது பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்க கூடியதாக இருக்கும்.

2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் லல்லு காங்கிரசை கூட்டு சேர்த்துக்கலை. பாஸ்வான் கூட கூட்டு வைச்சிக்கிட்டாரு.  லல்லுவுக்கு 4 இடம் தான் கிடைச்சது, தனித்து போட்டியிட்ட காங்கிரசுக்கு 2 இடம் கிடைச்சுது.  பாஸ்வானுக்கு முட்டை. காங்கிரசு வாக்கை பிரித்ததால் லல்லு கூட்டணி 12 இடங்களுக்கு மேல் தோற்றது. மக்களவை தேர்தலில் கிடைத்த தெம்பால் 2010 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு தனித்து போட்டியிட்டு 4 இடங்களை பிடித்தது. முந்தய தேர்தலில் 9 இடம். 2010 தேர்தலில் லல்லுக்கு மரண அடி. 22 இடங்களில் மட்டுமே வென்றார், முந்தய தேர்தலில் 54 இடம். பாஸ்வானுக்கு 3 இடம் தான் கிடைத்தது. முந்தய தேர்தலில் 10 இடம்.

அதனால் அடுத்து வரும் மக்களவைத்தேர்தலில் லல்லு காங்கிரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.  காங்கிரசுக்கு எத்தனை தொகுதி ஒதுக்குறார் என்பது தான் கேள்வி.



உத்திரப்பிரதேசம்
பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, காங்கிரசுக்கு அடுத்த நிலையில் பாசக இருக்கு. 2009ம் ஆண்டு நடந்த 15வது மக்களவை தேர்தலில்  சமாஜ்வாதி கட்சி 23 இடங்களையும் காங்கிரசு 21 இடங்களையும் பகுஜன் சமாஜ் 20 இடங்களையும்  பாசக 10 இடங்களையும் இராசுட்டிரிய லோக்தளம் 5 இடங்களையும் பிடித்தனர்.  பாசகவும்  இராசுட்டிரிய லோக்தளமும் கூட்டணி. உபியில் காங்கிரசை ஒரு பொருட்டாக யாரும் கருதாதவேலையில் காங்கிரசு 21 இடங்களில் வென்றது தான் அதற்கு பெரிய பலத்தை கொடுத்துள்ளது. 80 தொகுதிகளை உடைய உபியில் காங்கிரசுக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. அதனால தான் காங்கிரசின் பட்டத்து இளவரசர் இராகுல் உபியே கதி என்று சுத்துகிறார்.  அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனா இதுவரை இங்கு பாசகவின் செயல்பாடு சொல்லிக்கிற மாதிரி இல்லை. இராமர் பெயரை சொல்லி இனி இங்கு வாக்கு வாங்க முடியாது. கட்சிக்குள்ள உள் குத்து அடிதடி. பேச்சுத்திறமையும் உபியில் ஓரளவு செல்வாக்கும் உடைய உமாபாரதியை கட்சிக்குள்ள சேர்த்து கட்சிய தேர்த்தலாம் என்று பாசக கருதி அவரை திரும்ப கட்சியில் இணைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். 
ஆனால் பாசகவின் மற்ற தலைவர்கள் அவரை  வேண்டாதவராகவே பார்க்கின்றனர். இந்த வகையில் உபியில் கட்சி இருந்தால் எப்படி தேறும் என தெரியவில்லை. அஜித் சிங்கின் இராசுட்டிரிய லோக்தளத்திற்கு உபியின் மேற்கு பகுதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு. பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியான ஒடுக்கப்பட்டவர்களை குறி வைத்து பட்டத்து இளவரசர் இராகுல் காய் நகர்த்துகிறார். சமாஜ்வாதி கட்சியின் முசுலிம் வாக்கு வங்கி பிரிந்து விட்டது. அதில் நிறைய காங்கிரசுக்கு சென்றுவிட்டது. இந்த 2 கட்சிகளுக்கும் வாக்கு போடுபவர்களில் கணிசனமான பேர் காங்கிரசுக்கு வாக்கு போட்டதாலயே காங்கிரசு 21 தொகுதிகளில் வெல்ல முடிந்தது. பாசக கடுமையாக முயன்றால் மட்டுமே மற்ற 3 கட்சிகளுக்கும் ஈடுகொடுக்க முடியும். காங்கிரசால் முலாயமுக்கு தான் பாதிப்பு அதிகம். முலாயம் சரி பாதி இடங்கள் தந்தால் வேண்டுமானால் காங்கிரசு இதனுடன் கூட்டணி வைக்கலாம்.. பட்டத்து இளவரசர் தனி ஆவர்த்தனம் செய்யவே முயல்வார். ஆனால் அரசியலில் எது வேண்டுமாலும் நடக்கலாமே! அடுத்த ஆட்சி கனவில் இருக்கும் காங்கிரசுக்கும் பாசகவுக்கும் உபியில் அதிக இடங்கள் பெறுவது முக்கியம்.

ஆந்திரப்பிரதேசம்

எதிர்கட்சியான தெலுங்க தேசத்தை விட இங்கு காங்கிரசு பலமாக உள்ளது. 2009ம் ஆண்டு தேர்தலில் 33 தொகுதிகளில் காங்கிரசு வென்றது. காங்கிரசு அதிக தொகுதிகளில் வென்ற மாநிலம் இது தான். இப்ப தெலுங்கானா பிரச்சனை அதற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. தெலுங்கானா உருவாக வில்லையென்றால் அங்குள்ள 17 தொகுதிகளை மறக்க வேண்டியது தான். உருவானால் சீமாந்திராவின் 25 தொகுதிகளை மறக்க வேண்டும். மேலும் இங்கு அரசியல் களம் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது. சிரஞ்சீவி காங்கிரசுடன் இணைந்து விட்டார். சிரஞ்சீவியின் கட்சி கிட்டதட்ட 15% வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னால் முதல்வர் இராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து விட்டார். கடப்பா தொகுதியில் இவரை வெற்றி கொள்வது கடினம் மேலும் இவர் எந்த அளவு காங்கிரசு வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை. மேலும் இவரின் சொத்துக்கள் குறித்து விசாரணை போட்டாயிற்று ஆளு அடங்கறாரான்னு பார்ப்போம். ஜெகன் 2 வாக்கை பிரித்தார்  என்றால் சிரஞ்சீவி 10 வாக்கை கொண்டு வருவார் என்பது காங்கிரசு கணக்கு.  கிட்டதட்ட 25 இடங்களில் சிரஞ்சீவியின் கட்சியால் தெலுங்குதேசம் கூட்டணி தோற்றது. இராஜசேகர ரெட்டி மறைவுக்கு பின் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இல்லாத நிலையில் சிரஞ்சீவியால் காங்கிரசுக்கு பலம் கூடியுள்ளது.

தமிழ்நாடு

யாரு மேல சவாரி செய்யறாங்க என்பதை பொருத்தது.

கர்நாடகம்

2009 தேர்தலில் பாசக 19 இடங்களை வென்றது. வரும் தேர்தலில் 10 இடங்களாவது கிடைக்குமா? ரெட்டிகளின் சுரங்க ஊழல் , எடியூரப்பாவின் ஊழல் என்று கட்சி கலகலத்துள்ளது. இதை எந்த அளவுக்கு காங்கிரசும் தேவ கௌடா கட்சியும் பயன்படுத்தப்போகிறது என தெரியவில்லை. காங்கிரசுக்கு பெரும் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மத்தியப்பிரதேசம்
காங்கிரசும் பாசகவும் சரி பலத்தில் உள்ள மாநிலம் இது. பகுஜன் சமாஜ் கட்சி வாக்கை பிரிக்க கூடியதாக இருக்கும், 2009ல் தனியாக போட்டியிட்டு 5.85% வாக்குகளை பெற்று 1 தொகுதியில் வென்றுள்ளார்கள். இவர்களால் யாருக்கு பாதிப்பு அதிகம் என்பதை பொருத்தே காங்கிரசு அல்லது பாசக இவர்கள் இருவரில் யார் அதிக தொகுதிகளை வெல்கிறார்கள் என்பது முடிவாகும்.

குஜராத்
இங்கு பாசக பலமாக இருப்பது போல் தோன்றினாலும் அவர்களால் பெரும் வெற்றி பெற முடியாது. இதுக்கு காரணம் முசுலிம்கள் பெருவாரியாக காங்கிரசுக்கு வாக்களிப்பதே. மோடி ஏதாவது மோடி மஸ்தான் வேலை செய்தால் மட்டுமே நிலைமை மாறும். பாசகவின் எதிர்கால சக்தியாக மோடி உருவெடுத்து வருகிறார் அது குஜராத்தில் அதிக தொகுதிகளை வென்றால் மட்டுமே பலப்படும்.

இராசத்தான்
இங்கு பாசக உள்கட்சி தகராறில் வெலுத்து வாங்குகிறது. காங்கிரசை இதில் இது தோற்கடித்து விடும். உள்குத்து வேலைகள் தொடர்ந்தால் பாசக இங்கு தேறுவது கடினம்.

ஒரிசா
இங்கு பிஜூ ஜனதாதளம் நிறைய தொகுதிகளில் வெல்லலாம். இங்கு போட்டியே காங்கிரசுக்கும் பிஜூ ஜனதாதளத்துக்கும் தான். பாசகக்கு 15% அளவிலான வாக்குகள் உள்ளது. அவை இல்லாதது பிஜூ ஜனதாதளக்கு இழப்பே. 2009ல் காங்கிரசுக்கு 6 தொகுதிகள் கிடைத்தது. பாசகவும் பிஜூ ஜனதாதளமும் கூட்டணி வைத்திருந்தால் காங்கிரசுக்கு கிடைத்த 4 தொகுதிகள் இந்த கூட்டணிக்கு கிடைத்திருக்கும். காங்கிரசுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கும். பாசக வாக்குகளை பிரித்தாலும் அது பிஜூ ஜனதாதளத்தின் வாக்குகளையே பிரிக்கும். அதனால் பலனடையப்போவது காங்கிரசே.

20 தொகுதிகளும் அதற்கு மேலும் உள்ள மாநிலங்கள்.
மாநிலம் தொகுதிகள் எண்ணிக்கை
உத்திரப்பிரதேசம் 80
மகாராட்டிரம் 48
ஆந்திரப்பிரதேசம் 42
மேற்கு வங்காளம் 42
பீகார் 40
தமிழ்நாடு 39
மத்தியப்பிரதேசம் 29
கர்நாடகா 28
குஜராத் 26
இராஜஸ்தான் 25
ஒரிசா 21
கேரளம் 20


கீழிருக்கும் கருத்துப்படம் நான் சொல்லியதையும் சொல்லாததையும் தெளிவா சொல்லும்.



திங்கள், ஜூலை 25, 2011

தமிழ்மணத்திற்கு பணம் அனுப்ப முடியவில்லை.

Please enter your donation amount and click Update Total. என்று வருகிறது.
முதலில் xx.oo என்று கொடுத்தேன் error (Please enter your donation amount and click Update Total) வந்தது பின் xx என்று கொடுத்தேன் error (Please enter your donation amount and click Update Total) வந்தது வேறு எப்படி கொடுப்பது? VISA try(time:12.30 am (EDT)) பண்ணினேன். மனசு வந்து கொடுக்கலாம்னு நினைக்கறப்ப இப்படி ஆயிடுச்சே...

அனுப்பியாச்சு

Update Total என்பதை முதலில் அழுத்தாமல் Review Donation and Continue என்பதை அழுத்தியதால் வந்த error அது.

Update Total என்பதை அழுத்தினால் மட்டுமே பணம் செலுத்த முடியும் என்று Pay with Credit Card or Log In என்பதற்கு கீழ் மீண்டும் ஒரு முறை சொல்லியிருந்தால் தவறு செய்வது குறைவாக இருக்கும்.

செவ்வாய், ஜூன் 28, 2011

வலு குறைந்த தமிழ்மணம் வழங்கி

ஒரு மாதத்துக்கு மேல் தமிழ்மணம் பக்கத்தை திறந்தால் The connection has timed out என்ற செய்தி 75% க்கு அதிக முறை வருகிறது, 25%க்கும் குறைவான நேரம் தான் முகப்பு பக்கம் தெரிகிறது.  சில நேரம் மட்டுமே தமிழ்மணம் பக்கம் திறக்கிறது. அப்படியே பக்கம் திறந்தாலும் அதிலுள்ள இடுகைகளின் இணைப்பை சொடுக்கினால் அது திறக்காது timed out (50%) என்ற செய்தி வரும். தமிழ்மணம் முகப்பில் உள்ள சில பக்கங்கள் The connection...... என்று பிழையை தான் காட்டும்.

குரோம் உலாவியில்


ஐஇ உலாவியில்

தமிழ்மணம் நிருவாகிகளுக்கு இச்சிக்கல் பற்றி தெரியும் என எண்ணுகிறேன் ஏன்னா ஒரு மாதத்துக்கு மேல் இச்சிக்கல் உள்ளது. இச்சிக்கலை மாதக்கணக்கில் நீடிக்க விடாமல் விரைவில் சரிசெய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இதற்கு காரணம் தமிழ்மணம் வழங்கி பலுவை தாங்க முடியாதது தான் என்று எண்ணுகிறேன். அவ்வாறு இருந்தால் வழங்கியை மாற்றுங்கள்.

இன்று ஒரு முறை கூட தமிழ்மணம் முகப்பு பக்கத்துக்கு செல்ல முடியவில்லை எல்லா முறையும் The connection has timed out என்ற பிழை செய்திதான் உலாவியில் தோன்றியது.

வெள்ளி, ஜூன் 24, 2011

அஞ்சா நெஞ்சனின் கோட்டையில் தேர்தல் முடிவு விரிவாக.

திமுகவின் தேர்தல் முடிவை அலசலாம் என்று இருந்தேன். சோம்பேறித்தனத்தால் அஞ்சா நெஞ்சனின் கோட்டையை மட்டும் அலசி இருக்கேன் (இதுவே ரொம்ப ரொம்ப தாமதம்). மதுரையே அண்ணனின் கோட்டையாக கருதப்பட்டாலும் திமுகவின் தென் மாவட்டங்களுக்கு அண்ணனே தலைவர். இவரை எதிர்த்து யாரும் இங்கு திமுகவில் இருக்கமுடியாது. கிருசுணா மற்றவர்களுக்கு புரிய வைப்பா..
அஞ்சா நெஞ்சனின் கட்டுப்பாட்டில் வரும் தென் மாவட்டங்கள் 9 (அதிகாரபூர்வமாக கிடையாது ஆனா எல்லோருக்கும் தெரியும்) ... அவை...

1. திண்டுக்கல் மாவட்டம்
2. சிவகங்கை மாவட்டம்
3. மதுரை மாவட்டம்
4. தேனி மாவட்டம்
5. விருதுநகர் மாவட்டம்
6. இராமநாதபுரம் மாவட்டம்
7. தூத்துக்குடி மாவட்டம்
8. திருநெல்வேலி மாவட்டம்
9. கன்னியாகுமரி மாவட்டம்




மொத்தம் 58 தொகுதிகள் இம்மாவட்டங்களில் உள்ளன. இதில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது 12 தொகுதிகளில்.

1-1,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது - 1
1,001-5,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -2
5,001-10,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -3
10,001-15,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -4
15,001-20,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -6
2,0001-25,000க்கும் குறைஇடையேயேயான வாக்குகளில் தோற்றது -11
25,001-30,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -8
30,001-50,000க்கும் இடையேயேயான வாக்குகளில் தோற்றது -9
50,000க்கும் அதிகமான வாக்குகளில் தோற்றது - 2

அஞ்சா நெஞ்சனின் அசைக்கமுடியாத கோட்டையாக கருதப்பட்ட மதுரை மாவட்டத்தில் மட்டுமே எல்லா இடங்களிலும் திமுக தோல்வி அடைந்துள்ளது. அண்ணனின் அன்புத்தொல்லையில் மதுரை மாவட்ட மக்கள் மூச்சு விட முடியாத அளவுக்கு திணறி இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது.

இடைத்தேர்தலில் 39,266 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்ற திருமங்கலத்தில் 26,367 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றது தான் பலருக்கு ஆச்சரியமாக உள்ளது. திருமங்கலத்திலேயே திருமங்கலம் வாய்பாடு (சூத்திரம்) பலிக்காமபோச்சே??? அண்ணனின் பணபட்டுவாடா சரியில்லையா அல்ல அண்ணனின் வேலை சரியில்லையா அல்ல திமுக எதிர்ப்பு அலை அவ்வளவு அதிகமா?

மதுரை மாவட்ட தொகுதிகளின் நிலவரம்

தொகுதி வெற்றி வேறுபாடு
மேலூர் 24,462
மதுரை கிழக்கு 28,755
சோழவந்தான் (தனி) 36,608
மதுரை வடக்கு 46,400
மதுரை தெற்கு 45,451
மதுரை மேற்கு 38,761
மதுரை மத்தி 19,560
திருப்பரங்குன்றம் 48,502
திருமங்கலம் 26,367
உசிலம்பட்டி 15,320

திமுகவிலேயே அதிக வாக்குகள் (53,932) வேறுபாட்டில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் தொகுதி அண்ணனின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிமுக கூட்டணியைவிட அதிக வாக்குகள் வாங்கியுள்ளது. மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 4-ல் வென்றுள்ளது. இங்க எப்பவும் தமிழக வாடையை விட கேரள வாடை அதிகம் வீசும் என்பது காரணம். இன்னும் அப்படியிருக்க என்ன காரணம்? கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக-வுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு என்பதை நினைவில் கொள்க. கிள்ளியூர் தொகுதியில் அவர்கள் 2-வது இடம்.

திமுக கூட்டணி வென்ற இடங்களின் எண்ணிக்கை 31

அண்ணனின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி விழுக்காடு 10.79 (234-58 = 176 ,  31-12 = 19,  21/176 =10.79% )

அண்ணனின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி விழுக்காடு 20.689 (12/58 = 20.689%)


குறிப்பிட்ட மாவட்டங்களில் பதிவான மொத்தவாக்குகளில் அதிமுக கூட்டணி & திமுக கூட்டணி பெற்ற வாக்குகளின் விழுக்காடு அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் மொத்த வாக்குகள் (100%) அதிமுக கூட்டணி பெற்றது திமுக கூட்டணி பெற்றது
திண்டுக்கல் 11,61,2545,75,194 (49.53%)4,74,675(40.88%)
சிவகங்கை6,58,209 3,26,716 (49.64%)2,90,998 (44.21%)
மதுரை 15,80,741 9,01,916 (57.06%)5,71,730 (36.17%)
தேனி 6,61,6433,31,782 (50.15 %)2,87,372 (43.43%)
விருதுநகர் 10,34,805 5,38,509 (52.04%)4,33,726 (41.91%)
இராமநாதபுரம் 64,06422,98,540 (46.60%)2,29,919 (35.89%)
தூத்துக்குடி 8,23,4124,43,909 (53.91%)3,22,031 (39.11%)
திருநெல்வேலி 14,98,9377,60,477 (50.73%)5,86,490 (39.13%)
கன்னியாகுமரி 8,93,6213,04,273 (34.05%)3,58,339 (40.10%)

உதவி: தமிழ் விக்கிப்பீடியா

செவ்வாய், ஜூன் 21, 2011

அஜித் நினன் வூடு கட்டி அடிக்கறாருய்யா..- கருத்துப்படங்கள்

இரவுண்டு கட்டி அஜித் நினன் அடிக்கராருப்பா. கருத்துப்படம் வரையறவங்களுக்கு இது கொண்டாட்ட காலம்.


எல்லோரும் திகார் ஜெயிலுக்கு போக முடியுமா? அதுக்கு மிகப்பெரிய அளவுல கொள்ளை அடிக்கனும்.


அமைச்சர் எப்ப இருப்பாரு இருக்கமாட்டாருங்கறது நீதிமன்றத்தை பொறுத்து தான் இருக்கு. கலி காலம்; மன்னிக்க ஊழல் காலம்.


அமோக வெற்றியால ஆத்தாவுக்கு வந்த மவுசு. தாத்தாவுக்கு இது தேவையா?


இந்தா இந்தான்னு போக்கு காட்டியே அண்ணா குழுவ நோகடிச்சு லோக்பால் சட்டத்தை சொத்தைபால் சட்டம் ஆக்கனுமுன்னு கபில் சிபல் இருக்கறாரய்யா.

சுட்ட இடம்: டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இதழில் நினா வரைந்த கருத்துப்படம்.

புதன், ஜூன் 08, 2011

மைசூரில் யானைகள் அட்டகாசம் - படங்கள்.

(இதய பலவீனமானர்கள் படிக்க/பார்க்க வேண்டாம்.)
மைசூர் நகருக்குள் இன்று அதிகாலையில் இரண்டு காட்டு யானைகள் (கஜேந்திரன்கள்) புகுந்து விட்டன. நகர் முழுவதும் அந்த யானைகள் (கஜேந்திரன்கள்) தாறுமாறாக ஓடி அமர்க்களம் செய்ய ஆரம்பித்ததால், மக்கள் யாரும் வீடுகளை விட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு யானை(கஜேந்திரன்) தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் & இன்னொரு யானை (கஜேந்திரன்) அருகில் உள்ள மார்கெட்டுக்குள் புகுந்து அங்கிருந்த அங்கிருந்த மாடு ஒன்றை தாக்கியது அதனால் அந்த மாடு மோட்சத்தை அடைந்தது.
நிழற்படங்களும் அசைபடங்களும் உங்களுக்காக. (இதய பலவீனமானர்கள் பார்க்க வேண்டாம்.)

காவலாளி மிதித்து சாவு.


வாகனத்தை ஒரசிக்கொண்டு செல்லுதல்.


கட்டடத்துக்குள் யானை.


நிழற்படங்கள்.


நிறைய இடத்துல பொருப்பி(பொருப்புதுறப்பு) போட்டாகிவிட்டேன்.

புதன், ஜூன் 01, 2011

நடிகர் இராஜ் கிரண் மனநல மருத்துவமனையில்


நடிகர் இராஜ் கிரண் மனநல மருத்துவமனையில் இருக்கிறார் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் படித்த பிறகு தமிழ்மணத்தை திறந்தா யாரும் அதைப்பற்றி ஒன்றும் எழுதக் காணோம். என்னடா இராஜ் கிரணுக்கு பதிவர்கள் இடையே மவுசு இல்லையேன்னு வருத்தமா போச்சு. அதனால அவரைப்பற்றி நாமளாவது எழுதுவோம் என்று முடிவெடுத்தேன். டைம்ஸ் ஆப் இந்தியாவில் நம்ம ஆளுங்களைப் பற்றிகூட செய்தி  போடறாங்கன்னு ஆச்சரியமா இருந்தது. அதனால செய்திய முழுசா படிச்சு பார்த்தேன். இராஜ் கிரண் மனநல மருத்துவமனையில் இருக்கிறார் என அவர் நண்பர் ரிசி கபூர் சொல்லியிருக்கறார். இந்தி பட உலகலேயும் பல நண்பர்களை கொண்டு இருக்கறாரே என வியப்பாக இருந்தது. இவர் இந்தி படங்களில் நடித்ததே எனக்கு புதிய செய்தி.

இவர் 10 ஆண்டுகளாக காணாம போயிருந்ததா போட்டிருந்தாங்க, என்னுள் சந்தேகம் எட்டி பார்த்தது. இவர் பல இந்தி படங்களில் நடித்திருந்ததாக போட்டவர்கள் தமிழில் நடித்ததா போடவேயில்லை. சந்தேகம் அதிகமாகியது. இவர் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரத்தின் ஒர் மனநல மருத்துவமனையில் இருப்பதாக படித்ததும் எனக்கு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் குறிப்பிட்டுள்ள இராஜ் கிரண் நம்ம இராஜ் கிரண் அல்ல என தெரிந்தது. இவரது அண்ணன் பெயர் கோவிந்து தம்பி பெயர் அஜித்.



மனநல மருத்துவமனையில் இருந்த தற்போது அங்கு வேலை பார்க்கும் இராஜ் கிரண் இந்தி பட உலக இராஜ் கிரண். நல்லா பீதிய கிளப்பிட்டாங்க.

புதன், மே 11, 2011

திமுக நம்பும் வெற்றிக்கான வாய்ப்பாடு.

2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. யார் வெற்றியாளர் என்று தெரிய மே 13 வரை காத்திருக்கனும்.  இந்த இடைக்காலத்தில் பல கருத்து கணிப்புகள் வரும். மக்கள் பெருவாரியாக வந்து வாக்களித்ததே திமுக ஆட்சியை பிடிக்காததால் தான் என்று செயலலிதா கூறுகிறார். நல்லா கவனிங்க அதிமுக ஆட்சிக்கு வரணும் என்ற காரணத்திற்காக அதிக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். தேமுதிகவுடன் கூட்டு வைத்ததினால் அதிமுகவுக்கு லாபம் தான், தேமுதிக தனித்து நின்றிருந்தால் அதிமுக பாடு திண்டாட்டாமக இருந்திருக்கும். அதிமுக வெற்றி பெற்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கமுடியும் அது திமுக மீது உள்ள வெறுப்பு. உருப்படியாக அதிமுக எந்த போராட்டத்தையும் இந்த 5 ஆண்டுகளில் நடத்தவில்லை. எதிர்க்கட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அதிமுக தான் உதாரணம்.

திமுகவின் இலவச திட்டங்களால் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர். அவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். வாக்குபதிவு அதிகமானதற்கு இது தான் காரணம். மக்கள் 2G ஊழல் பற்றி கவலைப்படவில்லை எனவே நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று திமுகவினர் கூறுகின்றனர்.  திமுகவால் ஏராளமான மகளிர் சுய நிதி குழுக்கள் பயன்பெற்றுள்ளன அவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என திமுகவினர் சொல்கின்றனர். விலைவாசி ஏற்றம், மின்சார தட்டுப்பாடு போன்றவை திமுகவிற்கு பாதிப்பை உண்டாக்கும்.

மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவிற்கு சாதகமாக இருக்குமா? யாருக்கு தெரியும்?. மே 13 அன்று தெளிவாக தெரியும் :)) .

திமுகவின் நட்சித்திரப் பேச்சாளராக நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நிறைய பேர் சொல்கின்றனர். அவர் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள இத்தேர்தலை நன்றாக பயன்படுத்தினார். அவர் திமுகவின் முதன்மை எதிரியான அதிமுகவை சாடவில்லை திமுகவும் அதிமுகவும் தான் அதிக இடங்களில் நேரிடையாக மோதுகின்றன. அவர் விஜயகாந்தை தாக்கி நிறைய பேசினார் அது திமுக குடும்ப தொலைக்காட்சிகளில் திமுக தலைவர்களின் தேர்தல் கால பேச்சை விட அதிகம் காண்பிக்கப்பட்டது.  விஜயகாந்தை மட்டும் தாக்கி பேசும் ஒருவர் எப்படி திமுகவின் நட்சத்திரப்பேச்சாளராவார் என்பது எனக்கு புரியவில்லை. அவர் முன்னனி நகைச்சுவை நடிகர் எனவே அவரை பார்ப்பதற்கே நிறைய கூட்டம் கூடி இருக்கும். இவர் பேச்சால் தேமுதிக பாதிக்கப்பட்டிருக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்.

திமுக பல வியூகங்களை போட்டது என்று சிலர் சொல்லலாம்.  எத்தனை வியூகம் போட்டாலும் அவர்கள் நம்புவது இரண்டை தான்.

1. திருமங்கலம் வாய்ப்பாடு
2. சிவகங்கை வாய்ப்பாடு



திருமங்கலம் வாய்ப்பாடு என்பது அழகிரியால் வெற்றிகரமாக இடைத்தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. அது பொதுத்தேர்தலில் பலன் தருமா என்று தெரியவில்லை ஆனால் இதனால் மக்களை கேலிக்குள்ளாக்கினது தான் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் பணம் வெளிப்படையாக வாக்காளர் கைக்கு செல்வது தடைபட்டது ஆனால் பணம் பட்டுவாடா நடந்தது. பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்கு போடுவார்களா? நிறைய வாக்கு வேறு பதிவாகியுள்ளது இது திருப்பம் ஏற்படுத்தும். எந்த மாதிரியான திருப்பம் என்பதை காண மே 13 வரை பொறுத்திருங்கள். (எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டேனா? )

திருமங்கலம் வாய்ப்பாடு பலனளிக்காவிட்டால் சிவகங்கை வாய்ப்பாட்டை பயன்படுத்தி வெற்றி பெறுவது அடுத்த வியூகம்.  இந்த வியூகத்தை பயன்படுத்தினால் வெற்றி உறுதி. சிவகங்கை வாய்ப்பாடு என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்காக. 2009 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த சிதம்பரம் திடீர் என்று 3354 வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்றதன் காரணமாக அந்த  வியூகத்திற்கு சிவகங்கை வாய்ப்பாடு என்று பெயர் வைக்கப்பட்டது.

திருமங்கலம் வாய்பாடு பற்றியும் சிவகங்கை வாய்ப்பாடு பற்றியும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். திருமங்கலம் வாய்பாடு தடையில்லாமல் செயல்படுவதை தடுப்பதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து கெடுபிடியாக நடந்து பணப்புழக்கம் வெளிப்படையாக நடப்பதை ஓரளவு குறைத்தார்கள்.

வாக்கு பதிவு முடிந்ததிற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 1 மாதம் இடைவெளி. சிவகங்கை வாய்ப்பாட்டை பயன்படுத்த அருமையான வாய்ப்பு. இதை கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையம் வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள இடங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது. காற்று போக முடியாத இடத்திலும் போவார்கள் நம்ம அரசியல் வாதிகள். அதனால் 4 அடுக்கு பாதுகாப்பை நாம் நம்ப முடியாது. வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் போதையில் தூங்கிக்கிட்டு இருந்ததை செய்தியில் படித்திருப்பீர்கள். அறை சாளரங்களின் கதவு உடைந்து இருந்ததாம் இதையும் செய்தியில் படித்திருப்பீர்கள். தேர்தல் ஆணையம் சிவகங்கை வாய்ப்பாட்டை தடுப்பதற்காக பெரும் சிரமப்பட்டுக்கொண்டுள்ளது.

திருமங்கலம் வாய்ப்பாடு பெருமளவில் ஊடகங்களால் பேசப்பட்டது போல் சிவகங்கை வாய்ப்பாடு பேசப்படவில்லை.  தேர்தல் எப்படியிருக்கும் என மே 13 வரை பேசுவோம். அப்புறம் ஏன் தேர்தல் முடிவு இப்படி வந்துச்சு என பேசுவோம்.

திங்கள், ஏப்ரல் 11, 2011

மக்கள் விரோத கட்சி

இந்த தேர்தலில் மக்கள் விரோத கட்சி ஒன்னு போட்டியிடுகிறது. திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, விசி, காங்கிரசு, பாசக எல்லாம் மக்கள் மனம் போல் நடப்பவை எனவே அவை மக்கள் விரோத கட்சிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த மக்கள் விரோத கட்சி இந்த தேர்தலில் தோன்றியதல்ல. அவர்கள் பர்கூர், பெண்ணாகரம் போன்ற இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டுருக்கிறார்கள். அந்த இடங்களில் மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டியும் புத்தி வராம இருக்காங்க.

இந்த மக்கள் விரோத கட்சியை சேர்ந்தவங்க முரண்நகையா தங்கள் கட்சிக்கு மக்கள் சக்தி கட்சின்னு பேர் வைச்சிருக்காங்க. 

அரசியலில் ஊழல் என்பதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை என்பது இவர்களுக்கு புரியவில்லை. கையூட்டு கொடுக்காம எந்த செயலும் நடக்காது என்பது மக்களுக்கு புரியுது. அவங்களும் வாய்ப்பு கிடைச்சா கையூட்டு வாங்க தயங்குவதில்லை. கையூட்டு, ஊழல் என்பது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது மக்களும் அதற்கு பழகிவிட்டார்கள். இதை (ஊழல், கையூட்டு)எதிர்ப்பது என்பது மக்களை எதிர்ப்பது போல் ஆகாதா?

இவர்கள் தமிழ்நாட்டில் 35 தொகுதிகளில் போட்டியிடுகின்றார்கள். முனைவர் பட்டம் வாங்கியவரும் 5ம் வகுப்பு படித்தவரும் இவர்கள் வேட்பாளர்கள்.  தொகுதிக்கு தொண்டாற்ற கல்வி தகுதி மட்டும் தேவையில்லை என்பது இவர்கள்  வாதம். இவர்கள் வேட்பாளர்களின் கல்வி தகுதியை பார்த்தாலே இது விளங்கும்.

மாற்றம் என்பதே மாறாதது எனவே மாற்றம் வேண்டுபவர்கள் இவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்கலாம்.

கொள்கைகள்


வேட்பாளர்கள்


சென்னை மாவட்டத்துல 4 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

கொளத்தூர் - S. அசோக் குமார்
அண்ணா நகர் - உதய் குமார்
மைலாப்பூர் - அசோக் ராஜேந்திரன்
வேளச்சேரி - செந்தில் குமார் ஆறுமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்துல 4 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

ஆலந்தூர்   -  S.மீனாட்சிசுந்தரம்
பல்லாவரம்  -  R. குமார்
தாம்பரம்  -  R. கிருஷ்ணபாபு
மதுராந்தகம் (SC)  M. தனசேகரன்

திருவள்ளூர் மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

ஆவடி  - Dr. M. பரமானந்தம்
அம்பத்தூர்  -D. ஜெகதீஸ்வரன்

கோயம்புத்தூர் மாவட்டத்துல 6 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

கவுண்டம்பாளையம்  - V. விஸ்வநாதன்
கோயம்புத்தூர் வடக்கு  -  K. துரைராஜ்
தொண்டாமுத்தூர்  -  கண்ணம்மாள் ஜெகதீசன்
கோயம்புத்தூர் தெற்கு  -  M. விஜய் ஆனந்த்
சிங்காநல்லூர்  -  P.தண்டபாணி
கிணத்துக்கடவு   -    B. இளங்கோ

கடலூர் மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

நெய்வேலி  -  P. லில்லி
கடலூர்  -  T.E. சித்ரகலா

ஈரோடு மாவட்டத்துல 3 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

ஈரோடு (கிழக்கு)  -- S. சங்கமித்திரை
பெருந்துறை  --  S.ஸ்ரீமதி
பவானி  -- M.குமார்

கன்னியாகுமரி மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.


கன்னியாகுமரி  -  K.S. ராமநாதன்
கிள்ளியூர்  -  P. பாபு


நாகப்பட்டினம் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.

மயிலாடுதுறை  - தில்லை நடராஜன்
நாமக்கல் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.

பரமத்தி-வேலூர்  - N. சுந்தரம்

சேலம் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.

சேலம் (தெற்கு)  - G. விஸ்வநாத்

தேனி மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.
கம்பம்  - R. ராஜா மோகன்

திருப்பூர் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.
திருப்பூர் (வடக்கு)  - P. சந்திரசேகர்
திருவாரூர் மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

திருத்துறைபூண்டி(SC)  - S.சரவணன்
திருவாரூர்  -S. இளங்கோ
தூத்துக்குடி மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.
தூத்துக்குடி  - A. ஆதிநாராயணன்
திருநெல்வேலி மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க
ராதாபுரம்  - D.இனியன் ஜான்
திருவண்ணாமலை மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க
கீழ்பென்னாத்தூர்  - G. செல்வராஜ்
வேலூர் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க
திருப்பத்தூர்  - திருமால்

விழுப்புரம் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க

 ரிஷிவந்தியம்  - J. செல்வராஜு

வடிவேலு அன்றும் இன்றும் காலம் எப்படி மாறுது பாருங்க

 அன்று அம்மா அம்மா அம்மா தாயி இன்று அய்யா அய்யா அய்யா சாமி. என்னத்த சொல்றது.


ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

கருணாநிதிக்கு எதிராக கேரளாவில் ராகுல் பேச்சு.

87 வயதாகிவிட்டவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு 87 வயதாகியது அனைவருக்கும் தெரியும், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் செல்வதும் அனைவரும் அறிந்தது. திமுக கூட்டணி வெற்றிபெற்றால் அடுத்த முதல்வர் 87 வயதான சக்கர நாற்காலியில் செல்லும் கருணாநிதிதான் என்பதை அவர்களே அறிவித்துள்ளார்கள்.

சக்கர நாற்காலி தள்ளுபவர் என்ற ஒரே தகுதியின் கீழ்  சக்கர நாற்காலி தள்ளுபவருக்கு முறைகேடாக அரசின் நிலம் ஒதுக்கப்பட்டதை சவுக்கு அல்லது உண்மைத்தமிழனின் வலைப்பதிவை படித்தவர்கள் நன்கு அறிவர்.

ஆனால் அடுத்த முறை காங்கிரசு வெற்றி பெற்றால் பிரதமராவார் என கருதப்படும் ராகுல் 87 வயதானவர் மீண்டும் முதல்வராக கூடாது என்று கேரளாவில் பேசியுள்ளது தமிழ தேர்தல் களத்தை பரபரபாக்கியுள்ளது. (ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானோ?)

மண்ணு மோகன் சிங்கிற்கு வயதாகிவிட்டது என்பதால் தான் அடுத்த முறை காங்கிரசு வெற்றி பெற்றால் அவரை பிரதமராக்குவதில்லை என ராகுலின் அம்மா முடிவெடுத்துள்ளார். மண்ணே கடைசி வரை பிரதமரா இருந்தா அப்புறம் எப்ப பையன் பிரதமராவது?

தினமணி செய்தி

பைனான்சியல் டைம்ஸ் செய்தி

ஓமன் டிரைபுன் செய்தி


அவர் கேரள முதல்வரின் வயதை கூறுவது போல் தமிழக முதல்வருக்கு செய்தி சொன்னதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அவரின் பேச்சை கேள்விப்பட்ட கருணாநிதி கடும் கோபத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் தமிழகம் வந்தால் கருணாநிதியை பார்ப்பது இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். அவருக்கு கருணாநிதியை பிடிக்காது என்பது காங்கிரசு மற்றும் திமுக காரர்கள் அறிந்ததே.


ராகுல் இவ்வாறு பேசியுள்ளதால் காங்கிரசு காரர்கள் திமுக வெற்றிக்கு உழைப்பார்களா என்று கேள்விக்குறியே.. தகிடு தத்தங்கள் மூலம் (சிவகங்கை சின்னபையன் சிதம்பரம் எப்படி வெற்றி பெற்றார் என்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்) திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் கருணாநிதி முதல்வர் ஆவதற்கு காங்கிரசு ஆதரவளிக்குமா என்பது கேள்விக்குறியே.

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தலைவர் தங்கபாலு வாழ்க வாழ்க

தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலு மீது காட்டமடைய ஏதாவது காரமுண்டா? அவர் நடைமுறையில் இல்லாதது எதையும் செய்யவில்லை. எனவே இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

தங்கபாலுவுக்கு தெரியும் யாரை வேட்பாளராக்குவது என்று. காங்கிரசில் நிறைய குழுக்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு குழு தலைவரும் அவர்கள் ஆட்களுக்காக போராடி தொகுதிகளை வாங்கியிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே இல்லாத ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மணி சங்கர் அய்யரை சேர்ந்த குழுவுக்கும் ஒரு இடம் ஒதுக்கி இருக்காங்க. அவரும் அந்த இடத்தை தன் மனதுக்கு இனியவருக்கு கொடுத்துவிட்டார். தனக்கு பிடித்தவருக்கு தானே தர முடியும், பிடிக்காதவருக்கா தரமுடியும்?

கருப்பையா மூப்பனார் மகன் வாசன், சிவகங்கை சின்ன பையன் சிதம்பரம், பக்தவச்சலம் மகள் ஜெயந்தி நடராசன், காங்கிரசை ஒழிக்கனும் என்ற பெரியாரின் தம்பியின் பேரன் இளங்கோவன், பெரிய இடத்து பிள்ளை ராகுலின் அரவணைப்பின் கீழுள்ள புதிய குழு, பாமக நிறுவனர் ராமதாசின் சம்பந்தி கிருசுணசாமி, டெல்லியில் வாழ்ந்தாலும் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தென் மாநிலத்தை சேர்ந்தவங்க மதராசி தான்) தமிழ் நாட்டில் பிறந்த ஒரே காரணத்துக்காகவும் காங்கிரசு மேலிடத்தொடர்பு இருப்பதாலும் மணி சங்கர் அய்யர் ஆகியோரின் குழுக்களுக்கு மத்தியில் தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலுவுக்கு சில இடங்கள் கிடைத்தது.   தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு இடம் கிடைத்தது தவறில்லை என்பவர்கள் அவர் தன் விருப்பபடி தன் குழுவுக்கு கிடைத்த இடங்களை  கொடுப்பது தவறு என்பது நகைச்சுவையாக உள்ளது.

அந்த இடங்களை யாருக்கு வேண்டுமானாலும் அவர் கொடுக்கலாம். அவர்கள் அப்போது காங்கிரசுகாரர் என சொல்லிக்கொண்டால் போதும் என்பது தான் நிபந்தனை. இதன்படி தான் மற்ற குழு தலைவர்கள் தொகுதி பங்கீடு செய்கிறார்கள். இது தெரியாதவன் முழு காங்கிரசு காரன் அல்ல மற்றும் காங்கிரசு பாரம்பரியத்தை பற்றி அறியாமல் காங்கிரசு பேரியக்கத்தில் இருக்கும் மடையன் அவன்.

எல்லோருக்கும் தெரியும் இங்கு காங்கிரசு வெற்றிபெறுவது கூட்டணி கட்சியினரின் தயவால் என்று இது தங்கபாலுக்கு தெரியாம இருக்குமா?  உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது தமிழ்நாடு காங்கிரசு தலைவரா இருக்கற அவருக்கா தெரியாது? தமிழ்நாட்டில் காங்கிரசின் பலம் என்னவென்று அவர் நன்கு அறிவார். 10% வாக்கு வங்கி, மத்தியில் அமைச்சர்கள், CBI raid என்று பூச்சாண்டி காட்டியே வேலையை முடிக்கனும் சார். (உண்மையாவே  10% வாக்கு வங்கி இருக்கான்னு கேக்காதிங்க அப்படி கேட்டால் நீங்கள் தமிழக அரசியல் பற்றி ஒன்றும் அறியாதவர் என்று பொருள்), காங்கிரசை ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட திமுகவிடம் 63 இடம் வாங்கறுதுன்னா சும்மாவா.(திமுக நிலையை நினைச்சா பரிதாமா தான் இருக்கு, தேன் குடிச்சவன் புறங்கையை நக்கி தானே ஆகனும்)

கிடைத்த 63 தொகுதிகளில் 13 இடங்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணைப்படி தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கபாலு தன் குழுவுக்கு ஆட்களை ஒதுக்கியதை எதிர்பவர்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணையை எதிர்க்கிறார்கள் என்று தான் பொருள்.

தமிழக குழுக்களை  பொறுத்தவரை அதிகஅளவாக வாசன் குழுவுக்கு 22 இடங்களும் . சிதம்பரம் குழுவுக்கு 12 இடங்களும்,  ராகுல் குழுவுக்கு 9 இடங்களும்  கிடைத்துள்ளது. ஜெயந்தி நடராசன், இளங்கோவன், பாமக நிறுவனரின் சம்பந்தி கிருசுணசாமி, மணிசங்கர அய்யர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு தலா ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. 1 இடம் மட்டுமே சொக்கத்தங்கம் அன்னை சோனியாவால் ஒதுக்கப்பட்ட இளங்கோவன் குழுவே தங்கபாலு குழு 13 இடங்களை பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமல் பொறாமையால் அவருக்கு எதிராக வேலை செய்கிறது என்பதை அனைவரும் அறிவர். கருப்பையாவின் பையன் குழுவும் இதற்கு ஒத்து ஊதவதாக  கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தமிழக காங்கிரசு தலைவராக அல்ல அல்ல காங்கிரசு காரணாக இருக்க தகுதி என்னவென்று பார்த்தால் அவன் நேரு குடும்பத்து காங்கிரசு கட்சி வாரிசுக்களின் செருப்புக்கு தன் எச்சில் போட்டு  பள பள என்று துடைப்பவனாக இருக்க வேண்டும். காந்தி பேரு வச்சி ஊரை ஏமாத்துனாலும் அவங்க நேரு குடும்பம் என்பதை நினைத்து கொண்டு அது மக்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளவேண்டும்.


தமிழர்கள்,  ஈழ தமிழர்கள் பற்றி அவர் ஏன் அக்கறைபட வேண்டும் ( சில இடங்களில் வெற்றி பெற்றால் போதும்). அதை  தமிழின காவலர் தற்போதய முதல்வர் வெறும் வானம்  கருணாநிதி பார்த்துக்கொல்வார்.  அவரு தான் தமிழர்களுக்காக 1 மணி நேர உண்ணாவிரதம் இருப்பார், தந்தி அடிப்பார்.  இஃகி இஃகி.

மனைவிக்கு இடம் வாங்கி கொடுக்கிற மாதிரி  நடித்து இவர் இடத்தை புடிச்சிக்கிட்டார் என்பது எதிராளின் ஒரு வாதம். ஜெயந்தி தங்கபாலு காங்கிரசுகாரர், அவர் கணவர் முன்னாள் & இந்நாள் தமிழக காங்கிரசு தலைவர், இது  போதாதா? விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மற்ற குழுக்களில் இடம் பிடித்தவர்கள் எல்லாம் பெரிய தியாகிகளா? யாராச்சும் சொல்லுங்க. ஞானசேகரன், பீட்டர் அல்போன்சு, காயத்ரி தேவி, கே. என். அசன் அலி, அருள் அன்பரசு, யசோதா, பழனிச்சாமி ... எல்லாம் தியாகிகள் என்று அவங்க குழு தலைவரு தான் சொல்லிக்கனும், இஃகி.

இளங்கோவனுக்கு மரியாதையே அவரின் INITIAL தான் என்பதை அவர்  வேண்டுமானால் தன் வசதிக்காக மறந்திருக்கலாம், எல்லோரும் அப்படி மறக்கமுடியுமா? பெரியார், காந்தி எல்லாம் காங்கிரசே வேண்டாம் என்று சொன்னவங்க, ஆனா அவங்க பேரை சொல்லி தான் காங்கிரசுகாரனாக  இருக்கவேண்டியுள்ளது. தங்கபாலுவுக்கு அந்த மாதிரி யாரும் இல்லாததது ஒரு குறை தான். தலைவர் தங்கபாலுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் ஆனா இடுகையின் நீளம் கருதி இது போதும் என்று நினைக்கிறேன்.

காங்கிரசின் தலைவராக இருந்து கொண்டு இது போன்ற துரோகங்களுக்கும் உள் அடி வேலைகளுக்கும் பயந்துவிடுவார் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.  கூட்டணி தயவால் எல்லா இடங்களிலும் அவர் குழு வெற்றி பெறுவது உறுதி. அப்புறம் இவனுங்களை பார்ப்போமில்ல. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். (பல பொருள் தருவது இது ;-) )


ராஜிவ்ஜி  ஜெய்.
மறைமுக பிரதமர் சொக்கத்தங்கம் அன்னை சோனியாஜி ஜெய்.
வருங்கால பிரதமர் ராகுல்ஜி ஜெய்.

புதன், மார்ச் 16, 2011

அதிமுக கூட்டணியில் மதிமுக இல்லை - செயலலிதா

அதிமுக கூட்டணியில் இரண்டு பொதுவுடமை கட்சிகளும் மதிமுக-வும் இருக்குமா இருக்காதா என்ற கேள்விக்கு பொதுவுடமை கட்சிகளுகு தொகுதிகளை ஒதுக்கியதன் மூலம் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று செயலலிதா உறுதிபடுத்தினார். பாவம் மதிமுகவை அவர் கண்டுக்கவே இல்லை. சரி பின்னாடி உடன்பாடு வரும் தொகுதி ஒதுக்குவாருன்னு வைகோ போன்றவர்கள் நினைச்சிருப்பாங்க. ஆனா அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளை அறிவித்ததின் மூலம் மதிமுகவுக்கான கதவை அதிமுக சாத்திவிட்டது (செயலலிதா சாத்திவிட்டார்). அண்ணா, தனி கடை கட்ட நடைய கட்டுங்க.

அதிமுக கூட்டணி


கட்சி போட்டியிடும் தொகுதிகள்
அதிமுக 160
தேமுதிக 41
CPM 12
CPI 10
மனித நேயமக்கள் கட்சி 3
புதிய தமிழகம் 2
சரத்குமார் கட்சி 2
சேதுராமன் கட்சி 1
குடியரசு கட்சி 1
கொங்கு இளைஞர் பேரவை 1
மதிமுக 00
மொத்தம் 234



மதிமுக இல்லாததால் அதிமுகவுக்கு நட்டமா? 

மதிமுகவுக்கு தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கணிசமான வாக்கு உண்டு. மேலும் வைகோ போன்ற மக்கள் அறிந்த சிறந்த உணர்வுபூர்வமான பேச்சாளரை இழந்தது அதிமுகவுக்கு பெரும் இழப்பு. வைகோவின் பேச்சு இலவசமாக செய்திதாள்களில் வரும் அத்தகைய விளம்பரத்தை இழந்தது அதிமுகவுக்கு பாதிப்பே. இந்த தேர்தலில் வாக்கு வேறுபாடு குறைவாக இருக்கும் என்பது என் கணிப்பு. வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுக கூட்டணிக்கு கிடைக்ககூடிய திமுக அனுதாபிகளான (தற்போது திமுக மேல் கோபமாக உள்ள) தமிழ் உணர்வாளர்கள் பெரும் பாலோரின் வாக்குகளை அதிமுக இழக்கப்போவது உறுதி.

மதிமுக வாக்கு குறைவாக வாங்கினாலும் அதன் தொண்டர்கள் சிறப்பாக வேலை செய்யக்கூடியவர்கள். தேர்தல் நேரத்தில் இவற்றை அதிமுக இழந்தது அதற்கு தான் பாதிப்பு. தேமுதிகவிற்கு வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உண்டு ஆனால் தெற்கே இல்லை. மதிமுகவிற்கு தெற்கே உண்டு ஆனால் வடக்கே இல்லை.

ஏன் அண்ணனை தங்கை ஆட்டத்துக்கு சேர்த்துக்கலை?

தங்கை இத்தேர்தலுக்கு சோ போன்றவர்களின் வழிகாட்டுதலில் நடப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு இப்போது வழிகாட்டுபவர்களுக்கு வைகோவை பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ரகசியம். மதிமுகவுக்கு மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் தான் செல்வாக்கு உண்டு அங்கு அதிமுக பலமாக உள்ளது எனவே மதிமுக தேவையில்லை. வைகோ இல்லாமல் போனாலும் விசயகாந்த் கூட்டணியில் இருப்பதால் நாயுடு வாக்குக்கு பாதிப்பு இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு ஈடான விளம்பரம் வைகோவுக்கு கிடைப்பதில் உடன்பாடு இல்லை. மதிமுகாவால் ஏற்படும் சிறிய இழப்பை தேமுதிகவால் ஈடுசெய்யலாம். மதிமுகவை விட தேமுதிகவிற்கு வாக்கு வங்கி அதிகம் உள்ளது.

அதிமுகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காது (கிடைக்க கூடாது என்பது என் விருப்பம்). மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி அரசு வேணா அமைக்கலாம். ஜெயா தொலைக்காட்சியில் மைனாரிட்டி அரசு என்பதை அழுத்தி சொல்லலாம்.

வியாழன், பிப்ரவரி 10, 2011

கறுப்பு பணம் வைத்திருந்தவர்களில் 15 பேர் பெயர் தெரிந்தது.

வெளிநாட்டில் கோடி கோடி கணக்கில் நம் நாட்டவர் பணத்தை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாதது யார் யாரெல்லாம் என்பது தான்.  நம் இந்திய அரசும் செருமனியிடம் இருந்து லீக்டன்சுடைன் நாட்டின் LGT வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை கேட்டு பெற்றுள்ளது. ஆனா கேடி வேலை பண்ணி நமக்கு அது தெரியக்கூடாது என்று மறைத்துள்ளது.
2009 மார்ச் மாதமே செருமனி இந்தியாவிடம் அந்த பட்டியலை கொடுத்துவிட்டது. ஆனா நம்ம கை சுத்தமான மண்ணு அப்பட்டியலை வெளியிடமுடியாது என்று மறுத்துவிட்டார். உச்சநீதிமன்றம் கேட்டும் இந்த பதில் தான்.  இதில் 18பேரில் உள்ள 16 பேரின் விவரங்கள் தெகல்காவிடம் சிக்கியுள்ளது. தெகல்கா அதில் 15 பேரின் பெயர்களை மட்டும் வெளியிட்டுள்ளது.

http://tehelka.com/story_main48.asp?filename=Ne120211TheList.asp

1. Manoj Dhupelia - மனோஜ் துபெலியா
2. Rupal Dhupelia - ரூபல் துபெலியா
3. Mohan Dhupelia - மோகன் துபெலியா
4. Hasmukh Gandhi- காசுமுக் காந்தி
5. Chintan Gandhi- சிந்தன் காந்தி
6. Dilip Mehta- திலிப் மேத்தா
7. Arun Mehta- அருண் மேத்தா
8. Arun Kochar- அருண் கொசார்
9. Gunwanti Mehta - குன்வண்டி மேத்தா
10. Rajnikant Mehta- ரஜினிகாந்த் மேத்தா
11. Prabodh Mehta - பிரபோத் மேத்தா
12. Ashok Jaipuria- அசோக் ஜெய்புரியா

3 அறக்கட்டளைகளின் பெயர்கள்

13. Raj Foundation- ராஜ் பவுண்டேசன்
14. Urvashi Foundation- ஊர்வசி பவுண்டேசன்
15. Ambrunova Trust - அம்புருனோவா டிரசுட்
16. பெரிய நிறுவனத்தின் சேர்மன் பெயர். தற்சமயம் அவரின் பெயரை வெளியிடவில்லை. 

இவங்கலாம் என்ன மாதிரியான வணிகம் பண்றாங்க எவ்வளவு பணத்தை பதுக்கி இருக்காங்க அப்படிங்கிற விவரத்தை அவங்க தரப்பு விளக்கத்தை கேட்ட பின் தெகல்கா வெளியிட முடிவுசெய்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் 26 பெயர்களை பெற்றுள்ளதாக அரசு கூறி உள்ளது. அதனால் தெகல்காவிடம் கிடைக்காதவர்களும் உண்டு.

கொச்சி பிரிமியர் லீக் அணியை ஏலம் எடுத்தவர்களும் இந்திய அரசிடம் உள்ள கறுப்பு பணம் உள்ளவர்களின் பட்டியலில் உள்ளதாக பேசப்படுகிறது.

என்ன இது மொத்தமே இவ்வளவு பேர் தான் கறுப்பு பணத்தை பதுக்குனவங்களான்னு ஆச்சரியப்படாதிங்க.  ஆயிரம் பேருக்கு மேல இருப்பாங்க. இது கொஞ்சமே கொஞ்சம் , இந்த கொஞ்சம் பேரை சொல்லவே அரசு முடியாதுங்குது. ஏன்னா நம்ம அரசியல் பெருந்தலைகள், அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் நபர்களும் அதில் உள்ளது தான்.

குறிப்பு:- மேலும் விரிவான செய்திகளுக்கு உண்மைத்தமிழன் வலைப்பதிவை பார்க்கவும்.













சனி, ஜனவரி 15, 2011

ஒற்றுமையின் பலம் எருமை உணர்த்தும் பாடம்

   அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்!!

ஒற்றுமையின் பலத்தை நாம் பாடங்களில் படித்திருப்போம். ஒரு குச்சிய உடைத்துவிடாலாம் ஆனால் அதே போன்ற குச்சிகளின் கட்டை உடைக்கமுடியாது. தனியொருவனின் கோரிக்கையை விட அமைப்புகளின் கோரிக்கை எடுபடுவதும் ஓர் காட்டு.

உங்களுக்கு தெரியும் தண்ணியிலுள்ள முதலை, நிலத்தில் சிங்கம் மற்றும் எருமைகளின் பலம். சிங்கங்கள் ஒற்றுமையா போராடி நீரில் இருக்கும் முதலையிடம் இருந்து தன் இரையை மீட்டன (படத்துல பார்க்கலாம்). சிங்கமும் பலமானது தண்ணியிலுள்ள முதலையும் பலமானது. காட்டெருமை இவைகளின் இரை. தன் கன்றை சிங்கங்களிடம் இழந்த காட்டெருமைகள் பின் கூட்டமாக ஒற்றுமையாக வந்து கன்றை சிங்கங்களிடம் இருந்து மீட்டு செல்கின்றன. ஒற்றுமை தந்த பலத்தில் எருமை ஒன்று சிங்கத்தை அப்படியே அலாக்கா தூக்கி வீசுவதையும் பார்க்கலாம். எருமைக்கு எப்படி இவ்வளவு தைரியம்? கூட்டமா இருந்தாலும் சிங்கம் தனக்கு தோதான எருமையை வேட்டையாடிடும். இங்க ஒற்றுமையா வந்ததால சிங்கம் ஓடிடுச்சி. 



இதிலிருந்து நாம ஏதாவது புரிஞ்சுக்கிட்டா சரி.