வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

முயற்சியை கைவிடேல் எல்க்கு சொல்லும் பாடம்.

கடமான் வகையை சேர்ந்த எல்க்கு (elk) என்னும் விலங்கு கூட்டம் அமெரிக்காவின் மான்டானா மாநிலத்தில் எல்லோஇசுடோன் தேசிய பூங்கா (Yellow Stone National Park) அருகில் கம்பி வேலியை தாண்டி குதித்து சென்றது. சில எல்க்குகளால் முதல் முயற்சியில் தாண்ட முடியவில்லை. ஆனால் இரண்டாவது முயற்சியில் தாண்டிவிட்டன. ஆனால் ஒரே ஒரு எல்க்கினால் மட்டும் தாண்ட முடியவில்லை. அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. பல முறை பலவாறு முயன்றது பலன் இல்லை. அப்ப பார்த்து சாலையில் மகிழுந்து ஒன்று சென்றது அதனால் பயந்து பின்னால் ஓடியது. பின் ஓரே ஓட்டம் வேலியை தாண்டி தன் கூட்டத்தோடு இணைந்து கொண்டது.

காணொளியை பாருங்கள். அதன் முயற்சியை தெரிந்து கொள்வீர்கள்.


 


புதன், ஏப்ரல் 02, 2014

வாக்காளர்கள் விபரம்.

இந்த 16வது மக்களவைத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 814,591,184. இந்திய கணக்கில் 81,45,91,184. புதுச்சேரியில் அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் அடிப்படையில் பெரிய மக்களவை தொகுதி தெலுங்கானாவின் மல்காச்கிரி (ஐதராபாத்தின் புறநகர்). அட்டவணையை பார்த்தீர்கள் என்றால் விளக்கமாகப் புரியும்.

எத்தனை வாக்காளர்கள் மாநில \ ஒன்றியப் பிரதேச வாரியாக உள்ளார்கள். எத்தனை விழுக்காட்டினர் வாக்காளர் நிழற்பட அட்டை வாங்கியுள்ளனர் என்பதன் அட்டவணை.
மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் வாக்காளர்கள் மொத்த வாக்காளர்களில் இவர்களின் விழுக்காடு நிழற்பட அட்டை உடைய வாக்காளர்கள் விழுக்காட்டில்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 257,856 0.032% 98.54%
ஆந்திரப் பிரதேசம் 62,385,949 7.659% 100.00%
அருணாச்சலப் பிரதேசம் 753,216 0.092% 97.60%
அஸ்சாம் 18,723,032 2.298% 0.00%
பீகார் 62,108,447 7.624% 90.60%
சண்டிகார் 580,700 0.071% 99.95%
சத்தீசுகர் 17,521,563 2.151% 95.67%
தாத்ரா & நகர் அவேலி 188,783 0.023% 99.99%
தமன் & தியூ 102,260 0.013% 96.01%
கோவா 1,043,304 0.128% 98.66%
குசராத் 39,871,571 4.895% 99.96%
அரியானா 15,594,427 1.914% 100.00%
இமாச்சலப் பிரதேசம் 4,674,187 0.574% 100.00%
சம்மு & காசுமீர் 6,933,118 0.851% 86.86%
ஜார்க்கண்ட் 19,948,683 2.449% 99.55%
கருநாடகம் 44,694,658 5.487% 99.23%
கேரளம் 23,792,270 2.921% 2.921%
இலட்ச தீவு 47,972 0.006% 100.00%
மத்தியப் பிரதேசம் 47,544,647 5.837% 100.00%
மராட்டியம் 78,966,642 9.694% 91.60%
மணிப்பூர் 1,739,005 0.213% 99.62%
மேகாலயா 1,553,028 0.191% 100.00%
மிசோரம் 696,448 0.085% 100.00%
நாகாலாந்து 1,174,663 0.144% 0.00%
டெல்லி 12,060,493 1.481% 100.00%
ஒடிசா 28,880,803 3.545% 97.33%
புதுச்சேரி 885,458 0.109% 100.00%
பஞ்சாப் 19,207,230 2.358% 100.00%
இராச்சசுத்தான் 42,559,543 5.225% 99.74%
சிக்கிம் 362,326 0.044% 100.00%
தமிழ் நாடு 53,752,682 6.599% 100.00%
திரிபுரா 2,379,541 0.292% 100.00%
உத்திரப் பிரதேசம் 134,351,297 16.493% 99.92%
உத்திரா கண்டம் 6,786,394 0.833% 100.00%
மேற்கு வங்காளம் 62,468,988 7.669% 100.00%
மொத்தம் 814,591,184 100.000% 95.64%

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வாக்காளர் நிழற்பட அட்டை கொடுத்துட்டாங்களா?
---------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாநிலத்திலும் \ ஒன்றியப் பிரதேசங்களிலும் எத்தனை ஆண்கள், பெண்கள் வாக்காளர்கள் உள்ளனர் என்பதன் அட்டவணை.
மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் ஆண்கள் பெண்கள் மற்றவர் மொத்தம்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 136,356 121,500 0 257,856
ஆந்திரப் பிரதேசம் 31,359,303 31,022,225 4,421 62,385,949
அருணாச்சலப் பிரதேசம் 375,927 377,289 0 753,216
அஸ்சாம் 9,694,654 9,028,378 0 18,723,032
பீகார் 33,098,022 29,008,544 1,881 62,108,447
சண்டிகார் 315,336 265,364 0 580,700
சத்தீசுகர் 8,882,939 8,638,607 17 17,521,563
தாத்ரா & நகர் அவேலி 101,262 87,521 0 188,783
தமன் & தியூ 50,595 51,665 0 102,260
கோவா 520,264 523,040 0 1,043,304
குசராத் 20,864,446 19,006,837 288 39,871,571
அரியானா 8,442,220 7,152,207 0 15,594,427
இமாச்சலப் பிரதேசம் 2,390,117 2,284,068 2 4,674,187
சம்மு & காசுமீர் 3,657,764 3,275,354 0 6,933,118
ஜார்க்கண்ட் 10,508,420 9,440,237 26 19,948,683
கருநாடகம் 22,800,918 21,885,287 8,453 44,694,658
கேரளம் 11,442,927 12,349,343 0 23,792,270
இலட்ச தீவு 24,216 23,756 0 47,972
மத்தியப் பிரதேசம் 24,959,925 22,583,669 1,053 47,544,647
மராட்டியம் 41,841,934 37,124,438 270 78,966,642
மணிப்பூர் 852,953 886,052 0 1,739,005
மேகாலயா 769,711 783,317 0 1,553,028
மிசோரம் 341,934 354,514 0 696,448
நாகாலாந்து 594,572 580,091 0 1,174,663
டெல்லி 6,684,476 5,375,379 638 12,060,493
ஒடிசா 15,038,356 13,841,339 1,108 28,880,803
புதுச்சேரி 424,958 460,488 12 885,458
பஞ்சாப் 10,112,897 9,094,333 0 19,207,230
இராச்சசுத்தான் 22,406,058 20,153,464 21 42,559,543
சிக்கிம் 186,826 175,500 0 362,326
தமிழ்நாடு 26,893,009 26,856,677 2,996 53,752,682
திரிபுரா 1,212,509 1,167,032 0 2,379,541
உத்திரப் பிரதேசம் 73,613,039 60,731,628 6,630 134,351,297
உத்திரா கண்டம் 3,562,721 3,223,661 12 6,786,394
மேற்கு வங்காளம் 32,489,949 29,978,526 513 62,468,988
மொத்தம் 426,651,513 387,911,330 28,341 814,591,184

சண்டிகர், கேரளம், கோவா போன்றவற்றில் ஒரு வாக்காளர் கூட மற்றவர்கள் இல்லை என்பது பெரும் வியப்புக்குரியது.

பெண்கள் கேரளாவில் அதிகம்.பெண் வாக்காளர்களும் அதிகம். ஆனால் புதுச்சேரியில் அதிக பெண்கள் உண்டு என்பது தெரியாது. மலையாள தேசத்தில் உள்ள மாஹேல அதிக பெண்கள் இருந்து மொத்த புதுச்சேரி கணக்க அதிகப்படுத்திட்டாங்களோ..

அதிக பெண் வாக்காளர்கள் உள்ள மாநிலங்கள் \ ஒன்றியப் பிரதேசங்கள் அட்டவணை.
மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் ஆண்கள் எண்ணிக்கை பெண்கள் எண்ணிக்கை ஆண்கள் விழுக்காட்டில் (%) பெண்கள் விழுக்காட்டில் (%)
புதுச்சேரி 424,958 460,488 48.0% 52.0%
கேரளம் 11,442,927 12,349,343 48.1% 51.9%
மணிப்பூர் 852,953 886,052 49.0% 51.0%
மிசோரம் 341,934 354,514 49.1% 50.9%
தமன் மற்றும் தியூ 50,595 51,665 49.5% 50.5%
மேகாலயா 769,711 783,317 49.6% 50.4%
கோவா 520,264 523,040 49.9% 50.1%
அருணாச்சலப் பிரதேசம் 375,927 377,289 49.9% 50.1%


காசியாபாத் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் டெல்லி முதல்வர் ஏகே49 குடியிருந்த இடமில்ல?. உத்திரப்பிரதேசத்துக்கு சேர்ந்தது என்றாலும் டெல்லியை சேர்ந்தது என்று சொல்லலாம். (தலைநகருக்கு உட்பட்ட பகுதி)
வாக்காளர்கள் அடிப்படையில் முதல் ஐந்து பெரிய மக்களவை தொகுதிகள்
எண் மாநிலம் மக்களவை தொகுதி மொத்த வாக்காளர்கள்
1 ஆந்திரப் பிரதேசம் (ஐதராபாத்தின் புறநகர், தெலுங்கானா) மல்காச்கிரி 29,53,915
2 உத்திரப் பிரதேசம்(ஆனா டெல்லிக்கு சேர்ந்தது என்று சொல்வது தான் பொருத்தம்) காசியாபாத் 22,63,961
3 கருநாடகம் வடக்கு பெங்களூரு 22,29,063
4 உத்திரப் பிரதேசம் உன்னாவ் 21,10,388
5 டெல்லி வட மேற்கு டெல்லி20,93,922

வாக்காளர்கள் அடிப்படையில் ஐந்து சிறிய மக்களவை தொகுதிகள்
எண் மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் மக்களவை தொகுதி மொத்த வாக்காளர்கள்
1 இலட்ச தீவு இலட்ச தீவு 47,972
2 தமன் மற்றும் தியூ தமன் மற்றும் தியூ 1,02,260
3 சம்மு காசுமீர் லடாக் 1,59,949
4 தாத்ரா & நகர் அவேலி தாத்ரா & நகர் அவேலி 1,88,783
5 அந்தமான் & நிக்கோபார் தீவுகள் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 2,57,856



தரவு: இந்திய தேர்தல் ஆணையம் (பெப்ரவரி 14, 2014 வரை உள்ள தகவல்.

குறிப்பு: அனைத்து தகவல்களும் என்டிடிவியின் இணையதளத்தில் இருந்து எடுத்தது.

ஞாயிறு, மார்ச் 16, 2014

மலேசியன் ஏர்லைன்சு (MH370) எங்கப்பா போயிடுச்சு?

சனிக்கிழமை (மார்ச்சு 8, 2014) காணாமல் போன மலேசியன் ஏர்லைன்சு பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வருது ஆனா அது எங்க இருக்குன்னு தெரியலை.

வியட்நாம் பகுதி கடல்ல விழுந்துருச்சுன்னு சொன்னாங்க, மலேசியன் ஏர்லைன்சின் எண்ணெய் கசிவு இதோ இருக்கு அப்படின்னு சொன்னாங்க.

மலேசியன் ஏர்லைன்சின் கதவு கடல்ல மிதக்குதுன்னு சொன்னாங்க.

இதுல போனங்க 2 பேர் போலி (தாய்லாந்தில் திருடப்பட்ட) கடவுச்சீட்டு பயன்படுத்தியிருக்கறதா சொல்றாங்க. கடவுச்சீட்டை தாய்லாந்தில் பறிகொடுத்தவங்க ஆசுத்திரியா & இத்தாலி நாட்டுக்காரங்க.

40க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள் தேடுதுன்னு சொன்னாங்க.

சீனா 10 செய்மதிகளை கொண்டு வியட்நாம் கடல் பகுதியை சல்லடை போட்டு தேடுதுன்னு சொன்னாங்க.

வானூர்தி மேற்கு பக்கம் போயிடுச்சி அப்படினாங்க.

பயணிகள் சிலரின் செல்போன் சிக்னல் இருக்குது செல்பேசியின் மணி அடிக்குது ஆனா எடுக்கலை அப்படினாங்க.

சீன செய்மதி வானூர்தி விபத்து நடந்த இடத்தை காட்டுச்சுனாங்க.

மலாக்கா நீர்சந்தி பகுதியில் தீவிர தேடுதல் நடத்துனாங்க. மலாக்கா நீர்சந்தி அதிக கப்பல் போக்குவரத்து உடையது.

வானூர்தி ஓட்டுநர் தற்கொலை பண்ண எங்காவது முட்டியிருக்கலாம் என்கிறாங்க.

மலேசிய இராணுவம் காணாமல் போன வானூர்தி மேற்க போனதா சொல்லுது.

கடத்தப்பட்டிருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க.  போலி கடவுச்சீட்டை பயன்படுத்தனவங்களுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லை\வாய்ப்பில்லை அப்படின்னும் சொல்றாங்க.

கடத்தப்பட்டிருக்கும் அப்படங்கிறதையும் புறந்தள்ள முடியாது அப்படிங்கிறாங்க. 

மலேசிய அரசாங்கம் மந்திரவாதிய கூப்பிட்டு தேடுனாங்க. அதனால் கோபம் கொண்ட வாசுது நிபுணர்கள் அவங்க கதைய சொல்லியிருக்காங்க.

இந்திய படை தேடுதலில் ஈடுபட்டது, அதை நிறுத்த மலேசிய அரசு சொல்லிட்டுச்சி.

அந்தமான் பக்கம் வந்துச்சினாங்க.

இந்தியப்பெருங்கடல் பக்கம் வந்துச்சினாங்க.

வானூர்தி காணாம போனாலும் அது இன்னும் சமிக்கை தருதுன்னு சொல்றாங்க.

வானூர்தி காணாமல் போன இடத்திலிருந்து 5 அல்லது 6 மணி நேரம் பறந்திச்சி அப்படின்னு அமெரிக்கா சொல்லுது.

வானூர்தி மேற்க வந்தப்ப எந்த நாட்டு (மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா) இராணுவ ரேடாரும் அதை கண்டுபிடிக்கலை ஏன்னா அப்போ ரேடார்கள் தேய்ஞ்சிருமுன்னு அது செயல்படலை. (சுருளி படத்தை பார்த்து இருப்பாங்களோ?)
 
இன்னும் நிறைய சொன்னாலும் இன்றைய தேதி வரை கண்டுபிடிக்கலை. தேடுதல் வேட்டையில் உலகின் பெரும் தொழில்நுட்பம் கொண்ட நாடுகள் ஈடுபடுது. தொழில்நுட்பத்தின் மீது பெரிய நம்பிக்கை வந்திருக்கனுமே?

என் ஊகம்:

வானூர்தி சுமத்திரா தீவுக்கோ, தாய்லாந்து அல்லது மியான்மாருக்கோ (பர்மா) கடத்தப்பட்டிருக்கலாம் என்பது தான்.





திங்கள், மார்ச் 10, 2014

தேர்தல் கணிப்பு

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டாயிற்று. சில கணிப்புகளை இங்கே சொல்லி உள்ளேன். இது எந்த கட்சிகாரங்களும் காசு கொடுத்து செய்ததல்ல :) கருத்து கணிப்புன்னு வந்தா இதை முதல்ல சொல்லனும் பல கருத்து கணிப்பு நிறுவனங்களால் இந்த நிலை.

மாநிலம் தொகுதிகள் ஆட்சி 2009ல் காங் வென்றது 2009ல் பாசக வென்றது
ஆந்திரப்பிரதேசம் 42 காங்கிரசு 33 0
அருணாச்சல்பிரதேசம் 2 காங்கிரசு 2 0
அஸ்சாம் 14 காங்கிரசு 7 4
பீகார் 40 ஐக்கிய ஜனதாதளம் 2 12
சத்திசுகர் 11 காங்கிரசு 1 10
கோவா 2 பாசக 1 1
குசராத் 26 பாசக 11 15
அரியானா 10 காங்கிரசு 9 0
இமாச்சலப்பிரதேசம் 4 காங்கிரசு 1 3
சம்மு காசுமீர் 6 தேசிய மாநாடு 2 0
சார்கண்ட் 14 காங்கிரசு 1 8
கருநாடகம் 28 காங்கிரசு 6 19
கேரளா 20 காங்கிரசு 13 0
மத்தியப்பிரதேசம் 29 பாசக 12 16
மகாராசுட்டிரா 48 காங்கிரசு 17 9
மணிப்பூர் 2 காங்கிரசு 2 0
மேகாலயா 2 காங்கிரசு 1 0
மிசோரம் 1 காங்கிரசு 1 0
நாகாலாந்து 1 காங்கிரசு 0 0
ஒடிசா 21 பிசு ஜனதாதளம் 6 0
பஞ்சாப் 13 அகாலிதளம் 8 1
இராசபுதினம் 25 பாசக 20 4
சிக்கிம் 1 காங்கிரசு 0 0
தமிழ்நாடு 39 அதிமுக 8 0
திரிபுரா 2 காங்கிரசு 00
உத்திரப்பிரதேசம் 80 சமாச்வாடி 21 10
உத்திராகண்டம் 5 காங்கிரசு 5 0
மேற்கு வங்கம் 42 திரிணாமுல் காங்கிரசு 6 1

2009 தேர்தல் முடிவுப்படி: கேரளா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், அரியானா, உத்திராகண்டம், ஓடிசா , சம்மு காசுமீர் போன்ற மாநிலங்களில் பாசக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

காங்கிரசு திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களில் வெற்றி பெற வில்லை.

மகாராசுட்டிரா, பஞ்சாப், பீகார் போன்றவற்றில் பாசகவுக்கு வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன. காங்கிரசுக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம் சம்மு காசுமீர் போன்றவற்றில் வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன.

2009ல் காங்கிரசு 3 மாநிலத்தில் முட்டை வாங்கியிருக்கு பாசக 14 மாநிலங்களில் முட்டை வாங்கியிருக்கு. இதில் பெரும்பாலான மாநிலங்கள் வடகிழக்கை சேர்ந்தது. அங்கு 1 அல்லது 2 தொகுதி தான் இருக்கும். ஆனா கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், உத்திரா கண்டம்,  அரியானா, ஒடிசா, சம்மு காசுமீர் போன்ற 4க்கு மேற்பட்ட தொகுதி உடைய மாநிலங்களிலும் முட்டை.

தெற்கில் கூட்டணி பலமா அமைந்தால் தமிழ்நாட்டில் அதற்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ சில இடங்கள் கிடைக்கலாம். கேரளா, ஆந்திராவில் இப்பவும் முட்டை தான் கிடைக்கும். மேற்கு வங்கத்தில் 2009ல் எப்படியோ 1 இடம் கிடைத்தது. அந்த மாநிலத்தில் பாசக செல்லாக்காசு. ஒடிசாவில் பிஜு ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்தா தேறலாம் இல்லை ஆம்லெட் திங்க முட்டை கிடைக்கும்.

பீகாரில் நிதிசு கூட காய் விட்டதால் இம்முறை எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்பது தெரியவில்லை.  அதாவது வடமாநிலங்களில் நிறைய இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியை பாசக பிடிக்கமுடியும். ஆனால் வடமாநிலங்களில் பெருநகரங்களில் ஆம் ஆத்மி கட்சி பாசகவுக்கு புது தலைவலியாக உருவெடுத்துள்ளது.

அரியானாவில் 2009ல் இரு தொகுதிகளில் (பரிதாபாத், சோனிபேட்டை) பாசக இரண்டாவது வந்துள்ளது. இங்கு இது கூட்டணி வைத்தால் தான் ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்கும். சௌத்தாலா கூட கூட்டணி வைத்தால் சில தொகுதிகள் கிடைக்கலாம். காங்கிரசுக்கு போட்டி கொடுக்கலாம். காங்கிரசும் சௌத்தாலாவும் தான் பெரிய ஆளுங்க. அங்குள்ள சிறிய கட்சியான (சௌத்தாலாவை விட சிறியது) அரியானா ஜாங்கிட் காங்கிரசு கூட 2009ல் பாசக கூட்டணி வைத்தது. 2014ல் அங்கு ஆம் ஆத்மி எப்படி எல்லோருடைய கணக்கை கலைச்சிப்போடும்ன்னு தெரியலை.

மேற்கு வங்கத்தில் 2009ல் பாசகவின் பெரிய ஆளுங்களில் ஒருவரான ஜசுவந்த் சிங் டார்சலிங்கில் வெற்றி பெற்றவர். இவர்  தொண்டர் செல்வாக்கு இல்லாவர் ஆனால் அமைச்சராக இருந்ததால் பெரிய ஆளு என்றேன். அப்ப டார்சலிங்கில் எப்படி வெற்றி பெற்றார் என்கிறீர்களா? அது டார்சலிங்கின் தாதாவான கூர்க்கா சனமுக்தி மோர்சாவுடன் கூட்டணி வைத்தால் தான்.

அசாமில் நாலு இடம் அப்பா! அங்கு பெரும் வளர்ச்சி அப்படின்னு நினைக்காதிங்க. 2004ல் தனியா போட்டி போட்ட போது 2 இடம் கிடைத்தது உண்மை. ஆனால் அங்கு பாசகவுக்கு பெரும் செல்வாக்கு இல்லை. அதில் ஒருவரான பாடகர் பூபன் தன் தனி செல்வாக்கால் வென்றார். பாச கட்சியால் அல்ல. 2009ல் அசாம் கன பரிசத்துடன் கூட்டணி வைத்ததால் தான் 4 இடம் கிடைத்தது. பாவம் அசாம் கன பரிசத்துக்கு அப்போ 1 இடத்தில் தான் வெற்றி கிடைத்தது. இது தேர்வில் இவன் மதிப்பெண் குறைவு ஆனால் இவனை பார்த்து எழுதியவன் நிறைய மதிப்பெண் என்ற கணக்காயிடுச்சு.

பாசக பெரும்பான்மை பெறனும்னா தோராயமா 350ல் இருந்து தான் பெறனும். அதனால அது தனிப்பெரும்பான்மை பெறுவது சுலபம் அல்ல. கூட்டணி தான் ஒரே வழி. 200க்கு மேல் வெற்றி பெற்றால் பயம் இல்லாமல் இருக்கலாம் இல்ல எப்ப யாரு கத்தியால் குத்துவாங்கன்னு தெரியாது அநியாயத்துக்கு பயப்படனும் (ஆட்சியில் அமர்ந்தால்).

நிறைய தொகுதிகளில் வெற்றி பெறனும்னா அதற்கான வழி உத்திரப்பிரதேசத்தில் தான் இருக்கு. மராட்டியத்தில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா புண்ணியத்தில் பாதிப்பு இருக்கு. அதை சரி கட்டுனா தேவலை. ஆம் ஆத்மியால் சில\பல இடங்களில் பாதிப்பு ஏற்படலாம்.



 இத்தேர்தலில் காங்கிரசு செத்த எலி.

சனி, மார்ச் 08, 2014

மலேசிய ஏர்லைன்சு (MH370) சென்ற பாதை

விபத்துக்குள்ளான மலேசிய ஏர்லைன்சுடன் எந்த இடத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தொடர்பு முறிவு ஏற்பட்டது என்பதை காட்டும் படம்.




Image credit : Wall street journal tweeter.

புதன், ஜனவரி 29, 2014

போப் பறக்கவிட்ட அமைதிப்புறா மீது கடும் தாக்குதல்

இப்போது உள்ள போப்பை பிடிக்காதவர்கள் அவரை அவமானப்படுத்த வாட்டிகனில் பள்ளிக்குழந்தைகளுடன் இணைந்து வாட்டிகன் மாடமாளிகையிலிருந்து அவர் பறக்கவிட்ட இரண்டு அமைதிப்புறாக்களை காக்கையை கொண்டும் நீள்மூக்குள்ள பெரிய உருவமுடைய கடல்பகுதிகளில் அதிகம் காணப்படும் பறவையை கொண்டும் எதிரிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இது வாட்டிகனில் பணிபுரியும் சிலரின் உள்வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது அல்லது வாட்டிகனில் இருப்பவர்கள் வெளியாளுக்கு உதவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் வாட்டிகன் ஆளு வேலை உள்ளது என்பது உறுதி.

கடல்பறவை - Seagull

வாட்டிகனில் போப் அவர்கள் பறக்கவிட்ட அமைதிப்புறா.


காக்கையாலும் கடல்பறவையாலும் தாக்கப்படும் அமைதிப்புறா


கடல்பறவையால் தாக்கப்படும் பரிதாப புறா


அமைதிப்புறாவை துரத்தும் காக்கை


காக்கையின் கடும் தாக்குதல்



அமைதிப்புறா மீது கடல்பறவையின் இறுதி தாக்குதல்.


கடல்பறவையால் தாக்கப்பட்ட புறா தப்பி சென்றுவிட்டது. காக்கை தாக்கிய புறாவின் கதி தெரியவில்லை.

மார்ல்பெரோ விளம்பர ஆளு இறந்திட்டாரு.

தம் அடிப்பவர்களின் கவனத்திற்கு:

மார்ல்பெரோ சிகரெட் விளம்பரத்தில் அட்டகாசமா மாடு மேய்க்கறவன் (Cow Boy) தோற்றத்தில் இருப்பாரே அவரு பேரு எரிக் லாசன். அவரு இறந்திட்டாரு. வயசு 73 தான் ஆகுது. எப்படி செத்தாரா? நுரையீரல் தொடர்பான நோயினால் இறந்திட்டாரு. கடைசி காலத்தில் மூச்சு விட முடியாம மூச்சை விட்டுருக்கார்.

தம்மர்களுக்காக அவருடைய படம் மார்ல்பெரோவுடன்.




http://news.yahoo.com/ex-marlboro-man-dies-smoking-related-disease-034350253.html


திங்கள், ஜனவரி 27, 2014

சீனா பிராந்தி இந்தியா விசுகி.

யாரு எதை அதிகமாக குடிக்கிறார்கள் என்ற உன்னதமான செயலை குவார்ட்சு (Quartz)என்ற இதழ் தெரிந்து வெளியிட்டுள்ளது.  யுரோமானிட்டர் ( Euromonitor) அப்படிங்கிற சந்தையை ஆய்வு செய்யும் நிறுவனம் குவாட்டருக்கு உதவியிருக்கு.

 இதுல நாமும் சீனாவும் நேர் எதிர். அவன் பிராந்தி நாம விசுகி. அவனுக்கு ஆதரவு பிலிப்பைன்சு மட்டுமே.



சௌதி அரேபியாவில் அதிகம் விற்பனையாவது விசுகியாம்.
அமெரிக்காகாரன் அதிகம் காலி பண்ணுவது வோட்கா.
தென்அமெரிக்காவில் அதிகம் விற்பனையாவது ரம்.
மெக்சிக்கோகாரனுங்களுக்கு மட்டும் டக்கிலா மீது காதல்.
ஜின்னை (இது பொம்பளை சரக்காமே?) அதிகமா குடிக்கறவன் நெதர்லாந்து ஆளு.

ஆசியாவில் விசுகி தான் டாப்பு. இப்ப புரியுது ஏன் மல்லையா பணம் சம்பாதிரிக்கறான்னு.
பிரேசிலில் வோட்கா போர்ச்சுகலில் விசுகி ஏன் இந்த வேறுபாடு என்று தான் புரியலை.
இங்கிலாந்து காரன் விசுகி நிறைய குடிப்பான்னு பார்த்தா அங்க வோட்கா ராச்சியம் தான்.

விசுகி: 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆசுதிரேலியா, நியுசிலாந்து, எகிப்து, சௌதி அரேபியா, தாய்லாந்து, தென்கொரியா, சப்பான், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, வெனிசுலா, அர்சென்டினா, எசுப்பானியா, போர்ச்சுகல், பெல்ஜியம், டென்மார்க், சுவீடன், கிரேக்கம், பிரான்சு

பிராந்தி
சீனா, பிலிப்பைன்சு

ரம்: 
சிலி, கொலம்பியா, பெரு, இத்தாலி

வோட்கா: 
அமெரிக்கா, கனடா, உருசியா, பிரேசில், இங்கிலாந்து, அயர்லாந்து, நார்வே, செருமனி, போலந்து, உக்ரைன், துருக்கி, பின்லாந்து, செக் குடியரசு, சுவிச்சர்லாந்து, ஆசுதிரியா, சுலோவாக்கியா, அங்கேரி, ருமேனியா, பல்கேரியா, மொராக்கோ

ஜின்:
நெதர்லாந்து

டக்கிலா:
மெக்சிக்கோ

ஆக உலகில் அதிகம் விற்பனையாவது வோட்காவும் விசுகியும்.
http://qzprod.files.wordpress.com/2014/01/liquor-map21.png

வெள்ளி, நவம்பர் 15, 2013

வினா ஆறு வகைப்படும்

வினா வாக்கியங்களை நாம் அறிவோம். வினவுவதற்காக எழுகின்ற வாக்கியங்கள். ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள வினாவின் வழியாகக் கேட்கிறோம். அந்த வினா வாக்கியங்களை ஆறு வகைகளாகப் பகுத்திருக்கிறார்கள்.

பொதுவாக, என்னென்ன நிலைமைகளில் ஒரு வினா எழும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அறியாமல் கேட்பது, அறிந்துகொண்டே கேட்பது, அறிந்திருந்தாலும் அதில் மேலும் உள்ள ஐயத்தைத் தீர்த்துக்கொள்ளக் கேட்பது, கொடுப்பதற்காகக் கேட்பது, கொள்வதற்காகக் கேட்பது, கட்டளையிடுவதற்காகக் கேட்பது என்று அந்த வினா எழும் சூழ்நிலைகளை ஆறாகப் பகுத்திருக்கிறார்கள்.

நானும் நீங்களும் சந்தித்துக்கொள்கிறோம். என்னை உங்களுக்குத் தெரிகிறது. எனக்கு இனிதான் உங்களோடு அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். நான் உங்களை அறியாத நிலையில் அறிந்துகொள்ள வேண்டி வினவுகிறேன்.

‘உங்கள் பெயர் என்ன ?’ - அறியாத நிலையில் நான் எழுப்பும் வினா என்பதால் இது ‘அறியா வினா.’ அடிப்படையான எளிமையான வினாக்கள் எல்லாமே அறியா வினாக்கள்தாம்.

உங்களுக்கு என்னைத் தெரிகிறது என்பதைக் காட்டிக்கொள்ளாமல் நீங்களும் என்னிடம் கேள்வியின் வழியாகவே பேசுகிறீர்கள். ‘என் பெயர் கண்ணன். உங்கள் பெயர் என்ன ?’ - அறிந்திருந்தும் நீங்கள் வினவுகிறீர்கள். அதனால் இது ‘அறிவினா.’ அறிந்திருந்தும் வினவுவது. ஆசிரியர் கேள்வி கேட்பது, ஒருவரைத் தோற்கடிக்கக் கேள்வி எழுப்புவது எல்லாம் இவ்வகை.

நம் அறிமுகத்தை அடுத்து உரையாடல் தொடர்கிறது. நான் எதையோ எழுதுவது உங்களுக்குத் தெரிகிறது. அது கதையா, கவிதையா என்பதைக் குறித்து உங்களுக்குத் தெளிவில்லை. அதில் ஐயமிருக்கிறது. அந்த ஐயத்தை என்னிடமே தீர்த்துக்கொள்ள ஒரு வினாவை எழுப்புகிறீர்கள். ’நீங்கள் கவிதை எழுதுகிறீர்களா ? அல்லது கதைகளை எழுதுகிறீர்களா ?’ - உங்களுக்குத் தெரிந்த ஒரு பொருளில் மேலும் எழுந்த ஐயத்தின் அடிப்படையில் வினா எழுப்பினீர்கள். அதனால் இது ‘ஐய வினா.’ நடத்துநர் நிறுத்தத்தில் பயணிகளை வினவுவது (நால்ரோடு யாராவது எறங்குறீங்களா ?), நிருபர் காவல்துறையை நுணுக்கிக் கேட்பது (குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் ?) எல்லாம் இவ்வகையில் வரும்.

இப்படி நீங்கள் கேட்டுவிட்டதால் என் கவிதைத் தொகுப்பு ஒன்றை உங்கள் கைகளில் திணித்துவிடவேண்டும் என்று விரும்புகிறேன். ‘என் கவிதைத் தொகுப்பு எதையும் படித்திருக்கிறீர்களா ?’ என்று கேட்கிறேன். நீங்கள் ‘இல்லை. உங்களிடம் இருக்கிறதா ?’ என்கிறீர்கள். நீங்களும் என் தொகுப்பை வாங்கிப் படிக்க விரும்பியதால் அவ்வாறு கேட்டீர்கள். ஆகவே, இங்கே நம் கேள்விகள் வெறும் கேள்விகள் அல்ல. நான் கொடுப்பதற்காகக் கேட்டேன். நீங்கள் பெற்றுக்கொள்வதற்காகக் கேட்டீர்கள். நான் கேட்டது ‘கொடைவினா.’ நீங்கள் கேட்டது ‘கொளல்வினா.’

நாம் இருவரும் தேநீர் அருந்தக் கிளம்புகிறோம். நம் மீது ஒருவன் வந்து நிதானமில்லாமல் மோதி விடுகிறான். நீங்கள் சினந்து அந்நபரை ‘இப்படித்தான் நிதானமில்லாமல் வருவீரா ?’ என்று கேட்கிறீர்கள். அவன் நிதானமில்லாமல் வந்தான், மோதினான்... அதை அவன் திருவாயால் தெரிந்துகொள்ளவா கேட்டீர்கள் ? இல்லை. ‘நிதானமாக வா’ என்று கட்டளையிட அவ்வாறு கேட்டீர்கள். அதனால் இது ‘ஏவல் வினா.’

இவ்வாறு வினா வாக்கியங்கள் மொத்தம் ஆறு வகைப்படும் என்று நன்னூல் வகுக்கிறது.

அறி வினா
அறியா வினா
ஐய வினா
கொடை வினா
கொளல் வினா
ஏவல் வினா

இந்த வகைப்படுத்தலின் பின்னணியில் தமிழினத்தின் பண்பாட்டுப் பொதிவுகள் எல்லாமே அடங்கிவிடுகின்றனதானே ?

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

* மூடர்கூடம் திரைப்படத்தில் இந்த விளக்கங்களைப் பிரதிபலிப்பதுபோல் இரண்டு காட்சிகள் உள்ளன. ( குரங்கு குல்லா காட்சியில் ‘இந்த இடத்தில நீங்க ஆமான்னு சொல்லக்கூடாது சென்றாயன். ஏன்னு சொல்லனும்’ )

* ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கும் வினா வகைகள் : (1). குற்றியலுகரம் என்றால் என்ன ? - அறிவினா (2). குறும்பு செய்வாயா ? - ஏவல்வினா (3). ஒழுங்காகப் படித்து நல்ல மதிப்பெண் பெறுவாயா ? - ஐய வினா (4). இங்க இருந்த சாக்பீஸ யாருப்பா எடுத்தது ? - கொடைவினா (5). தமிழ்ப் புத்தகம் யார் கொண்டு வந்தீங்க ? - கொளல்வினா 6). இவங்க எல்லாம் படிச்சு ஆளாகிறபோது இந்த உலகம் என்ன பாடுபடுத்தப் போகுதோ ? - அறியாவினா.


விடைகள் பற்றி நன்கு தமிழறிந்த நண்பர் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் அளித்ததும் இங்க பகிரப்படும்.

விடை எட்டு வகைப்படும் அவை:

(1) சுட்டுவிடை
(2) மறைவிடை
(3) நேர்விடை
(4) ஏவல்விடை
(5) வினாஎதிர்வினாதல் விடை
(6) உற்றது உரைத்தல் விடை
(7) உறுவது கூறல் விடை
(8) இனமொழி விடை

வியாழன், நவம்பர் 14, 2013

வலி மிகுதல் 12 – இன்னும் சில நிலைமைகள்

1. ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலிமிகும். ஓரெழுத்துச் சொற்களால் ஆகியவையே ஓரெழுத்தில் அமைந்த ஒருமொழி. பூப்பறித்தான். டீக்கடை. தீத்தெறித்தது. ஓரெழுத்து ஒருமொழியில் வலி மிகாத நிலைமைகளும் இருக்கின்றன. நீ செல். போ பணிந்து.

2. வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகவேண்டும் என்பது அடிப்படை. அதன்படி கொக்குப் பறந்தது, சிட்டுப் பாடியது என்றே எழுத வேண்டும். செய்யுளில் இவ்வாறு எழுதுகின்ற வழக்கம் இருக்கிறது. ஆனால் உரையில் இவ்வழக்கு கைவிடப்பட்டுவிட்டது. தமிழறிஞர்களின் வாதப் பிரதிவாதங்கள் இரண்டையும் சரியென்றே ஏற்கின்றன.

3. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகாது. ஆனால் சிற்சில இடங்களில் அதுவும் ‘கள்’ விகுதியிலும் கூட வலி மிகுத்து எழுதுவது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்துக்கள், பந்துக்கள், கந்துக்கடன். கந்துக்காரன்.

4. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பதால் மருந்து விற்கும் கடையை ‘மருந்து கடை’ என்று எழுதவேண்டும். இதற்கு ‘மருந்தைக் கடைந்து தா’ -இரண்டாம் வேற்றுமைத் தொகையில் - என்பதுபோன்ற ஒரு பொருளும் வருகிறது. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாக ‘மருந்தை விற்கும் கடை’ என்ற பொருளில் மருந்துக் கடை என்றே எழுதுகிறோம்.

5. ஊர்காவலர், மெய்க்காவலர் என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையாக வலிமிகாமல் எழுதப்படவேண்டும். ஆனால், ஊர்க்காவலர், மெய்க்காப்பாளர் என்றே எழுதப்படுகிறது.

6. ஒன்று, ஒரு, இரண்டு, இரு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, அறு, ஏழு, எழு – ஆகிய எண்சொற்களை அடுத்து வலி மிகாது. அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய சொற்களுக்குப் பின் கட்டாயம் வலி மிக வேண்டும்.

7. படி’ என்ற சொல் தான் சேர்ந்தாலும் தன்னை அடுத்து வல்லினம் வந்தாலும் வலி மிகாது. அதன்படி இதன்படி, சொன்னபடி, செய்தபடி. ஆனால் அப்படி, இப்படி, எப்படி – ஆகிய சொற்களை அடுத்து வலி மிக வேண்டும்.

8. அத்தனை, இத்தனை, எத்தனைக்கு வலி மிகாது. அத்துணை, இத்துணை, எத்துணைக்கு வலி மிகும்.

9. கீழ் என்பதை அடுத்து வலிமிகுவதும் மிகாததும் ஏற்கப்படுகிறது. கீழ்க்கணக்கு, கீழ்த்திசை, கீழ்தளம்.

10. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே- என்பதற்கொப்ப மரபையும் தொல் பெருமைகளையும் போற்றிக்காப்பதையும் தகுதியான புதுமைகளை ஏற்று நடப்பதையும் இருகண்களாகக் கருதி இந்தத் தொடரை இனிதே நிறைவு செய்கிறேன். ஆர்வத்துடன் பின்தொடர்ந்த அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

செவ்வாய், நவம்பர் 12, 2013

வலிமிகுதல் 11 - கள் விகுதிக்கு வலி மிகுமா ?


கள் - மது என்ற பொருளில் வந்தால் தனிச்சொல். பன்மைச் சொற்களில் கள் என்று இடம்பெறும் ஈற்று விகுதிக்குப் பன்மை விகுதி என்று பெயர். வெறும் விகுதியாய் வருவதால் அது தனிச்சொல் இல்லை.

சொல் வகைமையில் கள் விகுதியை இடைச்சொல்லில் சேர்ப்பார்கள். இடைச்சொல்லுக்கு வலி மிகாது. கிறு, கின்று, ஆநின்று - ஆகியவை கூட இடைச்சொல்தான்.

வாழ்த்துக்கிறோம் என்று வலி மிகை செய்து எழுதுவதில்லை. வாழ்த்துகிறோம் என்றே எழுதுகிறோம். அதுபோலவே வாழ்த்துகள் என்றே எழுத வேண்டும். வாழ்த்துக்கள் என்பது பெரும் பிழை.

வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் என்பதால்தான் வாழ்த்துக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள், பாட்டுக்கள் என்று எழுதுவதாகச் சொல்வார்கள். பரிமேலழகரே ‘எழுத்துக்கள்’ என்று எழுதியிருப்பதாக ஆதாரமும் உண்டு.

வன்தொடர்க் குற்றியலுகர வலிமிகும் விதி தன்னை அடுத்து மற்றொரு தனிச்சொல் வந்தால்தான் பொருந்துமே அன்றி கள் என்னும் இடைச்சொல்லான பன்மை விகுதிக்குப் பொருந்தாது.

கள் விகுதி வலிமிகுந்தும் மிகாமலும் குழப்பமான புழக்கத்தில் இருக்கிறது. அந்தப் பழக்கத்தால்தான் வாழ்த்துக்கள் என்கிறோம்.

1. தனி நெடிலை அடுத்தோ (ஓரெழுத்து ஒருமொழி) நெடிலில் முடியும் சொற்களை அடுத்தோ கள் விகுதிக்கு வலி மிகும்.

ஆக்கள், ஈக்கள், பாக்கள், தேனீக்கள், வெண்பாக்கள்.

ஆனால், ஐகாரத்திலும் ஔகாரத்திலும் வலி மிகாது. கைகள், பைகள், பண்டிகைகள்.

ஔகாரத்தில் ஏதும் சொற்கள் உள்ளதாகத் தெரியவில்லை.

2. உ’கரத்தில் முடியும் இரண்டு குறில் எழுத்துகள் (குறிலிணை) உள்ள சொற்களை அடுத்து கள் விகுதி வந்தால் வலிமிகும். தெருக்கள், அணுக்கள், வடுக்கள், பருக்கள்.

உ’கரத்தில் முடியும் இரண்டுக்கும் மேற்பட்ட குறில்கள் என்றாலோ அல்லது நெடிலை அடுத்த உகரக் குறில் என்றாலோ வலி மிகாது. அழகுகள், விழுதுகள், ஆடுகள், வீடுகள்.

ள்’ என்று முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் புணர்த்தவும் கூடாது. ஏனென்றால் புணர்ச்சி விதி ஏற்க இது தனிச்சொல் இல்லை. நாள்கள், பொருள்கள், வாள்கள், தோள்கள் என்றுதான் எழுதவேண்டும். நாட்கள், பொருட்கள் என்று எழுதக் கூடாது.

கள் விகுதி சார்ந்த ஐயங்களில் முழுமையாகத் தெளிவு பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.


****
புத்தகம்கள்-புத்தகங்கள்
பாடம்கள்-பாடங்கள்
இவ்வாறான சில வார்த்தைகளை பாடத்திலும் முக்கியமான சில பத்திரிகைகளிலும் படித்ததால் வந்த குழப்பம் ஐயா.
(பத்திரிக்கை -பத்திரிகை...??)

****
அதனால்தான்   ள்  என்று முடியும் பெயர்ச்சொற்கள் என்றேன். இதிலும் விதிவிலக்காக புள், முள் போன்றவை புட்கள், முட்கள் என்றாகும்  அது வேறு பாடம்.

*****
கள் மயக்கமே!வலியிட்டும் இடாமலும் எழுதுவதில் தப்பில்லை என்றார் என் ஆசிரியர்.ஒருவேளை அவர் தப்பிப்பதற்காக இருக்கலாம்.அதிகமானோர்மவவன்றொடர் குற்றியலுகரத்தின் பின் வலி மிகும் என்றே கொண்டெழுதுகின்றனர்.(முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்.......).

****
இசையின்பம் கருதிச் செய்தால் ஏற்பது இயல்பு.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

வலிமிகுதல் 10
வலிமிகுதல் 9
வலிமிகுதல் 8
வலிமிகுதல் 7
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1

ஞாயிறு, நவம்பர் 10, 2013

வலிமிகுதல் 10


வலிமிகுதல் தொடரின் கிளைமாக்ஸ்-ஐப் படிக்கவுள்ளீர்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் புரியாமை என்னும் வில்லன் வென்றுவிடுவான் என்பதால் ஊன்றிப் படியுங்கள்.

ஒரு சொற்றொடரின் பொருள் வெவ்வேறு விதமாகவும் வேற்றுமைப்படலாம். அந்த வேற்றுமையை உணர்த்த வேற்றுமை உருபுகள் எனச் சில இருக்கின்றன. மரவேலி என்பதை எத்தனை விதமாய் விரிக்கலாம் பாருங்கள். மரத்தில் செய்த வேலி, மரத்திற்கு வேலி, மரத்தினது வேலி, மரத்தால் ஆகிய வேலி என்று புலமைக்கு எட்டிய வகையில் பொருள் கொள்ளலாம்.

இவ்வாறு சொற்றொடர் இடையே துல்லியமாய்ப் பொருள் வேற்றுமை தோன்றப் புரிந்துகொள்ளத் தோன்றியதே வேற்றுமை. சொற்றொடரின் பொருள் நுணுக்கங்களில் வேற்றுமை கற்பிக்கிறது.

இந்த வேற்றுமைக்கு உருபுகள் உள்ளன. அவற்றை எண்வாரியாகப் பெயரிட்டு இனங்காட்டுகிறார்கள். ஒன்று முதல் எட்டு வரையிலான வேற்றுமைத் தொடர்கள் மற்றும் தொகைகள். தொடர் என்றால் இயல்பாய் வருவது, தொகை என்றால் தொகுத்துப் பொருள் பெறுவது என்று நமக்குத் தெரியும்.

முன்னதாக வேற்றுமை உருபுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல், ஆன், ஒடு, ஓடு.
நான்காம் வேற்றுமை உருபு – கு
ஐந்தாம் வேற்றுமை உருபு – இன், இல்
ஆறாம் வேற்றுமை உருபு – அது, ஆது
ஏழாம் வேற்றுமை உருபு – கண்
எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

இப்போது விளக்கத்திற்கு வருகிறேன். இந்த வேற்றுமை
உருபுகள் ஒரு சொற்றொடரில் மறைந்திருக்க நாம் அவற்றை விரித்துத் தொகுத்துப் பொருள் காண்கிறோம். அதுவே வேற்றுமைத் தொகை. விரிவு செய்து பொருள் காண்பதற்காக சம்பந்தப்பட்ட சொற்றொடரோடு உரிய வேற்றுமை உருபை இணைத்து இயல்பான ஒரு சொற்றொடரை விளைச்சலாய்ப் பெறுவோம் அல்லவா, அந்த இயல்பான சொற்றொடர் வேற்றுமைத் தொடர்.

மற்றொரு நிலைமையும் இங்கே உண்டு. ஒரு சொற்றொடரில் வேற்றுமை உருபை மட்டும் சேர்த்து விரித்துப் பொருள்கொண்டாலும் போதாத நிலை ஏற்படும். வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு ‘வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை’ என்று பெயர். புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கிறதல்லவா ? உதாரணத்திற்கே போவோம், வாருங்கள்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பதால் இரண்டாம் வேற்றுமையிலிருந்து தொடங்குகிறேன்.

தண்ணீர் குடித்தான் – இது இரண்டாம் வேற்றுமைத் தொகை – எப்படி ? – தண்ணீரைக் குடித்தான்’ என்றே ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபை முதற்சொல்லோடு இணைத்துப் பொருள் கொள்கிறோம். தண்ணீர் குடித்தான்’ என்பது வேற்றுமை உருபு உள்மறைந்து தொகுத்துப் பொருள்காணும்படி இருக்கிறது. அந்த வேற்றுமை உருபு இரண்டாம் வேற்றுமை உருபு. ஆக,

தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை (தொகுக்கச் சொல்கிறது)

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொடர் (தொகுத்தபின் இயல்பாகிவிட்டது).

தண்ணீர்க்குடம் – இதை எப்படிப் பொருள் விரிப்பீர்கள் ? ‘தண்ணீரை உடைய குடம், தண்ணீரைப் பிடிக்கும் குடம்’ இப்படி இரண்டாம் வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்து (அந்த வினைச்சொல் இரண்டாம் சொல்லின் – குடம் - பயனை விளக்குவதாக இருக்கும்) அர்த்தம் கண்டோம். இதுவே இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

இப்போது நாம் வழக்குக்குள் நுழைகிறோம்.

இரண்டாம் வேற்றுமை (ஐ)
--------------------------------------
தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்.

தண்ணீர்க் குடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

இப்படி எட்டு வேற்றுமைகளுக்கும் பார்க்கப் போகிறோம்.

மூன்றாம் வேற்றுமை (ஆல்)
---------------------------------------
கை காட்டினான் – மூன்றாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

கையால் காட்டினான் – மூன்றாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகாது

தங்கக் கிண்ணம் - தங்கத்தால் செய்த கிண்ணம் – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

நான்காம் வேற்றுமை (கு)
------------------------------------
வள்ளித் திருமணம் – நான்காம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

வள்ளிக்குத் திருமணம் – நான்காம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்

கூலிப்படை – கூலிக்குக் கூடிய படை – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலிமிகும்.

ஐந்தாம் வேற்றுமை (இன், இல்)
--------------------------------------------
தாய்மொழி கூறு – ஐந்தாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தாய்மொழியில் கூறு – ஐந்தாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

பழச்சாறு – பழத்தில் பிழிந்த சாறு – ஐந்தாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

ஆறாம் வேற்றுமை (அது)
------------------------------------
கிளிப்பேச்சு – ஆறாம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

கிளியினது பேச்சு – ஆறாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

ஆறாம் வேற்றுமைக்கு உடன் தொக்க தொகை அபூர்வம்.

ஏழாம் வேற்றுமை (கண்)
-----------------------------------
மலை திரிவோர் – ஏழாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

மலையின்கண் திரிவோர் – ஏழாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

மலைக்கோவில் – மலையின்கண் எழுந்த கோவில் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

முதலாம் வேற்றுமையை இன்னும் பார்க்கவில்லை. முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது. அது வேறொன்றுமில்லை. எழுவாய்த் தொடர் என்று பார்த்தோமில்லையா ? அதையே தொகையில் முதலாம் வேற்றுமைத் தொகை (எழுவாய் வேற்றுமை) என்பார்கள். எளிமையாய் இருக்கும். காற்று குளிர்ந்தது. கை சுருங்கியது. – வலி மிகாது.

இன்னொன்று - எட்டாம் வேற்றுமை, இதை விளி வேற்றுமை என்பார்கள். தொடரில் பார்த்த விளித்தொடர் போன்றதுதான் இதுவும். அண்ணா தோற்காதே – அண்ணா யாரிடம் தோற்காதே – என்பதுபோல் தொகுத்துக்கொள்ள இடமிருப்பதால். இங்கும் வலிமிகாது.

வலிமிகுதல் குறித்த பாடங்கள் ஏறத்தாழ நிறைவை எய்துகின்றன. இன்னும் எளிய விதிகள் சில இருக்கின்றன. அவற்றை அடுத்த பகுதியில் எழுதுவேன்.

பிறகு இவற்றில் உள்ள ஓரிரு முரண்கள், அவற்றைக் களையும் விதங்கள் பற்றிய தெளிவையும் எழுதவுள்ளேன். அத்துடன் இப்பகுதி நிறைவடையும்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

*****
வள்ளி திருமணம் நான்காம் வேற்றுமை உருபன்று. வள்ளியின் திருமணமென்றே உருபேறி வரும். எனவே வலிமிகுதல் இன்றி வள்ளி திருமணம் என்றே வருமென்றே எண்ணுகிறேன். நடைமுறைத் தமிழில் வள்ளி திருமணம் சீதா சீத்தா திருமணமென்றே வலி மிகுபடாமல் வரும் எனது ஊரான  திருகோணமலையை சிலர் வலிமிகு வடிவில் திருக்கோணமலை என்றும் சொல்வார்கள். கவிநயத்துக்கு அமைவாக திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் திருகோணமாமலை அமர்ந்தாரே என்பதற்குப் பதிலாக திருக்கோணமாமலை அமர்ந்தாரே என்றுதான் வருகிறது.

எனக்கு தூய இலக்கண அறிவு இல்லை.
ஆனால் அனுபவ அறிவும் நாட்டார் நடைமுறை அறிவும்
தமிழ்வழக்கு என்பார்களே அதுவும் கொஞ்சம் உண்டு.
இதுபற்றி தங்கள் புலமைக் கருத்தை அறியும் ஆவலில் உள்ளேன்.

*****
அதனால்தான் முதலிலேயே (இரண்டாம் பத்தியில்) சொல்லியிருக்கிறேன். ஒரு சொற்றொடரைப் பலவகைப்பட்ட தொகையாகவும் இனங்காண முடியும். உதாரணத்திற்கு : பொன்மணி -
1) பொன்னலாகிய மணி - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (கருவிப் பொருள்)
2) பொன்னாகிய மணி - பண்புத் தொகை
3) பொன்னின்கண் மணி - ஏழாம் வேற்றுமைத் தொகை
4) பொன்னோடு சேர்ந்த மணி - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (உடனிகழ்ச்சிப் பொருள்)
5) பொன்னும் மணியும் - உம்மைத் தொகை (நன்றி: முனைவர் இராச. திருமாவளவன்). ஊர்ப்பெயரோடு ‘திரு’ வந்தால் வலிமிக வேண்டும்.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

வலிமிகுதல் 9
வலிமிகுதல் 8
வலிமிகுதல் 7
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1

வெள்ளி, நவம்பர் 08, 2013

வலிமிகுதல் 9

வினையொன்றே உயிராகப்
பண்பு காத்திருந்தேன்.

என்மொழிக்குள் உன்மொழி
அன்றிலின் அன்மொழியானது.

வேற்றுமை தீர்ந்து
உவமையாய் முன் நின்றாய்.

‘உம்மைப் பிடிக்கும்’
என்றாய்.

‘உம்மைத் தொகை பிடிக்குமா ?’
என்றேன்.

‘உம்’ என்றாள்.
‘ஏன் ?’ என்றேன்.

‘உன்னையும் என்னையும்
அதுவே சேர்க்கிறது.
நீயும் நானும்
அதனால் இணைகிறோம்’ என்றாள்.

‘உம்’ என்னும்
உன் சம்மதச் சொல் கொண்டிருப்பதால்
எனக்கும் அதுவே பிடிக்கும்’ என்றேன்.

‘எனக்குப் பிடித்ததற்கு
இன்னொரு காரணமும் உண்டு’ என்றாள்.

‘என்ன ?’ என்றேன்.

‘இணைப்பில் வலி தோன்றாது.
உணர்த்த விரும்பும் பொருள் மட்டுமே
தோன்றும் ’ என்று கண் தாழ்ந்தாள்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

புதன், நவம்பர் 06, 2013

வலிமிகுதல் 8


முந்திய பகுதியில் ‘தொடர்’களின் வகைகளையும் அவற்றில் வலி மிகும் மிகா இடங்களையும் பார்த்தோம். இனி ‘தொகை’களின் வகைகளையும் அவற்றில் வலிமிகும் மிகா இடங்களையும் பார்ப்போம்.

தொகை என்பது இரண்டு சொற்களுக்கு இடையே தொகையுருபு மறைந்திருப்பதால் நாம் விரித்துப் பொருள் கொள்வதற்கு இடம் தருவது. அது ஆறு வகைப்படும்.

1. வேற்றுமைத் தொகை
2. வினைத் தொகை
3. உவமைத் தொகை
4. பண்புத் தொகை
5. உம்மைத் தொகை
6. அன்மொழித் தொகை

சென்ற பதிவில் ‘தொடர்’ வகைகளில் வேற்றுமைத் தொடரை விளக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். அத்துடன் இந்தப் பதிவிலும் முதல் வகையான வேற்றுமைத் தொகையையும் நிறுத்தி வைக்கிறேன். வேற்றுமைத் தொடரையும் வேற்றுமைத் தொகையையும் சேர்த்துத் தனியாகக் கற்க உள்ளோம். மீதமுள்ளவற்றைப் பார்ப்போம்.

வினைத்தொகை -
ஊறுகாய், சுடுசோறு, ஆடுகளம் - இரண்டு சொல்லில் முதற்சொல் ஏவல் பொருள் தந்து முக்காலத்திற்கும் விரித்துப் பொருள் காணும்படி அமைவது. வலி மிகாது என்பதைத் தெளிவாக அறிவீர்கள்.

உவமைத் தொகை -
தாமரைக்கண், மலைத்தோள், பனிப்பார்வை - முதற்சொல் இரண்டாம் சொல்லுக்கு உவமையாக வந்து இடையில் போன்ற என்ற உவம உருபை இட்டுத் தொகுத்துப் பொருள் காண்பது. வலி மிகும்.

பண்புத் தொகை -
பொய்ப்பேச்சு, மெய்க்கருத்து, கறுப்புக்குதிரை - முதற்சொல் இரண்டாம் சொல்லின் பண்பை விளக்குவதாய் அமைந்து ‘ஆன, ஆகிய’ போன்ற பண்புருவுகளை இட்டுத் தொகுத்துப் பொருள் காணும்படி இருப்பது. வலி மிகும்.

உம்மைத் தொகை -
காடுகரை, குழந்தைகுட்டி, தாய்தந்தை - இரண்டு பெயர்ச்சொற்களோடும் உம் விகுதியைச் சேர்த்துத் தொகுத்துப் பொருள் கொள்வது. வலி மிகாது.

அன்மொழித் தொகை -
துடியிடை தோன்றினாள், எழுகதிர் கிளம்பிற்று - மேற்காணும் எவ்வகைக்குள்ளும் அடங்காமல் தொகுத்துப் பொருள் காண வேண்டியிருப்பது. துடிபோன்ற இடையை உடைய பெண் தோன்றினாள். எழுந்த கதிர் கிழக்கிலிருந்து கிளம்புகிறது. இதில் வலி மிகுவதற்கும் மிகாமைக்கும் இதுவரை கற்ற விதிகளின்படி உரிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளும்படி இருக்கும்.

தொகைகளின் தனித்த குணம் - இரண்டும் வினைச்சொற்கள் என்றால் அவற்றுக்கு இடையே தொகை தோன்றாது.

அடுத்த பகுதியில் இந்தத் தொடரின் க்ளைமாக்ஸ் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வலிமிகுதல் 7

வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1

திங்கள், நவம்பர் 04, 2013

வலிமிகுதல் 7


இரண்டு சொற்கள் சேர்ந்தால் அது சொற்றொடராகிறது. அது எளிமையாய் வெளிப்படையாய் இருந்தால் தொகாநிலைத்தொடர் (தொடர்) என்றும், விரித்துப் பொருள் காண இடமிருக்குமானால் அது தொகைநிலைத்தொடர் (தொகை) என்றும் சென்ற பதிவில் புரிந்துகொண்டோம்.

முதலில் தொடரின் வகைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

எழுவாய்த் தொடர்
விளித் தொடர்
வினைமுற்றுத் தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
வேற்றுமைத் தொடர்
இடைச்சொற்றொடர்
உரிச்சொற்றொடர்
அடுக்குத் தொடர்

எழுவாய்த் தொடர் -
கிளி பேசியது, புலி பாய்ந்தது - கிளி, புலி என எழுவாய் தொடங்கி நகரும் எளிமையான சொற்றொடர்கள். வலி மிகாது.

விளித் தொடர் -
தம்பி பார் - முதற்சொல் அழைக்கிறது அதாவது விளிக்கிறது. வலி மிகாது.

வினைமுற்றுத் தொடர் -
பாடியது பறவை - முதல் சொல் வினைமுற்றாக இருந்தும் மேலும் தொடர்வது. வலி மிகாது. (கண்டேன் சீதையை - புகழ்பெற்ற உதாரணம். வலிமிகும் தேவை இதற்கு இல்லை என்பதால் நமக்கு உதவவில்லை).

பெயரெச்சத் தொடர் -
வாடிய பயிர் - முதற்சொல்லாய் அமைந்த வினை, தன்னை அடுத்து பெயர் வந்து பூர்த்தியடையும்படி எச்சமாக இருப்பது. வலி மிகாது.

வினையெச்சத் தொடர் -
வரச் சொன்னான், பாடித் திரிந்தான் - முதற்சொல் வினையின் எச்சமாக நின்று அடுத்து ஒரு வினைச்சொல் வந்து பூர்த்தியடையும்படி இருப்பது. வலி மிகும்.

வேற்றுமைத் தொடர் -
இதைத் தனிப்பதிவில் விளக்குகிறேன்.

இடைச்சொற்றொடர் -
மற்றொன்று - மன், மற்று, கொல், போன்ற சொற்கள் பெயர் அல்லது வினைச்சொல்லுக்கு முன் வரும். மற்று+ஒன்று = மற்றொன்று. இதில் மற்று இடைச்சொல். ஒன்று என்னும் பெயருக்கு முன் வந்தது. செய்யுள்களில் அதிகம் பயன்பட்டது. வலி மிகாது. இப்போது தற்கால எழுத்து வழக்கில் இல்லை.

உரிச்சொற்றொடர் -
நனி பேதை, கடிகமழ் மலர், உறுபுகழ் - பெயருக்கோ வினைக்கோ உரியதாய் வரும் சொற்கள். வலிமிகாது. இதுவும் தற்கால வழக்கில் இல்லை.

அடுக்குத் தொடர் -
பாடு பாடு, போ போ, சிறு சிறு, சின்ன சின்ன - பொருள்தருகின்ற சொற்கள் அடுக்கி வருவது - வலி மிகாது.

சுருக்கம் : வினையெச்சத் தொடர் தவிர்த்த வேறெந்தத் தொடர்களுக்கும் வலிமிகாது. (வேற்றுமைத் தொடரை நாம் கடைசியில் பார்க்கவிருக்கிறோம்).

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

  • உரிச்சொற்றொடர்: சால, உறு , தவ, கழி , நனி,கூர், ஆகிய சொற்கள் மிகுதி எனும் பொருளை உணர்த்தும் சொற்கள் உரிச்சொற்தொடர் ஆகும். அடுக்குத் தொடர் - முன் வரும் சொல்லெ பின்னும் வரும். சொற்களைப் பிரித்தாலும் பொருளில் மாற்றமிருக்காது.

  • இலக்கணப்படி உரிச்சொற்றொடருக்கு வலி மிகாது. வலி மிகுந்தது என்றால் இசையின்பம் கருதிச் செய்யப்பட்டது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வரிசையில் திரு’ என்பதையும் உரிச்சொல்லாகக் கருதலாமா ? பொதுவாக இத்தொடரின் பயன்பாடு அபூர்வமானது என்பதால் விவாதம் எதுவும் எழுந்ததாகத் தெரியவில்லை. சின்ன சின்ன - என்பதுதான் சரி. அடுக்குத் தொடர் என்றாலும் வலிமிகாது. குறிப்புப் பெயரெச்சம் என்றாலும் வலிமிகாது. (வலிமிகுதல் 4 - பகுதியில் இதை விரிவாக எழுதிவிட்டேன்).



வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1

சனி, நவம்பர் 02, 2013

வலிமிகுதல் 6

வலிமிகுதல் பற்றிய இலக்கண அறிவைப் பெறுவதில் மிகவும் கடினமானது என்று கருதப்படக்கூடிய பகுதிக்குள் இப்போது நுழைகிறோம். அவ்வாறு கருதிக்கொண்டிருந்தது எத்தனை பெரிய மடத்தனம் என்று நீங்களே புரிந்துணரத் தக்க இடத்திற்குச் செல்லவிருக்கிறீர்கள். இலக்கணக் கதவுகள் உங்கள் கண்முன்னே பூவிதழ்களைப்போல் திறக்கக் காண்பீர்கள்.

மொழியில் சொல் என்பது அடிப்படையான ஓர் அலகு. தனித்துவமான துண்டு. ஒன்றுக்கு மேற்பட்டு, குறைந்தது இரண்டு சொற்களால் ஆவது சொல் தொடர் - சொற்றொடர். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்றொடர்களால் ஆவதுதான் வாக்கியம். வாக்கியத்தின் வழியாக மொழி உச்சத்தை அடைந்து உலகை ஆள்கிறது.

வலிமிகுதல் என்பது இரண்டு சொற்களுக்கு இடையே நடைபெறும் செயல். சொற்றொடர் ஒன்றின் உள்ளுக்குள்ளே நடக்கும் மொழிவினைதான் வலிமிகுதல். வலிமிகுதலைப் பற்றிய பறவைப் பார்வையைப் பெற வேண்டுமானால் சொற்றொடர் குறித்த அறிதலையும் அதன் வகைகளையும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகைமைகளில் எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதை அறிந்தவுடன் இந்தப் பாடம் ஏறத்தாழ நிறைவு பெறவுள்ளது.

மாடு மேய்கிறது. மாடு ஒரு சொல். மேய்கிறது ஒரு சொல். மாடு மேய்கிறது என்பது சொற்களின் தொடர் வரிசை - சொற்றொடர். இந்தச் சொற்றொடர் மிக இயல்பாக எளிமையாக இருக்கிறது. ஆனால் மொழி என்பது இப்படி வெள்ளந்தியான எளிமையோடும் சாதாரண அம்சங்களோடும் இருப்பது மட்டுமில்லையே. அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நுண்மைகளையும் செறிவுகளையும் அறிவுப்புலத்தையும் தனக்குள் ஏற்றுச் செரித்து வன்மையடந்த ஒன்றல்லவா ?

முழுமையாகப் பொருள் காட்டும் எளிமையான சொற்றொடர்களால் ஆகியிருக்கும் தமிழ் மொழி, இன்னொரு புறத்தில், உள்மறைந்து தொக்கி நிற்கும் தன்மைகள் உள்ள சொற்றொடர்களாலும் உருவாகியிருக்கிறது. அத்தகைய சொற்றொடர்களை நாம் நம் அறிவைப் பயன்படுத்திச் சற்றே விரித்துப் பொருள் காண்கிறோம்.

மாடு புல் மேய்கிறது. இப்பொழுது ‘புல் மேய்கிறது’ என்கிற சொற்றொடரை மட்டும் கவனியுங்கள். புல் மேய்கிறது - முன் சொன்னதுபோல எளிமையாக அர்த்தப்படுத்தக் கூடாதல்லவா ? புல்லை மேய்கிறது’ என்று ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபை உடன் சேர்த்து விரித்துப் பொருள் கொள்கிறோம். மாடு புல்லை மேய்கிறது.

உள்ளுக்குள் ஒன்றும் தொக்கியிருக்காமல் வெகு இயல்பாய் எளிமையாய் அமைந்த சொற்றொடர்களைத் தொகாநிலைத் தொடர்கள் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொடர்’ என்பதும் உண்டு. மாடு மேய்கிறது மாதிரி.

உள்ளுக்குள் ஒன்று தொக்கி நிற்க (உருபு) அதைக்கொண்டு ஒரு சொற்றொடரை விரித்துப் பொருள்கொள்ள வேண்டிய, தொகுத்துப் பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர்களைத் தொகைநிலைத் தொடர் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொகை’ என்பார்கள். புல் மேய்கிறது மாதிரி.

தொடர்’ என்று சொல்லப்பட்ட எளிமையான சொற்றொடர் வடிவங்களிலும், தொகை’ என்று சொல்லப்பட்ட தொகுத்துப் பொருள்கொள்ளக்கூடிய சொற்றொடர் வடிவங்களிலும் - வலிமிகுமா மிகாதா என்பதைத்தான் நாம் இனி பார்க்கப் போகிறோம்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வியாழன், அக்டோபர் 31, 2013

வலிமிகுதல் 5

இத்தொடரின் முதல் பகுதியில் உம்மைத் தொகையில் வலிமிகாது என்று பார்த்தோம், நினைவிருக்கிறதா ?

பொதுவாக இரண்டு பெயர்ச் சொற்களுக்கு இடையே வலிமிகும் வாய்ப்பிருந்தால் மிகுவித்து விடுங்கள் (அது எப்படியும் சரியாகவே இருக்கும்) என்று ஆரம்பித்த நான் ஒரே ஒரு விதிவிலக்காக உம்மைத் தொகையைக் கூறினேன்.

காடுகரை என்பது உம்மைத் தொகை. காடும் கரையும் என்று இருபெயர்களுடன் ‘உம்’ சேர்த்து விரித்துப் பொருள் கொள்வதால் அது உம்மைத் தொகை என்றும் தெரிந்துகொண்டோம்.

மேலும் உதாரணங்கள் : பட்டிதொட்டி, செடிகொடி, இட்லி தோசை, இன்பதுன்பம், வள்ளி தெய்வானை, சேர சோழ பாண்டியர். இன்னும் சிலவற்றை நீங்களும் கற்பனை செய்து கண்டுபிடிக்கலாம். (அபூர்வமாக, ‘ஏற்றத்தாழ்வு’ போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்கிறார் அ.கி.ப.)

உம்மைத் தொகையைப் போலவே மேலும் இரண்டு தொகைகளைப் பார்க்கப் போகிறோம். உவமைத் தொகை மற்றும் பண்புத் தொகை.

தாமரைக்கண், மலைத்தோள் - இவற்றைத் தாமரை போன்ற கண், மலை போன்ற தோள் என விரித்துப் பொருள் காண்போம். முதலில் வருகின்ற சொல் அடுத்து வருகின்ற சொல்லுக்கு உவமையாய் இருப்பது. அச்சொற்கள் இரண்டுக்குமிடையில் போல, போன்ற என்று உவம உருபைத் தருவித்துப் பொருள் காண்பது வழக்கம். உவமைத்தொகை என்பது இதுதான். உவமைத் தொகைக்கு வலிமிகும்.

(உவமைத்தொகையைக் கண்ணாடி முன் நிறுத்தி இடவலம் மாற்றிப் போட்டால் அதுவே உருவகம் எனப்படும். மலைத்தோள் உவமைத்தொகை என்றால் தோள்மலை உருவகம்).

அடுத்து பண்புத் தொகை. உவமைத்தொகையில் முதற்சொல் உவமையாய் அமைந்ததைப் போல பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் அடுத்துள்ள சொல்லின் பண்பைக் குறிக்கும். அது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு (இன்னும் பல) என எவ்வொரு பண்பையும் குறிக்கக் கூடியது.

உவமைத்தொகைக்குப் ‘போன்ற’ என்ற உவம உருபை இடையிட்டுப் பொருள் விரித்ததுபோல பண்புத்தொகைக்கு ‘ஆகிய’ என்ற பண்புருபை இடையிட்டுப் பொருள் காண்பர்.
பண்புத்தொகையில் வலிமிகும்.

வெள்ளைத்தாள்
பொய்ப்பேச்சு
மெய்த்தன்மை

பண்புத்தொகையில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்ற வகையும் உண்டு. அதற்கும் வலிமிகும். நாம் அந்தப் பகுதிக்கே போக வேண்டியதில்லை. ஏனென்றால், முதலில் சொன்னதுபோல, இரண்டு பெயர்கள் காணப்பட்டாலே தயங்காமல் வலிமிகுவித்து விடுவோம்.

சுருக்கம் : உவமைத் தொகையிலும் பண்புத் தொகையிலும் வலிமிகும்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வலிமிகுதல் 6

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1


செவ்வாய், அக்டோபர் 29, 2013

வலிமிகுதல் 4


பெயரெச்சம் என்றால் என்னவென்று அறிவீர்களா ? முற்றுப்பெறாமல் முடிவுறாமல் எச்சமாகித் தொக்கி நிற்கும் ஒரு சொல் தன்னை அடுத்து ஒரு பெயரை வரவழைக்கும். அப்படி ஒரு பெயர்ச்சொல் வருவதால் மட்டுமே அது முற்றுப் பெறும். அத்தகைய சொற்கள் பெயரெச்சங்கள் எனப்படும்.

அடித்த கைகள், வெடித்த துப்பாக்கி, பணிந்த காவலன்.

மேலுள்ள இரண்டு சொற்களில் முதலில் உள்ள செயலைச் சொல்லும் சொல் தன்னை அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்தால் மட்டுமே நிறைவுறுவதைக் காண்கிறீர்கள் (அடித்த, வெடித்த, பணிந்த). இல்லையேல் பூர்த்தியடையாமல் எச்சமாகி அத்துவானத்தில் நிற்கும். அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்து முழுமையடைவது பெயரெச்சம்.

வினைச்சொல்லாக இருக்கையில் காலங்காட்டும்.

கடித்த பழம் - இறந்தகாலப் பெயரெச்சம்
கடிக்கின்ற பழம் - நிகழ்காலப் பெயரெச்சம்
கடிக்கும் பழம் - எதிர்காலப் பெயரெச்சம்

மேலுள்ள மூன்றும் வினையையும் காலத்தையும் காட்டுவதால் இவை தெரிநிலைப் பெயரெச்சங்கள் என்றும் வகைப்படும். இதில் கடித்த பழம் உடன்பாட்டுப் பெயரெச்சம். கடிக்காத பழம் என்று வந்தால் எதிர்மறைப் பெயரெச்சம்.

வினையையும் காலத்தையும் காட்டாமல் வெறுமனே பண்பை மட்டும் காட்டுகின்ற எச்சச்சொற்கள் உள்ளன. அவையும் தம்மை அடுத்துப் பெயர்ச்சொற்கள் வந்தால் மட்டுமே முழுமை பெறுவன. அவற்றைக் குறிப்புப் பெயரெச்சங்கள் என்று வகைப்படுத்துவர்.

சின்ன தம்பி
நல்ல குடும்பம்
அழகிய தமிழ்மகன்
புதிய பார்வை
இளைய தலைமுறை

மேலே காண்பவை பண்பை மட்டுமே சொல்லி அடுத்து ஒரு பெயர் வருவதால் மட்டுமே பூர்த்தியாகக் கூடிய குறிப்புப் பெயரெச்சங்கள்.

இப்பொழுது வலிமிகும் இடத்துக்கு வருகிறேன். மேலே விவரித்தபடியுள்ள பெயரெச்சங்கள் எவற்றுக்கும் - வினைச்சொல்லை அடுத்து வரும் பெயரெச்சங்கள் என்றாலும், அது மூன்று காலத்தைக் காட்டினாலும், உடன்பாடாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, வெறும் பண்பை மட்டுமே குறிக்கின்ற குறிப்புப் பெயரெச்சமாக இருந்தாலும் சரி - எங்கும் வலி மிகாது. எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள் - பெயரெச்சத்தை அடுத்து வலி மிகாது.

பாடாத தேனீ, ஓடாத குதிரை - போன்ற எதிர்மறைப் பெயரெச்சங்களில் கடைசி எழுத்து கெட்டு மறைவதும் உண்டு. பாடாத் தேனீ, ஓடாக் குதிரை - என. எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசி எழுத்து, ஈறு கெடுவதால் அது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று அழைக்கப்படும். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஆக பெயரெச்சங்களில் வலி மிகாது. உதாரணங்களின்படி - படித்த, அடித்த, நடக்கின்ற, ஓடுகின்ற, முடிக்கும், வெடிக்கும், உண்கின்ற, உண்ணாத, செய்த, செய்யாத, நல்ல, கெட்ட, தீய, சிறிய, பெரிய, பழைய, புதிய - எவ்வகைப் பெயரெச்சங்களிலும் வலி மிகா.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஒட்டுமொத்தமாக வகுத்துப் பகுத்துத் தொகுத்து கிளிப் பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

  • இலக்கணம் சொல்லித் தருபவர்கள் பெயரெச்சத்தின் பின் வலி மிகாது என்று உதாரணத்தைச் சொல்லிச் சென்றுவிடுவார்கள். வலி மிகுதல் என்ற தலைப்புக் குடையின்கீழ் பெயரெச்சத்தை விளங்கிக்கொண்டு அதன் வகைப்பாடுகளில் தெளிவுபெற்று வலிமிகுமா மிகாதா என்பதை அறியப் புகுந்தால் இரண்டும் தெள்ளத் தெளிவாக விளங்கிவிடும்.

  • கனிந்த பழம் இறந்தகால வினை எச்சமா? நிகழ்கால வினை எச்சமா? குனித்த புருவம் எக்கால வினை எச்சம்? எச்சம் என்பது எஞ்சி நிற்பதைக் குறிக்கும். நீங்கள் குறிப்பிட்ட - கனிந்த என்ற சொல்லைத் தனியே பார்த்தால், அது எஞ்சி நிற்பது தெரிகிறது. கனிந்த என்கிற சொல் அர்த்தம் தரக்கூடிய சொற்றொடராக மாற்றம் பெறவேண்டுமெனில், அதன்பின்பு ஒருசொல் வரவேண்டும். கனிந்த என்கிற சொல்லின் பின்னால் வருகிற சொல் பெயர்ச்சொல்லாயின் கனிந்த, பெயரெச்சம் ஆகும், பின்னால் வருகிற சொல் வினைச்சொல்லாயின் கனிந்த வினையெச்சமாகும். இங்கு பழம் என்கிற பெயர்ச்சொல் வருவதால், கனிந்த, பெயரெச்சமாகும். குனித்த என்கிற சொல்லின் பின் வருகிற புருவம் பெயர்ச்சொல் என்கிறபடியால், குனித்த, பெயரெச்சமாகும். ஓடி வந்தான். இங்கு ஓடி என்கிற சொல்லின் பின்பு வருகிற வந்தான், வினைச்சொல் என்கிறபடியால், ஓடி, வினைஎச்சமாகும். பொதுவாக பெயரெச்சம் அ என்கிற ஒலியுடனும், (பெரிய, அழகிய, சிறிய) வினைஎச்சம் இ, உ,அ என்கிற ஒலியுடனும் (ஆடி, ஓடி, கருகி, விழுந்து, சரிந்து, அழகாக) முற்றுப்பெறும்

  • வினையெச்சத்திற்குத் தனியாக எழுதுவேன். பொறுமை காக்கவும். இந்தத் தொடர் 15 பகுதிகள் வரை நீளக்கூடும். அதில் தமிழ் இலக்கணத்தின் முக்கியக் கூறுகள் அனைத்தும் தொட்டுத் துலக்கப்படும்.

வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1