வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஏப்ரல் 13, 2016

2016 தேர்தல் காலம் என் பார்வை



தேர்தல் காலம் தொடங்கிருச்சு வைகோ பாலோட பழத்தை கொண்டு போயிட்டார். எங்கேயும் மரியாதை கிடைக்காததால் வாசனும் வைகோக்கிட்ட வந்துட்டார். பழம் கிடைக்காத ஏமாற்றத்தில் திமுக சந்திரகுமார் போன்ற தோல்களை பொறுக்க ஆரம்பித்துள்ளது.  கருப்பா இருக்கறவங்க எல்லாம் கருப்பு மகோரா (MGR) ஆகிடமுடியுமா?

                                                               --**--

நல்ல ஆதரவு இருந்தப்ப அரசியல் செய்யாமல் கருணாநிதியை பற்றி நன்கு அறிந்திருந்தும் ஏமாந்து விட்டு வைகோ இப்பத்தான் உண்மையாக அரசியல் செய்கிறார். காலம் கடந்த ஞாயிரு வணக்கம் எந்த அளவு பலன் தரும் என்று தெரியவில்லை.
                     
                                                               --**--

5 ஆண்டு ஆட்சியில் மதுவுக்கு ஆதரவாகவும் அதை எதிர்த்தவர்களை தேச விரோத சட்டத்திலும் சிறையிலடைத்த செயலலிதா வாக்குக்காக இறங்கி வந்து ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று பொதுக்கூட்டதில் பம்முகிறார். திமுகவும் ஆட்சிக்கு வந்தா மதுவிலக்கு என்கிறது. இது சொல்வதை ஏற்கலாம் ஏன்னா இது எதிர்கட்சி. ஆளும் கட்சியான அதிமுகவும் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பெண்கள் வாக்கு செய்யும் வேலை இம் இம் அதுக்கு ஆட்சியை மாற்றக்கூடிய அளவு  ஆற்றல் உள்ளது என்பதை எல்லோரும் புரிந்து உள்ளார்கள்.


                                                                  --**--

சென்னை வெள்ளம் வந்து நிருவாகம் சந்தி சிரித்ததால் செயலலிதாவின் போலியாக பல்வேறு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட நிருவாக திறமை தெரியவந்துள்ளது. அப்ப மட்டும் மறத்தமிழன் போலி அடிமை பன்னீர் முதல்வராக இருந்திருந்தால் இன்னும் செயலலிதாவின் நிருவாக திறன் இன்மையை உணராமல் ஏமாந்து இருப்போம் ஊடகங்களும் நம்மளை இன்னும் ஏமாற்றிக்கொண்டிருக்கும். .

இப்பக்கூட நத்தம், பன்னீரு இவ்வளவு அமுக்கிட்டாங்க அதை தெரிந்த செயலலிதா நடவடிக்கை என்று இவரை காப்பாற்றவும் பலியை அவர்கள் மேல் போடவும் முயற்சி நடக்கிறது. இவருக்கு தெரியாமல் நத்தம், பன்னீரு பணத்தை அமுக்கிட்டாங்க என்பதே வடிகட்டின பொய். கேக்கறவன் கேனயனா இருந்தா கேப்பையில் நெய்வழியுதுன்னு சொல்வாங்களாம். தமிழக மக்கள் கேனயர்கள் என்று நினைச்சிக்கிட்டார்.


அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் சுயநிதிக்குழுவினர் அனைவருக்கும் இலவச மன்னிக்க விலையில்லா செல்பேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இருக்குமென நினைக்கிறேன். வேறு என்ன விலையில்லா பொருட்கள் தருவார்கள் என்று அறிய ஆர்வமாக உள்ளேன்.

                                                                   --**--

அதிமுக திமுக தேமுதிக பொதுவுடமைவாதிகள் விசிக  புத என்று எல்லோரும் சாதிக் கட்சிகளே.  பாமக மட்டும் தான் முத்திரை பெற்றுள்ளது. வேடிக்கை! சாதி சங்கம் தான் பின்னால் கட்சியாக மாறியது. பொதுவுடமைவாதிகளைப் பற்றி பொய் சொல்றேன்று நினைக்காதிங்க அக்கட்சியில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்  யாரு விசாரிச்சு பாருங்க.


மற்ற கட்சிகள் போல் அல்லாமல் அரசு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் வழங்கும் போது மாற்று நிதிநிலை அறிக்கை என்று பல உருப்படியான பணிகளை செய்தவர்கள் இவர்கள். இந்திய ஒன்றிய அமைச்சராக  இருந்த போதும் இக்கட்சியினர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.


தேர்தல் நடைமுறை கோளாறுகளால் சின்னத்தை தக்கவைக்க அது பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது, அதுக்கு வடதமிழகத்தில் (வன்னியர் பகுதிகளில்) மட்டுமே ஆதரவு உண்டு மற்ற இடங்களில் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். யானை போய் தான மாம்பழம் வந்திருக்கு? இந்த தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றிபெறலைன்னா அதுவும் போயிரும். மற்ற கட்சிகளும் இவர்களுடனும் மற்றவர்களுடனும்  மாறி மாறி கூட்டணி வைத்தபோதும் பாமகவிற்கு மட்டுமே கெட்ட பெயர். இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் கட்சி தொடங்கின நேரம் சரியில்லைன்னு தோணுது.

                                                                   --**--

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அமைச்சரவை அமையவேண்டும் என்பதே என் விருப்பம்.

தேமுதிக + மநகூ+தமாகா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு என் அடுத்த பார்வை வரும் எப்படியும் தேர்தல் முடியும் முன் ஒரு இடுகையை போடலாமுன்னு  திட்டம் வைத்துள்ளேன்.


திங்கள், பிப்ரவரி 08, 2016

பண்பாட்டு மாற்றம்

கிராமத்தில் உள்ள அத்தை வீட்டிற்கு மாரியம்மன் திருவிழாவுக்கு போயிருந்தேன்.  எட்டு ஊரு மக்களுக்கு அதான் மாரியாயி. மாரியம்மன் திருவிழா தான் அவங்க கொண்டாடும் பெரிய விழா. அதனால நிறைய சொந்தங்களையும் அழைத்திருந்தார்கள். நாடகம் போட்டிருந்தாங்க நாடகத்தில் அத்தை பையனுக்கு பெண் வேடம். நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்தோம் அந்த நேரத்திலயும் வீட்டில் பெண்கள் அரட்டை ஓயவில்லை. எப்பவும் இல்லாம இன்று மட்டும் கோம்பை ஆயாவிடம் உள்ள வேறுபாடு தெரிந்தது. தூங்கும் போது மண்டையை கசக்கியும் அது என்னான்னு தெரியலை.

எல்லோரும் அத்தை வீட்டை விட்டு கிளம்பிட்டோம். ஆனா எனக்கு கோம்பை ஆயாவின் வேறுபாடு குறித்து ஒரே சிந்தனை.  மூன்று நாள் கழித்து கண்டுபிடித்து விட்டேன். அதாவது கோம்பை ஆயா மார்புக்கச்சையாகிய சா(ஜா)க்கெட் அணிந்திருந்தார். அவர் வயது ஒத்த மற்ற ஆயாக்களிடம் மார்புக்கச்சை அணியும் பழக்கம் இல்லை. பதில் சொல்ல தகுதியான என் ஆயாவிடம் கோம்பை ஆயாவின் வேறுபாட்டைப் பற்றி கேட்டேன்.
கோம்பை தாத்தா திருமணத்துக்கு முன் மலேசியாவில் வேலை செய்துள்ளார். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே தாயகம் வந்துள்ளார். இங்குள்ள விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு இனி மலேசியா போகும் எண்ணமில்லைன்னு சொல்லியிருக்கார்.

அவரின் சொந்தங்களும் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தனர். பெண் வீட்டாரிடம் மாப்பிளையின் முடிவை சொல்லி பெண் கேட்டு அது திருமணத்தில் முடிந்து விட்டது.

 கோம்பை ஆயாவுக்கு திருமணமான மூன்று  ஆண்டுகளில் கோம்மை தாத்தாவுக்கு இங்க உள்ள விவசாய வருமானம் போதாம மலேசியாவுக்கு கூப்பிட்டாராம். அங்க எசுட்டேட்டில் தான் வேலை ஆனா வரும்படி அதிகம். கோம்பை தாத்தாவை நேரில் பார்த்ததில்லை நான் பிறக்கும் முன்பே சிவலோக பதவியை  அடைந்துவிட்டார்.

மார்புக்கச்சை எனப்படும் சா(ஜா)க்கெட் அணியும் பழக்கம் அக்கால எம்குலப் பெண்களுக்கு கிடையாது. ஆனால் மலேசியாவிற்கு வானூர்தியிலோ கப்பலிலோ செல்லவேண்டுமானால் மார்புக்கச்சை அணிந்தாக வேண்டும். கோம்பை ஆயா அணியமுடியாது என்று பிடிவாதமாக இரண்டு ஆண்டு தாக்குபிடித்துள்ளார். பின் சொந்தங்களின் அறிவுரையின் (வற்புறுத்தலின்) பேரில் பிடிவாதம் தளர்ந்து மார்பு கச்சை அணிந்து கொள்ள ஒப்புக்கொண்டு மலேசியாவிலேயே 30 ஆண்டுகள் இருந்து விட்டு இனி அந்த ஊர் போதும் என்று விட்டு தாயகம் வந்துவிட்டார்.

இப்ப பழக்கத்தால் சா(ஜா)க்கெட் போடுகிறார். பண்பாடு அல்லது உடை பழக்கம் எப்படி மாறுதுண்ணு பாருங்க.

கொசுறு - எங்க பக்க ஆயாக்கள் படத்தில் உள்ளது போல் தான் இருப்பாங்க. என் ஆயா காலத்து ஆட்களுக்கு நெற்றியில் ஈறுகுச்சி போல (மூக்கிலுருந்து தலை வகுடு வரை) பச்சை குத்தப்பட்டிருக்கும்.  சில பேர் கையில் வித விதமாக பச்சை குத்தப்பட்டிருக்கும்.

(படங்கள் உதவி - கூகுள், பிளிக்கர்)

சனி, மே 09, 2015

பிரித்தானியா தேர்தலும் இசுக்காட்லாந்து வாக்காளர் மனநிலையும்



இத்தேர்தலில் டோரிக்கள் என்று அடையாளப்படுத்தப்படும் கன்சர்வேடிவ் கட்சி எனப்படும் பழமைவாத கட்சி 331 தொகுதிகளில் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. லேபர் கட்சி எனப்படும் தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வென்றுள்ளது.

இசுக்காட்லாந்து தேசிய கட்சி  56 தொகுதிகளில் வென்றுள்ளது.  கடந்த பொது தேர்தலில் (2010) இக்கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

அப்புறம் தான் ஏழு மாதத்திற்கு முன்பு 2014, செப்டம்பர் மாதத்தில் இசுக்காட்லாந்து பிரிந்து தனி நாடாகலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) வரைபடம்
பச்சை நிறத்தில் உள்ளது இங்கிலாந்து (இது தான் பெரிய பகுதி, மக்கள் தொகை அடிப்படையிலும் இது தான் மிகப்பெரியது)
வெளிர் கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது வேல்சு
ஆரஞ்சு நிறத்தில் உள்ளது இசுக்காட்லாந்து (பிரித்தானியா (ஐக்கிய இராச்சியத்தின் எண்ணெய் வளம் இங்கு தான் உள்ளது)
 ஒரு வகையான வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் உள்ளது  வட அயர்லாந்து

வட அயர்லாந்து இணைந்த பின்பு பிரித்தானியா ஐக்கிய இராச்சியம் என அதிகாபூர்வமாக பெயர் மாற்றம் பெற்றது.


இத்தேர்தலில் இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றியே நம்மால் கவனிக்பட வேண்டியது.

வாக்கெடுப்பில் பிரித்தானியாவிலிருந்து பிரியவேண்டாம் என்று பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர், அதோடு அடுத்த பத்தாண்டுகளுக்கு இது பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்று அனைவரும் நினைத்தனர்\ நினைத்துக்கொண்டுள்ளனர்.

அவ்வாக்கெடுப்புக்கு பிறகே இசுக்காட்லாந்து தேசிய கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தனர். இசுக்காட்லாந்து தேசிய உணர்வை தட்டி எழுப்பி இவர்கள் பிரிய வேண்டும் என்று வாக்கெடுப்பில் கோரியதால் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்.

கடந்த முறை நடந்த தேர்தலில் (2010) ஏறக்குறைய 20% வாக்குகளை இசுக்காட்லாந்து பகுதியில் பெற்ற இசுக்காட்லாந்து தேசிய கட்சி இம்முறை ஏறக்குறைய 50% வாக்குகள் பெற்றுள்ளது.  கடந்த முறை 2010 தேர்தலில் இசுக்காட்லாந்தில் தொழிலாளர் கட்சி பெற்றது ஏறக்குறைய 42% வாக்குகள் இம்முறை பெற்றது 24.3% வாக்குகள்.

இசுக்காட்லாந்தின் 59 தொகுதிகளில் 56 இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கு சென்றுள்ளது. இதுவரை தொழிலாளர் கட்சி பலமாக இருந்த இடம் இசுக்காட்லாந்து. கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி வென்றது. இம்முறை இசுக்காட்லாந்தில் பெற்றது ஒன்றே ஒன்று தான்.

இங்கிலாந்து ஒரு முடிவெடுத்தது இசுக்காட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிவினை வேண்டும் என்று கோரும் கட்சிக்கு பேராதரவு கொடுத்துள்ளது. அதுவும் ஏழு மாதத்திற்கு முன் இதற்கு தோல்விய கொடுத்த பின்பு. அதிலும் தொழிலாளர் , பழமைவாதம் ,  தாராளவாத சனநாயம் & மற்றவர்கள் என்று எல்லோரும் ஓர் அணி இசுக்காட்லாந்து தேசிய கட்சி மட்டும் எதிர் அணி.

இது தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி. ஏனென்றால் பழமைவாத கட்சி இசுக்காட்லாந்தில் பலம் பொருந்திய கட்சி அல்ல. அதன் வேர் பலம் எல்லாம் இங்கிலாந்து தான்.

2014இல் நடந்த பிரியலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பில் பிரிய வேண்டாம் என்று 61% வாக்குகள் பதிவான எடின்பர்க் பகுதியின் நான்கு தொகுதிகளும் இம்முறை இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கே. இது வியப்பான ஒன்று.  தெற்கு எடின்பர்கில் மட்டும் இயன் முர்ரே வென்று தொழிலாளர் கட்சிக்கு ஆறுதல் கொடுத்துள்ளார்.

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றி சொல்லாமல் பல செய்திகளை பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் சொல்லுகிறது.  இந்தியா இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.

மற்றவை

ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி (UKIP) 12.6% வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.  இசுக்காட்லாந்து தேசிய கட்சி இசுக்காட்லாந்தில் மட்டுமே போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அதன் வாக்கு வீதம் 4.7 ஆனால் நிறைய தொகுதிகளை பெற்றது. ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி எல்லா இடங்களிலும் போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 12.6% வாக்குகள் பெற்றாலும் குறைந்த (ஒன்று) இடங்களே கிடைத்தது. இது தேர்தல் ஆணையங்கள் குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆராய வேண்டியது. கட்சி மாநில கட்சியா என்று முடிவெடுக்கவும் பொது சின்னம் வழங்கவும் இது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உதவும்.

கட்சி மாநில கட்சியா என்பது குறித்தும் பொது சின்னம் வழங்குவது குறித்தும் முடிவெடுத்தால் இப்போ பலன் பெறப்போவது பாமக ஆக தமிழகத்தில் இருக்கும்.  பாமகவானது அதிமுக திமுக என்று தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்தது ஏன் என்று இப்போது புரிகிறதா? கட்சிக்கு மாநில கட்சி என்ற நிலை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பது அதில் முதன்மையானதாக இருக்கலாம்.

வட அயர்லாந்தில் பழமைவாத & தொழிலாளர் கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்குகளை கூட பெறவில்லை. அவை இரண்டுமே வட அயர்லாந்தின் தலையெழுத்தை பெரிய இடத்தில் இருந்து (நடுவண் அரசு) எழுதுபவை இது தமிழ்நாட்டின் நிலையை நினைவு படுத்துகிறதா?

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் சார்பில் பெய்சிலி- ரென்பிரசுய்வொயர் தெற்கு தொகுதியில் வென்ற 20 வயதுடைய மெகரி பிளாக் என்ற பெண்மணியே 350 ஆண்டு வரலாற்றில் பிரித்தானியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.


ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

உலகின் மோசமான நிலநடுக்கங்கள் & சில விபரங்கள்

இப்ப நேபாளத்தில் ஏற்பட்ட 7.9   ரிக்டர் அளவு நிலநடுக்கம்  மோசமான நிலநடுக்க பட்டியலில் சேராதிருக்க வேண்டும்.

இதுவரை 2,200க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக சொல்கிறார்கள். இப்ப தான் தொலை தூரத்திலிருந்து இறந்தவர்கள் பற்றி செய்தி வர ஆரம்பித்துள்ளது அதனால் பலியானவர் எண்ணிக்கை 4,000க்கும் அதிகமாக தான் இருக்கும்.

நேபாளம் மலைப்பகுதி என்பதாலும் போக்குவரத்தும் தகவல் தொடர்பும் அதிகம் இல்லாததாலும் அதிக உயிர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சுகிறார்கள்.  இன்னொரு பயம் என்னன்னா நிலநடுக்கம் ஏற்பட்டது 10-15 கிமீ ஆழத்தில் தான் இது மேல்மட்டம் என்பதால் புவியின் மேற்பரப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆழிப்பேரலையால் நாம் பாதிக்கப்பட்டதும் இம்மாதிரி நிலநடுக்கம் 20-30 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் தான்.  80 கிமீக்கும் மேலான ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டா தான் நமக்கு பாதிப்பு குறைவாக இருக்கும்.


CCTVயில் நிலநடுக்கம் பதிவாகியதை பாருங்கள் .   நன்றி - Indian Express

மோசமான அப்பிடின்னா அதிக உயர்கள் பலியான நிலநடுக்கம் என்று கொள்ளவும். ரிக்டர் அளவில் இது கணிக்கப்படவில்லை.
  • 2003ஆம் ஆண்டு ஈரானின் பான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர்.
  • 2004ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் அது உருவாக்கிய ஆழிப்பேரலையாலும் பலியானவர்கள் 230,000. பல (இந்தியா, இலங்கை, தாய்லாந்து...) நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையும் இதில் அடக்கம்.  நிலநடுக்கத்தின் அளவு 9.1 ரிக்டர். இதை நம்மாளும் மறக்க முடியாது. இந்தியா என்று சொன்னாலும் தமிழகத்திற்கு தான் பாதிப்பு அதிகம்.
  • 2005ஆம் ஆண்டு பாக்கித்தான் நிருவகிக்கும் காசுமீரின் தலைநகர்  முசபார்நகர் அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.6 ரிக்டர்.
  • 2008ஆம் ஆண்டு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.9 ரிக்டர்.
  • 2010ஆம் ஆண்டு எயிட்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 220.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.0 ரிக்டர். இது கூபாவுக்கு அருகில் 80 கிமீ தொலைவில் உள்ளது. 

1934ஆம் ஆண்டு நேபாளம்-பீகார் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நேபாளத்தில் 8,500 பேர் பலியானார்கள்,  பீகாரில் 10,000க்கும் அதிகமானவர்கள் இறந்தார்கள்.

உலகிலுள்ள அனைத்து நிலத்தட்டுகளின் வரைபடமும் பெயரும்
நன்றி - விக்கிப்பீடியா


இந்திய நிலத்தட்டு ஆனது ஐரோஆசிய (ஐரோப்பாவும் ஆசியாவும் சேர்ந்த நிலப்பகுதி) நிலத்தட்டுடன் பல்லாயிரம் ஆண்டுகள் மோதியதால் தான் இமய மலையே உருவாகி உள்ளது.  மோதல் இப்போதும் தொடர்கிறது, ஆண்டுக்கு 4-5 செமீ என்ற அளவில் நிலத்தட்டுக்கள் நெருங்குகிறது. அதாவது இந்திய நிலத்தட்டு தான் ஐரோஆசிய நிலத்தட்டுடன் மோதுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய "துணைக்கண்டம்" ஆசியாவில் ஒட்டியிருக்காமல் தனித்தீவாக தான் இருந்தது. ஆப்பிரிக்காவை ஒட்டி உள்ள மடகாசுக்கர் தீவு இந்திய துணைக்கண்டத்துடன் முன்பு ஒட்டியிருந்தது என்றும் கருதுகிறார்கள்.

7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்துக்கு அடுத்து வந்த பெரிய நிலநடுக்கத்தின் அளவு 6.9 ரிக்டர் என்று இந்தியாவும் 6.7 ரிக்டர்  என்று அமெரிக்கா காரனும் சொல்றாங்க.  இது இந்தியாவில் நிறைய இடங்களில் உணரப்பட்டுள்ளது. (மழைக்கு அப்பறம் வரும் தூவானம் -  கொழைஞர்) இது 7.9 வந்த இடத்துக்கு அருகில் தான் வந்தது. இதனால் உயிர் பலி குறைவாக தான் இருக்கும் ஏன்னா 7.9 வந்ததுக்கு அப்பறம் கட்டடங்களில் யாரும் தங்காமல் வெட்ட வெளியில் தான் தங்கியிருப்பாங்க.

எயிட்டி தான் அமெரிக்காக்களிலேயே மிக ஏழ்மையான நாடு.  லத்தீன் அமெரிக்காக்களில் முதலில் சுதந்திரம் பெற்றதும் இது தான். 1804 ஆண்டில் சுதந்திரம் பெற்றது  பிரான்சு, பிரித்தானியா, எசுப்பானியா ஆகிய மூன்று ஐரோப்பிய இராணுவபலம் உள்ள அரசுகளை இது தோற்கடித்துள்ளது. எயிட்டியின் வரலாறு படிக்க ஆர்வமூட்டுவது.

அமெரிகாக்களின் (வட, தென் அமெரிக்கா)  மேற்கு பகுதி, இமய மலை பகுதி, ஈரான், சப்பான், இந்தோனேசியா, இத்தாலி, எசுப்பானியா ஆகியவை நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் உள்ளவை.  நிலத்தட்டுகள் ஒரசினா நிலநடுக்கம் வரும் வாய்ப்பு மிக அதிகம்.

அதுக்காக மற்ற இடங்களில் நிலநடுக்கம் வராது என்று பொருளல்ல. வரும் வாய்ப்பு மிக குறைவு, வந்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது. கட்டடம் உறுதி இல்லைன்னா பாதிப்பு அதிகமாகிடும். சப்பானை நினைச்சு பாருங்க அவங்க நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் தான் கட்டடம் கட்டுவார்கள்.

கலிபோர்னியாவே குறிப்பாக சான் பிரான்சிசுகோ & லாசு ஏஞ்சலசு நகரங்கள் இருப்பது நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் தான்.  சான் பிரான்சிசுகோ  ஏற்கனவே 1906இல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கு அதனால அதுக்கு பயம் அதிகம். சான் ஆண்டிரியாசு பிளவு என்பது நீளமானது மட்டுமல்ல கலிபோர்னியாவின் மேற்கு கரை நகரங்களை பயமுறுத்தும் ஒன்று. அது பெரிய குறிப்பிடத்தகுந்த பிளவு அதை தவிர நிறைய பிளவுகளும் உள்ளன.  அதனை இதன் கிளைகள் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு 75 ஆண்டுக்குப் பிறகும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலோ அதற்கு அருகிலோ குறிப்பிடத்தகுந்த நிலநடுக்கம் வரும் என்கிறார்கள். அந்த கணக்குப்படி 2090 வரை நேபாளத்தில் பெரிய நிலநடுக்கம் வராது. 2090க்கு அப்பறம் பெரிய நிலநடுக்கம் வரும் வரை நேபாளம் பக்கம் தலைவச்சு படுக்காதிங்க.

புதன், மார்ச் 25, 2015

ஆம் ஆத்மி கட்சியும் உட்கட்சி பூசலும்


தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றதும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். பாசகவின் தடையற்ற பல சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு கிடைத்த பெரும் தடை மக்களாட்சிக்கு நல்லது. மற்ற எதிர்கட்சிகள் பாசகவை பார்த்து இதன் ஓட்டத்தை எப்படி தடுப்பது என்று செய்வதறியாமல் திகைத்த நேரத்தில் தில்லியில் பாசகவுக்கு பெரும் அடி. இது பாசகவுக்கும் நல்லது என்று தான் கூற வேண்டும்.

இன்னும் சொன்னால் 2014ஆம் ஆண்டின் பாசகவின் வெற்றிப்பயணம் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.
குல்லா

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி பெருவெற்றி பெற்றதும், யோகேந்திர யாதவும் பிரசாந் பூசணும் கட்சியை சில கேள்விகள் கேட்டார்கள். தேர்தலுக்கு முன்னமே கேட்டுள்ளார்கள் ஆனால் தேர்தலுக்கு பின் தான் அதற்கு மதிப்பு கூடியுள்ளது.  கேட்ட கேள்விகளும் மிகச்சரியானது, ஆனால் அதற்கு ஆம் ஆத்மியின் தில்லி பொறுப்பாளர்கள் அவர்கள் இருவரையும் துரோகிகள் என்றதும் மற்ற நடவடிக்கைகளும் ஆம் ஆத்மியும் மற்ற கட்சிகள் போல் தான் என்று காட்டியது. 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது, இது அக்கட்சியின் பலருக்கு செருக்கை (மமதை) தரும். இப்போது நடக்கும் சண்டையைப் பார்த்தால் பலருக்கு செருக்கு வந்தது போல் தான் தெரிகிறது. மேலும் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல் வெற்றி பெற்றவர்கள் அடுத்தவர்களை ஈர்ப்பர் புதிதாக வருபவர்களில் சிலரோ பலரோ மோசமான பேர்வழிகளாக இருப்பர். கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது அதனால் நாளாக ஆக கட்சி தன் கொள்கைகளிலிருந்து நழுவாமல் இருக்க கேள்விகள் மூலம் அதை ஒழுங்கு செய்வதே முறை. வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். தவறுகள் ஏற்படலாம் கட்சியினர் கேள்வி கேட்டால் தான் தவறுகளை களைய முடியும். உட்கட்சி குரல் கேட்கப்பட்டு அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டும். இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். இந்தி கட்சி என்று நினைக்க வைக்கக் கூடாது.

கேள்விகள் கேட்காவிட்டால் தவறு நடக்க வாய்ப்பு அதிகம், எண்ணம் தூய்மையாக இருந்தாலும் கேள்விகள் தேவை. பல ஆண்டுகள் கழித்தும் எண்ணம் மாசு படாமல் இருக்க வேண்டும். தலைவருக்கும் கட்சியின் மற்ற முதன்மையானவர்களுக்கும்

இடுப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

என்று வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் உள்ள பலர் மற்ற கட்சிகள் போல் இயங்க ஆசைப்படுகின்றனர் அது மாபெரும் தவறு. இவர்களின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையால் அது டெல்லி கட்சியாகவே இருக்கும். மற்ற மாநிலங்களில் வளர முடியாது. பஞ்சாபில் நாலு மக்களவை உறுப்பினர்களை பெற்றதால் அங்கு பெரிய கட்சியாகலாம். மற்ற மாநிலங்கள்?  மாநில தலைமை வலுப்பெற்றால் மட்டுமே அந்தந்த மாநிலங்களில் வளரமுடியும்.

இங்கு இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் தில்லி மாநிலம் என்று சொன்னாலும் அது பெரிய மாநகரம் மட்டுமே.  ஆம் ஆத்மிக்கு தில்லி, பஞ்சாப் தவிர மற்ற இடங்களில் பெருநகரங்களில் மட்டுமே சிறிய ஆதரவு உள்ளது.

  • ஆம் ஆத்மி கட்சி எல்லா மாநிலங்களிலும் வளருவது கடினம். ஆம் ஆத்மி என்பது கருத்தாக்கமே இத்கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பல மாநிலங்களில் கட்சி உருவாகலாம், ஆம் ஆத்மி கட்சி அவற்றுடன் கூட்டணி வைக்கலாம். அதாவது கூட்டாட்சி முறையே நல்லது. இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
  • கட்சியின் மேல் மட்டத்தலைவர்கள் அனைவரும் இந்திக்காரர்களே. இந்தி பேசாத பெருவாரியான மாநிலங்களில் வளர அம்மாநில மொழி பேசும் ஆளுமைகள் தேவை. அனைவருக்கும் குறிப்பிட்ட மாநிலத்தின் நிலைமையோ அது எதிர்கொள்ளும் சிக்கல்களோ புரிவது கடினம். ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு என்று சொன்னால் மிகையல்ல. உறுதியான மாநில தலைமை இங்கு தான் தேவைப்படுகிறது. 
  • கட்சி இப்போது பெருநகரங்களில் ஆதரவை கொண்டுள்ளது. ஊரகப்பகுதியில் கட்சி வளருவது அந்த மாநில கட்சியினரின் செயல்பாட்டை பொருத்தே உள்ளது. பஞ்சாபில் வளர்ந்து வருவதும் அங்கு பெறப்போகும் வெற்றியும் மற்ற மாநிலத்தவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். (என்னைப் பொருத்த அளவில் தில்லி வெற்றியை விட பஞ்சாபில் பெறப்போகும் வெற்றியே, அளவில் பெரிய ஊரகங்களை உடைய மாநிலங்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும்)
  • கட்சியின் மேல்மட்டக்குழுவில் மாநிலங்களுக்கு சிறப்பு தரப்பட வேண்டும். அவர்கள் சொல்வது கேட்கப்பட்டு முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 
  • மாநில கட்சி நிலவரங்களை மேல் மட்டம் தீர்மானிக்கக்கூடாது (மற்ற தேசிய கட்சிகளைப்போல). 
  • கட்சி செயற்குழு பொதுக்குழு கூட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். (இதைத்தான் பிரசாந்தும் யோகேந்திராவும் சொன்னார்கள்)
  • மாநில அளவு கட்சிக்கு தேசிய கட்சி உதவ வேண்டும் அவர்கள் செல்லுவது தவறு என்றால் அறிவுறுத்தவேண்டும்.

ஆம் ஆத்மியிடம் எனக்கு பிடிக்காதது குல்லா தான். குல்லாவை கண்டாலே ஒவ்வாமை வருகிறது. வடமாநிலங்களில் குல்லா சரி. தமிழ்நாட்டுக்கு?? குல்லா, தில்லி கட்சி இங்கே ஆதிக்கம் செலுத்த வருகிறதோ என்ற அச்சத்தை தரும். தமிழ்நாட்டுக்கு குல்லா பயன்படுத்தினால் கட்சி மக்களிடம் நெருக்கமாக முடியாது.  தமிழகத்தில் குல்லா செயற்கையாக இருக்கும்.\ இருக்கிறது. குல்லாவிற்கு பதில் துண்டு பயன்படுத்தலாம்.



திங்கள், மார்ச் 09, 2015

கிரண் பேடியின் முகமூடி

தில்லியில் தோற்றுவிட்டாலும் அவரைப்பற்றிய பிம்பம் நம் உள்ளத்தில் தவறாக பதியப்பட்டுள்ளது என்பதால் இக்கட்டுரை. தேர்தலோடு இக்கட்டுரையை தொடர்பு படுத்தி பார்க்க வேண்டாம் ஆனால் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் முன்நிறுத்தப்பட்டதால் தான் அவரை பற்றி தெரிந்தது. (தில்லி தேர்தலுக்கு முன்பு எழுத ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன் அவ்வளவு வேகம்)

கிரண் பேடி தில்லியின் கன்னாகட்டு பிளேசில்அனுமதியற்ற இடத்தில் நிறுத்தியிருந்த பிரதமர் இந்திரா காந்தி பயணம் செய்யும் மகிழுந்தை இழுத்து சென்றார் அதனால் அடுத்த நாளே பழிவாங்கப்பட்டு கோவாவுக்கு மாற்றப்பட்டார் என்று அறிந்திருந்தோம். இதையெல்லாம் கூறியது கிரண் பேடி என்ற கிரண் கேடி தான். தன்னைப் பற்றி இப்படியான உருவகத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். ஊடகங்களும் அதையே இத்தனை நாளும் வெளியிட்டன.

மேற்கண்ட செய்தியை ஏப்ரல் மாதம் 2010இல் போபாலில்  சமூக அறிவியல் பள்ளி மாணவர்களிடம் அவர்களின் இசுபெக்ட்ரம் 2010 நிகழ்ச்சியில் உரையாற்றும் போதும் கூறியுள்ளார்.


ஆனால் இப்போது தான் தெரிகிறது அவர் ஒன்றும் செய்யவில்லை போக்குவரத்து துணை ஆய்வாளர் நிர்மல் சிங் என்பவர் முறையற்ற முறையில் நிறுத்தியிருந்த மகிழுந்துக்கு அபராதம் விதித்தார் என்பது.  அச்சமயத்தில் இந்திரா காந்தி வெளிநாட்டில் இருந்தார். அதுவும் அது பிரதமர் பயணம் செய்யும் மகிழுந்து அல்ல அது பிரதமர் அலுவலக மகிழுந்து (DHI 1817). அங்கு வேலை செய்த யாரோ பயன்படுத்தியுள்ளார்கள். அம்மகிழுந்துக்கு தேவையான பொருட்களை அங்குள்ள கடையில் வாங்க நிறுத்தியுள்ளார்கள்.   அதனால் அக்கடைக்கு நிர்மல் சிங் தண்டம் விதித்து சீட்டு கொடுத்துள்ளார். அக்கடையின் பாதுகாவலர் இது பிரதமர் அலுவலக மகிழுந்து என்று கூறியும் தண்டம் விதித்தார் நிர்மல் சிங். நேர்மையான அதிகாரி நிர்மல் சிங்கிற்கு கிடைக்க வேண்டிய புகழை இத்தனை காலமும் அனுபவதித்து வந்துள்ளார். இதுல கொடுமை என்னன்னா உண்மையான செய்தி கிரண் பேடியின் பக்கத்தில் உள்ளது ஆனால் எல்லோரும் அப்பக்கத்தை பார்க்காமல் கிரண் பேடி கூறியதையே நம்பினர். கிரண் பேடி கூட அவர் பக்கத்தை பார்க்காத போது அடுத்தவர்கள் பார்க்கனும் என்பது சரியல்ல :). இப்போது இவர் தளம் மீளமைக்கப்பட்டதால் பழைய செய்தி கண்ணுக்கு தட்டுப்படவில்லை. இப்போது இவர் கடையில் டீ போடுகிறார்கள். நடக்கட்டும்.

இது நடந்தது ஆகத்து 1982இல். கிரண் பேடி கோவாவுக்கு மாற்றப்பட்டது 1983 மார்ச்சில். கோவாவில் பணியிலிருந்த இவர் விடுப்பு கடிதம் கொடுத்து விட்டு (விடுப்பு ஏற்படவில்லை) தில்லிக்கு ஓடி வந்துவிட்டார்.
மகளுக்கு உடல் நிலை மோசமடைந்ததால் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு உடனடியாக தில்லி வந்தார். நிருவாக ரீதியாக அதாவது சட்டப்படி இது தவறு என்றாலும் உணர்வு வழியில் இது சரி. ஆனால் இதற்கு நேர்மாறாக மிசோரமில் நடந்தார்.

காங்கிரசு அரசு இவரை பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டதால் தான் இவருக்கு பாசக மேல் அன்பு பொங்குகியது என்பதும் வடிகட்டிய பொய். இவருக்கு காங்கிரசு அரசாங்கம் இக்கட்டான நேரங்களில் உதவியுள்ளது. இவர் முறையற்ற முறையில் வழக்கறிஞர்கள் மேல் தடியடி நடத்தியதை அது பற்றி விசாரித்த விசாரணை ஆணையமும் (வாத்வா ஆணையம்) கண்டித்துள்ளது. குற்றம் செய்த வழக்கறிஞரை தண்டித்தது சரி என்றும் ஆனால் எல்லா வழக்கறிஞர்கள் மேலும் தடியடி நடத்தியது தவறு என்றும் கூறியது. இவருக்கு தில்லியில் பெரிய பதவி தரக்கூடாது என்றும் அது கூறியது. இவரை மாற்ற வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை இராசீவ் காந்தியின் அரசில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பூட்டா சிங் மறுத்துவிட்டார். இவருக்கு பாசக மேல் அன்பு பொங்கியது தவறில்லை அதற்கு காங்கிரசு அரசு பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டது தான் காரணம் என்பது இவருக்கு அழகல்ல.

1992ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட இவர் தன் மகளுக்கு அம்மாநில ஒதுக்கீட்டில் டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார். சட்டப்படி இதில் தவறு இல்லை என்றாலும் அவ்வொதுக்கீடு மிசோரம் மாநில மலை வாழ் மக்களுக்கானது. சட்டத்தின் ஓட்டையை தனக்காக பயன்படுத்தினார்.  மிசோரம் மாநில தலைமைச் செயலரும் அம்மாநில ஒதுக்கீட்டில் கிரண் பேடி தன் மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் தவறில்லை என்றாலும் பொது நலன் கருதி அவ்வொதுக்கீட்டை பயன்படுத்தாமல் மிசோரம் மக்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை பேடி ஏற்றுக்கொள்ளவில்லை. மிசோரம் இடவொதுக்கிடை இவர் பயன்படுத்தியதால் மிசோராமில் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  மிசோரம் அரசும் இவர் மிசோரமில் இருப்பது ஆபத்து என்றும் இவருக்கும் இவர் குடும்பத்தாருக்கும் 24 மணிநேரமும் பாதுகாப்பு தருவது இயலாத செயல் என்றும் இவருக்கு எதிராக குற்றம் நடக்கலாம் என்று கூறியதால் அம்மாநில நிருவாகத்தின் அறிவுரைப்படி அங்கிருந்து வந்துவிட்டார்.


சனி, டிசம்பர் 27, 2014

சம்மு காசுமீர் தேர்தல் அலசல்

2014 ஆம் ஆண்டு  சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தல்.

இது சிறிது தாமதம் தான், சுட சுட நம்மால் கொடுக்க முடியாது :(. ஆனால் இன்னும் நிறைய சூடு உள்ளது. முதல்வர் யாருன்னு இன்னும் தெரியலை ஏன்னா எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மக்களின் சனநாயக கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன் அதற்கு பாசக தவிர்த்த மற்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மக்களின் சனநாயக கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளில் வென்ற கட்சியாக இருந்தாலும் இது பெற்ற வாக்கு விழுக்காடு 22.7 தான். 25 தொகுதிகளில் வென்ற பாசக பெற்ற வாக்கு விழுக்காடு 23.
 
மக்களின் சனநாயக கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. சம்மு பகுதியில் முப்பத்தேழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளது. மீதி எல்லா இடங்களும் காசுமீர் பள்ளத்தாக்கில் பெற்றதே.

பாசக  லடாக் பகுதியில் ஒரு இடத்தையும் மீதி எல்லா இடங்களையும் சம்மு பகுதியிலும் பெற்றது (தேர்தல் ஆணைய தளத்தில் லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது, நாளிதழ்களை பார்த்து இப்படி எழுதினேன்). காசுமீர் பள்ளத்தாக்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.  காசுமீர் பள்ளத்தாக்கை சேர்ந்த ஒரு தொகுதியில் மட்டும் பிணையை மீட்டுள்ளது மீதி எல்லா இடங்களிலும் பிணை தொகை போயிற்று. ரசௌரி மாவட்டத்தில் கலகடெ (Kalakote ) தொகுதியில் பாசகவின் முசுலிம் வேட்பாளர் தேசிய மாநாட்டு கட்சியின் இந்து வேட்பாளரை (இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்) தோற்கடித்தார்.

தேசிய மாநாட்டு கட்சி லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற இரு பகுதிகளிலும் வென்றுள்ளது.

காங்கிரசு கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எல்லா பகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி என்றால் அது இந்திரா காங்கிரசு தான்.

அதனால இக்கட்சியை தான் அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லலாமா?


கட்சி வெற்றி பெற்றது% வாக்குகள்மொத்த வாக்குகள்
பாரதிய சனதா கட்சி (பாசக)2523 %11,07,194
மக்களின் சனநாயக கட்சி2822.7 %10,92,203
தேசிய மாநாட்டு கட்சி1520.8 %10,00,693
காங்கிரசு1218%8,67,883
மார்க்சிய பொதுவுடைமை10.5%24,017
மக்கள் கூட்டமைப்பு21.9%93,182
மக்கள் சனநாயக முன்னனி10.7%34,886
கட்சி சாராதவர்கள்36.8%3,29,881


மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சையது அனத்நாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர்.  இவர் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார். காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார.

சோனவாரில் ஒமர் அப்துல்லாவை வென்ற மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது அசுரப் மிர் வெற்றி கொண்டாட்டத்தில் இயந்திர துப்பாக்கியால் வானை நோக்கி பல முறை சுட்டார் இது மற்ற கட்சிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இது மிக மோசமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.  இப்பவே அடித்து கூறலாம் இவரால் தொகுதி மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை என்று.  சம்மு காசுமீரில் முதல்வராக இருப்பவர் தோற்பது இதுவே முதல் முறை.

பாசக சம்மு பகுதியிலும் லடாக் பகுதியிலும் வென்றது (செய்தித்தாளில் அப்படிதான் படித்தேன் ஆனால் தேர்தல் ஆணைய தளத்தில் அப்படி இல்லை என்று தெரிகிறது). தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்களின் சனநாயகக் கட்சியும் காசுமீர் பள்ளத்தாக்கிலும் சம்மு பகுதியிலும் வென்றன.

People Democratic Party என்றால் மக்கள் சனநாயகக் கட்சி; People's Democratic Party என்றால் மக்களின் சனநாயகக் கட்சி என்பது சரி தானே.

சம்மு காசுமீரில் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும், மற்ற மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை.

தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் எப்பகுதியில் எக்கட்சி எத்தனை தொகுதிகளில் வென்றது என்ற விபரம். இது இன்னும் விபரமா சிலதை புரியவைக்கும்.

முதலாம் கட்டம் (15) வாக்குப்பதிவு நாள் நவம்பர் 25

சம்மு பகுதி: (6) பாசக 04
காங்கிரசு 02
காசுமீர் பகுதி: (5) காங்கிரசு 01
தேசிய மாநாடு 04
லடாக் பகுதி: (4) காங்கிரசு 03
கட்சி சாராதவர் 01

இரண்டாம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 02

சம்மு பகுதி: (9) பாசக 03
காங்கிரசு 03
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 01
கட்சி சாராதவர் 01
காசுமீர் பகுதி: (9) காங்கிரசு 01
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 03
மார்க்சிய பொதுவுடமை 01
மக்கள் கூட்டமைப்பு 02
கட்சி சாராதவர் 01

குல்காம் (Kulgam) தொகுதியில் மார்க்சிய பொதுவுடைமை வேட்பாளர் வென்றார்.

மூன்றாம் கட்டம் (16) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 09

காசுமீர் பகுதி: (16) காங்கிரசு 01
தேசிய மாநாடு 03
மக்களின் சனநாயகம் 11
மக்களின் சனநாயக முன்னனி 01

நான்காம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 14

சம்மு பகுதி: (2) பாசக 02
காசுமீர் பகுதி: (16) தேசிய மாநாடு 04
மக்களின் சனநாயகம் 11
காங்கிரசு 01

ஐந்தாம் கட்டம் (20) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 20

சம்மு பகுதி: (20) பாசக 16
மக்களின் சனநாயகம் 02
தேசிய மாநாடு 02



முடிவுகளை காட்டும் தேர்தல் ஆணைய இணைய தளம்

வெள்ளி, டிசம்பர் 05, 2014

இப்போது கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என்ன ?அலசல்

உலக அரசியலில் கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என்ன?  பாதிப்பு நமக்கு உண்டே அதை தெரிஞ்சுக்க வேண்டாம்?
 
யூலை முதல் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது தெரியும் இதற்கு காரணம் கச்சா எண்ணெயால் அதிக லாபம் அடையும் உருசியாவுக்கு பொருளாதார நெருக்கடி தருவதாக இருக்கலாம். உருசியாவின் பொருளாதார பலம் அதன் கச்சா எண்ணெய் தான். அடிமடியில் கையை வைத்தால் உருசியா உக்ரைனுக்கு தரும் நெருக்கடி குறையும் மேற்கின் பலம் அங்கும் பல இடங்களிலும் அதிகரிகரிக்கும்.

5 ஆண்டு விலை நிலவரம்

கவனித்துப்பார்த்தால் யூலை மாதம் தான் மலேசிய வானூர்தி புரட்சி\கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. புரட்சி\கிளர்ச்சியாளர்கள் உக்ரைனின் கிழக்கிலுள்ள சுலோவின்சுக் நகரை அரசின் படைகளிடம் விட்டு விட்டு ஓடியதும் அப்போது தான் (அரசு படையின் தாக்குதல் தீவிரம்).


ஓர் ஆண்டின் விலை நிலவரம்


அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதால் உருசியா மீது சில பொருளாதார தடை விதித்ததும் அம்மாதத்தில் தான். உருசியா இதை மறுக்கிறது என்பது வேற. உருசியா ஆதரவு இல்லாம புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ஆயுதம் எங்கிருந்து கிடைக்கும்? தெரிந்த இரகசியம் என்பது இது தான்.

ஏன் உருசியா உக்ரைன் விடயத்தில் தலையிட வேண்டும்?. வரலாற்று அடிப்படையில் பார்த்தால் உக்ரைன் உருசிய பேரரசின் பிடிக்குள் தான் எப்போதும் இருந்துள்ளது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் காட்டும் நெருக்கமும் நேட்டோ உருசியாவின் அண்டை நாடுகளில் தளம் அமைப்பதும் அதற்கு உவப்பாக இல்லை.  உக்ரைனும் நேட்டோவின் கைகளுக்குள் போவதை தடுக்க முயல்கிறது. நேட்டோ பக்கத்தில் வருவது உருசியாவின் பாதுகாப்புக்கு அச்சுருத்தல். பல நாடுகள் இணைந்தது நேட்டோ என்றாலும் நடைமுறையில் அது அமெரிக்காவின் முகமூடி. இது எல்லொரும் அறிந்ததே.

இப்போதும் நேட்டோ உக்ரைனை தங்களுடன் சேர்ப்பதில்லை என்ற உறுதியை உருசியாவானது நேட்டோவிடம் கேட்கிறது. அதை அவர்கள் தந்தால் புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவை நிறத்திவிடுவதாகவும் அவர்களை உக்ரைன் அரசுடன் இணைந்து இருக்குமாறும் சொல்வதாக கூறுகிறது. அப்படி சொல்லவில்லை ஆனால் உறுதி கிடைத்தால் கொடுக்கபோகும் பதில் அதுதான். இது வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.


2011, 2012, 2013ம் ஆண்டுகளை விட இப்போது எப்படி பாறைநெய் பயன்பாடு குறையும்? கிணறுகளில் இப்போது கச்சா எண்ணெய் குறைந்திருக்கும். ஆனா விலை???? எப்படி? கணக்கு உதைக்குதே. 2010இல் கூட இன்றைய விலையை விட அதிகம்.

பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய் (Shale oil) எடுப்பது காரணமாக சொல்லப்பட்டாலும் உருசியாவுக்கு பொருளாதார நெருக்கடி தான் உண்மையான காரணமாக இருக்கமுடியும் என்று நினைக்கிறேன்.
அந்த அளவுக்கா பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து விட்டார்கள்? அதில் எடுத்த விபரம் வெளியே வரலையே.

பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய்- இதை களிப்பாறை கச்சா எண்ணெய் எனலாமா?

நம்மூர் அரசியலே பெரிசா இருக்கு இதுல உலக அரசியல் நமக்கு எதுக்கு? ஆனா அதன் பாதிப்பு நம்மை தாக்கும்.

நம்மூர் பக்த கோடிகள் விலை குறைந்ததற்கு மோதி தலைமையில் நடுவண் அரசு அமைந்தது தான் காரணம் என்று கூறாமல் இருந்தால் சரி. இப்படியும் கூறுவார்கள் அதையும் சிலர் நம்புவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

டிசம்பர் 1 அன்று  விலை குறைந்துள்ளது.  ஆமா நமக்கு எவ்வளவு விலைய குறைச்சு இருக்காங்க?

பாறைநெய், டீசல் போன்றவற்றின் குறைந்த விலைகுறைப்புக்கு ஏமாறாதிங்க மக்களே. சந்தைவிலையை பொருத்து விலை நிர்ணயம் என்று சொல்லி விலையை ஏத்தும் போது கடுமையா ஏத்திட்டு குறைக்கும் போது ????

பாறைநெய் விலை அதிகரித்தது என்றால் விலை நிர்ணயமானது கச்சா எண்ணெய் விலையும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சார்ந்தது என்பார்கள்.

ஓர் ஆண்டில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு

5 ஆண்டில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு

2010லிருந்து பாறைநெய் விலை பற்றி தெரிஞ்சுக்கலாமா?
இது சென்னையை அடிப்படையாக கொண்ட விலை நிலவரம்:

            ஆண்டு 2010
தேதி விலை
பிப்பரவரி 2 51.59
ஏப்பிரல் 1 52.13
யூன் 26 55.92
செப்டம்பர் 8 56.02
செப்டம்பர் 21 56.31
அக்டோபர் 17 57.09
நவம்பர் 9 57.44
டிசம்பர் 16 60.65

2010இல் விலை ஒரு முறை கூட குறையவில்லை.

       ஆண்டு 2011
தேதிவிலை
மார்ச்சு 261.63
மே 1567.22
யூலை 167.5
செப்டம்பர் 1670.82
நவம்பர் 472.73
நவம்பர்1670.38
டிசம்பர் 169.55

        ஆண்டு 2012
தேதிவிலை
மே 2477.53
யூன் 375.4
யூன் 2972.27
யூலை 2473.16
யூலை 2572.19
ஆகசுட்டு 172.19
அக்டோபர் 971.48
அக்டோபர் 2771.77
நவம்பர் 1670.57


        ஆண்டு 2013
தேதிவிலை
சனவரி 1 70.58
சனவரி 1870.26
பிப்ரவரி 1672.17
மார்ச்சு 273.95
மார்ச்சு 1671.41
ஏப்பிரல் 270.34
ஏப்பிரல் 1669.08
மே 165.9
யூன் 166.85
யூன் 16 69.39
யூன் 29 71.71
யூலை 1573.6
ஆகசுட்டு 174.49
செப்டம்பர் 177.48
செப்டம்பர் 1479.55
அக்டோபர் 175.68
நவம்பர் 174.22
டிசம்பர் 2174.71

       ஆண்டு 2014
தேதிவிலை
சனவரி 475.71
மார்ச்சு  176.48
ஏப்பிரல் 175.49
ஏப்பிரல் 1674.6
யூன் 774.71
யூன்  2574.76
யூலை  176.93
ஆகசுட்டு 175.78
ஆகசுட்டு 1573.47
ஆகசுட்டு 3171.55
அக்டோபர்  1 70.87
அக்டோபர்  1569.59
நவம்பர் 167.01
டிசம்பர் 166.05
பாசக ஆட்சிக்கு வந்து 6 முறை விலை குறைந்துள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் விலை குறையவில்லை. 
நானும் விலை குறைச்சிருக்கேன் என்று சொல்லி மக்களை நம்பவைக்க இது உதவும். ஆனா விவரம் தெரிஞ்சவன் கிட்ட இந்த பருப்பு வேகாது, ஆனா ஊடகங்களும் அரசின் ஊதுகுழலா இருந்து மக்களை நம்பவைக்கும்.

கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பாறைநெய் விலையை அரசு குறைக்க சொல்லாமல் இறக்குமதியாகும் கச்சா எண்ணைய்க்கு மூன்று வார இடைவெளிக்குள் பாறைநெய்க்கு லிட்டருக்கு 3.75 ரூவா என்றும் டீசலுக்கு லிட்டருக்கு 2.5 ரூவா என்றும் உற்பத்தி வரி விதித்து (அதிகரித்து, முன்னமே வரி உண்டு) பொதுமக்களுக்கு விலை குறைவு ஏற்படாமல் செய்துள்ளது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் 40 % அளவுக்கு குறைந்துள்ளது ஆனால் பாறைநெய் 11%, டீசல் 8% மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.  
 

 இந்த சுட்டியில் விரிவாக போட்டுள்ளார்கள்.

சனி, நவம்பர் 22, 2014

திருப்பதி பயணம்(ங்கள்)

திருப்பதி வேங்கடவனை பார்க்கனுமுன்னு ரொம்ப நாளா ஆசை ஆனா பாருங்க அதுக்கு கொடுப்பினை இல்லாமல் இருந்தது. எங்க குடும்பத்தில் வேங்கிய பார்க்க போவனும்னு பேசிக்குவோம். அது பேச்சாவே இருந்தது.

வேங்கடவன் அலங்காரம் இல்லாமல்
அலங்காரம் இல்லாமல் உள்ள வேங்கடவன் திருமலை வேங்கி இல்லைன்னு நினைக்கிறேன். திருமலை வேங்கியின் புகைப்படம் (நிழற்படம்) வெளியில் வந்திருக்கான்னு தெரியலை. அலங்காரத்தோடு உள்ள வேங்கி மற்ற இடத்திலுள்ள வேங்கி என்பது என் எண்ணம்.

தனக்கு பிடித்த மலர் அலங்காரத்தோட வேங்கி.
நான் சின்ன பயனா இருந்தப்போ (வயசு மறந்துடுச்சி) எனக்கு உடம்பு சரியில்லை (வயித்துக்கடுப்பு) அதை சொல்லியும் கூட, சுற்றுலா போறவங்க யாரோ வரலைன்னு என்னை விடாப்பிடியா கூப்பிட்டாங்க. என் அத்தை மூலமா அந்த சுற்றுலா ஆளு எங்க வீட்டுக்கு வந்து என்னை பிடிச்சார். அலுவல் காரணமா எங்க அம்மாவால வர முடியாத நிலை என்ன பண்றது என்னை சுற்றுலா குழுவோடு அனுப்பி வைச்சாங்க. திருமலை போற வரைக்கும் எனக்கு உடல்நிலை சரியாகலை. அங்க கூண்டுக்குள்ள காத்துக்கிட்டு இருக்கறப்ப அங்க (அதுக்குன்னு கூண்டிலிருந்த இடத்தில்) குளிச்சேன் உடல் நிலை நல்லாயிடுச்சி. அது வரைக்கும் ரொம்ப பட்ட பாடு சொல்லி மாளாது :( .

கூண்டிலிருந்து (தர்ம தரிசன கூண்டு) மக்கள் சாமியை பார்க்க செல்கின்றனர்..

அடுத்த முறை குடும்பத்தோட போனோம் காட்பாடிய தாண்டினதும் விஜயவாடா அல்ல விசயநகரத்தில் உண்ணாவிரதம் இருந்த காங்கிரசு மக்களவை உறுப்பினர் இறந்ததாலோ அல்ல தாக்கப்பட்டு கவலைக்கிடமானதாலோ ஆந்திராவுல மறியல் அப்ப இராமாராவ் ஆட்சி, எந்த வண்டியும் ஓடல. சோத்து மூட்டைய தூக்கிக்கிட்டு நாங்க நடந்தோம் அப்ப யாரோ புண்ணியவான்கள் எங்களை ஜீப்பில் ஏற்றிக்கிட்டாங்க. சித்தூரில் எங்களை இறக்கிவிட்டாங்க. அங்க காத்திருந்து தொடருந்து புடிச்சி திருப்பதி போனோம்.  அடுத்த தேர்தலில் காங்கிரசு ஆட்சிக்கு வர அந்நிகழ்வும்  "கை" கொடுத்தது. இது தான் நன்றாக நினைவு தெரிந்து நான் போன முதல்  தொடருந்து பயணம். எல்லாப்புகழும்  காங்கிரசு செய்த மறியலுக்கே :)

அலிப்பிரி என்னும் அடிவாரத்தில் உள்ள கோபுரம்
அப்புறம் மாமா பையனுக்கு மொட்டை அடிக்கிறதுக்காக குடும்பத்தோட போனோம். இப்ப வாடகை மகிழுந்தில் போனோம். பாவிநாசனத்தில் உள்ள அணையில் ஓரமா எல்லோரும் குளிக்க மேல இருந்து தண்ணி வருமே அதுல நல்லா குளிச்சோம். அங்க பூங்கா இருக்கு. சோத்து மூட்டைய அவிழ்த்து திங்க தொடங்கினோம். கொஞ்சம் தெம்பு வந்ததும் நானும் என் மாமா பையனும் தனியா போயி அங்கு வந்திருந்த பெண்களை (வயசு காரணம்;) ) சைட் அடித்தோம். பெண்களும் நைசா சைட் அடித்தார்கள். அங்கிருந்து வரவே மனசில்லை. எப்படி? அங்கிருந்து கிளம்ப மனசு வரும் இஃகி இஃகி. அங்கே அணை உள்ளது ஆனால் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை. திருமலையில் உள்ள கட்டடங்களுக்கும் கோயில்களுக்கும் இங்க இருந்து தான் நீலு (தெலுங்கு சொல் ஒன்னு கத்துக்குங்க) வருது.

பாபவிநாசனம் என்ற இடத்தில் குளியல்




படி இல்லா சம தள நடைபாதை







அடுத்த முறை என் மாமா பையனும் நானும் (நான் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் போது) திருப்பதி போனோம். திருப்பதியில் தமிழ் பேசும் இருவர் கூட சேர்ந்து கொண்டோம், அவர்களால் திருப்பதியில் உள்ள கோவிந்தராச பெருமாளை கும்பிட்டோம், எத்தனை பேர் கோவிந்தனை பார்த்திருக்காங்கன்னு தெரியலை, பெரும்பாலோர் வேங்கிய பார்ப்பதோட சரி.  பின்னர் மலைப்பாதை வழியாக நடந்து மேல(திருமலை) போனோம். மேல போனதும் நாங்க அவங்களிடம் இருந்து பிரிஞ்சிட்டோம். நல்லா சாமி கும்பிட்டோம். Semester (செமசுடர்) தேர்வில் எல்லாம் தேர்வாகனும் என்று வேண்டிக்கொண்டோம். அதுக்குத் தானே போனது.

திருப்பதி நகரிலுள்ள கோவிந்த ராச பெருமாள் கோவில் கோபுரம்.
கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு வேலை தேடி வந்தாச்சு. நானும் என் நண்பனும் நினைச்சா சின்ன நண்பர்கள் குழுவ (3~6 பேர் ) சேர்த்துக்கிட்டு திருப்பதி போயிடுவோம். பல முறை போயிருக்கோம் எப்பவும் மேல போறப்ப நடை பின் தேவசுதான அறைய பிடிச்சு குளிச்சுட்டு சாமிய கும்பிட்டுட்டு பேருந்தில் கீழே. அப்புறம் நேரா சென்னை. சில முறை திருத்தணி வழியா போகும் பேருந்து, சில முறை தடா வழியா போகும் பேருந்து. போகும் போதும் வரும் போதும். சில முறைக்கு அப்புறம் தடாவுக்கு தடை போட்டுட்டோம் ஏன்னா அவ்வழி சாலை மோசமாக இருந்ததுதான்.
அடிவாரத்தில் படி. காலுக்கு நல்ல பயிற்சி.
அடிவாரம் வரை (மலைப்பாதை தொடங்கும் இடம்) போவதற்கு பேருந்து நிலையத்தில் இருந்து ஜீப் அதுக்கு ஆளுக்கு 10 ரூபா. நடு இரவில் (12 மணி வாக்குல) அது கிடைப்பதே பெரிசு இல்லையா? ஆளு நிறைய சேர்ந்த பின் தான் வண்டிய எடுப்பார்கள். மலைப்பாதைகளில் நிறைய கடைகள் உண்டு தண்ணி (நீலு), கோக், இட்லி, தோசை எல்லாம் கிடைக்கும். சிகரெட், பீடி விற்க திருமலையில் தடை. ஆனால் புகை பிடிக்க \இலுக்க தடையில்லை.

 திறந்தவெளி கூண்டுக்குள் மான்
மலைப்பாதையில் நிறைய இடங்களில் மான்களை பார்க்கலாம் திறந்த வெளி கூண்டுக்குள் இருக்கும். கம்பி வலை நமக்காக (நம்மிடமிருந்து மானை காப்பாத்தனுமே) அப்புறம் தான் மானுக்காக. முதல் முறை போனபோது தெரிந்த கோபுரத்தை பார்த்து திருமலைக்கு வந்ததாக நினைத்தோம். நிறைய பேர் இப்படி ஏமாறுவார்கள். அதுவரை படி. அப்புறம் படி இல்லை. சாலையில் சிறிது நேரம் அப்புறம் படி அப்புறம் திருமலை. சாலையை அடையும் முன் பெரிய அனுமன் சிலை வரும் அவ்விடத்தில் யோகநரசிம்மர் கோவிலும் உண்டு. கிட்டதட்ட ஒரு கிமீ சாலையில் நடக்கனும். தூரம் ஒன்னா அல்லது இரண்டு கிமீரா? எனக்கு தெரியவில்லை, நேக்கு தெலுசா?. சாலைப்பயணம் முடிந்ததும் படி. இதில் ஏற கடினமா இருக்கும்.  ஏற்றம் (சாய்வு) கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த படி ஏற்றம் முடிந்ததும் திருமலை வந்திடும்.
சாலையை அடையும் முன் உள்ள அனுமன்
இந்த சாலையில் தான் நடக்கனும் இங்க படி இல்லை.

தேவசுத்தான அறைய வாடகைக்கு எடுக்க பெருங்கூட்டம் இருக்கும் நாங்க 3 ~ 4 க்கெல்லாம் திருமலைக்கு சென்றுவிடுவதால் அறை எங்களுக்கு கிடைத்துவிடும். 6 மணிக்கு மேல தான் அறை (கன்னத்தில் அல்ல) கொடுக்க ஆரம்பிப்பாங்க.  அறைக்கு பக்கத்திலேயே இட்லி கிடைக்கும் சில முறை கிடைக்காது எங்கு அறை உள்ளதோ அதைப்பொருத்து இது மாறும். அறையை காலி செய்யும் பொழுது கூட்டுபவர்களுக்கு காசு கொடுக்கனும், கொடுக்காமலும் வரலாம், அவர்கள் நமக்கு செய்யும் உதவியை பொருத்து நாம் முடிவு செய்யலாம். இதை அங்குள்ளவர்கள் பங்கிட்டுக்கொள்வார்கள்( காக்கா பரம்பரையான்னு கேக்காதிங்க ). ஆனா சாவியை ஒப்படைக்கும் இடத்திலும் காசு கேட்பார்கள் (நம்ம முன் பணம் அவங்ககிட்ட இருக்கில்ல) அடேய் என்னமோ நான் வந்ததும் அறையை கொடுத்த மாதிரி கேக்கறானேன்னு கோபம் வரும் ஆனா அதை வெளிக்காட்டிக்காமல் நம் முழு முன் பணத்தையும் வாங்கிட்டு வரனும். நிறைய பேர் முன் பணத்தில் ஒரு பங்கை கொடுத்துவிடுவார்கள்.(அரசு பணத்தை அவன் நமக்கு இலவசமா குடுக்கிற மாதிரி நினைப்பு, இது ஒரு வகையான உடலியல் மிகப்பெரும்பாலோர் இதற்கு இரையாவார்கள்) 100 என்று சொல்லாமல் 99.99 என்று விலை வைப்பதும் இதனால் தான். (இந்த உடலியலை நம்பித்தான்)


வீடு திரும்பும் முன் இங்க சூடம் பத்த வைச்சு சாமி கும்பிடும் இடம்

ஒரு முறை சாமி இருக்கும் உள் கோவிலை உடலால் உருண்டு வர (அங்கபிரதட்ணம்) செய்ய நானும் என் நண்பனும் முடிவு செய்து அங்க கேட்டா ஒருத்தரும் உருப்படியான தகவலை சொல்லலை. இறுதியில் ஒருத்தர் சொன்னார் உடனே ஓடினோம் ஏன்னா இன்னும் 5 நிமிடம் தான் அதுக்கு இருந்தது. அங்க இருந்த குழாயில் குளித்து விட்டு சென்றோம் குளித்துவிட்டா என்றால் உடலை தண்ணீரால் நனைத்துக்கொண்டு. நாங்க பல மணி நேரமா கேட்டுக்கிட்டு இருந்தோம் அப்பவே இத்தகவல் தெரிந்திருந்தால் வரதனோட குளத்தில் முழுக்கு போட்டு விட்டு அவதியில்லாம பொறுமையாக கூட்டத்துடன் சேர்ந்திருப்போம். அப்புறம் தான் தெரிந்தது அங்கபிரதட்சனம் செய்பவர்களுக்கு தான் முதலில் சாமி காட்சி தருவாராம். அப்புறம் தான் மற்றவர்களுக்காம்.
மேல் செல்லும் வழியுள்ள நடைபாதை கடைகள்

இதனாலயே இப்ப நிறைய பேர் அங்கபிரதட்சனம் செய்ய வருவதால் கூட்டம் அதிகமாகி விட்டது, 150 பேர் தான் உள் கோயிலை உடம்பால் சுற்ற முடியுமுன்னா 500 பேருக்கு மேல வந்தா என்ன பண்றது அதனால இப்ப  அதுக்கு சீட்டு முறை கொண்டு வந்துட்டாங்க.  நிறைய பேர் சீட்டு வாங்க முயல்வதால் அது கிடைப்பது கடினம் என்ற நிலை.

இரவில் ஒளிரும் வேங்கியின் இல்லம்.
ஒரு முறை எங்களில் பலசாலியான  ஒருத்தன் மேல ஏற திணருனான். நோஞ்சான் மாதிரி இருந்தவன் எல்லாத்துக்கும் முன்னாடி ஏறிக்கிட்டு இருந்தான். அப்ப தான் புரிஞ்சது மேல படி வழியே செல்வதற்கு பலசாலியா இருந்தா மட்டும் பத்தாது என்பது.

பகலில் பறவை பார்வையில் வேங்கியின் இல்லம்.
நாங்க எப்பவும் காசு இல்லா முறையில் தான் சீனியை பார்ப்போம். ஒரு முறை 50 ரூபா கொடுத்து போனோம் ஆனா பாருங்க அப்ப 50 ரூபா வரிசையை மெதுவாகவும் காசு இல்லா வரிசையை விரைவாகவும் விட்டாங்க. அப்ப முடிவு பண்ணினோம் இனி என்ன ஆனாலும் காசு கொடுத்து சீனியை பார்ப்பதில்லை என்று. 
இது 50 ரூ வரிசை லட்டுக்கா அல்ல சாமிய பார்க்கவான்னு தெரியலை
நாங்க உணவுக்கு வாடகை கட்டடத்தில் இயங்கும் உணவகத்தை நாடமாட்டோம். எப்பவும் கையேந்தி பவன் தான். காசு குறைவு என்பதோடு அங்க தான் ருசி அருமையா இருக்கும். சீனியை பார்த்துட்டு வந்ததும் விலையில்லா (இலவச) சோற்றுக்கு டோக்கன் கொடுப்பார்கள். அதை வாங்கி வந்து வெளியில் வந்து விலையில்லா சோறு வேண்டாம் என்பவர்கள் அதற்காகவே காத்து இருப்பவர்களுக்கு கொடை அளித்து அன்னகொடை அளிக்கலாம்.
பக்தர்களை நம்பி திருமலையில் உள்ள கடைகள்
கிளம்பும் முன் சீனியை பார்த்தமாதிரி இருக்கும் இடத்தில் சூடம் கொளுத்தி கும்பிட்டு வருவோம். அனுமார், கருடாழ்வார் கோவிலுக்கு எதிர்த்தாப்ல இருக்குமே. அவ்விடத்தை விரிவாக்கம் என்ற பெயரில் இப்ப இடிச்சுட்டாங்களாமே?  படத்தில் உள்ள மரத்தை வெட்டிட்டாங்களான்னு தெரியலை.

இந்த லட்டை வாங்க என்ன கூட்டம். லட்டே திருமலைக்கு சென்றதற்கு அறிகுறி
இன்னொரு முறை பேருந்தில் சென்னைக்கு வரும் போது நண்பன் ஒருத்தன் "தண்ணிலு" என்பது தெலுங்கு என்று கூறி எங்களை ஏமாத்திக்கிட்டு வந்தான்.  தெலுங்கு தெரியாது ஆனா சில வார்த்தைகளுக்கு பொருள் தெரியும்னான். நாங்க அவன் சொல்றத நம்பினோம் (நாங்கல்லாம் அப்பாவிங்க நம்புங்க). நாங்க சென்னை வருவதற்கள் எங்களுடன் வந்த இன்னொருவனுக்கு இவனுக்கு தெலுங்கு வார்த்தை எதுக்கும் பொருள் தெரியாது, தண்ணிலு தெலுங்கு அல்ல சும்மா புருடா விடுறான் அப்படின்னு ஐயம் வந்திருச்சு. சும்மா அவனை இரண்டு அடி போட்டதும் அவன் தனக்கு தெலுங்கு தெரியாது என்பதையும் தண்ணிலு என்பது இவன் கண்டுபிடிப்பு என்றும் ஒத்துக்கிட்டான். தமிழ் சொல்லோட "லு" போட்டா அது தெலுங்கு அப்படினுட்டான்.
யாரு முதல்ல இந்த கல்லை அடுக்கிவச்சாங்களோ இப்ப தொடருது
நடைபாதையில் நிறைய இடங்களில் கல்லை ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காணலாம். ஏறும் போதோ இறங்கம் போதே ஓய்வு எடுத்த யாரோ பொழுதை கழிக்க கல்லை அடுக்கி இருப்பார்கள் இப்ப மக்கள் அதை தொடர்கிறார்கள். இப்படி கல்லை அடுக்கினா விரைவில் வீடு கட்டும் வாய்ப்பு வரும் என்று நம்புகிறார்கள். நாங்க சும்மா இருப்பமா நாங்களும் நிறைய கல் வீடு கட்டி இருக்கோம்.

இறுதி படி. இது முடியும் இடம் திருமலையே.

 தடுப்பு ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பிரிப்பதற்காக. ஆனால் ஏறுபவர்களுக்கு கைப்பிடியாக துணையாகவும் இருக்கும். தொடக்கத்தில் உள்ள படியில் தடுப்பு இருக்காது ஆனா தொடக்க படி முடியும் முன்பு சில இடங்களில் தடுப்பு இருக்கும். சமதளத்தில் தடுப்பு இருக்காது. இறுதி படிக்கட்டில் தடுப்பு இருக்கும்.

இப்ப கூட்டமும் அதிகமாகி விட்டது கோவிலும் மிகவும் வணிக முறை ஆகிவிட்டது. சீனியை இன்னும் விற்காம இருக்காங்களேன்னு மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். திருப்பதி கோவில் லட்டு முன்ன மாதிரி இல்லை. அளவும் சின்னதாகி விட்டது, ருசி கூட பழைய மாதிரி இல்லை.  ஏதோ அதிக வணிகமுறைக்கு கோவில் மாறுவதற்குள் அங்க அடிக்கடி போனேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். முதலில் அங்க நிறைய தமிழும் அறிந்த (ஏறக்குறைய 90%) ஊழியர்கள் இருந்தார்கள். மெதுவா தமிழ் அறியாத மற்றவர்கள் அதிகளவில் ஊழியர்கள் ஆகிவிட்டார்கள். உள்ளூர் ஆட்களுக்கு திருமலையில் வேலையில்லாமல் போனது வருத்தம் தான். அங்க தமிழ் பக்தர்களின் வருகை மிக மிக அதிகம் ஆனால் சில அறிவிப்பு பலகைகளில் தமிழ் இருக்காது. தமிழிலும் எழுதினால் பக்தர்களுக்கு சிரமம் இருக்காது என்பதை ஏன் தேவசுதானம் புரிந்து கொள்ள மாட்டிக்குது?
.

இப்ப தெரிந்து கொண்ட சில மனவாடு வார்த்தைகள்:

மனவாடு மனதேசம் - நம்மஆளு நம்ம தேசம்.
நீளு - நீர்
காவலா - வேண்டுமா
காவாலி - வேண்டும்
போ - போ (மென்மையா போ என்பதை அதாவது கிளம்பு என்பதை வெள்ளு என்பார்கள்)
வெள்ளு - கிளம்பு
சம்பேஸ்தானு - கொன்னுடுவேன்
சால - நல்லா
சால பாகுந்தி - நன்றாக இருக்கிறது.
பாகுனானா - எப்படிய்யா இருக்க என்று கேட்போம்மில்ல அது மாதிரி
சால பாகுனானு - நன்றாக உள்ளேன் (மேலே கேட்டதற்கு பதில்)

பெள்ளி -திருமணம்
மிர்ச்சி - மிளகாய்
ஆவுதா - அப்படியா
கொடுக்கு - மகன்
கூத்துரு  - மகள்
அம்மாயி - பெண்
தெல்லிது - தெரியாது
தெலுசா - தெரியுமா
 செப்பு- சொல்லு
இடி - இது
கடவு - படி
அத்தடு - அவன்
போஜனம் \ அன்னம் - சோறு\சாப்பாடு
சேசாவா - முடிச்சாச்சா
நிஜமா - நிசமா நாமளும் நிஜமா என்று சொல்லுவோம்
ஏமிட்டி - என்ன
அத்தனு - அந்தாளு
எவரு - யார்\எவர்
அக்கடிக்கி  வெள்ளு - அங்கே போ
எந்த \ எல - எப்படி
இக்கட சூடு ஹ ஹ ஹா - இங்கே பார் (இரஜினியால் இச்சொல்லை அறிந்தேன்)





புதன், அக்டோபர் 29, 2014

நரிமனும் அறமும் நீதியும் செயலலிதாவின் பிணையும்


நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக இருந்தால் அவரது நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது என்பது மரபு. ஆனால் இந்தியாவில் இம்மரபு ஒழுங்காக கடைபிடிக்கப்படுவதில்லை.

தந்தை நரிமன் - வழக்குரைநர்

இப்போது மூத்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பாலி சாம் நரிமன் செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குக்காக (பிணைக்காக) வாதாடியது இப்பிரச்சனைக்கு  உயிர் கொடுத்துள்ளது. பாலி சாம் நரிமனின் மகன் ரோகின்டன் பாலி நரிமன் உச்ச நீதிமன்றத்தில் யூலை 2014 முதல் நீதிபதியாக உள்ளார்.  கோபால் சுப்பரமணியத்தை நீதிபதியாக ஆக்க விடாமல் பாசக அரசு பல தகிடுதத்தங்களை செய்தது அப்போது தான், இல்லாவிட்டால் கோபாலும் ரோகின்டனுடன் நீதிபதியாகி இருப்பார்.  தந்தை நரி வழக்குரைஞராக அவ்வழக்கில் தோன்றுவது குறித்து அப்போது எழுத்த குற்றச்சாட்டுகளை புறம் தள்ளிய தந்தை நரி தான் வழக்காடுவது குறித்து சட்டப்பூர்வ தடையில்லை என்றார். எல்லோரும் சட்டப்படி ஒரே மாதிரி பார்க்கப்படுகிறார்கள் என்றார்.
மகன் நரிமன் - நீதிபதி

1961 வரை பலமுறை வழக்குரைஞர்கள் அவர்கள் உறவினர்களின் நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினார்கள். 1961இல் இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு இது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் கிடைத்தது. இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதி  எண் 6ன் கீழ் நீதிபதியின் உறவினர்கள் யாரெல்லாம் வாதடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.  அதன் படி  நீதிபதியின் மகன், மகள், மருமகள், மருமகன், சம்பந்தி, சகோதர சகோதரிகள், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தா, சித்தப்பா, பெரியப்பா அவர்கள் குழந்தைகள் மற்ற நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது. எனினும் இதிலும் குறை இருந்தது. நீதிபதி பணியாற்றும் நீதிமன்றத்திலேயே (நீதிமன்ற வளாகம்?) வாதாடக்கூடாதா? (அவர் அங்கு இருக்கும் வரை) அந்நீதிபதியின் கீழ் வரும் வழக்குளுக்கு வாதாட கூடாதா? என்ற தெளிவு இல்லை. (வழக்குரைஞர்களுக்கு சட்டத்தின் ஓட்டையை கொடுக்கலாமா?)

 1980களின் தொடக்கத்தில் கருநாடக உயர் நீதிமன்றம் இவ்விதியை பற்றி விளக்கமளித்தது.  அச்சமயத்தில் கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி நசர்கி மனைவியை இழந்திருந்தார். அவரை பெண் வழக்கரைஞர் பிரமிளா நசர்கி மணமுடித்தார். அச்சமயம் பிரமிளா மூத்த வழக்குரைஞர் அல்ல எனவே அவர் பெயர் வழக்காடும் அனுமதி பெற்றதாக அவர் வாதாடும் வழக்கில் குறிப்பிடப்படவில்லை. இதை கவனித்த நீதிபதி அவர் வாதாடும் வழக்குக்குக்கு அவரை வழக்காடும் அனுமதி பெறும் படி கூறினார். அடுத்த நாள் அவர் பெயர் வழக்காடும் அனுமதி பட்டியலில் இருந்தது. ஆனால் அவர் வாதாடும் வழக்கின் நீதிபதி அவரை அனுமதிக்க மறுத்து விட்டார்.

அவர்  இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதியின் படி நீதிபதியின் எந்த உறவினரும் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றக்கூடாது என்றார்.  ஆனால் நீதிமன்றம் என்றது மொத்த கருநாடக உயர் நீதிமன்றத்தையும் (உயர் நீதிமன்றத்தில் பல நீதிமன்றங்கள் இருக்கும் - வளாகம்) என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. இது தான் முன்னமே தெரியுமே அப்படிங்கிறிங்களா? அதுவும் சரிதான்.


இப்பிரச்சனை உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. உச்ச நீதிமன்றம் இதைப்பற்றி அறிவிப்பை இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது.   ஆனால் இப்பிரச்சனையில் தொடர்புடைய  பிரமிளா மூத்த வழக்குரைஞராக மாறிவிட்டதாலும் அவரின் நீதிபதி  கணவர்  ஓய்வு பெற்றுவிட்டதாலும் இப்பிரச்சனை முடிவு எடுக்கப்படமாலே முடிந்தது (நீதியின் வேகத்தால் இஃகி இஃகி).  ஆனாலும் இவ்விதியை சரியாக விளங்கிக்கொள்வதில் \  விளக்குவதில் நீதிமன்றங்களால் இன்னும் சரியான முடிவு எடுக்கமுடியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருட்டிண ஐயர் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் வழக்குரைஞர்  மகன் கிருட்டிணமூர்த்தி வேறு மாநிலத்துக்கு சென்று வழக்குரைஞர் தொழிலை செய்தார்.  1970களில் இன்னொரு விவரமான வேலையை சில வழக்குரைஞர்கள் செய்தார்கள். பிணை வழங்குவதில் கண்டிப்பான அவர்களின் நீதிபதி மாமனாருக்கு செல்லும் பிணை மனுக்களில் இவர்களும் தோன்றுவதாக கையெழுத்து இடுவார்கள் அதனால் அது வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டுவிடும்.  அப்புறம் என்ன...


உச்ச நீதிமன்ற நீதிபதியாக கிருட்டிண ஐயர் பதவியேற்றதும் அவரின் வழக்குரைஞர் மகன் இந்தியாவின் எந்த நீதிமன்றங்களிலும் பணியாற்றுவதில்லை என்று முடிவெடுத்தார். கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சிவராமன் நாயரின் மகளும் மருமகளும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்கியதும் சிவராமன் நாயர் குடியரசு தலைவரிடம் கேட்டு வேறு மாநிலத்திற்கு மாற்றலாகி சென்றார்.


இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத் தன் வரலாறு கூறும் நூலில் பாட்னா  உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அங்குள்ள வழக்குரைஞர்கள் சிவப்புக் கொடி என்ற முறையை கையாண்டதை குறிப்பிடுகிறார்.

மகன், தந்தையின் நீதிமன்றத்தில்\அமர்வில் வழக்காட முடியாது என்பதால் சிலர் அவரின் நீதிமன்றத்துக்கு\அமர்வுக்கு தங்களுடைய வழக்கு செல்லக்கூடாது என்று கருதும் போது மகனிடம் வழக்கின் விபரங்களை கூறி வழக்கு அவரின் தந்தையிடம் செல்லாமல் தடுத்துவிடுவார்கள். இம்முறையானது சிவப்பு கொடி என்று அழைக்கப்பட்டது. இவ்வகையில் சட்டத்தின் விதியை முறையற்ற முறையில் கையாள்வது இங்கு அதிகம் காணப்பட்டது. சில இளம் வழக்குரைஞர்கள் இதன் மூலம் நிறைய சம்பாதிக்கவும் செய்தார்கள். சில நீதிபதிகள் தங்கள் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதியின் மகன்களுக்கு ஆதராவாக இருந்ததாகவும் கேள்வியுற்றேன் என்றும் லீலா சேத் கூறுகிறார். இம்முறையிலும் சிவப்பு கொடி முறை வளர்ந்தது.


1981இல் குப்தா வழக்கில் நீதிபதிகளை இடமாற்றும் போது அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் அவரின் உறவினர் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் உறவினர் நீதிபதிக்கு மற்ற நீதிபதிகளைவிட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நிலை உருவாகிறது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓர் கருத்தரங்கில் கூறிய அறிவுரையை பின்பற்றுவது என்று முடிவாகியது. அக்கருத்தரங்கில் அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி அவரின் உறவினர் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் போது மற்றவர்களை விட தனக்கு அதிக வாய்ப்புகள் வரலாம் என்பதாலும் அது முறையற்றது என்பதாலும் அவ் வாய்ப்பை பயன்படுத்த கூடாது என்று நீதியை காக்கும் பொருட்டு வேறு மாநில நீதிமன்றத்துக்கு சென்றுவிட வேண்டும் என்றார்.

1997இல் அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் "சட்டவாழ்வின் மதிப்புகள்" என்ற தீர்மானத்தை கடைபிடிப்பதாக உறுதியேற்றார்கள். அத்தீர்மானம் நீதிபதியின் உறவினர் நீதிபதியின் நீதிமன்றத்தில் வாதாடுவதை தடுப்பது என்றும் நீதிபதியின் வீட்டில் தங்கி அவரின் உறவினர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய நீதிபதி அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியது.


மார்கண்டேய கட்சு சில நீதிபதிகளின் உறவினர்கள் அதே நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்கள் என்றும் சில ஆண்டுகளிலேயே அவர்களின் உறவினர் வழக்குரைஞர்கள் பெரும் செல்வந்தர்களாகி விடுவதையும், விலையுயர்ந்த மகிழுந்து & வீடு என்று  ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையும் குறிப்பிட்டார்.

லோதா - முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
சதாசிவத்திற்கு அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்ற லோதாவிடம் நீதிபதியின் உறவினர்கள் அவர் பணியாற்றும் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞனர் தொழில் புரிய தடை விதிக்கப்படுமா என்று கேட்டப்பட்டபோது இது பற்றி  வழக்குரைஞர் மன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமென்றார். இது தொடர்பாக பொது நல வழக்கை வழக்குரைஞர் சர்மா தொடுத்ததை தள்ளுபடி செய்தார்.

தற்போது நரி தன் மகன் நீதிபதியாக உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்.  நீதியின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை கெடுவதற்குள் வழக்குரைஞர் மன்றம் இது தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்.

ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு எழுதுய கட்டுரை ஆங்கிலத்தில் இருந்தது. நான் தமிழாக்கம். கட்டுரையை படித்தபோது சில இடங்கள் புரியவில்லை. அச்சுக்கு தகுந்த மாதிரி வெட்டி நாம புரிஞ்சிக்காம செய்துவிட்டார்கள் என்று தைரியமாக கூறலாம். சில இடங்களில் என் கருத்தை சேர்த்துள்ளேன் நான் என்ன தொழில் முறை மொழிபெயர்ப்பாளரா? ஆனால் அவரின் கருத்தில் இருந்து மாறவில்லை என்றே எண்ணுகிறேன்.

இக்கட்டுரையை படித்தால் வழக்குரைநர் தொழிலிலும் அறத்தை கடைபிடித்தவர்கள் இருந்ததை காணலாம்.

நரிமன் நிறைய பணம் சேர்த்துள்ளவர் இன்னும் ஏன்?  இவரின் செயல் சட்டப்படி சரியென்றாலும் அறமில்லையே? செயலலிதாவுக்கு வேறு திறமையான வழக்குரைநர்கள் கிடைக்கமாட்டார்களா? உச்ச நீதி மன்றத்தில் வேறு திறமையான வழக்குரைஞர்கள் இல்லையா?  நடுவண் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக  இருந்த இவர் தவறான முன்னுதாரணம் ஆனது நீதியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறைக்கும் செயல் அன்றி வேறு என்ன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த லோதா ஒரு உறுதியான முடிவை அப்போது எடுத்து இச்சிக்கலுக்கு தீர்வுகண்டிருக்கலாம்.